கேலிச்சித்திரங்கள் வரைந்து, வரைந்து அதன் ஊடாக இன அரசியல், மொழி அரசியல், 
பேசி இந்தியாவின் தொழில் நகரமான மும்பையைத் தன் வசமாக்கிய சிவசேனாவின் 
அண்டுகுண்டு அரசியல்.. அதன் ஆரம்பமும், வளர்ச்சியும் தங்கள் அரசியலுக்கு
 அவர்கள் கையாண்ட உத்திகளும், ஆயுதங்களும் இந்திய மாநில அரசியலில் 
கவனிக்க வேண்டியவை.

இந்திய விடுதலைக்குப் பின் மொழிவாரியாக மாநிலங்கள் 
பிரிக்கப்பட்டபோது, அன்றைய பம்பாய் மாநகரை குஜராத்தும் 
மகாராஷ்டிராவும் சொந்தம் கொண்டாடின. 
1950களில் பம்பாய் மராட்டியர்களுக்கே சொந்தம், பம்பாய் மகாராஷ்டிராவின்
 தலை நகர் என்று மராட்டியர்கள் போராட்டம் செய்தார்கள். 
சம்யுக்த மகாராஷ்டிர இயக்கம் (samyukta Maharashtra movement)
 ஆரம்பித்து தொடர் போராட்டங்கள் நடந்தன. அப்போராட்டங்களில்
பால்தாக்கரேயின் தந்தை எழுத்தாளர் கேசவ் சீதாராம் தாக்கரே
முக்கியமானவர். இந்தப் புள்ளியிலிருந்து பால்தாக்கரேயின்
அரசியல் கருத்துருவாக்கம் விதை கொள்கிறது எனலாம்.
paul takkare














கேலிச்சித்திரங்கள்
ஆங்கில தினசரியில் (free press) கேலிச்சித்திரங்கள் வரையும்
கார்ட்டூனிஸ்டாக வேலை பார்த்து வந்த பால்தாக்கரே
தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வாரப் பத்திரிகை
“MARMIK’ ஆரம்பிக்கிறார். மர்மிக்கின் கேலிச்சித்திரங்கள் 
மராட்டிய மண்ணின் அரசியலாக மாறியது என்பது 
கார்ட்டூனிஷ்டுகளின் கற்பனைக்கும் அடங்காத செய்தி! 
தொடர்ந்து தன் வார இதழில் பால்தாக்கரே வரைந்த
கார்ட்டூன்கள் அன்றைய இளைஞர்களிடம்
மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.
இத்தருணத்தில் தான், 1961ல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
 வெளியிடப்பட்டது. அந்தப் புள்ளிவிவரங்கள்
பால்தாக்கரேவுக்கும் மராத்தியர்களுக்கும் நிச்சயம்
 உவப்பானதாக இருந்திருக்க முடியாது.
1961 கணக்கெடுப்பில் மராட்டியர்களுக்குத் தெரிய வந்த
உண்மை இதுதான்.. அவர்களின் தலை நகரில்
அவர்கள் பெரும்பான்மையினர் இல்லை என்பதும்,
அவர்களின் தலைநகர் அவர்களின் வசமில்லை என்பதும்
 கசப்பான உண்மையாக அவர்களின் முன்னால் வைக்கப்பட்டது.
அன்றைய பம்பாய் மா நகரில் மராத்தியர்கள் 41%.
பிற மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் மீதி 59%.
இதில் தென்னிந்தியர்கள் மட்டும் 8.4%.
ஆனால் தென்னிந்தியர்கள் 70% வேலையில் - பணிகளில்
 இருந்தார்கள் என்பதும் தெரியவந்தது.
இந்த மாதிரியான மண்ணின் மைந்தர்களின் புறக்கணிப்பு 
ஒவ்வொரு மாநில அரசியலிலும் 
அந்தந்த மாநிலக் கட்சிகளின் தோற்றத்திற்கும், 
வளர்ச்சிக்குமான காரணமாக அமைந்து விடுகின்றன. 
அதுவே மராட்டிய மாநிலத்திலும் நடைபெற்றது என்றே கருத வேண்டும்.
அவர்களின் போராட்டங்கள் ஆரம்பத்தில்
தென்னிந்தியர்களுக்கு, மதராசிகளுக்கு,
தமிழர்களுக்கு எதிரான போராட்டங்கள் என்பதாலேயே 
அப்போராட்டங்களின் நியாயங்களைப் புறம் தள்ளிவிட முடியாது.
அவர்களின் போராட்ட வழிமுறைகளுடன் நமக்கு முரண்பாடு
இருந்தாலும், இந்த யதார்த்த நிலையை அவர்களின் பார்வையிலும்
காண வேண்டும்.
மர்மிக் இதழில் வெளிவந்த கார்ட்டூன்கள்
அவர்களின் இக்கருத்துகளுக்கு வலுசேர்த்தன.
Bajao Pungi, Hatao Lungi “ - பஜாவ் புங்கி, ஹடாவ் லுங்கி..
இக்கார்ட்டூன் மகுடி வாசி, லுங்கியை விரட்டியடி
என்ற கருத்தை மராட்டிய இளைஞர்க‌ளிடம் தீவிரமாக்கியது.
Kalcha madras, thodyach divsat tupashi - "
நேற்று வந்த மதராஸி.. சீக்கிரம் ஆகிறான் பணக்காரன்”
தங்கள் தலைநகரில் வாழும் பிற மாநிலத்தினவர்களின்
பெயர்களை மர்மிக் இதழ் ஒரு டெலிபோன் டைரி போல
வெளியிட்டது. அத்துடன் அந்தப் பெயர்களுக்கு கீழே..
மராட்டியர்கள் எங்கே? என்ற கேள்வி வைக்கப்பட்டது.
அதில் வெளியிடப்பட்டிருக்கும் பெயர்கள் அனைத்தும்
பெரும்பாலும் தென்னிந்தியர்களின் பெயர்களாகவும் இருந்தன.
இந்தப் பெட்டிச் செய்தி “ VATSCHA ANI THAND BASA” என்ற தலைப்பில்
வெளியிடப்பட்டு இளைஞர்களை உசுப்பேற்றியது.
அதாவது “இதை வாசி, அமைதியாக இரு” என்று சொல்லச் சொல்ல
அதன் மறைபொருளாக சொல்லப்பட்ட
“ வாசி, கலகம் செய்” என்ற காட்சி களத்திற்கு வந்தது.

