Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sunday, May 7, 2023

GOD save the KING

 "GOD save the KING"



1953 எலிசபெத் மகாராணியின் முடிசூட்டுதல் நிகழ்வுக்குப் பின்
70 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே நிகழ்வு
அரங்கேறி இருக்கிறது.
இன்றைய பிரிட்டனின் பொருளாதர சரிவு நிலையில்
முடிசூடல் நிகழ்வுக்கான 3 நாட்கள் செலவு
100 மில்லியன் பவுண்ட்ஸ்.
இச்செலவு என்னவொ வரிகட்டுகிற குடிமக்கள்
தலையில் சுமத்தப்படும்சுமைதான். பாவம்தான் அவர்கள்.
அதெல்லாம் விட்டுத்தள்ளுங்க…
அரசர்கள் முடிசூடுவது எப்படி இருக்கும்னு
பார்க்க பார்க்க...பிரமிப்பில் ..
இப்போ போயி..
குடிமக்கள் அதுஇதுனு.. பேசப்பிடாது.
நெகட்டிவ்வா யோசிக்காதே!
நாமும் “ அரசரை கடவுள் காக்கட்டும்”
என்று சொல்லிட்டு போயிடலாம் சரவணா…
அந்தக் கிரீடம் இருக்கே…
அதிலிருந்த வைரம் வைடூரியம் இப்படியான
விலை உயர்ந்த நவரத்தினங்கள்…
செம வெயிட்டா இருந்திருக்கும்தானே!
சார்லஸ் தலைக்கு கனமானதுதான்.
அப்புறம் நம்ம நாட்டு கோகினூர் வைரத்தை இம்முறை
வெளியில் காட்டவே இல்லையாமே!
நாம வல்லரசு ஆயிட்டோம்டே.
பயம்… நம்மள பார்த்து பயம்.
நாமும் அடிக்கடி “ இது எங்க நாட்டு கோகினூர் வைரம்”
அப்படின்னு கத்திட்டே இருக்கோமா..
நம்ம ஊரு கத்தல் கோஷம் பற்றி எல்லாம்
அவுங்க ஸீரியசா யோசிச்சிட்டாங்கனு நினைக்கிறேன்.
பயந்துப்போயி..
கோகினூர் வைரத்தை வெளியிலே எடுக்கலியாம்..
(ஹய்…சும்மா காலரைத் தூக்கி விட்டுக்கோ சரவணா!)
அப்புறம் இந்தச் செங்கோல் இரண்டு கையிலும்
கொடுத்தாச்சு..
பள பளனு மின்னுது..
ராஜ முத்திரைப் பதித்த கணையாழி போட்டாச்சு.
இரண்டு கையிலும் ராஜ வம்ச கடயம் மாட்டியாச்சு.
தங்கத்தால் நெய்த அங்கியை மாட்டியாச்சு..
வைரங்கள் ரத்தின்ங்கள் பதித்த வாள்கள்
கையில குடுத்தாச்சு..
இப்போ என்ன நம்ம ராஜா வாளெடுத்து
குதிரை மேலேறி சண்டைக்கு போகப்போறாரா என்ன?
இதெல்லாம் கிடையாதுனாலும்
மரபுனு ஒன்னு இருக்குடே..
ராஜா ன்னா வாள் இல்லாமலா..
கிரீடம் இல்லாமலா
செங்கோல் இல்லாமலா..
முத்திரை கணையாழி இல்லாமலா!
இதெல்லாம் புரியுது…
எதுக்கு டே ஒரு தங்க ஸ்பூண்..
கொடுத்திருக்காங்கனு தெரியல.
“ராஜ கரண்டி “
இதெல்லாம்தான் பிரமாண்டங்கள்
அரசப்பரம்பரை அரச வாழ்க்கை!
அதை இப்போதும் காண கொடுத்து வச்சிருக்கு..!
(இதை எல்லாம் பார்த்திட்டு நம்ம ஆட்களும்
ஆரம்பிச்சிடக் கூடாது.. அப்புறம் கடவுளே
நம்மைக் காப்பாற்ற முடியாமா ஓடிப்போயிடுவாரு)
ஆனா..
இங்கிலாந்து அரச முடிசூட்டலில் ஓர் அதிசயம்
ஒரு திருப்புமுனை
நம்ம ஆளு..
இந்திய வம்சாவளி ,( இந்து சமய நம்பிக்கை கொண்ட)
இந்து பிரதமர் ரிஷி சோனாக்
பைபிள் வாசித்தார்..
So let’s celebrate this weekend with pride in who we are
and what we stand for. Let’s look to the future with hope
and optimism. And let’s make new memories,
so we can tell our grandchildren of the day we came together to sing:
‘God Save The King’.

