Monday, July 30, 2018

பெரியோரை வியத்தலும் இலமே..




சமூகத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வாழ்ந்த ஒருவர்
தன் மூப்பு அதன் காரணமாக ஏற்படும் உடல் உபாதைகள்
நிமித்தம் மருத்துவமனையில் இருக்கும் போது..
அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் கவலையில்
இருக்கும் போது..
அத்தருணம் அந்த தனிப்பட்ட நபர் குறித்த செயல்பாடுகளை
விமர்சிக்கும் நேரமல்ல. இதையே அந்த நபர் விமர்சனத்திற்கெல்லாம்
அப்பாற்பட்டவர் என்று எடுத்துக் கொள்வதும் தவறு.
நாகரீகம் அனைவவருக்கும் உண்டு. ஆனால் நயத்தக்க நாகரீகம்
தமிழர் பண்பாட்டின் ஆகச்சிறந்த கொடை என்பது என் கருத்து.
இத்தருணத்தில்  அவரைப் பற்றிய விமர்சனங்களுக்கெல்லாம்
பதில் சொல்லி நியாயப்படுத்திவிடுவது அறமல்ல.


அவர்களின் கருத்துகளை
அவர்கள் பக்கத்தில் பதிவதற்கு அவர்களுக்கு 
எந்தளவுக்கு உரிமையுண்டோ
அதே உரிமை அப்பதிவை public வாசிக்கலாம் 
என்று அறிவிக்கும் போது
அதை வாசிப்பவர்களுக்கும் கருத்து சொல்லும் 
உரிமையை அப்பதிவு
தன் உரிமையுடன் சேர்த்தே பதிவு செய்திருக்கிறது என்பதை 
பலர் உணர்வதில்லை
தன்னுடைய பதிவை கருத்தை வரவேற்று
கொண்டாடும் கூட்டத்திற்கு நடுவில் ஓரிருவர் 
அக்கருத்தை தெளிவான
கருத்துகளுடன் எதிர்கொண்டால்
கவனிக்க வசைச்சொல் இன்றி கருத்தை
கருத்தால் எதிர்கொள்வது
உடனே விமர்சனம் செய்தவரை பிஜேபி என்றும்
துரோகி என்றும் இனப்பற்று இல்லாதவன் என்றும்
இன்னும் ஒரு படி மேலே
ஏறி அரசியல் அறியாதவர் என்றும் சகட்டு மேனிக்கு எழுதித்தள்ளும்
வாசகங்கள் அண்மையில் அதிகரித்திருக்கின்றன.
இன்னார் இன்னாரைப் இந்த வாசகத்தை 
இத்தருணத்தில் சொன்னார் என்பதை
எதிர்காலம் மறந்துவிடும். ஆனால் சொல்லப்பட்டவை
சொல்லப்பட்டவையாக அப்படியே எடுத்துச் செல்லப்படும்.

உண்மையை எழுதுங்கள். உங்கள் அனுபவத்தை எழுதுங்கள்.
அரசியலை எழுதும் போது ஆதாரங்களுடன் எழுதுங்கள்.
மன எழுச்சியில் எழுதும் அரசியல் விமர்சனங்கள் 
ஆபத்தானவை. எழுதுபவருக்கும் எழுதப்படுபவருக்கும் கூட
ஆபத்தானவை தான்.
சூதர்களின் பாணர்களின் வாய்மொழியில் போற்றப்பட்ட
புராண இதிகாச தலைவர்களின் காலம் அல்ல நாம்
வாழ்ந்து கொண்டிருக்கும் காலம்.

காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

பிகு: கலைஞர் அவர்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு
நெருக்கமானவரோ அதைவிட அதிகமாக எனக்கும்
நெருக்கமானவர். எம் தந்தையர் வாழ்க்கையின் எச்சமாக
இருப்பவர். என்னைப் பற்றி அறியாதவர்களுக்காக இதையும்
சேர்த்தே எழுதியாக வேண்டி இருக்கிறது. 


2 comments:

  1. அருமையாய் சொன்னீர்கள் அம்மா. நன்றி.

    ReplyDelete
  2. மிகச் சிறப்பாகச் சொன்னீர்கள் எழுத்தாளரே! கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் அவர் சாக வேண்டும் என விரும்பி நாம் தமிழர் நண்பர்கள் எழுதுவதாகச் சொல்லி, அதற்கு மறுமொழி அளிக்கும் சாக்கில் ஈழ இனப்படுகொலையின்பொழுதான அவர் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் போக்கை எங்கெங்கும் காண முடிகிறது. எனக்குத் தெரிந்து நீங்கள் ஒருவர்தாம் இதை நடுநிலையோடு அணுகியிருக்கிறீர்கள். மிக்க நன்றி! மிகவும் மகிழ்ச்சி!

    ReplyDelete