Sunday, October 29, 2023

மாணவர்களுக்கு ஒரு கையேடு - குமணராசன்

 

.மாணவர்களுக்கு ஒரு கையேடு

 மும்பை தமிழ் இலெமுரியா அறக்கட்டளை தலைவரான திரு குமணராசன் அவர்கள் பல்வேறு பயணக்கட்டுரைகள், சமூக அரசியல் கட்டுரைகள் எழுதியவர். அதில் தடம்பதித்தவர். அண்மையில் அவர் எழுதி வெளியிட்டிருக்கும் ‘செவ்வியல் இலக்கியங்கள்: ஓர் அறிமுகம்” கட்டுரை தொகுப்பு வித்தியாசமானது. அவருடைய தமிழார்வம் மட்டுமல்ல, அவர் ஈடுபாடும் அதில் அவர் கொண்டிருக்கும் தெளிவும் இக்கட்டுரைகளின் வெளிப்படுகிறது.

     மாபெரும் இலக்கியவெளி பரப்பை எடுத்துக் கொண்டு அதை ஒரு கையேடாக கொடுப்பது என்பது அவ்வளவு எளிதானப் பணியல்ல. பக்கம் பக்கமாக ஒவ்வொரு செவ்விலக்கியம் குறித்தும் எழுதிவிடுவது எளிது. ஆனால், அத்தனையும் சேர்த்து ஒரு குறிப்பேடு போல எழுதி அதிலும் கவனமாக எது தேவையோ எது ரொம்பவும் முக்கியமானதோ அதையும் விட்டுவிடாமல் சேர்த்துக் கொண்டு குறிப்பெடுப்பது என்பது கடினமான பணி. அந்த அரிதினும் அரிதான காரியத்தை தன் முயற்சியால் இளைய தலைமுறைக்கு பயன்படும் வகையில் கொடுத்திருப்பது பாராட்டுதலுக்குரியது  அது இன்றைய தேவையும் கூட.

     செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் தன் முதல்கட்டப் பணிக்காக பட்டியலிட்டிருக்கும் 41 செவ்வியல் இலக்கியங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மிகவும் கவனமாக எழுதப்பட்டிருக்கிறது இக்கட்டுரைகள்.

+ @ நாழிகை கணக்கிடும் முறையை தமிழர் அறிந்திருந்தனர். முல்லைப்பாட்டு பற்றிய குறிப்பெழுதும்போது ‘குறு நீர்க்கன்னல்” பற்றி எழுதுகிறார், ஒரு கலத்தில் நிரைத்து வைத்திருக்கும் நீரைச்சின்ன்ஞ்சிறு துளை வழியாக சிறுகச் சிறுகக் கசியவிட்டு , அவ்வாறு கசியும் நீரை அளந்து காண்பதன் மூலம் நாழிகையைக் கணக்கிட்டனர். இதைச் செய்பவர்கள் ‘நாழிகைக் கணக்கர்’ என்று அறியப்பட்டனர். ( பக் 112)

+ @ குறிஞ்சிப்பாட்டும் கபிலரின் 99 மலர்களும் தமிழரின் மண்சார்ந்த மணமிக்க மலைவாழ்க்கை. அந்த மலர்களை அறியத்தருவதும் அந்த வரிகளை குறிஞ்சிப்பாட்டின் அடிக்கோடிட்ட வரிகளாக்குவதும் மாணவர்களுக்கு தேவையானதாக இருக்கிறது.

+ @ சங்க இலக்கியத்தை அகம் என்றும் புறம் என்றும் வகைப்படுத்தி இருப்பதன் அடிப்படை என்ன? இதை எளிதாக்கவே நெடுநல்வாடை ஏன்

புறப்பொருள் வகைப்பாட்டில் சேர்க்கப்பட்டது என்பதைக் கொண்டு விளக்கம் தருகிறார். (பக் 122)

+ @ பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஆசிரியர் பத்தொன்பது நூல்களைப் பற்றி குறிப்பெழுதுகிறார். காரணம், பதினெண் கீழ்க்கணக்கு வகைப்பாட்டில் ‘இன்னிலை, கைந்நிலை என்ற இரண்டு தொகுப்புகள் குறித்த விவாதமும் பட்டியலிடுவதில் சிறு குழப்பமும் இருக்கத்தான் செய்கிறது. அதையும் மறக்காமல் இரண்டையுமே இந்த நூல் வகைப்பாட்டில் சேர்த்திருப்பதன் மூலம் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின்  தொகுப்புக்கும் வழிகாட்டுவதாக

அமைகிறது இத்தொகுப்பு.

