Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Saturday, December 25, 2021

பிச்சி



 பிச்சி:

கருவறை இருளின் வெளிச்சத்தில்
திரி ஒன்று சுடரில் கரைகிறது.
அவள் கர்ப்பஹிரகத்திலிருந்து
தப்பித்து வெளியேறுகிறாள்.
அலைபாயும் விழிகளுக்கு நடுவில்
பெருநகரம் அசைகிறது.
காத்திருப்புகளின் வரிசையில்
நின்றவளைக் காணவில்லை.
சாலையோரத்து புத்தகவரிசையில்
ஓரமாக
அவன் விழிகளுக்காகவும்
விரல்களின் தொடுதலுக்காகவும்
மலர்ந்த பிச்சி..
ஜன நெரிசலில் உதிர்ந்துப்போனது
தெரியாமல்
குப்பைகளை அள்ளிக் கொண்டிருக்கிறது
பெரு நகரம்.
+++
அவளை உலகம் பைத்தியக்காரி என்று விளித்தது.
படித்தவர்கள் அதையே அவர்கள் மொழியில்
மனப்பிறழ்வு என்று அழைத்தார்கள்.
அவள் ஆடைகள் எப்போதுமே கிழிந்து தொங்கியது
இல்லை. அவள் கூந்தலில் சிடுக்குகள் இல்லை.
அவள் யாரிடமு கையேந்தி பிச்சை
எடுக்கவும் இல்லை. அவளைப் பார்க்கும்போது
கோவில் சிலை ஒன்று கர்ப்பஹிரகத்திலிருந்து
தப்பிவந்து நடுரோட்டில் வழித்தெரியாமல்
அங்குமிங்கும் அலைபாயும் விழிகளோடு
தவிப்பதுபோலிருக்கும்.

அவள் காலையிலேயே குளித்துவிட்டாள் என்பதை
அவள் முகமும் தோள்வரைப் புரண்டு காற்றில்
அசையும் கூந்தலும் காட்டும்.
எப்போதும் அவள் புடவையில்தான் இருப்பாள்.
புடவைக்கு மேட்சிங்கான ப்ளவுசும் உள்பாவாடையும்
அணிந்திருப்பதைக் கவனித்திருக்கிறேன்.
அவளும் நானும் எப்போதும் ஒரே நேரத்தில்
அந்த சிக்னலைக் கடந்திருக்கிறோம்.
ஒரு நாள் அல்ல,
சற்றொப்ப 10 ஆண்டுகள் தினமும்
காலையில் அலுவலகத்திற்கு முன்னால்
அந்த ஹைகோர்ட் திருப்பத்தில் இருக்கும்
சிக்னலை இருவரும் ஒன்றாகவே கடந்திருக்கிறோம்.
அதனால்தான் மற்றவர்கள் கவனிக்காதவற்றை
நான் கவனித்தேனா தெரியாது.

ஆரம்பத்தில் அவள் என்னுடன் சேர்ந்து கிட்டத்தட்ட
என்னருகில் வரும்போது சின்னதாக ஒரு பயம் வந்தது.
ஆனால் அவளைக் கண்டு பயம்கொள்ள
வேண்டியதில்லை என்பதை இரண்டொரு நாட்களில்
உள்மனம் உணர்ந்து கொண்டது.
அவள் உதடுகள் அசைந்து கொண்டே இருக்கும்.
அவள் யாரோடு பேசிக்கொண்டிருக்கிறாள் என்பதை
புரிந்து கொள்ள முடியும். அவள் தோளில் ஒரு லெதர்
பை தொங்கிக் கொண்டிருக்கும். அதில் புத்தகங்கள்
முகம் துடைக்கும் டவல் சில நேரங்களில் மதிய
உணவு டப்பா இப்படி எதாவது எட்டிப் பார்க்கும்.
அவள் அந்த சிக்னலை தினமும் வேகம் வேகமாக
கடந்து ஆபிஸ்க்கு ஓடிக்கொண்டிருக்கும் பெண்களில்
ஒருத்தியாக இருந்திருப்பாளோ..
அவளும் நானும் இப்படியாக
ஒரே நேரத்தில் சிவப்பு விளக்கிற்காக காத்திருந்து
ஓடிக்கொண்டிருந்தோம்.
அவள் ஒரு திசையிலும் நான் என் திசையிலும்.