அண்டுகுண்டு அட்டாவ் .. என்ற கோஷம் வலுத்தது.
அண்டுகுண்டு என்பது தென்னிந்திய மொழிகளின் ஒலிப்புக்கு
 அவர்கள் கொடுத்த கேலியான அடைமொழி.
இன்றும் தென்னிந்திய மொழிகளை அவர்கள் (ய)அண்டு குண்டு
என்று சொல்வது வழக்கத்தில் இருக்கிறது.
சிவசேனா தோற்றம்
தன் கேலிச்சித்திரங்கள் மூலம் மராட்டிய இளைஞர்களைத்
தன் வசமாக்கிய பால்தாக்கரே முதன் முதலாக அமைப்பு ரீதியாக
 அவர்களை ஒன்றிணைக்க நினைத்தார்.
19 ஜூன் 1966 ல் சிவசேனா ஓர் இயக்கமாக உருவெடுத்தது.
அக்டோபர் 30, 1966 ல் தாதரில் சிவசேனாவின்
 முதல் பேரணியும் கூட்டமும் அறிவிக்கப்பட்டது.
“தங்களின் சொந்த மண்ணில், தங்கள் மாநிலத்தில் 
தங்களுக்கு ஏற்படும்அவமானங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் 
என்று நினைக்கும் சுயமரியாதை உள்ள ஒவ்வொரு மராட்டியனும் 
சிவசேனாவின் இப்பேரணியில் கலந்து கொள்ள வேண்டும்"
என்று தம் மக்களை அழைத்தார். அவர் அழைப்புக்கு
அவரே எதிர்பார்க்காத அளவுக்கு மக்கள் பெரும் திரளாக
வந்தார்கள். அந்தக் கூட்டம் தான் பால்தாக்கரே தன் அடுத்த நிலை
செயல்பாடுகளுக்கு ஊக்கம் தருவதாக இருந்தது.
சிவசேனா கட்சி மாநாடுகள் நடத்துவதில்லை,
அவர்கள் தசரா பண்டிகையை ஒட்டி தாதரில் மாபெரும்
 பொதுக்கூட்டம் நடத்துவதும் பேரணி நடத்துவதும்
அன்றிலிருந்துதான் ஆரம்பமானது. அந்தக் கூட்டத்தில் தான்
சிவசேனாவின் அறிக்கைகளும் திட்டங்களும் அறிவிக்கப்படும்.
இன்றுவரை அச்செயல் தொடர்கிறது.
மண்ணின் மைந்தர்கள் என்ற கருத்தை முன்வைத்து பால்தாக்கரே
 பேசிய உணர்ச்சி மிகு உரை அக்கூட்டத்தில் பெரும் தாக்கத்தை
 ஏற்படுத்தியது. வந்திருந்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள்
என்பதும் நிரந்தரமான வேலை இல்லாதவர்கள்
என்பதும் கவனிக்கத்தக்கது.
எனவே மதராசிகள் பம்பாயில் மராட்டியர்களின் வேலைவாய்ப்பை
தட்டிப் பறிக்கிறார்கள் என்பதும் அவர்களாலேயே மராட்டியர்களுக்கு
கொடுக்கப்பட வேண்டிய அவர்களின் வாழ்வாதர உரிமை
பறிபோகிக் கொண்டிருக்கிறது என்பதும்
மராட்டிய இளைஞர்களைச் சினம் கொள்ள செய்தது. விளைவு..?
கூட்டம் முடிந்து வெளியில் வந்த இளைஞர்கள்
 வரும் வழியிலேயே உடுப்பி ஹோட்டலை உடைத்து நொறுக்கினார்கள்.
அதன் பின் இம்மாதிரியான தாக்குதல்கள் தொடர்ந்தன.
1967 ல் காலாசவுக்கி(@central mumbai)யில்
இன்னொரு தென்னிந்தியரின் ஹோட்டல் தாக்கப்பட்டது.
அத்தாக்குதலில் 32 பேர் காயமடைந்தார்கள்.
ஆனால் பால் தாக்கரே ஹோட்டலைத் தாக்கிய சிவசேனாக்காரர்களைப்
 புகழ்ந்து கொண்டாடினார். சிவசேனாவின் முதல் (manifesto)
அறிக்கை மண்ணின் மைந்தர்களுக்கு எதிராக
 தென்னிந்தியர்களை நிறுத்தியது.
இக்கருத்தை ஒட்டியே அவருடைய பல போராட்டங்கள் தொடர்ந்தன.
மராட்டிய இளைஞர்கள் தென்னிந்தியர்களை தங்கள்
முதல் எதிரியாக நினைக்க ஆரம்பித்தார்கள்.

அன்றைய பம்பாய் பெரு நகரம் இரண்டாக பிளவுப்பட்டது.
Local bombay

Non local Bombay

சிவசேனையும் தமிழர்களும்
—————————————-


புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த பலர் தனியாக இருப்பதைத் தவிர்த்து
கூட்டம் கூட்டமாக தங்கள் சாதி ஜனங்களுடன் இருப்பதே தங்களுக்குப்
பாதுகாப்பானது என்ற எண்ணம் உருவானது . 
இக்காலக்கட்டத்தில் தான் இன்னொரு மாற்றமும் நிகழ்ந்தது.
அடிதடி, கொலை கொள்ளை திருட்டு கள்ளச்சாராயம் கஞ்சா விற்பனை,
கடத்தல் என்ற தாதாக்களின் போட்டி.. அன்றைய பம்பாயில் தாதாக்கள்
பலர், அவர்களில் வரதாபாய், ஹாஜி மஸ்தான் இருவரும் தமிழர்கள். 
இந்த இருவருக்கும்
கையாட்களாக வேலை செய்த குட்டி தாதாக்கள் பலருண்டு. 
பொதுஜனத் திரளில் கலக்காமல் வாழ்ந்த இவர்கள்
சமூக தளத்தில் அந்தந்தப் பகுதி மக்களைப்
பாதுகாக்கும் காவலர்களாக மாறினார்கள்.அல்லது 
சிவசேனாவின் அடாவடித்தனத்தை
எதிர்கொள்ள அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர்கள் 
தேவைப்பட்டார்கள் என்றும் இதைப் புரிந்து கொள்ளலாம்.
இப்பின்னணியில் பம்பாய் மா நகரம் தாதாக்களின் ஆளுகைக்குட்பட்டதாக
மாறியது பெருங்கதை. 