+ @  நக்கீரன், ஒளவையார் பெயர்களும் இவர்க:ளின் காலங்களும் ஆய்வுக்குரியவை. கொங்குதேர் வாழ்க்கை பாடிய நக்கீரனும், திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரனும் ஒருவர் அல்லர். ஒரே பெயர் கொண்ட, காலத்தால் வேற்பட்டவர்கள் என்பதை திருமுருகாற்றுப்படையின் குறிப்பில் மறக்காமல் இணைத்திருக்கிறார்.

+ @ செவ்வியல் இலக்கியங்களில் பெண் என்னவாக இருக்கிறாள்? பெண்ணுடல் வண்ணனையைக் கொண்டு அதை மறைமுகமாக வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும், செவ்வியல் இலக்கியம் இன்றைய ஆபாசம் என்று கருதுவதை எவ்வாறு கையாண்டிருக்கிறது என்பதாகவும் இதைப் புரிந்து கொள்ள முடியும் . (பக் 95)

     ஒவ்வொரு தொகுப்பு குறித்தும் இப்படியாக சில குறிப்புகளை எடுத்து அதை முன்வைக்கும் ஆசிரியர் மிகவும் தெளிவுடன் தன் கருத்தை இறுதிப்பகுதியில் சொல்லி இருப்பது அவருடைய சமூக அரசியல் தெளிவை

உறுதிப்படுத்துகிறது.

ஒவ்வொரு  நூற்றாண்டிலும் பல்கிப் பெருகிய இலக்கியங்கள் ஏராளம். ஆனால் இந்த இலக்கிய வளர்ச்சியானது தமிழ் மொழியின் தொடர்ச்சி என்ற அளவில் இருந்ததேயொழிய தமிழ் மக்களின் மரபு வழிச் சிந்தனையின் வளர்ச்சியாக அமைந்ததா என்றால் இல்லை என்றே கூறலாம் “ (பக் 250) இத்தெளிவு திரு குமணராசன் அவர்களின் தனித்துவமான அடையாளம் .

     எத்துணை சிறப்புமிக்கதாக இருந்தாலும் அதை ஒன்றுவிடாமல் சொன்னால் அதைக்கேட்க நேரமோ பொறுமையோ இல்லை நம்  இளைய தலைமுறையினருக்கு என்பதுதான் உண்மை. அவர்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும், நாளை அவர்களில் சிலராவது இந்தக் கையேடு கொண்டு தங்கள் தேடலின் ஊடாக பயணிப்பார்கள். அதற்கான ஒரு திறவுகோல்தான் இப்புத்தகம்.

     ஒவ்வொரு மாணவர்களிடமும் இருக்க வேண்டிய கையேடு. மாணவர்களுக்கு மிகச்சிறந்த பரிசு இப்புத்தகம்.

 

  நூல் :

செவ்வியல் இலக்கியங்கள் – ஓர் அறிமுகம்.

ஆசிரியர்: சு. குமணராசன்.

வெளியீடு : தமிழ் அலை ஜூலை 2023.

பக் 256, விலை ரூ 250

 

Saturday, October 14, 2023

ஹே சிவா.. உன் கருப்பி நான்

 ஹே சிவா...



தெரியும் தானே நான் கருப்பி
என்பதும்
அது என் நிறம் மட்டுமல்ல
என்பதும்.
அது என் உரம்
என் திறம்
என் வலி
உன் அழகியல் தோற்றுப்போன
யோனியின் சுழி.
வெள்ளை எலிகளும்
வெள்ளை பன்றிகளும்
உலாவரும் உன் தேசத்தில்
பச்சையமாய் உயிர்த்திருக்கும்
மழைத்துளியின் கருவறை
இந்தக் கருப்பி.
உன் புனைவுகள்
எட்டாத வானம்.
உன் கவிதைகள்
அறியாத மொழி.
வெண்மை புனிதம்
கருமை இருமையென
எவன் சொன்னான்?
ஏன் சொன்னான்?!
போடா போ.
ஆத்தாவும் அப்பனும்
கறுப்பாக இருப்பதை
வெளியில் சொல்லாதே.
ஃபேர் அண்டு லவ்லி
தேவதைகளைத் தேடிக் கண்டுப்பிடி.
பசுவின் பால் மட்டும்
வெள்ளை.
எருமைப் பால் கறுப்பாக
இருக்கும்.
நம்பு.
சொர்க்கலோகத்தில்
சிவப்பிகளுடன்
ஆடிப்பாடு.
உன் பிறவிப்பயன்
கிட்டும்.
தாகமெடுக்கும் போது
தண்ணீர்க் குடிக்காதே.
கார்மேக நீர்த்துளி
கறுப்பின் அடையாளம் டே.
வேண்டாம்.
சிவப்பு வெள்ளையின்
மூத்திரம் குடி.
ஹே.. சிவா..
போடா போ..
கங்கையைத் தலையில்
வைத்துக் கொண்டாடு.
பிரம்படி பட்டும்
பித்து தெளியாத உன்னை
நம்புவதற்கில்லை.
சிவசூத்திரங்கள்
மெளனிக்கின்றன.
பச்சைக்கிளியின்
புதிய சிறகுகள்
முளைக்கும் காலம்.
தவக்காலம் முடியும் தருணம்..
கண்முழித்தவுடன் வா.
உன் பித்தம் தெளிய
வழிப் பிறக்கும்.
பிறக்கும்.