Wednesday, April 13, 2022

அறிவாயுதமே போராயுதமாய்.. அண்ணல் அம்பேத்கர்

 

கலையின் பெயரால் எம் பெண்களை  இழிவுப்படுத்துவதை இனியும்

பொறுப்பதற்கில்லை, அப்படி இழிவுப்படுத்தி கிடைக்கும் பணம் எமக்குத்

தேவையுமில்லை” – பாபாசாகிப் அம்பேத்கர்.

10 செப், 1927 .. ல் அவர் கண்முன்னாலேயே அதை அவர்கள் செய்தார்கள்.

அதுவும் அவரை அழைத்து அவருக்கு நிதி திரட்டி தருவதாக கூறி

(மகட் சத்தியாகிரகத்திற்கு நிதி திரட்டியபோது) அழைத்திருந்தார்கள்.

அழைத்தவர் ஜல்ஷா  நாட்டிய  நாடக கலைஞர் பட்டே பாபுராவ்.

அவர் ஆடிக்கொண்டே வருகிறார். அவரின் இரண்டு பக்கமும் மகர்

இன தமாஷா (கூத்து நடனம்) பெண்கள் ஆடிக்கொண்டு வருகிறார்கள்.

அத்தருணம் அம்பேத்கருக்கு எப்படி இருதிருக்கும்?

காரணம்  தமாஷா ஆடியவர்கள் அன்றைய ஒடுக்கப்பட்ட மக்கள்.

 நிலவுடமை சமூகத்தை , ஆதிக்க சாதியை மகிழ்விக்க மாலையில்

தமாஷா..  இரவில்  அப்பெண்கள் நிலவுடமையின் காமப்பசிக்கு

இரையாகிப்போகும் அவலம்..

அக்கர்மஷி நாவலில் சரண்குமார் லிம்பாளே தன் தாய் மகமாயி கதையை

தன் பிறப்பை விவரித்திருப்பார். இவை எதுவும் புனைவல்ல.

இந்தப் பின்புலத்தில் தான் அம்பேத்கருக்கு நிகழ்ந்த இந்த

அவமானத்தை அவருக்கு ஏற்பட்ட காயத்தை அந்த வலியை

புரிந்து கொள்கிறேன்.

 நிதி தருவதாக சொல்லி தன்னை அழைத்து அவன் நடத்திக் காட்டும்

கூத்து ,

கலை என்ற பெயரில் ரசனைக்குரியதல்ல.. !

அவர் கொதித்தெழுகிறார்.

நீயாவது .. உன் நிதியாவது

எம் பெண்களை இழிவுப்படுத்தி எனக்கு நீ கொடுக்கும் இந்தப் பணம்

தேவையில்லை என்று அந்த இடத்திலேயே அதை தூக்கி எறிந்துவிட்டு

வெளியேறுகிறார்.

இச்சம்பவத்தை எதுவுமே நடக்காதது போல மவுனமாக கடந்து செல்லவே வரலாறு விரும்புகிறது. அந்தப் பின்னணியில் எத்தனையோ கட்டுக்கதைகளை  எழுதி,  பரப்பி , சினிமாவாக்கி .. இருக்கிறது.

இப்படித்தான் வரலாறு எப்போதுமே விளிம்பு நிலைக்கு எதிராக

தன்னைப் புனைந்து கொள்கிறது.

 BR Leopards - 'மூக் நாயக்' 'Mooknayak' ஊமைகளின் ...

மூக் நாயக் பத்திரிகை துவங்கியபோது இப்படி ஒரு மராத்தி இதழ்

வெளிவர இருக்கிறது என்பதை  (செய்தியாக அல்ல,)  "விளம்பரம்"

 வெளியிட கூட "கேசரி" பத்திரிகை தயாராக இல்லை.

கேசரி பத்திரிகை திலகர் நடத்திய பத்திரிகை.

திலகரும் கேசரி பத்திரிகையும் இந்திய சுதந்திரப்போராட்டத்தில்

முக்கியமான பக்கங்கள். அப்படித்தானே வரலாறை படித்திருக்கிறோம்!

இங்கிருந்து விடுதலைப்போராட்டத்தின் இன்னொரு வரலாற்று

பக்கத்தையும் வாசித்தாக வேண்டி இருக்கிறது.