10 ஆண்டுகளுக்குப் பின் எனக்கு செம்பூர் கிளைக்கு
மாற்றலாகியது. அதன் பின் 8 ஆண்டுகள் கழித்து
மீண்டும் மெயின் ஆபிஸ் வந்தப் பிறகு அவளைக் காணவில்லை.
அவளைக் காணவில்லை என்பதை
எங்கள் பரபரப்பான வாழ்க்கையில்
நினைத்துப் பார்க்க எங்களுக்கு நேரமில்லை.
அவள் யார்? வசதியான வீட்டுப் பெண்ணா?
தெரியவில்லை...
அவளை அடைத்து வைத்திருந்தால்
இன்னும் மோசமாகிவிடுவாள் என்று
அவளுக்கு விடுதலை கொடுத்தவர்கள்
மனசில் ஈரமிகுந்தவர்களாக இருக்க வேண்டும்.
அவள் எப்போதும் காலை 9 மணி முதல்
11 மணிவரை மட்டும் தான் அந்தப் பகுதியில்
தென்படுவாள். அதன் பின் அவள் தானே வீட்டுக்குப்
போய்விடுவாளாக இருக்கும். அல்லது யாராவது
அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுவார்களா
தெரியாது.

அதீத நம்பிக்கையை அடுத்தவர் மீது வைக்கும்போது
அதில் விழுந்துவிடும் கீறலில்
மனம் உடைந்துவிடுகிறது.
அவளுக்கும் இப்படியாக
எதோ ஒன்று நடந்திருக்க வேண்டும்.
அவள் சிக்னலைக் கடந்து
அந்தச் சாலையோரத்து புத்தகங்கள் பக்கமாக
வந்து நின்று கொண்டு
யாருக்காகவோ காத்திருப்பாள்.
அப்போது அந்த விழிகளை நேர்கொண்டு சந்திக்க
முடியாது. அதில் பக்கத்திலிருக்கும் அரபிக்கடலின்
அலைகள் மோதிக்கொண்டிருக்கும்.
நேரம் செல்ல செல்ல அவள் உடல் தளரும்.
அவள் உதடுகள் உறையும்.
அவள் மெளனத்தில் உறைபனியாகி ஒரு ஜடம்போல
திரும்புவதாக அந்தப் புத்தகங்கள் சொல்லும்.
அவளை எல்லோரையும் போல
நானும் மறந்துவிட்டேன்.
நேற்றிரவு அவள் எங்கிருந்தோ வந்தாள்.
நானும் அவளும் ஒன்றாக அதே சிக்னலைக்
கடந்தோம் . சிவப்பு விளக்கு பச்சைவிளக்காவதற்குள்
அவளைக் காணவில்லை.
அவள் முகத்தில் அவள் உடையில் அவள் நடையில்
அவள் உதடுகளின் அசைவில்.. நான்..
அதே சாலையோரத்து புத்தக வரிசையில்
ஓரமாக காத்திருக்கிறேன்.
யாருக்காக என்று தெரியாமல்!

Sunday, December 5, 2021

அறிவாயுதம் - ஜெய்பீம்


 


டிசம்பர் 06 (1956) பாபாசாகிப் அம்பேத்கரின்

நினைவு நாள்.

