Friday, September 24, 2021

அவுரி அரசியலான கதை

 தாவர மண்டலத்தின் அரசியல்

காலனி ஆட்சி கால த்தில் மிகவும் முக்கியமானது.

வெட்ப மண்டலத்தில் விளையும் தாவரங்களை
தங்கள் குளிர்ப்பிரதேசத்தில் தங்களின் அதிகாரத்தாலும்
பயிரிட முடியாது என்பதால்
மனிதர்களும் விதைகளும் காலனி ஆதிக்கத்தில்
புலம்பெயர்ந்திருக்கின்றன.
அதில் முக்கியமானது அவுரியும் கரும்பும்.
அவுரி இலையிலிருந்து துணிகளுக்கு சாயம் பூசும்
இயற்கை வண்ணத்தை அறிந்த ஆங்கிலேயர்கள்
ஆப்பிரிக்காவில் விளைந்திருந்த அவுரி விதைகளை
இந்தியாவுக்கு கொண்டு வந்து இந்திய விவசாயிகளிடம்
கட்டாயப்படுத்தி அவுரி விளைச்சலை அறுவடை செய்தார்கள்.
தங்கள் விளை நிலங்களிலும் அவுரி போட்டு அவர்கள்
நிர்ணயித்த விலைக்கு கொடுக்க வேண்டிய நிலைக்கு
இந்திய விவசாயிகள் நசுக்கப்பட்டார்கள்.

தமக்குத் தேவையான அவுரியைப் பெற ‘திங்காத்தியா’
என்னும் ஒப்பந்த முறையை ஆங்கிலேயர்கள் உருவாக்கியிருந்தனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் (1830-1895)
அவுரி வாணிபம் மிகுந்த ஆதாயத்தை ஆங்கிலேயர்களுக்கு
அளித்து வந்தது. உலக அளவிலான சந்தை அவுரிக்கு இருந்தது.
துணிகளுக்கு நீலச்சாயம் தோய்க்க உதவும் மூலப்பொருளாக
இது இருந்தமையே இதற்குக் காரணமாகும்.
1890இல் வேதியியல் சாயத்தை ஜெர்மனி கண்டுபிடித்த பின்னர்
அவுரியின் மதிப்புக் குறையலாயிற்று என்றாலும்
முதல் உலகப்போரின்போது ஜெர்மானியரின்
வேதியியல் சாயங்கள் அருகிப் போன நிலையில்
மீண்டும் அவுரிப் பயிர், விலை ஏற்றம் அடைந்தது.
இதனால் ஆங்கிலேயர்கள் கொள்ளை இலாபம் ஈட்டினர்.
அவுரி பயிரிடமாட்டோம் என்று பெரிய போராட்டம் நடந்திருக்கிறது.
இந்தப் போராட்டம் “சம்ப்ரான் சத்தியாகிரகம்”
என்றழைக்கப்படுகிறது.
காந்தியின் விடுதலைப் போராட்டத்தில் அவுரியும் குரல்
கொடுத்த வரலாறு முக்கியமானது.
அப்படித்தான் கரும்பும்.
தங்கள் குளிர்ப்பிரதேசத்தில் பீட்ரூட்டிலிருந்து சர்க்கரை தயாரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு சர்க்கரை அதிகமாக கொடுக்கும் கரும்பை விளைவிக்கமுடியவில்லை.
பீட்ரூட்டிலிருந்து எடுக்கமுடியும் சர்க்கரையின் அளவு
கரும்புடன் ஒப்பிடும் போது சொற்பம். சர்க்கரை
ஒரு சிலருக்கான நுகர்ப்பொருளாக மட்டுமே இருந்தது
அவர்கள் தேசத்தில் அதனால் தங்கள் காலனி ஆதிக்கத்திலிருந்த
இந்து மகாசமுத்திர தீவுகளான ஜாவா, சுமுத்திரா, மொரிஷியஷ்
பகுதிகளி ல் கரும்பு பயிரிட்டு கரும்புத்தோட்டத்தில் வேலை செய்ய
கப்பல் கப்பலாக நம் மனிதர்களை ஏற்றுமதி செய்தார்கள். .
கரும்புத் தோட்டத்திலே - ஆ!
கரும்புத் தோட்டத்திலே
ஏழைகள் அங்கு சொரியும் கண்ணீர் வெறும்
மண்ணிற் கலந்திடுமோ? - தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர்
கண்ணற்ற தீவினிலே - தனிக்
காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார் - அந்தக்
கரும்புத் தோட்டத்திலே.
என்று பாரதி கண்ணீர்விட்டது அதிகாரத்திலிருப்பவர்களின்
சர்க்கரை இனிப்பை
எதுவும் செய்யமுடியவில்லை!!

தேயிலை காஃபி ரப்பர் கொக்கோ என்று அவர்களின் கச்சாப்பொருள்
தேவைகளுக்கு தங்கள் காலனி ஆதிக்க மக்களின் வாழ்க்கையை
சிதைத்தார்கள். இன்றும் அதுவே வேறொரு வேடத்துடன்
அரங்கேறி கொண்டிருக்கிறது. அவர்கள் தூங்கி ஓய்வெடுக்கிறார்கள்.
நம் பிள்ளைகள் தங்கள் தூக்கம் கெடுத்து அவர்களுக்காக
கணினி அடிமைகளாய் இருக்கிறார்கள்.
தாவர அரசியல், பூகோள அரசியல் . கனிம அரசியல்,
எண்ணெய் அரசியல் எல்லாமும் தான்
அதிகார அரசியலின் முகமாக இருக்கின்றன
அன்றும் இன்றும்..