Friday, October 6, 2023

பெரியாரியம் > காந்தியம் > கலை இலக்கியம்

 தமிழ் மண்ணில் பெரியாரியம் எந்தளவுக்கு

தமிழ் கலை இலக்கிய வடிவமாக வெளிவந்திருக்கிறது ?

ஏன் பெரியாரியம் மேடைப்பேச்சுகளுடன் ஆரம்பித்து

அதிலேயெ தேங்கி அதைவிட்டு வெளியில் வரமுடியாமல்

மூச்சுத்திணறுகிறது?

இக்கேள்வியை முன்வைத்தவுடனேயே என் தோழர்கள்
கொதித்தெழுவார்கள். சும்மா பொங்குவதால்
அடுப்புத்தான் பழுதடையும்.
இப்படிப் பொங்கிப் பொங்கியே அடுப்பிலிருக்கும்
பாத்திரமும் காலியாகும். வேறென்ன கண்டோம்?
இத்தனைக்கும் திராவிட அரசியல் தலைவர்கள்
னிமா துறையில் கதை வசனம் எழுதியவர்கள்
என்பதும் அதன் ஊடாக அவர்கள்
எதை மேடைகளில் பேசினார்களோ அதையே அவர்களின் கதைப்பாத்திரங்களையும் பேச வைத்தார்கள், அவ்வளவுதான்.
அதைத்தாண்டி பயணிக்கவில்லை.
இதெல்லாம் நேற்று "பரிணயம்" மலையாள திரைப்படம்
பார்த்த முடித்தப்பின் உறுதியானது.



இத்திரைப்படம் 1994ல் வெளிவந்திருக்கிறது.
தங்கள் சமூகத்தில் பெண்களின் பரிதாபமான நிலையை
அவள் உணர்வுகளை ரொம்பவும் துல்லியமாக
கதைப்போக்கில் காட்டி இருப்பார்கள்.
கதைமுடிவில் அப்பெண் தன்னைக் கர்ப்பினி ஆக்கியவனே
அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு
அவன் தான் தகப்பன் என்பதை ஒத்துக்கொள்ள
வரும் காட்சியில்
"இவனில்லை என்பாள் அவள்.
என் பிள்ளைக்கு தகப்பன் தேவை என்றால்
ஒரு நளனோ பீமனோ தகப்பன் என்று
சொல்லிக்கொள்கிறேன்" என்பாள்.
(கதைப்போக்கில் கதகளி ஆடிய மாதவன்
அந்த வேடத்தில் வந்துதான் அவளோடு இருந்தான். )

அதன்பின், அப்பெண் இராட்டையில் நூல் நூற்பதோடு
திரைப்படம் முடியும்.
அவள் காந்தியம் பேசவில்லை,
ஆனால் இக்காட்சி கொடுத்த அழுத்தமும் வீரியமும்
விளக்கமும் அவள் எவ்வளவு வசனங்கள்
பேசி இருந்தாலும் வராது.
இப்படியான வெளிப்பாடுகளை
பெரியாரியமும் கொடுத்திருக்க வேண்டும். ..

சம் திங்க் இஸ் மிஸ்ஸிங்க்.

Thursday, September 14, 2023

அறிஞர் அண்ணாவின் வேண்டுகோள்.




