Tuesday, October 27, 2015

வலைப்பதிவர் போட்டியில் நடுவராக ..



அண்மையில்  (11 oct 2015)புதுக்கோட்டையில் நண்பர்கள் கணினி வலைப்பதிவர் மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்திக்காட்டினார்கள்.
 அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பெண்முன்னேற்றம் குறித்த கட்டுரைகள் - பகுதிக்கு நடுவராக இருக்கும் பொறுப்பை
ஏற்றுக்கொண்டேன்.
அந்த அனுபவம் எனக்கு சில கருத்துகளை எழுதியே ஆக வேண்டிய
நிலைக்குத் தள்ளி இருக்கிறது என்பது தான் உண்மை.
போட்டிக்கு வந்திருந்த கட்டுரைகள் மொத்தம் 39.
தனித்தனியாக வாசித்தும் அதன்பின் என் முடிவுகளைத் தீர்மானிப்பதற்கு முன் மொத்தமாக ஓரிரவில் உட்கார்ந்து ஒட்டுமொத்த
39 கட்டுரைகளையும் வாசித்தேன்.
 ஒரு நடுவராக என் கருத்துகள், மதிப்பெண்கள்
குறித்த என் விமர்சனங்களையும் சேர்த்தே அனுப்பியிருந்தேன்.

.
* பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் " என்ற
மகாகவி பாரதியின் வரிகளை 98% கட்டுரைகளில் வாசித்தேன்.
இந்த வரிகளை வெறும் மேற்கோளாக காட்டிவிட்டால் மட்டுமே
பெண்முன்னேற்றம் குறித்து எழுதிவிட்டதாகிவிடுமா?
 எட்டாவது வகுப்பு படிக்கும்போது எங்கள் தமிழ் வாத்தியார்
 சொல்லுவார்.. ஒரு திருக்குறள், அத்துடன் பாரதி/பாரதிதாசன்
இவர்களுடன் சேர்ந்து திருவிக, மு,வ, இவர்களின் பொன்மொழிகள்
 என்று கட்டாயம் கட்டுரையில் இருக்க வேண்டும் என்றும்
 அதற்கு மதிப்பெண் உண்டு என்றும் சொல்லி இருக்கிறார்..
ஆனால் இன்று அதே வரிகளை எடுத்துக்கொண்டு மறுவாசிப்பு
செய்கிறோம்.
அக்காலச்சூழலில் அவர்கள் சொன்னதை
இன்றைய பெண்ணிய தளத்தில் உரசிப்பார்க்கிறோம்.
இந்த மறுவாசிப்புக்கு அதிக வாசிப்புகள் தேவை.
அம்மாதிரியான வாசிப்புகள் இன்று அருகிப்போய்விட்டன என்பதையே
போட்டிக்கு வந்திருந்த கட்டுரைகள் வெளிப்படுத்தி இருந்தன.
எதையும் நுனிப்புல் மேய்வது என்பதுடன் நம் தேடல் முடிந்துவிடுகிறதா?
என்ற ஐயப்பாடு இக்கட்டுரைகளை வாசித்தப்பின் ஏற்பட்டது.
இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்யும் போது
 இன்றைய காட்சி ஊடகத்தின்
மிகப்பெரிய தாக்கமாகவே இதைப் பார்க்கிறேன்.
கட்டுரைகளின் ஊடாக அவர்கள் வெளிப்படுத்தி
 இருக்கும் கருத்துகள்
பெரும்பாலும் பட்டிமன்றத்தில் அவர்கள் கேட்ட கருத்துகள்/
 நீயா நானாவில் கேட்டவை என்பதைத் தாண்டி பயணிக்கவில்லை.
பட்டிமன்ற கருத்துகளையோ நீயா நானா விவாதங்களையோ மட்டுமே
குற்றம் சொல்லிவிடமுடியாது.
 அக்காட்சி ஊடகத்தில் சில அரிதான  கருத்துகள்
எப்போதாவது  வெளிப்படத்தான் செய்கின்றன.
 ஆனால் அதைக் கேட்டப்பின்,அது குறித்த அடுத்தக் கட்ட தேடல்
 முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.
கணினி யுகம் இன்று நமக்கு எண்ணற்ற தகவல்களை ஒரு "க்ளிக்"கில்
நம் பதிவுக்கு கொண்டுவந்து விடுகின்றன. அத்தகவல்களின் பின்னணி,
அது குறித்து வெளியாகி இருக்கும் ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள்,
பல்கலை கழக கருத்தரங்குகள், அரசின் சட்ட திட்டம், அரசின் நிலைப்பாடு,
இப்படியாக ஒரு தொடர் தேடல் இருந்தால் மட்டுமே தரமான கட்டுரையை
ஒருவர் கொடுக்க முடியும்.
கட்டுரை வெறும் தகவல் களஞ்சியம் அல்ல,
கட்டுரைக்கு தகவல் என்பது சொல்ல வரும் கருத்தை வலுப்படுத்தவோ
அல்லது அதை மையமாக கொண்ட அடுத்த கட்ட பயணத்திற்கான
பாதையாகவோ இருக்க வேண்டும்.
வாசகனுக்கு முடிந்தால் ஒரு புதுத் தகவலைக் கொடுக்க வேண்டும்.
கட்டுரையை வாசித்து முடித்தப்பின் வாசகனை அடுத்தக்கட்ட
தேடலுக்கு இழுத்துச் செல்லும் வீரியமிக்கதாக இருக்க வேண்டும்.
கட்டுரையில் சொல்லப்படும் தகவல்கள் நம்பகத்தன்மையுடன்
இருப்பது மிகவும் அவசியம்.
புனைவு மட்டுமல்ல இலக்கியம் ,
அ-புனைவுவும் இலக்கியம் தான். இரண்டுக்குமே வாசிப்பு
வாசிப்பு  வாசிப்பு.. அவசியம்.
அதைவிட முக்கியம் நாம் எதை வாசிக்கிறோம் என்பதும்
அதை எப்படி தெரிவு செய்கிறோம் என்பதும் தான்.
நடக்கும் துணிவிருந்தால் கடக்கும் தூரம் அதிகமில்லை.

Friday, October 9, 2015

வைரமுத்துவின் "காதல்கொலை"



வைரமுத்து எழுதிய 40 சிறுகதைகளின் தொகுப்பு நூல்
 நாளை (சனிக்கிழமை) வெளியிடப்பட இருக்கிறது. 
கலைஞர் வெளியிடுகிறார்.
தன்னுடைய கதைகள் குறித்து அக்கதைகளை எழுதியவர்
 என்ற முறையில் ஒரு படைப்பாளியாக
 எதை வேண்டுமானாலும் வைரமுத்து அவர்கள் சொல்லிக்கொள்ளட்டும்.
 
வார்த்தைகளை தங்க நாணயம் போல
 செல்வழித்ததாக சொல்லட்டும்.
ஜெயகாந்தன் வாழ்ந்த இறுதி ஆண்டில்
 இவர் கதைகள் எழுத ஆரம்பித்ததால் 
தன்னை ஜெயகாந்தனின் வாரிசாக
 பட்டா போட்டு பதிவு செய்து கொள்ளட்டும்
.
கவுரவக்கொலைகள் என்று தப்பாக உச்சரிக்கப்படும்
 காதல்கொலைகள் (முதல் இலங்கை இனப்படுகொலை வரை 
எழுதி இருக்கிறேன் )" 
என்று சொல்லி இருப்பது விவகாரமாக இருக்கிறதே!
என்ன சொல்ல வருகிறார் வைரமுத்து அய்யா அவர்கள்?
கவுரவக்கொலைகளை காதல் கொலைகளாக்கி இருக்கிறாரா?
அல்லது காதல்கொலைகள் கவுரவக்கொலைகளாக 
திரிக்கப்பட்டு தப்பாக உச்சரிக்கப்பட்டு விட்டதற்காக
 கொதித்துப் போயிருக்கிறாரா?
எரியும் பிரச்சனைகளை எழுதி இருக்கிறேன் 
என்று சொல்லும் அய்யா வைரமுத்து அவர்கள்
 எதை எதில் எரித்து இருக்கிறார் என்று தெரியவில்லையே!

Wednesday, September 30, 2015

வட்டிவிகித குறைப்பு.. யாருக்கு லாபம்?




My name is Raghuram Rajan, and I do what I do
There has been pleading demands and threats
(for a  rate cut).. Everybody and his uncle has a theory
on how to run the economy.. There are savants and
idiot savants available to give you advice...

இப்படியான பஞ்ச் டயலாக் வசனங்களுடன் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு
இன்றைய தினசரி (ஆங்கிலம்) பத்திரிகைகளில் ஹீரோவாக
வலம் வருகிறார் இந்திய ரிசர்வவங்கி கவர்னர் ரகுராம் ராஜன்.
பொதுவாக 25 பைசா வட்டி விகிதக்குறைப்பு இருக்கும். ஆனால்
ரகுராம் 50 பைசா வட்டிவிகிதத்தைக் குறைத்துவிட்டதாக
அறிவித்தவுடன் நம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்களும்
அவசரம் அவசரமாக இந்த வட்டிவிகிதத்தின் பயன்பாடு வங்கி
வாடிக்கையாளருக்கு/பொதுமக்களுக்கு  உடனடியாக போய்ச்சேர
வேண்டும் என்று சொல்லிவிட்டார்.
பொதுஜனங்களுக்கு இதனால் என்ன பயன்? என்ற கேள்விக்கு
எவருமே நேரடியாக பதில் சொல்வதில்லை. அப்படியே சொன்னாலும்
புரிந்து கொள்ளும்படி சொல்வதே இல்லை!
அதாவது இனிமேல் வங்கிகள் வழங்கும் கடன் தொகைக்கான வட்டிவிகிதம்
50 பைசா குறைகிறது. அதாவது நீங்கள் வீட்டு லோன் வட்டிவிகிதம்
9.50% என்றால் இனி வங்கிகள் 50 பைசா குறைத்து 9% வட்டியை
உங்களிடம் வசூலிக்கலாம். அதனால் உங்கள் கடனுக்கான மாத தவணையும்
குறைகிறது. இப்படியாக housing loan, car loan. domestic purpose loan, house repairing loan, study loan என்று நாம் வங்கியில் வாங்கும்
கடனை ஊக்குவிக்கும் வகையில் இந்த வட்டிவிகிதக் குறைப்பு..
அதாவது எல்லோரும் கடன் வாங்குங்கள், நீங்கள் கடன் வாங்கிக்கொண்டே
இருந்தால் தான் நுகர்வோக் மார்க்கெட்டில் வெளிநாட்டினர் தங்கள் பணத்தைக் கொண்டுவருவார்கள். ரியல் எஸ்டேட் என்ற பெருமுதலாளிகள்
தங்கள் கறுப்பு பணத்தைக் கொட்டி பெருநகரங்கள் எங்கும் அடுக்குமாடிக்
கட்டிட குடியிருப்புகளைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். 30 லட்சத்திற்கும்
குறைவான முதலீடு செய்து கட்டப்படும் அடுக்குமாடி ஒரு வீட்டின் விலையை அவர்கள்  1.25 கோடி விலை நிர்ணயித்திருக்கிறார்கள். அப்படி
அவர்கள் கட்டிப்போட்டிருக்கும் வீடுகள் வாங்குவதற்கு ஆளில்லாமல்
அப்படியே இருக்கின்றன. அதை எல்லாம் இனி இந்த வட்டிவிகித
குறைப்பு ஆசை யில் அந்த விளம்பரங்களில் பொதுமக்கள் வாங்க வேண்டும்.
அப்படி வாங்கும் போது சிமெண்ட் முதல் எலெக்ட்ரிக் பல்ப் வரை வியாபாரம் கொடி கட்டிப் பறக்கும். மார்க்கெட் தேக்கநிலையிலிருந்து
மீளும். நினைவிருக்கிறதா... ஜப்பானில் சுனாமி தாக்கியதில் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட மனநிலையில் அவர்கள் பொருட்கள் வாங்கும் அளவைக் குறைத்துக் கொண்டார்களாம். உடனே ஜப்பானிய அரசாங்கம்
தன் மக்களிடம் கேட்டுக்கொண்டது.. எப்போதும் போல பணத்தைச் செலவு
செய்யுங்கள்.. அப்போதுதான் நாட்டின் பொருளாதரம் சீராக இருக்கும் என்று.
ஓர் அரசாங்கம் தன் மக்களை அதிகமாகக் கடன் வாங்கச் சொல்வதும்
செலவு செய்யச் சொல்வதும்  நம் நாட்டில் கார்ப்பரேட்டுகள் தவிர
அனைத்து மக்களுக்கும் நுகர் கலாச்சாரத்தின் எதிர்விளைவுகளை மட்டுமே
கொடுக்கும். அதன்பின், நம் நிதியமைச்சர்கள் இந்தியப் பொருளாதரம்
அமெரிக்க பொருளாதரம் போன்றதல்ல, எம்மக்கள் சேமிக்கும் மனப்பான்மைக் கொண்டவர்கள். என்றெல்லாம் ஆபத்து வரும்போது
பேசுகின்ற பெருமைகள் காலாவதியாகிவிடும்.
இந்த வட்டிவிகிதக்குறைப்பில் பொதுஜனங்களுக்கு கிடைக்கும்
ஆதாயம் என்பது கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஒன்றுமில்லை.
ஏனேனில் அவர்களின் கடன் தொகைக்களுக்கான வட்டிவிகிதம்தான்
குறைந்திருக்கிறதே தவிர அவர்களின் வைப்பு நிதிகளுக்கான வட்டிவிகிதம்
கூடவில்லை. மாறாக அதுவும் குறைகிறது.
அதாவது ஒருவர் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் வாங்கும் கடனுக்கு வட்டி குறைவதால்
அவர் வங்கிக்கு கொடுக்கும் வட்டித்தொகையும் குறையும். அதே நேரத்தில்
அவர் தன்னுடைய சிறுசேமிப்புகளுக்கு
(PPF, Fixed deposit, recurring deposit, post  office savings accout,
NSC, )
இதுவரை வங்கி./ போஸ்டாபீஸ்களிலிருந்து வாங்கிக்கொண்டிருந்த வட்டித்தொகையும் குறைக்கப்படுகிறது!!!!
இதனால் பெரும்பாதிப்புக்குள்ளாவது மாதச்சம்பளம் வாங்கும் சாதாரண
பொதுமக்கள் தான்.
பொதுஜனம் வாங்கும் கடன் அதிகபட்சமாக 1 அல்லது இரண்டு கோடிகள்
இருக்கும். ஆனால் கார்ப்பரேட்டுகள் வாங்கும் கடன் குறைந்த தொகையே
100 கோடி இருக்கும். எனவே இந்த வட்டிவிகிதக் குறைப்பு
யாருக்கு அதிக பயன்பாட்டைத் தரப்போகிறது?
உங்களுக்கும் எனக்குமா ..? அல்லது ரிலையன்ஸ், லோதா,
ஹீரநந்தானி , டாடா, டோஸ்தி இத்தியாதி ரியல் எஸ்டேட்
பெருமுதலைகளுக்கா?
அவர்கள் சந்தையில் கொண்டு நிரப்பும் கார், வீடு, வீட்டு
பொருட்கள் எல்லாம் வாங்க பொதுஜனத்திற்கு கடன் கொடுக்கப்படுவதால்
மார்க்கெட் ஓஹோ என்று ஜொலிக்கும்.

மாடு வாங்க லோன் கேட்டால்
மாட்டேன் என்றவர்கள்
காரு வாங்க லோன் கொடுக்க
காத்துக்கிடப்பார்கள்..

