Showing posts with label poem. Show all posts
Showing posts with label poem. Show all posts

Saturday, October 14, 2023

ஹே சிவா.. உன் கருப்பி நான்

 ஹே சிவா...



தெரியும் தானே நான் கருப்பி
என்பதும்
அது என் நிறம் மட்டுமல்ல
என்பதும்.
அது என் உரம்
என் திறம்
என் வலி
உன் அழகியல் தோற்றுப்போன
யோனியின் சுழி.
வெள்ளை எலிகளும்
வெள்ளை பன்றிகளும்
உலாவரும் உன் தேசத்தில்
பச்சையமாய் உயிர்த்திருக்கும்
மழைத்துளியின் கருவறை
இந்தக் கருப்பி.
உன் புனைவுகள்
எட்டாத வானம்.
உன் கவிதைகள்
அறியாத மொழி.
வெண்மை புனிதம்
கருமை இருமையென
எவன் சொன்னான்?
ஏன் சொன்னான்?!
போடா போ.
ஆத்தாவும் அப்பனும்
கறுப்பாக இருப்பதை
வெளியில் சொல்லாதே.
ஃபேர் அண்டு லவ்லி
தேவதைகளைத் தேடிக் கண்டுப்பிடி.
பசுவின் பால் மட்டும்
வெள்ளை.
எருமைப் பால் கறுப்பாக
இருக்கும்.
நம்பு.
சொர்க்கலோகத்தில்
சிவப்பிகளுடன்
ஆடிப்பாடு.
உன் பிறவிப்பயன்
கிட்டும்.
தாகமெடுக்கும் போது
தண்ணீர்க் குடிக்காதே.
கார்மேக நீர்த்துளி
கறுப்பின் அடையாளம் டே.
வேண்டாம்.
சிவப்பு வெள்ளையின்
மூத்திரம் குடி.
ஹே.. சிவா..
போடா போ..
கங்கையைத் தலையில்
வைத்துக் கொண்டாடு.
பிரம்படி பட்டும்
பித்து தெளியாத உன்னை
நம்புவதற்கில்லை.
சிவசூத்திரங்கள்
மெளனிக்கின்றன.
பச்சைக்கிளியின்
புதிய சிறகுகள்
முளைக்கும் காலம்.
தவக்காலம் முடியும் தருணம்..
கண்முழித்தவுடன் வா.
உன் பித்தம் தெளிய
வழிப் பிறக்கும்.
பிறக்கும்.

Tuesday, September 12, 2023

முமபையில் ஒரு பனைமரம்

 


மும்பையில்

உங்களோடுதான் இருக்கிறேன்.

ஆனால் உங்களில் ஒருத்தியாக இல்லை.
இது மும்பையின்
புறக்கணிப்பு அல்ல.
என்மீதும் என் எழுத்தின் மீதுமான
உங்கள் தீண்டாமையும் அல்ல.
என்னை என் தனித்துவத்தை
வேறு எப்படித்தான் காட்டுவீர்கள்?!
நன்றி.
எனக்கே என் அடையாளத்தை
நானே மறந்துப்போனாலும்
அடிக்கடி நினைவூட்டும்
உங்கள் அன்பில்
நனைகிறேன்.
மீண்டும் நன்றி.
உங்கள் மாடித்தோட்டத்தில்
ரோஜாக்கள் பூக்கலாம்.
துளசியைக் கூட வளர்க்கலாம்.
ஆனால் பனைமரங்கள்
முளைப்பதில்லை.
நானும்தான்.
மீண்டும் மீண்டும் நன்றி.

Thursday, February 16, 2023

பித்துப்பிடித்த பெருநகரம்

 

பெரு நகரம் தூக்கமின்றி தவிக்கிறது..

கண்ணகி நகரப் பேருந்தில்
பெண்களுக்கு இலவசம்.
கிழிந்து சீழ் வடியும் யோனிபீடங்கள்
அதிகாரவெளியின் நாற்றம்.
ஆடைகளின்றி அம்மணமாக
அலைகிறது பெருநகரம்.
கிழிந்து தொங்கும் ஆடைகளுடன்
பித்துப்பிடித்த பெருநகரத்தின்
புதல்வியர்
பிரசவ வலியில் துடிக்கிறார்கள்
வாழ்க வாழ்கவென அலறலுடன்
பிள்ளைகள் பிறக்கின்றன.
திரும்பிப் பார்த்த
லோத்தின் மனைவி
உப்பு சிலையாக சபிக்கப்பட்டாள்.
பெருநகரம் வந்த பெருந்தேவி
மாசாணி அம்மன்
தற்கொலை செய்து கொள்கிறாள்.
சுவரொட்டி மனிதர்களின்
முட்டைகளை அடைகாக்கும்
கோழிப்பண்ணைகள்
பெருநகரத்தின் எதிர்காலம்.
இராட்சதப் பல்லிடுக்குகளில்
தொங்கிக் கொண்டிருக்கும்
தமிழ்த்தேசம்.
துரத்திக்கொண்டே வரும்
அந்த சுவரொட்டி மனிதர்களின்
பொன்னாடைகளைத் தின்று
பசியாறும் கழுதைகள்
உதைக்கின்றன.
பதாகையிலிருந்து
நீண்ட இராட்சதக் குறிகள்
இரவும் பகலும் துரத்துகின்றன.
பெரு நகரம் பித்துப்பிடித்து
அலைகிறது.
காமட்டி புரத்தின் குடிசைகள்
அவள் காயத்திற்கு
மருந்தாக..


