Friday, May 24, 2013

முலைச்சிப் பறம்பு




ஏப்ரல் மாதம் வந்துவிட்டால் வங்கிகளுக்கு ஓடி 15G அல்லது 15H படிவங்களைப் பூர்த்தி செய்துவிட்டு நமக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக
இருக்கும் வங்கி கணக்குகளை அரசாங்கத்தின் வருமான வரி PAN எண்ணுடன் இணைத்திருப்பதால் ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் காட்டி நல்லதொரு
இந்தியக் குடிமகனாக இருப்பதை ஒவ்வொரு வருடமும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறோம்.
இந்த வருமான வரிகள் எல்லாம் நம்மைப் போல மாத வருமானம் பெறும்
நடுத்தர வர்க்கத்தினருக்கானதாகவே இன்று இருக்கிறது.
அடிக்கடி பத்திரிகைகளில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நட்சத்திரங்களும் கோடிக்கணக்கான அமெரிக்க டாலரில் லாபம் காணும்
கார்ப்பரேட் முதலைகளும் வைத்திருக்கும் வரிபாக்கி பட்டியல் வரும், போகும்,
வரும் போகும்.. வருவதற்கும் போவதற்கும் நடுவில் என்ன நடக்கிறது?
சரி, விட்டுத்தள்ளுங்கள். இப்போதைக்கு நம் நாட்டில் நாம் கட்டும் வரி
நம் மூதாதையர்கள் கட்டிக் கொண்டிருந்த வரிகளுடன் ஒப்பிடும் போது..
எவ்வளவொ பரவாயில்லை என்று பெருமூச்சு விட்டு ஓரளவு நம்மை
நாமே மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ளலாம்.

ஜப்பானில் 1590களில் தங்கள் விளைபொருள்கள் அனைத்தையும் பண்ணையாருக்கே உழைப்பவர்கள் கொடுத்துவிட வேண்டும் என்பது சட்டம்.
பண்ணையாரே பார்த்து, பொழைச்சுப் போகட்டும் என்று ஏதாவது
தன் பண்ணைத் தொழிலாளிக்கு கொடுத்தால் அதுவே அவனுக்கு
கிடைத்த பெரும்பேறாக கருதப்பட்டது.

சியாம் நாட்டில், அதாவது இன்றைய தாய்லாந்தில் 1899 வரை உழைக்கும்
விவசாயிகள் ஓர் ஆண்டுக்கு குறைந்தது 3 மாதமாவது தங்கள் அரசனுக்கு
மட்டும் உழைக்க வேண்டும். இதில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி
அதிகமானதால் இந்த முறையை மாற்றி விட்டு கடுமையான வருமான வரியை வசூலித்தார்களாம்.

யுஸ்பிக்கிஸ்தானில் (UZBEKISTAN) 16 ஆம் நூற்றாண்டுவரை திருமணம் செய்து
கொள்வதற்கே கடுமையான வரி விதித்தார்களாம். இது யாரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக விதிக்கப்பட்ட வரி அல்ல. மனிதர்களுக்குத் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கவே முடியாது என்பதால் (விதிவிலக்குகளை விட்டுத்தள்ளுங்கள்!) இப்படி ஒரு வரிவிதித்து
தங்கள் கஜானாவை நிரப்பிக்கொண்டதாம் அரசாங்கம். பிறகென்ன?
1543ல் இச்சட்டத்தை தடை செய்துவிட்டார்கள், காரணம் அது இசுலாமிய
விதிகளுக்கு முரண்பட்டது எனக் கருதியதால்.

1365 முதல் 1825 வரை ஓட்டமன் பேரரசில் 12 வயதுக்கு மேல் 60 வயதுக்குட்பட்டவர்களையே வரியாக வசூலித்தார்கள் அரசு அதிகாரிகள்.
நல்லக் கட்டுமஸ்தான் ஆண்களை ஊர் ஊராக வந்து பிடித்துக் கொண்டு போய்
சுல்தானின் சொத்தாக்கினார்கள். பெரும்பாலும் சுல்தானில் படைப்பிரிவில்
சேர்த்தார்கள்

இந்த எல்லா வரிகளையும் விட கொடுமையான வரிகள் விதிக்கப்பட்ட
ராஜ்யம் கடவுளின் தேசம் என்றழைக்கப்பட்ட திருவாங்கூர் சமஸ்தானம் தான்.
தலைவரி என்று 16 வயது முதல் 60 வயது வரை ஆட்களின் தலைகளை எண்ணி ஈழவர்களிமிருந்தும் சாணார்களிடமிருந்தும் வசூலிக்கப்பட்ட ஓராண்டு
வரித்தொகை சற்றொப்ப ரூபாய் 88,044/

தீண்டத்தகாத தாழ்த்தப்பட்ட சாதிப்பெண்கள்மீது திணிக்கப்பட்ட உடை பற்றிய கட்டுப்பாடுகள் பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறலாகயிருந்தது. கடுமையான ஆணாதிக்க மரபானது அவர்ண சாதிப்பெண்களை ஆபாசப்படுத்தி அவர்களை இடுப்பிலிருந்து முழங்கால்வரை மறைக்கும் "முண்டு'' என்ற முரட்டுத் துணியைத்தான் சுற்றியிருக்க வேண்டும் என கட்டுப்படுத்தியிருந்தது. அவர்களை அரை நிர்வாணிகளாக்கியது.

சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்மக்களை, ஆதிக்கச் சாதிப்பெண்களிடமிருந்து பிரித்து, உடனடியாக அடையாளம் தெரியும் வகையில் அவர்கள் மார்பகங்களைக் காட்டிய வண்ணமே நடமாட நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். அவர்ண சாதிப்பெண்ணுக்கு அவளது சவர்ண சாதி எஜமானன் ஆண்டுக்கொருமுறை ஒன்று அல்லது இரண்டு முண்டுகள் கொடுப்பான். காலையிலிருந்து அந்தி சாயும்வரை வெயிலிலும், மழையிலும், குளிரிலும், நீரிலும் நின்றுகொண்டுகளை பறிப்பதாலும், நாற்று நடுவதாலும், ஒரே துண்டுத் துணியை நாள்தோறும் ஒரு அறுவடையிலிருந்து மறு அறுவடை வரை உடுத்துவதாலும் இந்தப் பெண்கள் அழுக்கடைந்தவர்களாக செயற்கையாகவே ஆக்கப்பட்டார்கள்.

தாழ்த்தப்பட்ட சாதிப்பெண்கள் தாங்கள் அடிமைப்பெண்கள் என்று அடையாளப்படுத்த கல், கண்ணாடி, இரும்பு, தகரத்திலான அணிகலன்களையே அணிய நேரிட்டது. (அடிமைகளின் தலைவர் அய்யன்காளி, பக்கம்:96)

"திருவிதாங்கூரில் வரிவிதிப்பு முறைமைக்கணங்கள், உலக நடப்பில் வேறெங்கும் கேள்விப்படாத, நடந்திராத வகையில் கேவலங்களை உள்வாங்கிக் கொண்டு உறைந்து கிடந்தது. சட்ட ஒப்பனைகளோடு அம்பலம் ஏறிய வரிவிதிப்புப் பட்டியலில் நிமிர்ந்த தலைகளும் வளர்ந்த முலைகளும் கூட இடம் பெற்றிருந்தது. கேவலங்களின் வெட்கம் அறியாமல் வெளிப்பட்ட, கண்மூடித்தனமாக சுரண்டும் கைங்கரியமாகிப் போன வரிகளின் பொருளடக்கத்தில் மிதமிஞ்சிய வல்லடித்தனமும் வக்கிரமும் சாதி ஆதிக்க குறியாட்டத்தின் இலக்கணமாகியிருந்தது. தங்கள் உறுப்புகளுக்கும் வரிகொடுக்கும் நிலைமைக்கு ஊழியச்சாதி-அடிமைச்சாதி பெண்களும், ஆண்களும் ஆளாக்கப்பட்டார்கள்." என்று பதிவு செய்திருக்கிறார்
எஸ்.பி. வள்ளிநாயகம்.

 வரிவசூல் வேட்டையும் மூர்க்கங்களின் உச்சமான சாட்சியங்களாக இருந்தது. வரிவசூல் வேட்டை நாய்களின் தொல்லை தாங்கமுடியாதநிலை ஏற்பட்டதில், சேர்த்தலையைச் சேர்ந்த ஒரு ஈழவப்பெண் போராளியானாள்.




 ஆழைப்புழை மாவட்டத்தில் சேர்த்தளை கிராமத்தில் வாழ்ந்த நன்செல்லி என்ற ஈழவப்பெண்  மார்பை துணியால் மறைத்துக் கொண்டாள். இதைக் கேள்விப்பட்ட முலைவரி வசூலிக்கும் அரசு அதிகாரிச்
அவளிருப்பிடம் தேடி வந்து வரி கேட்டார். அவளும் முலைவரி கொடுக்க
முன்வந்தாள். முலை வரி கொடுக்கும் முன் அவர்கள் வழக்கப்படி
விளக்கேற்றி அதன் பின் வாழை இலையில் வைத்து முலைவரியைக்
கொடுக்க வேண்டும். நன்செல்லி விளக்கேற்றினாள். முலைவரி எடுத்து
வருகிறேன் என்று சொல்லி வீட்டுக்குள் நுழைந்தவள்
வாழை இலையில் ரத்தம் சொட்டச் சொட்ட அப்போது தான் அறுத்தெடுக்கப்பட்ட தன் இரு முலைகளையும் ஏந்தி வந்தாள்.
முலைவரி கொடுப்பதாக உள்ளே போனவள் தன் முலைகளையே வரியாகக் கொண்டுவந்தக் காட்சியைப் பார்த்த அதிகாரி அதிர்ச்சியில் நின்றார்.
அவளோ இரத்த வெள்ளத்தில்...பிணமாக..
வெளியில் போயிருந்த அவள் கணவன் கந்தப்பன் அவள் சிதையில் விழுந்தே
தானும் மரித்து போனதாய் சொல்கிறார்கள்.

முலைவரிக்காக அந்தப் பெண் செய்த உயிர்த்தியாகம்..
உலக வரலாற்றில் பெண்ணியம் பேசுபவர்கள் கூட மறந்துப்போன
மிக அண்மைக்கால வரலாறு.