ரகுபதி ராகவ ரகுராமா..
மோதி ராஜா ரகுராமா..

Tuesday, September 15, 2015

முமபை குண்டுவெடிப்பு தீர்ப்புநாள்..

மும்பை குண்டுவெடிப்பு - தீர்ப்புநாள்
-------------------------------------
குண்டுவெடிப்பில் மகனை இழந்த என் உறவினர்
மனம் திறக்கிறார்கள்..நானும் தான்..

2006 ஜூலையில் மும்பையில் மின்சாரவண்டிகளில்
தொடர்குண்டுவெடிப்பு .. அச்சம்பவத்தில் குற்றவாளிகளாக
அடையாளம் காட்டப்பட்டிருக்கும் 12 பேருக்கு
இன்று தீர்ப்புநாள்.
அவர்கள் குற்றவாளிகளா இல்லையா
உண்மையான குற்றவாளி யார் ..?
எய்தவன் இருக்க அம்புகளை உடைத்து என்ன பயன்?
இம்மதக்கலவரங்களுக்கு வித்திட்டது யார்?
எண்ணிலடங்கா கேள்விகளுக்கு நடுவில்
அக்குண்டுவெடிப்புல் தன் ஒரே மகனைப் பறிகொடுத்த
எங்கள் குடும்பத்தின் (கணவர் சங்கரின் அண்ணன் ம்கள் வழி பேரன் - பிரபு)
திரு இராமசந்திரன் - சுசிலா இணையர் இன்றைய தினத்தந்தி நாளிதழில்
(மும்பை பதிப்பு)
"கொலைக்கு கொலை தீர்வாகாது.
தீவிரவாதிகளுக்கு மரணதண்டனை வேண்டாம்.
குற்றவாளிகளுக்கு மரணதண்டனை கொடுத்தாலும்
எங்கள் மகன் எங்களுக்குத் திரும்ப கிடைக்கப்போவதில்லை"
என்று முதல் முறையாக மனம் திறந்து தங்கள் கருத்தைப்
பதிவு செய்திருக்கிறார்கள்.

அன்று பேரன் பிரபுவின் கடைசிக்காரியங்கள் அனைத்தும்
முடிந்தப் பின் போரிவலியிலிருந்து டிரெயினில் பயணித்த
என் அனுபவம்.. இன்றும் அந்தக் கண்கள் ..
என்னைப் பின் தொடர்கின்றன..


அந்த இசுலாமிய சகோதரனின் கண்கள்
என்னிடம் பேசிய அந்த மவுனத்தின் மனக்குரலை.
போரிவலியில் கொட்டும் மழையில் டிரெயினுக்காககாத்திருந்தோம்.
போரிவலியிலிருந்து கிளம்பும் வண்டி. கூட்டம் அதிகமில்லை.
ஏறியவுடன் பக்கத்திலிருந்தவரைப் பார்க்கிறேன்.
தலையில் வெள்ளை நிற தொப்பி,இளம்தாடி,
நீண்ட வெள்ளைக் கலர் குர்த்தா மிரண்ட கண்கள்,இளைஞன் அவன்..

அவனருகில் , அன்று நானிருந்த மனநிலையில்
பக்கத்தில்  உட்கார முடியவில்லை. ,
மின்சாரம் பாய்ந்தது போல உடனே எழுந்து 
வேறு இருக்கைக்குப் போய்விட்டேன். 
அவன் விழிகள் அன்றுஎன்னிடம் கேட்ட கேள்விகள் பலகோடி.
என்னையும்
என் அறிதல், புரிதல், எழுத்து
எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது அவன் பார்வை.
கிழிந்து போனது நானும்என் எழுத்துகளும்
என் மனித நேயமும்.
அத்தருணத்தில்
என்னிலிருந்த மிருகம் என்னைத் தின்ற காயங்களின் வடு
இந்தப் பிறவியில் ஆறாது.

இத்தீர்ப்பு நாளில் தீர்ப்பு எப்படி வரப்போகிறது..
எனக்குத் தெரியாது.
ஆனாலும் இதோ இத்தருணத்தில்
முகவரி அறியாத அந்த இளைஞனிடம்
நான் மன்னிப்பு கேட்கிறேன்..
உன் அருகாமையை விலக்கி எழுந்த அத்தருணத்தில்
என்னை நீ பார்த்தப் பார்வை.. 

கண்ணீரில் கறையாத இரத்தக் கறைகளுடன்
,தண்டவாளத்திலும் தண்டவாளத்திற்கு வெளியிலும்.
இழப்புகளுக்காக அழும்போதெல்லாம்
அந்த இளைஞனின் அந்தக் கண்கள்
என்னருகில் வருகின்றன..
எதையோ சொல்ல வருகிறது..
அந்த மெளனத்தை நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
(இதைப் பற்றிய விரிவான பதிவு செய்திகளின் அதிர்வலைகள் என்ற
என் புத்தகத்தில் ..)

Thursday, September 10, 2015

எழுத்து அறக்கட்டளை அழைப்பிதழ்



நூ ல்  வெளியீட்டுக்கு வாருங்கள் நண்பர்களே 

Sunday, September 6, 2015

எழுத்தாளர் இமயமும் நீலிமாவும்




அரசியல் சமூகப்பிரச்சனைகளை முன்வைத்து எழுதப்படும் படைப்புகள் அப்பிரதேசத்தின் மக்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருக்கும்.
அவ்வகையில் அண்மையில் வாசித்த இரு புதினங்கள் மிகவும்
முக்கியமானவை. ஏனேனில் இக்கதைகளின் கருப்பொருள் கற்பனையோ பொழுதுப்போக்கோ அல்ல. சமகால் சமூக அரசியல் பின்புலமும் கருப்பொருளும் கொண்டு எழுதப்பட்டவை. 
கோட்டா நீலிமா ஆங்கிலத்தில் எழுதிய shoes of the dead
பெருகிவரும் விவசாயிகளின் தற்கொலையைப் பற்றி பேசுகிறது.
 இன்னொரு புத்தகம் எழுத்தாளர் இமயம் தமிழில் எழுதிய சாவுச்சோறு.
தலித்திய கதைக்களத்தில் இன்றைய சாதி சமூகத்தை முன்வைத்து எழுதப்பட்டிருக்கிறது. 

நீலிமா விவசாயிகளின் தற்கொலை பிரச்சனையை
விவசாயிகளின் வாழ்வியலிலிருந்து விலகி ஒரு பார்வையாளராக ஓர் ஆய்வாளராக பார்க்கிறார். அப்பார்வை ஒரு மூன்றாம் மனுஷியின் பார்வை. அதனால் தான் விவசாயி கதை மாந்தரின் உணர்வுகளுக்குள் வாழ்வதும் அதை அனுபவிப்பதும் அவருக்கு சாத்தியப்படவில்லை.
ஆனால் பெண் கதை மாந்தர்களைக் கொண்டே  சாவுசோறு கதையை எழுதி இருக்கும் எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு
அப்பெண்கள் அனுபவிக்கும் சாதிக்கொடுமையும், அவர்கள் பிரச்சனையும் அழுகையும் பெருமூச்சும் அவருக்குள் இருந்து எழுதிச் செல்கின்றன.
படைப்பு ஓர் உன்னதமாகிவிடுகிறது இதனால் தான்.
ஆனாலும் நீலிமாவின் நாவல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதால் எட்டி இருக்கும் பரந்துப்பட்ட வாசக தளத்தை,
தமிழில் எழுதப்பட்டிருக்கும் மிகச்சிறந்த இக்கதை,
தமிழில் எழுதப்பட்டிருக்கும் ஒரே காரணத்தினால்
தமிழ்நாட்டுக்குள் மட்டுமே ..
பூங்கோதைகள் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியவர்கள் அல்லர்.
அவர்களின் பிரச்சனைகளும் தான்.
 (இரு கதைகளையும் ஒப்பிட்டு எழுதிய கட்டுரை புதியகோடங்கிக்கு அனுப்பி இருக்கிறேன்.)

Saturday, September 5, 2015

ஏன்..? ஏன் இந்தப் பதட்டம்!!







திமுக வட்டத்தில் ஏன் இந்தப் பதட்டம்?
இன்னும் தேர்தல் வரவில்லை. கூட்டணிக்கான காலம் கனியவில்லை.
கருத்து கணிப்பு எப்பொதும் போல நடப்பது தானே.
அதற்கு ஒரு பதில் சொல்லிவிட்டு அமைதியாக 
அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்திருக்க வேண்டியதுதானே.
 ஏன் இவ்வளவு பதட்டம்?
யார் இம்மாதிரி ஒரு பதட்ட நிலையை உருவாக்குகிறார்கள்.?
மீடியாக்காரர்களை குறை சொல்லாதீர்கள்.
 அவர்கள் எங்கே தேன்வழியும்,புறங்கையால் நக்கலாம் என்று அலைவதாகவே வைத்துக் கொள்வோம்.
ஏன் உங்க கட்சி, உங்க வீட்டு பிரச்சனையை நீங்களே 
ஆள் ஆளுக்கு ஊதி ஊதி உடைக்கறீங்க!
இந்தியா முழுவதும் இருக்கும் சகல அரசியல் கட்சிகளிலும், சிறியது, பெரியது என்ற வேறுபாடின்றி வாரிசு அரசியல் இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் திமுக வைப் போல வாரிசு அரசியலுக்குள் போட்டி அரசியல் 
வேறு எந்த அரசியல் கட்சியிலும் இல்லை.
சொல்லக்கூடும் எல்லோருமே மதுரைக்கார பெரிய அண்ணன் தான் காரணம் என்று.
மதுரைக்காரர் இப்படித்தான் சொல்வார் என்று வரிப்பிசகாமல் அன்றாடம் செய்தி கேட்கும்/வாசிக்கும் பொதுஜனம் அறிந்ததுதானே. மேலும் அவர் தற்போது திமுக
கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. அவர் சொல்வதற்கு இவர்கள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?
திமுக தலைவரின் மகன் என்பதாலா?
திமுக என்ற பல இலட்சம் தொண்டர்களைக் கொண்ட அரசியல் கட்சி ,கலைஞர் குடும்பத்தின் அசையா சொத்தா.?.
வாரிசுகளின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க!
இந்தப் பதட்டத்தில் என்ன பேசுகிறோம் என்பதை புரிந்துதான் இவர்கள் பேசுகிறார்களா ?
என்ற பதட்டத்தில் தற்போது திமுக அனுதாபிகள்!!
. அவர்களைப் பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது..
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருக்கும் டி கே எஸ் இளங்கோவன் அவர்களின் பேட்டியைப் பற்றி கருத்து சொன்ன திமுக தலைவர் அவர்கள்
"டி.கே.எஸ். இளங்கோவன் கூறியோ, கூறாமலோ, அந்த ஆங்கில நாளேடு அதனைப் பெரிதாக வெளியிட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.
என்ன சொல்ல வருகிறார் திமுக தலைவர் ? டி கே எஸ் இளங்கோவன் கூறாதாதையும் டைம்ஸ் ஆஃப் இந்தியா அவர் சொன்னதாக சொல்கிறதா? டி கே எஸ் இளங்கோவன் கூறியதுடன் கூறாததும் அப்பேட்டியில் இருக்கிறது என்று சொல்ல வருகிறாரா..! 
இது எவ்வளவு ஆபத்தானது..
இதற்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா தான் பதில் சொல்லி ஆக வேண்டும்!
மேலூம் திமுக தலைவரும் செயலாளரும் சேர்ந்து ஏன் கருத்து கணிப்பில் திமுக வில் மட்டும் இரண்டு பேரின் பெயர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன என்று கேட்கிறார்கள். இன்னும்  ஒரு படி மேலே போய் அதிமுக வில் இருமுறை பதிலி முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் அவர்களின் பெயரையும் அதிமுக முதல்வர் வேட்பாளர் கருத்துகணிப்பில் ஏன் சேர்க்கவில்லை
என்று கேட்கிறார்கள். இருவருமே இப்படி சொல்வதைக் கேட்கும் போது 'அசத்தப்போவது யாரு' மாதிரி இருக்கு..
பாவம் பன்னீர்செல்வம்.. இம்மாதிரி எல்லாம் அதிமுக வில் ஒரு கனவு கூட வந்திருக்காது.
அதெல்லாம் விடுங்கள்.. முகநூலில் கூட THALAPATHY FOR CM என்று தளபதியின் ஆதரவாளர்கள் ஒரு கணக்கு ஆரம்பித்து இயங்கிக் கொண்டிருப்பது தளபதிக்கு தெரியாதா என்ன?
ஏற்கனவே திமுக தலைவர் கலைஞர் தான் திமுக வின் முதல்வர் வேட்பாளார் என்றால் அதை அடிக்கடி தன் வார்த்தைகளால் தளபதி அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் 
என்றால்.. எதற்காக தளபதி முதல்வர் என்ற கருத்து பரப்புரை நடந்துக் கொண்டிருக்கிறது.?
எனக்கு இதெல்லாம் தெரியாது என்றும் பதட்டத்தில் சொல்லிவிடாதீர்கள்.
உங்கள் தொண்டர்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று அதன் அடுத்தவரி வாசிக்கப்படும் என்பதையும் நீங்கள் சொல்வதற்கு முன்பே நினைவுப்படுத்திவிடுகிறேன்.
ப்ளீஸ்.. பதட்டப்படாதீர்கள்.. வேறு எங்களால் என்ன சொல்லமுடியும்?

Friday, September 4, 2015

மீண்டும் மீண்டும் மகாபாரதம்

மீண்டும் மகாபாரதம்
------------------------------



விஜய் டிவியில் மீண்டும் மகாபாரதம் ஓடிக்கொண்டிருக்கிறது.
அது என்ன மீண்டும் மகாபாரதம்..?
இது அதே மகாபாரதமா அல்லது வேற மகாபாரதமா?
சரி, மீண்டும் மகாபாரதம் தொடர் முடிந்தவுடன்
மீண்டும் மகாபாரதம் ஒலிபரப்பினால் ..
"மீண்டும் மீண்டும் மகாபாரதம் " என்று சொல்வார்களோ..

பிறகென்ன..
கருத்து கணிப்பு மீண்டும்  மீண்டும் வரும்போதெல்லாம்
மீண்டும் மீண்டும் மகாபாரதம் நடக்கத்தானே செய்கிறது..!
நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்?

இத்துடன் இந்த மகாபாரதத்தை முடித்துக்கொள்கிறேன்.
யாரு துரியோதனன், யாரு தருமர் , யாரு கிருஷ்ணர்,
யாரு பீஷ்மர், யாரு விதுரன், யாரு அர்ச்சுணன்..
இப்படி எல்லாம் நீங்க கேட்க ஆரம்பிச்சிட்டா..
நான் என்ன பண்றது..?!!!
மீண்டும் மகாபாரதம்.. திங்கள் முதல் வெள்ளிவரை..
கதையும் வசனமும் ஏற்கனவே தெரிந்ததுதான் என்பதால்
மீண்டும் மீண்டும் மகாபாரதம் அரங்கேறும்போது
எந்த் டென்ஷனும் இல்லாம..
மீண்டும் மீண்டும் மகாபாரதம் பார்க்கலாம்.

