Wednesday, September 12, 2018

ஹெய்.. PEPPA PIG





Peppa pig … 
இன்றைய குழந்தைகளின் மிகவும் விருப்பமான 
கார்ட்டூன் தொடர்.
(தயாரிப்பு யு.கே கம்பேனி.) 
இதை அப்படியே தமிழ்ப் படுத்தினால் பெப்பா பன்றி..
அல்லது பெப்பா என்ற பன்றி
ம்கூம் .. நமக்கு சொல்வதற்கும் கேட்பதற்கும் 
இனிமையாக இல்லை!
ஏன்? ஏன்? ஏன்?

பெப்பா தொடரில் பெப்பா என்ற பெண்பன்றிக்கு
Play school போகும் வயது.
பெப்பாவுக்கு  daddy pig, mummy pig, brother pig (george), 
grandpa pig,
Grandma pig  என்று குடும்பம் உண்டு. ஆட்டம் பாட்டம் விளையாட்டு
பெப்பாவின் நண்பர்களாக குட்டி யானை, முயல், மாடு 
இத்தியாதி சகலமும்
வலம் வருகின்றன. எல்லா கதைகளும் பெப்பா வாயிலாக
குழந்தைகளின்
மொழியில் குழந்தைகளுக்குப் புரியும் வகையில்.. 
பன்றிகள் எப்போதும் சக்தியில் உருண்டு கொண்டிருக்கும்.
இத்தொடரில் பெப்பா & குடும்பத்திற்கும் சகதியில் விளையாடுவது தான்
மிகவும் பிடித்தமான விளையாட்டு.. 
பெப்பா டூர் போகிறாள்.பீச்சுக்குப் போகிறாள்,ஸ்கூல் பசங்களுடன்
சண்டைப் போட்டுக்கொள்கிறாள், தம்பியை அழ வைக்கிறாள்..
குழந்தை அம்மா வயிற்றிலிருந்து பிறக்கிறது .. இப்படியாக
ஒன்றும் விடாமல் கதைக் கதையாக .. பெப்பா வலம் வருகிறது
குழந்தைகளின் உள்ளத்தில்.. தொலைக்காட்சியில்



பெப்பாவுக்கு பெரும் ரசிகர் கூட்டமே இருக்கிறது என்பது
இன்னும் ஆச்சரியமான செய்தி என்னைப் போன்றவர்களுக்கு.
ஹவாய் தீவு பயணத்தில் ஒரு தாவர இயல் பூங்காவுக்கு
பிற தேசத்து மக்களுடன் பயணித்தோம்.
பயணித்த குழந்தைகள் டிரெயின் ஓரிடத்தில் நிற்கிறது.
எல்லோரும் இறங்குகிறார்கள்.. பெப்பா.. பெப்பா.பெப்பா
என்று கத்திக்கொண்டுபெப்பா வுக்கு குழந்தைகள்
தோட்டத்தின் உதவியாளர் கொடுத்த பிரட் துண்டுகளைக்
கொடுக்கிறார்கள். பெப்பாக்கள் ஓடி ஓடி பிரட் துண்டுகளைக்
கடித்துக்கொண்டு சகதியில் கும்மாளமிடுகிறார்கள்.
குழந்தைகள் மகிழ்ச்சியில் குதிக்கின்றன.
பெற்றோர்களையும் அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொள்கிறது.
காமிராக்கள் பளிச் ப்பளீச் என்று புகைப்படம் எடுக்கின்றன.
நான் மட்டும் டிரெயினிலிருந்து இறங்கவில்லை..
நம் இந்தியப் புத்தி.. 
இருந்திருந்து இந்தப் பன்னிகளைப் பார்க்கறதுக்கா
இறங்கனும்னு .. மண்டைக்குள் புழுத்துக் கொண்டிருந்தது

பன்னி என்றால் அழுக்கானது.
பன்னி என்றால் அருவெருப்பானது.
பன்னி ரசனைக்குரியதல்ல.
இது எல்லாவற்றையும் விட இன்னொரு கேவலம்
பன்னி கீழ்ச்சாதிக்கானது!
இது ..இது.. இதுதான்யா..
இப்போ பளிச்சினு என் மண்டைக்குள்ளிருந்து
வெளியில் வந்து என்னை வெட்டிச் சரிக்கிறது.

