Thursday, August 30, 2018

சூர்யா@நட்புமண்டலம்.9




ன் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் நீ அனுப்பிய புத்தகங்கள்தான் 
என் அறிவுலகின் சிறகுகள். அந்த வாசிப்பில்தான் 
நான் என்னை என் வானத்தை அளந்து கொண்டிருக்கின்றேன்.
 இந்தப் பிறந்தநாளுக்கு நீ அனுப்பியிருந்த புத்தகம் "ஹோ சி மின்" 
ஆங்கிலத்திலிருந்து  தமிழில் மொழிபெயர்ப்பு . விஜயகுமார்.
(மூலம் ரஷியமொழியில் யெவ்கனி கொபலெவ்
அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் 
விக் ஸ்நீர்சன், செர்கே & ஈவான் சுலாகி .. வெளியீடு: தமிழோசை பதிப்பகம், கோவை) 
வழக்கத்திற்கு மாறாக சில வரிகளை எழுதி 
"உன் நட்பின் சூர்யா" என்று கையொப்பமிட்டிருந்தாய்.

அந்த வரிகள்.....

"தமிழில் வெப்பம் ஊற்றி
அறிவில் செப்பம் செய்யும்
பகுத்தறிவு வெளிச்சத்திற்கு...."

நீ எழுதியிருந்ததை வாசித்துவிட்டு ஏனோ சந்தோசப் படமுடியவில்லை.
அச்சமாக இருந்தது. ஏனேன்றால்  நீ எழுதியிருக்கும் அவளா நான்? 
என்ற கேள்வி என்னிடம் ..! 
நான் நிச்சயமாக நீ எழுதியிருக்கும் அவளில்லை. 
இதை என்னைப் பற்றித் தெரியாத 
என்னைப் பற்றி அறியாத 
எவராவது எழுதியிருந்தால் அச்சப்பட்டிருக்கமாட்டேன்.

என் அகமும் புறமும் அறிந்தவன் நீ
என் ஆசையும் நிராசையும் அறிந்தவன் நீ
என் அழுக்கும் நாற்றமும் அறிந்தவன் நீ
என் வேஷமும் கபடமும் அறிந்தவன் நீ
என் கொள்கைகளின் பலமும் பலகீனமும் அறிந்தவன் நீ
என் முகமூடிகள் உன்னிடம் தோற்றுப்போயிருக்கின்றன.
என் வார்த்தை ஜாலங்கள் உன்னிடம் மண்டியிட்டிருக்கின்றன.
என் அகராதியின் அர்த்தங்கள் உனக்கு அத்துப்படி.
இருந்தும் ஏன் என்னை .. அப்படி அழைத்தாய்..?

கேட்டேன்.. சிரித்தாய்..
யாரை எல்லாம் நாம் கொள்கையின் தீபங்கள்
 என்று நினைக்கின்றோமோ அவர்கள்
வெறும் காகிதக் குப்பையின் தீ வெளிச்சங்கள்தான்.
எரிகின்ற வெளிச்சமெல்லாம் இருளகற்றும் வெளிச்சமில்லை.
எது எரிகின்றதோ அதுதான் வெளிச்சத்தை தீர்மானிக்கும்
எதற்காக எரிகின்றதோ அதுதான் வெளிச்சத்திற்கும்
 விடியல்தரும்.

"நீ அவளில்லை என்றால் 
வேறுயாரை நான் சொல்ல முடியும்?" என்றாய்.

நீதிமன்றத்தில் பகவத்கீதையைக் கையில் ஏந்தி
நான் சொல்வதெல்லாம் உண்மை,
உண்மையைத் தவிர வேறில்லை
என்று சத்தியம் செய்கிறவனெல்லாம் பகவத்கீதை படித்தவனா!
நீதிபதி களும் அறிந்த சத்தியமல்லவா இதெல்லாம்.

புத்தனுக்கு பிறகு வந்தவரெல்லாம்
புத்தராகவில்லை.
புத்தனாக முயற்சித்தார்கள்.
இதெல்லாம் மதங்களுக்கு மட்டுமா..
இசங்களுக்கும் தான்.