தாராவியில் வாழ்ந்த தமிழ் மக்கள் சிவசேனாவுக்கும் பால்தாக்கரேக்கும்
எதிராக ஒன்று திரண்டார்கள். அரசியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும்
ஒன்று திரண்டு ஒரு பெரும் சக்தியாக மாறினார்கள். பால்தாக்கரே வசித்த
பாந்திரா பகுதியும் தாராவியும் அடுத்தடுத்து இருந்ததால் இவர்களுக்குள்
அடிக்கடி கை கலப்பு .. அடிதடி சண்டைகள் தினசரி செய்திகளாக இருந்தன.

ஒவ்வொரு ஆண்டும் மாதுங்காவில் கணபதி விழாவை பத்துநாட்களும் மிகவும் ஆடம்பரமாக வரதராசமுதலியார் கொண்டாடுவார். 
(இன்றைய செண்ட்ரல் மாதுங்கா ஸ்டேஷன் அருகில்
பல இலட்சங்களுக்கு அலங்காரப்பந்தல், பத்து நாட்களும் 
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ்நாட்டின் 
திரைப்பட இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், நடிகர்கள்
வருவார்கள்வரதராசமுதலியார் அழைத்து முடியாது 
என்று சொன்னவர்கள் கிடையாது என்பார்கள். மாதுங்காவிலிருக்கும் 
எல்லா கடைகளில் இருந்தும் கணிசமான ஒரு தொகை 
வசூலிக்கப்படும், கூட்டம் அலைமோதும்
அவர் கோஷ்டியிலிருக்கும் இளைஞர்கள் மாதுங்காவின்
சாலைப் போக்குவரத்திலிருந்து கூட்டத்தை ஒழுங்குப்படுத்துவது வரை 
தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள். நான், என் சகோதரிகள்,
 தோழியர் என்று எங்கள் சால் குடியிருப்பிலிருந்து 
அவர் போட்டிருக்கும் பந்தல் அலங்காரத்தைப் பார்க்கவே
 போயிருக்கிறோம். அவ்வளவு கூட்டத்திலும் பெண்களை 
யாரும் கேலிக்கிண்டல் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் 
வந்ததில்லை.
80களில் வரதராஜ முதலியார் தமிழர் பேரவை ஆரம்பித்த நேரம்.
அவருடைய மற்ற இரண்டாம் பிசினஸ் எல்லாம் குறைந்துவிட்ட
காலம். அப்போதுதான் அவருக்கு ஒரு பலப்பரீட்சை நடந்தது.

அவர் போட்டிருந்த பந்தல் அன்றைய நிகழ்ச்சி முடிந்தப்பின் 
பின்னிரவில் தீ வைக்கப்பட்டது. பந்தல் முழுவதும் தீக்கிரையானது.
விடிந்ததும் அதிகாலையில் பெரியவர் வரதராசமுதலியார்
நேராக பாந்திராவிலிருக்கும்
பால்தாக்கரே இல்லத்திற்குப் போனார்
அவருடம் இருந்தவர்கள் விசிட்டர் அனந்த்
மும்பையில் வாழும் மூத்த எழுத்தாளர் சீர்வரிசை சண்முகராசன் 
ஆகியோர். இவர்கள் இருவரும் வராந்தாவில் காத்திருந்தார்கள்.
அவர் மட்டும் தனியாக பால்தாக்கரைச் சந்தித்தார்

அன்று மாலைக்குள் பால்தாக்கரே ஆட்கள் 
எரிந்து போன பந்தலை அது எப்படி எழுப்பப்பட்டிருந்ததோ
அப்படியே கட்டி முடித்துக் கொடுத்தார்கள்
அன்றைய நிகழ்ச்சி வழக்கம்போல தொடர்ந்து நடந்தது
பால்தாக்கரே தான் நடத்திய பலப்பரீட்சையில் முதலியாரை
அசைக்கமுடியாது என்பதை உணர்ந்து கொண்டார்.
லமான இந்த அடி வாங்கிய சிவசேனை புலிகள்
சிங்கத்தின் பல்லைப் பிடுங்கி அடிக்கும் நாளை எதிர்பார்த்திருந்தார்கள்.

(மும்பையில் தாதாக்கள் என்ற என் விரிவானக் கட்டுரை வாசிக்க : 
20071122_issue)