கூர்ம அவதாரம்.. மச்ச அவதாரம்.. வராக அவதாரம்..
அப்படி இப்படி அவதாரம் சொல்லியவர்கள் தான்
மச்சி நாற்றமெடுக்கிறது என்றார்கள்.
வராகம் அழுக்கானது என்றார்கள்.
ஆனால் சங்க இலக்கியத்தில் காட்டுப்பன்றியும் வீட்டுப்பன்றியும்
முள்ளம்பன்றியும் பற்றிய செய்திகளும் வர்ணனைகளும்
உண்டு. 
பன்றி கூட்டமா வரும்.
சிங்கம் தான் சிங்கிளா வரும் நு சூப்பர் ஸ்டார் சொன்ன ஒரு
பஞ்ச் டயலாக்.. நம்ம ஊரில் புகழ்பெற்றது.
சிங்கம் என்றால் உயர்வு
பன்றி என்றால் தாழ்வு என்ற மனப்பான்மையிலிருந்து
ஒருவிதமான தூய்மை - புனிதத்துவ மன நிலையில்
சுஜாதா எழுதியது. கவிஞர் அறிவுமதி இதைப் பற்றி
இந்தப் பஞ்ச் டயலாக் வந்தவுடனேயே எதிர்த்து
பரப்புரை செய்தார். 
தன் குட்டிகளைக் காப்பாற்ற ஆண்பன்றி புலியுடன் கூட
மோதும், சண்டைப்போடும், பன்றிகள் கூட்டமாக
வருகிறது என்றால் அது கூட்டுக்குடும்பத்தின்
கூட்டு இனக்குழுவின் அடையாளம்.
திருடுகிறவன் தான் தனியா வருவான் ! என்பார் அறிவுமதி.
ஆனால் நமக்கு சூப்பர் ஸ்டார் புண்ணியத்தில்
மனசில் நிற்பது என்னவோ 
சிங்கம் சிங்கிளா தான் வரும்ம்ம்ம்ம்என்பது தான்.
இந்தச் சிங்கத்தை எல்லாம் பேசினா அசிங்கமாயிடும்.
வேண்டாம்..

ஆக மொத்தத்தில் பெப்பா பன்றி
குழந்தைகளின் உள்ளத்தில் இடம் பிடித்துவிட்டதில்
எனக்கு மகிழ்ச்சியே.
காரணம் அவர்கள் இனி பன்றியை வெறுக்க மாட்டார்கள் தானே.
ஹெய்..peppa pig.. 