இன்று தாதர் சைதன்யபூமியில்
கூடுகின்ற கூட்டம் அரசியல்கட்சிகள்
அனைத்தும் இன்றுவரை அச்சத்துடன்
பார்க்கும் கூட்டம். காரணம் இவர்களுக்கு
ஒரே அரசியல் கொடி எல்லாம் கிடையாது.
ஒரே ஒரு ஈர்ப்புவிசையாக இருப்பவர்
பாபாசாகிப் அம்பேத்கர் .. அம்பேத்கர் மட்டும்தான்.
அதனால் தான் இன்று இந்தியாவிலிருக்கும்
அனைத்து கட்சிகளின் பாதாகைகளும்
சம்பந்தமே இல்லாமல் அம்பேத்கருடன்
பொய்யாக புன்னகைக்கும் போஸ்டர்கள்
தாதர் எங்கும் காட்சியளிக்கின்றன.
இங்கே திரளுகின்ற மக்களில்
சரிபாதியாக பெண்களும் இருக்கிறார்கள் என்பது
இன்னும் கூடுதல் கவனத்திற்குரியது.
தாதர் சைதன்யபூமி கோவில் அல்ல.
இங்கே வந்தால் போகிற இடத்திற்குப் புண்ணியமோ
அல்லது கேட்டவரமோ கிடைப்பதில்லை.
இங்கே ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு
கடைப்பரப்பி இருக்கும். ஒரு அம்பேத்கரிய புத்தகக் கண்காட்சி
என்று இதைச் சொல்லலாம். ஸ்டால் கிடைக்காதவர்கள்
சாலையில் ஒரு ப்ளாஸ்டிக் விரிப்பை விரித்து
அதில் புத்தகங்களைப் பரப்பி வைத்திருப்பார்கள்.
இங்கே விற்பனைக்கு வந்திருக்கும் புத்தகங்கள்
90% எந்த ஒரு புத்தகக் கடையிலும் கிடைக்காத
புத்தகங்களாக இருக்கும். பெரும்பாலும் மராத்தி,
இந்தி, ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருக்கும்
புத்தகங்களும் குறுந்தகடுகளும் ..
இந்தப் புத்தக அலைகளுக்கு நடுவில் இன்னொருவர்
புத்தகங்கள் ஆங்காங்கே வெண்தாடியுடனும்
கருப்புச்சட்டையுடனும் காணப்படும் காட்சி..
தந்தை பெரியார் ஒருவர் மட்டும்தான்.
அதைப் பார்க்கும்போது ஏற்படும் அனுபவம்..!
அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
மும்பை தமிழர்களுக்கும் புரட்சியாளர் அம்பேத்கருக்கும்
அவர் வாழ்ந்தக் காலத்தில் ஒரு இணைப்பு பாலமாக
தந்தை பெரியார் இருந்திருக்கிறார்.
பெரியாரும் அம்பேத்கரும் கலந்து கொண்ட தாராவி
நிகழ்வுகள் வட நாட்டில் பெரியார் என்ற புத்தகத்தில்
ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிராவிலிருந்து மட்டுமல்ல,
பீகார், மத்தியபிரதேசம். ஒரிஷா, உத்திரபிரதேசம்,
அசாம் , ஆந்திரா பகுதியிலிருந்து சைதன்யபூமிக்கு
வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது.
இந்த ஆண்டும் மும்பை மாநகராட்சியும் அரசும்
பலத்த முன்னேற்பாடுகளுடன் எதிர் நோக்கி
இருப்பதைச் செய்திகள் சொல்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் சைதன்யபூமிக்கு சத்தமில்லாமல்
போய்விட்டு வருவேன். அந்தச் சில மணி நேரங்கள்
என்னை “”ரீசார்ஜ்” செய்து கொள்ள எனக்கு
உதவி இருக்கின்றன.
நேற்று நானும் அர்ஜூன் டாங்களேவும்
எப்படியாவது தாதர் போய்விட ஒரு திட்டம் போட்டோம்.
இரண்டு வீட்டாரும் கொரொனாவைக் காட்டி
எங்களைச் சிறைவைத்திருக்கிறார்கள்.!!!
(House arrest)
தப்பித்து வெளியேற முடியுமா?
தெரியவில்லை!
கொரொனாவின் பெயரால் இன்னும்
என்னவெல்லாம்தான் அனுபவிக்க வேண்டுமோ?

Thursday, December 2, 2021

அம்மாவின் காதலன்(ர்)

 அம்மாவின் காதலன்(ர்)

அப்பாவின் காதலி அல்லது காதலியர் குறித்து

எழுதுவதும் பேசுவதும் எளிது மட்டுமல்ல,

கொஞ்சம் கவித்துவம் கலந்து பெருமைக்குரியதாக

மாறிவிடுகிறது. அப்பாவின் காதலும் காதலியரும்

பிள்ளைகளுக்கு விருப்பமானவர்களாக இருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக அப்பாவின் காதலியர் காதலியராக

மட்டுமே இருப்பதால் சொத்துப்பிரச்சனை எழுவதில்லை.

இதில் அப்பாவின் “சின்னவீடுகள் “ விதிவிலக்கு.

அங்கே சொத்துப்பிரச்சனை , வாரிசுப்பிரச்சனை வந்துவிடுவதால்

அதை விட்டுவிடுங்கள்.


அப்பாவின் காதலியரை ஏற்றுக்கொள்ளும் பிள்ளைகளுக்கு

அம்மாவின் காதலனை மட்டும் ஏற்க முடிவதில்லை!

அம்மா என்ற கட்டமைக்கப்பட்ட பிம்பத்திற்கு

அம்மாவின் காதலன் ஒரு வில்லன் மாதிரி தெரிகிறான்.