 "என்னைப் பின்பற்றுகிறவர்களும்

நேர்மையாளர்களாக இருக்க வேண்டும் "

அறிஞர் அண்ணா.
**
உங்களை நாத்திகர் என்கிறார்கள், நீங்கள் நிஜமாகவே
நாத்திகர்தானா?
"இல்லை"
அறிஞர் அண்ணாவின் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி நேர்காணல்
மிகவும் முக்கியமானது. பத்திரிகையாளர் ஏ. எஸ். ராமன் அவர்களுடன், அண்ணாவின் இல்லத்தில் வைத்து நடைபெற்ற
இந்த நேர்காணல் அண்ணாவின் மறைவுக்குப் பின்
13/04/1969 இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் வெளியாகிறது.
இந்திய தேசத்தின் அறிவுஜீவிகள் வாசித்த,
கொண்டாடிய பத்திரிகை இ.வீ.
ஏ. எஸ். ராமனின் இக்கேள்விக்கு அறிஞர் அண்ணாவின்
தெளிவான பதில் நம்மை சிந்திக்க வைக்கிறது.
"மதத்தைப் பற்றிய கேள்விக்கு வருவோம், உங்களை
நாத்திகர் என்கிறார்கள். நீங்கள் நிஜமாகவே நாத்திகர்தானா?
"இல்லை.
நிறுவனமயமாகும் மதங்களின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை
. மதம் இல்லாமல் மனிதனால் வாழவே முடியாது என்பது
என்னுடைய முடிவு. நான் உருவ வழிபாட்டுக்கு எதிரானவன்
. விக்கிரகங்களை வழிபடவும் மாட்டேன்.
விக்கிரகங்களை உடைப்பதை ஆதரிக்கவும் மாட்டேன்."👌
மும்பையிலிருந்து, அதாவது அன்றைய பம்பாயிலிருந்து
வெளிவந்த "சங்கர்ஸ் வீக்லி' இதழில் இந்த வார ஆளுமை
என்ற தலைப்பில் தமிழகத்தின் முதல்வராக இருந்த
அறிஞர் அண்ணாவின் பேட்டி 5/3/1967
தேசிய இதழில் வெளிவந்திருக்கிறது.
அதிலும் இதே கேள்வி வேறொரு விதமாக.
"உங்களை நாத்திகர் என்கிறார்கள்.
இதற்கு உங்கள் பதில் என்ன?"
அப்படியில்லை. எனக்கு 'உண்மையான நம்பிக்கை' உண்டு.
எனது சேவையையும் பணிகளையுமே வழிபாடாகக் கருதுகிறேன்.
எம் மக்கள் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என்பதே
\ எனது நோக்கம். அதே சமயம், அவர்கள் ஆத்திகர்கள்
என்ற போர்வையில் போலி வேடதாரிகளாகிவிடக் கூடாது
என்ற கவலையும் உண்டு.
அடுத்தக் கேள்வியில் தன் கருத்தை தெளிவாக
தன் "சொர்க்கவாசல்' திரைப்படத்தில் முன்வைத்திருப்பதாக
அண்ணா விளக்கம் அளிக்கிறார்.
அறிஞர் அண்ணா தன்னைக் கவர்ந்த எழுத்தாளர்களாக
இப்பேட்டியில் சொல்வது ,

சாமர்செட் மாம், பெர்னாட்ஷா, பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்,
ஹெச். சி. வேல்ஸ், ஆல்பிரட் மார்ஷல்.
அண்ணாவின் வேண்டுகோள் இதுதான்.
"என்னைப் பின்பற்றுகிறவர்களும்
நேர்மையாளர்களாக இருக்க வேண்டும் "
அறிஞர் அண்ணாவைப் போற்றுகிறேன்.
ஒரு தலைமுறை அவரைப் பின்பற்றியது.
ஒரு தலைமுறை அவர் பெயரை மட்டும்
பிடித்துக் கொண்டது.
இன்று அவர் சிலையாகவும்
அரசியலில் பெயராகவும் மட்டுமே
இருக்கிறார்.
. ****
எனக்கும் என் அரசியலுக்கும்
என்றும் அவரே என் வழிகாட்டி.
என் ஆசான்.
அதனால்தான்
அண்ணாவைப் போற்றுகிறேன்,
இன்று அண்ணாவின் பிறந்த நாள். 15 செப்.











#புதியமாதவி_மும்பை20230915

Tuesday, September 12, 2023

முமபையில் ஒரு பனைமரம்

 


மும்பையில்

உங்களோடுதான் இருக்கிறேன்.