அப்போது திருவாங்கூர் அரசராக இருந்த ஶ்ரீ மூலம் திருநாள் ( 1885- 1924)
நன்செல்லியின் செயலைக் கேள்விப்பட்டவுடன் அச்செயலே தன் நாட்டில் ஒரு கிளர்ச்சியை உருவாக்கிவிடலாம் என்று அச்சப்பட்டு அதுவரை அமுலில் இருந்த
முலைவரியை ரத்து செய்தார். ஒரு பெண்ணின் செயல் ஓர் அரசாங்கத்தின் மிகக்கொடுமையான ஒரு செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

முலைப் பிடுங்கி எறிந்து
பாண்டியனின் மதுரை மாநகரைத் தீக்கிரையாக்கிய கண்ணகியின் கதை
காப்பியக்கற்பனையோ ?வரலாறோ?
ஆனால் நன்செல்லி இன்றைக்கு மூன்று தலைமுறைக்கு முந்திய
வாழ்ந்தவள். அவள் வாழ்ந்த இடம் இன்று முலைச்சிப்பறம்பு என்றழைக்கப்படுகிறது.

கேரளத்திலாகட்டும், அண்டை மாநிலமான தமிழகத்திலாகட்டும் , நன்செல்லி வாழ்ந்தக்கதை
வரலாறாக எழுதப்படவில்லை. அவள் இலக்கியத்தில் இடம்பெறவில்லை.
பாடப்புத்தகங்களில் அவளுக்கான பக்கங்களே இல்லை.
மார்க்சியமும் பெண்ணியமும் உரக்க ஒலிக்கும் கேரள மண்ணில்
அவள் ஊமையாக்கப்பட்டிருக்கிறாள்.

ஊடகங்கள் முலைச்சிப்பறம்பை
மனோரமா கவலா என்றே அழைக்கின்றன. அந்த இடத்தில் இன்று வாழும்
எவருக்கும் முலைச்சிப்பறம்பு வரலாறு தெரியவில்லை. நன்செல்லியும்
முலைச்சிப்பறம்பு வரலாறும் இருட்டடிக்கப்பட்டதில் சாதியம் புதிய முகத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் உணரலாம்.

இந்த வரிகளும் சேர்ந்து தான் பத்மநாப சுவாமிக்கோவிலின் கருவறையில்
பொற்காசுகளாகவும் தங்கம் வெள்ளி நகைகளாகவும் ரத்த வாடையுடன்.

Tuesday, May 21, 2013

காலச்சுவடு கட்டுரையும் என் எதிர்வினையும்





பெரியார் ஒரு பார்வை என்ற தலைப்பில் மதிப்பிற்குரிய திரு. பி. ஏ. கிருஷ்ணன் அவர்களின் கட்டுரையை வாசித்தேன். கட்டுரையாளருக்கு என் வணக்கமும் பாராட்டுதல்களும்.
ஜனவரி 2012இல்* வாசித்தக் கட்டுரையை 2013 மார்ச் காலச்சுவடு இதழ் காலங்கடந்து அச்சில் கொண்டுவந்து இருப்பது ஏன்? என்ற கேள்விகளைத் தாண்டி கட்டுரைக்குள் வரவேண்டி இருந்தது. கிருஷ்ணன் அவர்கள் பெரியார் குறித்த தன் கருத்தை வைப்பதற்கு அவருக்கு முழு கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் இம்மாதிரியான ஒரு கட்டுரையை எந்த ஒரு தலைவரைப் பற்றியும் எவரும் எழுதிவிட முடியும். காந்தியைக் குறித்து நேருவும் தாகூரும் வைத்திருக்கும் விமர்சனங்களை நாமறிவோம்.
இக்கட்டுரைக்கு கனம் சேர்த்திருப்பது எழுதிய கருத்துகள் என்பதை விட எழுதியவர் யார்? என்கிற உண்மைதான். எழுதியவர் யார் என்று பார்க்காதே, எழுத்துகளை மட்டும் பார்த்து விமர்சனம் செய் என்று சொல்வது ரொம்பவே புத்திசாலித்தனமாக தோற்றம் அளிக்கும். ஆனால் எல்லோருக்கும் அவரவர் வாழ்ந்த வளர்ந்த சமூகச் சூழல் அவர்தம் கருத்துகளில் எதிரொலிக்கும். கிருஷ்ணன் தன்னைப் பற்றி ஓர் அறிமுகம் செய்து கொண்டுதான் பெரியாரைப் பற்றி எழுத வேண்டி இருப்பதன் காரணம் கூட இதுதான்.
பெரியாருக்கு ‘இது தெரியாது, அது தெரியாது’ என்று அட்டவணை இடுவது எவருக்கும் எளிது. ஆனால் அவரைப் பொறுத்தவரை எப்போதும் எந்த ஒரு கருத்தையும் நறுக்குத் தெறித்தாற் போல சொல்ல வேண்டியே இருந்தது. அப்படித்தான் அவருடைய கம்பராமாயணம் குறித்த கருத்துகளும். கம்பன் எழுதிய காவியத்தில் கதைத்தலைவன் ஒரு அரசனாக மட்டுமே இருக்கிறவரை அது பெரியாருக்குப் பொருட்டல்ல, ஆனால் அவனோ சாட்சாத் திருமால், விஷ்ணுவின் அவதாரமாக மாற்றம் பெற்றதால்தான் பிரச்சனையே! கம்பனின் தமிழை மட்டும் எடுத்துக்கொள், அவனது ராமனைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளாதே என்றெல்லாம் சொன்னால் அன்றைக்கிருந்த பெரியார் தொண்டர் எவருக்கும் அது புரிந்திருக்காது. கம்பனின் தமிழ்ப்பற்றும் தமிழ்மொழி ஆளுமையும் இப்படி கருத்தியல் ரீதியாக தமிழனுக்கே எதிராக இருப்பதை முன்வைத்து ‘கம்பனே வேண்டாமய்யா’ என்று சொல்ல வேண்டிய நிலை பெரியாருக்கு ஏற்பட்டது. காந்தியைப் பற்றி எழுத வரும்போது கிருஷ்ணன் அவர்கள் “ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைவர் அனைத்து தரப்பு மக்களையும் அணைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்து கொண்டே இருக்கும் என்பதை அவர் (பெரியார்) ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை” என்கிறார். அக்காலக்கட்டத்தில் தான் எழுத்துக்கூட்டி வாசிக்க வந்திருக்கும் தன் தொண்டர்களுக்குத் தன் கருத்துகளை “உண்டு அல்லது இல்லை” என்று மட்டுமே சொல்லிப்புரிய வைக்க வேண்டிய ஒரு இக்கட்டான சூழல் பெரியாருக்கும் இருந்தது என்பதை வசதியாக எல்லோருமே மறந்துவிடுகிறோம்.
இந்தியா எனது நாடு என்கிறீர்கள். எனக்கும்தான். மும்பையில் க்ளாஸ் 4 தேர்வுக்கு உட்காரும் தகுதிகூட தமிழனுக்கு மறுக்கப்படுகிறது, தமிழ்நாடு வந்தாலோ தருமபுரியும் பரமக்குடியும் எங்களைப் பயமுறுத்துகிறது. எங்களுக்கு என்று நாடில்லை, மொழியும் இல்லை என்ற நிலையில் பெரியாரை விட்டால் தமிழ்நாட்டில் எங்களுக்கு ஒதுங்கவும் நாதியில்லை! நான் சந்தித்த வடகிழக்கு மாநில இலக்கியவாதிகள் எவரும் இந்தியா தங்கள் நாடு என்பதை இன்றுவரை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். இந்த யதார்த்த நிலையைப் பேசவோ எழுதவோ முன்வந்தால் பிரிவினைப் பேசுகிறார்கள் என்று எளிதாக குற்றச்சாட்டு வைத்து பிரச்சனைகள் இருப்பதைத் தொடர்ந்து நாம் புறக்கணித்து வருகிறோம். காந்தி கொல்லப்பட்டபோது பெரியார் இந்தியாவிற்குக் காந்திதேசம் என்று பெயர் வைக்கச்சொன்னார் என்பதையும் தோழர் மதிமாறன் பேசியதையும் குறிப்பிட்டிருக்கின்றார் கட்டுரையாளர். The Murder of the Mahatma என்ற புத்தகத்தை 1963ல் எழுதிய பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜி.டி. கோஸ்லா எழுதிய புத்தகம் பெரியாரின் கருத்துக்குப் பல்வேறு கோணத்தில் ஒத்திருப்பது நினைவு கூர வேண்டிய செய்தியாகும். கோட்சே தன் வாக்குமூலத்தில் “இலட்சக்கணக்கான இந்துக்களுக்கு அழிவைத் தருகின்ற கொள்கையைக் கொண்டிருந்த ஒருவரைத்தான் துப்பாக்கியால் நான் சுட்டேன். எல்லா பக்கங்களிலிருந்தும் எனக்கு எதிராகக் செய்யப்படுகின்ற விமர்சனங்களால் எனது செயலில் நியாயத்தன்மை கலைந்துவிடாது என்பது என் நம்பிக்கையாகும். வரலாறு எழுதுவோர் எனது செயலில் உள்ள நியாயத்தைச் சரியாகவே மதிப்பிடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றுதான் சொல்லியிருந்தார். கோஸ்லா அவர்கள் கோட்சே பற்றி His main theme however, was the nature of a righteous man’s duty, his dharma as laid down in the Hindu scriptures’ என்று குறிப்பிடுகின்றார். இக்கருத்துகள்தான் மதிமாறன் சொல்வதுபோல பெரியார் காந்தியைப் போற்றும் ஒரே புள்ளி. இந்தப் புள்ளியை உருவாக்கியது அன்றைய இந்துத்துவா சக்திதானே தவிர பெரியார் மட்டும் காரணமல்ல. இந்த இடத்திலும் பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் நாம் மீண்டும் வாசிக்க வேண்டும். காந்தியைக் கொன்றதற்கு காரணம் இந்துத்துவ வெறி என்ற காரணத்தை மட்டும்தான் கையில் எடுத்துக்கொண்டாரே தவிர கொலை செய்தவனின் சாதி - இன அடையாளத்தைக் கையில் எடுத்துக் கொண்டு விமர்சிக்கவில்லை. பெரியாரைப் பார்ப்பன இனத் துவேஷியாக பார்ப்பவர்கள் பெரியார் தன் இனத் துவேஷத்திற்கு வலுவான சந்தர்ப்பம் கிடைத்தபோதும் இன்றைய தலைவர்களைப் போல கீழ்த்தரமான விமர்சனங்களை வைத்து இயக்கம் நடத்தவில்லை என்பதையும் சேர்த்தே எண்ணிப் பார்க்க வேண்டும். “காந்தி, ராமசாமி ஆகிவிட்டதால் அவரை ஒழித்துவிட்டார்கள்” என்று பெரியார் சொன்னதை இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும்.
பெரியாரின் பெண்ணிய விடுதலைக் கருத்துகளில் மிக அதிகமான பலன்களைப் பெற்றவர்கள் அன்று கல்வி நிலையில் முன்னிலைக்கு வந்து கொண்டிருந்த பிராமணர் வீட்டுப் பெண்கள் தான். பெரியார் தன் கூட்டங்களில் பேசும் போது பலர் சொன்ன தகவல்கள், அவரே வாசித்து அறிந்தவை என்ற அடிப்படையில் பேசியும் எழுதியும் வந்தார். கருத்தரங்குகளில் கட்டுரை வாசிக்கும் முறை எல்லாம் பெரியாரிடம் இல்லை என்பதாலேயே அவர் எங்கிருந்து சில கருத்துகளைப் பெற்றார் என்ற குறிப்புகளைப் பெறுவது எளிதாக இல்லை. சீக்கிய சமூகத்தில் இருக்கும் சாதியம் பற்றி எழுதும் போது கூட அக்கருத்தை வாய்மொழியாக தன்னிடம் சொன்ன குறிப்பை பதிவு செய்திருக்கிறார். கட்டுரையாளர் எழுதியிருக்கும் யூத சமூகம் குறித்த பெரியாரின் கருத்துகளின் ஆதாரம் என்ன என்பது விடுதலை ஏட்டில் தேடினால் கிடைக்கும்.
பெரியார் என்னளவில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லர். அவரை விமர்சிப்பதே குற்றம் என்கிற கருத்தெல்லாம் எனக்கில்லை. கிருஷ்ணன் அவர் பார்வையை வைத்திருப்பது போல அந்த வரிசையில் நானும் நான் புரிந்து கொண்டிருக்கும் பெரியாரும்.
புதியமாதவி
மும்பை