நீ எதாக வாழ்ந்து காட்ட 
போராடிக் கொண்டிருக்கின்றாயோ
அதுவே, நீ அதாக வாழ்வதின் அர்த்தம் என்றால் மட்டும் 
ஏன் மறுக்கின்றாய்? அச்சப்படுகின்றாய்!
ஆயிரம் கேள்விகள் கேட்கின்றாய்?" 
நீ சொன்ன விளக்கத்தில் 
எனக்கு உடன்பாடில்லை.

நான் சமூக அவலங்களை
 ஊமையாக பார்த்துக் கொண்டிருக்கும் ஊனம். 
என்னைப் பாதிக்காத எதற்காகப் போராடி இருக்கின்றேன்? 
சொல்.

வெடிகுண்டுகள் வெடித்த அந்த ரயிலடியில் நானும் சாட்சியாக.
காயப்பட்டவர்களுக்காக அழுததைவிட 
இன்னும் வீடு வந்த சேராத என் உறவுகளை எண்ணித்தானே 
அழுதிருக்கின்றேன். 
என் சுற்றங்கள் காயப்படவில்லை என்றவுடன்
 ஓடோடிச் சென்று கடவுளுக்கு நன்றி சொன்ன
கயமைத்தனத்தை என்னவென்று சொல்வது?
காயப்பட்டவர்களுக்காக 
தன் உறவுகளை இழந்து போன அப்பாவி உயிர்களுக்காக 
கண்ணீர் விட்டதெல்லாம் இழவு வீட்டில்
ஒப்பாரிக்கு அழுதது போல..வாழ்ந்திருக்கிறேன்.

ஏன் குண்டு வெடித்தது..?
அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தார்களே
அப்போதெல்லாம் கடவுள் ஏன் சிலையாகிப் போனார்?
கேட்டேனா.. இல்லையே.
கருவறையில் கண்ணீருடன் என்னைக் காப்பாற்றியதற்கு
என் சுற்றங்களைக் காப்பாற்றியதற்கு
இப்படியாக எனக்காக மட்டுமே 
கை கூப்பி கூம்பிட்டு ..

என் மனசின் கோரங்கள்..ரொம்பவும்  விகாரமானவை.
பகுத்தறிவு என் உணர்வுக் குவியலில் சரிந்து விழுந்த
 சம்பவங்கள் நிறைய்ய. 
என் உதிரம், என் சொந்தம் என்றெல்லாம்
 என் வட்டம் வரையப்படாமல் 
நான் நானாக மட்டுமே இருந்திருந்தால் 
இந்தச் சரிவுகளை எல்லாம் 
சந்திக்க வேண்டிய அவலமே அரங்கேறி இருக்காதோ?

இந்த உறவுகளில், உறவுகள் தந்த பிணைப்புகளில் 
நான் சரிந்தேன். சரிந்து கொண்டே இருக்கிறேன்.
நீ 
எந்த உறவுகளின் பிணைப்பிலும் பிணையக் கைதி ஆகாமல்
உன் சுயமிழக்காமல் உன் கொள்கைகள் சரியாமல்
 நிமிர்ந்து நின்றாய்.நிற்கின்றாய்..

அதுவும் உன்னை, உன் அருகாமையை நான் இழந்துவிட்ட 
நாட்களில் என்னிடம் நீ கண்ட வெளிச்சமும் 
எண்ணெய் இல்லாத திரியாக தீய்ந்து போய்விட்டதை நீ அறிவாயா..?
பகுத்தறிவும் அறிவியலும் கூட நீ பக்கத்திலிருக்கும்போது 
வாழ்வியலாகின்றது. 
நீயும் உன் துணையும் இல்லாத நாட்களில் 
யோகா என்றும் தியானம் என்றும் 
என்னை எனக்காக உயிர்ப்பித்துக் கொள்ள 
என்னவெல்லாமோ செய்து பார்க்கிறேன்.
தோற்றுப் போகிறேன்.
என் பூமி வறண்டு போகிறது.
உன் நினைவுகள் சூல்கொண்டு
கார்மேகமாய் புறப்பட்டு  வருகின்றன.
சூர்யா..
வேர்களின் மண் வாசனையில்
உன் மழைத்துளிகள் பூவாக..
கொட்டிக்கொண்டே இருக்கின்றன.