#புதியமாதவி_20230217

#puthiyamaadhavi_poems

Sunday, July 17, 2022

பச்சையம் துளிர்க்கும் கார்காலம்

 

 தூறல்

சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறி நின்றுவிட்டது.

மெல்லிய வெளிச்சத்தையும் பிடுங்கித் தின்ற இரவு

தன் பசி அடங்காமல் படுத்திருந்தது.

மழைநேரத்தில் மின்சாரத்தடைக்குப் பழகிய கால்கள்

மெல்ல அறையை விட்டு வெளியில் வருகின்றன.

வேர்களின் தாகத்தைத் தணிக்கும்

இலைகளின் ஈரம்

சொட்டுசொட்டாக வடியும் இரவு

சலனமின்றி தூங்கும் மலை.

கனவுகள்  விழித்திருப்பதோ தூங்குவதோ

பாறைகளைத் தொந்தரவு செய்வதில்லை.

காற்றின் அசைவுகள் கல்மீது படிவதில்லை.

சாரல் அடித்து அடித்து அருவி விழிக்கிறது.

கனவுகள் குடைப்பிடித்து

வெளியில் வருகின்றன.

குடைப்பிடிப்பது யாராக இருந்தாலும்

நனைவது மட்டும் நானாகவே இருக்கிறேன்.

இலைகளின் மழைமொழி  இசையாகி..

என்னை மீட்டிக்கொண்டே இருக்கின்றது

மழைமொழி என்னை எழுதுகிறது.

மழைக்காலம் என்னை வாசிக்கிறது.

 

புயல்

த்த்த்தட தட த்த்த்தட தட

ஸ்ஸ்ஸ்ஸ்ஸோஸ்ஸ்….

டக்க் டக் டக்க் டக்க்

ஸ்ஸ்ஸூ ஸ்ஸ்ஸூஊஊஊஊஊ

ட்டமீற்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஜன்னலை இழுத்து மூடு.

இடி இடிக்குது.

திரைச்சீலையை இழுத்துவிடு.

கர்ப்ப கிரஹத்தில் மின்னல் வெளிச்சம்..

காற்றில் அசையும் தீபத்தின் நாதம்..

தேவி… கருவறை திறக்கிறது.

பரவசமாகி அவரவர் வேண்டுதல்களுடன்

அவள் மடியை நிறைக்கிறார்கள்.

குமரி அவள்.

கடல் அலைகள்  தாலாட்டும் குமரி அவள்.

தொட்டில் கட்டித் தாலாட்ட முடியாமல்

தவிப்பது ஏன்?

பனிக்குடம் உடைந்த ஈரப்பிசுபிசுப்பு தரை எங்கும்.

கர்ப்பஹிரகத்தில் இருளின் வெளிச்சம்.

புயலுக்குப்பின் சலனமின்றி கடல்

அவள் பிரசவ வேதனையை

தனக்குள் வாங்கிக்கொள்கிறது.

அவள் எட்டுக்கைகளாலும் தன் பிள்ளைகளை

தூக்கி எடுத்து தழுவி முத்தமிடுகிறாள்.

கண்ணனைக் கூடையில் சுமந்து கொண்டு

ஆற்றுவெள்ளத்தை யாரோ கடந்து செல்கிறார்கள்.

கடல் அலைகளை

நார்நாராக கிழித்து எடுத்து கூடை செய்து

மின்னலை விரித்து மெத்தையாக போர்த்தி

தன் பிள்ளைகளை மிதக்கவிடுகிறாள்..

சுறா மீன்களும்  கடல்குதிரைகளும்

நட்சத்திரகைகளும் வலம்சங்கு முகங்களும்

கூட்டணி சேர்ந்து கூடையைக் கவுத்துவிடுகின்றன.

உப்பு நீருக்குப் பழகிப்போனவனும்

கடல் அலைகளில் நீந்த தெரிந்தவளும்

தீவுகளைத் தேடி பயணிக்கிறார்கள்.

குமரியின் மூக்கூத்தி வெளிச்சத்தில்

தடுமாறும் மின்னல்

கடலைப் பார்த்தால் அவள் கன்னிமைக்கெடுமென

கட்டுப்பாடுகள்..

அவளுக்கும் கடலுக்குள் நடுவில்

ஆயிரம் கண்டங்கள்

மழைத்துளிகள் மீட்டுவரும்

நினைவுகளின் வாசனை

கடற்கரையில் மோதி  அலைந்து திரிந்து

முகவரியைத் தேடும் அனாதைகளாக

கரை ஒதுங்கி இருக்கின்றன கிளிஞ்சல்கள்

 

வெள்ளம்

மழை பொழிந்த அந்த  நள்ளிரவில் கடலின் சீற்றம்.