நன்றி : காலச்சுவடு 

http://www.kalachuvadu.com/issue-161/page77.asp

Monday, May 20, 2013

என்னால் எழுத முடியவில்லை




என்னால் எழுத முடியவில்லை
அடுக்களையில்
ஆத்தங்கரையில்
வயக்காட்டில்
வாய்க்காலில்
குளக்கரையில்
கொள்ளைப்புறத்தில்
ஒதுங்கும்போதெல்லாம்
ஓசையின்றி வளர்த்த என் மொழி
உயிரூட்டி வளர்த்த என் மொழி
குறிகளைக் கொண்டு கடித்துக்குதறி
துடிக்க துடிக்க சிதைத்து போட்டாய்
என்னால் எழுத முடியவில்லை.

உன் வாரிசுகளைப் பாலூட்டி வளர்க்கும் முலை
உன் பாலியல் வறட்சியைத் தீர்க்க
அணைகட்டி அழுகுப்பார்த்தப்போதே
இயல்பான என் உடல்மொழி
உன் காமத்தீயில் கருகிப்போனது
என்னால் எழுத முடியவில்லை.

களவும் கற்பும்
நீ எழுதிவைத்த இலக்கணம்தான்.
இரண்டும் இருவருக்கும்
பொதுவாக இருக்கும்வரை
காதலிருந்தது.
முன்னது உனக்கும்
பின்னது எனக்கே எனக்குமாய்
உன் ஆயுதங்கள் வென்ற எல்லைக்கோடுகள்
இதில் காணமால் போனது காதல்மட்டுமல்ல
என் கவிதைமொழியும் தான்.

உன் படுக்கையறையின் வயகராவாய்
என் ஆடைகளைத் தயாரித்து
உன் சந்தையில் பரப்பினாய்
எதைக்காட்ட வேண்டும்
எதை மறைக்க வேண்டும்
எதைத் திறக்கவேண்டும்
என் உடலின் எல்லா கதவுகளையும்
திறக்கவும் பூட்டவும்
உடைக்கவுமான சாவிகளும்
கடப்பாறைகளும் உன் வசம்.
உன் பசித்தீர்க்கும் அமுதசுரபி என
உன் வர்ணனையில்
மணிமேகலைகளும் மயங்கிப்போனார்கள்.
பனிக்குடம் சுமக்க்கும் பை ஆகிப்போனது
என் உடல்
பசியும் ருசியும் மறந்துப்போனது
இதுவே பழகிப்போனதால்
எப்போதாவது கனவுகளில்
எட்டிப்பார்க்கும் என் முகம்
எனக்கே அந்நியமாகிப் போனது.
அலறிக்கொண்டே விழித்துக் கொள்கிறேன்
கனவில் கண்ட முகம் பற்றி
எங்காவது
யாரிடமாவது
எப்போதாவது
உரையாடல் நடத்தும் தருணத்தில்
உணர்ந்தேன் என் மொழி ஊமையாகிப்போனதை.

என்னால் எழுத முடியவில்லை
என்னால் பேச முடியவில்லை.



Friday, May 10, 2013

அணுவுலையும் கருவாடும்




நான் கருவாடு
என்னைக் கொஞ்சம் பேசவிடுங்கள்
எனக்கு அறிவியல் தெரியாது.
அதனால் உங்கள் 
அணுவுலைகள் பற்றியும்
தெரியாது.

நீர்தான் உயிருப்பின் ஆதாரம்
என்று நீங்கள் படித்து தெரிந்து
கொண்டதெல்லாம்
பலகோடி ஆண்டுகள்
சமுத்திரத்தில் சுற்றித்திரிந்த 
என் கூட்டம்
கடற்கரையில் ஒதுங்கியபோது
பட்டுத்தெறித்த 
தாம்பூல மகிமையால் தான்.



நேற்று வலையில் மீனாக
உங்கள் கடற்கரை வந்தேன்.
உங்கள் கூடைகளில் நிரப்பி
தலையில் சுமந்து திரிந்தீர்கள
முற்றத்தில் உலர்த்திக் கருவாடாக்கி
எப்போதும் பசிதீர்க்கும்
அமுதசுரபியாக
என்னை வாழவைத்தவர்கள்
நீங்கள்.--
-
-


அணுவுலகைகள் வேண்டாம் என்கிறீர்கள்
உங்களுக்கு  ஆபத்தானது என்பதால் மட்டுமல்ல
காலம் காலமாய் உங்கள்  கைகளில் இருக்கும்
அமுதசுரபிக்கும் ஆபத்து வரும் என்பதால்

-அணுவுலகைகள் ஆபத்தானவை அல்லவாம்
நீதிதேவதையே எழுதிவிட்டாளாம்
இனி அச்சமில்லை அச்சமில்லையாம்
டில்லியிலிருந்து கேட்கிறது குரல்.

ஆபத்தானது அல்ல என்றால்
டில்லியிலேயே அணுவுலகைகளைத் திறக்கலாமே
நாட்டுக்கும் பெருமை
நாட்டின் தலைநகருக்கும் பெருமை
மின்சாரத்தைச் சரியாக எடுத்துச் செல்லும் வசதி
இல்லை என்கிறது உங்கள் மின்சாரவாரியம்..
அப்படி இருந்திருந்தால் குஜராத்திலிருந்தும்
கோலிவாடாவிலிருந்தும்
மின்சாரத்தை எடுத்து வந்து
தமிழகத்தை தகதகவென
ஒளிர வைத்திருப்பார்களாம்
அப்படித்தான் சொன்னார்கள் .

ஆமாம்.. நிறைய மின்சாரம் கிடைக்குமாமே
கூடங்குளம் திறந்துவிட்டால்.
அதிலும் முதல் கட்டம் தொடங்கி
இரண்டாம் கட்டம் --முடிந்து
மூன்றாவது கட்டம் வரும்போது
மின்சார மழைப் பொழியுமாமே
இவ்வளவு அபரிதமாக மின்சாரம் கொட்டினால்
அம்மாடியோவ்... 
அதை எடு-த்துச் செல்லும் வசதிகூட இல்லாமல்
 தமிழகம் எங்கும்-
 மின்சாரம் பாய்ந்து
மின்சாரம் கசிந்து
ஒரே ஷாட் சர்க்க்யூட் ஆகி
...
வேண்டாமய்யா டில்லியாரே
ஆளைவிடுங்கள்
மின்சாரம் இல்லாமல்
சிக்கிமுக்கி கல்லை உரசி 
தீ உண்டாக்கி
வலையில் பிடித்த மீனைச் சுட்டுத் தின்று
நிலாப் பொழியும் நெய்தல் கரையில்
படகுகள் ஓட்டிச் சென்றவன்
--வரும் வரைக் காத்திருந்து
கடற்கரை மணலில்
கானல்வரிப் பாடி
ஊடலும் காதலுமாய்---
வாழவிடுங்கள் அய்யா..
உங்கள் அணு ஆயுதங்களின்
சோதனை எலிகளாய்
அவர்கள்  தொட்டில்களை
எடுத்துச் செல்லாதீர்கள்.
அவர்களை  விட்டுவிடுங்கள்


மல்லிகைப்பூ மணக்கும்
கருவாடு நாறும் என்று
மக்கள்  பொதுபுத்தியில் ஏற்றிய
புண்ணியவான்களே,,.
அணுக்கழிவுகளைப் போல
அழிக்க முடியாத'
அரசியல் வாதிகளே..
உங்கள் செங்கோட்டைக்குப் பக்கத்தில்
அணு உலைகள் வளரட்டும்
அப்துல்கலாம் இருக்கிறார்
பார்த்துக் கொள்ள.

இப்படிக்கு
அணுவுலைகளுக்கு எதிரான
கருவாடுகள்..

Tuesday, April 23, 2013

காதல் என்பது...