Tuesday, September 11, 2018

சூர்யா@நட்புமண்டலம்.11




சூர்யா..
உன்னை ஏன் சந்தேகத்தில் பிடித்தார்கள்?
என்ன செய்தாய்..இந்த நாட்டிற்கு எதிராக?
இரவோடு இரவாக உன்னைப் பிடித்துக் கொண்டு போனார்கள்
என்று உன் தோழர்கள் சொன்னார்கள்.
நீ என்ன ஆனாய்? 
உன்னை அவர்கள் என்ன செய்தார்கள்?
எதுவும் தெரியாமல் கழிந்த இருண்ட நாட்கள்
நீ செய்தது குற்றமா..?
நீ போராடத் தெரிந்தவன்..
உன் களத்தில் சிந்தப்பட்ட ரத்தங்களுக்கு கறைகள் கிடையாது.
இன்னும் சிலர் சொன்னார்கள்..
நீ சிறையில் இல்லை
தலைமறைவாகிவிட்டாய் என்று.
எனக்கென்னவோ இரண்டாவது செய்தியில் தான் நம்பிக்கை.
காரணம் நீ அனுப்பிய புத்தகங்கள்..
துண்டுச் சீட்டுகள்
பத்திரிகைகள்..
அப்படியான ஒரு புத்தகம்.. என் வாசலுக்கு வந்தது.
"அம்மாளைக் கும்பிடுகிறானுகள்"
படிக்க படிக்க ...சூர்யா...
நம்பவே முடியலைடா..
நான் முதல் முறையாக "ஓர் இந்தியன்" என்று 
சொல்லிக்கொள்ள வெட்கப்பட்ட
தருணங்கள் அவை.
என் முகத்தில் அப்பி இருக்கும் இந்தியன் என்ற 
கருப்பு மையை எடுத்து இந்து மகாசமுத்திரத்தில்
கரைத்துவிட துடித்தன
என் கைகள்.
தேசியம் இல்லாத தேசத்தில் 
(Nation without the Nationality)
ஆள்பவர்களுக்கு கொடிப்பிடிக்கவே 
வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நாம்.
கண்டி வெகுதூரமில்லை
கடலும் மிக ஆளமில்லை என்று அரபிக்கடலோரம்
முழக்கமிட்டது. (கவிஞர் கலைக்கூத்தன் கவிதை வரிகள்)
நான் அந்தக் கூட்டத்தில் 
“நீ அகதி அல்ல” என்று கத்தினேன்.
என் குரல் ஏழு கடல் தாண்டி
ஏழு கண்டங்கள் தாண்டி அந்த எட்டாவது கண்டத்திலும்
எதிரொலிப்பதாக ஒரு பாவனையில்..
நீ அகதி அல்ல!
நம்மைப் பிரித்து நிற்பது 
இந்து- 
சமுத்திரம் மட்டுமல்ல 
சட்டமும் தான்.. 
உன்னைப் பார்க்காமல் இருக்கவேண்டுமென
சட்டம் போட்டு ஜெயித்தவர்கள்
உன்னை - நான் 
நினைக்காமல் 
இருக்கவேண்டுமென 
சட்டம் போட்டு 
நித்தமும் 
தோற்றுக்கொண்டுருக்கிறார்கள்
நீ- 
குண்டு மழைகளில் 
நனைந்தபோது 
என் பூமி 
இங்கே 
வறண்டு போனது.
நீ- 
இருட்டில் 
விழித்துக் கொண்டிருக்கின்றாய்.. 
இங்கே- 
பகலில் கூட 
என் கண்கள் 
கருப்பு துணியால் 
கட்டப் பட்டிருக்கின்ற..
நம் - 
இருவர் உலகமும் 
இருண்டு போனதால் 
நம் - 
கனவுகள் கூட 
பதுங்கு குழியில்..
நீ- 
விடியலுக்காக 
காத்திருக்கின்றாய்.. 
நான் 
வெளிச்சமெல்லாம் 
விடியலல்ல 
என்பதால் 
உனக்காக 
விழித்திருக்கின்றேன்..
நீ-அகதி 
என்று எழுதியது 
என் சட்டம்..! 
நீ- அண்ணன் 
என்று துடிக்கிறது 
என் ரத்தம்…!!
அரபிக்கடலோரம் எங்கள் குரல் ஆர்ப்பரித்தது.
சொற்களைச் சூடேற்றி குளிர்காய்ந்துக் கொண்டிருந்தோம்.
எங்கள் கடமை முடிந்துவிட்டதாக கருதினோம்.
எங்களை நாங்களும் போராளிகள் என்று
சொல்லிக்கொண்டோம்.!! (வெட்கக்கேடு)
சொற்களின் ஒலிக்குப்பைகளைக் கேட்டு கேட்டு
மரத்துப் போன எம் செவிகளுக்கு
உன் மவுனம் புரியவில்லை!
நீ மட்டும் தான்
சொற்களைக் கடந்து சென்றாய்.
உன் காலடியோசையில் 
காடுகள் செழித்தன.
எதை ,யாரை வெல்ல வேண்டும் என்று இந்த இனம்
ஒரு தலைமுறையில்.. தன் வாழ்க்கையைத் தொலைத்ததோ
உன்னையும் என்னையும் இணைத்த நம்
தந்தையர் தலைமுறையில் போராடியதோ...,
அந்தப் போராட்டம் ..
நம் தலைமுறையில் திசைமாறிப் போய்விட்டது.
இன்று நம் இனம் கூடுகள் இல்லாத குஞ்சுகளாய்..
காக்கையின் கூட்டில் பொறித்த குயிலின் குஞ்சுகளாய்..
வலிக்கின்றது சூர்யா..
நீயாவது போராடுகின்றாய்..
உன் மனசாட்சியை அடகு வைக்காமல்,
எந்தச் சட்டத்திற்கும் பயப்படாமல்,
எந்த உறவுகளிலும் உன் சுயமிழக்காமல்,
நாளையப் பற்றிய பயத்தில் 
இன்றைய நியாயங்களை
அடகு வைக்காமல்
நீ நீயாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்.
நான்....??????????