எனக்குத் தெரிந்து அம்மா இறந்தப்பிறகு அப்பாவுக்கு

மறுமணம் செய்து வைத்த பிள்ளைகள் பலர் உண்டு.

இதில் சுய நலமும் இருக்கிறது ..( வயதான காலத்தில்

கிழவனுக்கு யார் பணிவிடை செய்வது?)

அம்மாவுக்கு..?

எனக்குத் தெரிந்து ‘புதியபெண்ணியம்” இதழ் நடத்திய

தோழர் லலிதா அவர்களுக்கு அவர் பிள்ளைகள் ஒரு

வாழ்க்கை துணைவரைத் தேட முயற்சி செய்தார்கள்.

அதுவும் நடக்கவில்லை!

அப்பாவின் காதலியர் .. அப்பாவின் மறுமணம்

மகிழ்ச்சியாக மட்டுமல்ல, புரட்சியாகவும்  இருக்கிறது.

அம்மாவின் காதலர் , அம்மாவின் மறுமணம்

நெருடலாகத்தான் இருக்கிறது.

@@@

என் சிறுகதை தொகுப்பு “பெண்வழிபாடு”

அதில் “அம்மாவின் காதலன்” என்று ஒரு சிறுகதை.

முதலில் அந்தப் புத்தக தொகுப்புக்கு  நான்

“அம்மாவின் காதலன்(ர்) “ என்ற தலைப்பை தான்

தெரிவு செய்திருந்தேன். புதியமாதவியின்

“அம்மாவின் காதலன்’ என்று சொல்லிப்பார்த்தேன்.

என் புரட்சி முகம் விழித்துக்கொண்டது.

பெயரை மாற்றிவிட்டேன். “பெண்வழிபாடு” என்ற

தலைப்பில் அப்புத்தகம் வெளிவந்தது.

இப்படித்தான் அம்மாவின் காதலும்

“பெண்வழிபாடு” என்ற வெளிச்சத்தில் காணாமல்

போய்விடுகிறது.

பாவம்.. என் அம்மாக்களும்.

அவர்களின் மனம் கவர்ந்த 

அம்மாவின் காதலன் (ர்)களும்.


Monday, November 22, 2021

சாதி கெட்டப்பயலே..


சாதி கெட்டப்பய..
சாதி கெட்டச் சிறுக்கி
இவை செம்மொழி தமிழ்ச்சமூகத்தின்
வசைமொழிகள்.
சாதிக் கெடுவது நல்லதுதானே.
சாதியற்று இருப்பது பெருமைதானே.
சாதி அடையாளம் தொலைப்பது
மனித மாண்புதானே!
அது எப்படி உங்கள் மொழியில்
வசைமொழியானது?!!