ஆனால் உங்களில் ஒருத்தியாக இல்லை.
இது மும்பையின்
புறக்கணிப்பு அல்ல.
என்மீதும் என் எழுத்தின் மீதுமான
உங்கள் தீண்டாமையும் அல்ல.
என்னை என் தனித்துவத்தை
வேறு எப்படித்தான் காட்டுவீர்கள்?!
நன்றி.
எனக்கே என் அடையாளத்தை
நானே மறந்துப்போனாலும்
அடிக்கடி நினைவூட்டும்
உங்கள் அன்பில்
நனைகிறேன்.
மீண்டும் நன்றி.
உங்கள் மாடித்தோட்டத்தில்
ரோஜாக்கள் பூக்கலாம்.
துளசியைக் கூட வளர்க்கலாம்.
ஆனால் பனைமரங்கள்
முளைப்பதில்லை.
நானும்தான்.
மீண்டும் மீண்டும் நன்றி.

Thursday, September 7, 2023

அண்ணாவின் திராவிடமாடல் 1

 அண்ணாவின் திராவிட மாடல்..



திமுக வின் தலைமையகம் 2/12/1951ல் திறக்கப்பட்டது.
சென்னையில் சொந்தமாக ஓரிடம் வாங்கி அதில் தன்
அரசியல் கட்சியின் தலைமையகம் செயல்பட
வேண்டுமென்பது அண்ணாவின் அன்றைய
கனவாக இருந்த து. கனவு கண்டவுடன் அதை நனவாக்கும்
சூழல் அன்றில்லை. அன்றைய திமுக என்பது வேவேவேறு ..
. திமுக.
    தங்கசாலை தெருவிலிருந்த அண்ணாவின் உறவினர் இல்லத்தில்தான்
திமுக கட்சி அலுவலகம் நடந்து கொண்டிருந்தது.
கட்சியின் ஏடான திராவிட நாடு பணிகளும்
அந்த அறையில் தான் நடந்தன.
கொஞ்சம் கொஞ்சமாக அவர் சேமிப்பும் தம்பிகளின் நிதியுமாக
சேர்த்த ரூ. 13000/ ல் ராயம்புரம், சூரிய நாராயணசெட்டி தெருவிலிருந்த கட்டிடத்தை வாங்கினார்.
திமுகவின் அறிவகம், தலைமைச்செயலகமாக உருவெடுத்தது.
அந்த அறிவகம் திறப்புவிழாவில் திமுகவின் தலைமைச்செயலகத்தை திறந்துவைத்தவர் அண்ணாவின் தம்பி
குமரி மாவட்ட வி.எம்.ஜாண் அவர்கள்.
அன்று குமரி மாவட்டத்தில் திமுகவுக்கு பெரிய
செல்வாக்கெல்லாம் கிடையாது..!
ஜாண் அவர்களைக் கொண்டு திறந்து வைப்பதன் மூலம்
திமுகவின் தேர்தல் வெற்றிக்கு அது எந்த வகையிலும்
தாக்கத்தை ஏற்படுத்திவிடப் போவதில்லை.
ஆனாலும் அறிஞர் அண்ணா தேர்ந்தெடுத்தவர் வி. எம் ஜாண்
என்பதில் இருக்கிறது அண்ணாவின் திராவிடமாடல்.
வி. எம் ஜாண் அவர்கள் இந்திய சாதி சமூகத்தில் ஒடுக்கப்பட்ட
சமூகத்தைச் சார்ந்தவர். ( நன்றி இந்துதமிழ்)
அண்ணாவின் திராவிட மாடல் இங்கிருந்து ஆரம்பமாகிறது.
எந்தவொரு மாற்றமும் முன்னேற்றமும்
எந்தப் புள்ளியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்
என்பதை தன் கட்சிக்கும்
தம் தமிழ்ச் சமூகத்திற்கும்
இப்படித்தான் உணர்த்தினார் அண்ணா.

Saturday, July 15, 2023

மும்பை கல்லூரியில் தமிழ் வாசிப்பு

 அயல் மாநிலத்தில் தமிழ் வாசிப்பு.


 எங்களுக்குள் குழு அமைத்துக்கொண்டு எங்கள் புத்தகங்களை  நாங்களே வாசித்துக்கொண்டு

பேசிப்பேசி அதில் புளகாங்கிதமடைந்து

எங்கள் புத்தகங்களை தமிழ் நாட்டிலிருந்து பிரபலங்களை வரவழைத்து வெளியிட்டு

அவர்களுடன் போட்டோ எடுத்து போட்டுக்கொண்டு

அதில் மாபெரும் சாதனை செய்துவிட்டதாக நினைத்து..

எல்லாமும் அர்த்தமிழந்து போகிறது எம் மும்பை வாழ்க்கையில்!

அதை உணர்ந்த தருணங்கள் வலி மிகுந்தவை.