Sunday, September 9, 2018

ஹவாயின் அரசியும் அவள் விட்டுச் சென்ற மலர்களும்







எங்கள் ஹவாயின் குழந்தைகள் போற்றுதலுக்குரியவர்கள்.
அவர்கள் தங்கள் மண்ணுக்கு விசுவாசமானவர்கள்
கொடுமையான இதயம் கொண்ட தூதுவர்கள்
பேராசையுடன் ஒப்பந்த பத்திரங்களை நீட்டுகிறார்கள்.
கப்பம் கட்டச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்.
ஹாவாயி, 
கீவியின் நிலம் பதில் சொல்கிறது
பிலானி கடற்கரைகள் உதவி செய்கின்றன.
மனோவின் கவாயி தன் ஆதரவைத் தருகிறது
காகுஹிஹெவாயின் மணல் எல்லோரையும் ஒன்றிணைக்கிறது.
போட்டுவிடாதீர்கல் உங்கள் கை எழுத்தை
எதிரிகள் நீட்டும் பத்திரத்தில்
பாவத்தின் அடையாளமது.
நம் மக்களின் குடியுரிமையை விலைபேசுகிறது அது.
மலை போல குவிந்திருக்கும் 
இந்த அரசாங்கத்தின் கஜானாவை
நாம் மதிக்கப்போவதில்லை.
நமக்கு நம் பாறைகள் போதும்.
இந்த மண்ணின் அதிசய உணவு இது.
நாம் லில்லிகலானியை ஆதரிப்போம்.
இந்த மண்ணின் உரிமைக்காக போராடி வென்ற கதை
இந்தக் கதையைச் சொல்லுங்கள்
தங்கள் மண்ணை நேசிக்கும் மக்களிடம் சொல்லுங்கள்.
(ஹவாய் தீவின் பாடலிது. )

லில்லியுகலானி..ஹவாயின் அரசி.
அமெரிக்க வல்லரசு ஹவாய் தீவுகளை தங்கள் நாட்டுடன்
எவருடைய ஒப்புதலும் இல்லாமல் சேர்த்துக் கொண்டது.
பகற்கொள்ளை தான்.
The stolen paradise என்று இதைச் சொல்கிறார்கள்
அமெரிக்கர்கள். 
அரண்மனையிலே அரசியை சிறை வைக்கிறது அமெரிக்கா.
அரசி தன் மக்களுக்காக உருவாக்கிய தோட்டத்திலிருந்து
தினமும் மலர்களைப் பெறுவதற்கு மட்டுமே அனுமதி.
தோட்டத்தில் பூக்கும் மலர்களை அன்றைய செய்தித்தாளில்
பொதிந்து அனுப்புகிறார்கள் அவள் ஆதரவாளர்கள்.
வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதை அப்படித்தான் 
அந்த அரசி அறிய வருகிறாள். அந்த நாட்களில் அவள் எழுதிய
கவிதைகள்- இசைப்பாடல்கள்.. 162. 
இன்றும் ஹவாயின் பூக்களையும் காதலையும் 
மக்களையும் அவர்கள் மண்ணின் மாண்புகளையும் 
இசைத்துக் கொண்டே இருக்கிறது.
ஆனாலும் வரலாற்றில் ...
சர்வாதிகாரத்தின் ஆயுதப்படைக்கு முன்னால்
அத்தீவு மக்கள் என்ன செய்துவிடமுடியும்?
அடைப்பட்டிருந்த நாட்களில் தன் பாடல்களை
இசைக்குறிப்புடன் எழுதி எழுதி தன் மக்களுக்கு
அவள் விட்டுச்சென்ற மலரின் வாசனை
இன்னும் அத்தீவுகளில் ..
100 வருடங்களுக்குப் பின் 1993ல் அன்றைய ஜனாதிபதியாக
இருந்த பில்கிளிண்டன் ஹவாயி மக்களுக்கும் அவர்கள்
தேசத்திற்கு தாங்கள் செய்த துரோகத்திற்கு
மன்னிப்பு கேட்டார்.
அவ்வளவு தான்.

சூர்யா@நட்புமண்டலம்.10



"தந்தைமகள் உறவில் -ஒரு

தர்மவேலி போட்டாச்சு
தாவணி போட்டபின்னே-சொந்த
தமையன்கூட வேறாச்சு"



அலுவல் காரணமாக அடிக்கடி ஊர் சுற்றுகின்றேன் 
உனக்குத் தெரியுமே. எப்போதாவது வெளிநாடு போக வேண்டியதும் வரும். 
அப்படிப் போகும்போதெல்லாம் ஒவ்வொரு பயணமும் 
ஒரு தனி அனுபவக் கதையாகும்.  
ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் இத்தியாதிகள் எல்லாம்
 என்னவோ தமிழ் நாட்டுக்கும் தமிழ் மண்ணுக்கும் மட்டுமே 
சொந்தம் போல இங்கே மேடைக்கட்டி நாம் 
முழங்குவதெல்லாம் எவ்வளவு பெரிய்ய கேலிக்கூத்து
என்பதை நான் உணர்ந்திருக்கின்றேன்.