மதுரை  காமராசர் பல்கலைக் கழகத்தில் 1976, 77, 78களில் நானும் ஒரு முதுகலை மாணவியாய் உலா வந்திருக்கிறேன். அந்த நூலகமும் வியாழ வட்ட கருத்தரங்குகளும் என் வாழ்வில் மிகவும் முக்கியமான களங்கள்.
பாப்லு நெருடாவையும் அகிலனையும் நீலபத்மநாபனையும் ஜெயகாந்தனையும்
பற்றிப் பேசாத நாட்களில்லை.
அப்போது பல காதலர்களைப் பார்த்திருக்கின்றேன். காதலித்த எல்லோரும்\
திருமண உறவில் இணைய முடியவில்லை என்கிற யதார்த்தநிலை ஒரு பக்கம், இன்னொரு பக்கமோ தீவிரமாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சிலர் சந்தோஷமாக வாழவில்லையே என்ற வருத்தமும்
எனக்குண்டு.  காதலைப் பற்றி அதிகமாக கவிதைகளில் கூட எழுதவில்லை நான். அதனாலோ என்னவோ 'அன்புள்ள நிலாவுக்கு ' புத்தகத்தைக் கொஞ்சம் தாமதமாகவே வாசிக்க ஆரம்பித்தேன்.!

  .

அமரர் கந்தசாமி அறக்கட்டளை சார்பாக சொற்பொழிவாற்ற மும்பை வந்திருந்தார்கள் பேராசிரியர் மோகன் அவர்களும் அவர் துணைவியார்
பேராசிரியர் நிர்மலா மோகன் அவர்களும். பேராசிரியர் . இரா. மோகன் அவர்களை ஒரு ஆய்வு மாணவராக மட்டுமே நானறிவேன். ஒரு கால்நூற்றாண்டு கடந்து  அவரையும் அவர் துணைவியாரையும்
சந்தித்த அனுபவம் இனிமையாக இருந்தது. அக்காலக்கட்டத்தில்
அவர்கள் இருவரும் காதலர்களாக இருந்தார்கள் என்பதும் அவர்கள்
அப்போது எழுதிக்கொண்ட காதல் கடிதங்களை தொகுத்து
'அன்புள்ள நிலாவுக்கு' என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளியிட்டிருப்பது கண்டு ஆச்சரியமாக இருந்தது.

'அடடே.. நம்ம மோகன் சார் வியாழவட்டத்திற்கு தவறாமல் வந்ததற்குப் பின்னால் இப்படி ஒரு காதல் காவியம் இருப்பது நமக்குத் தெரியாமல்
இருந்திருக்கிறதே!" என்று நினைத்துக் கொண்டேன்.

காதல் கடிதத்தில் மேடம் க்யூரியும் குறுந்தொகையும் கபிலரும் திருக்குறளும்
சர்வ சாதாரணமாக எடுத்தாளப்பட்டிருக்கின்றன. பேராசிரியர் மு.வ. அவர்களின் செல்லப்பிள்ளை என்று அன்றைக்கு பல்கலை கழக வட்டாரத்தில் பேசப்பட்ட இரா. மோகன் அவர்கள் மு.வ. பற்றிய கருத்துகளையும் பதிவு செய்திருக்கிறார்.
மலர்விழி நாவலில் கலெக்டர் செல்வநாயகம் மலர்விழிக்கு எழுதிய கடிதத்தை அந்த நாவலைப் பிரிக்க நேரும்போதெல்லாம் படிக்காமல் இருக்க மாட்டேன்  என்று சொல்லும் மோகன் அவர்கள்

 " சொல்லப்போனால் அதையே என் கடிதங்களுக்கு ஒரு முன்மாதிரியாகக் கொண்டேன்" என்று வெளிப்படையாகவே பதிவு செய்திருக்கிறார்.


காஸ்டில்லிஜோ எழுதிய knowing woman வாசித்துவிட்டு அதில் தனக்குப் பிடித்த
கருத்துகளை எழுதுவதிலாகட்டும், கீட்ஸ், ரஸ்ஸல், கிப்பன் ஆகியோரின்
காதல் கதைகளை தன் காதல் கடிதங்களில் எழுதுவதிலும் பேராசிரியர் மோகன் அவர்களின் காதல் கடிதங்கள் வெறும் உடல் சார்ந்த பாலியல்
வேட்கை, ஈடுபாடு என்பதை எல்லாம் தாண்டி காதல் என்பது கருத்தொருமித்தல், ஒருவரை ஒருவர் மதித்தல் என்ற புரிதலை
ஏற்படுத்தி  இருக்கிறது.
இன்று வாழ்க்கையில் இந்த இணையரின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது
இந்தப் புரிதல் தான்.

இந்த இணையர் காதலுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்று சொல்வதைவிட இவர்களால் காதல் பெருமை அடைந்திருக்கிறது,
வெற்றி பெற்றிருக்கிறது என்று சொல்லலாம்.



 

Monday, April 8, 2013

இவர்கள் தீவிரவாதிகளா..??









ஆனந்த பட்வர்தனின் ஜெய்பீம் காம்ரேட் ஆவணப்படத்தைப் பார்த்திருப்பீர்கள்.
அப்படத்தில் ஓங்கி ஒலித்தக் குரல்.. 
ஒவ்வொருவரையும் உலுக்கிய அந்தப் பாடல் வரிகள்
வலியை வேதனையை சாதியக்கொடுமையை
வறுமையின் நிறத்தை தன் பாடல்களில்
வடித்த அந்தக் குரல்...
சீத்தல் மற்றும் சச்சின்.. 
தீவிரவாதிகள் என்று அவர்கள் தேடப்பட்டதும் அவர்களின்
இசைக்குழுவான கபீர் கலா மஞ்ச் தீவிரவாதக்குழுவாக அறிவிக்கப்பட்டதும்
அவர்கள் தலைமறைவானதும்... 
இன்று: மராட்டிய மாநில காவல்துறை அவர்களைத் தீவிரவாதிகள் என்று
கைது செய்திருக்கிறது.
மனித உரிமை ஆர்வலர்கள் அவர்களுக்காக
தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாமும் அவர்களூடன் சேர்ந்து... 