வாசிப்பை எங்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் அக்கறையுடன் ஒரு சிறுமுயற்சியாக நேற்று மும்பையின் புகழ்மிக்க SIWS கல்லூரி மாணவர்களுடன் வாசிப்பு நிகழ்வு. தமிழ்நேசன் முயற்சி. தமிழ்க்கூடம் அடுத்த நகர்வு.


"எங்கள் புத்தகங்களை வாசிக்க சொல்லவில்லை நாங்கள்.

நாங்கள் எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்ளவும் இல்லை நாங்கள்.

அட, தமிழ்தான் ஆகச்சிறந்த மொழி

அதுவே உன் தாய்மொழி 

என்றெல்லாம் பெருமை பேசவில்லை நாங்கள்.

நாங்கள் சொன்னதெல்லாம்

வாசிக்கலாம் புத்தகங்களை 

வாருங்கள்

என்று மட்டும்தான்!

உனக்கு எந்தமொழியில் வாசிக்க முடிகிறதோ

அந்த மொழியில் புத்தகங்கள் வாசியுங்கள்.

என்று எங்களுக்குத் தெரிந்த எல்லா மொழிகளிலும்

அவர்களிடம் சொல்லிக்கொண்டே

இருந்தோம்.

இரண்டு பிரிவுகளாக மாணவர்கள் வந்தார்கள்.

காலையில் பட்டப்படிப்பு மாணவர்கள்

பிற்பகலில் +2 மாணவர்கள்..

புத்தகங்களை அவர்கள் எடுப்பதும்

கூடிக்கூடி பேசுவதும்

அதில் ஒருவர் வாசிப்பதும்..

 நாங்கள் பார்வையாளர்களாக அத்தருணத்தில்.

ஆனால்

அவர்கள் மீது படிந்திருந்த அந்த தயக்கம் எனும்

மெல்லிய பனிப்போர்வையை

விலக்கி வெளியில் வர...

தாமதமானது..

வந்தப்பிறகு ஒவ்வொரு பனித்துளியிலும்

ஒவ்வொரு சூரியன்,

மாணவர்கள் உலகம் ஒரு பிரபஞ்சம்.


வாழ் நாளில் மறக்க முடியாத ஒரு கேள்வியை

ரகசியமாக என்னிடத்தில் கேட்டான் அந்த மாணவன்..

அவனுக்கு "தமிழ் எழுத்துக்கூட்டி வாசிப்பது இன்னும்

வசப்படாமலிருக்கலாம். அவனுக்கு தமிழ் புத்தகங்களை

தமிங்கலத்தில் அதாவது தமிழ் எழுத்துகளை ஆங்கிலத்தில் , அம்மா என்ற சொல்லை ammaa  என்று வாசிக்கும் வசதி இருக்கிறதா என்று!

என்னிடம் பதில் இல்லை.

அவன் அச்சுப்பதிப்பு எதிர்பார்க்கவில்லை.

ஆன்லைன் புத்தகங்களில் அந்த தொழில் நுட்ப வசதி

இருக்கிறதா என்று கேட்கிறான்!

அப்படியான ஒரு தொழில் நுட்ப வசதியை ஏற்படுத்திக்கொடுப்பது கடினமல்ல.

சாத்தியம்தான்.

அவனுக்கு தமிழின் தொன்மையும்

அதில் கொட்டிக்கிடக்கும் அறிவுச்சுரங்கமும்

தெரிகிறது.

அதற்கொரு சின்ன டார்ச் லைட் தேவை.

அவ்வளவுதான்.


தமிழ் நாட்டின் எல்லைகள் தாண்டி

அயல் மாநிலத்தில்

எங்கள் அசைவுகள்

எங்கள் இருத்தலுக்கானவை மட்டும் அல்ல.

இதைப் புரிந்துகொள்ளாமல்

தமிழ் வாழ்ந்துவிடும்

தமிழ் வாழ்க

என்று முழக்கமிடுபவர்கள்

கொஞ்சம் விலகி நில்லுங்கள்.


நன்றி : SIWS & மும்பை தமிழ் இலக்கியக்கூடம்






Wednesday, July 5, 2023

மாமன்னன் அரசியல்


"மாமன்னனாக எம் தந்தையர் சமூகம் வாழ்ந்து மறைந்தக் கதை எமக்கு வெறும் கதை அல்ல. அது எம் அரசியலும் கூட. "


மாமன்னன் பார்த்தாச்சு!

வள்ளியூர் சித்ரா தியேட்டரில் 100 ரூபாய் டிக்கெட். மும்பையுடன் ஒப்பிடும்போது எனக்கு லாபம்!