Thursday, September 23, 2021

அவள் "ஒய்" என வெட்கப்பட்டாள்..

 

தமிழ் சினிமாக்களின் முதலிரவு காட்சிகள்மிகவும் பிரபலமானவை. அதுவும் அந்தக் காலத்தில் கண்ணதாசன் பாடலோடு பூவால் அலங்கரிக்கப்பட்ட கட்டிலைச் சுற்றி அவர்கள்

பாடுவதும் அதை ரசித்துப் பார்த்த ஒரு தலைமுறை இருந்தது என்பதும் 

உண்மைதானே…

ஆனால் சற்றொப்ப 2500 ஆண்டுகளுக்கு முன்

இதே காட்சியை சங்க இலக்கியத்தில் அன்றைய புலவன் எப்படி காட்சிப்படுத்தி இருக்கிறான் என்று வாசிக்கும்போது..ஏற்படும் வியப்பு ..

ஆஹா.. வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிகளையும் ரசித்து ரசித்துகொண்டாடி இருக்கிறான்யா நம்ம ஆட்கள்!

“ஆட்டுக்கறி பிரியாணி சாப்பாடு.. போட்டிருக்கிறார்கள் . ( திருமணத்தில் சைவ உணவு விருந்து வழக்கம் பிற்காலத்தில் தான் வந்திருக்கிறது) மணமகள் புத்தாடை அணிந்திருக்கிறாள். வாராயோ தோழி வாராயோ என்று மணல் பரப்பிய மணப்பந்தலுக்கு வாகை மகளிர் அழைத்துவருகிறார்கள். அன்று திங்கள் உரோகிணியைக் கூடும் முழு நிலா நாள்.

மணமகன் அவளுக்கு வாகைத்தளிர் அருகம்புல் மல்லிகை மொட்டு மூன்றும் சேர்த்து நூலில் கட்டிய மாலையை (தாலியாக) அணிவிக்கிறான். (அட டா.. இன்னிக்கும் தாலிக்கட்டும் போது அதில் பூ கண்ணியைத் தொங்கவிடுவது இதனால் தானா! இதையே பின்பற்றி இருக்கலாம். தங்கம் விலையைக் கட்டுப்படுத்தி இருக்கலாம்!!)

இதோடு நிறுத்திவிடவில்லை புலவன்..

அந்த இரவு காட்சிக்கு வருகிறான்.


உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி!

முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ, 

பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர்

உறு வளி ஆற்றச் சிறு வரை திற'' என

ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,

உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,

மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென  

நாணினள் இறைஞ்சியோளே பேணி

பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி,

சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த

இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.

(அகம் 136)

யாரும் கரித்துக்கொட்ட முடியாத கற்பினை உடையவளே! என் உயிரோடு ஒன்றுபட்டுக் கிடப்பவளே! துவளாத புத்தாடையால் உடம்பு முழுவதையும் நீ போர்த்திக்கொண்டிருப்பதால் உடல் புழுங்கி உன் நெற்றியில் வியர்வை கொட்டுகிறது. உடல் காற்றாடட்டும், உன் இடையைத் திறஎன்று சொல்லிக்கொண்டு அவள் ஆடையைக் களைந்தேன். அப்போது அவள் உறையிலிருந்து எடுத்த வாள் போல மின்னினாள். தன்னை மறைத்துக்கொள்ளத் தெரியவில்லை. ஒய்என்று நாணினாள். என்னை வணங்கினாள். பருத்து மூடிப் பகையுடன் கிடந்த ஆம்பல் மலரானது தன் சிவந்த தன் இதழ்களைத் திறந்து, வண்டு தேனை உண்ணும் மலராக விரிவது போல, தன்னை வேய்ந்திருந்த கூந்தலுக்குள் அவள் தன்னை ஒளித்துக்கொண்டாள்…

என்ன ஒரு காட்சி.. 

அவள் நாணத்தை “ஒய்’ என்று நாணினாள் 

என்று சொல்கிறானே.. இதுதான்யா அவன் காட்சிப்படுத்தியதின் உச்சம். 

நம் காமிராவுக்குள் இதெல்லாம் அகப்படமுடியாதுதான்!!!

 #சங்ககாலவாழ்க்கை_புதியமாதவி

#sangamLit_puthiyamaadhavi

Monday, September 20, 2021

40 + > 60

 நாற்பதுகளைத் தவறவிட்டவர்கள் அறுபதுகளில் நிம்மதி இழக்கிறார்கள். என்னைப் போல. 

 ஒவ்வொரு பெண்ணுக்கும் நாற்பது முதல் 50 வரை முக்கியமான பருவம். அதை என்ன காரணம் கொண்டும் யாருக்கும் தியாகம் செய்து விடாதீர்கள். கொஞ்சம் தன்னலத்துடன் இருங்கள், ஆம்.. அதனால் ஒன்றும் குடி முழுகிவிடாது. 

 இங்கே குடும்பம் என்பதும் உடன்பிறப்புகள் உறவுகள் என்பதும் எம் தந்தையர் காலத்தின் வாழ்வியல் விழுமியங்களக் கைவிட்டு வெகுதூரம் வந்துவிட்ட து. பாசம், அரவணைப்பு, எல்லோரையும் சேர்த்திழுத்துக்கொண்டு பயணிக்க நினைத்த விழுமியங்கள் எல்லாமே அர்த்தமிழந்துவிட்டன. திரும்பிப்பார்க்கும் போது நம்மை இன்று அவமதிக்கும் அவர்கள் புத்திசாலிகளாகவும் திறமைசாலிகளாகவும் இருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கடமை பாசம் என்பதெல்லாம் ரொம்பவும் கேலிக்கூத்தாகிவிட்டது,, ...... 

