Thursday, March 12, 2020

மும்பையில் சாதனைப் பெண்களுடன் நானும்

நேற்று (11/3/20) மாலை சாதனைப் படைத்தப்
பெண்களுடன் நானும்..
அவர்களின் முன்னால் நான்..??
சுயபரிசோதனைக்கான நேரமிது..
யோசிக்கும் போது வெட்கமாக இருக்கிறது.
என் கடந்தப் போன காலங்கள்
இனி வரப்போவதில்லை..!
அவர்களிடமிருந்து துணிச்சலையும் விடாமுயற்சியையும்
 கொஞ்சம் கடனாக வாங்கி வந்திருக்கிறேன்.
இதோ.. அவர்களில் சிலரைப்பற்றி..
ஆதரவற்ற குழந்தைகளை பராமரிக்கும் பெண்..-
குடிசைவாழ் குழந்தைகளின் கல்விக்காக போராடி
பள்ளிக்கூடம் திறந்து கற்பித்தப் பெண்..-
நடனம் என் உயிர்மூச்சு.. என்று வாழும் பெண்
இசையே என் ஜீவன் என்ற பெண்-
நோய் நாடி மருத்துவம் பார்க்கும் ஆயுர்வேத
மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்ற பெண்-
பெளதிகம் படித்துவிட்டு “make India” வின்
நம்பிக்கை நட்சத்திரமாகி இருக்கும் விஞ் ஞானிப் பெண்,-
9 வயதில் கடலில் நீந்தி இன்று நீச்சலிலும்
துப்பாக்கி சுடுவதிலும் சாதனை நிகழ்த்தி இருக்கும்
வீராங்கனை,-
ஆண் மைய அதிகார அரசியலில் எந்த ஒரு
"காட் பாதரும் " இல்லாமல் தங்களுக்கான இடத்தை
அடைந்திருக்கும் பெண் அரசியல்வாதிகள்..(கவுன்சிலர்கள்)
குழந்தைகளுக்கு லிவர் மாற்று அறுவைச்சிகிச்சை
செய்த பெண் மருத்துவர்.-.
இந்திய அரசின் உதவித்தொகையை பயன்படுத்தி
இன்றுவரை 3000 பேர்களுக்கும் அதிகமாக
கண் அறுவைச்சிகிச்சை செய்த பெண் மருத்துவர்-
ச ச்சின் டெண்டுல்கரை உருவாக்கிய பள்ளியில்
இன்று பெண்களுக்கான கிரிக்கெட் டீம் உருவாகி
அகில இந்திய அளவில் விளையாடிக் கொண்டிருக்கிறது 
என்று பெருமையுடன் சொன்ன பெண்..-
“பெண்கள் முதலில் தங்கள் உடல் நலனைக் 
கவனித்துக் கொள்ள வேண்டும்.. செய்வீர்களா பெண்களே..” 
என்று தன் தாயின் கதையைக் கூறி
 எங்களை நிமிர்ந்து உட்கார வைத்த பெண்-
உணவு வங்கி திட்ட த்தைக் கொண்டுவந்தப் பெண்-
உணவு கெட்டுப்போகாமலிருக்க இனி பிரிட்ஜ் தேவையில்லை என்று கண்டுப்பிடிப்புகள் நட த்திக் கொண்டிருக்கும் பெண்..-
பணி ஒய்வுக்குப் பிறகும் கல்லூரியில் சேர்ந்து படித்து
பட்டம் வாங்கியப் பெண்.. -
இவர்களுக்கு நடுவில் நான்..?????????????????
இவர்களில் பெரும்பாலோர் திருமணமாகி
குழந்தைகள் பெற்று.. அதனால் ஏற்பட்ட
நேரமின்மை.. சிலருக்கு வேலையைவிட்டு
தற்காலிகமாக வீட்டிலிருக்க வேண்டிய சூழல்..
அதன் பின் அவர்கள் தங்களின் மீள்வரவில் தான்
RE –ENTRY சாதனைகள் படைத்திருக்கிறார்கள்.
என்ற உண்மையை அவ்வளவு எளிதில்
 ஒரு செய்தியாக என்னால் கடந்து செல்ல முடியவில்லை.
அடுத்த தலைமுறை இன்றைய பெண்கள் பேசும்போது 
எங்களுக்கு வேண்டியதை எல்லாம் எங்கள் பெற்றோர்
 கவனித்துக்கொண்டார்கள். உங்கள் அனுபவங்கள், கடினமான பாதை எங்களுக்கில்லை என்றார்களே தவிர
இன்றைக்கு அவர்களில் ஒவ்வொருவரும் 100 பெண்களுக்கு 
வேலை கொடுத்து சுயமாக தொழில் நட த்தும்
 சாதனைப்பெண்களாக வலம் வருகிறார்கள்..
இவர்களுக்கு நடுவில் நானும் !!
அவர்கள் நடந்து வந்தப் பாதை
அவர்கள் கடந்து வ ந்த வாழ்க்கைத்துளிகள்
என்னை நிறைய யோசிக்க வைத்திருக்கிறது.
வாழ்க்கையில் நான் தவறவிட்ட தருணங்கள்
அதற்கான காரணங்கள்
இன்று யோசிக்கும்போது அர்த்தமற்றதாக இருக்கின்றன.