லுங்கி அடாவ்என்ற சிவசேனாவின் கோஷம் தாராவி போன்ற பகுதிகளில்
வாழ்ந்த சிறுதொழில் செய்வோர், கடை நிலை, இடை நிலை பணிகளில்
இருந்த தமிழர்களைக் குறிவைத்து எய்த அம்பு. லுங்கிக்கும் தோத்தி என்று
சொல்லப்படும் வேஷ்டிக்கும் இருக்கும் வேறுபாடு.. சாதி வர்க்கம் சார்ந்ததாகவும்
இருந்தது என்பதையும் கவனிக்க வேண்டும். இந்திய விடுதலைக்குப் பின்
கல்வி கற்று வெளியில் வரும் மராட்டியர்கள் ஆரம்ப காலத்தில் 
கடை நிலை இடை நிலை வேலைக்குத் தகுதியானவர்களாக இருந்ததால்
அத்தகுதி நிலையில் அதற்குப் போட்டியாக இருந்தவர்களை எதிர்த்தார்கள்.
பொதுமக்கள் மத்தியில் லுங்கி அடாவ் போராட்டங்களும் அடிதடிகளும்
குடும்ப அமைப்பில் சில மாற்றங்களை உருவாக்கியது. எவ்வளவு காலம்
மும்பையில் வாழ்ந்தாலும் நாம் மும்பைவாசியல்ல என்ற உணர்வு
 ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டது.
அம்ச்சி மும்பை என்ற சொல் நமக்கு அன்னியமான சொல் 
என்ற யதார்த்தம் அன்றைய தமிழர்களை அவர்களின் சொந்த ஊர்
சொந்தங்கள் நோக்கி திசை திருப்பியது. இக்காலக்கட்டத்தில் பலர்
தம் சொந்த ஊர்களில் சொந்தமாக வீடு கட்டினார்கள். பெரும்பாலும்
அன்று தாராவியில் வாழ்ந்த தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை
ஆரம்பக்கல்விக்குப் பிறகு உயர் நிலைப் பள்ளி, கல்லூரி படிப்புக்கு
சொந்த ஊருக்கு அனுப்பினார்கள். குழந்தைகளை விடுதிகளில் தங்க வைத்து
படிக்க வைத்தார்கள். தாராவியில் ஆரம்ப பாடசாலைகள் மட்டுமே இருந்தன.
இப்படியான மாற்றங்கள் அன்றைய தாராவி தமிழர்கள் வாழ்க்கையில்
இச்சூழல் காரணமாக ஏற்பட்டது. எங்கள்  வீட்டில்
நானும் என் உடன்பிறந்தவர்களும் ஆரம்பக்கல்விக்குப் பின் எங்கள் 
கல்வியைத் தொடர்வதற்கு தமிழகம் அனுப்பப்பட்டோம். விடுதி வாழ்க்கைக்கு
தள்ளப்பட்டோம். தாராவிப் பகுதி தான்  தமிழர்களுக்கான 
பாதுகாப்பான இடம் என்ற
கருத்து வலுப்பெற்றதற்கு இச்சூழலும் ஒரு காரணமாக இருந்தது.

மதராஸி முகம்
——————\


பொதுவாக மதராஸி என்று மராட்டியர்கள் தென்னிந்தியர்கள் அனைவரையும்
ஒரே பார்வையில் பார்க்கிறார்கள். கன்னடம் தெலுங்கு மலையாளம் தமிழ் ..
இவர்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை அவர்கள் அன்று அறிந்திருக்கவில்லை.
அல்லது பொருட்படுத்தவில்லை எனலாம். யண்டு குண்டு என்று தென்னிந்திய திராவிட
மொழிகள் அனைத்தையுமே அவர்கள் கேலி செய்தார்கள். 
ஆனால் அன்றைய நிலவரம் 
கேரளாவிலிருந்து வந்தவர்கள் தேங்காய்/இள நீர் வியாபாரம் , அலுவலகங்களில்
ஸ்டெனோ, டைப்பிஸ்ட் வேலை.
கன்னடியர்கள் ஹோட்டல் பிசினஸ்
தெலுங்கர்கள் பெரும்பாலும் கூலிகளாகவும் கட்டிட வேலை செய்பவர்களாகவும்.
தமிழர்கள் ரயில்வே, வங்கி, நூற்பாலைகளில் குமாஸ்தாக்களாக இருந்தார்கள்.
இவர்களின் பெயர்களையும் ஒவ்வொரு நிறுவனங்களிலும் இவர்களின்
ஆக்கிரமிப்புகள் இருப்பதையும் தொடர்ந்து மிர்மிக் பத்திரிகை வெளியிட்டது.
தங்களுக்கு எதிராக பேசிய பத்திரிகைகளான blitz, indian express 
பத்திரிகை அலுவலகங்களை அடித்து நொறுக்கினார்கள்.
ஹிந்துஸ்தான் லிவர் போன்ற கம்பேனிகள் மராட்டிய மண்ணின்
நீர், நிலம். மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது, ஆனால் மராட்டியர்களுக்கு
ஏன் வேலை கொடுப்பதில்லை? என்ற கேள்வியை முன் வைத்தார்கள்.
1972 ல் ஏர் இந்தியா வின் தலைமை அதிகாரி எஸ்.கே. நந்தா அவர்களை
தாக்கினார்கள். வேலை மறுக்கபப்ட்டவன் தாக்குகிறான் என்று
இச்செயலை நியாயப்படுத்தினார் பால்தாக்கரே.

பம்பாய் மக்கள் தொகையில் மதராசிகளை விட 
அதிகமாக இருந்தவர்கள் குஜராத்திகள்.
ஆனால் அவர்கள் எதிரியாக கருதப்படவில்லை! ஏன்?
மதராசிகள் 8. 4% 
குஜராத்திகள் 14%
அதற்கு சிவசேனா தலைவர் பால்தாக்கரே சொன்ன  காரணம்..
குஜராத்திகள் மராத்தியர்களுக்கு வேலைகளை உருவாக்கித் தருகிறார்கள்.
அன்னமிட்ட கைக்கு துரோகம் செய்யலாமா ?என்று தர்மம் பேசினார்
பால்தாக்கரே.



தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு எதிரொலி
——————————————————

தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு அதன் விளைவுகளை மராட்டிய மண்ணில்
வேறொரு வகையில் எதிர்கொண்டது. இந்தி எதிர்ப்பை ஒட்டி 
தமிழக திரையரங்குகளில்
இந்தி சினிமாக்கள் திரையிட தடை செய்யப்பட்டிருந்தது.
அதையே காரணம் காட்டி
மும்பையில் தமிழ் தயாரிப்பாளர்கள் எடுக்கும் இந்திப் படங்களைத் 
திரையிட கூடாது என்று சிவசேனா தடை விதித்தது
. இதனால் தயாரிப்பாளர்களுக்கு
நஷ்டம் ஏற்பட்டது. தயாரிப்பாளர்கள் சார்பில் மெய்யப்பன் அவர்கள் 
பால்தாக்கரேவை  சந்தித்தார்.
பால்தாக்கரே சில நிபந்தனைகளை விதித்தார்.