 

அவமானப்படும்போது

காயப்படும்போது

நிராகரிக்கப்படும்போது

வேண்டுமென்றே கள்ளமவுனத்தில்

இச்சமூகம் கடந்து செல்லும்போது..

அம்பேத்கரின் அறிவாயுதமே

போராயுதமாய்..

ஜெய்பீம்.

(14 ஏப்ரல்  2022)



Wednesday, November 3, 2021

தமிழக அரசுக்கு ஏன் இத்தனை குழுக்கள்???

 அரசுக்கு ஏன் இத்தனை குழுக்கள்??!!

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி இருக்கிறதா?!!
எதிரிக்கட்சியாவது இருக்கிறதா?
கடிவாளம் இல்லாத குதிரைக்கு
அதன் காலடி நிழலே எதிரி.
சரவணா..
எந்த ஒரு மாநிலத்திலும் இத்தனை குழுக்கள்
அரசுக்கு இல்லை!

அமைச்சர்கள், அமைச்சரின் உதவியாட்கள், (அடியாட்கள் அல்ல)
மாவட்ட ஆட்சியாளர்கள், காவல்துறை அதிகாரிகள்,
இதற்கெல்லாம் கட்டிடங்கள், கட்டிடங்களில் நடமாடிக்
கொண்டிருக்கும் மனிதர்கள்..
இதையும் தாண்டி அடிப்படையாக
இருக்கும் பஞ்சாயத்து போர்டுகள்
(கட்டபஞ்சாயத்தை சொல்லவில்லை)
கவுன்சிலர்கள் .. இப்படியாக அரசு நிர்வாகம் என்பது
மேலிடத்திலிருந்து அடிமட்டம் வரை..
ஒரு நிர்வாக ஒழுங்குமுறையில் இருக்கிறது.
இருக்கிறதாகத்தான் நானும் நினைத்துக்கொண்டிருந்தேன்.
ஆனால் அப்படி இல்லை போலிருக்கிறது சரவணா…!
இவர்களை எல்லாம் கண்காணிக்க
இப்போது அறிவிக்கப்படும் குழுக்களைப் பார்க்கும் போது..
ஆஹா.. ஆஹா .. ஆஹா தான்!
வேறு என்ன சொல்லட்டும்?
ஆமாம். இந்த குழுக்களின் வேலை என்ன?
எதற்காக இத்தனை குழுக்கள்?
அரசுக்கு உதவும் இக்குழுக்களுக்கு
அரசு எதாவது கொடுக்கத்தானே செய்யும்?
என்ன கொடுக்கிறார்கள்??
இந்த குழுக்களின் அதிகார வரையறை என்ன?
சரவணா…
இப்படி எதையுமே யாரும் கேட்க வேண்டாம்.
இம்மாதிரி எதாவது ஒரு குழுவில் இடம்பிடிக்க
என்ன செய்ய வேண்டும்? !
கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தீபாவளிப்பரிசு
ஆன்லைனில் அனுப்பப்படும். பணம் கட்டி வாங்கிக்
கொள்ளுங்கள்.

#தமிழகஅரசு_குழுக்கள்

Tuesday, September 28, 2021

ஜெயலலிதாவின் ஹீரோ எம் ஜி ஆர் . வில்லன் ?

ஜெயலலிதாவின் ஹீரோ எம் ஜி ஆர்.
வில்லன் ???




தலைவி - கங்கனா








QUEEN - ரம்யாகிருஷ்ணன்
இரண்டுமே நமக்குத் தெரிந்த தமிழ் நாட்டு அரசியல்
அதிமுக ஜெயலலிதாவின் கதை.
தலைவியில் எம்ஜிஆராக அரவிந்தசாமி.
வெப் தொடரில் எம் ஜி ஆராக இந்திரஜித் சுகுமாறன்.

திரைப்படத்தில் கங்கனா ஜெயலலிதாவுடன் ஒட்டவே
முடியவில்லை! ஒன்றிரண்டு ஒரிஜினல் சினிமா
காட்சிகளைக் காட்டும்போது மட்டும் பரவாயில்லை.
சினிமாவில் எதிர்க்கட்சி தலைவர் வில்லன் ரேஞ்சுக்கு
சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.
சட்டசபையில் துகிலுரிதல் காட்சி..
முதலமைச்சராகி சட்டசபைக்கு வருவேன்"
என்று சூளுரைக்கும் காட்சி...
அய்யய்யோ.. சட்டசபையின்
"அந்தக் கறுப்புதினம்" இன்று பார்க்கும்போது .
. திமுக தொண்டர்களுக்கு
எப்படி இருக்குமோ..? தெரியவில்லையே!
திரைப்படம் ஓடாது.

