Sunday, March 3, 2019

ஆய்த எழுத்து


உயிர் எழுத்துகள்
சிறுபான்மையான என்னை ஒதுக்கி வைப்பதில்
கவனமாக இருக்கின்றன.
மெய்யெழுத்துகளுக்கு
இந்த மெய்யுடன் 
தீண்டாமை.
உயிர்மெய் வாதிகளுக்கு
எப்போதும் என்மீது ஒவ்வாமை.
ஆய்த எழுத்து நான்.
என்னை எவரும் வளைக்கவோ
சுழிக்கவோ சுருக்கவோ முடியாமல்
தோற்றுப்போனதை
அவர்களின் எழுத்து அதிகாரிகள்
எழுத மறுத்தாலும்
உன் பொருளதிகார கருவூலம்
மறந்துவிடவில்லை.
எழுத்துவரிசையில்
கடைக்கோடியில் ஒதுக்கப்பட்டதும்
காலந்தோறும் ஒடுக்கப்பட்டதும்..
ந ந்தன் எரிக்கப்பட்ட தும்
கதையல்ல.
ஒற்றுப்பிழைகள் அறியாத
புணர்ச்சி மையத்தின்இரவுகள்
சிவ சிவா..

உன் மூன்றாவது கண்
எனக்காக விழித்திருக்கிறது.
உன்மத்த தாண்டவத்தில் அடக்கிவிடாலம்
அடங்கிவிடலாம் என்று
ஆசைக்காட்டாதே.
சொல்வதைக் கேள்
இணையாத என் புள்ளிகளின்
இடைவெளியிலிருந்து
காற்றுப் பிரசவித்த
இசையின் குறிப்புகள்
உன் சப்த தாண்டவத்திற்குள் அடங்கிவிடுமோ!.
ஓம் நமசிவாய..

No comments:

Post a Comment