இந்தி திரைப்படங்களுக்கு தமிழ் நாட்டில் நிலவும் தடையை அகற்ற வேண்டும்.
அது முடியாது என்றால்
உங்கள் ஸ்டுடியோக்களை மும்பைக்கு மாற்றுங்கள்
மராட்டியர்களுக்கு
மும்பை ஸ்டுடியோக்களில் வேலைக் கொடுங்கள்..
இதெல்லாம் நடக்கட்டும்
உங்கள் படங்களை திரையிட அனுமதிக் கிடைக்கும் என்று 
சொல்லி அனுப்பினார் .

இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று தமிழ் மொழி அரசியலை
தமிழின அரசியலை முன் வைத்து திமுக கட்சி மாபெரும் இயக்கமாக
வளர்ந்ததும் 1967ல் ஆட்சியைப் பிடித்ததும் மராட்டிய அரசியலில்
அதிலும் குறிப்பாக இன அரசியல் பேசிய சிவசேனாவால்
கவனிக்கப்பட்டது. பால்தாக்கரே இந்த அரசியல் மாற்றங்களைக்
கூர்ந்து கவனித்தார் . அவருடைய இனவாத அரசியலும் கலாச்சார
அரசியலாக மண் சார்ந்த அரசியலாக முன்வைக்கப்பட்டது.

16 மே, 1978 ல் ஒபேரா ஹோட்டலில் தங்கி இருந்தார் அன்றைய தமிழக
முதல்வர் கலைஞர் கருணா நிதி அவர்கள்
அவரைச் சந்திக்க விரும்பினார்
பால் தாக்கரே. அவர்கள் இருவரும் சந்தித்து 
அரை மணி நேரம் பேசினார்கள்.
இருவருமே தங்களின் சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு 
என்ற வழக்கமான காரணத்தை மட்டுமே
 சொன்னார்கள். கலைஞர் அவர்கள்
அவர் என்னை சந்திக்க விரும்பினார், சந்தித்தார் “ 
என்று சொன்னார்.
பால் தாக்கரே வும் அதற்கு மறுப்பு சொல்லவில்லை. இச்சந்திப்பு
வழக்கமான காரணங்களையும் தாண்டிய சந்திப்பாக தான்
இருந்திருக்க முடியும் என்பதை இருவரையும் அறிந்தவர்கள் ஊகிக்க
முடியும் என்றாலும் வேறு தகவல்கள் எதுவுமில்லை.
இதுவே அவர்கள் இருவரின் முதலும் கடைசியுமான சந்திப்பு .



அம்பேத்கர் மண்ணில்
——————————
சிவசேனா அம்பேத்கர் பிறந்த மண்ணில் தலித்துகளின் எழுச்சி 
ஏற்பட்ட மண்ணில் தான் அரசியல் செய்கிறது என்பதையும்
சேர்த்து வாசிக்க வேண்டியது கட்டாயமாக இருக்கிறது.
தொழிற்சங்கங்கள், காட்டன் மில்ஸ் என்று தலித்துகளும்
மராட்டிய மண்ணின் சாதிய ஒடுக்கமுறை நிலவிய கிராமங்களில்
இருந்து வேலை நிமித்தம் மும்பைக்கு வந்தார்கள்.
காந்திகிராமத்தை நோக்கி பயணிப்போம்என்று சொன்னதற்கு
எதிராக  நகரங்களை  நோக்கி பயணிப்போம்என்ற அம்பேத்கரின்
வாசகங்கள் பல்வேறு தளத்தில் வைத்து வாசிக்க வேண்டிய வரிகள்.
அம்பேத்கர், தலித்துகள் ஆகியோரை வெளிப்படையாக
சிவசேனா தாக்குவதில்லை என்றாலும் மராத்வாடா பல்கலை கழகத்திற்கு
அம்பேத்கரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று சரத் பவார் மராட்டிய
மா நில முதல்வராக இருக்கும் போது 27, ஜூலை 1978 ல் தீர்மானம்
நிறைவேற்றினார். அத்தீர்மானத்தை எதிர்த்து முதன் முதலாகக் குரல்
கொடுத்தது சிவசேனா. ஜூலை 30 பெயர் மாற்றத்தை எதிர்த்து மாபெரும்
போராட்டம் நடக்கும் என்று பால்தாக்கரே அறிவித்தார். முதல்வருடன்
ஏற்பட்ட சந்திப்புகளுக்குப் பின்மராத்வாடாஎன்ற பெயர் அப்படியே
இருந்தாக வேண்டும் என்பதை நிபந்தனையுடன் ஒத்துக்கொண்டார்.
அதனால் தான் அப்பல்கலை கழகத்தின் பெயர் 
டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் மராத்வாடா யுனிவர்சிட்டிஎன்றிருக்கிறது.
இதில் பாபாசாகிப் அவர்களுடன் ஒட்ட முடியாத மராத்வாடா ஒட்டிக்கொண்டு
இருப்பதற்கு இதுவே காரணம்.
லுங்கி அட்டாவ் என்று சொன்னவர்கள்தோத்தி அட்டாவ்
என்று சொல்லவில்லை. இந்த உடைகளுக்கான அடையாளங்களில்
சாதியும் மதமும் கலந்திருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.