அப்பன் பெயர் தெரியாமல் இருப்பதைவிட
கேவலமானதும் கீழானதும்
ஒருவன்/ ஒருத்தி சாதிக் கெட்டு இருப்பது.
குடும்பமில்லாமல் வாழ்ந்துவிடலாம்.
சாதிசனமில்லாமல் வாழமுடியாது
என்பதற்கான இன்னொரு விதியாக
இவை செயல்படுகின்றன.
குடும்பம் சாதியைக் காப்பாற்றிக்
கொண்டிருக்கிறது.
சாதி , குடும்ப நிறுவனம் உடையாமல்
பாதுகாக்கும் சக்தியாக செயல்படுகிறது.
என் பிள்ளைகள் திருமணத்தின் போதுதான்
சாதி எவ்வளவு முக்கியம் என்பதை
நான் ஒத்துக்கொண்டேன்.
சாதி பெரியவினையாற்றியது.
இச்சமூகம் எதிர்ப்பார்க்கும் வெள்ளைத்தோல்
இச்சமூகம் எதிர்ப்பார்க்கும் இலட்சத்தில்
மாதவருவாய்
இச்சமுகம் எதிர்ப்பார்க்கும் நடை உடை
ஆனால் சாதி ..?
அதை எதைக்கொண்டும் கடந்துவிட முடியாது
என்பதை முகத்தில் அறைந்து
என் போன்ற முட்டாள்களுக்குப்
பாடம் கற்பித்த
தமிழ்ச்சமூகம் இது.
புரட்சி பேசிய தோழர்கள்
குடும்பம் குடும்பத்திலிருக்கும்
மனைவி அம்மா அப்பா அண்ணன்
பங்காளி…
இவர்கள் ஏற்கவில்லையே என்று
காரணம் சொன்னபோது
சாதிக்கு புதுவடிவம் இருக்கிறது
என்பதை நான் புரிந்துகொண்டேன்.
அது இப்போதெல்லாம் ரொம்பவும்
நுணுக்கமாக செயல்படுகிறது.
அது ஊமைக்காயங்களை ஏற்படுத்துகிறது.
ரத்தம் சொட்டும் காயங்களைவிட
நீங்கள் செய்யும் கொலைகளைவிட
அது இன்னும் அதிகக் கொடூரமானது.
அது எப்படி இருக்கும் என்பதை
உங்கள் புரட்சியின் எந்தப்புத்தகமும்
கற்பித்துவிட முடியாது.!
தங்களைப் புரட்சியாளர்களாக காட்டுவதற்கு
சிலர் “ நான் புதியமாதவி வீட்டிலெல்லாம்
சாப்பிட்டிருக்கிறேன்.. “ என்று சொல்லும்போது
என் விடியல்கள் விழித்துக்கொள்கின்றன.
உங்கள் நட்பை ஒரு காகிதப்புன்னகையில்
கடந்துவிட முடியாமல்
இருண்டு போகிறது எம் முகம்.
என் வாழ்நாளில் இன்றுவரை
எனக்குச் சாதிச்சான்றிதழ் இல்லை.
என் பிள்ளைகளுக்கும் இல்லை.
சாதியற்று சாதிக்கெட்டு வாழ நினைத்தேன்.
வாழ்ந்துப் பார்த்தேன்.
ஆனால்…
நீங்கள் யாரும் அப்படி என்னை
வாழவிடவில்லை.
எனக்கு மட்டுமல்ல
என் எழுத்துகளுக்கும் நீங்கள் சாதி
அடையாளத்தை நிறுவ
இன்றுவரை கடும் முயற்சி செய்கிறீர்கள்..
எம் சாதிசனம் என்று எழுதியதில்லை,
எம் மக்கள் என்று எழுதும்போதெல்லாம்
எல்லாவகையிலும் வசதியற்று ஒடுக்கப்பட்டு
உழைத்து வாழும் எம் “தாராவி” சனங்களை
என் படைப்புலகமாக்கினேன்.
தாராவி குடிசை பார்ப்பனர் தவிர
அனைத்து சாதி மதமும் வாழுமிடம்
என்பதைக்கூட அறியாதவர்கள்
நீங்கள் மட்டுமல்ல..
இந்த அறிவு ஜீவிகளும் தான்.
இல்லை என்றால்
தாராவியை அவர்கள் ஏன்
“ஆசியாவின் சேரி” என்று
அடையாளப்படுத்துகிறார்கள்??
ஒரு பெண்ணாக இருப்பது மட்டுமல்ல
சாதிகெட்டுப்போயிருப்பதன்
வலியும் வேதனையும்
என்னவென்று தெரியுமா உங்களுக்கு?
நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன்.
எழுத்திலும் வாழ்க்கையிலும்.
வழக்கம்போல இப்பதிவையும்
நீங்கள் நின்று கொண்டிருக்கும்
சாதிப்பூமியில்
நான் யார்ப்பக்கம் நிற்கிறேன்
என்பதற்கான முன்னுரையாக
சிறுமைப்படுத்தி விடாதீர்கள்.
இதோ..
ஒரு பெண்ணாகவும்
சாதிகெட்டவளாகவும்
உங்கள் சாதிமுகத்தின் மீது
காறி உமிழும் எம்
“த்தூ”

இப்போது… முடிந்தால்
உங்கள் முகத்தை
உங்கள் மனசாட்சியின்
கைக்குட்டையை எடுத்து
துடைத்துக் கொள்ள முடிகிறதா பாருங்கள்.

Sunday, September 12, 2021

பேருந்துகளில் விரசமாகும் காமத்துப்பால்

 பெண்ணியம் பேருந்தில் பயணிப்பதில்லையோ??!

திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு மீண்டும் அரசு பேருந்தில்
பயணிக்கும் அனுபவம் கிட்டியது. திருக்குறளை
அசைப்பிரித்து எழுதுகிறேன் என்று சொல்லிக்கொண்டு
புதுசாக எழுதப்பட்டிருக்கும் திருக்குறளை
இவ்வளவு காலமும் சுமந்து கொண்டு
என் முப்பாட்டன் வள்ளுவனே காமெடி மாதிரி
ரசித்துக்கொண்டிருக்கும்போது நானும் அவரைப் போலவே
அதை வாசித்துவிட்டு சிரித்துவைத்தேன்.
தமிழகத்தில் அரசு பேருந்துகளில்
திரையிசைப் பாடல்கள் ஒலிக்கின்றன.
பயணத்தில் இசையும் பாடலும் எல்லா நேரங்களிலும்
எல்லோருக்கும் ஒத்துவராது, அதாவது ஒவ்வொருவரும்
ஒவ்வொரு மன நிலையில் பயணிப்பார்கள். அதைப் பற்றி
எல்லாம் கவனமின்றி மிகவும் சத்தமாக பாடல் ஒலிக்கிறது.
இதைப் பற்றிய ஓர்மையை நாம் இழந்துவிட்டோம்.
சரி இதை விடுங்கள்.
என் பயண அனுபவத்தில் என் காதுகளை ear phone
வைத்து மூடிக்கொண்டேன்.

ஆண் பெண் குரல் .. முயங்கி மயங்கி முக்கி முணங்கி..
இன்னும் என்னவெல்லாமோ .. சேஷ்டைகளுடன் பாடல் ஒலிக்கிறது..
சத்தமாக..
தமிழ்த் திரையிசைப்பாடல்கள்
எப்படி வேண்டுமானாலும் எழுதப்படட்டும் ..
ஆனால் ஒரு பொது இடத்தில் இம்மாதிரியான பாடல்களை
சத்தமாக ஒலிப்பரப்பிக்கொண்டு பயணிக்கும்
அருவெறுப்பை... என் தமிழ்ச்சமூகமே.. எப்படி
சகித்துக்கொள்கிறாய்? !!
ஏன் தமிழ்ப் பெண்ணியம் இந்தப் பயணத்தின்
அருவெருப்பை கண்டுகொள்ளவில்லை.
ஒருவேளை.. பெண்ணியம் பேசுபவர்கள் யாரும் பேருந்தில் பயணிக்கவில்லையோ??!!
இசை.. இனிமையானது.
ஆனால் அதையும் முகம் சுளிக்க வைத்து
உடல் கூச வைத்து அருவெருப்புடன்
காதை மூடிக்கொள்ள வைத்து.. இவை எதுவுமே
பாதிக்காத எருமைத்தோலுடன்., .. வாழப்பழகிவிட்டீர்களா!
(என் எருமைகள் மன்னிக்க வேண்டும்)
இசைக்கருவிகளின் மெல்லிய இசையை
ஒலிக்க விடுங்கள். திரை இசைப்பாடல்களிலும்
சகிக்க முடியாத விரசமான பாடல்களைத் தவிருங்கள்.
ப்ளீஸ்..

#தமிழ்நாடு_அரசுப்போக்குவரத்துதுறை
#TNSTC

Saturday, April 3, 2021

இலண்டன் - திரள் சமூக கலை இலக்கிய குழுமம்.

இலண்டன்  - திரள் சமூக கலை இலக்கிய குழுமத்தின்

பார்வைக்கு:




வணக்கம் நண்பர்களே.

உங்கள் விசித்திரமான அணுகுமுறை தான் என்னை இதை எழுத வைத்திருக்கிறது, இதற்காக , நான் மிகவும் வருந்துகிறேன். காரணம்

அழைப்பிதழில் பெயர் போட்டு அந்த நிகழ்வில் நான் கலந்து கொள்ளவில்லை என்ற முதல் நிகழ்வாக உங்களின் நேற்றைய

நிகழ்வு அமைந்துவிட்டது.

     27/3/21 திட்டமிடப் பட்ட உங்கள் நிகழ்வு “பிரதிகளின் மொழி அரசியல்”

மிகவும் அருமையான மிகச்சிறந்த தலைப்பு. திட்டமிடப்பட்டபடி அன்று நிகழ்வு நடக்கவில்லை என்று அறிகிறேன். அது உங்கள் அமைப்பு சார்ந்த பிரச்சனை. அதில் நான் எதுவும் சொல்வதற்கில்லை. அதே நிகழ்வு அதே தலைப்பில் 3/4/21  நேற்று நடைபெற்றிருக்கிறது. வாழ்த்துகள்.