படம் பார்க்கும் போதெல்லாம் வீரா கேரக்டரில் அதாவது நம்ம உதயநிதி ரோல் தனுஷ் நடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்னு தோணிச்சி.

மற்றபடி வடிவேலு ஓகே. ஆஹா ஓஹோன்னு சொல்ல எதுவுமில்லை. அவரு சில காட்சிகளில் பாடி இருக்க வேண்டாம்னு தோணுது. 

வீரா உண்மையில் இளவரசர். அவரு கஷ்டப்பட்டு பன்றியோடு வந்தாலும் அது ஒட்டல.

சில காட்சிகள் சில சம்பவங்களை மிகக் கவனமாக நம் நினைவுக்கு கொண்டு வந்திருக்கிறது!

படத்தில் நடிப்பில் கொடி கட்டிப் பறப்பது வில்லன் ரோலில் நடித்து பகத்பாசில் தான். செம உடல்மொழி. அந்த உடல்மொழிக்கு வடிவேலுவும் உதயநிதியும் ஈடு கொடுக்க முடியல. 


இப்படம் திமுக அரசியலைப் பேசுகிறதா என்று கேட்டால் ... என் பதில் தயக்கமின்றி "ஆம் " என்பதுதான்! அப்பாவின் அந்தக்கால திமுக முதல் இன்றைய திமுக வரை ஒரு சாட்சியாக நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்! அவ்வளவுதான்! மாமன்னனாக எம் தந்தையர் சமூகம் வாழ்ந்து மறைந்தக் கதை எமக்கு வெறும் கதை அல்ல. அது எம் அரசியலும் கூட. 

இப்படத்தில் நடித்த  இந்த ஒரே காரணத்திற்காக உதயநிதிக்கு வாழ்த்துகள்!

உதயநிதியைக் கொண்டே இந்த அரசியலைப் பேச வைத்த மாரி செல்வராஜ்க்கு என் பேரன்பும் நன்றியும். 

இது மாமன்னன் திரை விமர்சனம் அல்ல.

இது மாமன்ன அரசியல் !

இந்த அரசியலை மாரி செல்வராஜ் கையாண்டவிதம் சூப்பர்.  

#மாமன்னன்_அரசியல்

#மாரிசெல்வராஜ்_மாமன்னன்


Wednesday, June 7, 2023

ஜெயமோகனின் அறம் (கதைகள்)

 எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் வாசித்துமுடித்தேன்.



ஜெயமோகன் விமர்சனங்களுடன் கூடிய
தவிர்க்க முடியாத மாபெரும் எழுத்தாளுமை
என்பதை மீண்டும் மீண்டும் .. ..
அறம் கதைகளில் யானை டாக்டர் அனைவராலும்
அடிக்கடி பேசப்படுகிறார். யானை டாக்டரை
நினைக்காத ஜெ.மோ வாசகர்கள் இருக்கவே முடியாது.
யானை டாக்டர் கொண்டாடப்பட்ட அளவுக்கு
யானை டாக்டர் ஜெ. மோ வட்டத்தில் நினைவு
கூரப்பட்ட அளவுக்கு ,
'வணங்கான்' ஏன் நினைக்கப்படவில்லை?
வணங்கானும் யானை டாக்டர் எழுதப்பட்ட
அதே அறத்தின் பக்கத்தில்தான் வணங்கானாக
நம் சமகாலத்தின் ஒரு மாபெரும் வரலாற்று நாயகனாக
கம்பீரமாக நிற்கிறான்.
குமரி, நெல்லை மாவட்டக்காரர்களுக்கு
வணங்கான் மாபெரும் சரித்திர புருஷன்.
ஆனால் யானை டாக்டர் தான் நினைக்கப்பட வேண்டும்.
காரணம் அந்நியன் திரைப்படத்தில் பேசப்பட்டவைதான் முக்கியம்.
யானை டாக்டர் நல்லவர்தான். சூழலியல் முக்கியம்தான்,
அதெல்லாம் இல்லை என்று சொல்லவில்லை.
அதைக் கொண்டாடும் மன நிலையையும் சொல்லவில்லை.
அதை மட்டுமே கொண்டாடிக்கொண்டிருக்கும்
மன நிலைக்குள் இன்னும் இருக்கிறது
எழுதப்படாத வணங்கானின் வரலாற்றுப் பக்கங்கள்.
வணங்கான்..அளவுக்கு சமகால இந்திய வரலாற்று
அரசியலை ஜெ.மோ வேறு எந்தக் கதையிலும் எழுதி
இருக்கிறாரா என்று தெரியவில்லை.ஆனாலும்
வணங்கான்... சாய்ஸ்லில் விட்டுவிட
வேண்டியவனாகவே இருக்கிறான்.
மீண்டும் மீண்டும்
யானை டாக்டரை நினைப்பவர்களுக்கு
வணங்கான் ஏன் நினைவுக்கு வருவதில்லை
என்பதில்
இப்போதும் இருக்கிறது
என்னால் புரிந்து கொள்ள முடியாத
வாசகவெளி.
அவரவருக்கு அவரவர் "அறம்"
(சரவணா.. புரிந்து கொள்ள முடியாத
என்பதில் இருக்கிறது
எழுத முடியாதப் புரிதல்களும் வாசகவெளியும்.)
வணங்கான் பக்கங்கள் அறம் கதை தொகுப்பு
வாசிப்பை அர்த்தமுள்ளதாக்கி இருக்கிறது.
நன்றி ஜெ.மோ.