பெரு நகரைக் கைப்பற்ற
——————————-
இந்தியாவின் வணிகத்தலை நகர் மும்பையைக் கைப்பற்ற நடந்த
யுத்தத்தில் சிவசேனா பொதுவுடமைக் கட்சியை எதிரியாக நினைத்தது.
அன்றைய தொழில் நகரமான பம்பாயில் தொழிற்சங்கங்கள், பொதுவுடமை
கட்சியின் அதிகார வரம்புக்குட்பட்டதாக இருந்தது. 1970 ல் சிபிஎம் தலைவர் 
கிருஷ்ணதேசாய் கொலை செய்யப்பட்டார். பால்தாக்கரே கொலைக்காரர்களுக்கு
ஆதரவாக இருந்தது மட்டுமல்ல, வெளிப்படையாக அவர்களைப் பாராட்டினார். 
கிருஷ்ணதேசாய் மரணத்தால் ஏற்பட்ட இடைத்தேர்தலில் சிபிஎம் சார்பாக
கிருஷ்ணதேசாயின் மனைவி நிறுத்தப்பட்டார். அவரைத் தோற்கடித்து
சிவசேனா தன் இரத்தக் கறையுடன் சட்டசபைக்குள் முதல் அடியை
எடுத்துவைத்தது. சிவசேனா என்ற அமைப்பு தேர்தல் அரசியல் தளத்தில்
காலடி வைத்தது.
லால்பாக் பரேல் பகுதியிலிருந்த மிகவும் பழமை வாய்ந்த தொழிற்சங்கமான
கிர்னி காம்கார் யுனியன் அலுவலகத்தை சிவசேனா எரித்தது. மிக முக்கியமான
ஆவணங்கள் தீக்கிரையாகிவிட்டன. நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்,
நேரு ஆகியோர் எழுதிய கடிதப்பதிவுகளும் அழிந்துப்போயின.
தொழிற்சங்கங்களை எரித்தும் தொழிற்சங்க வாதிகளை மிரட்டியும்
கொலை செய்தும் தொழிற்சங்கங்களைக் கைப்பற்றியது சிவசேனா.

தொழிற்சங்க தலைவராக இருந்த தாத்தா சாமந்த்
நூற்பாலைகளின் தொழ்ற்சங்கத்தலைவராக இருந்தார்.
அவருடைய குரல் தொழிற்சங்கங்களில் வலிமையான குரலாக
இருந்தது. அவர் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தை 
அற்வித்தப்போது அவருடைய போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக
சொன்ன சிவசேனா போராட்டம் ஆரம்பித்தவுடன் ஆதரவை
திரும்பப்பெற்றுவிட்டது! 


1971 ல் கர்னல் கரியப்பாவை தேர்தலில் ஆதரிக்கும் போதே 
மதராசிகளுக்கு எதிரான சிவசேனாவின் கருத்து மாறுகிறது என்பதைக்
கவனிக்க வேண்டும். கரியப்பா தோற்றுப்போனார் என்றாலும் கரியப்பாவை
ஆதரித்ததற்கு சிவசேனா சொன்ன காரணம் அவர்களின் அன்றைய 
எதிரி யார் என்பதை உணர்த்தும் .
தென்னிந்தியர்கள் இந்தியர்கள் தான். ஆனால் இந்தக் கம்யுனிஸ்டுகள்
இருக்கிறார்களே.. அவர்கள் மாஸ்கோவில் மழைப் பெய்தால் பம்பாயில்
குடைப் பிடிப்பவர்கள்என்றார்  பால்தாக்கரே.

லுங்கி அடாவ் என்ற கோஷம் இன்று பையா அடாவ் என்று 
வட இந்தியர்களுக்கு எதிராக ஒலிக்கிறது.  எப்படி மதராசி என்று தென்னிந்தியர்கள்
அனைவரையும்  அடையாளப்படுத்தினார்களோ அவ்வாறேபையாஸ்/ பையாக்கள்
என்று வட இந்தியர்கள் அனைவரையும் அடையாளப்படுத்துகிறார்கள்.
அதிலும் குறிப்பாக பீகாரிகளையும் உத்திரபிரதேசத்து மக்களையும்
எதிரிகளாக இன்று அடையாளம் கண்டு ரயில்வே தேர்வு எழுத
வந்தவர்களை அடித்து விரட்டுவது வரை சிவசேனாவின் போராட்டங்கள்
தொடர்கின்றன. சிவசேனாவில் இருந்துப் பிரிந்த  MNS - மகாராஷ்டிரா
நவ நிர்மான் சேனா இதை வைத்தே அரசியல் செய்து கொண்டிருக்கிறது.

சிவசேனா தலைவர் பால் தாக்கரே தங்கள் கட்சி பத்திரிகையான சாம்னா வில்
எழுதிய வாசகங்கள் இன்றும் அப்படியே அழிக்கப்படாமல் இந்திய ஜன நாயகத்திற்கு
அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. 
ஒரு பீகாரி நூறு வியாதிகளைக் கொண்டுவருகிறான் என்று பால்தாக்கரே
எழுதினார். 
(Ek Bihari, Sau Bimari. Do Bihari Ladai ki taiyari, 
Teen Bihari train hamari and paanch Bihari to sarkar hamaari" 
(One Bihari equals hundred diseases, Two Biharis is preparing for fight, 
Three Biharis it is a train hijack, and five Biharis will try to form the ruling Government).

மும்பையில் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் குடியேறலாம்
அது இந்தியர்களின் உரிமை என்று இந்திய அரசும்
மகாராஷ்டிர கவர்னரும் சிவசேனாவுக்கு எதிராக சொல்லிக்கொண்டே 
இருந்தார்கள். இருக்கிறார்கள்.
அவ்வளவு தான்!
மும்பை தர்மசாலா அல்ல, வருகிறவன் போகிறவனுக்கெல்லாம் தங்குவதற்கு இடம் கொடுக்க,
மும்பையில் நுழைவதற்கு இனிமேல் அனுமதி சீட்டு வைக்க வேண்டும் என்று அதற்கும் பால்தாக்கரே
பதில் சொன்னார். இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான இக்கருத்தை அவருடைய இந்துத்துவ
இந்திய முகம் பாதுகாத்தது என்று நினைக்கிறேன். அவர் கருத்துக்கு எதிராக யார் பேசினாலும்
அவர்களை எதிர்கொள்ள சிவசேனா தயங்கியதில்லை. மராட்டியர்களால் கொண்டாடப்பட்ட
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரையும் இக்கருத்து ரீதியாக சிவசேனா எதிர்த்தது நினைவுக்கு
வருகிறது.