 நாற்பதுகளில் விழித்துக்கொள்ளுங்கள். உங்களை , நீங்கள் திருமணம் ஆனவர் என்றால் உங்கள் பிள்ளைகள் உங்கள் கணவர் இந்த முதல் வட்ட த்திற்கு மட்டும் அதிக நேரம் ஒதுக்குங்கள் .

 உங்கள் பணம் மட்டுமல்ல, 

 உங்கள் நேரம் விலைமதிப்பில்லாதது.

 உங்கள் உழைப்பு விலை மதிப்பில்லாதது. அதை யாரும் சுரண்டுவதற்கு நீங்களே காரணமாக இருக்காதீர்கள். 

பாசம் கடமை என்ற பெயரில் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்! 

 உங்கள் சுயம் காயப்படாமல் காலமெல்லாம் நீங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் அதை உங்கள் நாற்பதுகள் தான் தீர்மானிக்கின்றன. 

 நாற்பதுகளைத் தவறவிட்டு என்னைப் போலவும் என் எழுத்துகளைப் போலவும் அனாதையாகிவிடாதீர்கள்.

 என் பிள்ளைகளுக்கும் இதையே என் அனுபவப் பாடமாக விட்டுச் செல்கிறேன். எல்லாம் மாறுகிறது. நாமும் மாற வேண்டும்.

Sunday, September 19, 2021

பாரதி VS தாகூர் & நோபல்பரிசு

 



கீதாஞ்சலியை முதலில் தமிழாக்கத்திலும்

அதன் பின் ஆங்கிலத்திலும் வாசித்திருக்கிறேன். கண்ணதாசனின் புஷ்பாஞ்சலி வாசித்தப்பிறகு கீதாஞ்சலி வாசித்தேன். அத்துடன் தேவாரம் திருவாசகம்

ஆண்டாள் பாடல்கள் ,

மீரா பாடல்கள், சூஃபி பாடல்கள் வாசித்த

பிரமையில் ஆழ்ந்திருக்கும் வாசிப்பு மனம்

கீதாஞ்சலியை ஓர் அதிசயமாக கொண்டாடவில்லை என்பதுதான் உண்மை.

இதை வெளியில் சொல்வதற்கு அச்சப்பட்ட காலமுண்டு. !

ஆனால் தாகூரின் கீதாஞ்சலிக்கு  தான்

நோபல் பரிசு கிடைத்துள்ளது. மேற்கத்திய

படைப்புலகத்திற்கு கீதாஞ்சலி கவிதைகள்

இந்திய படைப்புலகம் குறித்து மாபெரும் வெளிச்சத்தைக் கொடுத்திருக்கும். இது குறித்த கட்டுரை ஒன்றை இம்மாதம் புதிய கோடாங்கி இதழில் சா.து. அரிமாவளவன் “பாரதியும் தாகூரும் ஒப்பாய்வு’ என்று எழுதி இருக்கிறார்.

தாகூரின் கவிதைகளை அயர்லாந்து நாட்டுக்கவி W B Yates செழுமைப்படுத்த உதவினார் என்ற குறிப்புள்ளது. அவரே இக்கவிதைகளுக்கு முன்னுரையும் வழங்கினார்.

நோபல் பரிசின் கதவுகளைத் தட்டுவது தாகூரின் கீதாஞ்சலிக்கு எளிதானது.

நம் மகாகவி பாரதிக்கு..?

 நம் பாரதி வங்கத்தின் தாகூரை அறிந்திருந்தார். தாகூர் பாரதியை அறிந்திருந்ததாகத் தெரியவில்லை!

பாரதிக்கு நோபல் பரிசு கனவாகவே இருந்த து.

தனக்கு கிடைக்கவில்லையே என்று மட்டுமல்ல, தமிழுக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் பாரதிக்கு இருந்திருக்கிறது.

“பாரதி நெல்லையில் தங்கியிருந்தப்போது இரவிந்தீர நாத் தாகூர் மதுரை வந்திருக்கிறார் என்று அறிகிறார் பாரதி. மதுரைக்குப் போய் தாகூரை சந்திக்க விரும்புகிறார்.

 எதற்கு?

“நான்  தாகூரோடு பேசி வென்று அவர் பெற்ற நோபல் பரிசைத் தமிழுக்குப் பெற்றுத்தர வேண்டும்…. நாம் சென்று தாகூரிடம் ஒன்று சொல்வோம். நீர் வங்க க்கவிஞர், நான் தமிழ்க்கவி. விக்டோரியா மண்டபத்தில் கூட்டம் கூட்டுவோம். உமது நோபல் பரிசை அவை முன் வையும். இருவரும் பாடுவோம், எனது பாட்டையே சீரியதென மெச்சுவார்கள். உமது கையாலேயே அப்பரிசை எடுத்து தர வேண்டும் என்போம்”

பாரதி…..

உனக்கு ஓர் அயர்லாந்து கவிஞன் கிடைக்கவில்லை. உன்னை எடுத்துச் செல்ல

வக்கத்துப்போனது எம் வாழ்க்கை!

 

நல்லதோர் வீணை செய்தே அதை

 நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவசக்தி எனைச் 

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். 

 

 

 

Friday, September 17, 2021

சமூக நீதியின் அரசியல்

 நான் தந்தை பெரியாரைக் கொண்டாடுபவள்.