அதிமுகவும் இதைக் கொண்டாட முடியாமல் போய்விட்டது!
பரிதாபம்..!
காரணம் திரைப்படத்தில் திமுக மட்டும் வில்லத்தனம்
காட்டவில்லை.
அதிமுகவும் என்னவெல்லாம் ஜெ வின் அரசியல் பாதையில்
அவர் ஒரு பெண் என்பதால் இழிவுப்படுத்தினார்கள்
என்பதை சினிமாவும் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது.
அதிலும் குறிப்பாக திரையில் எம். ஜி. ஆர் - ஜெயலலிதா ஜோடியை
ரசித்து விசில் அடித்து கொண்டாடிய வர்கள் இவர்கள்.
சினிமா நடிகரை தலைவராகவும்
ஏன் தங்கள் கண்கண்ட தெய்வமாகவும்
கொண்டாடியவர்களுக்கு அதே சினிமாவிலிருந்து
வரும் பெண்ணை ஏற்க முடியவில்லை.
அவள் சுமக்கும் அவமானங்கள் கனக்கிறது.
எம் ஜி ஆரின் இறுதி ஊர்வலத்தின்
க்ளைமாக்ஸ்..அதிமுகவின் அசல் முகத்தை காட்டி விடுகிறது.

எனவே இரண்டு பக்க தொண்டர்களுக்கும்
தலைவர்களுக்கும் "தலைவி" தொந்தரவுதான்.
தலைவியை விட குயின் கொஞ்சம்
புத்திசாலித்தனமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
குயின் தொடரில் திமுக எதிர்மறை பாத்திரமல்ல.
குயின் ஒரு பெண்ணின் அரசியல் பயணமும்
ஆண்மைய சமூகம் அதை எதிர்கொண்ட விதமும்
என்று கவனமாக காட்சிகளை நகர்த்தி இருக்கிறது.
சின்ன சின்ன அசைவுகளில் அதிமுக தலைவி
"ஜெ"வை கொண்டுவருவதில்
ரம்யா கிருஷ்ணன் ஜொலிக்கிறார்.
கங்கனாவின் உடல்மொழி ஒத்துழைக்கவில்லை.
படம் என்னவோ திரையிடப்பட்ட மும்பையில்
எதிர்பார்த்த அளவுக்கு வசூலை எடுக்கவில்லை.
வெளி நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில்
தலைவிக்கு அதிக வரவேற்புஇருந்திருக்கிறது
என்பதையும் சேர்த்து வாசிக்க வேண்டும்.
எம் ஜி ஆர்.. ?
யார் எம் ஜி ஆராக நடித்தாலும் மக்களுக்கு பிடிக்கும்.
ஜெயலலிதா படங்களில் எப்போதும்
எம் ஜி ஆர் தான் ஹீரோ. சந்தேகமே இல்லை!
ஆனால் யார் வில்லன் என்பதுதான்
இன்றும் சந்தேகமாக இருக்கிறது.