அலைகள் பாறைகளின் எல்லைகளைத் தாண்டி அத்துமீறி

ஆவேசம் கொண்டு தழுவுகின்றன.

காலடியிலிருந்த மண்..

குழிப்பறித்து இழுத்துச் செல்லும் வேகம்

என்னால் நிற்கமுடியவில்லை.

மழை வெள்ளத்தில் சிக்குண்டு

அடித்துச் செல்லப்பட்ட

தண்டவாளங்கள் என்னைப் பயமுறுத்துகின்றன.

நீர்வழிப்படூஉம் யானும்..

கடல் அலையும் மழை வெள்ளமும்

கட்டுக்கடந்காக் காமத்துடன்

கட்டிப்பிடித்து முத்தமிடுகின்றன.

கோடைக்காலத்தின் புழுக்கம்

சூடு தணிக்கும் ஆவேசம்

கடற்கரையைக் காணவில்லை.

யாரும் கடலுக்குள் போகவேண்டாம்.

படகுகளுடன்  வலைகளும் பதுங்கிக்கொள்கின்றன.

கடலடியிலிருந்து மீனராசா எட்டிப்பார்க்கிறான்.

ஜீவராசிகளின் கூடல்மொழி ஓசையின்றி எழுத்துகளின்றி

மழை நீரில் மிதந்து வருகிறது.

அதிலிருந்து வடியும் ஒவ்வொரு துளியாக கையிலெடுத்து

பசலைத் தணிக்கிறேன்.

பாறைகளுக்கு இடையில் கனன்று கொண்டிருந்த

அடுப்பின் சூடு ஒருவழியாக தணிகிறது.

அடுப்பிலிருந்து பொங்கி வழிந்தப் பால்

பாத்திரம் தாண்டி விளிம்புகள் கடந்து

வழிந்து கரைந்து மழைவெள்ளத்தில் மிதந்து

கடல் நீரில் நுரையாகிப் போனதறியாமல்

பாத்திரத்தை மூடிப் பத்திரப்படுத்துகிறேன்.

கடல் அலையில் பால் நுரைகள்

தீவுகளில் மோதும் பால்திட்டுகள்..

மீனராசா பாலருந்தி பால் அருந்தி

மயக்கம் தெளிகிறான்.

மீண்டும் மீண்டும்

பால்சொரியும் முலைகள் தேடி அலைகிறான்.

கடலடியில் அவன் அந்தப்புரத்து மச்சக்கன்னிகள்

அவன் பசியாற்றமுடியாமல் தவிக்கிறார்கள்.

பசியின் வேட்கை..

அவனைத் தின்று துப்பிய சக்கையாக

படுக்கையில் கிடக்கிறான்.

மச்சக்கன்னிகள் தீவுகளிலிருந்து கொண்டுவந்த பச்சிலைச்சாறுகள்

அவன் உதட்டோரத்தில் வழிந்து

கடல்மேல் விழுந்த கரும்பாறைகளாக மிதக்கின்றன.

பாய்மரத்தின் உச்சியில் கட்டியிருந்த திசைக்காட்டி

தலைகீழாக சுழல்கிறது.

திசையறியமுடியாமல் படகுகள்

கடலுக்கு நடுவிலேயே சுற்றிக்கொண்டு இருப்பதை

கடல்குதிரைகள் வேடிக்கைப் பார்க்கின்றன.

துருவ நட்சத்திரம் கதவடைத்துக் கொள்கிறது.

கார்மேக கூட்டத்தின் படையெடுப்புக்கு அஞ்சி

பிற நட்சத்திரங்களும் இடம் மாற்றிக்கொண்டு

வேறொரு பூமிக்குப் போய்விடுகின்றன.

மச்சக்கன்னிகள் மீனராசாவை கைகளில் ஏந்தி

கடற்கரைக்கு வருகிறார்கள்.

நட்சத்திரங்களில்லாத ஆகாயம்

நிலவில்லாத மேகம்

இருளைத் தின்று துப்பிய கடல்வெளி

மழை நீரில் மிதந்துவரும் காலம்

கடல் அலையும் மழை வெள்ளமும்

ஒன்றை ஒன்று  கூடி புணர்ந்து

ஒன்றை ஒன்று எதிர்த்துப் போராடி

ஒன்றில் ஒன்றாக முடியாமல்

வெள்ளக்காடு..

மழை வெள்ளத்தில் மீனராசா

கடல் அலையில் அவள்..

இடம் மாறிப்போன படகுகள்

மீண்டும்

தீவுகளை  வந்தடையுமோ?

இடி மின்னலுடன் மழை..

சலனமின்றி படுத்திருக்கும் அவன்..

அலைகளில் நர்த்தனமிடும் ஆதிசேஷன்..

புல்லாங்குழலோசையில் மிதக்கும் பிருந்தாவனம்.

அவள் போர்த்தியிருக்கும் போர்வையை

மெல்ல விலக்கி இருளின் வெளிச்சத்தில்

மின்னும் மீன்செதில் மேனியை

அதிசயமாகப் பார்க்கிறாள்.

தூரத்தில் கடல் அலைகளில் மீதேறி

கை அசைத்து செல்கிறான் மீனராசா.

கடல் நீர் வற்றுவதில்லை.

அடுத்த மழைக்கும் அவன் வருவான்.

ஆனால், அந்த மச்சக்கன்னிகள் வரவிடுவார்களா?

கடலைக் கடைந்தவன் விஷமேறிச்  செத்துப்போவதற்குள்

அமுதருந்த  வந்துதானே ஆகவேண்டும்!

கடலில் ஒரு சின்னப்புள்ளியாக

அவன் மறையும்வரை காத்திருக்கிறேன்..

போர்வையை விலக்கி சன்னலை அடைக்க

பிரயத்தனப்படுகிறேன்.

படுக்கையிலிருந்து எழும்போதுதான்

கவனிக்கிறேன்.

என் கால்கள் இருந்த இடத்தில்

மீனராசாவின் வால் நீண்டு நெளிகிறது.

மழை வெள்ளத்தில் நீந்தி நடனமாடுவேனா..

முலைகள் தேடி அவன் வருவானே..

எதைக்கொண்டு அவன் விஷம் தணிப்பேன்!

மீனராசா… தேடித் தேடி அலைகிறான்,

துடிக்கிறான்.. தவிக்கிறான்..

கடலில் நீந்திக்கொண்டிருக்கும் என்னைப் பார்த்து

மச்சக்கன்னிகள் சிரிக்கிறார்கள்.

 

இடி மின்னல்

அர்ஜூனா அர்ஜூனா..

மின்னல் பாய்கிறதே..

கருவறை கருகிய வாசனை.

உடைந்தப் படகுகளின் துடுப்புகள்

கடலில் மிதக்கின்றன.

குமரி அவள்.

சுமப்பதை பிரசவிக்க முடியாமல்

கடலுக்குள் விழுந்து தற்கொலை.

மடி நிறைத்த அலைகள்

தொட்டில் கட்டித் தாலாட்ட

முடியாமல் கதறி அழும்

மழைக்காலம்.

அவள் மொழியை ரகசியமாக

மேகக்கூட்டத்தில்

பத்திரப்படுத்துகிறது.

( நன்றி : கதவு இதழ் 38 ஜூலை 22)

Friday, December 3, 2021

அவ்வையின் நெல்லிக்கனி

 

என் நண்பனே

எங்கே நீ?

துயரங்கள் சுமையாகும்போது

உன் தோள்களைத் தேடுகின்றேன்.

சுமைகளைத் தூக்க அல்ல.

சுமைதாங்கி இளைப்பாற.

 

பூமி உருண்டையில் – நாம்

மீண்டும் சந்திப்போம் என்றாய்.

பூமி உருண்டை என்பது

உண்மைதான்.

ஆனால்

நம் சந்திப்பு மட்டும்

எப்படி பொய்யானது?

 

வேண்டியவர்கள் வேண்டாதவர்கள்

பெரியவர்கள் சிறியவர்கள்

எல்லோருடனும்

பேசி சிரித்து உண்டு உறங்கி

பயணம் செய்து

களைத்துப்போய்

கண்மூடிக்கிடக்கின்றேன்.

கனவில் நீ என்னுடன்

பயணம் செய்வாய்

என்ற நப்பாசையில்.

 

ராக்கி கட்டி

நம் நட்பை

சகோதரப்பாசமாக

பரிணாமம் செய்ய நினைத்தேன்.

 

நம் நட்பு

ராக்கி கயிற்றையும்

மஞ்சள் கயிற்றையும் விட

மேலானது என்று

புன்னகையுடன் சொன்னாய்.

 

நான் அவ்வை

நீ என் அதியமான்

என்றேன்.

எங்கே என்

நெல்லிக்கனி? என்றாய்.

தொலைந்துபோன

நெல்லிக்கனியைத்

தேடி அலைகின்றேன்.

 

என் நட்பே

காதல் தோல்வியடையலாம்!

இங்கே

தோல்வியில் முடிந்த

காதலெல்லாம்

அமரகாவியம் ஆகிவிடும்.

 

ஆனால்,

 நண்பனே…

நட்பு தோல்வியடைந்த தாக

கதைகளில் கூட

கற்பனை செய்யாதே.

 

அந்த தோல்விகுப் பின்னால்

மனித நேயம்

மாண்டுபோய்விடும்.

மண்ணில் உயிர்கள்

மறைந்துபோய்விடும்.

பூமி உருண்டை

சுருங்கிப்போய்விடும்.

சூரியன் கூட

இருண்டு போய்விடும்.

 

(2003ல் வெளிவந்த ஹேராம்

கவிதை தொகுப்பிலிருந்து)

 


Saturday, November 20, 2021

ஜெய்பீம் கொண்டாடு.. பெயரில் என்ன இருக்கிறது?

 பெயரில் என்ன இருக்கிறது?