அவரை ஓரளவுக்கு வாசித்தவள்.
இந்த இரண்டு வரிகளை எழுதித்தான் அடுத்த வரிகளுக்கு
நகர வேண்டியதிருக்கிறது.
தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப் 17
சமூக நீதி நாள் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி தந்தாலும் இம்மாதிரி அறிவிப்புகளின் அரசியல் கவலை அளிக்கிறது.
சமூக நீதி என்பது என்ன?
சமூக நீதி பயணத்தில் நீதிக்கட்சி காலம் தொட்டு
திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது என்ப
தை மறுக்கவில்லை. ஆனால்,
பெரியார் பிறக்கவில்லை என்றால் ?
என்று பேசுவது பகுத்தறிவல்ல.
பெரியார் தான் இந்திய மண்ணுக்கே சமூக நீதியைக் கற்பித்தவர்
என்ற மிகைப்படுத்தல் பெரியாருக்கும்
பெருமை சேர்க்கவில்லை.!
நான் வாழும் மராத்திய மண்ணில் புரட்சியாளர் அம்பேத்கரை
தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளாத ஒடுக்கப்பட்ட மக்கள்
இன்றும் உண்டு. ஆனால் எவரும் இன்றுவரை
அம்பேத்கர் பிறக்கவில்லை என்றால் நீ
செருப்பு போட்டு நடந்திருப்பாயா என்றோ
எல்லாம் அம்பேத்கர் போட்ட பிச்சை என்றோ
பேசுவது இல்லை.
ஆனால் பெரியாரின் திராவிட இயக்கம் வழி வந்தவர்கள்
எல்லோருமே
பெரியார் பிறக்கவில்லை நீ என்னவாக இருந்திருப்பாய்?
என்று கேட்பார்கள். மேம்போக்காக பார்த்தால் அவர்கள் கேள்வி
நியாயம் போல தோன்றினாலும் அந்தக் கேள்வியில்
வெளிப்படுவது நிலவுடமை சமூகத்தின் அதிகாரமும் சூத்திரனின் அதிகாரமுகமும் தான். இதைச் சுட்டிக் காட்டினால் என்னைப் போன்றவர்களை “நன்றி கெட்டவர்கள்’ ஆகிவிடுவோம்.!
இப்படித்தான் இங்கே பெரியார் மண்ணும்
பெரியார் மண்ணின் மைந்தர்களும் இருக்கிறார்கள்.
தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு
இந்த அறிவிப்புகளின் ஊடாக வேறொரு அரசியல் நோக்கம்
இருக்கிறது. அது இந்துத்துவ மோதி அரசுக்கு எதிரானதாக
தன்னை இந்திய அரசியலில் காட்டும் ஆயுதமாக
பெரியாரும் சமூக நீதி நாளும் ஆயுதமாகி இருக்கிறதா
என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டியதிருக்கிறது.
சமூக நீதி என்பது
அந்த நாளைக் கொண்டாடுவது மட்டுமல்ல,
சமூக நீதி என்பது
சமூக நீதியைக் கடைப்பிடிக்கப்போகிறேன் என்று
உறுதிமொழி எடுப்பதுடன் முடிந்துவிடுவதல்ல.
சமூக நீதி என்பது
விளிம்பு நிலை மக்களுக்கு
வாழ்வாதாரங்களை வழங்குவது மட்டுமல்ல,
சமூக நீதி என்பது
சமத்துவ புரங்களை கட்டி
வாடகைக்கு விடுவதல்ல.
சமூக நீதி என்பது அதையும் தாண்டி
அரசியல் அதிகாரத்தில் சமபங்கு, சம வாய்ப்பு கொடுப்பது.
அதிகாரப்பங்கீட்டில் சமூக நீதியை நிலை நிறுத்துவது.
திமுக அரசு அறிவிப்புகள் வரும்போது உயர் பதவிகளில்
சமூக நீதி செயல்படுகிறதா ?
சரி.. இதையும் தாண்டி.. சமூக நீதியைப் பேசும் திமுக
என்ற மாபெரும் அரசியல் கட்சியில்
அதிகாரமிக்க பதவிகளில் மாவட்ட வட்ட தலைவர் செயலாளர்களாக
இருக்கும் ஒடுக்கப்பட்டவர்கள்/ சிறுபான்மையினர்/
பெண்கள் எத்தனை பேர்?
சமுக நீதி என்பது ஒரு செயல்திட்டமாகுமா?
எப்படி ?
என்னவெல்லாம் செய்யப்போகின்றீர்கள
ங்கோவன்

Sunday, September 12, 2021

பேருந்துகளில் விரசமாகும் காமத்துப்பால்

 பெண்ணியம் பேருந்தில் பயணிப்பதில்லையோ??!

திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு மீண்டும் அரசு பேருந்தில்
பயணிக்கும் அனுபவம் கிட்டியது. திருக்குறளை
அசைப்பிரித்து எழுதுகிறேன் என்று சொல்லிக்கொண்டு
புதுசாக எழுதப்பட்டிருக்கும் திருக்குறளை
இவ்வளவு காலமும் சுமந்து கொண்டு
என் முப்பாட்டன் வள்ளுவனே காமெடி மாதிரி
ரசித்துக்கொண்டிருக்கும்போது நானும் அவரைப் போலவே
அதை வாசித்துவிட்டு சிரித்துவைத்தேன்.
தமிழகத்தில் அரசு பேருந்துகளில்
திரையிசைப் பாடல்கள் ஒலிக்கின்றன.
பயணத்தில் இசையும் பாடலும் எல்லா நேரங்களிலும்
எல்லோருக்கும் ஒத்துவராது, அதாவது ஒவ்வொருவரும்
ஒவ்வொரு மன நிலையில் பயணிப்பார்கள். அதைப் பற்றி
எல்லாம் கவனமின்றி மிகவும் சத்தமாக பாடல் ஒலிக்கிறது.
இதைப் பற்றிய ஓர்மையை நாம் இழந்துவிட்டோம்.
சரி இதை விடுங்கள்.
என் பயண அனுபவத்தில் என் காதுகளை ear phone
வைத்து மூடிக்கொண்டேன்.