Sunday, May 21, 2023

பூக்காலம் தமிழில் இல்லை.

                     பூக்காலம் தமிழில் இல்லை.

இல்லவே இல்லை.
சரவணா..
இங்கே இருப்பதெல்லாம்
கற்பு கற்பு கற்பு.
அப்புறம் கற்பு போயிட்டா
செத்து தொலை.
கற்பு எப்போதாவது
கட்டிய புருஷனின் டார்ச்சர் தாங்காமல்
கழண்டுவிடும்னு
நமக்கு யோசிக்கவே முடியாது..
அய்யய்யோ..
இப்படி யோசிப்பதே பாவம்.
நம்ம்மோட சினிமா கற்பு இருக்கே
அது நிஜக் கற்பை விட வெயிட்டானது.
அதைக் கையை வச்சே, நீ தொலைஞ்சே போ.
அப்படி எல்லாம் நீ கதைக்கு கூட
காட்டிட்டு அப்புறம் தியேட்டரில
படத்தை ஒடவிட முடியுமா என்ன!
அடடா...
இன்னொரு ரொம்ப முக்கியமான மேட்டரு.
கதையில கற்பு போனது யாருக்கு
எதுக்கு என்ன சூழல்
இதெல்லாம் நமக்குத் தேவையில்ல.
நம்ம அதில நோண்டி கண்டுப்பிடிச்சிடுவோம்
இவன் யாரு வீட்டு கதையை காட்டறான்!
அவுக சாதி என்னனு..
ஆமாடே..
சாதி ரொம்ப முக்கியம்..
அதக் கண்டுப்பிடிக்கிறதில நம்ம ஆட்களுக்கு
இருக்கிற கில்லாடித்தனம்
எவனுக்கும் கிடையாதுங்கறேன்.
அப்புறம் என்ன...
ஒரே ரணகளம்தான்.
அந்தச் சாதி பொம்பள எல்லாம்
இப்புடித்தான் போனானு
புரிஞ்சுப்பான்..
இப்படியாக நாம இருக்கிறதால
நம்ம பூக்காலம் கதையில
அந்தக் கிழவிக்கு எப்போதொ எதோ
ஒரு சூழலிலே இன்னொரு ஆணோட
ஏற்பட்ட அந்த உடலுறவும் ஸ் நேகமும்
கதையில ஒரு சஸ்பென்சாகி
க்ளைமாக்ஸில அது அந்தப் பாட்டி இல்ல,
அதே பேர்ல அந்த வீட்டில இருந்தப் பாட்டியோட
உறவுக்காரி
அல்லது பொண்ணு
அல்லது வேலைக்காரி..
யாரோ...ஒருத்தி,,
அப்படின்னு கதை க்ளைமாக்ஸ் வந்துடும்.
தேவைப்பட்டா கதையில கிழவியை
சாகடிச்சிடனும்ம்,
அப்போ தான் நாங்க எல்லோரும்
விக்கிவிக்கி அழுது
எங்கப் பாவத்தை எல்லாம்
கண்ணீரில் கழுவி..
பரலோகம் போகலாம்.
எப்படியோ..
தமிழில் பூக்காலம் இல்லை
இல்லவே இல்லை.
சரவணா
எங்க கிழவிக்கு கற்பு முக்கியம்டே.
பிகு: நேற்று பார்த்த பூக்காலம் மலையாளப்படம்.
கிழவிக்கு கற்பு போயிட்டதால
கிழவன் படற அவஸ்தை இருக்கட்டும்.
தமிழ் மனசு எப்புடி எல்லாம் அவஸ்தைப் படுது
பாருங்க..
May be an image of 6 people, people smiling and text
All reactions:
Balakrishnan R, Rajesh Sankarapillai and 5 others