Tuesday, September 1, 2015

MANJIHd , THE MOUNTAIN MAN





இத்திரைக்கதை ஓர் உண்மைக்கதை.
மான்ஞ்சி நாம் வாழ்ந்தக் காலத்தில் வாழ்ந்தவன்.
ஒரு மலையை ஒரு தனிமனிதன் தன் மனைவியின் அகால
மரணத்திற்குப் பின் தனியாக உடைத்து எடுக்கிறான்..
ஏற்கனவே இதைப்பற்றி நான் முகநூலில் பதிவு செய்திருக்கிறேன்.
தசரத் மன்ஞ்சியாக நடித்த நவஷுதின் சித்திக் மிகச் சிறப்பாக
நடித்திருக்கிறார். குறிப்பாக மன்ஞ்சி மக்களின் பேச்சுமொழி,
உடல்மொழி ஆகியவற்றில் கவனம் செலுத்தி இருப்பது
பாராட்டுதலுக்குரியது. அவன் மனைவியாக பகுனியா பாத்திரத்தில்
நடித்திருக்கும் ரத்திகா அப்தே அம்மண்ணின் பெண்முகத்தைப்
ப்ரதிபலிக்காமல் ஒரு பாலிவுட் கதாநாயகி முகத்தையே
காட்டி , முதல் குளறுபடியைச் செய்திருக்கிறார் இயக்குநர்.

கதைத் துண்டு துண்டாக , ஒரு காட்சியிலிருந்து இன்னொரு
காட்சிக்கு தாவி இருக்கிறது. ஒப்பனை, காட்சி அமைப்பு என்று
கவனம் செலுத்த வேண்டிய பகுதியிலும் கவனம் செலுத்தவில்லை
இயக்குநர் கேத்தன் மேக்தா.

சினிமா பார்த்தப்பிறகு சில காட்சிக்ள் எதற்காக, எந்த
நோக்கத்திற்காக கதை ஓட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது
என்ற கேள்வி பார்வையாளருக்கு ஏற்படுகிறது

காலில் செருப்பு கூட அணிவதற்கு தடை செய்யப்பட்ட
சாதிய அமைப்பு கொண்ட கிராமத்தில், மிகவும் ஒடுக்கப்பட்ட
சாதிப் படிநிலையில் வாழ்கிறான் கதையின் நாயகன் மான்ஞ்சி.
அவன் மனைவியை ஊர் சந்தையில் வைத்து பண்ணையாரின்
மகன் கேலி செய்து நெருங்கும் நேரத்தில் மான்ஞ்சி திரைப்பட
கதாநாயகர்களுக்கு உரிய அதே அந்தஸ்த்துடன் ஓடிவந்து
மனைவியின் கையைப் பிடித்து இழுத்துவனை அடித்து உதைக்கிறான்.
அதற்கு பலிவாங்க, அவன் அன்றிரவு அடியாட்களை அழைத்துக்கொண்டு
இவர்கள் குடியிருப்புக்கு வந்து தசரத மான்ஞ்சி யைத் தேடுகிறான்.
அவன் அண்ணனை இழுத்துப்போட்டு அடிக்கிறான். மான்ஞ்சி அப்போது
மனைவியுடன் ஊடல் கொண்டு இருவரும் குடியிருப்புக்கு பின்னால்
இருக்கும் மலையடியில் ஓடிப்போய் ஊடல் தீர்க்கிறார்கள்..
ஆனால், வீட்டில் மான்ஞ்சி இல்லை என்று சொன்ன இன்னொருவனின்
மனைவியை அவர்கள் இழுத்துப் போகிறார்கள், அன்றிரவு பெண்டாள.
மறுநாள் விடியும் போது அவள் குளத்தில் பிணமாக மிதக்கிறாள்.
மனைவியின் உடலைத் தூக்கிக்கொண்டு வீட்டுககு வரும் மான்ஞ்சியின்
நண்பன்,, இறந்துப்போனவளின் உடலை வீட்டுக்குள் வைத்துவிட்டு
வெளியில் வந்து அந்த குடிசை வீட்டுக்கு தீ வைக்கிறான்.
அவனும் தீ போல கிளம்பி செல்கிறான்.
கதை விறுவிறுப்பாக இருக்கிறது. சாதிக்கொடுமை, அதனால் பாதிக்கப்படும்
பெண்கள் என்று இந்தியாவின் சாதிய முகத்தை, கிராமங்களில் இன்றும்
நிலவும் சாதிப்படிநிலையை, ஆண்ட சாதிகளின் ஆணவத்தை
இக்காட்சி மனதில் பதிய வைக்கிறது.
ஆனால் இக்காட்சியின் தொடர்ச்சியாக கதையின் பிற்பகுதியில்
வரும் வசனம் நெருடலாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட மாஞ்சியின்
நண்பன் தான் அந்த ஊருக்குள் ஊடுருவும் நக்சலைட்டாக
இருக்கிறான். தன்னையும் தன் மக்களையும் கொடுமைப்படுத்திய
பண்ணையாரை இழுத்து வந்து துப்பாக்கி முனையில் ஊர் மக்கள்
நடுவில் தூக்கிலிடுகிறான். அப்போது கதையின் நாயகன் மூலமாக
நக்சலைட்டுகளை நோக்கி ஒரு வசனம்..
"உன் துப்பாக்கியால் என்ன செய்யமுடியும்?
மலையைப் பிளந்து ரோடு போட முடியுமா ? " என்று கேட்கிறது.
(யாரைத் திருப்திப்படுத்த இந்த வசனமோ?)

பாதிக்கப்பட்டவர்கள் தான் தீவிரவாதத்தை முன்னெடுக்கும் நக்சலைட்டுகளாக  மாறி இருக்கிறார்கள்
என்ற அடிப்படை கருத்தை விளக்க வந்த ஒரு கதாபாத்திரத்தை
நோக்கி கதையின் நாயகன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பதன்
மூலம் சமூக மாற்றங்களுக்கு எடுக்கப்படும் தீர்வுகளும்
வழிமுறைகளும் கேலிக்குரியதாகிறது. காந்தியின் அஹிம்சை,
சாத்வீக முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவது
என்ற கருத்தை வலியுறுத்த இப்படி சொல்வதாக வைத்துக்
கொண்டாலும் கதையில் அதற்கான தேவை இல்லை.

மாஞ்சியின் காதலை ஒரு சமுக மாற்றத்திற்கான அடையாளமாக,
ஒரு தனிமனிதன் ஒரு மலையையே பிளந்து சாலை அமைக்க
முடியும் என்றால் மனிதர்கள் சேர்ந்து சாதி என்ற பெருமலையை
உடைப்பதும் தகர்ப்பதும் பிளந்து அதனூடாக பாதை அமைத்து
பயணிப்பதும் சாத்தியம் தான் என்று குறியீடாகி இருக்க
வேண்டிய காட்சிகளை எப்போதுமே திரைப்படங்கள்
காட்டுவதற்கு தயங்குகின்றன.
ஒடுக்கபப்ட்ட மான்ஞ்சியின் தன் வரலாற்று கதை கூட
ஒரு காதலின் அடையாளமாக குறுகிப்போயிவிடுகிறது.

தசரத்மாஞ்சி மலைப் பிளந்தது காதலுக்காக மடடும்தான்,
அதை வர்க்கப் போராட்டமாகவோ சாதியத்திற்கு எதிரான்
போராட்டமாகவோ பார்த்துவிடக் கூடாது என்பதில்
இன்றைக்கும் எல்லோரும் கவனமாகத்தான் இருக்கிறார்கள்.



Saturday, August 8, 2015

போங்கடா..



பிரதமர் மோடி தமிழக முதல்வர் ஜெயலலிதாவை
நேரில் சென்று பார்த்தார். இச்செய்தியை "லைவ்"
ஆக ஒளிபரப்பும் தொலைக்காட்சி தன் நிருபரிடம்
கேட்கிறது..
"எதைப் பற்றி அவர்கள் பேசுவார்கள்?

மதுவிலக்கு, முல்லைபெரியாறு, மீனவர் பிரச்சனை
என்று தமிழ்நாட்டின் பிரச்சனைகள் குறித்து
முதல்வர் பிரதமுருடன் பேசுவாரா?

இப்படியாக கேள்விகள் தொடர்கின்றன.

எனக்குப் புரியவில்லை.. அவர்கள் என்ன பேசுவார்கள்
என்பதை எப்படி ஒரு தொலைக்காட்சி நிருபர் அறிந்திருக்ககூடும்?

சரி, இதெல்லாம் போகட்டும்..
இச்சந்திப்பை தொலைக்காட்சிகள் இன்னும் கேவலப்படுத்திவிட்டன.

மோடி, உடல்நலமில்லாத துக்ளக் ஆசிரியர் சோ அவர்களையும்
நேரில் போய் சந்தித்தார். அதில் எநத உள்நோக்கமும் கற்பிக்கப்படவில்லை.
இதில் மட்டும் ஏன்?

சந்தித்தவர்கள் அரசு அதிகாரத்தின் தலைமைப் பீடத்தில் இருப்பவர்கள்
என்பதால் மட்டுமா?
அப்படியானால் இன்றுவரை மன்மோகன்சிங்க் அவர்கள் பிரதமராக
இருக்கும் போது சோனியாகாந்தி அவர்களை எத்தனை முறை
சந்தித்து இருப்பார்? எவராவது அதைப் பற்றி தவறாகப் பேசி
இருக்கிறோமா? இல்லையே. அப்படி நினைப்பது கூட எவ்வளவு
அருவெருப்பாக இருக்கிறது.
ஆனால் இன்று தமிழக முதல்வர் ஒரு பெண் என்பதால் மட்டுமல்ல,
அவர் அந்தக் காலத்து சினிமா நடிகை என்பதால் மட்டுமே
என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று அதிகபப்டியான
சலுகையை எடுத்துக் கொண்டு, கேவலமாக பேசி வருகிறார்கள்
சிலர்.


அறுபது வயதைக் கடந்துவிட்ட ஒரு பெண்ணை ..
இவ்வளவு கேவலமாக பேசும் எவரையும்
அவனைப் பெற்ற தாய் கூட மன்னிக்க மாட்டாள்..
.

ஜெ வுடன் எனக்கு நிறைய முரண்பாடுகள் உண்டு.
பிஜேபி , மோடி .. கேட்கவே வேண்டாம்.
அடிபப்டை கொள்கை ரீதியாகவே நான் முரண்படுகிறேன்.
ஆனால் அவர்களின் சந்திப்புகளைக் கொச்சைப்படுத்தும்
கேவலத்தை ஒரு போதும் செய்ய மாட்டேன்.

போங்கடா .. 

Tuesday, July 28, 2015

அப்துல்கலாம் என்ற தனிமனிதனைப் போற்றுகிறேன், ஆனால்..



எதைச் சொல்லமுடியாமல் தவித்தேனோ அதை இப்பதிவு
நயத்தக்க நாகரீகத்துடன் பதிவு செய்திருக்கிறது. மறைந்த அப்துல்கலாம் அவர்களின் தனிப்பட்ட ஒழுக்கம், எளிமை, தமிழ்ப்பற்று,மாணவர்களுக்கு அவர் கொடுத்த தன்னம்பிக்கை, அறிவியல் மீது அவருக்கு இருந்த அளப்பற்ற ஈடுபாடு..இவைகளை எல்லாம் தாண்டிபேசப்பட வேண்டியவை நிறைய உண்டு. இந்து மதக்
காவலர்கள அவரைக் கொண்டாடுவதற்குப் பின்னால் இருக்கும்
நுண்ணரசியல் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.
அவரைப் பெரிதும் மதிக்கிறேன். அதே நேரத்தில் அவர் சொன்னவை
அனைத்தையும் ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்றும் இதற்கு
பொருள் அல்ல.

.
எவரது இறப்பு என்பதும் மரியாதைக்குரிய இரங்கத்தக்க நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை. இன்னும் இறப்புடன் நேரடியாக உடல்-மனதுடன் சம்பந்தப்பட்டவர்க்கு அது மீள முடியாத இழப்பு. அத்தகையவர்களது இழப்பில் எவரும் பங்கு பெறவே வேண்டும்.
அதுவே தேசிய நிகழ்வாகிறபோது, அதனை முன்வைத்து ஒரு தேசிய பெருமித அரசியல் முன்னெடுக்கப்படும்போது, அது பிரச்சினைக்குரிய பிறிதொரு உணர்வாக மாற்றமடைகிறது.
ஓரு இளம் ஈழக் கவிஞர் ஒருமுறை தனது நம்பிக்கைகளுக்கு உந்து சக்தியாக ஹிட்லரின் மேற்கோள் ஒன்றைப் பதிவு செய்திருந்தார். ஹிட்லர் ஒரு தோல்வியுற்ற ஒவியன் என்றாலும் அவன் உலகை வெற்றிகொள்ள முயன்ற பைசாசம் அல்லது பேருரு அல்லவா?
ஏழ்மையிலிருந்து பணம்குவிப்பது நோக்கி நகர்வதும் அதிகாரங்களின் உச்சங்களைச் சென்று சேர்வதும் இங்கு பின்பற்றத்தக்க உதாரணமாக நோக்கப்படுகிறது.
ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு அகடமிக் படிப்பில் சேர்க்கப்பட்ட செய்தி ஒன்றையும் பார்த்தேன். இதே தமிழகத்தில் பொதுச் சமூக உளவியலில் ஜெயகாந்தனின் இடமும் பாலு மகேந்திராவின் இடமும் என்ன? இருவரும் தத்தமது துறையில் மகத்தான மாறுதலைக் கொண்டு வந்தவர்கள் இல்லையா?
ஏவுகனை என்ற சொல் எனக்குள் பயங்கரத்தையே எழுப்புகிறது. உயிர்வாதையை எழுப்புகிறது. ஐன்ஸ்டீனும் பியானோவும் என்றொரு பிம்பம். அணுகுண்டு வெடிப்பு. பிரமிளின் ஈ ஈஸ் ஈக்வல் டு எம்சி ஸ்கொயர்ட் என்றொரு கவிதை.
அணுகுண்டு உற்பத்திக்கான அறிவியல் மூலம் ஐன்ஸ்டீன். நாகசாகி பேரழிவின் போது அறிவியலும் அரசியலும் பேரழிவும் குறித்து அவர் என்ன சொன்னார் எனத் தேடி வாசியுங்கள். அதனுடன் அவரெழுதிய வொய் சோசலிஷம் எனும் கட்டுரையையும். இதற்கு மேல் இத்தருணத்தில் பேசுவது பொருத்தமில்லை என்பதால் நகர்கிறேன்..


Like   Comment   

Tuesday, July 21, 2015

குடிகாரன் அயோக்கியனா?