ஆண் பெண் குரல் .. முயங்கி மயங்கி முக்கி முணங்கி..
இன்னும் என்னவெல்லாமோ .. சேஷ்டைகளுடன் பாடல் ஒலிக்கிறது..
சத்தமாக..
தமிழ்த் திரையிசைப்பாடல்கள்
எப்படி வேண்டுமானாலும் எழுதப்படட்டும் ..
ஆனால் ஒரு பொது இடத்தில் இம்மாதிரியான பாடல்களை
சத்தமாக ஒலிப்பரப்பிக்கொண்டு பயணிக்கும்
அருவெறுப்பை... என் தமிழ்ச்சமூகமே.. எப்படி
சகித்துக்கொள்கிறாய்? !!
ஏன் தமிழ்ப் பெண்ணியம் இந்தப் பயணத்தின்
அருவெருப்பை கண்டுகொள்ளவில்லை.
ஒருவேளை.. பெண்ணியம் பேசுபவர்கள் யாரும் பேருந்தில் பயணிக்கவில்லையோ??!!
இசை.. இனிமையானது.
ஆனால் அதையும் முகம் சுளிக்க வைத்து
உடல் கூச வைத்து அருவெருப்புடன்
காதை மூடிக்கொள்ள வைத்து.. இவை எதுவுமே
பாதிக்காத எருமைத்தோலுடன்., .. வாழப்பழகிவிட்டீர்களா!
(என் எருமைகள் மன்னிக்க வேண்டும்)
இசைக்கருவிகளின் மெல்லிய இசையை
ஒலிக்க விடுங்கள். திரை இசைப்பாடல்களிலும்
சகிக்க முடியாத விரசமான பாடல்களைத் தவிருங்கள்.
ப்ளீஸ்..

#தமிழ்நாடு_அரசுப்போக்குவரத்துதுறை
#TNSTC

Saturday, September 4, 2021

மணிமண்டபங்களின் பிசுபிசுப்பு

 குமரி முனையில் பெருந்தலைவர் காமராசருக்கு

மணிமண்டபம்/நினைவு மண்டபம் இருக்கிறது.

கொரொனா காலத்திற்கு முன் நான் குமரிமுனையில்
அந்த மணிமண்டபம் சென்று வந்தேன்.
ஒரு பெருந்தலைவருக்கு இதைவிட பெரிய தண்டனையை
யாரும் கொடுக்க முடியாது!

பிசுபிசுவென கால்களில் ஒட்டுகிறது . படிக்கட்டுகளில்
எச்சில் துப்பு துப்பி கறை படிந்திருக்கிறது.
அரியப்புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
கவனிப்பாரின்றி மண்டபத்தின் மையப்பகுதியில்
காமராசரின் மார்பளவு வெண்கலச்சிலை.
அவர் பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் மட்டும்
யாராவது எட்டிப்பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன்!
(இதுவும் என் நம்பிக்கை மட்டும்தான்)
மேல்தளத்திற்குப் போய் ஒரு நிமிடம் அங்கே
உட்கார்ந்திருக்க வாய்ப்பில்லை.
கையில் எதாவது பழைய செய்தித்தாள் எடுத்துப்போனால்
அதை விரித்துக்கொண்டு உட்காரலாம்.
அங்கே ஒரு நூலகம் செயல்படுவதாக அறிவிப்பு இருக்கிறது!
உண்மையா..
கடல் அலைகள் தான் சொல்ல வேண்டும்!
இந்த மணிமண்டபமும் திமுக ஆட்சியில்
அன்றைய முதல்வர் கலைஞர் தான் திறந்து வைத்தார். !
என்பதும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
இங்கே மணிமண்டபங்கள் கட்டுவது ஏன்?
அதனால் என்ன பயன்?
அதன் பராமரிப்பு செலவு எவ்வளவு?
அதைப் பயன்படுத்தி மணிமண்டபங்கள் கவனிக்கப்
படுகின்றனவா???!!
மணிமண்டபம் கட்டி விட்டால்
அந்த அரசு அந்த தலைவரைக் கொண்டாடுகிறது
என்று புரிந்து கொள்கிறோம். அதுதான் நேரடியாக வரும் புரிதல்.
ஆனால்
இங்கே எதுவுமே அம்மாதிரி இருப்பதில்லையே.
சிலை வை.
மணிமண்டபம் கட்டு.
இதோ பாருங்கள்..
நான் தான் இன்னாருக்கு சிலை வைத்தேன்
நான் தான் மணிமண்டபம் கட்டினேன்
என்று மணிமண்டபம் வாசலில் பளபளப்பான
பளிங்குத்தூணில் செதுக்கி வைத்து
அதை வரலாறாக்கி ..
யதார்த்தங்களின் பிசுபிசுப்பு காலில் ஒட்டும்
கறைகளைத் துடைத்துக்கொண்டும் துடைக்காமலும்
பயணிக்க பழகிக் கொள்ள வேண்டி இருக்கிறது.
90 வயது வரை வாழ்ந்த பிடல் காஸ்ட்ரோவின்
இறுதி ஆசை... எவ்வளவு அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
எந்த சிலைகளும் இல்லை என்பதால்
காஸ்ட்ரோவை க்யூபா மறந்துவிடவில்லை.