காணாமல் போனவர்கள் தினம் 30 ஆகஸ்டு


(இன்று சர்வதேச காணாமல் போனவர்கள் தினம்.)
இவர்கள் ஏன் காணாமல் போனார்கள்?
இவர்களைத் தொலைத்தது யார்?
இவர்களைப் பிடித்து வைத்திருக்கும்
அந்த கொடிய அரக்கன் யார்?
இவர்கள் குற்றவாளிகளா?
இவர்கள் மீது என்ன குற்றம்?
குற்றங்களுக்கு தண்டனை கொடுப்பது தானே
சட்டப்படி உங்கள் நீதி!
இது என்ன தண்டனை!
காணாமல் போனவர்களைக்
கண்டுபிடிக்க முடியாத உங்கள் மோப்ப நாய்களை
என்ன செய்யலாம்..!
...
திரும்பி வராத மகனுக்காக
இன்னும் எத்தனைக் காலங்கள்
காத்திருப்பாய் தாயே.
அவன் புகைப்படத்தை நீ
தொட்டுத் தடவும் போது
உன் கருவறை வெடித்துச் சிதறும்
ஓசையில் சிதறாதக் கோட்டைகள்..
இனி.. திறக்கப்போவதில்லை
எந்தக் கதவுகளும்.
இனி வரப்போவதில்லை
அன்னையின் புதல்வர்கள்.
ஆனாலும்
அவன் வந்துவிடுவான் என்று
வழக்கம்போல அவளிடம் சொல்கிறேன்.
அவள் என்னைத் திரும்பி பார்க்கிறாள்.
அவள் பார்வையைச் சந்திக்க முடியாமல்
என் பாதைகள் திசைமாறுகின்றன.
.....
அவன் உயிருடன் இருக்கிறானா..?
அவனை எரித்தீர்களா புதைத்தீர்களா
எந்தக் கல்லறையில் அவன் உறங்குகிறான்?
அவன் பெயர் உங்கள் காணாமல் போனவர்கள்
பட்டியலில் இன்றும் இருக்கிறதா?
அவன் புகைப்படத்தைக் கையில் ஏந்தி
ஆண்டுதோறும் உங்கள் பேரணிக்கு வருகிறாள் அவள்.
மற்ற நாட்களில் அவனைத் தேடி அலைகிறாள்.
காடுகளிலும் மலைகளிலும் தேடிக் களைத்துவிட்டவள்
இப்போதெல்லாம் உங்கள் செய்திகளிலும்
அவனைத் தேடுகிறாள்.
காணாமல் போன அவனுக்காக
காத்திருக்கும் மனைவியை
பாதி விதவையாக்கி
மீதி மனைவியாக்கி
அலையவிட்டது போதும்.
அவன் பிணமாகவாவது கிடைக்கவேண்டும்.
அவள் தேடலுக்கு எதாவது அர்த்தமிருக்கட்டும்

Wednesday, August 29, 2018

சூர்யா@நட்புமண்டலம்.8




பாரதியின் கவிதைகளை நீ பாடும் போது
உன் குரலும் பாரதியின் மொழியும்
மயக்கம் தரும். 
கேட்டுக்கொண்டே இருந்த நாட்கள் உண்டு.

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா 
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
 செல்வக் களஞ்சியமே

ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி
ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய்
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவதடி 

உச்சி தன்னை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி
உச்சி தன்னை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி 

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ?

இப்படி இதில் எதாவது சில வரிகளை 
நீ எனக்காகப் பாடுவாய்.
நான் எதற்கெடுத்தாலும் அழுதுவிடுவேன்.
நீ தான்அழுகை உன் பலகீனம்என்றாய்.
பெண்கள் அழக்கூடாது என்று சொல்லி சொல்லி
என் கண்ணீர்த்துளிகளை பொக்கிஷமாக்கினாய்.

அதே பாரதி பாடலின் இரண்டு வரியை 
உணர்ந்து அனுபவித்த அந்த இரவில்
மீண்டும் துளிர்த்தது
என் கண்ணீர்.

இந்த பிரபஞ்சத்தின் இன்னொரு பூமியாக
என் மகன்.. என்னைச் சுற்றி வந்த அந்த நாட்களில்
ஒரு நாள்..