Saturday, April 6, 2013

இந்தியா - இலங்கை - ஒரு பூகோள அரசியல்


திருமருதன் அவர்கள் தன் வலைத்தளத்தில் எழுதியிருக்கும் கட்டுரைக்கும் அதற்கு மறுப்புரையாக திரு நலங்கிள்ளி அவர்கள் கீற்றுவின் எழுதியிருக்கும் கொழும்புக் கொழுப்பைக் கரைக்கும் அரசியல் எது? என்ற கட்டுரைக்கும் பதில் சொல்லும் வகையிலும் அவர்கள் சுட்டிக்காட்டாத இன்னொரு தளத்தை இன்றைய “Geopolitical Realism” என்னவாக இருக்கிறது என்பதையும் விளக்கும் வகையில் மும்பையில் விழித்தெழு இயக்கம் சார்பாக நடந்த கருத்தரங்கில் நான் ஏற்கனவே பேசியிருந்த கருத்துகளின் சாரத்தைத் தொகுத்து இக்கட்டுரையில் கொடுத்திருக்கிறேன்.
 யதார்த்த நிலை என்னவாக இருக்கிறது? என்பதைப் புரிந்து கொள்ளாமல் அதை எப்படி உடைத்துக்கொண்டு அல்லது மாற்று வழியைக் கண்டுபிடிப்பது எப்படி?அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? இவை அனைத்தையும் நம் இளைய சமுதாயம், குறிப்பாக ஈழ ஆதரவாளர்களும் மாணவர் சமுதாயமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் நோக்கம்.
 இந்தியா - இலங்கை வெளியுறவுக் கொள்கை
 வெளியுறவு கொள்கையை இரண்டாகப் பிரிக்கலாம். (ValueBased,Interests based.) அறம் சார்ந்தது ஒன்று. இன்னொன்று பொருளாதர சமூக ஆதாயம் சார்ந்தது. சுதந்திரம் பெற்ற இந்தியா கூட்டுச்சேரா கொள்கையைத் தான் தன் வெளியுறவுக் கொள்கையாகக் கொண்டிருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் விடுதலை அடைந்த நாடுகளை ஒன்றிணைக்கும் சக்தியாக இந்தியாவே விளங்கியது. அக்காலக்கட்டத்தில் நம் வெளியுறவு கொள்கையைத் தீர்மானிப்பதில் அறம் சார்ந்த கோட்பாடுகள் முன்னிலை வகித்தன.
 அந்த அடிப்படையில் தான் பண்டித நேருவின் புகழ்மிக்க பஞ்சசீலாகொள்கை. திபேத்தில் சீனாவின் நிர்வாக அதிகாரத்தை பஞ்சசீல ஏற்றுக்கொண்டது இந்த அடிப்படையில் தான். 1955ல் ஐ. நா. பாதுகாப்பு கவின்சிலில் உறுப்பினராகும் தகுதியை இந்தியாவுக்கு வழங்கியபோது அதை ஏற்க மறுத்த அன்றைய பிரதமர் நேரு அத்தகுதியை சீனாவுக்கு வழங்கும்படி சிபாரிசு செய்கிற அளவுக்கு நம் வெளியுறவு கொள்கை தார்மீகம் பேசியது.
 “Think Bank” என்ற அறிவு ஜீவிகளின் அமர்வில் அமர்ந்து கலந்துரையாட ஒரு குறிப்பிட்ட நேரத்தை நேரு ஒதுக்கி இருந்தார் என்பார்கள். எனினும் நடந்தது எல்லாமே நேரு நினைத்தபடி அல்ல.
 1962ல் சீனா ஏமாற்றியது தான் இந்தியாவின் அறம் சார்ந்த வெளியுறவு கொள்கைகைக்கு கிடைத்த முதல் அடி. வெளியுறவு கொள்கையில்(Realities of power politics) அதிகாரப்போட்டி அரசியலின் யதார்த்தம் என்ன என்பதை நேச நாடுகளாக இருந்து எதிரி நாடுகளாக மாறியவர்கள் தான் இந்தியாவுக்கு கற்றுக்கொடுத்தார்கள். நம் ஆயுதங்களைத் தீர்மானிப்பவர்கள் நம் எதிரிகளாகவே இருக்கிறார்கள் என்று சொல்வது இதைத் தானோ. நேருவின் வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த மரண அடி நேருவின் சகாப்தத்தை 1964ல் முடிவுக்கு கொண்டுவந்தது என்கிறார்கள்.
 அதன்பின் 1970வாக்கில் இந்தியா அறம் சார்ந்த வெளியுறவு கொள்கையை கைவிட்டு அதே நேரத்தில் முழுக்கவும் தன் சுயநலம் சார்ந்த வெளியுறவு கொள்கைக்குள் வராமல் ஒரு இடைப்பட்ட நிலையில் இருந்தது எனலாம். இக்காலத்தில் இந்தியா கூட்டுச்சேரா கொள்கையைக் கைவிட்டு சோவிய வல்லரசின் நேச நாடாகிவிட்டது. இராணுவம், தொழில்நுட்பம் வளர்ச்சிகளின் சோவியத்தின் உதவி. சோசலிஷ பொருளாதரக் கொள்கை என்ற அரசின் பிரகடனம். தனியார் நிறுவனங்கள் அரசு மயமாக்கப்பட்ட நிலை.
1971ல் வங்கதேசம் உருவானதில் பெரும்பங்கு இந்தியாவினுடையது. இப்போதும் நாம் அனைவரும் ஈழம் பிரச்சனைக் குறித்துப் பேசும் போதெல்லாம் நான் உட்பட, இதையே பல மேடைகளில் பேசியும் எழுதியும் உணர்வுப் பிழம்பாய் கொதித்துப் போகிறோம். 1971களில் இருந்ததை விட அதிக வலுவுடன் இந்திய இராணுவம் இருக்கும் இன்றைய நிலையில் இந்தியாவால் ஏன் ஈழப்பிரச்சனையில் வங்க தேசத்திற்கு செய்ததைச் செய்ய முடியவில்லை?70களுக்கும் 90களுக்குப்
 பின்னரும் உலக அரங்கில் நடந்த மிகப் பெரிய மாற்றங்கள் என்ன?
வங்க தேசத்திற்காக பாகிஸ்தானுடன் இந்திய இராணுவம் போரிட்டுக் கொண்டிருந்த போது அமெரிக்காவின் அணு ஆயுதக் கப்பல்(seventhfleet) வங்காள விரிகுடாவில் வட்டமிட்டுக்கொண்டிருந்தது.
 1974ல் பொக்கரம் அணுகுண்டு வெடிப்பு சோதனையில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா தன்னை அணு ஆயுத நாடாக உலகுக்குப் பெருமையுடன் பறைசாற்றிக் கொண்டது. ஐ. நா. வில் வீட்டோ பவரில் இருக்கும் ஐந்து வல்லரசுகள் தவிர்த்து அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடாக தன்னை வெளியுலகுக்கு காட்டிக்கொண்டதன் மூலம் அதிகாரப் போட்டியில் நுழைந்தது இந்தியா.
 1991ல் சோவியத் வல்லரசு உடைந்தது. சோவியத்துக்கும் அமெரிக்காவுக்கும் நடந்து கொண்டிருந்த பனிப்போர் முடிவுக்கு வந்தது, இந்நிலையில் சோவியத்தின் நேச நாடுகளாக இருந்த இந்தியா போன்ற நாடுகளின் வெளியுறவு கொள்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. சோவியத்துடன் கொண்டிருந்த நேச உறவு காரணமாக கொள்கை அடிட்படையில் சீனாவுடன் கை கோத்திருக்க வேண்டிய இந்தியா அதற்கான எல்லா கதவுகளும் சீனாவில் மூடப்பட்டிருந்ததாலும் ஆசியாவின் தலைமைக்கான போட்டியில் இந்தியாவுக்கு எதிரணியில் சீனா நிற்பதாலும் இந்தியா அமெரிக்காவின் பக்கம் சாயத்தொடங்கியது.
 இந்த இடைப்பட்ட காலங்களில் இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்டபல்வேறு ஒப்பந்தங்களும் அதற்கான சூழல்களும் இந்தியா இலங்கை வெளியுறவு கொள்கையைப் பாதிக்கும் முக்கிய அம்சங்களாகின.
 சாஸ்திரி சீரிமாவோ பண்டாரநாயக்கா ஒப்பந்தம்:
1965ல் இந்தியா- பாகிஸ்தான் போரில் இலங்கையிலிருக்கும் கட்டுநாயகா விமானத்தளத்தை பாகிஸ்தான் விமானப்படை எரிபொருள் நிரப்ப பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இலங்கை பாகிஸ்தானுக்கு ஆதரவாக அறிவித்தது. இந்தியா பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே இலங்கையின் இந்நிலைப்பாடு இருப்பதாக சாஸ்திரி நினைத்தார். இலங்கையின் இந்நிலைப்பாட்டைத் தவிர்க்க சாஸ்திரி சீரிமாவோடு ஒப்பந்தம் செய்ய முன்வந்தார்.
 இந்திய அரசு இராணுவ பலத்தில் பரப்பளவில் பொருளாதர நிலையில் தன்னைவிட பலமடங்கு வலுவுள்ளதாக இருந்தாலும் அதை அச்சுறுத்துகின்ற கவண்கல்லாக தன்னிடமிருக்கும் பூகோள ஆயுதத்தை இலங்கை அரசு அப்போது உணர்ந்து கொண்டது எனலாம். இன்றுவரை அந்த கவண்கல் நெற்றிப்பொட்டில் பட்டால் என்னவாகும் என்ற நிலையில்தான் இந்தியா இருக்கிறது!
 அந்த ஒப்பந்தப்படி,ஐந்தரை இலட்சம் மலையகத்தமிழர்களை அகதிகளாக இந்தியாவுக்கு அனுப்புவதை ஏற்றுக்கொண்டதன் மூலம் சாஸ்திரி ஈழத்தமிழர் நிலைப்பாட்டில் முதல் தவறைச் செய்தார். இலங்கையில் அன்று வாழ்ந்த 9. 5 இலட்சம் மலையகத்தமிழர்களில் 5. 5 தமிழர்கள் அகதிகளாக இந்தியா ஏற்றுக்கொள்வதும் மீதி 4இலட்சம் தமிழர்களுக்கு இலங்கை அரசு குடியுரிமைக் கொடுப்பதும் என்று முடிவானது. இலங்கையில் வாழ்ந்து கொண்டிருந்த மலையகத் தமிழர்கள்,இலங்கையை வளம் கொழிக்கும் காபி,டீ தோட்டங்களாக்கிய உழைப்பாளர்களும் அந்த மண்ணுக்கும் உள்ள தொடர்பு கேள்விக்குறியானதும் அவர்களை இந்திய அரசு அகதிகளாக ஏற்றுக்கொண்டதன் மூலம் ஈழமண்ணுக்கு அவர்கள் அந்நியர்கள் தான் என்று இந்தியாவே ஏற்றுக்கொண்டதாக அமையும் என்பதைக் கணிக்க தமிழக அரசும் மக்களும் தவறிவிட்டார்கள்.
 இந்திரா சீறிமாவோ ஒப்பந்தம்:
1971ல் அமெரிக்கா வங்கக்கடலில் அணு ஆயுதக் கப்பலைக் காட்டி இந்தியாவை மிரட்டியபோது சோவியத் உதவிக்கு வந்தது என்பார்கள். ஐ.நா சபை அமெரிக்காவின் அத்துமீறிய செயலைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியதால் அமெரிக்கா பின்வாங்கியது என்பார்கள். அப்போதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கையை தன்பக்கம் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கச்சத்தீவை இந்திய அரசு தாரை வார்த்துக் கொடுத்தது. இந்திராவும் சீறிமாவோவும் செய்து கொண்ட ஒப்பந்தம் தமிழக அரசின் ஒப்புதலுடன் தான் நடந்திருக்க வேண்டும்.
trade_routes
கச்சத்தீவு தமிழர்களின் நிலம். இராமநாதபுரம் சமஸ்தானத்திற்குச் சொந்தமானது. கடல்கோளுக்கு இறையாகிப் போனது போக எஞ்சி நிற்கும் மிச்சம் மீதி இந்த தீவு. தமிழகத்து மீனவர்கள் ஓய்வெடுக்க,மீன்வலைகள் உலர்த்த ஆண்டுக்கொரு முறை நடக்கும் அந்தோணியார் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள என்று 74ஆம் ஆண்டுவரை இருந்த உரிமைகளையும் 1976ல் இலங்கைக்கு கொடுத்தது இந்திய அரசு. இன்றைக்கு டொசோ மாநாடுகள் நடத்தும் கலைஞர் அவர்கள் தாம் அப்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தார் என்பதையும் கவனிக்க வேண்டும். இவர்களுக்குப் பின் வந்த நேருவின் பேரன்,  இந்திராவின் வாரிசு என்ற தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு இந்தியாவின் மக்களாட்சி அரசியல் தலைவராக- இந்திய பிரதமராக வந்த ராஜீவ்காந்தி எடுப்பார் கைப்பிள்ளையாகவே செயல்பட்டார். வெளியுறவு கொள்கைகளில் அவருக்கு எவ்விதமான தொலைநோக்குப் பார்வையும் இருந்ததில்லை. அதிலும் குறிப்பாக ஈழம் பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் பதிலாக அவர் நடவடிக்கைகள் மேலும் உக்கிரமாக்கியதெனலாம்.
 திம்புவில் நடந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் இந்தியப் பிரதமர் கபட நாடகம் ஆடினார். அமைதிப்படை தளபதியாக இருந்த ஹரிகிரட்சிங் தன் குறிப்புகளில் இதைப் பதிவு செய்திருக்கிறார்.