Wednesday, September 1, 2021

முண்டம் துடிக்கிறது.

 


கிரீடத்தின் ஒளிவீச்சு

கண் கூசுகிறது.

விளக்கை அணைத்து விடு.

தொந்தரவு செய்யும்

என் தலையைத் துண்டித்து

மேசைமேல் வை.

முடிந்தால்

ஒரு கருப்புத் துணியால் மூடி வை.


கேள்விகள் அற்ற இருள்வெளி

உன் ராஜாங்கத்தின் வெற்றிமுரசு.

இப்போதும்

கழட்டி விடாதே உன் கிரீடத்தை.

மேசையிலிருக்கும் தலைக்கு

உன் கிரீடம் பொருந்தாது.

உண்மைதான்.

பொருத்தங்கள் பார்த்தா

புணர்கின்றன கிரீடங்கள்!


துண்டிக்கப்பட்ட தலைக்கும் கூட

ஆசைகள் வரலாம்.

அப்போது உன் கிரீடத்திற்கு

ஆபத்தும் வரலாம்.

ஜாக்கிரதை.


துடிக்கின்ற முண்டத்தைப் பார்.

துடிப்பு அடங்கி விடுவதற்குள்

அருகில் வா.


கிரீடத்தின் கூர்மையான பற்களால்

முண்டத்தின்  காயத்தைக்

குத்திக்கிழித்து

ரத்தம் குடி

 பசி தீரவில்லையா

முண்டத்தின் மேலாடையைக்

 கிழித்து

தொங்கவிடு.

சீழ் வடியும் தொடை

நடுங்கிக் கொண்டிருக்கிறது.

அடுப்பில் சூடேற்று.

குடித்தக் குருதியைக்

கொப்பளித்து கொப்பளித்து

நெருப்பேற்று.

சீழ்ப் பிடித்த புண்களைக்

கொத்திக் கொத்தி

அழகுப்படுத்து.

அதிலிருந்து மலரும் புழுக்களை

படுக்கையில் சிந்தி விடாதே.

ஒவ்வொன்றும் தனித்தனி ருசி.

நாள்பட நாள்பட

புண்களின் ருசி அதிகரிக்கும்.


மறந்துவிடாதே

விடிவதற்குள் தலையை முண்டத்துடன் சேர்க்க.

இல்லையென்றால்

நீ வந்துப் போன அடையாளத்தை

துடைப்பது யார்?


ஹே..சென்னி மல்லிகார்ஜுனா

நான் நீ உயிர்

பிறவி துன்பம் பிரபஞ்சம்.

Monday, August 30, 2021

ராதையின் கண்ணன்

 ராதையின் நெஞ்சமே

கண்ணனுக்குச் சொந்தமே.



சிவ பார்வதி, ராமன் சீதை திருமண உறவுகளுக்கு எதிராக தாந்திரீகம் நிறுத்தி இருக்கும் உறவு கிருஷ்ணன் – ராதை.

ராதை ஏற்கனவெ திருமணமானவள்.

கிருஷ்ணனைவிட வயதில் மூத்தவள்.

அவளை இரவில் மட்டுமே அவன் சந்திக்கிறான் என்கிறது கீத கோவிந்தம்.


அவளோ வனம்.

அடர்வனம்.

மதுராவை நோக்கிய பயணத்தில் 

அவன் கடந்து சென்ற வனம் அவள்.

அவளை அவனோ

அவனை அவளோ

கட்டுப்படுத்தவில்லை!

அதுதான் அவர்கள் உறவின் தனித்துவம்.

கிருஷ்ணன் அதிகாரத்திற்கு வருவதற்கு முன் கிருஷ்ணன் என்ற மனிதனை நேசித்தவள் ராதை. அவன் புல்லாங்குழல் காற்றுக்கு இசையைக் கொடுத்தவள் ராதை. 

கிருஷ்ணனின் வாழ்க்கையில் ராதை மட்டும்தான் இசையாகவும் நடனமாகவும் இருக்கிறாள்.

அவள் அவனோடு மதுரா செல்லவில்லை.

அவள் அவளாகவே இருக்கிறாள்.

அவன் பயணத்தில் எதுவுமே வனமாகிவிடமுடியவில்லை.

வனத்தை எந்தக் கிருஷ்ணனும்  ஆளமுடியாது..


மனித உறவுகளின் ஆழத்தையும்

அதில் அமுக்கி வைக்கப்பட்டிருக்கும்

ஆசைகளையும்

யுகங்களின் காதலையும்

கட்டுக்கடங்காத காமத்தையும்

புனைவுகளின் ஊடாக மனிதன்

கட த்திக்கொண்டே இருக்கிறான் தோழி 

நேற்று கிருஷ்ணனுடன் ராதை 

இன்று அவனுடன் யட்சி.


கடலுக்குள் மூழ்கிவிட்ட து

அவன்  அரியணையின் மதுரா.

மணலடியில் புதைந்துவிட்டது

அவன் புல்லாங்குழல்.

வெண்சங்குகளைத் தேடுகின்றன

அலைகள். 

போதும்... அரியணைகளுக்கு

தண்டனை கொடுத்தது போதும்.