அன்று அவனுக்கு 6 வயது கூட நிரம்பவில்லை.
இன்று போல் அன்றும் கார்காலம்.
பணிக்கு விடுப்பு எடுத்து வீட்டில் இருந்தேன்.
அவன் பள்ளி முடிந்து வருவான் என்று பால்கனியில் நின்றேன்.
என்னைப் பால்கனியில் பார்த்தவன் அப்படியே பேருந்திலிருந்து
-அருவியென குதித்தான்
-நெரிசலான அந்த சாலையை மின்னலென கடந்தான்
-காவலாளி கதவு திறக்க காத்திருக்காமல் அப்படியே 
அந்த ஆளுயர கதவுகளை ஆற்றின் வெள்ளமென கடந்தான்.
-மின் தூக்கிக்காக காத்திருக்காமல்
 படிக்கட்டுகளில் மலைமேகமென ஏறினான்.
நான் பால்கனியிலிருந்து வந்து கதவு திறக்கும் முன்பே
தட்ட த்டதடவென தட்டினான்.
கதவுகள் திறந்தவுடன் அந்த மழை என்னை 
முழுவதுமாக நனைத்துவிட்டது.
அன்று நனைந்தது இன்னும் காயவில்லை.
ஏன் இந்த உடல் எரியும் போது கூட 
அந்த ஈரம் மட்டும் காயாது.

அன்று முழுவதும்
"அள்ளி அணைத்திடவே என் கண்முன்னே
  ஆடிவரும் புயலே....
  ஆடிவரும் புயலே..என்
  ஆடிவரும் புயலே"
என்று என் மனசுகவிதை வரிகளைப் பாடிக் கொண்டிருந்தது.
நடுநிசி. சட்டென ஒரு மின்னல் ..
பாரதி சொன்னது "ஆடிவரும் தேனே" என்றல்லவா
இது என்ன "ஆடிவரும் புயல்"???

தேன் ஆடிவருமா?
தெரியாதுடா. மகாகவி பாரதிக்கு தேன் ஆடிவந்திருக்கலாம்.
உன் தோழிக்கு-
புயலே அல்லவா ஆடிவந்தது..!!!!

என் துணைவரை எழுப்பினேன்.
"புயல் ஆடிவருமா?" என்றேன்
"ஆமாம் ஆமாம் பூகம்பம் கூட உன்னிடம் பாடி வரும்..
படு.. நேரம் இப்போது இரவு 2 மணி..தூங்கு.".என்றார்.
அணைக்க வந்த கைகளை விலக்கி வைத்துவிட்டு
 அந்த அரவணைப்பிலிருந்து விலகி நான் தனியாளாக நின்று 
கொண்டிருந்த அந்த நடுநிசியில் உன்னை நினைத்தேன்.
என் ஆடிவரும் புயலை உன்னால் கண்டு கொள்ளமுடியும்.
உன்னால் உணரமுடியும்..
உன்னால் அனுபவிக்க முடியும்.
என் அனுபவத்தை உன் அனுபவமாக்க துடித்தேன்.
தொலைபேசியின் அருகில் சென்று ..
எண்களைத் தொட்ட விரல்கள்.. 
அனிச்சையாக பின் வாங்கிக்கொண்டன.
ம்கூம்..நடுநிசியில் உன்னுடன் பேசினால் தவறில்லை தான்.
ஆனால் பேசுவது சாத்தியமில்லையே.
ஆமாம் சாத்தியமில்லைதான்.
தவறில்லை என்று நாம் ஒத்துக்கொண்ட ஒன்றை
 எல்லா காலத்திலும், எல்லா இடத்திலும் செய்வது என்பதும் 
சாத்தியமில்லைதான். நடைமுறைக்கு ஒத்துவருவதில்லைதான்.
அப்படியானால்.. 
அதன் நியாய அநியாயங்களில் என்னை-
-என் சுயத்தை இழந்துவிட்ட ஒரு பிம்பம் தானா?

என் இயலாமையில் -
என் இரட்டை வேடத்தில்-
என்னையே நான் வெறுத்தேன்.

நான் அழுவதில்லை.
நான் கண்ணீர் சிந்துவதில்லை.
உனக்குத் தெரியும்.
அன்று என் கண்ணீரில்-
என் கண் இமைகளை உடைக்காத கண்ணீரில்
 நீ இருந்தாய்.
அந்த நடுநிசியில்
உன்னைத் தேடினேன்.. 
அதே வரிகளை..நீ இப்போது பாட வேண்டும்.

அள்ளி அணைத்திடவே என் கண்முன்னே
ஆடி வரும் புயலே .. என்று பாட வேண்டும்.
உன் தோள்களில் சாய்ந்து அந்தப் பாடலில்
நான் கரைந்துவிட வேண்டும்.