முதல் 5 வருடங்கள் 100கிளைகளுடன் செயல்பட்ட சிவசேனாவுக்கு 1980
இறுதியில் மகாராஷ்டிராவில் 40,000
 கிளைகள் இருந்தன. இன்று சிவசேனாவுக்கு மகாராஷ்டிரா எல்லைகளைத் தாண்டியும்
கிளைகள் இருக்கின்றன! !!
பாரதிய காம்கர் சேனா
ஷரமிக் சேனா
காட்டன் தொழிலாளர்கள் சேனா
சரஞ்சிவி காம்கார் சேனா
முனிசிபல் தொழிலாளர்கள் யுனியன்,
கூட்டுறவு வங்கி யுனியன், 
ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் யுனியன்,
BEST பணியாளர்கள் யுனியன்,
சினிமா தொழிற்சங்க யுனியன்,
சிவசேனா வேலை தேடுவோர் யுனியன்
இப்படியாக சிவசேனா பரந்து விரிந்திருக்கிறது.
பொதுவுடமை தொழிற்சங்கங்களை அழித்து தங்களுக்கான 
தொழிற்சங்கங்களை உருவாக்கிக் கொண்டது.
மராட்டியர்கள் தலைமை, இந்துக்களின் பாதுகாவலன்  என்ற இரு முகத்தையும் எப்போதும்
அணிந்து கொண்டு தங்கள் இருப்பை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பதே
அவர்களின் அரசியல் களம் .
சக்கரவர்த்தி சிவாஜி இந்துக்களின் அரசன், அவர் விரும்பியது 
இந்துக்களின் சாம்ராஜ்யம் என்ற
கருத்தை முன் வைத்து சிவாஜி மகாராஜாவின் 
பிற செயல்[பாடுகளை இருட்டடிப்பு
செய்திருக்கிறது. 
புலம்பெயர்ந்தவர்களை விமர்சித்தே அரசியல் நடத்தும் பால்தாக்கரே
ராஜ் தாக்கரே
ஆகிய தாக்கரேக்கள் நதிமூலம் ரிஷிமூலம் தேடினால் அவர்களும் 
மராட்டிய மண்ணின் மைந்தர்கள் அல்லர். அவர்களும் புலம்பெயர்ந்து
வந்தவர்கள் தான் என்ற ஆய்வுகள் இருக்கின்றன. 
 ( வாசிக்க என் கட்டுரை 


இந்துத்துவ அரசியலை நோக்கி
--------------------------------------------

வாக்கு அரசியலுக்கு யண்டுகுண்டு அட்டாவ் மட்டும் போதுமானதல்ல.
இன்னும் சொல்லப்போனால் லுங்கி அட்டாவ் என்ற கோஷம்
மராட்டிய மண்ணில் மும்பை தவிர பிற இடங்களில் எந்த ஒரு
அர்த்தமும் தர முடியாது என்பதை வாக்கு ஓட்டு அரசியல் அவர்களுக்குப்
புரிய வைத்தது. இந்தப் புரிதலில் விளைவு தான்..
சிவசேனாவுக்குள் புதைந்து கிடந்த இந்துத்துவ அரசியல் முகமாக
விசவரூபமெடுத்து வளர்ந்தது எனலாம்.
இந்தியா, இந்து தேசம், இந்துத்துவம்.. என்ற அடையாளம் இன்று
மதராசிகளையும் இந்துக்கள் என்பதால் சிவசேனா கட்சி பிரமுக் ஆக
கொண்டு சென்றிருக்கிறது . 
இந்து தேசம் என்ற வுடன் இந்து தேசத்துக்கு எதிரியாக இசுலாமியர்களை
நிறுத்தி அரசியல் செய்வதில் தன்னுடைய அடுத்தக் கட்ட அரசியலை
ஆட ஆரம்பித்தது சிவசேனா. இந்த ஆட்டம் தேசிய அளவிலும்
மா நில அளவிலும் சிவசேனா கட்சியைப் பலப்படுத்தியது. 

கல்யாண் துர்கடி கோட்டையில் இசுலாமியர்கள் தொழுகை நடத்துவது
வாடிக்கை. 08 செப்டம்பர் 1967 ல் பால்தாக்கரே அக்கோட்டைக்குச் சென்று
காவிக்கொடியை ஏற்றி இனிமேல் இக்கோட்டை இந்துக்களின் கோட்டை
என்று அறிவிக்கிறார். கலகம் ஏற்படுகிறது.
1970ல் இசுலாமியர்கள் அதிகம் வாழும் பீவண்டி பகுதியில் ஆரவாரத்துடன்
சிவாஜி ஜெயந்தி கொண்டாடி அங்கே வேண்டுமென்றே 
கலவரத்தை உருவாக்குகிறார்கள்.
இதன் உச்சக்கட்டமாக 1992, 93 களில் நடந்த மும்பை குண்டுவெடிப்பு
சிவசேனாவை பலமிக்க கட்சியாக மாற்றியது என்றே சொல்ல வேண்டும்.
சிவசேனாவின் இசுலாமியர் எதிர்ப்பு, பாகிஸ்தானியர் எதிர்ப்பு என்ற மதவாத
தேசியமும் இனவாத எதிர்ப்பும் அரசியலானது . அதை அன்றைய
காங்கிரசும் பாரதிய ஜனதாவும் வளர்த்துவிட்டன.
எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட போதுசிவசேனா தடை செய்யப்படலாம்என்ற
வதந்தி கிளம்பியது. அந்த வதந்தியை முறியடிக்கவும் அப்படி ஒன்று
நடந்துவிடாமல் தற்காத்து கொள்ளவும் எமர்ஜென்சியை வரவேற்று
கொண்டாடியது சிவசேனா, இந்திராவுக்கு ஆதரவுக்கொடுத்தது சிவசேனா.