தோழா.....
பெயரில் என்ன இருக்கிறது?
எல்லா பெயர்களும்
எல்லோருக்கும் பொருந்துவதில்லை.
பெயரில் என்ன இருக்கிறது?
திருப்பதி மொட்டையும்
திருச்செந்தூர் மொட்டையும்
ஒன்றா.. ?
மயிரு தானே!
பெயரில் என்ன இருக்கிறது?
மீனாட்சி காமாட்சி விசாலாட்சி
மாரியம்மா எல்லம்மா முண்டகண்ணி
கும்பிடும் தெய்வம்
குலசாமி
கழுத்தில் தொங்கும் தாலி
கருமாதி வீடு
எல்லாமும் ஒன்றுதான்.
பெயரில் என்ன இருக்கிறது?
தோழா பெயரில் என்ன இருககிறது!
தாலியைப் பார்த்து
சாதியை அறியலாம்.
தோழா நீயோ
தாலி அறுத்து திருமணம்
நடத்துகிறாய்.!
புரட்சி வெடிக்கிறது..
பெயரில் என்ன இருக்கிறது?
தோழா.. பெயரில் என்ன இருக்கிறது!
யாருக்கும் தெரியாத சாதி
சாவு வீட்டில்
மீண்டும் பிறக்கிறது.
போகிற இடத்திற்கு
புண்ணியம் தேட
எல்லாமும் தான்
உனக்கும் எனக்கும்.
பெயரில் என்ன இருக்கிறது?
தோழா..பெயரில் என்ன இருக்கிறது!
ஜெய்பீம் கொண்டாடு.
புரட்சி வெடிக்கும்
ஜீவா , பாரதி
காந்தி பகத்சிங்
உன் புரட்சிக்குரல்
எல்லைகள் தாண்டி
இலெனின் ஸ்டாலின்
சேகுவேரா வரை
அட டா..
உன் புரட்சியின் திருநாம வரிசையில்
புதைந்திருக்கிறது
தோழா..
உன் புரட்சியின் அசல்முகம்.
பெயர்கள் உனக்கு
புரட்சியின் முகமூடி
கறுப்பு சிவப்பு
எல்லா முகங்களுக்கும்
இதுதானே சொந்தமுகம்.
இன்னும் பிறக்கவில்லை
எவர் வீட்டிலும்
இவர் மட்டும் .
(அம்பேத்கர்)
அட டா..
பெயரில் என்ன இருக்கிறது!
தோழா.. பெயரில் என்ன இருக்கிறது!
ஜெய்பீம் கொண்டாடு.
உன் புரட்சியின் முகம்
ஒளிரட்டும்.
கொண்டாடு.
ஜெய்பீம் கொண்டாடு.
பெயரில் என்ன இருக்கிறது?
உனக்கும் எனக்கும்
பெயரில் என்ன இருக்கிறது?
தோழா ..
பெயரில் என்னதான் இருக்கிறது !!

Wednesday, June 23, 2021

கவிஞனுக்கு மரணமில்லை.



 கவிஞனுக்கு மரணமில்லை.

அவன் நிரந்தரமானவன்...
கண்ணதாசா.. உன்னை வாழ்த்தும்போது
தமிழ் வாழ்கிறது.
தமிழ்க் காதலியர் வாழ்கிறார்கள்
தமிழன் வாழ்கிறான்.
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசிவரை நீ தான்.
எம் வாழ்விலும் சாவிலும் கூடவே பயணிக்கிறாய்.
ஒரு தலைமுறை தமிழ்ச்சாதியின்
ஆலயமணி ஒசை நீயல்லவா!
தமிழ் நதியில் விளையாடி
பொதிகை மடியில் தலைசீவிய
4 ஆம் தமிழ்ச்சங்கமே .. நீ
காலத்தை வென்ற தமிழ்க்கடலில் மத்தாகி
பாற்கடலை- பா கடலைக் கடைந்தெடுத்தாய்.
அமுதம் விஷமான போதெல்லாம்
அதுவே உன் கையில் மதுவானது.
நீ போதையில் தள்ளாடும் போதெல்லாம்
தமிழ் தன்னை அலங்கரித்துக் கொண்ட து.
எம் தலைமுறையின் இதயராகத்தை
உன் பாடல்வரிகளால் மீட்டிக்கொண்டோம்.
எம் காதல் கடிதங்கள்
உனக்கு கடன்பட்டிருக்கின்றன.
உன் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம்
திரும்பவும் திரும்பவும் பிறக்கிறோம்.
“அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வருவதும்
இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் “ என்று துடிப்பதும்
எம் ரசனையின் அடையாளம் மட்டுமல்ல.
தமிழ் எம்மில் உயிர்ப்புடன் இருப்பதன்
ஒற்றை அடையாளமய்யா நீ.
உன்னைச் சித்தன் என்று சொல்லவா
பிழைக்கத் தெரியாத பித்தன் என்று சொல்லவா
பாட்டுப்பாடி பிழைத்த பாணன் என்று சொல்லவா..
நீ ஜார்ஜ் மன்னனின் நிழலில் குடி இருந்தாய்
சார்லசின் குணங்களை அனுபவித்தாய்
ஆனால் நீ மட்டும் பைரனாகவே வாழ்ந்திருக்கிறாய்.
சிறுகூடற்பட்டி மூங்கிலை வெட்டினார்கள் சிலர்.
திட்டினார்கள் பலர். அவமானப்படுத்தினார்கள்
அழவைத்தார்கள். விரட்டினார்கள்.
கூரிய ஆயுதங்களால் சீவினார்கள்.
மூங்கில் தன்னைத்தானே துளைத்து துளைத்து
துடிக்கும் போதெல்லாம் புல்லாங்குழலில்
புருசோத்தமன்கள் பிறந்தார்கள்.
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்.
சிறுகூடற்பட்டி மூங்கில் வாழ்க
தமிழரின் புல்லாங்குழல் வாழ்க
நம் புருஷோத்தமன் வாழ்க


https://youtu.be/LvBP7qVk-hw






Saturday, June 19, 2021

கவிதைகளை எரிக்கும் மழைக்காரி

 