மதுவிலக்கு காவலர்களுக்கு
--------------------------------------------------
மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் மதுவிலக்கை கொண்டுவரப்போவதாக ஒருவர் சொல்கிறார். மதுவிலக்கு பேசி தன்னையும் தன் கூட்டத்தையும் தமிழினத்தின் காவலராக காட்ட இன்னொருவர் களத்தில் ஏற்கனவே நிற்கிறார்... தமிழினத்தின் காவலர்களாக போட்டியில் நிற்கும் இவர்களின் கவனத்திற்கும்
பொதுமக்களின் பார்வைக்கும் .. பாசறைமுரசு மார்ச்-ஏப் 2015ல்
வெளிவந்த என் கட்டுரை மீள்வாசிப்புக்காக.
குடிகாரன் அயோக்கியனா?
-----------------------------------------------------------
சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே
பெரியகட பெறினே யாம் பாட தான்
மகிழ்ந்துண்ணும் மன்னே
அவ்வையின் வரிகள் இவை. தமிழ்ச்சமூகத்தின் கொண்டாட்டங்களில்
கள் முக்கியமானது. கள் குடித்திருக்கிறார்கள் நம் பெண்களும்.
கள் குடிப்பவன் சமூகத்திற்கோ தன் குடும்பத்திற்கோ இழுக்கு
ஏற்படுத்தவில்லை. குடி குடியைக் கெடுக்கும் என்ற பொய்யுரை
உருவாகவில்லை. எப்போது குடி குடியைக் கெடுக்கும் என்ற
கருத்துருவாக்கம் உருவானது? அதைப் பொதுப்புத்தியில் ஓர்
அறமாக புகுத்தியதன் பின்னணி என்ன? அதிலிருக்கும் அரசியல்
என்ன? இக்கேள்விகளை முன்வைப்பதே என் நோக்கம்.
கிராமங்களில் எங்கள் குழந்தைப்பருவத்தில் கள் இறக்கும்
தொழிலாளர்களை நான் பார்த்திருக்கிறேன். பொதுவாக
காலையில் இறக்கும் கள் அந்தப் பனை மரத்தின் உரிமையாளருக்கும்
மாலையில் இறக்கும் க்ள அந்த தொழிலைச் செய்பவருக்குமென
ஒரு எழுதாதச் சட்டம் நடைமுறையில் இருந்தது.
பனையில் பதனீர் பொடுவது ஒரு கலை, ஆண் பனையில் பூக்கள் உள்ள
குருத்துகள் மட்டும் வரும், இந்த பனையில் நுங்கு கிடைக்காது.
பெண் பனையில் நுங்குகான குருத்து வரும். பதனிக்காக விடப்படும்
மரங்களில் இந்த குருத்துகளின் நுனியை இடுக்கியால் இடுக்கி பின்னர்
அரிவாளால் செதுக்கி விடுவார்கள்... இதனால் அது பதநீரை சுரக்கும்
. இதை ஒரு மண்கலயத்தில் சுண்ணாம்பு தடவி சேகரிப்பார்கள்...
சுண்ணாம்பு தடுவுதால் பதநீர் கெட்டு விடாது,
மேலும் அதில் வரும் தேனீ, பூச்சிகள் இறந்துவிடும்
. இதை குடிப்பதால் எந்த கெடுதலும் இல்லை
(பதனி சாப்பிட்டு யாரும் சுகமில்லாமல் ஆனது இல்லை)..
. ஆனால் அளவுக்கு அதிகமாக பதநீர் சாப்பிடுவது வயிற்று இளக்கத்தை கொடுக்கும்.
நுங்குக்காக விடபடும் மரங்களில் பதநீரோ, கள்ளோ கட்டுவது இல்லை.
இப்படி பதநீர் இறக்கும் இடங்களில் சிறந்த பெண் பனைகளை
தேர்ந்தெடுத்து கள்ளுக்காக விட்டுவிடுவர். சுண்ணாம்பு தடவாத
கலயம் பதநீரை கள்ளாக மாற்றும். அதிக நேரமான சுண்ணாம்பு
தடவிய பதநீரும் புளித்து கள்ளாகும்,
நல்ல கள் அளவாக குடித்து வாழ்ந்தவர்கள் நம் தாத்தாக்கள்.
எங்கள் வீட்டில் "ஆப்பம்" செய்ய, மாவு புளிக்க கள் சேர்ப்பதுண்டு.
இதனால் சுவை அதிகமாக இருக்கும்.
குடிப்பழக்கம் என்கிற சமூகக் கொண்டாட்டம்,
குடியைக் கெடுக்கும் பழக்கமாகவும் ஒரு குற்றச் செயலாகவும் மாற்றப்பட்ட வரலாறு
ரொம்பவும் சோகமானது. அரசு மற்றும் சமய அதிகார மய்யங்களின்
கட்டுக்குள் மக்களைக் கொண்டுவருவதற்கான பெருந்தடைகளில் ஒன்றாகவும் மக்களின் குடிப்பழக்கத்தைக் கண்டும் இவை அஞ்சின, வெறுத்தன.
அதைப்போவே சமூகம் கட்டமைக்கிற மரியாதைகளையும் புனிதங்களையும் போட்டுடைக்கும் நிலையைக் குடி மனிதனுக்கு வழங்குவதை அரசும் சமூக ஆதிக்கச் சக்திகளும் கண்டு கலங்கின.
இன்று மதுவிலக்கை உரத்தக்குரலில் சொல்லிக்கொண்டிருக்கும் சிலர்
குடி மட்டுமே நம் சமூகத்தின் கேடு என்பதான ஒரு கருத்தை உருவாக்கி மற்ற கேடுகளை மூடி மறைக்க நினைப்பதும் புரிகிறது, சாதி இந்த சமூகத்தில் இருக்கலாம். திவ்யாக்கள் இளவரசங்களை மணந்துவிட்டால் தமிழ்ச்சமூகம் தன் புனிதத்தை இழந்துவிடும் என்று தமிழ்ச்சமூகத்தின் புனிதக்காவலர்கள் மதுவிலக்குப் பற்றிப் பேசும் போது அது உண்மையில் "மதுவின் கெடுதல்களைப்
பற்றிய விழிப்புணர்வு பேச்சல்ல, தங்களை மட்டுமே தமிழ்ச்சமூகத்தின் புனிதத்தைக் காப்பாற்றும் காவலர்களாக காட்டும் வேஷத்தின் முக்கியமான ஒப்பனை"
அவ்வளவுதான்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ராஜாஜியால் கொண்டு வரப்பட்ட ‘மதுவிலக்கு’ அப்பாவி உழைக்கும் மக்களுக்குத்தானே அல்லாது ஆங்கிலேயர்களுக்கு அல்ல.
ஆகவே, “மதுபான விசயமாய் வெள்ளையருக்கு அளிக்கும் சலுகை
இந்தியர்களுக்கு அடியோடு கூடாது என்பதை நாம் ஒப்புக்கொள்ள முடியாது.”(கு.அ.3.10.1937)
என்று கூறிய தந்தை பெரியார், ‘பர்மிட்’ உள்ளவர்கள் குடிக்கலாம் என்று ஆகிப்போன நடைமுறை குறித்தும் வருந்திக் கண்டித்தார்.
”பார்ப்பான் எப்படி சாதி ஒழிக்கப்படக்கூடாது என்று சட்டம் செய்து கொண்டானோ அது போல் போலீசாரும், அயோக்கியரும் பிழைக்க ஒரு வழி கொடுக்கலாம் என்று மதுவை தடை செய்து சட்டம் செய்து கொண்டான்." என்றார்.
தலைசிறந்த நாகரிக மக்கள் நாட்டில் மது அருந்துவது மற்றவர்கள்
கவனிப்பே இல்லாத சர்வ சாதாரண அவசிய செய்கையாக வழக்கமிருந்து வருகிறது. (விடுதலை 9.11.68)
”100 ஆண்டு 75 ஆண்டுகளுக்கு முன்பு மது குற்றமற்ற ஒரு சாதனமாகத் தான் இருந்தது. அரசாங்கம் மதுவை அரசாங்க வியாபாரப் பொருளாக ஆக்கினதுடன் அரசாங்கமே மது வியாபாரம் செய்ய ஆரம்பித்த பிறகுதான், மது அருந்துவது (குடி) கெட்டது என்று சொல்லும்படி ஆகிவிட்டது. மது வியாபாரிகள் மதுவுக்குள் இயற்கை போதையைவிட அதிக போதை ஏற்படும் படியான பக்குவம் செய்ததால் மதுவால் கெடுதி என்று சொல்லும்படியான நிலை ஏற்பட்டுவிட்டது.”(விடுதலை 9.11.68)
உடல் உழைப்பின் காரணமாகவே விளிம்புநிலை மக்கள் மது அருந்துகிறார்கள் என்பதையும் அம்மக்களுக்கு மதுவிலக்கைப் பற்றி மிக அதிகமாக பேசிய மகாத்மா காந்தியடிகளே மது வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குப்பைக் கூட்டுவது, சாக்கடையை சுத்தம் செய்வது, மலக்குழியில் இறங்கி அடைப்புகளை சீரமைப்பது என்று இந்த நாட்டில் சாதியின் பெயரால் குறிப்பிட்ட சில மக்களே காலம் காலமாக மேற்கண்ட துப்புரவு தொழில்களைச் செய்து வருகிறார்கள்.
கையால் மலம் அள்ளுவதற்கு இந்திய அரசே தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நாட்டில் எவருக்கும் மதுவிலக்கு பற்றி பேசும் அருகதை இல்லை.
அம்மக்கள் மது அருந்துவது மட்டுமே அத்தொழிலைச்
செய்வதற்கும் அத்தொழில் செய்வதில் இருக்கும் மனச்சோர்வை அகற்றுவதற்கும் அவர்களுக்கான வலி நிவாரணியாகவும் இருக்கிறது, மேலும் ஒடுக்கப்பட்ட மக்கள் அருந்தும் மது தான் நம் சமூகத்தின் அறங்காவலர்கள் முன்னிறுத்தும்
"சமூகக்குற்றம். உடல் உழைப்பை சமூகத்தகுதி நிலையில்
கீழ்நிலை ஆக்கியவ்ன தான் குடிப்பவன் குற்றவாளி என்ற கருத்தைப் பொதுப்புத்தியில் ஏற்றியவன்.ஒடுக்கப்பட்டவனின் குடிப்பழக்கம் சமூகத்தின் அவமானமான செயலாக மாற்றப்பட்டதின் பின்னணி இதுதான். இதைத்தான் தந்தை பெரியார்
மது ‘கீழ்’ ஜாதியார் என்பவர்களே பெரிதும் அருந்துவதால் அது குற்றம் குறை சொல்லத்தக்கதாக ஆகிவிட்டது. (விடுதலை 16.2.69)”,
“நான் கீழ் ஜாதி என்பதை எப்படி ஒப்புக் கொள்வதில்லையோ
அப்படித்தான் குடிகாரன் குற்றவாளி என்பதையும்
ஒப்புக்கொள்வதில்லை. (விடுதலை 16.2.69)” என்றார்.
உடல் உழைப்பை மதிக்காத சமூகத்தில் மதுவிலக்கைப் பற்றிப் பேசுவது கூட அதிகாரத்தின் ஆணவப்போக்கு தான். மது அருந்துவது என்பது தனிப்பட்ட மனிதனின் விருப்பு வெறுப்பு சார்ந்தது. மதம் இனம் ஆட்சி அதிகாரத்தின் பெயரால் அந்த உரிமையைப் பறிக்க முடியாது. பறிக்கவும் கூடாது.
இன்றைய பத்திரிகைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களும்
டாஸ்மார்க் கடைகளில் குடித்துவிட்டு வருவதும் சாலைகளில்
விழுந்துக்கிடப்பதும் என்ற செய்திகள் வருகின்றன.
இச்செய்திகளின் வழியாக "குடி குடியைக் கெடுக்கும்" என்ற
கருத்து தீவிரமாக்கப்படுகிறது.. ஆனால் கவனிக்க வேண்டிய
இன்னொரு கருத்து இருட்டடிப்பு செய்யப்படுகிறது.
அதாவது ..இந்த நாட்டின் கல்வி கற்கும் மாணவர்களிடம்
கூட விழிப்புணர்வை ஏற்படுத்த நம் கல்வி தவறி இருக்கிறது
என்ற மாபெரும் உண்மையை!
உடல் உழைப்பு தொழிலாளி மது அருந்துவன் என்றால் இன்று
அதிலும் 90க்குப் பின் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மாற்றத்திற்குப் பின் மது அருந்துவது மது போதைக்கு அடிமை ஆவது கூடி இருப்பது
ஏன்? என்ற கேள்வி எழுவது இயல்பு. 90க்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும்
கணினி - ஐடி துறை வளர்ச்சி உடல் உழைப்பு தரும் அசதியை விட
மோசமானது. இரவு ப்கல் பாராது வேலை செய்ய வேண்டிய நிலை,
வேலை நிரந்தரமில்லாத பாதுகாப்பின்மை என்ற சூழலின்
இந்தியா எங்கும் வொயிட்காலர் அடிமைகளை உருவாக்கி இருக்கிறோம்.
இதுவும் ஒருவகையான காலனி ஆதிக்கம் தான் என்பதை
இந்திய ஜனநாயகம் மூடி மறைக்கிறது. டாலருக்கு அடிமைகளாகிவிட்ட நம் இளைஞர்கள் மன அழுத்தத்திற்கு பலியாகி விட்டார்கள்.
இதைப் பற்றிப் பேச வேண்டிய சமூகம் சமூகம் திசைமாறி
இதையும் மதுவிலக்கையும் முடிச்சு போடுகிறது.
கள் இறக்குபவனை பனை ஏறுபவ்னை உடல் உழைப்பின் காரணமாக
குடிப்பழக்கம் அதிகமாக இருக்கும் துப்புரவு தொழிலாளியை..
இவர்களை எலலாம் ஒடுக்கி ஒதுக்கி தாழ்த்தப்பட்டவ்ர்களாக்கிய
நம் சமூகம் மல்லையாக்களை உருவாக்கியது. குடிசைத் தொழிலாக
இருக்கும் வரை உடல் நலத்திற்கான கள்ளாக இருந்தக் குடி,
நம் ஆண் பெண்களின் கொண்டாட்டத்தில் இடம் பெற்ற குடி
வாகன் வசதிகளும் அடி ஆட்களும் பெரும் முதலீடும் கொண்ட
மதுவாக மது உற்பத்தியாக மாறிய போது குடி நம் குடியைக்
கெடுத்தது.. கெடுக்கிறது என்ற அரசியலை நாம் பேசியாக
வேண்டும்.
குடியைக் கொண்டாட வேண்டும். எல்லோரும் குடிக்கலாம் வாருங்கள்
என்று சொல்வதல்ல் என் நோக்கம். மதுவிலக்கு சார்ந்த பொதுப்புத்தியில் சுமத்தப்பட்டிருக்கும் புனிதம், தூய்மை, அறவொழுக்கம் என்ற போதைகளைக்
களைவதும் மதுவிலக்குப் பேசும் சிலரின் அரசியல் உள்நோக்கத்தை
அடையாளம் காட்ட வேண்டும.
மது தடைப்படுத்தப்பட்ட நாடு அடிமை நாடேயாகும். (விடுதலை 16.2.69)
“ஒரு மனிதனைப் பார்த்து நீ உன் மனைவியிடம் கலவி செய்யக் கூடாது என்று சொல்வதற்கும் நீ மது அருந்தக் கூடாது என்று சொல்வதற்கும் என்ன பேதம் என்று கேட்கின்றேன்.” (விடுதலை 18.3.71)
என்று சொன்ன தந்தை பெரியார் தான் மைனர் வாழ்க்கை வாழ்ந்தக் காலத்திலும் தன் வாழ்நாளில் கடைசிவரை மது அருந்தியதில்லை.
நம் சமூகத்தில் ஒரு பொதுவழக்கு எல்லா காலத்திற்கும் பொருந்துவதாக இருக்கிறது. அது என்னவென்றால்.. 'அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு"
கள்ளுக்கும் மதுவுக்கும் அது பொருந்தும்.
இந்த பொது அறத்தை தனி மனித ஒழுக்கத்தின் அறமாக்க வேண்டுமே தவிர குடிப்பவன் எல்லாம் அயோக்கியன் என்ற பொய்யுரைகளை அல்ல.
----
Like   Comment   

Sunday, July 19, 2015

காமராஜரைப் பற்றி யார் பேசலாம்?