அடிதடி அரசியல்
உணர்ச்சி அரசியல்
இனவாத அரசியல்
மதவாத அரசியல்
இதற்கான ஆள்பலம் அடியாட்கள்..
இந்த அரசியல் ஏன் சரிந்து விடாமல் தொடர்கிறது
என்பதற்கான  காரணங்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டியவை.
தங்கள் இனவாத மதவாத அரசியலை தங்களின் கலாச்சார பண்பாட்டு மீட்டெடுப்பு
அரசியலாக்கியதில் சிவசேனாவுக்கு வெற்றி.
ஓப்பிட்டளவில் சிவசேனா பெண்களுக்கு அதிகாரப்பகிர்வுகளைக் கொடுக்கவில்லை
என்றாலும் அடிமட்ட அளவில் பஞ்சாயத்து தேர்தல்களில் பெண்களுக்கான
இட ஒதுக்கீடுகளை முறைப்படுத்தி இருக்கிறது.
கட்சிக்கும் பெண்கள் சார்ந்த மதிப்பீடுகள் இந்துத்துவ மதிப்பீடுகளின்
சாரமாக  இருப்பதுடன் பெண்களை மதிப்பதிலும் அவர்களை பாலியல் நுகர்ப்பொருட்களாக
கையாளும்  அதிகார வேட்கைகள் சிவசேனாவில் குறைவு என்று சொல்லலாம்.
இளைஞர்களின் சிறுதொழில் வளர்ச்சி, அவர்களுகான வேலைவாய்ப்புகள் என்று
ஒவ்வொரு கிளையும் சிரத்தையுடன் செயல்படுகின்றன.
கள ஆய்வாக என் அனுபவப்பகிர்வு:

என் இல்லத்தில் சமையலுக்கு உதவியாக வந்தப் பெண்மணிக்கு 2 குழந்தைகள்.

ஒவ்வொரு கல்வி ஆண்டின் ஆரம்பத்திலும் அவர் பாண்டூப் பகுதியில் இருக்கும்
சிவசேனா அலுவலகத்திலிருந்து இரண்டு படிவங்களை வாங்கி வருவார்.
நான் தான் அப்படிவங்களைப் பூர்த்தி செய்து கொடுப்பேன். அப்படிவங்களில்
அவர் வருமானம், ரேஷன் அட்டை இத்துடன் வங்கி கணக்கு விவரம்
 கேட்டிருப்பார்கள். அவர் தன் பிள்ளைகளுக்கு கட்டியிருக்கும் பள்ளிக்கூட
டியுசன் பீஸ் மற்றும் நோட்டு புத்தகம் இத்தியாதிகளுக்கான ரசீதை
இணைத்திருப்பார்.  அவர் வங்கி கணக்கில் சிவசேனா பணத்தை
கட்டிவிடுவார்கள் !சிவசேனா கட்சி தன் அடித்தட்டு ஏழை மக்களின்
வாழ்க்கைக்கு எப்படி எல்லாம் உதவுகிறது என்பதற்கு இது ஒரு சின்ன
உதாரணம்.. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்..
உதவி கேட்கும் நபர் சிவசேனா கட்சிக்காரராக மட்டுமே இருக்க வேண்டும் என்ற கட்டாயம் 
இல்லை. அப்படிவத்தில் அப்படி எதுவும் இல்லை. அவர் மராட்டியராக இருக்க வேண்டும்
என்பது மட்டுமே போதும். இதைப்போலவே தொழில் நடத்த தள்ளுவண்டீகள்,
கடைகள் கட்டி கொடுப்பதில் மராத்தியர்களுக்கு உரிமை, ரிக்ஷா / டாக்சி கடனில்
மராட்டியர்களுக்கு முன்னுரிமை , மராட்டியர்களுக்கு spoken english classes
குறிப்பாக டிரைவர்களுக்கு ,  ஒவ்வொரு பகுதியிலும் சரியான பெண் ஆளுமைகளை
அடையாளம் கண்டு கலாச்சார ரீதியாக ஒன்றிணைத்து அமைப்பு ரீதியாக்கி
செயல்பட்டுக்கொண்டிருக்கிறது சிவசேனா. 
இன்று தாராவியில் சிவசேனா தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழர்கள் சிவசேனாவுக்கு
தலைவர்கள் தமிழர்கள் சிவசேனா பிரிவு என்றெல்லாம் வந்துவிட்டது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் மும்பை குண்டு வெடிப்புக்குப்[ பின் ஏற்பட்ட
மாற்றங்கள். என்பதை மறந்துவிடக் கூடாது. 
குண்டுவெடிப்புகளில் இந்துக்களாக ஒன்றிணைக்கப்படுபவர்கள்
மா நில உரிமை என்று வரும் போது  ஸாலா மதராசியாகி
விடுகிறான். இந்த யாதார்த்த நிலையை தமிழர்களும் சிவசேனாவும
அறிந்தே இருக்கிறார்கள். 

மும்பை பெரு நகர் சந்தித்த குண்டு வெடிப்புகள் தீவிரவாதிகளின் தாக்குதல்கள்
சிவசேனாவின் இந்துத்துவ அரசியலுக்கு கூர்மையான ஆயுதமாக மாறிப்போனது.
சிவசேனாவின் வெறுப்பு அரசியலை விலக்கியவர்கள் கூட சிவசேனா
தேவை என்ற இருத்தலியல் அரசியலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். 
பொதுஜனங்களின் இந்த உளவியலை மிகச் சரியாக புரிந்து கொண்டு
பொன்முட்டையிடும் வாத்தாக மும்பை   மா நகரை எப்போதும் தன் வசம்
வைத்திருப்பதில் சிவசேனா மிகவும் கவனமாக இருக்கிறது.
பிஜேபி முதல்வரை சிவசேனா அவ்வப்போது சீண்டிவிடுவதும்
எதிராக அறிக்கை வெளியிடுவதும் அவர்களின் கூட்டு அரசியலில்
சிவசேனா வின் வீர பிரதாபங்களாகவே  கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.
சிவசேனா அரசியல் தளத்தில் இந்து, இந்தியா , இந்து தேசம்
என்ற பலமாக கிளையில் ஊஞ்சலிட்டு ஆடிக் கொண்டிருக்கிறது.
ஆட்டுவித்துக்கொண்டும் இருக்கிறது.


நன்றி: கீற்று.காம். 16/8/18