பஃறுளி நதிக்கரையில் என் ஆதித்தாய் முணுமுணுத்த

 சொற்களற்ற ஒலிக்குறிப்பிலிருந்து 

ஒவ்வொரு துளியாக எடுத்து

உங்கள் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்தப் பிரபஞ்சம் தோன்றிய அந்த நாளில் 

எழுத்து பிறப்பதற்கு  முன்னரே

எழுதப்பட்டிருந்த காற்றுவெளியின் குறிப்புகளை 

வாசிக்கத் தெரிந்தவர்கள்..

புதிது புதிதாக எழுதிக்கொண்டு இருக்கின்றார்கள்.

புதிதாக எதுவும் பிறக்கவில்லை.

 ஏற்கனவே பிறந்துவிட்ட எதுவும்

இன்னும் தன்னைத் துறக்கவும் இல்லை.

இந்த தொடர்மழையில் குளிரில் நடுங்கும் 

எம் மனிதர்களுக்கு

இன்னும் நீங்கள் வாசிக்காத கவிதைப்பக்கங்களை 

எரித்து எரித்து

சூடாக்கி சூடேற்றி 

குளிர்காய்கிறேன்.

கவிதைகள் எரியும் வாசனையில் 

இப்பெருநகரப்பிசாசு

தண்டவாளத்தில் விழுந்து 

தற்கொலை செய்து கொள்கிறது.

மழைவெள்ளம் வடியும்போது  

பாதி எரிந்தும் எரியாத

கவிதைப் பக்கங்களை 

குப்பையிலிருந்து பொறுக்கி எடுத்து

அடுத்தமழைக்காலத்திற்காக

பத்திரப்படுத்துகிறாள்..

கவிதைகளை எரிக்கும் மழைக்காரி.

 

 

 

 

 

Friday, October 23, 2020

இலையுதிர்காலம்

 



இலையுதிர்காலத்தில் என்னிடம் வந்திருக்கும்

இந்தப் பறவைக்கு எதைக் கொடுப்பேன்?

பூக்களின் வாசத்தை வேர்களிலிருந்து

தோண்டி எடுத்து

இந்தப் பறவையின் சிறகுகளில்

தெளிக்கட்டுமா..?

காற்றின் வேகத்தில் இலை உதிர்கிறது.

காத்திருந்தப் பறவை

காற்றைக்கிழித்துக் கொண்டு

தரையில் விழுந்துவிடாமல்

இலையைப் பிடித்துக் கொள்கிறது.

இலையின் நரம்புகள் படபடக்கின்றன.

இருளும் வெளிச்சமும் கடந்துப் போகீறது.

பால்வீதியில் பறவையின் கூட்டில்

சிறகுகளின் கதகதப்பில்

இலையின் இன்னொரு வாசம்..

வானத்திலிருந்து தொங்குகின்றன

இப்போது இந்த வேர்கள்..

Saturday, August 1, 2020

சிறகசைக்கும் பறவை

கம்பன் தமிழும் கணினி தமிழும் கலந்து கொடுக்கும்
கவிஞர் நா.முத்து நிலவன் தலைமையில் திரு.வி.க கல்லூரி
திருவாரூர் நடத்திய இணையவெளி பன்னாட்டு கவியரங்கில்
(01/8/2020) சிறகசைக்கும் பறவை...

Sunday, February 16, 2020

குந்தியின் குருஷேத்திரம்

Image result for sunrise kisses

பாணனின் பாடலைப் பாடினான்..
இசையின் ஒவ்வொரு துளியிலும்
உடல் நனைந்தது..பற்றி எரிந்தது..
விறலியைப் போல ஆடினேன்.
இரவின் கூத்துக்கலைஞர்கள்
ஒப்பனையை களைந்துவிட்டார்கள்.
நட்சத்திரங்கள் உறங்கப் போய்விட்டன.
அவன் முத்தமிட்ட நெற்றியில்
இன்னும் சூடு ஆறவில்லை.
படுக்கை எங்கும் முத்தங்களின் பன்னீர்த்துளிகள்.
விடிவதற்குள் எல்லாம் மாறிவிடுமோ..
ஹே .. சூரிய வம்சமே..
இன்றுமட்டும் தூங்கிவிடு..
என்னையும் தூங்கவிடு.
பூஜை அறையில்
கருவறைத் திறந்திருந்தப் போது
உன் மந்திரங்களைச் சொல்லாமல்
சென்றுவிட்டாய்..
உன் கர்ணபுத்திரனைக்
கொடுக்கத்தவறிவிட்டாய்.
குருஷேத்திரம்…
என்னை அல்லவா பலி கேட்கிறது.!
எதிரணியில் உன்னை நிறுத்துகிறது.
அம்புகளின் படுக்கையை
அவர்கள் தருவார்களோ?
உன் அம்பறாத்துணியிலிருந்து
பறந்துவரும் அம்புகளின் அமுத விஷம்
என்னை எடுக்குமோ.. வாழ்வை முடிக்குமோ
எதுவானாலும் சம்மதமே..வா..
ஓம் நமசிவாயா
காத்திருக்கிறேன்..
நீ தரப்போகும் கடைசி முத்தத்திற்காக.