 ஏப்ரல் 01 காலையில் சுவிஸ் ஊடறு றஞ்சி அவர்கள் என்னைத் தொடர்பு

கொண்டு 03 ஆம் தேதி பேச முடியுமா என்று கேட்டவுடன் நானும் இசைவு கொடுத்தேன். அதன் பின் நிகழ்வு இருக்கிறதா இல்லையா என்பதை

இருமுறை நானே றஞ்சியுடன் தொடர்பு கொண்கு கேட்டுக்கொண்டிருந்தேன். அழைப்புதழ் தயாராகிறதாக சொல்கிறார்கள் என்று அவரும் அவருக்கு

கிடைத்தச் செய்தியை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

ஆனால் நிகழ்வு நடக்கும் 03/4/21 நேற்று காலை 10.39 மணிக்கு றஞ்சி

எனக்கு அழைப்பிதழ் அனுப்புகிறார். மாலையில் நடக்கும் நிகழ்வுக்கு

காலையில் தான் அழைப்பிதழ் அனுப்பி உறுதி செய்யப்பட்ட து.

இதில் றஞ்சி மீது எனக்குத் துளியும் வருத்தமில்லை.

     றஞ்சி என்னைத் தொடர்பு கொண்ட து கெளரி பாராவின் வேண்டுதலால். இதுவும் ஓகே. ஆனால் கெளரி பாராவுக்கு வாசன்

அவர்களுக்கோ ஏன் திரள் குழுமத்திற்கு நான் புதியவள் அல்ல. ஏற்கனவே

அவர்கள் அழைத்து 31 அக்டோபர் 2020 ல் நடந்த நிகழ்வில் நான் கலந்து

கொண்டிருக்கிறேன். அப்போது வாசன் தான் என்னை நேரடியாக

தொடர்பு கொண்டு கால அவகாசம் கொடுத்து நட த்தினார்.

அப்படி இருந்தும் திரள் அமைப்பிலிருந்து யாரும் என்னைத் தொடர்பு

கொண்டு நிகழ்வை உறுதிப்படுத்தவில்லை. காலையில் வாசன்

அனுப்பி இருந்த உள்பெட்டி மெசஞ்சர் செய்தி மாலையில்  நான்

பார்த்துவிட்டு கடந்து செல்வதை தவிர வேறு வழி?

  நீங்கள் அதிமுக்கியத்துவம் கொடுத்து அழைக்கவில்லை என்று நான்

ஆதங்கப்படவில்லை. ஆனால் 24X7 நாங்கள் ஓய்வாக இருப்பதாகவோ

அல்லது நீங்கள் எப்படி எந்த முறையில் அழைத்தாலும் ஓடோடி

வந்துவிடுவோம் என்றோ உங்கள் “மவுனமொழியின் பிரதி அரசியல்”

உணர்த்தியது. சகமனிதரை எப்படி நட த்துகிறோம் என்பது தான்

பிரதி நிதியின் சமூக அரசியல். எந்தக் கடவுச்சீட்டும் அதை தீர்மானிப்பதில்லை.

     பிரதிகளின் மொழி அரசியல் < பிரதி நிதிகளின் மவுன மொழி

அரசியலாக மாற்றியதில் நீங்கள் சொல்ல விரும்பியது என்ன?

ஏன்?

     நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு என் வாழ்த்துகளும் அன்பும்.

நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்ற வருத்தமில்லை எனக்கு. ஆனால்

அதை இப்படி வெளிப்படுத்த வேண்டிய சூழலுக்காக வருந்துகிறேன்.


   

Saturday, November 7, 2020

கவிஞரின் மனைவியும் கவிஞரின் கணவரும்..

 கவிஞரின் மனைவி VS... கவிஞரின் கணவர்..

"கவிதை எழுதுகிற பொண்ணு
குடும்பத்திற்கு லாயக்கில்லை....."

ஒரு கவிஞரின் மனைவி .மனம் திறந்து பேசிவிட முடிகிறது.
உதிர்ந்த சொற்களுக்கு நடுவில் ஓராயிரம்
அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன.
வாழ்க்கை, காதல், குடும்பம், எதிர்ப்பார்ப்பு
இத்தியாதியாக பலவற்றில் ஏமாற்றம் அடையும்
மனைவி..
ஆனாலும் கவிஞர் என்றால் அப்படித்தான்
இருப்பார்கள் என்று பொது ஜன உளவியல்
ஏற்றுக் கொள்கிறது..