 "ராஜீவ்காந்தி தன்னை சந்திக்க விரும்புகிறார் என்று இந்தியத் தூதரகம் மூலம் அறிந்த பிரபாகரன் மகிழ்ச்சி அடைகிறார். டில்லி வந்த பிரபாகரனை 28, ஜூலை 1987ல் இந்தியப்பிரதமர் சந்திக்கிறார். முதல்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் அசோகா ஓட்டல் அறை எண் 518ல் அடுத்த பேச்சுவார்த்தைக்காக காத்திருக்கிறார் பிரபாகரன். ஆனால் அடுத்த நாள் கொழும்புவில் ராஜீவ்காந்தி பேச்சுவார்த்தைக்கு போயிருப்பதை தொலைக்காட்சி நேரடியாக ஒலிபரப்புகிறது. (The intervention of Srilanka page 26) அவரே மேலும் சொல்கிறார்,அமைதிப்படை இந்தியாவிலிருந்து இலங்கை அனுப்பப்படும் போது யாருக்காக? என்பது கூட தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.
 (The IPKF personnel did not know exactly what their mission was in Sri Lanka because at one stage , they were told to protect the LTTE since the IPKF had arrived on the island as a friend to fulfil the aspirations of the tamils. . . on 8 Oct 1987, Gen. Sundarji visited IPKF Head quarters at Palay and ordered me to adopt the hard option against LTTE, the IPKF from being a peacekeeper had suddenly adopt an offensive stance) page 75 & 77
 இந்திரா காந்தி பிரதமராக இருந்தப்போது ஈழ விடுதலை இயக்க போராளிகளுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுத்து இலங்கையை தன் கட்டுப்பாட்டுக்குள் எப்போதும் வைத்திருக்கும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். ஆனால் அவர் மகனோ, போராளிகளை வெல்வது எளிது என்றும் அப்படி வென்றெடுக்கும் ஈழ மண்ணை இந்திய நிலமாக்கிக் கொள்ளலாம் என்றும் அரசியலும் தெரியாமல் வெளியுறவுக் கொள்கையும் தெரியாமல் செயல்பட்டார். நான்காண்டுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் போரிட்டு இலங்கை அரசு தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருந்த காலத்தில், இன்னும் சொல்லப்போனால் தமிழ் ஈழம் விடுதலையை வென்றெடுக்கும் நேரம் பார்த்து இந்திய இராணுவம் 'அமைதிப்படை' என்ற பெயரில் இலங்கை மண்ணில் இறங்கியது.
அமைதிப்படை விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு முன் தோல்வி அடைந்தது என்பது தான் அன்றைய வரலாற்று உண்மை. 1989ல் அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறியது உலக அரங்கில் இந்தியாவுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய சரிவு எனலாம்.
அதன்பின் இலங்கை அரசு வெளிப்படையாக பிற நாடுகளின் உதவியை நாடியதை இந்தியாவால் தடுக்க முடியவில்லை. ஒருபக்கம் இந்திய இராணுவத்தின் தோல்வி, பிரச்சனையை இந்தியாவால் தீர்க்க முடியவில்லை என்ற இலங்கையின் பிரச்சாரமும் அதையே காரணம் காட்டி இலங்கை எடுத்த நிலைப்பாடுகளும் இந்தியாவின் வெளியுறவு கொள்கையை, அதிலும் குறிப்பாக இலங்கையுடனான கொள்கையை பெரிதும் பாதித்தன.
29 ஜூலை 1987ல் இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுக்கு எழுதியிருந்தக் கடிதம் இந்திய அரசின் நிலைப்பாட்டையும் இன்றுவரை அதே பாதையில் இந்திய அரசு இலங்கையுடனான வெளியுறவு கொள்கையைக் கடைப்பிடிப்பதையும் தெளிவாக உணர்த்துகின்றன.
"திரிகோணமலை அல்லது ஶ்ரீலங்காவின் எந்தவொரு துறைமுகமும் எந்த ஒரு நாடும் தன் இராணுவப் பயன்பாட்டுக்கு இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தும் விதத்தை அனுமதிக்க கூடாது. திரிகோணமலையில் இருக்கும் எண்ணெய்க் கிடங்குகளை மேற்பார்வையிட்டு நிர்வகிக்கும் பொறுப்பை இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தே செய்ய வேண்டும்,. .
ஶ்ரீலங்கா வெளிநாடுகளுடன் செய்திருக்கும் தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான தகவல் தொழில்நுட்பங்களாக மட்டுமே இருந்தாக வேண்டும். எக்காரணம் கொண்டும் இராணுவ மற்றும் உளவுத்துறை பயன்படுத்தாது என்பதைக் கண்காணித்து இலங்கை அரசு உறுதி செய்வது அவசியம். . இதற்கெல்லாம் கைமாறாக பிரிவினை பேசும் தீவிரவாதிகளான இலங்கை மக்களை இந்தியா ஆதரிக்காது, வெளியேற்றும். அத்துடன் ஶ்ரீலங்கா பாதுகாப்பு படைக்கு இந்தியா இராணுவ தளவாட உதவிகள் செய்து பயிற்சியும் கொடுக்கும். "
திரிகோணமலையில் 'வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா" என்ற ரேடியோ தகவல் பரிமாற்றத்தை அமெரிக்கா செய்து கொண்டிருந்தது. சோவியத்தின் நேசநாடுகளைக் கண்காணிக்கவும் உளவு பார்க்கவும் அமெரிக்கா செய்திருந்த இந்த ஏற்பாடு இந்தியாவுக்கு அன்றைக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. எனவே அதை நிறுத்த வேண்டும் என்ற அவசரத்தில் இந்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தமாகவே ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் அமைந்தது.
உலக அரங்கில் 90களில் சோவியத் உடைந்தப் பின் 91களில் இந்தியா உலகமயமாதலில் அடி எடுத்து வைக்கிறது. அதன் பின் அதாவது 1993 -96களில் இந்திய வணிகம் இருமடங்காக பெருகியது. இந்த வளர்ச்சியின் காரணமாக இந்திய அரசு 1998ல் இலங்கையுடன் செய்து கொண்ட வணிக ஒப்பந்தம் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது
INDIA SRI LANKA FREE TRADE AGGREMENT - ISLFTA என்றழைக்கப்படும் அந்த ஒப்பந்தம் மார்ச் 2000 முதல் அமுலுக்கு வந்தது. அதன் விளைவுகள் இந்தியா இலங்கை வெளியுறவு கொள்கையை பாதிக்கும் மிக முக்கியமான அம்சங்களாக இன்று இருக்கின்றன.
*2006ல் இந்தியா - இலங்கை வணிக மதிப்பு 2. 6 (இரண்டு புள்ளி ஆறு) பில்லியன் அமெரிக்க டாலர். இது பத்து வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட 5 மடங்கி அதிகம்.
*இந்தியா இலங்கையில் வைத்திருக்கும் முதலீட்டின் மதிப்பு 1990ல் $ 4 மில்லியன். அதுவே 2006ல் $ 150 மில்லியன்.
*2005 கணக்குப்படி SAARC நாடுகளில் இந்திய செய்திருக்கும் முதலீடுகளில் 50% இலங்கையில் தான்.
இலங்கையில் முதலீடு செய்திருக்கும் இந்திய நிறுவனங்கள்:
  • லங்கா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
  •  டாட்டா (தாஜ் ஹோட்டல், வி எஸ் என் எல் ஆகியவை)
  • அப்பல்லோ மருத்துவமனை
  • இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC)
  • எல் அண்ட்டி
  • அம்புஜாஸ்
  • சியட் (ceat)
  • நிக்கோலஸ் பிரமள்
  • ஜெட் ஏர்
  • சகாரா
  • இந்தியன் ஏர்லைன்ஸ்
  • அசோக் லேலண்ட்
*உலக உருண்டையை நாம் கிழக்கு மேற்கு பகுதிகளாகப் பிரித்தோம் என்றால் சற்றோப்ப நடுவில், இரண்டையும் இணைக்கும் மையப்புள்ளியாய் இலங்கை இருக்கிறது. அதிலும் குறிப்பாக இலங்கையின் கொழும்பு துறைமுகம் அமைந்திருக்கிறது.
 *இந்து மகா சமுத்திரத்தைக் கடக்கும் கப்பல்கள் அனைத்தும் இதன் வழியாகத் தான் போயாக வேண்டும். (Entry and Exit Point)
*உலக ஏற்றுமதி இறக்குமதியில் சரக்கு கப்பல்கள் 50% அதிகமாக இந்த வழியாகத்தான் போகின்றன. 1/3 சரக்கு கப்பல்களும் 2/3 எண்ணெய் கப்பல்களும் (Bulk cargo and Oil shipments)
*இந்தியாவுக்கு இறக்குமதியாகும் எண்ணெயில் 89% இந்துமகாக்கடல் வழியாகத்தான் வருகிறது.
*இந்திய இறக்குமதியில் 70% கொழும்பு துறைமுகத்தில் தான் நடந்தாக வேண்டும். கொழும்பு துறைமுகத்தில் பெரிய சரக்குகள் பிரிக்கப்பட்டு (BULK BREAKING) இந்தியாவின் பல்வேறு துறைமுகங்களுக்கு இங்கிருந்து தான் அனுப்பப்படுகிறது.
*இந்திய வணிகம் மட்டுமல்ல, உலக நாடுகளின் வணிகமும் கடல்வழியைத்தான் நம்பி இருக்கின்றன.
*திரிகோணமலை உலகின் மிகச்சிறந்த இயற்கை துறைமுகம் என்கிறார் பிரிட்டிஷ் அட்மிரல் ஹார்டியோ நெல்சன்.
*21ஆம் நூற்றாண்டின் தலைவிதியை நிர்ணயிக்கப்போவது அதன் கடல்வழிகள் தான்.
*யார் இந்து மாக்கடலில் தன் ஆளுமையை அதிகாரத்தை நிலைநாட்டுகின்றார்களோ அவர்தான் ஒட்டுமொத்த ஆசியாவின் தலைமை இடத்துக்கு வரமுடியும்.
 *இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சீனா $100 மில்லியன் டாலர் செலவில் கொழம்புவில் லோட்டஸ் டவர் என்ற ஹைடெக் தொழில்நுட்ப கட்டிடத்தைக் கட்டி இருக்கிறது. தெற்கு ஆசியாவிலேயே மிக உயர்ந்த கட்டிடம் இதுதான்.
ஆங்கிலேயர் இலங்கையைக் கைப்பற்றியது வியாபர நோக்கத்திற்காக மட்டுமல்ல, பிரிட்டிஷ் இந்தியாவின் பாதுகாப்பையும் உத்தேசித்துதான்என்கிற வரலாறு இந்திய பாதுகாப்புக்கு இலங்கைத் தீவு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தும். இதுதான் பூகோள அரசியலின் யதார்த்த நிலை. (International affairs , nations tend to act based on self interest. Calculation of power and national interests. Foreign policy text books characterized this behaviour as geopolitical realism)எனவே இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை அதுவும் இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் மூன்று காரணிகள் முக்கிய இடம் பெறுகின்றன.
1) பொருளாதரம்
2) கடல்வழி பாதுகாப்பு (இந்துமகாக்கடலில்)
3) இலங்கை சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் கொண்டிருக்கும் உறவுநிலை.
வெளியுறவுக் கொள்கையில் நிரந்தர நண்பனும் இல்லை, யாரும் பகைவனுமில்லை என்பது தான் உலக நாடுகளின் தாரகமந்திரம். இந்தியா இலங்கை அரசுக்குப் பொருளாதர தடை விதிக்குமா? என்ற கேள்வியை மேற்கண்ட யதார்த்த நிலையுடன் ஒப்பிட்டு முடிவுக்கு வர வேண்டும். ஏன் முடியாது? என்ன நிலை? எது தடையாக இருக்கிறது? இதை எல்லாம் மீறி பொருளாதர தடை விதித்தால் என்னவாகும்? இந்தக் கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களைத் தேடிக் கண்டடைந்தால் தான் ஈழம் குறித்த அடுத்தக்கட்ட போராட்ட நடவடிக்கைக்கு உண்மையில் நாம் தாயாராக முடியும். வெறும் உணர்வுக் குமிழிகள் கரை சேர்வதற்குள் காணாமல் போய்விடும்.
நன்றி: கட்டுரையை வெளியிட்ட கீற்று இணைய தளத்திற்கு


