Saturday, April 25, 2020

தாராவியும் கொரொனாவும்

ட்டேய்....திருந்துங்கடா...

தாராவியில் கொரொனாக்கொரொனா..
இந்தச் செய்தியை மிகுந்த பதட்டத்துடன் எனக்கு யாரும் forward செய்யாதீர்கள்...

நீங்கள் சொல்கின்ற கடைப் பிடிக்கின்ற
தனிமனித இடைவெளியை 18x10 அளவுள்ள தீப்பெட்டி சைஸில் இருக்கும் குடிசையில் வாழும் 5 முதல் எட்டு பேர் கொண்ட குடும்பம் கடைப்பிடிப்பது எப்படி?

காலம் காலமாக மும்பை பெருநகரின் மையப்பகுதியில் இருக்கும் தாராவியின் redevelopment scheme என்று சொல்லிக்கொண்டு மீண்டும் அதே மாதிரி புறாக்கூண்டு வீடு தான் தாராவி மக்களுக்கு கட்டித் தருவேன் என்று திட்டமிடும் உங்கள் வளர்ச்சித் திட்டங்களை வைத்துக்கொண்டு தாராவியில் கொரொனா என்று
அலரா தீர்கள்.

1440 பேருக்கு ஒரு கழிவறை வசதி தான் இருக்கிறது என்று 10 வருடத்திற்கு முன்பே எழுதியது நீங்கள் வாசிக்கும்TOI.
பாசஞ்சர் ட்ரெய்னில் கூட இதைவிட அதிக வசதிகள் இருக்கிறது. நீங்கள் கொண்டுவந்த ஸ்வச் பாரத் தாராவியில் ஒரு மயிரையும் சிரைக்கலையே!
பிறகு எதுக்குடா இப்ப இந்த அலறல்!

தாராவியில் எந்த ஒரு பகுதியிலும் கழிவுநீர் கலக்காத குடிதண்ணீருக்கான
வசதி இருக்கிறதா? எவ்வளவு போராடி இருக்கிறோம்? கெஞ்சி இருக்கிறோம்!
எங்கள் குரல் அப்போதெல்லாம் உங்கள் காதில் விழுந்த இருக்கிறதா?
இப்போது இப்போது என்ன முதலைக் கண்ணீர் வடிக்கிறீர்கள்!

இந்திய வணிக பெருநகரத்தின் தலைநகரமான மும்பையின் மையப்பகுதியில் இருக்கும் எங்கள் குடிசைகளில் அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்படாத வரை உங்கள் பொருளாதார வளர்ச்சி என்பது சீழ்ப் பிடித்து வடியும் சிரங்கு.. இப்போது தான்
சொரிய ஆரம்பித்திருக்கிறீர்கள்.! சாயம் பூசிய உங்கள் நகங்களில் இருந்து உதிரும் செதில்களுக்கு யார் பொறுப்பு?
இனியாவது புரிந்து கொள்வீர்களா?
மும்பை பெரு நகரம் என்பது நாங்களும்தான், தாராவியும்தான் என்பதை,.

**
இன்னொரு முக்கியமான வேண்டுகோள்... அம்மணிகளே.. தூய்மைப் பணியாளர்களுக்கு பாதபூஜை செய்வதெல்லாம் புதுசு புதுசா கொண்டாடி உங்களைத் தெய்வீக பெண்மணிகள் ஆக காட்டிக் கொள்ளாதீர்கள்! வயிறு பற்றி எரிகிறது..
ப்ளீஸ் அவர்களுக்கு முடிந்தால் தாகத்திற்கு ஒரு பாட்டிலில் தண்ணீர் கொடுங்கள் அது போதும்.. சக மனுஷியாக அவர்களை மதிக்க தெரியாத உங்களிடமிருந்து அவர்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை!...

ட்டேய்... சரவணா..
நீங்கள் சொல்லுகிற social distance தூய்மைப் பணியாளர் களுக்கு கிடையாது.. அப்படித்தானே. புண்ணியவான்களே ....
குப்பை அள்ளும் காரணத்தால் அவர்களுக்கு குப்பைகளை ஏற்றிச்செல்லும் லாரியில் உணவுகளை எடுத்து வரலாம் என்ற உங்கள் செயல்
உங்கள் பொய் முகத்தைக் கிழிக்கிறது..
ட்டேய்... திருந்துங்கடா...

2 comments:

  1. சவுக்கடி வார்த்தைகள்...

    ReplyDelete
  2. பதற்றம் தந்த பதிவு
    அவசியமான பதிவு

    ReplyDelete