Wednesday, July 22, 2020

தமிழ் அறமும் மரபு செல்வங்களும்


 118 ஆண்டு பழமையான ஓலைச்சுவடி ...
தோழி..
என்னிடம் முக்கியமான சில 
ஓலைச் சுவடிகள் இருக்கின்றன. 
மருத்துவம், வானசாஸ்திரம்,மாந்தரீகம்,ஜோதிடம் , 
நெசவு,விவசாயம்., வர்மக்கலை...
இத்தியாதி..
வள்ளுவர் வம்சாவளி என்று தங்களைச் 
சொல்லிக் கொள்ளும் என் கணவர் 
அவர் குடும்பம் அவர் ஊர் மற்றும் 
அவர் சொந்தங்கள் வாழும் அந்த எட்டு கிராமங்கள்.. 
ஏற்கனவே நான் உன்னிடம் பேசி இருக்கிறேன். 
நினைவிருக்கிறதா தோழி..?
அழிந்தது போக எஞ்சியிருக்கும்
அந்த பொக்கிஷங்களை எல்லாம் 
பாதுகாத்து வைத்திருப்பது பற்றி
 கவலையுடன் யோசிக்கிறேன்....
நம் செல்வங்களையெல்லாம் 
கொள்ளையடித்துக் கொண்டு போய் 
வைத்திருக்கும் அதே இடத்தில்
லாக்கரில் வைக்கச் சொல்கிறாய்!
தஞ்சைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில்
 இருப்பதை நீயும் மறந்துவிட்டாய்... !
நெசவு சிறுதொழில் வளர்ச்சிக்கு 
தனி இலாகா வும் அமைச்சரும் 
நமக்கு உண்டு என்ற அரசியலையும்
பேச மறுக்கிறாய்!
மறந்து கொண்டே இருப்பது மனித இயல்பு..
 என்று சொல்லும் நீ 
அதனால் 
இழந்துக் கொண்டிருப்பதைப் பற்றி 
அறிந்தும் அறியாதது போல
 நடந்து கொள்கிறாய்!
இப்போதெல்லாம் 
என்னை மௌனிக்க வைப்பதில்
 நீ அதிக கவனம் செலுத்துகிறாய்... !
என் அறிவு பொக்கிஷங்களைப்
பாதுகாப்பது பற்றி 
 எனக்குப் பாடம் எடுக்காதே
தலைமுறை தலைமுறையாக 
படிஎடுத்து  ரகசியங்களை 
கடத்தி வந்திருக்கும் சூட்சமங்கள் 
உன் கணினி அறியாதவை.
எங்கள் ஊரில் 
மூன்று யுகம் கொண்டாள் சாட்சியாக
அவள் கருவறையில் 
ரகசியங்களைப் பாதுகாக்கப் போகிறேன். 
மனிதர்கள் மீது 
நம்பிக்கை இழக்கும் போது... 
தெய்வங்கள் சாட்சி சொல்ல வருகின்றன....
மூன்று யுகம் கொண்ட அவள்
நெற்றிக்கண் தூங்கவில்லை..
அறம் நின்று கொல்லும்.
தமிழ் அறம் என்றும் வெல்லும்.

Tuesday, July 14, 2020

காமராசரின் தேசிய அரசியலும் மாநில அரசியலும்

 
தேசிய அரசியலில் தன்னைக் கரைத்துக்
கொண்டவர்பெருந்தலைவர் காமராசர். 
அந்தக் கரைசலில் தமிழகம் இழந்ததும் அடைந்ததும்.. மீள்வாசிப்புக்குரியவை.
இன்றைய தமிழ் நாட்டின் தலை நகராக 
இருக்கும் சென்னையை தமிழ் நாடு 
மா நில எல்லைக்குள் நிறுத்தியதில் 
காமராசரின் பங்கு மகத்தானது.
 
சென்னை நகரத்தை கைப்பற்றி விட வேண்டும்
. என்று ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்கள் 
தீவிரமாகஇருந்தக் காலக்கட்டம். 1948-ம் ஆண்டு 
சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் நடந்தது. 
அப்போது சென்னை நகரம் ஆந்திராவுக்கே
 சொந்தம் என்பதை நிலை நாட்ட, 
ஆந்திர காங்கிரஸ்காரர்கள் பெருமளவில் 
தேர்தலில் போட்டியிட்டனர். இதை அறிந்த
 காமராசர் தமிழக காங்கிரசு தேர்தலில்
 போட்டியிடாது என்று அறிவித்தார். 
நேரு அதிர்ச்சிஅடைந்தார்.
தமிழ்நாடு எல்லைக் கமிட்டி என்ற 
ஒர் அமைப்பை உருவாக்கினார். 
அந்த அமைப்பு சார்பில் 
"தமிழ் நாட்டுக்கே சென்னை நகரம் சொந்தம்'' 
என்ற பிரச்சாரத்தைமுன்னெடுத்தார். 
தேர்தலில் தமிழ் நாடு எல்லைக்கமிட்டி 
சார்பில் காமராஜர் வேட்பாளர்களை நிறுத்தி 
அவர்களை அமோக வெற்றி பெற செய்தார்..
 
காமராசரின் எளிமை மற்றும் கல்விக்காக 
அவர் ஆற்றிய பெருந்தொண்டு...
இவை எல்லாம் பேசப்பட்ட அளவுக்கு 
அவர் அரசியல் இன்னும் பேசப்படவில்லை.
 தமிழகத்தின் தொழில்துறைக்கும் 
விவசாயத்திற்கும் ஒரு முதல்வராக 
அவர் செய்தவை பட்டியலிடப்படவில்லை.
இதைச் செய்ய வேண்டிய காங்கிரசு
 கட்சிக்காரர்கள் கூட இந்த வரலாற்று 
பக்கங்களைப் பேசுவதில்லை.
(பாவம்.. அவர்களுக்கு என்ன பிரச்சனையோ..!)
 
காமராசர் என்ற தமிழக அரசியல்வாதியின்
தேசிய அரசியலையும் மாநில அரசியலையும் 
பேச வேண்டும். அதுவே இந்திய – தமிழக 
அரசியலில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சக்கூடும்.
 
பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாளில்
இப்படியும் ஓர் அரசியல் தலைவர் 
வாழ்ந்திருக்கிறார் என்பதை எடுத்துச்செல்ல வேண்டி இருக்கிறது.

Thursday, June 4, 2020

கலைஞர்.. விமர்சனங்களுடன்..

நேற்று (3/6/2020)கலைஞர் குறித்து பல்வேறுவிதமான செய்திகள் கருத்துகள் முகநூலில் நிரம்பி வழிந்தன. அவரவர் கருத்துக்கு அரசியல் உண்டு. ஆதாயங்கள் உண்டு. காரணங்கள் உண்டு. சுய விருப்ப வெறுப்புகளும் உண்டு.

கலைஞர் மஞ்சள் துண்டு போட்டுக்கொண்டார்  என்பதையே ஒரு குற்றமாக காட்டி வன்மம் கொண்டு நக்கல் செய்பவர்கள் உண்டு. இது கருணாநிதியின் மூட நம்பிக்கை என்று
கிண்டலுடன் பேசுவார்கள். ஏன் நாத்திகவாதி முட்டாளாக மூடநம்பிக்கை உள்ளவனாக இருக்கவே முடியாதா? வாழ்க்கை அனுபவத்தில் ஏதோ ஒன்று ஏதோ சில காரணத்தினால் வந்து ஒட்டிக்கொள்கிறது.. எனவே மஞ்சள் துண்டு எனக்குப் பிரச்சனை இல்லை!

கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது 72 மணி நேர வேலையை 24 மணி நேரத்தில் செய்வதாக ஒரு பிரமிப்பு ஏற்படும். எப்போது கோப்புகளைப் பார்க்கிறார் எப்போது பத்திரிக்கை வாசிக்கிறார் எப்போது தன்மீது பேசப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு அறிக்கை எழுதுகிறார். உடன்பிறப்பே என்று முரசொலியில் கடிதம் எப்போது எழுதுகிறார்... எப்போது தூங்குகிறார் இதெல்லாம்.. யார் கணக்கிலும் அடங்காதப் புதிர். இப்படி ஒரு அசுர வேகம் கடின உழைப்பு இதெல்லாம் தான் கலைஞர்.

ஆனா இதெல்லாம் யாருக்காக எதற்காக பயன்பட்டது?
தமிழகத்தை பனகல் அரசர் ஆண்டிருக்கிறார். பக்தவச்சலம் ஆண்டிருக்கிறார். நாலு முழ வேட்டி
முக்கால் கை சட்டை மேலே ஒரு துண்டு போட்ட காமராஜர் ஆண்டிருக்கிறார். ஆட்சி அதிகாரம் அவர்களை கௌரவித்து இருக்கலாமே தவிர அதன்மூலம் அவர்கள் பொருளாதார உச்சங்களை எட்டிய தாக எவரும் சொல்ல முடியாது. திமுக தலைவர் அறிஞர் அண்ணா சொற்ப காலங்கள் ஆண்டிருக்கிறார். அவரும் அவர் குடும்பமும்அந்த அதிகாரத்தில் பெற்றது எதுவும் இல்லை. அதற்குப்பின் வந்த கலைஞர் என்னும் சாமானியரும் அவரைச் சேர்ந்தவர்களும் இந்தியாவின் தலையாய பணக்காரர்களின் பெயர் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்கள்.
இதில் கலைஞரின் பங்களிப்பு பெரும் பங்கு வகிக்கிறது.

இவர் ஆட்சிக்காலத்தில் தான் குடிப்பழக்கம் ஒரு லாபகரமான தொழிலாக வளர்த்தெடுக்கப்பட்டது.
இவர் ஆட்சிக்காலத்தில்தான் மருதம் திரிந்து பாலை ஆனது. ஆறுகள் மணல் வெளியை இழந்தன. இவர் ஆட்சிக் காலத்தில் தான் முள்ளிவாய்க்கால் வரலாற்று துரோகம் நடந்தது.
இவர் ஆட்சிக்காலத்தில் தான் காமராஜர் தொடங்கி வைத்த அரசு பள்ளிகளில் ஆசிரியர் இல்லாமல் ஆங்கில வழிக் கல்விக்கு குழந்தைகள் அணிவகுத்தார்கள். இவர் ஆட்சிக்காலத்தில்தான் தலித்துகள் வன் கொடுமைக்கு ஆளானார்கள்.