Thursday, April 4, 2013

காமன்வெல்த் காப்பாற்றப்படுமா?





காமன்வெல்த்தில் கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்கும் தகுதியை இலங்கை அரசு இழந்துவிட்டது. அந்நாட்டில் 2009ல் நடந்த மனித உரிமை மீறல்களை
உலக நாடுகள் அனைத்தும் அறிந்துள்ளன. அத்துடன்
தன் நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டாக்டர் ஷிரானி பண்டாரநாயகாவை அவர் தன்
நாட்டு சட்டப்படி நடந்து கொண்டதற்காக கடுமையாகத் தண்டித்ததுடன் அவருடைய இடத்தில் தன் முன்னாள்
அட்டர்னி ஜெனரலைக் கொண்டு வந்து உட்கார வைத்து
நீதியைக் கேலிக்குரியதாக்கி இருக்கிறது. இதனால்
காமன்வெல்த் கூட்டமைப்பில் உறுப்பினராக இருப்பதற்கான குறைந்த பட்ட தகுதியையும் இலங்கை அரசு இழந்துவிட்டது. எனவே வரும் நவம்பர் (2013) மாதத்தில் இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் நாடுகளின் சந்திப்பில் இங்கிலாந்தின் அரசியோ அரசு பிரதிநிதியோ கலந்து கொள்ளக்கூடாது என்கிறார்கள் இங்கிலாந்தின் வக்கீல்களும் மனித உரிமை ஆர்வலர்களும்.

காமன்வெல்த் கூட்டமைப்பின் முக்கியமான நோக்கங்கள்: சமத்துவம், அடுத்தவர் பாதுகாப்பை மதிப்பது, அரசியல் பொருளாதர சமூக வளர்ச்சிக்கும்
கலாச்சார உரிமைக்கும் பாடுபடுவது, எக்காரணம் கொண்டும் எதை முன்னிட்டும் எவருடைய மனித உரிமைகளுக்கும் கேடு வராமல் அமைதியை நிலைநாட்டுவது..

காமன்வெல்த் கூட்டமைப்பின் நோக்கங்கள் அனைத்தையும் கைவிட்டதுடன் தன் அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் முற்றிலும் நேர்மாறாக இலங்கை அரசு செயல்பட்டுக்கொண்டிருப்பது உறுதி
செய்யப்பட்டிருக்கும் நிலையில் காமன்வெல்த கூட்டமைப்பு இலங்கை அரசை காமன்வெல்த்திலிருந்து விலக்கி (சஸ்பெண்ட்) வைக்க வேண்டும்.

ஓர் அரசை இம்மாதிரியான காரணங்களுக்காக விலக்கி வைப்பது காமன்வெல்த் கூட்டமைப்புக்கு புதிதல்ல.
இன்றும் கூட 54 நாடுகள் கொண்ட இக்கூட்டமைப்பில் 53 நாடுகள் தான் இருக்கின்றன. பீஜி இராணுவ அரசு
விலக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

1977ல் உகாண்டாவில் இடிஅமீனின் கொடுங்கோல் ஆட்சியைக் கண்டித்து அந்நாட்டை விலக்கி வைத்தது.
ஜிம்பாவேயில் (white minority govt of Ian Smith) , தெற்கு ஆப்பிரிக்காவில், ஏன் பாகிஸ்தானைக் கூட விலக்கி வைத்த நிகழ்வுகள் எல்லாம் நடந்திருக்கின்றன.
பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் பிரிந்தப்போது பிரிக்கப்பட்டதாக கோபித்துக்கொண்டு பாகிஸ்தான்
காமன்வெல்த்திலிருந்து விலகிக்கொண்டதும் உண்டு.
அதுமட்டுமல்ல, 1977 (Gleneagles Agreement that banned sporting contact with Apartheid South Africa.) உடன்படிக்கைப்படி விலக்கி வைக்கப்பட்டிருந்த தெற்கு ஆப்பிரிக்காவின் விளையாட்டு வீரர்களை 1981ல் நியூசிலாந்தின் பிரதமர்
ராபர்ட் முல்டன் வரவேற்று கொண்டாடியதை மிகக்கடுமையாக விமர்சனம் செய்தது.

இன்று?

அதே அந்த காமன்வெல்த் நாடுகளின் சந்திப்பு இலங்கையில் நடப்பதன் மூலம் அந்நாட்டின் அதிபரான
ராஜபக்சே காமன்வெல்த அமைப்பின் தலைவர் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிடுவார். அதாவது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அவரே காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு தலைவராக இருப்பார்!!
காமன்வெல்த்தின் உறுப்பினராக கூட இருக்கும் தகுதியை இழந்துவிட்ட ஓர் அரசு நவம்பரில் இலங்கையில் நடக்கவிருக்கும் இச்சந்திப்பின் மூலம்
அந்த அமைப்பிற்கே தலைவராகும் அவலம் நடந்துவிடும்!
காமன்வெல்த் சந்திப்புகள் வெறும் கிட்டிபார்ட்டிகளாகிவிடும். காமன்வெல்த்தின் மீது இருக்கும் ஓரளவு மரியாதையும் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிடும்.

இக்காரணங்களுக்காகவே கனடா அரசு இலன்கையில் நடக்கவிருக்கும் சந்திப்பை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டது. இங்கிலாந்தில் எதிர்ப்புகள் வலுக்கின்றன. இங்கிலாந்து அரசிக்கு வேண்டுகோள்
வைப்பதும் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதும் நடந்துவருகிறது. தமிழக அரசும் இந்தியப்பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது, புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. அதனாலேயே என்னவோ, இது என்னவோ தமிழ்நாட்டு பிரச்சனை போல நினைத்துக் கொண்டு
வழக்கம்போல கள்ளமவுனம் சாதிக்கிறது இந்திய அரசு!

காமன்வெல்த் காப்பாற்றப்படுமா?

Tuesday, March 26, 2013

திருமண அழைப்பிதழ்







மேற்கண்ட திருமண  அழைப்பிதழை இன்றைய தினகரன்\மும்பை பதிப்பு
நாளிதழின் கடைசிப் பக்கத்தில் பார்த்தேன். நானும் ஒரு மும்பை வாசியாக
இருப்பதால் உங்கள்அனைவரையும் திருமணத்தில் கலந்து கொள்ள
\விரும்பி அழைப்பது என் கடமையாகிவிட்டது.

வருக வருக அனைவரும் வருக.

இத்திருமண அழைப்பிதழில் குடும்பத்தில் மூத்தவன் என்கிற
முறையில் மூத்த சகோதரனின் பெயரை தங்கள் நல்வரவை
விரும்பும் என்றாவது அச்சிட்டிருக்கலாமே என்று
உங்களில் பலர் யோசிப்பது எனக்குப் புரிகிறது.
எனக்கும் அதே எண்ணம் தான் வந்தது.

தலைவரிடம் கேட்டால் தனக்கு எதுவுமே தெரியாது என்பார்.

எல்லாம் பக்தரடித் தொண்டர்களின் வேலை என்று அறிக்கைவிடுவார்.
.
யார் பெயரைப் போடலாம், போடக்கூடாது என்பதை
பொதுக்குழு தீர்மானிக்கும் என்பார்.

பாவம் மூத்தவன்! என்ன செய்வாரோ தெரியவில்லை,
தலவலி, வயத்தவலி என்று ஏதாவது காரணம் சொல்லி
நிகழ்வுக்கு வராமல் இருப்பதைவிட வேறு ஏதாவது
வழி இருக்கிறதா என்ன?

இச்செய்தியை சமகால அரசியல் நிகழ்வுகளுடன்
தொடர்பு படுத்திக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.



Wednesday, March 20, 2013

இலண்டன் சர்ச்சில் இசுலாமியர் தொழுகை









ஸ்காட்லாந்தில் அபிர்டீன் பகுதியில் இருக்கும் செயின்ட் ஜாண்
ஆலயமும் சையத் ஷா முஸ்தபா ஜெம் மஜித் பள்ளிவாசலும்
அருகருகே இருந்தன. பள்ளிவாசல் சிறிதாக இருந்ததால்
தொழுகை நடத்தும் இசுலாமியர்கள் திறந்தவெளியில்
உட்கார்ந்து  தொழுகை நடத்தினார்கள்.




பனிப்பொழியும் நேரம், உறைகள் அணியாத கைகள்,
குளிரில் நடுங்கும் கால்களுடன் அந்த இசுலாமிய சகோதரர்கள்
திறந்த வெளியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொழுகை
நடத்துவதை எல்லோரையும் போல வேடிக்கைப் பார்க்கவில்லை
ஐசக் பூபாலன்.