அந்த இரவுகள் இன்னும்

மிச்சமிருக்கின்றன.

மறந்துவிடாதே.

உன் வனத்தின் இலைகளை

கடலில் மிதக்கவிடு ..தோழி.

அவன் மீண்டும் வருவான்.

ஆலிலைக் கண்ணன் அல்லவா..

அவன்..!

Saturday, August 28, 2021

MP / MLA Local area development scheme

 உங்கள் தொகுதி உங்கள் வேட்பாளர்

உங்கள் பணம்…
எங்கே போகிறது?!!

தகவல் அறியும் சட்ட்த்தின் கீழ் விசாரித்தால்
நம் சட்டசபை நாடளுமன்றம் மேல் கீழ் எல்லோரும் நாணயமும் தரையில் உருளும்!

நம் நாட்டில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஒவ்வொரு ஆண்டும் சற்றொப்ப ரூ 5 கோடி கொடுக்கப்படுகிறது.
(இவர்களின் மாதச்ச்சம்பளம், அலவன்ஸ், பயணப்படி, போன் சார்ஜ் சலூன் சார்ஜ் எல்லாம் தனி, அது அவர்களின் கடின உழைப்பிற்கானது. அதைப் பற்றிப் பேசக்கூடாது)
தமிழ் நாட்டில் ஒவ்வொரு சட்டசபை உறுப்பினரும் பெறும் தொகை ரூ 2..25 கோடியிலிருந்து ரூ. 3 கோடியாக
அதிமுக எடப்பாடி புண்ணியத்தில் உயர்த்தியாகிவிட்ட து. !
இவர்கள் பெறும் பணத்திற்கு
MLA – LOCAL AREA DEVELOPMENT SCHEME
ஓராண்டுக்கு இவ்வளவு தொகை என்றால்
இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளுக்கு
5 X 5 = 25 Crores for MP
5X 3 + 15 Crores for MLA

முட்டையிலும் பருத்தியிலும் சாராயத்திலும் ஊழலைக கண்டுப்பிடித்து தங்கள் பிரச்சார மேடைகளில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் நம் அரசியல்வாதிகள்
இதைப் பற்றி ஒரு கூட்டு உடன்படிக்கை வைத்திருக்கிறார்கள்.
"அதாவது நீ என்னைப் பற்றிப் பேசாதே. நானும் கண்டு கொள்ள மாட்டேன்” என்று!

நரசிம்மராவ் 2 கோடி அறிவித்தார்.
மன்மோகன்சிங் ரூ 5 கோடி அறிவித்து இந்திய ஜனநாயகத்தை சந்தோஷப்படுத்தினார்.!!

இவர்கள் வாங்குகிற பணத்தை என்ன செய்கிறார்கள்? ஒரே குடும்பத்தில் இரண்டு மூன்று பேர் இருக்கிறார்கள். அடேங்கப்ட்பாளர் ரூ 1 கோடி செலவு செய்து ஏன் தேர்தலில் போட்டியிட முன்வருகிறார்கள் ? 15 கோடி / 25 கோடி கிடைக்கும் னு தான்!.
இந்த தொகைக்கு கணக்கு காட்டுவார்களா நம்ம ஆட்கள்!
இது அவுங்க வீட்டுப் பணமில்லைய்யா
உங்களோட என்னோட பணம்.
நம்மோட பணம்.
நமக்கானது என்றாவது
புரிந்து கொள்வோம்.
இந்த லட்சணத்தில் எதொ ஒரு தண்ணித்தொட்டி அல்லது நூலகம் இப்படி எதாவது திறந்துவிட்டால் தங்கள் பெயரைப் பொறித்து என்னவோ தங்கள் கை காசிலிருந்து செலவு செய்து புண்ணியம் செய்த மாதிரி இவர்கள் செய்கிற அலப்பறை தாங்க முடியல.
இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல.


காலப்போக்கில் புதிய ஜன நாயகம் ஒரு முதலாளித்துவ சமூகத்தின் இன்னொரு முகமாக இருக்கும்னு சொல்வது உண்மைதான்.
கணக்குத் தெரிந்தவர்கள்
ஒட்டு மொத்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
எவ்வளவு வாங்கினார்கள்
என்று வாய்ப்பாடு போட்டு கூட்டிப் பெறுக்கி
வரும் தொகையை எனக்கும் சொல்லுங்கள்.!
பிகு: கொரொனாவைக் காரணம் காட்டி இந்த
தொகையை நிறுத்தி வைத்திருக்கிறது அரசு

1

Thursday, August 26, 2021

குமுதம் - ஏர் இண்டியா விருதின் கதை

 

பலருக்கும் மறந்திருக்கும்.. ஒரு விருது அறிவிக்கப்பட்ட து.

ஆனால் அந்த விருதாளருக்கு அந்த விருது அவர்

எழுத்துகளுக்கான அடையாளமாக மட்டுமே இருந் த து.

விருது அறிவித்தவர்கள் “இந்த விருதாளர் ஏன் விருதின் பயன்பாடை அனுபவிக்கவில்லை என்று யோசிக்கவும் இல்லை,
அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவும் இல்லை!

விருதின் கதை :
1995 ஆண்டில் குமுதம் இதழும் ஏர் இந்தியா நிறுவனமும்
சேர்ந்து சிறந்த நாவல், குறு நாவல்,
சிறுகதை, கவிதைக்கான போட்டி அறிவித்தார்கள்.