அப்படியானால் கலைஞரின் ஆட்சியில் சமூக அக்கறை சார்ந்த எதுவும் நடக்கவில்லையா என்று கேட்டால்.. நடக்கவில்லை என்று எவரும் சொல்லிவிடவும் முடியாது.
பொதுவுடமை பேசிய கம்யூனிஸ்டுகள் ஆண்ட மேற்கு வங்கத்தில் அவர்கள் செய்ய மறந்த செயலை.. மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்ஷாவை ஒழித்தது.. எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டு வந்தது.
பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கியது... இப்படி சில போற்றுதலுக்குரிய தருணங்கள் உண்டு.

ஒரு மாபெரும் அரசியல் கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்த தலைவர் என்று அவரைப் புகழ்ந்து விடலாம் ஆனால் அந்தப் புகழ்ச்சிக்கு தமிழக அரசியல் கொடுத்த விலை அதிகம். கழகத்தில் கேள்வி கேட்பவர்கள் நியாயம் கேட்பவர்கள் எழுந்து நிற்பவர்கள் உரக்க குரல் கொடுப்பவர்கள் இவர்களை அவர் சகித்துக் கொண்டதே இல்லை.
அவர்கள்பகைக்கப்பட்டார்கள். தூக்கி எறியப்பட்டார். பாதகர்கள் என்று பழிக்கப்பட்டார்கள் . தமிழக அரசியல் பங்காளிகளின் சண்டைக் களமாக மாறியது.. தமிழகத்தின் பொது பிரச்சனைகளை கூட ஒற்றைக் குரலில் டெல்லியில் ஒலிக்க இவர்களால் முடியவில்லை.
மாநில உரிமைகளுக்காக நலனுக்காக எழுந்த அரசியல் இயக்கம் அவர் சொந்த ரத்த உறவுகளுக்காக சுருங்கிப்போன அவலம்.. அரங்கேறியது. தமிழனாய் தன்னை அறுதியிட்டுக் கொண்டே இந்திய தேசியத்தில் அவர் கரைந்து போனது கூட காரணமாகத்தான். இந்திய தேசியம் ஆவதை அவர் அறிந்தே தான் செய்திருக்கிறார்.
குமுதம் ரிப்போர்ட்டர் (17/7/2008) ஒரு செய்தியை வெளியிட்டது. அதாவது காங்கிரஸ் தலைவர் பதவி ஏற்றவுடன் தங்கபாலு கலைஞரின் ஆலோசனை கேட்கிறார் அவரிடம்"ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக தேசியம் ஆகி வருகிறேன் முழுவதும் மாறிவிட வேண்டுமா?" என்று
சிரித்துக்கொண்டேன் கேட்டாராம் கலைஞர். தன் அரசியல் மாற்றங்களை அறிந்தே ஆதாயங்களுடன்.. சுய ஆதாயங்களுக்காக அரங்கேற்றியவர் கலைஞர்... இப்படியாக கலைஞர் மீதான விமர்சனங்களை அடுக்கிக்கொண்டேபோகலாம்...

 அனைத்தையும் தாண்டிய பிறகும்....
ஒரு புள்ளியில் அவர் என்னை வசீகரிக்கிறார். அந்த இடம் அவருக்கும் எனக்கும் ஆனது. அவரைக் கொண்டாடும் அந்த தருணம்... முக்கியமானது. கட்சியிலும் அரசியலிலும் மேலிடத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஜாதி சீழ்ப்பிடித்து நாற்றம் எடுக்கிறது. கட்சியிலும் கூட அவர் சாதி குறித்த அவரை கீழ்மைப் படுத்தும் உரையாடல்கள் கடைசிவரை தொடர்ந்தன.
"கலைஞர் தன்னை தலித் வீட்டு சம்பந்தி என்று சொல்லி பெருமிதப்பட்டுக் கொள்கிறாரே"என்று ஒருவர் வினவ
"அவர்பிறவிக்கு அதைவிட வேறென்ன பெருமை கிடைத்து விடப்போகிறது?"என்று ஏளனச் சிரிப்பு கிடையில் சொன்னவர்தான் கி. மனோகரன்.(ஆதாரம் கவிதா சரண்)இவை
எல்லாம் அறிந்தவர்தான் கலைஞர்.