சூர்யா..

அண்டப்பெருவெளியில் இமைகளைப் பிடுங்கிய
கனத்த விழிகளோடு உன்னைத் தேடினேன்.
அக்னியாக அலைந்து திரிந்தேன்.
கடல் அலையாக ஓய்வின்றி தேடிக்கொண்டிருந்தேன்.
காற்று அடங்கிப்போனது.
ஒளிக்கதிர்கள் இருண்டுப் போனது.
உயிர்க்குருவி சிறகுகள் உதிர்த்து
துடிக்கும் தருணத்தில்
ஒரு துளி கண்ணீர்
உப்புக்கரித்தது. 
நட்சத்திரங்கள் கைகளை நீட்டி
என் கண்களைத் துடைத்தன.

நட்சத்திரங்கள் கூட சூரியன் தானாம்.
பூமி மண்டலம் பாடம் நடத்தியது.






Tuesday, August 28, 2018

சூர்யா@நட்புமண்டலம்.7




உன்னை நான் "நீ" என்றும்
என்னை நீ என்ன "டா" என்றும் சொன்னால் தான்
நாம்  பேசிக்கொள்வது போல் இருக்கின்றது.
உன்னை நான்  "நீங்கள்" என்றும்,
என்னை நீ "வாருங்கள்" , "உட்காருங்கள்"
என்றும் அழைத்துக் கொண்டால்
 நமக்கு நாமே அந்நியப்பட்டுவிட்ட மாதிரி இருக்கின்றது.

ஆனால் நீ  ஊருக்குப் பெரிய மனிதனாம். இரண்டு பிள்ளைகளுக்கு 
தகப்பனாம். நான் உன்னை நீ என்று அழைத்தால் 
அது தவறாம். மரியாதைக்குறைச்சலாம்
என்ன தான் நட்பு, இலக்கியம், சமத்துவம்னு பேசினாலும் 
இது என்ன ஒரு பொம்பளை ஆண்மகனை கொஞ்சமும் 
மரியாதை இல்லாமல் "வாடா .. போடாங்கிறா.
இது வெளிப்படையாக அவர்கள் பேசும் பேச்சுகள்.
அவர்கள் கேட்க விரும்பியது என்னவோ.. 
அப்படி என்ன அவளுக்கு அவனிடம்
நெருக்கமாம்?” என்பது தான்!

உன் புதிய உறவுகள் 
நீ என்னை மாற்றிக்கொள்ள வேண்டும்
நீ மாற வேண்டும்
நானும் மாறித்தானாக வேண்டும் என்று ஒரு கட்டத்தில்
வரம்புகள் மீறி நிர்பந்திக்க தொடங்கினார்கள்.
எல்லாவற்றையும் வெளிப்படையாக என்னிடம் பகிர்ந்து கொள்ளும்
நீ ..
என் பொருட்டு உனக்கு ஏற்பட்ட சில காயங்களை
 மறைத்துவிட்டாய்.
என்னிடம் சொல்லி இருக்கலாம் சூர்யா..
கேட்டவுடன் .மனசுக்கு கஷ்டமாகத்தான் இருந்திருக்கும்.
ஆனாலும் புரிந்து கொள்ளும் பக்குவம் எனக்கு உண்டு.
நானும் உன்னோடு சேர்ந்து வளர்ந்து கொண்டிருந்தேன்.
வளைந்து கொடுக்கவும் தெரியும்.
வாழ்ந்துக் காட்டவும் தெரியும். 

அப்படித்தான் .. அன்று நண்பர்கள் தினம். 
நம்மைப் போன்ற நண்பர்களுக்கு நட்பு மட்டும்தான் தெரியும். 
இந்த நண்பர்கள் தின கலாச்சாரம் தெரியாதுதான்.

பல்கலைக் கழகத்தில் என் படிப்பு தொடர்ந்தபோது 
தோழியர் தங்கள் நண்பர்களுக்கு நண்பர் தின 
வாழ்த்து அட்டைகளை வாங்கினார்கள்.