ஆனால் கவிஞரின் கணவர்.. பேசட்டும்..
இதுவரை யாரும் பேசியதாகத் தெரியவில்லை.
பேசப்பட்டதெல்லாமே வெளியில் வரும்போது
செய்து கொள்ளும் அலங்காரத்தை ஒத்தவையாக
இருந்தன. இருக்கின்றன...
மற்றவர்களைப்பற்றி சொல்வது .. வம்பு. வழக்கு.
என்னைப் பற்றி..?!!!
நானும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்
என்ற வகையில் இதை எழுதியாக வேண்டும்.
"நான் எழுத்தாளர் என்பதில்
என் உறவுகள் யாரும்
பெருமை பட்டுக்கொண்டது இல்லை.
(ஒருவேளை பெருமைப்படும் இடத்தை அடையவில்லையோ என்னவோ !)

கணவர் பிள்ளைகள் உடன் பிறந்தவர்கள்
இப்படியாக எல்லோரும் இதில் அடக்கம்.
மேலும்...
"கவிதை எழுதுகிற பொண்ணு
குடும்பத்திற்கு லாயக்கில்லை ,,
கவிதை எழுதரதெல்லாம் உருப்படாது "
என் எழுத்துமுனையை முறித்த
முதல் எதிர்வினைகள்
வீட்டிலிருந்து தான் கிளம்பின.

புதியமாதவி என்ற பெயரில்
இயற்பெயரை மறைத்துக்கொண்டு
என் முகத்தை என் அடையாளத்தை மறைத்துக் கொண்டு ...
சில வருடங்கள் கடந்திருக்கின்றன...
தெரிந்தப் பிறகு....
.ஜனரஞ்சக இதழ்களில் எழுதி
பேரும் புகழும் கிடைத்திருக்கிறதா..
இதெல்லாம் என்ன எழுதிக்கொண்டிருக்கிறது என்ற
விமர்சனம் இப்போதும்.. என்னைச் சுற்றி...
குடும்பம் என்ற நிறுவனத்திற்குள் இருந்து கொண்டு
எழுதிய ஒரு பெண்ணின்
அரசியல் இலக்கியப் பயணமாக
நானும் என் எழுத்துகளும்...
சொல்லாமல் எழுத்துகளுக்கு இடைவெளியில்
உதிர்ந்திருக்கும் வாழ்க்கையின் பெருமூச்சுகள்
இயலாமை போராட்டங்கள் .. எதிர் நீச்சல் ,
சின்ன சின்ன நம்பிக்கைகள்... நண்பர்கள்...
அரசியல்.. முரண்பாடுகள்..
எல்லாமும் சேர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது
ஒரு பெண்ணின் எழுத்துலகம்.
ஆணுக்கு இதெல்லாம் இருப்பதில்லை.
ஆண்... அவன் கவிஞன் என்றால் விதிவிலக்கானவன்.
பெண் கவிஞர் என்றால் உருப்படாதவள்.
ஆண் எழுத்தாளன் என்றால் போற்றுதலுக்குரியவன்.
பெண் எழுத்தாளர் என்றால் உருப்படாதவள்.
ஆண் எழுத்துக்கு அவன் மனைவி குடும்பம்
அவன் உடன்பிறப்புகள், அவன் பெற்றோர் அவன் வீடு
அவன் நண்பர்கள் அவன் உலகம்.. எல்லாமும்
வெளிச்சம் தருகிறது.
பெண் எழுத்துக்கு... ..???
மங்கிய விளக்கொளியில் அவள் விரல்கள்
இப்போதெல்லாம் கணினியின் தட்டச்சு எழுத்துகளை
இருளிலும் அடையாளம் கண்டு கொள்கின்றன.
அவள்... யாருடையை நேரத்தையும் எடுத்துக்
கொள்வதில்லை. அவள் தனக்கான நேரத்தை...
இதோ..எல்லோரும் தூங்கிக்கொண்டிருக்கும் போது
யாருக்கும் தொந்தரவு இல்லாமல் ... எழுதப் பழகிக்
கொள்கிறாள்...
அவளிடம் விளக்கம் எதுவும் கேட்டுவிடாதீர்கள்..
இந்த 25 வது மணி நேரத்தின் உயிர்ப்பில் தான் அவள்
ஒவ்வொரு நாளின் 24 மணி நேரத்தையும்
கடந்து வந்து கொண்டிருக்கிறாள்...
அவளுக்காக தயவு செய்து யாரும் பரிதாபப்படவோ
ஆறுதல் சொல்லவோ வேண்டாம்.
அவள் அதை விரும்புவதில்லை.
அவள் தன் சுயத்தை
தன் எழுத்தை
யுகங்களாக இப்படித்தான்
கடத்தி வந்துக் கொண்டிருக்கிறாள்...

#பெண்_எழுத்து