ஐசக் பூபாலன்  செவிலியர் வேலைக்குப் படித்தவர். இலண்டனில்\
கிறித்தவ ஆலயத்தில் போதகராக இருக்கிறார். சம்பந்தப்பட்ட
ஆலய  நிர்வாகத்தினரிடம் முறையாகப் பேசி வெள்ளிக்கிழமைகளில்
சர்ச்சில் எதுவும் நடப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டி  அனுமதி வாங்கினார்
வெள்ளிக்கிழமைகளில் இசுலாமியர்கள் சர்ச்சுக்குள் வந்து ஐந்து முறை
தங்கள் தொழுகையை நடத்தலாம் என்றார்.. ஆரம்பத்தில் இசுலாமியர்களிடம்
தயக்கம் இருந்ததாம். ஒன்றிரண்டு பேராக வர ஆரம்பித்திருக்கிறார்கள்,
இப்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இசுலாமியர்களின்
தொழுகை இடமாக சர்ச் .

ஐசக் பூபாலன் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் என்பது
நமக்குப் பெருமை தரும் செய்தி.


(நன்றி: டைம்ஸ் ஆஃப்  இந்தியா 21/3/13 )

காட்சி மாற்றங்கள்




இடையில் நடந்தது என்ன?

காட்சிகளில் மாற்றம்.




Thursday, March 7, 2013

யாருக்குப் பெண்கள் தினம்?





மார்ச் 8, 1908ல் மென்கெட்டன் வீதிகளில் 15000 பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக நடத்திய அந்தப் பேரணி..
பெண்கள் தினத்தின் அந்த முதல் புள்ளியில்
ஒரு கறுப்பு நிறப் பெண் கூட கலந்து கொள்ளவில்லை
என்கிற வரலாற்றை பெண்கள் தினம் கொண்டாடும் பலர்
மறந்து போயிருக்கலாம்.
ஆனால் எங்களால் மறக்க முடியவில்லை.
ஏன் தெரியுமா...?
நியூயார்க்கின் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் அந்த
உரிமையைக் கூட ஆப்பிரிக்கன் அமெரிக்கன் கறுப்புபெண்கள்
பெற்றிருக்கவில்லை.

அன்றைக்கு பெண்கள் உரிமைகாக நடந்த அந்தப் பேரணியாகட்டும்,
அங்கே ஒலித்த பெண்களின் குரலிலாகட்டும் ,
தன்னை ஒத்த சக மனுஷியான ஆப்பிரிக்க பெண்ணுக்காக
எந்தக் குரலும் இல்லை.

இந்தக் கதை ஏதொ ஆப்பிரிக்க அமெரிக்க இன வரலாற்றின் பக்கம் மட்டுமல்ல.,
இதோ இந்தியாவின் ..சாதியக் கொடூரத்தில் எவராலும் எப்போதுமே
எழுதப்படாத இந்தியப் பெண்களின் கதையும் தான்.

இந்திய இராணுவமே எங்கள் பெண்களை வல்லாங்கு செய்கிறது.
காஷ்மீரில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பெண்கள்
இந்திய எல்லைக் காவல் படையால் அனாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
பாலியல் வன்புணர்வு குற்றஞ்சாட்டப்பட்டவர்களை எங்கள் அரசியல்
கட்சிகள் வேட்பாளர்களாக்கி நாடாளுமன்றம் அனுப்புகின்றன.
எங்கள் தலைநகர் டில்லியில்  ஒரு நாளுக்கு 4 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள்.
பெற்ற மகளைத் தாயாக்கும் ஆண்மிருகஙக்ள் எங்களுடன் வாழ்கின்றன.
ஒருதலைக் காதல் கொண்டு ஏற்க மறுக்கும் பெண்களை ஆசிட் ஊற்றி
தன் காதல் பழியைத் தீர்த்துக் கொள்ளும் இளைஞர்கள் எங்கள்
சமூகத்தில் நடமாடுகிறார்கள்.
காதலும் வீரமும் எங்கள் பண்பாடு என்று கொண்டாடிய எங்கள் சமூகத்தில்
சாதிமறுப்பு திருமணம் செய்ய, அதிலும் தலித் ஆண்களைக் காதலிப்பதும்  திருமணம் செய்து கொள்வதும் தங்கள் சுயசாதிப் பெருமைக்கு இழுக்கு
என்று கொக்கரிக்கும் அரசியல் தலைவர்கள் பகிரங்கமாக எங்கள்
மேடைகளில் உலா வருகிறார்கள்.
ஊமைகாளாக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் வீட்டுப் பெண்கள்.
இந்தப் பெண்களுக்கு இல்லை பெண்கள் தினம் 


எங்கள் சாலைகளில் பெருக்கி சுத்தம் செய்யும் அவள்
ஓடும் புகைவண்டியில் நெருக்கியடித்து நுழைந்து
காதணியும் நைட்டியும் விற்றுப்பிழைக்கும் அவள்
சிவப்பு விளக்குப் பகுதியில் பகல் நேரத்தில்
பள்ளிக்கூடம் போய் இரவு நேரத்தில்
கட்டிலுக்கடியில் ஓசையின்றி தூங்கும் மகள்
இந்தப் பெண்களுக்கு இல்லை பெண்கள் தினம். 

பின் யாருக்குத்தான் இந்தப் பெண்கள் தினம்?



பெப்சி கம்பேனியில் இந்திரா நொயி
ஐ சி ஐ சி ஐ வங்கியில் CEO சந்தன் கோச்சர்
அப்பலோ மருத்துவமனை மேனேஜிங் டைரக்டர் பிரீத்தா ரெட்டி
ஜே பி முர்கன் இந்தியாவின் CEO கல்பனா மூர்பாரியா
இந்திய பேரரசின் எல்லையில்லா அதிகாரம் கொண்ட சோனியா காந்தி
தமிழகத்தின் ஜெயலலிதா
மம்தா ...

இவர்களுக்கும் இவர்களை ஒத்த கார்ப்பரேட் மற்றும் அரசியல் தலைவர்களின்
பெரிய வீடு சின்னவீடுகளுக்கும் அவர்களின் மகள், மருமகள்கள் மற்றும் பேத்திமார்களுக்கும் வெள்ளித்திரை சின்னத்திரை பிரபலங்களுக்கும்
மார்ச் 8, பெண்கள் தின கொண்டாட்டம் உண்டு, உண்டு, உண்டு.







Tuesday, March 5, 2013

அந்தக் கதை

மராத்தி கவிஞர் கவிதா மகாஜன் எழுதிய  the story
கவிதையின் தமிழாக்கம்.


அவள்
சூரிய வெளிச்சத்தை
உணர்ந்த தருணங்களின் கதையிது.

மண்ணில் அந்த வீடு
விரைவாகவும் உறுதியாகவும்
எழுந்து நின்றது.
கதவுகளும் சன்னல்களும
நம்பமுடியாமல்
வாய்ப்பிளந்து நின்றன.
சுவர்கள் பெருமூச்சுவிட்டபடியே
அவசரமாகக் கண்களை மூடும்போது
அவள்
பிரகாசமான 
சூரிய வெளிச்சத்துண்டுகளை
தன் நாக்கில் வைத்துக் கொண்டாள்.

தலைவன் அவளிடம் கேட்டான்:
உன் வசீகரமான மேனி
சிவந்த உதடுகள்
குளிர்ந்த விழிகள்
எல்லாம் என்னவாகும்?

கண்களில் மின்னும் ஆசைகளுடன்
கைகளைப் பொன்னூஞ்சலாக்கி
அவன் நிழல்
அவளை நெருங்கும் ஆசையில்..
ஆனால் அவளோ
சிரித்துக் கொண்டே இருந்தாள்
பொன்னிறமாக ஒளிவீசும்
சூரிய வெளிச்சத்தை
விடாமல் பிடித்துக் கொண்டே.


Friday, March 1, 2013

நேற்று அவர்கள் அறிவித்தார்கள்..



நேற்று அவர்கள் அறிவித்தார்கள்
--------------------------------------------------------------அர்ஜூன் காம்ப்ளே

சொர்க்கத்து மலர்களை முகர்ந்து பார்ப்பதில்
மும்முரமாக இருந்தோம் நாங்கள்
அவர்கள் வந்து எங்கள் பாதங்களை
பூமிக்கடியில் புதைத்தார்கள்
மலரின் மணங்களைக் களவாடிச் சென்றார்கள்
மாளிகை எழுப்பினார்கள்:

மழைப் பொழிந்த போது
தூய்மையான தண்ணீரைப் பருகினார்கள்
புதையுண்ட எங்கள் பாதங்களிலிருந்து
பூதியபூமி மேலெழுந்தது.
அதேபூமியில்
பல்வேறு வண்ணங்களில்
பலதரப்பட்ட மலர்களைப் பயிரிட்டார்கள்
பல்வேறு பரிசோதனைகளைச் செய்தார்கள்
மலர்களைப் பறிக்கும்போது
எங்கள் கால்களை அழுத்தி மிதித்தார்கள்
தெரிந்தோ தெரியாமலோ

அதன்பின் அவர்கள் ஒரேவண்ணத்தை
மலர்களில் ஒட்டினார்கள்
அதே மலர்களால் தங்கள் தேர்களை அலங்கரித்தார்கள்
அதே மலர்களால் தங்கள் போர்களைக் கொண்டாடினார்கள்

சிலகாலம் மழைவரவில்லை
தேர்கூட சிறைக்கூடத்தில்'
சவச்சீலைகள் கூட தென்படவில்லை
அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்
அவர்களின் தலைவர்
எங்கள் கல்லறையைத் தோண்டினார்
அதன்பின் அவர்கள் முடிவுசெய்தார்கள்
கள்ளிச்செடிகளை பயிரிடுவதென்று.
நேற்று அவர்கள் அறிவித்தார்கள்
கள்ளிச்செடிகளைப் பிடுங்கி எறிவதாக
நேற்று அவர்கள் அறிவித்தார்கள்
எங்கள் பாதங்களை விடுவிப்பதாக'
நேற்று அவர்கள் அறிவித்தார்கள்
நாங்கள் பருகுவதற்கு சிறுதுளி தண்ணீர் தருவதென.


(மராத்தி கவிதையின் தமிழ் மொழியாக்கம்: புதியமாதவி
உதவி: அர்ஜூன் டாங்க்ளே)