நாவலுக்கு நியூயார்க் பயணம்
குறு நாவலுக்கு லண்டன் பயணம்
சிறுகதைக்கு சிங்கப்பூர் பயணம்
கவிதைக்கு கோலாலம்பூர் பயணம்..
இதில் கவிதை தேர்வில் என்னவெல்லாம் நடந்த து
என்பதை இம்மாத காக்கைச்சிறகினிலே இதழில் வேணுமாதவன்
“எழுத்து, சொல், பொருள் “ என்ற கட்டுரையில் எழுதி இருக்கிறார்.

முதல் பரிசு பெற்ற கவிதை ஆறாவயல் பெரி ய்யா எழுதிய
“தாராவிச் சித்திரம்” கவிதை.
இக்கவிதைக்கு முதல் பரிசு கொடுத்தே ஆகவேண்டும்
என்று போராடியவர்களில் முக்கியமானவர் தேர்வுக்குழுவில்
இருந்த கவிஞர் இன் குலாப் அவர்கள்.
ஆறாவயல் பெரிய ய்யாவின் “தாராவிச்சித்திரம்”கவிதை நூலுக்கு
எழுதிய அறிமுகவுரையில் இதைப் பற்றி விளக்கமாக
எழுதியிருக்கிறார் இன் குலாப் அவர்கள்.
இக்கவிதையை தேர்வு செய்த கவிஞர் இன் குலாப் அவர்கள்
முதன்முதலாக மும்பை வந்திருந்தப்போது –
(எழுத்தாளர் மன்ற துவக்க விழாவுக்கு ) அவர் பார்க்கவிரும்பிய இடம்
“தாராவி “
ஆறாவயல் எழுதிய தாராவியைப் பார்க்க வேண்டும் என்றார்,
கவிதைக்கு விருது பெற்ற ஆறாவயல் பெரியய்யா
கோலால்ம்பூர் செல்லவே இல்லை! அவr ஏன் செல்லவில்லை என்று
ஏர் இந்தியாவோ குமுதமோ விசாரிக்கவோ
கண்டு கொள்ளவோ இல்லை..!
ஆறாவயல் இதைப் பற்றி எனக்கு மின்னஞ்சலில் எழுதி இருக்கும்
பகுதியிலிருந்து ….

என்னிடம் பாஸ்போர்ட் இல்லை!
பாஸ்போர்ட் எடுப்பதற்கு குறைந்தது 500 ரூபாய் தேவைப்பட்டது!
தவிர, சுற்றுலாப் பயணி 500 டாலர்களுடன் செல்லவேண்டும்
என்பது இன்னொரு விதி. இதனை மனதில் கொண்டிருந்த நான்
"பரிசாகக் கிடைத்த சுற்றுலாப் பயணத்தை என்னால்
மேற்கொள்ள இயலவில்லை இந்த வெற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டுவந்தது. அது போதும்! " என்று பேட்டி கொடுத்திருந்தேன்.
இதை அறிந்த எங்கள் ஆசிரியர் "பாஸ்போர்ட்டை நான் எடுத்துத் தருகிறேன். நீங்கள் கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் போய் வாருங்கள்! உங்கள் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடுங்கள்! "ஊக்கப் படுத்தினார்
கணக்கு மேலாளரை அழைத்தார்
" ஐயாவுக்கு உடனே பாஸ்போர்ட்டுக்கு ஏற்பாடு செய்யுங்கள்! "என்றார்
தாராவிச் சித்திரம் கவிதையை நக்கீரனில் வெளியிட்டு, தானும் வாழ்த்தி, வாசகர்களின் வாழ்த்தையும் பெறவைத்தார் ஆசிரியர்!
மூன்றாம் நாள்.. எனக்கான, பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து
, என் கையொப்பங்கனையும் பெற்ற மேலாளர் "ம்....500 ரூபாயை கொடுங்கள்! "கேட்டார். குறுகிப் போனேன்
"ஒரு அஞ்சு நிமிஷம்! "கூறிவிட்டு என் இருக்கைக்குத் திரும்பினேன்!
யோசித்தேன்.
இந்த 500 ரூபாய்க்காக மீண்டும் முதலாளி முன்னால்
போய் நிற்க வேண்டுமா? அப்புறம் ஒரு 500 டாலருக்காக
யார்யார் கால்களில் விழ வேண்டியிருக்குமோ?
ஈதொன்றும் அடிப்படைத் தேவையல்லவே!
ஆடம்பரம் தானே! வேண்டாமே!
ஆமாம்... வேண்டாம்! "இந்த முடிவுக்கு வர எனக்கு மூன்று நிமிடங்கள் போதுமானதாக இருந்தது.
மீண்டும் மேலாளர் மேஜை முன்சென்றேன்
"ஸாரி சார்! வெளிநாடு போவதாக இல்லை!
எனக்கு பாஸ்போர்ட் அவசியமில்லை!
அதைத் தாங்க! "பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வாங்கினேன். கிழித்தபடியே என் இருக்கைக்கு திரும்பினேன்!
குப்பைக் கூடையில் போட்டேன்
மனசு லேசானது. எனக்கான வேலைகளைப் பார்க்கத் தொடங்கினேன்!”
கோலாலம்பூர் செல்லவிட்டால் என்ன?
இன்றும் உங்கள் “தாராவிச்சித்திரம்” எங்களுக்கு
எங்கள் குடிசையின் கவிதைகளுக்கு
உயிரூட்டிக் கொண்டிருக்கிறது.

#குமுதம்_ஏர்இண்டியா_விருது

#தாராவி_எழுத்தாளர்கள்_புதியமாதவி