நடிகர்திலகம் சிவாஜிகணேசன் தீவிர காங்கிரஸ் காரராக
இருந்த நேரம்.
அவருடைய பிறந்த நாளில் ஜெயகாந்தன் சிறப்புரையாற்ற அழைத்திருந்தார்கள்.
ஜெயகாந்தன் பேசியதாவது:
"இது காங்கிரஸ்காரர்கள் நடத்தும் சிவாஜிகணேசன் விழாக்கூட்டம். சிவாஜிகணேசன் காங்கிரஸ்காரரா?
 எப்படி இவர்கள் விழா நடத்தலாம்?
நல்ல காங்கிரஸ்காரன் குடிக்கமாட்டான்
இவர் பெர்மிட் வைத்து குடிக்கிறார்.
நல்ல காங்கிரஸ்காரன் கறுப்புபணம் வாங்க மாட்டான்.
 இவர் ஒரு படத்துக்கு எவ்வளவு கறுப்பு பணம்
வாங்குகிறார் தெரியுமா?"
சிவாஜி ரசிகர்கள் கலாட்டா செய்ய விழா ரகளையுடன் முடிந்தது.
(ஆதாரம் காவ்யா சண்முகசுந்தரம் - காவ்யா இதழ் ஜூலை செப் 2015)
இதே ஜெயகாந்தன் பிற்காலத்தில்
முரசோலி அறக்கட்டளை விருது பெற்று
சூரியநமஸ்காரம் செய்தது தனிக்கதை!!
இப்படி ஜெயகாந்தன் பாணியில் காங்கிரசுக்காரர்களை
 விமர்சிக்க ஆரம்பித்தால் யார் தேறுவார்கள் ?
எனக்கு இடதுசாரிகளில் ஒரிருவர் முகம் மட்டும் தெரிகிறது..
காமராஜரின் 113வது பிறந்தநாள் கூட்டம் அமோகமாக
 தமிழகம் எங்கும் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் தலைவர்களும்
தலைவர்களின் வாரிசுகளும் பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி
 போற்றிப் புகழ்ந்து பிறந்தநாள் விழாவில் சிறப்புரை ஆற்றுவது கண்டு மயக்கத்தில் இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சின்ன பரீட்சை...
காமராஜரைப் பற்றிப் பேச இவர்களில் யாருக்குத் தகுதி இருக்கிறது
 என்பதை அறிய ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல சொல்லுங்கள்:
இவர்கள் / இவர்கள் குடும்பம் அரசியலில் நுழைவதற்கு முன் இருந்த சொத்தின் மதிப்பு என்ன?
இன்று அவர்களுக்கு இருக்கும் சொத்தின் மதிப்பு என்ன?
எப்படி எந்த தொழில் செய்து எவ்வளவு வருமான வரி கட்டி இவ்வளவு
பெரிய கார்பரேட் சாம்ராஜ்யத்தை /
சொத்தை உருவாக்க முடிந்தது?..
இந்தக் கேள்விக்கு நேர்மையாகவும் சரியாகவும்
 பதில் சொல்லும் அருகதை
கொண்ட ஒருவரைக் கொண்டு அடுத்த 114வது
 காமராஜரின் பிறந்தநாளைக்
கொண்டாடுங்கள்..

Friday, June 26, 2015

எமர்ஜென்சி ... மீண்டும் வருமா?


"என்னால் உறுதியாக சொல்லமுடியாது.
இந்தியாவில் மீண்டும் ஒரு எமர்ஜென்சி வராது என்று"
என்று அத்வானி அண்மையில் நிருபர்களுக்கு அளித்தப்
பேட்டியில் சொல்லி இருக்கிறார்.
" நம் நாட்டில் சட்டமும் ஒழுங்கும் இருந்தக் காலத்தில் தான்
  24 ஜூன் 1975 ல்  எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டது
 என்பதையும் அவர் அதவானி நமக்கு நினைவூட்டுகிறார்.
இன்று 2015ல் நமக்குப் போதுமான பாதுகாப்பு இருப்பதாகத்
 தெரியவில்லை.
எமர்ஜென்சி காலத்தில்  (24 ஜூன் 1975 முதல் 21 மார்ச் 1977 வரை)
அதை எதிர்த்தவர்களில் அத்வானியும் முக்கியமானவர்.
அத்வானி சொல்லியிருப்பதில் இருக்கும் முக்கியத்துவத்தைக்
கவனிக்க வேண்டும் என்று சிவசேனா வெளிப்படையாகவே
 தங்கள் பத்திரிகையில் கருத்து எழுதி இருப்பது புறக்கணிப்புக்குரியதல்ல. " மீண்டும் ஒரு எமர்ஜென்சி வராது என்று என்னால் உறுதியாக
சொல்லமுடியாது " என்று அத்வானி சொல்கிறார் என்றால்
அதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன.
அவர் நிச்சயமாக யாரையோ குறிப்பிட்டுத்தான் தன்
 அச்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பது
 தெளிவாகத் தெரிகிறது.
ஆனால் அத்வானியின் கருத்துக்கு எதிர்ப்பு சொல்பவர்கள்
அனைவரும் ஒரே ஒரு கருத்தை முன் வைக்கிறார்கள். அவர்கள் சொல்வதெல்லாம்
1975 ல் இருந்த இந்தியா வேறு.
2015ல் இருக்கும் இந்தியா வேறு.
*1975 ல் எமர்ஜென்சி அமுலுக்கு வந்தப்போது இருந்த சட்டங்கள் இன்று பல்வேறு மாற்றங்களுக்கும் திருத்தங்களுக்கும் உள்ளாகி இருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். (சிவப்பு நிறத்தில் என் மறுப்புரை)
Now Emergency can be imposed only “If the President is satisfied that a grave emergency exists whereby the security of India or of any part of the territory thereof is threatened whether by war or external aggression or armed rebellion...”

Second, an explanation added to Article 352(1) by the same constitutional amendment says if Emergency is to be declared before the actual occurrence of war, or external aggression or rebellion, the President has to be satisfied that there is imminent threat to the security of India or any part thereof by war or by external aggression or by armed rebellion. This additional constitutional safeguard was not there in June 1975.

நம் குடியரசுத்தலைவர் என்ன அவ்வளவு அதிகாரம் படைத்தவரா?
தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசுக்கு எதிராக முடிவு எடுக்கும் அதிகாரம்
குடியரசு தலைவருக்கு இருக்கிறதா..

மோதியின் காலத்தில் எப்படியும் ஒரு யுத்தம் நடக்கும்.இந்திய
சரித்திரத்தில் தன் பெயரை கல்வெட்டு போல எழுதிவைக்கத் துடிக்கும்
மோதி .. ஒரு யுத்தக்கால நெருக்கடியை உருவாக்க மாட்டார் என்பதற்கு
என்ன உறுதி சொல்ல முடியும்? அதுவும் அகண்ட பாரதக்கனவுகளைக்
கொண்ட இந்துத்துவ பின்புலம் உருவாக்கிய தலைவர் மோது என்பதை
நாம் மறந்து விட முடியாது.


* 1975 இந்தியாவின் தூரதர்ஷன் மட்டுமே இருந்தது. இன்று நூற்றுக்கணக்கான
செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் 24 X 7  பல்வேறு மொழிகளில் . அத்துடம் இன்றைய  இந்தியாவில் 13700 பத்திரிகைகள் இந்திய மொழிகளில் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன.

இப்படியான உரிமைகள் நம் ஊடகங்களுக்கு இருப்பதாகவே 
நாம் நம்புகிறோம். ஆனால் எதை எழுதவேண்டும்., எதைக் காட்ட
வேண்டும், எதைக் காட்டினால் நம் வியாபாரத்திற்கு ஆபத்து வராது
என்று வணிகமயமாகி இருக்கும் ஊடகங்களுக்குத் தெரியும்..அவர்களுக்கு
இருக்கும் உரிகைகளின் எல்லைக்கோடு.



* இதற்கெல்லாம் மேலாக 1975 ல் இண்டெர்நெட் வசதிகளோ சமூக வலைத்தளங்களோ இல்லை.
இன்று இந்தியாவில் மட்டும் 243 மில்லியன் மக்கள் இண்டர்நெட் பயன்படுத்துகிறார்கள். (அட... இதில் நீங்களும் நானும் அடக்கம்!)
2018ல் இந்தியாவில் மட்டும் 550 மில்லியன் மக்கள்
 இண்டர்நெட் வசதிகளைப் பயன்படுத்துவார்கள்
 என்பதால் ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது 1975ல்
சாத்தியப்பட்டது போல இன்று சாத்தியப்படாது.
*அப்படியே மீறி இந்தியாவில் ஒரு இரும்புத்திரை கொண்டுவந்தாலும் நம்
புலம்பெயர் இந்தியர்கள் இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை
வெகு எளிதாக உலக அரங்கில் எடுத்துச் செல்ல முடியும்.

நம் பதிவுகள் கண்காணிப்பு வலையத்திற்குள் வந்துவிட்டால்,
நம் முகநூல் கணக்கு மூடப்படலாம். இப்படி சமூக வலைத்தளத்தில்
மறுக்கப்பட்டவர்களின் பட்டியலை நாம் அறிவோம்.
புலம்பெயர் இந்தியர்கள் எழுதுவார்கள் தான். ஆனால் அதை 
ஏற்றுக்கொள்வதும் கவனத்தில் கொண்டு செயல்படுத்துவதை
தீர்மானிப்பதும் அவர்களோ அவர்களின் எழுத்துகளோ அல்ல.
அப்படி ஒரு நிலை உண்மையில் இருக்கும் என்றால் 
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு எப்போதோ
நீதிவிசாரணை வந்திருக்குமே!



* இன்றைய இந்திய வாக்கு வங்கியில் கணிசமாக இருக்கும் 35 வயது, 25 வயது இளைய தலைமுறையிடம் இம்மாதிரியான ஒரு கடிவாளத்தைப் போட்டு தேர்தலில் வாக்குகளை இழந்துவிட எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் துணிவு இருக்காது.
*சமூக உரிமைகள் அச்சுறுத்தப் படும் போதெல்லாம்
 இந்தியாவின் நடுத்தர வர்க்கம் 2015 போராடுவதற்கு தயக்கம்
 காட்டாது. தன் எழுச்சியாக டில்லியில் நடந்த
பெண்ணின் பாலியல் வல்லாங்குக்கு எதிராகப் போராடிய நடுத்தர வர்க்கத்து
இளைஞர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கிறார்கள்.

அப்போது இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருந்தது.
இன்றும் இந்தியா தங்கள் வொயிட்காலர் இளைஞர்களை 
காலனி ஆதிக்கத்திற்கு - தாராளமயத்திற்கு உருவாக்கிவிட்டது.
சுகமான வாழ்க்கை, பீஸா , கோக்.. என்று பழகிவிட்ட நம் இளைஞர்கள்
எந்தளவுக்கு போராட்ட குணம் உடையவர்களாக இருக்கிறார்கள்
என்று தீர்மானிப்பது அவ்வளவு எளிதல்ல. ஒரு டில்லி நிகழ்வை
வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த ஒரு சமூகத்தையும் பார்ப்பதோ
அல்லது அந்த நிகழ்வு வெளிக்கொண்டுவரப்பட்டதில் இருக்கும்
அரசியலைப் புரிந்து கொள்வதோ நடுத்தர வர்க்கத்தின் பொதுப்புத்திக்கு
இன்னும் சாத்தியப்படவில்லை.

(சிவப்பு வண்ணத்தில்அத்வானி கருத்துக்கு வைக்கப்படும் 
எதிர்வினைகளுக்கான மறுப்புகள் .. என் தரப்பிலிருந்து)

.. எங்கோ ஓரிடத்தில் ஏதோ ஒரு நெருடல்..
நானும் என் தோழியும் தினமும் இதைப் பற்றி ஒரு மணி நேரமாவது விவாதிக்கிறோம்.
எங்களுக்கும் சில கேள்விகள் இருக்கின்றன.
1)எமர்ஜென்சி 25வது வருடத்தைக் கூட பேசாத ஊடகங்கள் இன்று
எமர்ஜென்சி 40 வது வருடத்தைப் பற்றி ஒவ்வொரு பத்திரிகையும்
பேசுவது ஏன்?
2)அத்வானி எதையோ சொல்லமுடியாமல் குறிப்பாக சொல்லி இருப்பதன்
மர்மம் என்ன?
3) அத்வானியின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக திட்டமிடப்பட்டே
குற்றவாளிகளாக.. அவர்கள் குற்றவாளிகளாக இருந்தாலுமே திடீரென கண்டுப்பிடித்தது
போல  இப்போது அடையாளம் காட்டப்படுவது ஏன்?
இதற்குப் பின்னால் இருக்கும் மவுனமான சூத்திரதாரி யார்?
4) எமர்ஜென்சி 40 என்று அண்மையில் கொண்டாடிய பிஜேபியின் விழாவுக்கு
அத்வானி ஏன் அழைக்கப்படவில்லை?
5) விழாவுக்கு தலைமை ஏற்ற  அமித் ஷா நிருபர்கள் கேட்ட இக்கேள்விக்கு
ஏன் பதில் சொல்ல மறுக்க வேண்டும்?

என்னவோ நடக்குது.. எங்கேயோ புகையுது..
அறிவிக்கப்படாத ஒரு எமர்ஜென்ஸி.. அமுலுக்கு வரலாம்.

Sunday, June 21, 2015

அஸ்தமிக்கும் சூரியன்


முதலிடத்திற்கு நடக்கும் போட்டியில்
இரண்டாவது இடத்தை எட்டி உதைக்கிறது
மூன்றாவது இடம்.
மூன்றாவது இடத்திலிருந்து
முதல் இடத்திற்கு பாய்ந்துவிட தயாராகிவிட்டது
பைங்கிளி.
எல்லாம் அறிந்த முதலிடத்தின் கனவுகளில்
இரண்டாம் இடத்திற்கு இடமில்லை
என்று வருத்தப்படுகிறான் தோட்டக்காரன்.


இரண்டாம் இடம் முதலிடத்தைத் தீர்மானிக்கும்
என்பது இனி விதியல்ல என்று
போஸ்டர் அடித்து தம்பட்டம் அடிக்கிறது
பாலூட்டி வளர்ததப் பைங்கிளி.

இப்போதெல்லாம் இரண்டாமிடம் வெற்றிடமானதை
போஸ்டர்களைத் தின்னும் மாடுகள் தவிர
எவரும் கண்டுகொள்வதில்லை.

வளர்த்தக் கிடா மார்பில் பாய்ந்த வலி மறக்க
தனிமைப்பாடசாலையில்
புத்தகங்களுக்குப் பாடம் நடத்துகிறது
ஒரு பல்கலைக்கழகம்.
கள்ளமவுனத்தின் மனசாட்சிக்குத் தெரியும்
சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற
கடவுச்சீட்டு காலவதியாகிவிட்டது என்பது.

இரண்டாம் இடமிருந்தால் தான்
முதலிடம் இருப்பது சாத்தியமாகும்
என்ற அரிச்சுவடி மறந்தவர்கள்
அர்ததசாஸ்திரம் எழுத முடியுமா?
அழுகிறது அஸ்தமிக்கும் சூரியன்.

Saturday, June 13, 2015

பாரதிதாசன் பற்றி புதுமைப்பித்தன்






பில்ஹணீயம் எனும் கதையை, பாவேந்தன் பாரதிதாசன் ‘புரட்சிக் கவி’ எனும் பெயரில் புதிய நோக்கில் எழுதியிருந்ததைக் குறித்து புதுமைப்பித்தன் 1944ல்  எழுதிய விமரிசன கட்டுரையிலிருந்து  சில பகுதிகள்:

பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப்போன சொத்துக்கள் பல. இவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டின் ஞானரதம், குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாஸன் என்று சொல்ல வேண்டும்.
எங்கெங்குக் காணினும் சக்தியடா ! – ஏழுகடல்
அவள் வண்ணமடா
என ஸ்ரீ கனக சுப்புரத்தினம் தமது கன்னிக் கவிதையைக் கொணர்ந்து சமர்ப்பித்தபொழுது, பாரதியாரின் ‘தராசு’ “எழுக புலவன்” என ஆசீர்வதித்தது. அன்று முதல் பாரதிதாஸனாகிவிட்ட ஸ்ரீ கனக சுப்புரத்தினம் பாரதி வகுத்த பாதையிலே பல அழகுக் கனவுகளை நிர்மாணித்துத் தந்திருக்கிறார். பாரிச வாய்வும், பக்கவாதமும் போட்டலைக்கும் இன்றைய கவிதையுலகிலே, அவருடைய பாட்டுக்கள்தான் நிமிர்ந்து நடக்கின்றன. நண்பர் ஸ்ரீ கனக சுப்புரத்தினம் நம்மிடையே வாழ்பவர்; நம்மைப் போல, கருத்து விசித்திரங்களும் கருத்து விருப்பு வெறுப்புக்களும் ஆணித்தரமான அபிப்பிராயங்களும் கொண்டவர். பாரதிதாஸன் கவி; கனவுக் கோயில்களைக் கட்டி நம்மை அதில் குடியேற்றி மகிழ்கிறவர். ‘குள்ளச் சிறு மனிதர்களின்’ எத்து நூல் வைத்து அவரது காவிய மாளிகளைகளை முழம்போட முயலுகிறவர்களுக்கு ஸ்ரீ கனக சுப்புரத்தினம் இடைமறித்து நின்று தம் கருத்துக்களைக் காட்டி மிரட்டி ஓட்டிவிடுவார். பாரதிதாஸனைப் பழகி அனுபவிக்க வேண்டுமெனில் ஸ்ரீ கனக சுப்புரத்தினத்தின் கருத்துக்களைக் கண்டு பயப்படுவது விவேகமல்ல; ‘நட்ட கல்லும் பேசுமோ’ என்று பாடியவரைவிட இவர் பிரமாதமான தவறு எதுவும் செய்துவிடவில்லை. அவருடைய காவியங்களில், ராமாயணம் என்னும் பெரும் புளுகும், ‘எங்கள் மடாதிபதி’ ‘சைவத்தை ஆரம்பித்த’ விமரிசையும் இருந்தால் என்ன குற்றம் ? அவர் கவி.

 தன்னுடைய அந்தஸ்துக்காக ஒருவனை உயிர்வதை செய்யத்துணியும் மன்னனுக்கு ராஜ்யத்தில் இடமில்லை என்பதுதான் இந்தப் புரட்சிக் கவியின் ஆதாரக் கருத்து. களவையும் நிலவையும் பற்றி பாடிக் கொண்டிருந்த கவிஞன், பிரஞ்சு புரட்சிக்கு உதயகீதம் பாடிய ரூஸோவைப் போலக் கனல்விடுகிறான். ‘ அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே’ என்று கொண்டு பட்டினத்தார் தம் வீட்டுக்குத்தான் நெருப்பு வைக்க பார்க்கிறார். புரட்சிக் கவியான உதாரனது பேச்சு, வீண் கருவம், டம்பம், வரம்பற்ற தன்னிச்சை, கொலை வெறி, அந்தஸ்து என்ற உச்சாணி கொம்பு என்ற உளுத்துப் போன கருத்துக்களைச் சுட்டு சாம்பலாக்குகிறது. கூளங்கள் கொதித்தெழுந்து உயிர் வதைக்குத் துணிந்திட்ட மன்னனைத் தேடி வரும்போது, மன்னன் இன்றைய வளமுறைப்படி நாட்டைவிட்டு வெளியேறி விடுகிறான்.
. புரட்சிக்கவியில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் பச்சைத் தமிழன்; சாயச்சரக்கல்ல; மழை பெய்த மூன்றாம் நாள் சாயம் விட்டுப்போகும் பண்ருட்டிப் பொம்மை அல்ல..



இரண்டாவதாக இவர் காதல் துறையில் பாடும் பாட்டுகள் யாவும் உடம்பு விகாரங்களைத் தட்டியெழுப்பும் பாட்டுகளே தவிர, உள்ளத்தின் போக்கைக் காட்டுவன அல்ல; புலன் நுகர்ச்சியில் சந்துஷ்டியேற்பட்டுவிட்டால் போதும் எனச் சொல்லுவதைப் போல் இருக்கிறது என்று சிலர் அளக்கிறார்கள்.
அவரது பாடல்கள் உடம்பை மறந்துவிட்டு, நெறி திறம்பாக் காதல்துறை காட்டும் வெறும் சொப்பனாவஸ்தைகள் அல்ல என்பது உண்மை. உடம்பை மறந்த காதலைப் பாடுகிறவன்தான், தான் கற்பனா லோகத்தில் நடப்பதாக நினைத்துக்கொண்டு, உளைச்சேற்றில் மிதிக்கிறவன்.
நேரான குங்குமக் கொங்கை
காட்டிச் சிரித்தொரு பெண்
போறாள் பிடிபிடி யென்றே
நிலவு புறப்பட்டதே
[அவ்வை: அசதிக் கோவை]
எனவும்,
கொங்கைகளும் கொன்றைகளும்
பொன்சொரியும் காலம்
[நந்திக் கலம்பகம்]

எனவும், மனம்விட்டுப் பாடிய கவிஞர் பரம்பரையைச் சேர்ந்தவர்தான் அவரும். தமிழ்ப் பண்புக்குப் புறம்பானவர் அல்ல. ஏதோ பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலீஷ் இலக்கியத்தின் போலி மூடாக்குகளை வைத்து எதையெடுத்தாலும் விரசம் விரசம் எனத் திரைபோடும் ரசனோபாக்கியான கர்த்தர்களுக்கு இது புரியாமலிருந்தால் பாரதிதாஸன் எப்படி பொறுப்பாளியாக முடியும் ? இன்று, இலக்கியத்தை இங்கிலீஷ் கண்ணாடி கொண்டு சோதனை செய்து, அந்தச் சங்கப் பலகையின் அங்கீகாரம் பெற்றதே கவிதை என நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றால், அதைவிட தமிழ்க் காவியத்துக்கே சந்தனக் கட்டையில் சிதைவைத்து சந்துஷ்டியடையலாம்.

Friday, June 12, 2015

பாரதியும் தம்பலாக்களும்




புதுவை வாழ் எழுத்தாளர் பாரதி வசந்தன் எழுதியிருக்கும் தம்பலா சிறுகதை
நூலை    வாசித்த அனுபவம் இனிது. சிறுகதை
ஆங்கிலத்திலும் பிரஞ்சு  மொழியிலும் மொழியாக்கம் பெற்றுள்ளது.
சிறுகதைக்கான விமர்சனங்கள், கதை மாந்தர்களின் நிஜம், அதற்கான
வரலாற்று ஆவணங்கள், அதைத் தேடி அலைந்த எழுத்தாளரின் பயணம்,
பயணத்தில் அனுபவித்த காயங்கள் என்று அனைத்தையும் ஒரே நூல்
வடிவாக்கியிருக்கும் முயற்சி தமிழ் இலக்கிய உலகத்தில் ஒரு புதிய , முதல்
முயற்சி.

தம்பலா சிறுகதையில் பாரதியும் தம்பலாவும் கனகலிங்கமும் கதைப்பாத்திரங்கள்.

தம்பலாவும் கனகலிங்கமும் பாரதி கண்ட இரு நிஜங்கள். இருவருமே
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள்.
இதில் கனகலிங்கத்தைப் பாரதி தன் சமூக சீர்திருத்த கருத்துக்காக
கையில் எடுத்துக்கொண்டு அவனுக்குப் பூணூல் அணிவித்து
தன்னளவில் ஒரு மிகப்பெரிய சமூகப் புரட்சியை நடத்திக் காட்டுகிறார்.
ஒரு கனகலிங்கத்திற்கு புணூல் போடுவதாலேயே சமூகப்புரட்சியை
ஏற்படுத்திவிட முடியாது என்பதால் இந்தக் கருத்து தளத்தில் பாரதியை
மிகவும் கடுமையாக விமர்சனம் செய்கிறார் புதுமைப்பித்தன்.
பாரதி நம்பிய ஆசார சீர்திருத்தங்கள் புதுமைப்பித்தனுக்கு அசட்டுத்தனங்களாகப்
பட்டன. பாரதி எழுதிய சிறுகதை "முற்றுப் பெறாத சந்திரிகையின் கதையில்
பாரதி கோபலய்யங்காருக்கும் வேலைக்காரி மீனாக்ஷிக்கும் நடத்திய
கலப்பு மணத்தை விகடம் பண்ணுகிறார் புதுமைப்பித்தன் "கோபலய்யங்காரின்
மனைவி' சிறுகதையில்.
கனகலிங்கத்திற்கு பாரதி தான் குரு. எப்போதும் கனகலிங்கத்திடம் கண்ட
சிஷ்யபக்தி பாரதிக்குக்கும் பாரதியின் ஆளுமைக்கு ரொம்பவும் சாதாரணமான
விஷயம். பாரதி கனகலிங்கத்திடம் பொறாமைப் படவோ வியப்படையவோ
எதுவுமில்லை. ஆனால் ஒடுக்கப்பட்ட அதே சமூகத்தைச் சார்ந்த
தம்பலாவைக் கண்டு பாரதி பிரமிப்பு அடைகின்றான.

பாரதி நேரில் சந்திக்க வேண்டும் என்று விரும்பிய ஒரு மனிதனாக
தம்பலா கதைப் பாத்திரம் சித்தரிக்கப்படுகிறது. தம்பலா.
 குதிரையிலிருந்து இறங்கும் போது அவன் தோற்றத்தில் தெரிந்த
கம்பீரம், அவன் குதிரை மேல் போவதைக் கண்டு பொறாமைக் கொண்ட
உயர் ஜாதிக்காரர்கள் "தோட்டிப் பயலுக்குத் திமிர பார்த்தியான்னு' அவன் முதுகுக்குப் பின்னால் பேசுகிறார்களாம். இதைச் சொல்லிவிட்டு
"பற்கள் எல்லாம் வெளியே தெரியும்படியாக சர்வசாதாரணமாகச் சிரித்தான்.
அதில் வெளிப்பட்ட அலட்சியம் பாரதிக்குப் பிடித்திருந்தது"
என்கிறார் கதைச் சொல்லி.

பாரதியைப் பற்றி சொல்லும் போது கதையாசிரியர்
'மிகவும் மெலிந்த சரீரம், ஆனால் வீர புருஷனுகுரியதோர்  நடை" என்ற
வரிகள் தம்பலாவின் தோற்றம், வீரம், கம்பீரத்துடம் ஒப்புமைப் படுத்தி
பார்க்க வேண்டிய வரிகள்.

தம்பலா தோட்டிகளை அவமானப் படுத்தியதற்காக  புதுச்சேரியை நாறடித்த
சம்பவத்தைக் கேட்டு,
'அப்படியான காரியமா செய்தீர்கள் தம்பலா? '
என்று கேட்கிற இடத்திலும்,
'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கர்த்தர் நீதி நியாயம் செய்கிறாரோ இல்லையோ..
இந்தத் தம்பலா கண்டிப்பா செய்வான்' என்று சொல்லும் போது
தம்பலாவின் குரலில் தொனித்த உறுதியும் ஆவேசமும் பாரதியை
கண்களை இமைக்காமல் அவனைப் பார்க்க வைக்கிறது.

இந்த இடத்தில் தான் தம்பலா என்ற கதைப்பாத்திரம் கம்பீரத்துடன்
வாசகனின் மனதில் வலம் வருகிறது.
ஒரு எழுத்தாளனாக பாரதிவசந்தன் கத்தி மீது நடக்க வேண்டிய
இடம். ஒருவர் பாரதிவசந்தனே ஆராதிக்கும் பாரதி, இன்னொருவர்
பாரதி கண்டு பிரமித்த தம்பலா. இந்த இரண்டு பாத்திரங்களுமே
நிஜம். ஒருவரின் நிழலில் ஒருவர் மறைந்துவிடாமல் இருவரையும்
சேர்த்து சுமக்க வேண்டிய இடம். பாரதி வசந்தன் பாரதி மீது
கொண்ட அதீதப் பற்று காரணமாகக் கூட எவ்விதமான நாடகத்தன்மையையும்
கதையில் புகுத்தாமல் மிகவும் கவனத்துடன் கதை முடிவை நோக்கி
நகர்த்த வேண்டிய இடம்.
இந்த இடத்தை பாரதிவசந்தன் மிகவும் சரியாகவே கடந்திருக்கிறார்.
அதனால் தான் இக்கதை யதார்த்தத்திலிருந்து விலகாமல் இருக்கிறது.
பாரதி, தம்பலா சந்திப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் கதையை நகர்த்தி
பாரதி சந்திக்க வரும்போது புதுச்சேரியை ஒரு பருந்து பார்வையில்
பின்புலமாகக் காட்டி சந்தித்தப் பின் பாரதி என்ன சொல்லியிருக்க முடியும்
என்பதோடு கதையை முடிக்கிறார்.

புதுச்சேரி தமிழ் பாரதி வசந்தனுக்கு கைகொடுத்திருக்கிறது.
கிறித்தவனான தம்பலாவின் 'பிரகாசமான நெற்றியில் மிகச் சின்னதாய்
சந்தணப்பொட்டு' என்று எழுதியிருப்பது கிறித்தவர்கள் அக்காலத்தில்
இந்துமத அடையாளங்களை விடாமல் பின்பற்றினார்கள்
என்பதைக் காட்டுகிறது.

பாரதி தம்பலாவின் வீட்டுக்கு வெளியே திண்ணையில் தான் அமர்ந்திருக்கிறார்,
வீட்டுக்குள் போகவில்லை. ஆனால் தம்பலாவின் வீட்டைப் பார்த்து
பெருமை அடைகிறார்.
வீட்டுக்குள் போனதாகவோ
 தம்பலா விருந்து உபசரித்ததாகவோ காட்டியிருந்தால்
அது நம்பகத்தன்மைக்கு அப்பாற்பட்டதாக இருந்திருக்கும்.
பாரதி வசந்தன் அந்தத் தவறைச் செய்யவில்லை.

கதை முடிவில் பாரதியின் வரிகளாக பாரதிவசந்தன் எழுதியிருக்கும் வரிகள்:

" ஒரு மனுஷன் தாழ்ந்த குலத்திலே பிறந்துவிட்டான் என்கிறதுக்காக அவனை
ஒதுக்கி வைப்பதோ ஒடுக்கி வைப்பதோ அவனுக்கும் கேடு, பிறருக்கும் கேடு.
இனிமேல் பள்ளனோ, பறையனோ, சக்கிலியோ, தோட்டியோ யாரும் தம்மைக்
கைநீட்டி அடிக்காத வண்ணம் பார்த்துக் கொள்வது நல்லது"

இந்த வரிகள் ஒடுக்கப்பட்டவர் பார்வையிலும்
சமூக சீர்திருத்த தளத்திலும்  விமர்சனத்திற்கும்  எதிர்வினைகளுக்கும்
இடமளிப்பவை. ஆனாலும் பாரதி இப்படித்தான் சொல்லியிருக்க
முடியும் என்ற முடிவுக்கு பாரதி வசந்தன் வந்திருப்பது பாரதியின் காலத்துடனும்
ஆசார சீர்திருத்தங்கள் இந்து சமூகத்தை ஒற்றுமைப் படுத்தும், சீர்திருத்தும்
என்று நம்பிய பாரதியின் கருத்துடனும் நேர்க்கோட்டில் இருப்பது போல
எழுதியிருப்பது பாராட்டுதலுக்குரியது தான்.

விமர்சனத்திற்குரிய இந்த வரிகளை
எழுதியதன் மூலம் பாரதிவசந்தன் கதையை மீண்டும் ஒரு முறை வாசிக்க வைத்து மவுனமாக ஒரு புரட்சியை செய்திருக்கிறார்.
எழுதிய எழுத்துகளுக்கு நடுவில் எழுதப்படாமல் கடந்து வந்த மவுனத்தில்
இன்னொரு கதையையும் சேர்த்தே  வாசிக்க வைத்ததில் தம்பலாவுக்கு
தனி இடம் உண்டு.
பாரதியைக் கொண்டாடுபவர்களும் பாரதியை விமர்சிப்பவர்களும்
என்று இருசாராருக்குமே  மறுவாசிப்புக்கு இடம் கொடுப்பது இக்கதையின்
சிறப்பு.

நூல்:
A Trilingual edition
BHARATHI VASANTHAN'S
THAMBULA
English version : P Raja
French version: S A Vengada Soupraya Nayagar
வெளியீடு: நிவேதிதா புத்தகப் பூங்கா, சென்னை
(ஏப்ரல் 2010 ல் எழுதிய விமர்சனம். வடக்குவாசல் இதழில் வெளிவந்தது
 மீள்வாசிப்புக்காக)















































































































Monday, June 8, 2015

தினக்குரல் - இலங்கை பத்திரிகையில் வெளியான என் நேர்காணல்

நேற்றைய தினக்குரலில்( 07/06/2015)- நன்றி பாரதி அண்ணா.
நன்றி லுணுகலை ஶ்ரீ.






மும்பயில் பிறந்து வளர்ந்த புதியமாதவி மதுரைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை பயின்றவர். மும்பை பன்னாட்டு வங்கியில் (HSBC) 22 ஆண்டுகள் பணி செய்து விருப்ப ஓய்வு பெற்றவர். நான்கு தலைமுறையாக மும்பையை வாழ்விடமாகக் கொண்ட இவர் மும்பை பெரு நகரத்தின்  அவலங்களை, தாராவியின் மெளன ஓலங்களை, மாறிவரும் பெண்களின் உலகத்தை தன் கதைகளிலும் கவிதைகளிலும் கட்டுரைகளிலும் தொடர்ந்து பதிவு செய்து வருபவர்.

சூரியப்பயணம், ஹேராம், நிழல்களைத் தேடி, ஐந்திணை, செங்காந்தாள்(மின்னூல்) என்று 5 கவிதை தொகுப்புகளும், மின்சாரவண்டிகள், புதிய ஆரம்பங்கள், தனியறை, பெண்வழிபாடு என்ற 4 சிறுகதை தொகுப்புகளும் சிறகசைக்கும் கிளிக்கூண்டுகள், ஊமைத்தசும்புகள், மழைக்கால மின்னலாய், செய்திகளின் அதிர்வலைகள் என்ற 4 கட்டுரைத் தொகுப்புகளையும்வெளியிட்டவர். கவிதைக்கான சிற்பி இலக்கியப்பரிசும், கதைகளுக்கான ஜெய ந்தன் படைப்பிலக்கிய விருதும், மணல்வீடு களரி இலக்கிய விருதும் பெற்றவர்.

இவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் சாகித்திய அகதெமி பெண்கள் கவிதைத் தொகுப்பிலும், மற்றூம் மலையாள மாத்ருபூமி, மாநகர கவிதா தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன.

மலையகப்பெண்களும் ஊடறூவும் இணைந்து நடாத்திய பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணி உரையாடலும் நிகழ்வுக்கு இலங்கை வந்திருந்த போது அவருடனான நேர்காணல்.

நேர்காணலும் படங்களும் : லுணுகலை - ஸ்ரீ

"புதியமாதவி” என்ற புனைப்பெயரை தாங்கள் தெரிவு செய்ததன் காரணம் என்ன?

நான் இந்தப் பெயரை தெரிவு செய்து கொண்டேன் என்று சொல்வதை விடஇப்பெயர் என்னைத் தேடி வந்து தெரிவு செய்து கொண்டது. அது ஒரு சுவராஸ்யமான கதை. நான் முதலில் எழுதியது கவிதையோ கட்டுரையோ அல்ல. சிறுகதை எழுதினேன். அந்த முதல் சிறுகதையின் தலைப்பு "புதியமாதவி' சிலப்பதிகாரம் படித்த வயது. ஆறாம் வகுப்பு முடிந்து ஏழாம் வகுப்புக்கு போகும் வயது. அப்போதுதான் அக்கதையை எழுதுகிறேன். அப்போதெல்லாம் ஜெராக்ஸ் வசதிகள் கிடையாது. கார்பன் பேப்பர் வைத்து எழுதி 1 + 1 என்று இரண்டு இரண்டு படிவங்கள் எழுதிக்கொள்வேன். பின்னர் அதை நூல் கோத்து என் தந்தையைப் பார்க்கவரும் அவருடைய தோழர்களிடம் வாசிக்க கொடுப்பேன். அவ்வாறு வாசித்தவர்களில் ஒருவர் சீர்வரிசை சண்முகராசன் அவர்கள். அவர் மும்பையில் சீர்வரிசை என்ற இதழின் ஆசிரியராக இருந்தக் காலத்தில் என்னை மீண்டும் எழுதச் சொல்கிறார். கவிதை, கதை என்று இலக்கிய உலகை விட்டு 10 ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகு நான் எழுதவ்ருகிறேன். குடும்பம், பணிச்சுமை, அடையாள சிக்கல் என்ற பல்வேறு மன உளைச்சல்களுக்கு நடுவில் என் இயற்பெயருடன் என் கவிதைகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். மல்லிகா என்ற என் பெயரில் எழுதுவதில் புதிதாக எதுவும் சிக்கல்கள் வந்துவிடுமோ என்ற நிலை. அப்போதுதான் சீர்வரிசை சண்முகராசன் அவர்கள் என் முதல்கதையான "புதியமாதவி" என்ற பெயரில் என் எழுத்துகளை வெளியிட்டார். சில வருடங்களுக்குப் பின் மல்லிகா தான் புதியமாதவி'என்று தெரியவந்தக் காலக்கட்டத்தில் கேட்டார்கள். வேறுபெயர் கிடைக்கவில்லையா ? அது ஏன் மாதவி? என்று அப்போது தீர்மானித்தது தான் என் புனைபெயரை அப்படியே தொடர்வது என்று. மாதவி என்றால் குருக்கத்தி, துளசி, துர்க்கை என்ற பல பொருட்களும் உண்டு. இந்த ஒவ்வொரு அர்த்தங்களும் ///////// \எனக்கு மிகவும் பிடித்தமானவையாக இருக்கின்றன. மல்லிகா புதியமாதவியாக பயணம் தொடர்வது இதனால் தான்.

02. இலங்கை பயணம் பயனுடையதாக அமைந்திருந்ததா/… ?பயணங்களில் பயன் பற்றி யோசிப்பதில்லை நான். பயணங்கள் எப்போதும் புதுப்புது அர்த்தங்களை நமக்கு சொல்லிக்கொடுக்கின்றன. பத்து புத்தகம் வாசித்த அனுபவத்தை விட ஒரு பயணத்தின் அனுபவம் என்பது நிஜங்களின் தரிசனத்தை தரும் அனுபவம். அவ்வகையில் இலங்கைப் பயணம் என் வாழ்க்கையில் ரொம்பவும் முக்கியமானது. ஒன்று முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்குப் பிறகு நான் வருகிறேன். கண்டி வெகுதூரமில்லை, கடலும் மிக ஆழமில்லை என்றாலும் நான் கையறுநிலையில் இருந்தேன். அந்த உணர்வு ஒருவகையான குற்றவுணர்வு என்று கூட சொல்லலாம். மனித நேயமிக்கவர் எவருக்கும் தன் கண்முன்னால் நடக்கும் மனித உரிமை மீறல்களை எதிர்த்துஎதுவும் செய்யமுடியாத குற்றவுணர்வு ஏற்படுகிறது, இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், என் தந்தை தன் இளம்வயதில் வாழ்ந்த கொழும்பு நகரத்திற்கு நான் வருகிறேன், கொழும்புக்கு ஒரு முறையாவது மீண்டும் போக வேண்டும் என்பதே என் அப்பாவின் கடைசி ஆசையாக இருந்தது. அது நிறைவேறவில்லை. என் அப்பாவின் ஒன்றுவிட்ட சகோதரிகள் இருவர் கொழும்பில் தான் வசிக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகளுடன் இருந்த தொடர்புகள் அப்பாவுக்குப் பின் இல்லை. இந்த மனநிலையும் சேர்ந்து கொழும்பு மண்ணில் கால்வைத்தவுடன் ஏற்பட்டது.

03. நீங்கள் மும்பையில் வளர்ந்தவர். மும்பைக்கும் உங்களுக்குமான தொடர்பு எத்தகையது?
தாமிரபரணி என் தாயகம் என்றாலும் அரபிக்கடலோரம் மும்பை தான் என் வாழ்விடம். மும்பை தான் என் வாழ்க்கை. மும்பையில் பிறந்து, வளர்ந்து திருமணம் ஆகி வாழ்ந்து கொண்டிருக்கும் நான், மும்பை தமிழ் சமூகத்தின் நாலாவது தலைமுறை. என் அப்பாவுக்கு தாத்தா காலத்திலேயே அவர்கள் மும்பை வந்துவிட்டார்கள். மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்த இடம் மும்பை. அதனால் தான் மும்பை என் வாழ்க்கையுடன் நெருங்கிய நேரடி தொடர்புடையதாக என்னைப் பாதிப்பதாக இருக்கிறது. தாமிரபரணி எனக்கு வேடந்தாங்கலாக இருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் 4வது தலைமுறையாக மும்பையில் வாழும் நான் மும்பையை அம்ச்சி மும்பையாக (அம்ச்சி - எங்கள்) . ஏற்றுக்கொண்டுவிட்டேன். ஆனால் மும்பை என்னை அப்படி தன் மகளாக ஏற்றுக்கொண்டிருக்கிறதா? நான் இன்றும் மும்பையில் 'பொழைக்க வந்த மதராஸி, இனக்கலவரங்களின் போது "ஸாலா மதராஸி" என்ற இரண்டாம்தர குடியுரிமையுடன் தான் வாழ்கிறேன் என்பது தான் யதார்த்தம்.

04. மும்பை சேரிப்புறங்கள் தமிழ்ச்சூழலில் விமர்சனத்துக்குரிய கலாசார சூழலாக காண்பிக்கப்படுகிறது..?



காண்பிக்கப்படுகிறது " என்று சரியாகவே கேட்டிருக்கின்றீர்கள். யார் அப்படி காட்டுகிறார்கள்? இந்த இந்தி சினிமாவும் தமிழ் சினிமாவும் தானே அப்படி காட்டுகிறார்கள்..என்னவோ மும்பையின் சேரிப்புறத்தில் தினமும் கொலை, கொள்ளை, வன்புணர்வு , சண்டை, நடப்பது போலவும் .இங்கே வாழ்பவர்கள் எல்லோரும் தாதாக்கள் போலவும் காட்டுகிறார்கள்...சினிமாவில் காட்டப்படும் கதாநாயகர்கள் அனைவரையும் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் நினைப்பதும் வில்லன்களை கேடிகளாகவும் சமூகவிரோதிகளாக நினைப்பதும் எப்படி சினிமா மூலம் நம் மக்களின் பொதுப்புத்தியில் விமர்சனத்திற்கு இடமின்றி திணிக்கப்பட்டிருக்கிறதோ அதுபோலவே தான் மும்பை சேரிப்புற வாழ்க்கை பற்றிய சினிமா சித்தரிப்புகளும்.
மும்பையில் குண்டுவெடிப்பு நடந்து மிகப்பெரிய கலவரம் நடந்த காலக்கட்டத்தில் கூட இதே சேரிபுறத்தில் வாழ்ந்த இந்துக்களும் இசுலாமியர்களும் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்பதை இவர்கள் காட்டுவதே இல்லை! இதே சேரிப்புற மும்பை வாழ்க்கையை தான் நான் என் தனியறை கதைகளில் எழுதி இருக்கிறேன். அக்கதைகளில் புனைவுகள் இல்லை, அக்கதைகளின் மாந்தர்களும் அக்கதைகளின் அறைக்கதவுகளும் நிஜமானவை.

05. அவர்களுடன் அரசியல் பணிகளிலும் ஈடுபட்டுள்ளதாக அறிகிறோம். சிக்கல் மிகு பல்கலாசார சூழலில் இது சாத்தியமானதா/?

இவ்விடத்தில் என் அரசியல் பணி என்பது ஓட்டு அரசியலோ, அதிகாரம், பதவிக்கான அரசியலோ அல்ல. முழுக்க முழுக்க சமூகவிடுதலை சார்ந்த அரசியல் பணி. சமூகவிடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அமைப்புகளுடன் எப்போதும் நான் துணையாக நிற்கிறேன். பல்கலாசார சூழலில் இது சாத்தியமா என்று கேட்டால் நாம் எந்த தளத்தில் நிற்கிறோம் என்பதை வைத்து நம் சாத்தியப்பாடுகள் தீர்மானிக்கப்படும் என்பது என் எண்ணம். தமிழ் தேசியத்தையும் இந்தியா பல்வேறு இன மக்கள் வாழும் இடம், அதிலும் குறிப்பாக பல்வேறு தேசிய இனங்கள் வாழும் நாடு என்ற புரிதல் வேண்டும். இங்கு வாழும் மராட்டிய சகோதரர்களின் மண்ணின் மைந்தர்கள் கொள்கையில் இருக்கும் சில அடிப்படை நியாயங்களை நான் புறக்கணிப்பதில்லை. தந்தை பெரியாரைப் பற்றி மும்பையில் எந்த மொழி சார்ந்த மேடையிலும் என்னால் பேச இயலும். யாருக்கும் அவர் தெரியாவதவர் அல்ல.பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர் இந்த மூவருக்கும் இருக்கும் நுண்ணிய வேறுபாடுகள் பகை முரண்கள் அல்ல என்ற தெளிவும் எனக்கிருக்கிறது. இந்த மூவரும் எப்போதும் என்னுடம் பயணிக்கிறார்கள். பல்லின மக்கள் வாழும் மும்பையில் இவர்களுக்கான தேவையும் இடமும் இருக்கிறது. நான் பிறந்த குடும்பமும் முழுக்கவும் அரசியல் பின்னணி கொண்டவர்கள். என் அப்பாவுக்கு தாத்தா நரசிம்மமேஸ்திரி அவர்கள் தான் மும்பையில் வாழும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி பயில ஒரு தமிழ்ப்பள்ளிக்கூடத்தை நிறுவி இருக்கிறார். அவருக்கு வழிகாட்டியாக இருந்தவர் மும்பைக்கு அருகில் இருக்கும் புனே நகரில் வாழ்ந்த மகாத்மா புலே. என் அப்பா பி.எஸ்.வள்ளிநாயகம் அவர்கள் பெரியார், அண்ணா வழி வந்த அரசியல் வாழ்க்கையிலும் என் அப்பாவின் தம்பி , என் சித்தப்பா பி.எஸ் கோவிந்தசாமி விளிம்புநிலை மக்களின் அரசியலை முன்னெடுத்த குடியரசு கட்சியிலும் இருந்தார்கள். இந்தப் பின்புலம் என் சமூகவிடுதலைக்கான பயணத்தில் எனக்குத் துணையாகவும் இருக்கிறது. சில நேரங்களில் தொந்தரவாகவும் இருக்கிறது.

