Wednesday, June 23, 2021

கவிஞனுக்கு மரணமில்லை.



 கவிஞனுக்கு மரணமில்லை.

அவன் நிரந்தரமானவன்...
கண்ணதாசா.. உன்னை வாழ்த்தும்போது
தமிழ் வாழ்கிறது.
தமிழ்க் காதலியர் வாழ்கிறார்கள்
தமிழன் வாழ்கிறான்.
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசிவரை நீ தான்.
எம் வாழ்விலும் சாவிலும் கூடவே பயணிக்கிறாய்.
ஒரு தலைமுறை தமிழ்ச்சாதியின்
ஆலயமணி ஒசை நீயல்லவா!
தமிழ் நதியில் விளையாடி
பொதிகை மடியில் தலைசீவிய
4 ஆம் தமிழ்ச்சங்கமே .. நீ
காலத்தை வென்ற தமிழ்க்கடலில் மத்தாகி
பாற்கடலை- பா கடலைக் கடைந்தெடுத்தாய்.
அமுதம் விஷமான போதெல்லாம்
அதுவே உன் கையில் மதுவானது.
நீ போதையில் தள்ளாடும் போதெல்லாம்
தமிழ் தன்னை அலங்கரித்துக் கொண்ட து.
எம் தலைமுறையின் இதயராகத்தை
உன் பாடல்வரிகளால் மீட்டிக்கொண்டோம்.
எம் காதல் கடிதங்கள்
உனக்கு கடன்பட்டிருக்கின்றன.
உன் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம்
திரும்பவும் திரும்பவும் பிறக்கிறோம்.
“அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வருவதும்
இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் “ என்று துடிப்பதும்
எம் ரசனையின் அடையாளம் மட்டுமல்ல.
தமிழ் எம்மில் உயிர்ப்புடன் இருப்பதன்
ஒற்றை அடையாளமய்யா நீ.
உன்னைச் சித்தன் என்று சொல்லவா
பிழைக்கத் தெரியாத பித்தன் என்று சொல்லவா
பாட்டுப்பாடி பிழைத்த பாணன் என்று சொல்லவா..
நீ ஜார்ஜ் மன்னனின் நிழலில் குடி இருந்தாய்
சார்லசின் குணங்களை அனுபவித்தாய்
ஆனால் நீ மட்டும் பைரனாகவே வாழ்ந்திருக்கிறாய்.
சிறுகூடற்பட்டி மூங்கிலை வெட்டினார்கள் சிலர்.
திட்டினார்கள் பலர். அவமானப்படுத்தினார்கள்
அழவைத்தார்கள். விரட்டினார்கள்.
கூரிய ஆயுதங்களால் சீவினார்கள்.
மூங்கில் தன்னைத்தானே துளைத்து துளைத்து
துடிக்கும் போதெல்லாம் புல்லாங்குழலில்
புருசோத்தமன்கள் பிறந்தார்கள்.
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்.
சிறுகூடற்பட்டி மூங்கில் வாழ்க
தமிழரின் புல்லாங்குழல் வாழ்க
நம் புருஷோத்தமன் வாழ்க


https://youtu.be/LvBP7qVk-hw






No comments:

Post a Comment