Saturday, February 15, 2020

அவளும் நானும்

அவள் இளமையின் உச்சத்தில்
எப்போதும் கல்யாணக்கனவுகளில்
மிதக்கிறாள்.
அவன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும்
எப்படி அவளைக் கொஞ்ச வேண்டும்
அவளை எங்கெல்லாம் கூட்டிச்செல்ல வேண்டுமென
அவள் சதா கற்பனையில் ..
கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆடுகிறாள்.
முற்றுப்பெறாத விடிகாலை கனவைப் போல
அவள் என்னைத் துரத்திக் கொண்டே
இருக்கிறாள்.
அவள் எப்போதும் சொல்கிறாள்
நான் உனக்குத்தான் மகளாக பிறக்க வேண்டும்
அடுத்தப் பிறவியிலாவது
உன்னைப் ப்டிச்சிருக்கு.மம்மி...
மழலை மாறாத மொழியில்
அவள் சொற்களின் வீரியம்
எனக்குள் மின்னலாய் இறங்கி
அடிவயிற்றைப் பிசைகிறது.
அவளை இறுக அணைத்துக் கொள்கிறேன்.
இப்போதும் நீ என் மகள் தானே செல்லம்..
சுருட்டை முடி தவழும் முன் நெற்றியில்
முத்தமிடுகிறேன்
அவளைப் போலவே நானும் ..
வளர்ச்சி அடையாமல் அதே நினைவுகளில்.
தேங்கிக் கிடக்கிறேன்.
அவள் குளத்தில் கல்லை எடுத்து வீசுகிறாள்
அலை அலையாய் நீரில் அவன் நினைவுகள்
மிதக்கின்றன.
தண்ணீருக்குள் நானும் அவனுமாய்
அவள் கைப்பிடித்து நடக்கிறோம்.
அவள் கைகொட்டி சிரிக்கிறாள்.
மகேந்திர மலையடிவாரத்தில்
மழை கொட்டுகிறது.
கருவறையில் உறங்கிக்கொண்டிருந்த தேவி
கனவுகளிலிருந்து விழித்துக் கொள்கிறாள்.
அவளுக்கு வளர்ச்சி இல்லையாம்
அப்படித்தான் அவர்கள் சொல்கிறார்கள்.
அவள்.. ஒரு பிரமாண்ட வெளியாய்
என் கைப்பிடிக்குள் அடங்க மறுக்கும்
பேருலகமாய் ஆட்சி செய்வதை
எப்படிச் சொல்லட்டும்?

No photo description available.


A lot of us may recall the character played by the late Sridevi in the Tamil film Moondraam Pirai remade in Hindi as Sadma where she regressed into a childlike state after severe trauma and regains normality in the course of the film. That's of course fiction with the possibility of being translated into celluloid imagery. Life is far from fiction and poses unimaginable twists and turns that cannot be straightened. It's like what has been cast into a mold cannot be reshaped by hammering in a smithy.
The differently-abled are complete beings in creation and not at all handicapped. It is only us with parochial views and inability to think beyond ourselves who are handicapped. They do not seek our pity or sympathy but merit compassion and empathy.
Here is a very poignant poem in Tamil by Puthiyamaadhavi Sankaran reproduced with her prior permission together with an English translation by moi:

She floats
in wedding dreams
at the peak of youth
always.
Imaging all the time how
should he be,
which way
should he pamper her
and where all
should he take her to,
she hugs the neck
and waltzes.
Like an unfinished early morning reverie
she keeps chasing after me.
She says
always:
In the next birth at least
I should be
born as your daughter.
I like you Mummy.
The power of her words
in a baby's prattle like voice
strikes like lightning
and rolls around low
in my tummy.
I hug her tightly.
"Even now you are my daughter only
darling".
I kiss on the forehead where her curly bangs hang.
I also stagnate
in those same memories
with stunted growth
like her.
She picks up a stone
and flings into the tank.
His memories
float on the water
in wave after wave.
Holding her hands,
he and I
walk in water.
She claps her hands and laughs.
It rains at the foot
of Mahendra Hills.
The goddess
sleeping in the womb
wakes up from dreams.
She has no growth.
That is what they say.
How do I say
that she rules
like a huge world
in a universal space
refusing to be
restrained by handhold?
~Sri 1205 :: 15022020 :: Noida
thanks to Sri N Srivastava