06. ஒரு பெண்ணிய செயற்பாட்டாளராக இயங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது எவ்வாறு?
பெண்ணிய செயற்பாட்டாளராக " இது நீங்கள் என்னைப் பார்க்கும் பார்வை. நான் இப்படி எல்லாம் எந்த ஓர்மையுடனும் திட்டமிட்டு செயல்படவில்லை. எழுத்துக்கூட்டி தமிழ் வாசிக்க ஆரம்பித்த காலத்திலேயே பெரியாரின் எழுத்துகள் தான் என் வீட்டு சூழலில் எனக்கு வாசிக்க கிடைத்தவை. எனவே பெண்விடுதலை என்பது ரொம்பவும் இயல்பாக என் வாழ்வில் ஏற்பட்டது. ஆணின் விடுதலை எப்போதும் சமூகவிடுதலையாகவும் அதே நேரத்தில் இச்சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்ணின் விடுதலை மட்டும் தனித்துபெண்விடுதலையாகவும் இன்றுவரை தொடர்கிறது. பெண்ணிய செயற்பாட்டாளரை நாம் இனி சமூக செயற்பாட்டாளராக அடையாளம் காண பழக வேண்டும்.
07. சமுக விடுதலை சாத்தியமாகாத நிலையில் பெண்விடுதலைஎன்பது அடையக்கூடியதா.?
நான் ஏற்கனவே சொல்லியது போல இச்சமூகத்தின் சரிபாதியாக இருக்கும் பெண்ணுக்கு விடுதலை வராமல் சமூகவிடுதலை எப்படி சாத்தியமாகும்?

08. இந்தியா- மும்பை, மும்பை – தமிழ் நாடு, தமிழ் நாடு- இலங்கை, இலங்கை – மலையகம் இந்த பிரதேச வேறுபாடுகளில் பெண்களின் சூழலை எவ்வாறு உணருகிறீர்கள்? 

இந்தியாவின் தலைநகரம் டில்லி என்றாலும் வணிக தலைநகரம் மும்பை தான். மும்பை பெருநகரம் தான் இந்தியாவின் பெண்களின் முகம். பல மொழிகள், பல கலாச்சாரங்கள், உலகமயமாதலின் நேரடி தாக்கம்.. காங்கீரிட் காடுகளுக்கான அடையாளங்கள் , நுகர்கலாச்சாரத்தின் உச்சம் மும்பை. தமிழ்நாட்டு பெண்களும் மும்பையின் நுகர்கலாச்சாரத்துடன் இன்று போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆண் பெண் உறவுகளில் மும்பை வாழ் பெண்களுக்கு இருக்கும் வெளிப்படைத்தன்மை தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டு பெண்களுக்கும் இலங்கை தமிழ்ப் பெண்களுக்கும் இருக்கும் மொழி ரீதியான ஒற்றுமை தவிர்த்து யாழ் மண்ணின் சூழலில் எங்கள் கேரள மண்ணின் வாழ்க்கை சூழலை சந்தித்தது போல உணர்ந்தேன். அதற்கு வாழ்விடம் காரணமா தெரியவில்லை. அதைப்போல சிங்கள, மற்றும் காலனி ஆட்சியின் எச்சமாக சில கலாச்சாரங்கள் இலங்கையில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் அப்படி இல்லை. இலங்கையில் வாழும் இசுலாமிய பெண்களின் கல்வி அறிவும் திறமைகளும் அதற்கான சூழலும் தமிழ்நாட்டைவிட போற்றுதலுக்குரியதாக இருந்தது இப்பயணத்தில் அக்காட்சிகளும் அனுபவமும் மனநிறவை தந்தன. நான் இலங்கை வாழ்க்கையை ஒரு வார பயணத்தை வைத்துக்கொண்டு அவதானிப்பதோ
அல்லது கருத்து சொல்வதோ சரியாக இருக்காது என்பது என் எண்ணம் இலங்கை - மலையகம் சார்ந்த பிரச்சனைகளை வாசித்திருக்கிறேன் என்றாலும் இப்பயணம் அதை உணர வைத்தது. ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு சொல்வதை நிறுத்தவில்லை என்பதுடன் கூடுதலாக என் கவனிப்பை பெற்றது.. வர்க்கம் சார்ந்த வேறுபாடுகளுடன் சாதி மனப்பான்மையும் சேர்ந்திருக்கிறதோ என்ற எண்ணம் ... ( என் எண்ணமும் கவனிப்பும் தவறாக கூட இருக்கலாம். தவறாக இருந்தால் பெருமகிழ்ச்சிதான்).

09. மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்திய பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் நிகழ்வில் “பெண்களும் அரசியலும்” என்ற தலைப்பில் உரையாற்றினீர்கள்.இந்த தலைப்பின் முக்கியத்துவம் எத்தகையது/

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல என் அரசியல் பின்னணி. தற்போது தொடர்ந்துநான் எழுதிவரும் அரசியல் விமர்சனக்கட்டுரைகள் இன்று என்னை ஓர் அரசியல் விமர்சகராக அடையாளம் காட்டும் சூழல் (நான் இந்த அடையாளங்களை விரும்பவில்லை ஏற்கவில்லை என்றாலும்) . பெண்ணியம் சார்ந்த பிரச்சனைகள் என்றால் குழந்தைப்பேறு. குழந்தை வளர்ப்பு, பால் சமத்துவம், பெண்ணுக்கு சொத்துரிமை, குடும்ப நிர்வாகத்தில் ஆணின் பங்கு, பெண் உடல், பெண்கள் எழுதும் பெண்மொழி கவிதைகள், பெண் உடல்நலம், பெண் சிசுக்கொலை, மத ரீதியான பெண் பிரச்சனைகள், கருப்பை, கருச்சிதைவு, இதை எல்லாம் காட்டி வியாபாரம் செய்யும் திரை உலகம் என்று ஒரு வட்டத்தில் பெண் சந்திப்புகள் முடிந்துவிடுகின்றன. இவை எல்லாமே பெண்ணியம் சார்ந்தவை தான் என்பதில் எனக்கும் உடன்பாடு தான். ஆனால் ஆட்சி அதிகாரம் சட்டம் என்று வந்துவிட்டால் அது முழுக்கவும் பெண்ணுலகிலிருந்து ரொம்பவும் தூரமாக இருக்கிறது. ஒரு வகையில் சொல்லப்போனால் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் அரசியல் முழுக்கவும் ஆண்களுக்கானதாக இருக்கிறது. பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதுடன் மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு பெண்ணியம் சார்ந்த பிரச்சனையும் பெண் அரசியலில் நுழைவதற்கான தடைக்கற்களாக இருக்கின்றன . இதை பெண்கள் புரிந்து கொள்வதுடன் இதைப் பற்றி பேசவும் விவாதிக்கவுமான தருணம் வந்துவிட்டது. நாம் இனி அரசியல் பேசி ஆகவேண்டும்.

இன்றைய அரசியலில் பெண்களின் இடம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பெண்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்களாக இருக்கிறார்கள்.
ஒரு இந்திராகாந்தி, ஒரு ஸ்ரீ பண்டார நாயக என்று நம்மால் இப்போதும்
சிலரின் பெயர்களைச் சொல்லமுடியும். இந்த் ஆளுமைகளை மட்டும்
வைத்துக்கொண்டு அரசியலில் பெண்களின் இடத்தையும் பங்களிப்பையும்
வரையறை செய்வது ஆபத்தில் போய் முடியும். இன்னும் ஒருவகையில் சொல்லப்போனால் இவர்களில் பெரும்பாலோர் அரசியல் நுழைவு புறவாசல் வழியாக .. அதிலும் நேராக வாரிசுரிமை என்ற ஒரே ஒரு துருப்புச்சீட்டை வைத்துக்கொண்டு வந்தவர்கள்.
ஆண்கள் இப்படி வரவில்லையா என்று கேட்டால் வருகிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் பெண்கள் இப்படித்தான் entry ஆகிறார்கள்!
குடும்ப அரசியல் பிரதிநிதித்துவம் காரணமாக அரசியலில் ஆளுமைகளாக
உருவாக்கப்பட்டவர்கள் இவர்கள்..அரசியல் தலைவரின் மகளாக, மனைவியாக,துணைவியாக, விதவையாக,காதலியாக, சிநேகிதியாக.. இப்படி ஏதாவது ஒர் ஆண் துணையுடன் நுழைந்தவர்கள் மட்டுமே அரசியலில் பெண் ஆளுமைகளாக
உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். வங்க அரசியலின் மம்தா பனர்ஜியைப் போல
ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். தற்காலத்தில் இந்திய அரசியல் தளத்தில் செயல்படும் ஒரு சில பெண்களை யோசித்துப் பாருங்கள், உங்களுக்கே நான் சொல்லவருவது புரியும்.

>சோனியாகாந்தி : ராஜீவ்காந்தியின் மனைவி. ராஜீவ்காந்தி மறைவுக்குப் பின்
காங்கிரசுக்கு தேவைப்பட்ட / உருவாக்கப்பட்ட ஒரு தலைவர்.
>|மயாவதி : கன்சிராம் அவர்க்ளால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவர்.

ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த

பள்ளிக்கூடத்து ஆசிரியையான மாயாவதியை கன்சிராம் அரசியலுக்கு அழைக்கிறார்.

அம்பிகா சோனியும் ஷீலா திட்சீத்தும் இந்திராகாந்தி குடும்பத்தின்

குடும்ப நண்பர்கள் என்ற பின்புலத்தில் வருகிறார்கள்.

வாசுதார சிந்தியா குவாலியரின் அரசக்குடும்பத்தைச் சார்ந்தவர். அவருடைய

தாயாரும் பிஜேபியின் அரசியலில் பங்குவகித்தவர்.

ஜெயலலிதா எம்ஜியாரால் அரசியலுக்கு வந்தவர்.

சுப்ரியா சுலே, கனிமொழி, பிரியா தத், அகதா சங்கமா, மீரா என்று ப்லர்

அப்பாவின் வாரிசுகளாக வளர்க்கப்பட்டு இடம் பிடித்தவர்கள்.

மம்தா பனர்ஜி, சுஸ்மா சுவராஜ் என்று விதிவிலக்காக சிலர் வாரிசு

அரசியல் அடையாளங்கள் இன்றி அரசியலில் இடம் பெற்றவர்கள்

என்பது நமக்கு கொடுக்கும் நம்பிக்கை.


இந்த தகவலில் இந்தியா இடம் பெறுவதால் இது என்னவோ இந்தியாவுக்கு
மட்டுமேயான நிலை என்று எண்ணிவிட வேண்டாம். உலக அரசியலில்
அனைத்து நாடுகளின் பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களைக்
கணக்கில் கொண்டால் உலகத்தில் மொத்தமே 13% பெண் உறுப்பினர்கள் தான் இருக்கிறார்கள் !

10. இலங்கையில் தாங்களை பெரிதும் பாதித்த விடயம் எது?
முள்ளிவாய்க்காலின் போர் தின்ற சனங்களின் கதைகள்.. ..வரலாற்றை துடைத்து எடுத்தல் என்ற சொற்றொடரை நான் வாசித்திருக்கிறேன் ஏன் எழுதியும் இருக்கிறேன்... ஆனால் உண்மையில் வரலாற்றை துடைத்து எடுத்தல் என்றால் என்ன என்று இலங்கையில் பார்த்தேன், உணர்ந்தேன்.

11. தாங்களின் படைப்புகளில் “பெண் வழிபாடு” என்ற சிறுகதைத்தொகுதி தமிழ் கலாசார வாழ்வியல் சூழலில் சர்ச்சைக்குறிய பல விடயங்களை உள்ளடக்கியுள்ளது. புத்தகம் வெளிவந்தப்பின் சர்ச்சைகள் வருமென்று எதிர்பார்த்தீர்களா? வந்ததா..? 
பெண் வழிபாடு சிறுகதைகள் தமிழ்நாட்டின் பல்வேறு சிற்றிதழ்களில் வெளிவந்தவை.எந்தப் பிரச்சனையும் வரவில்லை என்பது தான் உண்மை. தற்போது எங்கள் தமிழ்நாட்டு சூழலில் .தமிழ்நாட்டு இலக்கிய சூழலில் பெண்ணின் கலாச்சாரம் சார்ந்து சர்ச்சைக்குரிய விடயங்களை எழுதலாம். ஆனால் அந்தப் பெண்ணுக்கு எந்த சாதி சார்ந்த அடையாளமும் இருக்க கூடாது.. அப்படி ஒரு அடையாளம் இருந்தால் அந்தக் குறிப்பிட்ட சாதிக்காரார் என்னவோ அவர் பொண்டாட்டியை பற்றி எழுதிவிட்டதாக கலவரம் செய்ய வருவார்கள். அந்த அடையாளம் இல்லை என்றால் அந்தப் பெண் " எவளோ ருத்தி..அவர்கள் வீட்டுப் பெண் அல்ல" என்ற மனப்பான்மை. அதே நேரத்தில் என்கவிதை தொகுப்பு "ஹேராம்" வெளிவந்தவுடன் ஒரு பதட்ட நிலை ஏற்பட்டது. காரணம் அக்கவிதைகள் வெளிப்படையாக இருந்த இந்துத்துவ அரசியலுக்கு எதிரான கருத்துகள். என் தனியறை சிறுகதைகள் தொடர்ந்து மும்பை போஸ்ட் வார இதழில் வெளிவந்த காலத்தில் " நான் அவர்கள் வீட்டு கதையை எ ழுதிவிட்டதாக " ப்லர் என்னிடம் சண்டை போட்டிருக்கிறார்கள். அதில் என் உறவினர்களும் உண்டு. மேலும் அண்மைக்காலங்களில் என் அரசியல் விமர்சனங்களுக்கு எதிர்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. அரசியல் என்றால் என்ன? திராவிட அரசியல் என்றால் என்ன? அதன் சரிவுகளுக்கு யார் காரணம்? இந்தியாவின் இந்துத்துவ ஆட்சி, இந்தியாவின் மதசார்பின்மை, சுற்றுப்புறச்சூழலுக்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்துகள் என்று தொடர்ந்து எழுதி வருகிறேன். என்னைக் கருத்தியல் ரீதியாக எதிர்க்க முடியாதவர்கள் எழுதுவதற்கு கூட ஆள் வைத்து தரக்குறைவாக எதிர்ப்பு என்ற பெயரில் எதையாவது எழுதி தங்களைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைக் கண்டு பரிதாபப்படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? முரண்கள் அனைத்தையும் பகை முரண்களாகவும் விமர்சனங்களை எல்லாம் எதிர்ப்புக்குரலாகவும் எண்ணுவது அச்சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் வியாதி. இது தீர்க்கப்படவில்லை என்றால் .. ஒட்டு மொத்த சமூகத்தின் வளர்ச்சியையும் அது பாதிக்கும். தினக்குரல் ஆசிரியர் குழுமத்திற்கும் வாசகர்களுக்கும் என் வாழ்த்துகளும் நன்றியும்.
- எழுத்தாளர் புதியமாதவி
மும்பை, இந்தியா.
மின்னஞ்சல் : puthiyamaadhavi @hotmail.com
 — with Puthiyamaadhavi Sankaran.