எழுத்தும் வாசிப்பும் மட்டுமே சாதனையாகிவிட
முடியுமா..? யாருடைய வாழ்க்கையிலாவது
ஒரு துளியாவது அது தன் பங்களிப்பை
செய்யுமா..?

இப்படியான பெண்களைத் தேடி
பெண்கள் தினத்தில் சந்திக்க வைத்து
விருதுகள் கொடுத்து ஒவ்வொரு பெண்ணையும்
தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நேரமும்
கொடுத்து… LIC யில் வேலைப்பார்க்கும் பெண்கள்
முதல் முறையாக பெண்கள் தினத்தை இம்மாதிரி
கொண்டாடியதைப் பாராட்டுகிறேன்.
இத்தனைக்கும், நடுவில் சின்னதா இன்னொரு
செய்தியும் என் இருத்தலை அர்த்தமுள்ளதாக்கி
இருக்கிறது…சற்று ஆறுதலாக மயிலிறகாக
வருடிக் கொடுப்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.
இவ்விருதுக்கு தேர்வு செய்திருப்பதாக
அறிவித்து வீட்டில் வந்து LIC ராமலஷ்மி சொன்னபோது 
தயக்கமாக இருந்த து. வேறு யாருக்காவது கொடுங்கள்
 என்று சொல்ல நினைத்தேன்.. 
ஆனால் அப்பெண் சொன்னார்..
“அக்கா.. யாரிடம் கேட்டாலும் சாதி மத அரசியல் 
வேறுபாடின்றி முதலில் அவர்கள் சொல்லும் பெயர்
 உங்கள் பெயர் தான் “என்றார்.
அவர்களின் பெயர்களையும் சொன்னார்.
அரசியல் காரணமாக தடாலடியாக நான் 
விமர்சித்தவர்கள் முதல்  நேரில் கண்டாலும் நான்
 கண்டுகொள்ளாமல் கடந்து சென்றவர்கள் வரை .. .
அவர்களின் முகங்கள் என் கண்முன்னால் வந்து
என்னைப் பார்த்து புன்னகை செய்தன. .
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..
இப்போதும் வெளிப்படையாக சொல்கிறேன்..
நான் எதுவுமே சாதிக்கவில்லை..
அந்த சந்தர்ப்பங்களை எல்லாம் தவறவிட்டவள்
என்று வேண்டுமானாலும் என்னை
வைத்துக்கொள்ளலாம்.
அம்ச்சி மும்பைக்கு ..இத்தருணத்தில்
இந்த தமிழச்சியின் நன்றிகள் கோடி..

1 comment:

  1. வணக்கம்
    விருது பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள்
    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete