Sunday, August 26, 2018

சூர்யா@நட்புமண்டலம்.6



ராக்கி கட்டி நம் நட்பை
சகோதர பாசமாக்கி
அவமானப்படுத்திவிடாதே.
ஒரு ரக்‌ஷாபந்தன் நாளில் நம் நட்பு
காயப்பட்டது.
நீ எனக்கும் ரக்‌ஷாபந்தன் கயிறு கட்டி
சகோதரன் ஆக்கிவிடு என்று சொன்னாய்.
மின்னல் என்னைத் தாக்கியது.
என் வனம் எரிந்தது.
என் சூர்யாவைச் சுற்றி புகைமண்டலம்..
இது என்ன கிரஹணம்?
நம் நட்பின் கவிதையை சுட்டுப் பொசுக்கி
அதில் குளிர்காய்வது.. யார்?
நேற்று வரை தேவைப்படாத சகோதர உறவு
இன்று எங்கிருந்து முளைத்தது?
சகோதரன் - சகோதரி உறவு மிகச் சிறந்ததுதான்.
-இயற்கையானதுதான்.
- அற்புதமானதுதான்.
-புனிதமானதுதான்.
-ஆனால் அதிசயமானதல்லவே.
விடியலும் அஸ்தமனமும் இயற்கையானது சூர்யா..
பூமி உருண்டையின் சுழற்சியில்
பகலும் இரவும் அதிசயமல்ல சூர்யா.
அதெல்லாம் நீ அறியாததும் அல்ல.
நம் நட்பை சாதாரணமான ரத்த உறவின் வடிகாலான
சகோதரப் பாசத்தில்
தொலைத்துவிட வேண்டுமா?
தொலைப்பதற்காகவா நம் கனவுகளைத் தோண்டி தோண்டி
இந்த நட்பு வைரத்தை வெட்டி எடுத்தோம்?
சீர்வரிசைக்காக அடிதடி
சொத்து தகராறில் வெட்டு கொலை
இப்படி சீர்கெட்டு கிடக்கும் சகோதர உறவுகளுடன்
நம் நட்பையும் ஏன் கரைத்து விட வேண்டும்?
உன்னுடன் ஒராண்டே பழகிய உன் நண்பனை
நீ என்றாவது சகோதரன் என் று அழைத்ததுண்டா?
ஓர் ஆணிடன் பழகும்போது எட்டிப் பார்க்காத சகோதரப் பாசம்
ஒரு பெண்ணுடன் பழகும்போது மட்டும் எட்டிப்
பார்த்தே ஆகவேண்டும் என்று ஏதாவது சட்டமா?
அப்படி ஒரு சட்டம் -
எழுதப்படாத சட்டம் இருக்குமேயானால்
அந்த சட்டத்தை உடைப்போம் வா.

இந்த மண்ணில் எதுவும் உடைக்கப் படாதவரை 
உண்மைகள் வெளிச்சத்திற்கு வராது. 
வந்ததும் இல்லை.
சகோதர உறவில் தான் நம் நட்பை
நியாயப் படுத்திக் கொள்ள முடியும் என்றால்
அந்த நியாயம் என்னைப் பொருத்தவரை
நம் நட்பு தளத்திற்கு இழைக்கப் பட்ட அநியாயமே.!
எது நியாயம்?
எது அநியாயம்?
அண்டை வீட்டுக்காரனைக் கொன்றால் அது கொலை
அண்டை நாட்டுக்காரனைக் கொன்றால் அதுவே வீரம்.
வங்க தேசத்து சகோதரனுக்காக படை அனுப்பினால்
அது மனித தர்மம்.
இந்திய அரசின் ராஜ தந்திரம்.
ஆனால்-
இலங்கை சகோதரனுக்காக குரல் கொடுத்தால் கூட
அது அரசியல் குற்றம்.
தண்டனை.. சிறைவாசம்.
இதுதானே நம் மண்ணின் நியாய அநியாயங்களின்
அகரமுதலி சொல்லும் அர்த்தங்கள்
இந்த பச்சோந்திதனமான அர்த்தங்கள்
நமக்கு தேவையில்லை சூர்யா.
தோழியை காதலி என்றழைப்பதும் நினைப்பதும் எவ்வளவு தவறு
என்று நாம் நினைத்தோமோ அதைவிடத் தவறு , 
இமாலயத் தவறு..
உன் தோழியை நீ சகோதரி என்றழைப்பதுதானடா.
அதில் உன் ஆண்மையும் என் பெண்மையும்
கறைப்பட்டு விடுகின்றது.
ஆம் ..நம் பண்பாடே அதில் தலைகுனிந்து விடுகின்றது.
கடைசிவரை ஒரு பெண்ணின் உறவை
தோழி என்ற நட்பின் தளத்தில் தொடர முடியவில்லை என்றால்
இது என்னடா கலாச்சாரம்?

"கல்தோன்றி மண்தோன்றா காலத்தே 
வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி"
இதில் பெருமைபட்டுக் கொள்ள என்னடா இருக்கின்றது?
"ஏன் நீ இயல்பான விசயங்களை -
இந்தச் சமுதாயம் ஏற்றுக் கொண்டிருக்கும்
மிகச் சாதாரணமான விசயங்களையும்
கேள்விக்குறி ஆக்குகின்றாய்?"
என்று தானே கேட்கின்றாய்.
கேள்விகள் பிறந்தால் தானே
இன்றல்ல நாளையாவது பதில் கிடைக்கும்.
உன்னிடமும் நாம் வாழும் சமுதாயத்திடமும் பதிலில்லை
என்பதாலேயே என் கேள்விகளை நான் கருக்கலைப்பு
செய்ய மாட்டேன்.
தகப்பன் பெயர் தெரியாத நிலையில்,
சொல்ல முடியாத நிலையில்
சிசுவின் கருக்கலைப்பு வேண்டுமானலும்
நியாயப் படுத்தப்படலாம்.
ஆனால் பதில் தெரியாத நிலையில்,
பதில் தெரிந்தாலும் அதை எழுத தயங்கும் அறிவுஜீவிகளுக்காக
நான் என் கேள்விகளைக் கருக்கலைப்பு செய்யவே மாட்டேன்.
ராக்கி கயிற்றையும்
மஞ்சள் கயிற்றையும் விட
மேலானது நம் நட்பு.

1 comment:

  1. இடமும், பொருட்கொண்ட விதமும் வேறுவேறு - சிந்தனை நன்று...

    ReplyDelete