மனித மாண்புகளை பேணத் தெரியாத
சாதி கழிசடை சமூகத்தில் சொல்லிக்கொள்ளும்படியான அடையாளமோ முகவரியோ பின்புலமோ குலப் பெருமையோ இல்லாத ஒரு சாமானியன் அதிலும் ஆக பிற்படுத்தப்பட்ட ஒரு அதி சூத்திரன்.. தான் வாழ்ந்த காலத்தில் புறக்கணித்துவிட முடியாத அரசியல் வரலாறாக தன்னை எடுத்து நிறுத்திக்கொள்ள முடியுமெனில் அந்த நம்பமுடியாத வரலாற்று விந்தையை நிகழ்த்திக் காட்டியவர் கலைஞர்.

திராவிட அரசியல் வரலாற்றில் கலைஞருக்கு மட்டுமே அவருடைய பிறப்பு கொடுத்த இடம் இது.
விதுரனின் அரசாட்சியில் விதுரன் மட்டும்தான் ஜாதி யால் ஒதுக்கப்பட்டவன் .. அரசும் அதிகாரமும் பணமும் செல்வாக்கும் விதுரன் வாரிசுகளுக்கு சாதியின் இழிவைச்
சுமத்தவில்லை.( அதற்கான காரணங்கள் மிகவும் வேடிக்கையானவை.)
இந்தப் புள்ளியில் கலைஞரை நான் நிமிர்ந்து பார்க்கிறேன்.. எல்லா விமர்சனங்களுடனும்.....

Friday, May 8, 2020

மன் கி பாத் மரண ஓலங்கள்


சிதறிக்கிடக்கும் சப்பாத்தி துண்டுகள் ..
money purse without money..யில் புன்னகைக்கும் முகங்க்கள்..
உழைப்பாளியின் வியர்வையில் படிந்த ரத்ததுளிகளாய் .. 
சிதறிக்கிடக்கிறது இரவும் பகலும்.

டியர் மோதிஜி... 
நிச்சயமாக நீங்கள் இதற்கு காரணமல்ல.
உங்கள் அகண்ட பாரதக் கனவுகளில் இவர்கள்
இல்லை, இல்லவே இல்லை.

செத்தப் பிறகு 5 லட்சம் கொடுப்பதாக அறிவிக்கும்
நீங்கள்..உயிருடனிருக்கும் போது ரூ 500 செலவு
செய்திருந்தால் இந்த மரணங்கள் நடந்திருக்குமா?
இப்படி எல்லாம் லாக்டவுண் காலத்தில் உங்கள் மீது
குற்றம் சுமத்துவது தேசத்துரோகம் தான்!

லாக்டவுண் நேரம்.. 
தண்டவாளத்தில் டிரெயின் ஓடாது என்பதை 
அப்படியே வாசிக்கும் அப்பாவி மக்கள் 
ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்தது 
மன்னிக்க முடியாத குற்றம் என்று 
இப்போதும் உங்கள் அறிவுக்கொழுந்துகள் பேசுவார்கள்..
அவர்களுக்குத் தெரியுமா ..
நடந்தே போய்விடலாம் என்ற நம்பிக்கையும் 
இருத்தலுக்கான போராட்டமும்.
இந்தியா முழூமைக்கும் ஒரே தலைவர் நீங்கள் தான்.
4 மணி நேர அவகாசம் கொடுத்து லாக்டவுண் என்று 
அறிவிக்கும் போது நிச்சயமாக 40 கோடி இந்திய
மக்களின் அன்றாட வாழ்க்கையை உங்களுக்கு நினைக்க
 நேரமிருந்திருக்காது.. 
மும்பையும் சென்னையும் டில்லியும் 
ஏன் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.. 
பன்னாட்டு விமானங்களை
கடைசிவரை பறக்கவிட்டு வேடிக்கைப் பார்த்த உங்களுக்கு
 எங்கள் 
அன்றாட வாழ்க்கையின் வலி தெரியுமா மோதிஜி...??
நிலைமையைச் சமாளிக்க முடியாமல 
மா நில அரசுகளைத் திண்டாட வைத்துவிட்டு..
இனி நீங்களாச்சு.. என்று கையை விரித்துவிட்டு
நீங்கள் பேசும் "மன் கி பாத்"!!!! மனசுடன் ஒட்டவே இல்லை..!
இரவு முழுவ்வதும் அந்தக் காட்சிகள் 
எங்களைத் தூங்க விடாமல் துரத்துகிறது.. ..
 நீங்களும் உங்கள் சகாக்களும் எத்தனைக் காரணங்கள் 
சொன்னாலும் எல்லாமே அர்த்தமிழக்கின்றன...

வெறுமை சூழந்த விடியலில்
தண்டவாளத்திலிருந்து உயிர்த்தெழுகிறது
மீண்டும்மீண்டும் அந்த முகங்கள்...