Thursday, January 9, 2020

ஆனந்த தாண்டவமோ

Image result for anandha thandavam modern art
 இனம் புரியாத யுகாந்திர
மவுன ங்களுக்குப் பிறகும்
எப்படி வேண்டுவது உன்னை?
உன் தரிசனம் மறுக்கப்பட்ட
ந ந்தனின் மகள் நான். 
ருத்திர தாண்டவத்தை
ஆன்ந்த தாண்டவமாக்கி
அருள் பாலிக்க வேண்டும்..அய்யனே.
உன் பூஜையில் மலராக முடியாது.
உன் தோட்ட த்தில் வேராகவும் முடியாது.
இதெல்லாம் முடியாது தான்..
உன் உற்சவம் முடிந்து
உன் பக்தர்களுக்கெல்லாம்
நீ அருள்பாலித்தப்பிறகு..
சிதம்பர தரிசனம் தரலாம் தானே..!
கொடியின் அசைவுகள் அறியாத
காற்றும் உண்டோ..
உன் தேர்க்கால்களிடம் கேட்டுப்பார்,,
அருகில் வந்ததும் கொடிகள் படர்ந்ததும்
மலையும் காடும் சாட்சியாய் நின்றதும்
உன் அடிமுடி அறியாத ரகசியமல்ல..
குளிரிலும் காற்றிலும் தள்ளாடும் கொடி
நினைவுகளின் கனம் தாங்காமல் சரியுமோ..
தேர் பார்க்குமோ
கொடி படர தேர்க்கால்கள்  நிற்குமோ.
ஆன்ந்த நடனம்..

ஆருத்திரதரிசனம்.. ஓம் நமசிவாய..


Wednesday, January 8, 2020

பாலையின் கனவுகள்

Image result for desert land goddess

தோழி.. சிவ காமீ
பச்சையமில்லாத பாலையின் கனவுகள்
தண்ணீரில்லாத தேசமாய்..
அடியே பச்சைக்கிளி அறியுமோ
வைகை நதிக்கரையில் வசந்தமாக வந்தவனும்
அவன் தான் என்பதை.
பசுமை தர மறுத்தவனை
பாலை மணலாறு
மறக்கவோ மன்னிக்கவோ..!
நதியின் பிழையன்று கொடுமணல்.
சுட்டெரிக்கும் பயணத்தில்
கனவுகளை மட்டுமே சுமந்தலைவது
காதலைக் கொல்லுமோ?
காலத்தை வெல்லுமோ..!
என் செய்வேன்..!
கத்துவேன் கொல்? முட்டுவேன் கொல்?
பெரு நகர இரைச்சலில்
இராட்சத பல்சக்கரங்களுக்கு நடுவில்
சிக்கித் தவிப்பது கனவுகள் மட்டுமா?
சொல்லடி அவனிடம்.

தோழி..
வன ங்களை அழித்து
மரங்களை  நடுபவன்
அறிவானோ
மழையின் தாகத்தை.
கடல் நீர் பாய்ந்து
கழனிகள் விளைவதில்லை..யென
காரணங்களை  அடுக்கி அடுக்கி
கண்ணீரத் துடைக்கிறாயோ..
அடியே.. சிவகாமி..
ஏமாற்றுவது  நீயல்ல.
திணைமயக்கங்களும் புதிதல்ல
கங்கையைச் சுமப்பவன் அறியாதா காதலா!
பொருளதிகாரம் புரியாதவனா அவன்!
புணர்ச்சி விதிகளின் ஒற்றுப்பிழைகள்
தண்டனைக்குரியதா..?
அரண்மனையின்  விதிகளும் சட்டங்களும்
அந்தப்புரங்களோடு முடியட்டும்
அலைகளிடம் காட்டாதே
அடங்கிப்போ வென
உரக்கச் சொல்லடீ..தோழீ
கோட்டைக்கதவுகள் தாண்டி எதிரொலிக்கட்டும்.
கடற்கரையில் உப்புவிற்றவள்
வெள்ளத்தில் கரைவாளோ
அடியே.. கடைபரப்பி நிற்பதுதான்
விதியோ வினையோ?
கனவுகளை  விதைத்த மருத நிலத்தவன்
விதைகளை மட்டும் விதைக்காமல்
விட்ட தென்ன?

பச்சையமற்ற பூமி
காற்றடித்து மணல்வெடித்து
எரிகிறதே..சுடுமணலில்
கனவுகளும் எரிக்கிறதே.
தேவீ.. உன் கழுத்துமாலையின்
மண்டை ஓடுகள்
நிஜத்துடன் உரசி உரசி
பற்றி எரிகிறதே..
பாலைக்கிழத்தியே..
கனவுகளைக் காப்பாற்றி விடு.
கனவுகள் ரொம்பவும் முக்கியமானவை.
கனவுகள் தான் வாழ்க்கை.
கனவில் வருகிறான்.
கட்டிப்பிடிக்கிறான
தோளணைத்து தூங்குகிறான்
கனவுகளில் ஒட்டிக்கொண்டிருக்கிறது
அவன் முத் தத்தின் வாசனை
தோழீ ..   வருவான் தானே
கவிதையின் சிதையில்
கனவுகளுக்கு எரியூட்ட..


( நன்றி..காக்கைச்சிறகினிலே. ஜனவரி 2020)