Friday, August 19, 2022

மும்பை கோவிந்தா VS ஸ்பெயின் கேஸ்டல்ஸ்

  Janmashtami 2022: Govindas form a human pyramid to break the Dahi Handi in  Mumbai's Dadar, watch video - The Economic Times Video | ET Now

கிருஷ்ணனும் ராமனும் இந்திய தேசத்தின் அரசியல்
அடையாளமாக்கப்பட்டிருக்கிறார்கள்!
இதற்கான காரணங்கள் தத்துவ விசாரணைகள் உண்டு.
கிருஷ்ண ஜன்மாஷ்டமியை முன்னிட்டு நடக்கும்  

தயிர்ப்பானை உடைக்கும்
விளையாட்டு மண்ணின் அரசியல் வளர்த்தெடுக்கப்பட்ட  சூழலில்
அரசியலாக உருமாற்றம் பெற்றிருக்கிறது.

நான் சிறுமியாக இருந்தப்போது
மிக உயரமான கம்பத்தின் உச்சியில் தயிர்ப்பானை  கட்டப்பட்டிருக்கும்.
அதை உடைப்பதுதான் விளையாட்டு. 

லோக்கல் வீர்ர்கள் தங்கள் வீரத்தைக் காட்டுவார்கள்.

 கம்பம் எண்ணெய் தைத்து வளவளப்பாக இருக்கும்.ஏறுவது அவ்வளவு எளிதல்ல.கூட்டம் அலைமோதும். குறிப்பாக இளம்பெண்களும் குழந்தைகளும். மழைக்கொட்டினாலும் நனைந்துக்கொண்டே அதைப் பார்த்த நாட்களும் அதற்காக வீட்டில் தண்டனை அனுபவித்த நாட்களும் மறக்கவில்லை,

இப்போது அதே விளையாட்டு என்னைச் சுற்றி ஒரு 

மாபெரும் மனிதப் பிரமிடாக நடக்கிறது.
கோவிந்தா க்கோவிந்தா….

கோவிந்தாக்கள் லாரிகளில் ஏறி வருகிறார்கள். எங்கெல்லாம் தயிர்ப்பானைகள் உயரத்தில் கட்டப்பட்டிருக்கிறதோ அதை எல்லாம் மனிதப் பிரமிடுகளாகி உடைக்கிறார்கள்.
க்கோவிந்தா க்கோவிந்தா

கூட்டம் ஆரவாரம் செய்கிறது.
மழைக்கொட்டுகிறது.
தயிர்ப்பானையின் உயரம் பொதுவாக 20 அடி இருக்கும்.

30, 40 என்று உசரம் கூடிக்கொண்டே போனது.

நேற்று கின்னஸ் ரெகார்ட்.

50 அடி உசரத்தில் மனிதப்பிரமிடு. மும்பை தானா பகுதி கோவிந்தாக்களின் சாகசம். இது ஸ்பெயின் சீன தேசத்து மனிதப்பிரமிடுகளை விட உசரமானது!
கோவிந்தா க்கோவிந்தா..

ஸ்பெயில் வடகிழக்குப் பகுதியான கேஸ்ட்டோலினா மக்களின் விளையாட்டு மனிதப்பிரமிடு.
கேஸ்ட்டோலோன் நாட்டுப்புற பாடல்கள் புல்லாங்குழலிசைக்க இந்த மனிதப்பிரமிடுகள் உருவாகும் காட்சியைப் பார்க்க கூட்டம் கூடுகிறது. இந்த விளையாட்டுக்கான கேஸ்டல்ஸ் க்ளப்புகள் உண்டு. பயிற்சி எடுப்பார்கள். சற்றொப்ப இதே பின்புலத்தில் தான் மும்பையின் கோவிந்தாக்களும்! பயிற்சி இல்லாமல் திடீரென ஒருவர் தோள்களில் ஒருவர் ஏறி பத்தடுக்கு மனிதப்பிரமிடாக மாற முடியாது.
கோவிந்தா..க்கோவிந்தா..

குஜராத் மராட்டிய மா நில அரசியல் களத்தில் மராட்டிய மா நிலத்தில் சிவசேனா மக்களின் அரசியலாக வளர்த்தெடுக்கப்பட்ட போது இந்த தஹியண்டி ஜன்மாஷ்டமியும் மராட்டிய மண்ணின் மைந்தர்களுக்கான வீரமாக மேடைகளில் ஒலிவாங்கிகள் முழக்கமிடுகின்றன. அதனால் தான் இந்த மேடைகள் பெரும்பாலும் சிவசேனாவின் அடையாளங்களாக இருக்கும்! தஹி அண்டி கூட்டத்திற்கு அருகில் எப்போதும் ஆம்புலன்ஸ் நிற்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சற்றொப்ப 100 கோவிந்தாக்கள் காயத்துடன் மருத்துவமனையில் கைகால் இடுப்பு எலும்பு முறிவுடன் ! நமக்கு இதுப் புதிதல்ல. அவர்களுக்கும் இது புதிதல்ல.
தயிர்ப்பானையில் இப்போதெல்லாம் இலட்சகணக்கில் பணமுடிப்புகள் இருக்கின்றன.தயிர்ப்பானைகள் காஸ்ட்லியாகி விடுகின்றன. இதில் தஹி அண்டியை உடைக்கமுடியாவிட்டாலும் கூட பங்கெடுத்துக்கொள்ளும் கோவிந்தாக்களுக்கு ஊக்கப்பரிசுண்டு. இப்படியாக க்கோவிந்தாக்கள்..
நேற்றைய கோவிந்தா .. கின்னஸ் ரெகார்ட்
கோவிந்தா க்கோவிந்தா..

சரவணா….
சர்க்கார் (அமிதாப்பச்சன் நடித்தப்படம் ) திரைப்பட த்தில் அபிஷேக்பச்சன் ஓடிக்கொண்டிருக்கும் போது கொள்ளைக்கூட்டம் துரத்தும்போதும் அடிதடி காட்சிகளின் போது பின்னணி இசையாக
க்கோவிந்தா க்கோவிந்த்தாஒலித்துக்கொண்டே இருக்கும் .
இரண்டு நாட்களாக அதே பின்னணி இசை என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது!
க்கோவிந்தா க்க்க்கோவிந்தா..

#mumbai_govinda

 

No comments:

Post a Comment