உன் நினைவுகளின் ஆக்கிரமிப்பு..
அந்த வாழ்த்து அட்டையை எடுத்தேன்.
ஒரு வண்டிப்பாதையில் கருவேலம் மரங்கள் அடர்ந்த 
அந்த புன்செய்க்காட்டில் ஒரு யுவனும் யுவதியும்.. 
நம்மைப் போலவே அவர்கள் பேசிக்கொண்டே நடக்கிறார்கள்..
முகம் தெரியாத அந்த ஓவியத்தில்
நீயும் நானும் பயணித்துக் கொண்டிருந்தோம்.

ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பழகும்போது 
அவர்களின் உடல் அசைவுகள், 
அந்த அசைவுகள் சொல்லும் அர்த்தங்கள் 
அவர்களின் உறவைச் சொல்லும்.
ஓவியத்தில் நான் கண்டதை நீயும் காண வேண்டும்
என்று விரும்பினேன்.

அனுப்பும் முன்பு ஏதாவது எழுதவேண்டும் என்று தோன்றியது. 
யோசித்து யோசித்து பார்த்ததில் 
எனக்கு தெரிந்த எல்லா மொழிகளின் எல்லா சொற்களும்
நான் சொல்ல நினைப்பதை 
சொல்ல முடியாது குறைப்பட்டு நின்றன.
நம் நட்பின் மொழியாக 

-உன் "என்னடா" சொல் கேட்க வேண்டும்….-
என்று மட்டும் எழுதியிருந்தேன்.

வாழ்த்து அட்டை யார் கையில் முதலில் கிடைத்து என்று தெரியாது!
உன் வீட்டில் ஒரு பெரிய்ய்ய மகாபாரத யுத்தமே நடந்ததாக 
பின்புதான் கேள்விப்பட்டேன்.

அப்படி என்ன அவளுக்கு உங்களிடம் நெருக்கம்?
என்னை விட அவள்தான் உங்களுக்கு பெரிசா போச்சா?
இப்படி எத்தனை எத்தனை கேள்விகளை நீ சந்தித்தாயோ?
ஆனால் நீ உன் கண்கள் சிவக்க உன் காதல் மனைவியிடம் சொன்ன வார்த்தைகள்
இன்றும் என் நட்பை தாலாட்டும் வசந்தங்கள்.

"ஆமாம் உன்னை விட  எனக்கு அவள் முக்கியம்தான்..
அவளை நான் பெரிசா நினைக்கிறது உண்மைதான்.
உனக்குப் புரியறமாதிரி சொல்லனும்னா .. 

உனக்கு -
உன் கோவில் முக்கியம் மாதிரி..
உன் சாமி முக்கியம் மாதிரி..
உன் வேதம் முக்கியம் மாதிரி..
எனக்கு அவள் முக்கியம்..
புரியுதா?
உன் சாமியை நீ கல்யாணம்  பண்ணிக்கலை-
உன் வேதத்தை நீ கட்டி அணைச்சுக்கலை-
உன் கோவிலில் நீ வாழ்க்கை நடத்தலை-
அத மாதிரி அவளும் எனக்கு..

இந்த வாழ்த்து அட்டைக்குத் தானே இத்தனைக் கேள்விகள்?
கோபத்தில் என் "என்னடா" வாழ்த்துக்களை கிழித்து எறிந்தாயாம்.
நான் எழுதிய ஒரு "என்னடா"விலிருந்து பல நூறு 
"என்னடா"க்கள் உன் வீட்டு முற்றத்தில் பறந்ததாம்.

"ஏய் இதெல்லாம் எப்படிடா தெரியும் என்று கேட்காதே.
சூர்யா.. நீ கிழித்துப் போட்டிவிட்டுப் போனதை உன் அவள் 
எடுத்து ஒட்டி வைத்திருக்கின்றார்கள். அவர்களே  பல வருடங்கள் 
கழித்து அதை என்னிடம் காட்டினார்கள்.

அவர்களின் வாயாலேயே நீ சொன்னதைக் கேட்ட போது 
அப்படியே வானத்தில் பறக்கின்ற மாதரி இருந்தது.
நாம் விதிவிலக்குகளா சூர்யா..! 
அப்படித்தான் அவர்கள் நினைக்கிறார்கள்.
இருண்ட வானத்தில்
நம் நட்பே விடிவெள்ளியாய்.
இருளுக்கு தெரிகிறது நம் வெளிச்சத்தின் விடியல்.
பகலின் வேஷங்கள் தான் 
நட்சத்திரங்களை இருட்டடிப்பு செய்கின்றன.