அன்று என்னுடன் பயிற்சி வகுப்பில் இருந்தவன்
 என்னை அழைத்துக்கொண்டு அவனுடைய காரில் 
அந்த நாட்டு பழங்குடிகளின் நடன நிகழ்ச்சியைப் பார்க்க 
அழைத்துச் சென்றான். 
வழியில் அவர்களின் உள்நாட்டு விமான நிலையத்தில்
ஐந்து நிமிடங்கள் அவன் யாருக்காகவோ காத்திருந்தான்.
அவள் வந்தாள். வந்தவுடன் அவர்கள் இருவரும் 
அதிகமாக எதுவுமே பேசிக்கொள்ள வில்லை. 
இவள் யாராக இருக்க கூடும்? அவன் தோழியா? 
காதலியா?மனைவியா? சகோதரியா...ம்ம்ம் 
என் பாரதப் பாரம்பரியம் ஆயிரம் கேள்விகள் கேட்டு 
தவித்துக் கொண்டிருந்தது. 
அவனிடம் விடை பெறும்முன்பு அவள் அவன் தோள்களில்
தன் முகம் புதைத்து நின்றாள்.
 அவள் அழுதிருக்க வேண்டும்.
அவள் அழுகை அவன் முகத்தில் தெரிந்தது….
அவ்வளவுதான்.
அவள் அவன் தோழியாம். 
தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டுவிட்டு 
திரும்ப வருகின்றாள்..

உள்ளத்து உணர்வுகளைச் சொல்ல ஓவியம், காவியம், 
இசை , நடனம்..இப்படி எத்தனை இருந்தாலும் 
அத்தனையும் தொடுதலுக்கு அடுத்தபடிதான். 
ஸ்பரிசம்... தொடுதல்... இதில் உணர்த்தக்கூடிய உணர்வுகளை 
 ஒட்டு மொத்தமாக எந்த நுண்கலையிலும்
 சொல்லிவிட முடியாதுதான். 
அவர்களைப் பார்த்தவுடன் நாம் பண்பாடு என்ற பெயரில் 
எதை எல்லாமோ இழந்து நிற்கின்றோமோ 
என்று தோன்றியது. 
அந்தப் பயணம் முழுக்கவும் உன் தோள்களில்
 என் நினைவுகள் தூங்கி கொண்டிருந்தன. 
ஆம்..  தூங்கி கொண்டுதான்....
விழித்துக் கொண்டால்
அக்கம் பக்கம் பார்த்து அச்சப்படும் நம் விழிகள்
சுற்றம் சுகம் பார்த்து ஓடிவிடும் நம் தோள்கள்..
என்ன செய்வது?

கனவுகளும் நினைவுகளும் கலந்த அந்த விடியலில்
உன் தோள்களில் என் விழிகள் தூங்கும்போது..
அந்த நினைவே என் உள்ளத்தை தாலாட்டியது.
உன் மடியில் தலைச் சாய்க்கும் அந்த மாலைப்பொழுதில் 
பூமி உருண்டை
பூப்பந்து ஆய்விடுமோ?
உன் தோள்களில் கண்துஞ்சும் என் கனவுகளில் 
வானம் என் கைகுட்டை ஆகுமோ?
நினைக்க நினைக்க நினைவுகளே கனவுகளாக 
அந்தக் கனவுகளில் ஒரு சுகம்.

நான் என் பெண்மையை மறந்து 
வெறும் மனிதப்பிறவியாக மட்டும்
உணர்கின்ற சுகம்.
என்னிடம் படைப்பின் அடிப்படை வேறுபாடு 
இல்லாத சூனிய நேரம்.
நீ படைப்பில் ஓர் ஆண் என்ற முத்திரையை  
நான் மறந்த நேரம்.

அப்போது உன் குரல்..

ஆண்-பெண்
கணவன் - மனைவி
ஆதாம் - ஏவாள்
சட்டைகள்
எறி

உயிர்
உடல்
ஆன்மா
வேடங்கள்
களை

நட
நட
உணர்வுகள்
ஊர்தி
உறவுகள்
ஊமை

சின்னத்துளி
நெஞ்சில்
ஈரப்பசை

நடக்கின்றேன்...வானம் காலடியில் நடுங்க நடக்கின்றேன்.
நடந்து கொண்டே கண்ட கனவுகளில் நம் நட்பு ஓடிக்கொண்டிருந்தது.
என் உள்ளமும் உணர்வுகளும் 
உன் எண்ணத்திற்கும் எழுத்திற்கும் 
உரிமைக் கொண்டாட முடியாத உலகத்தில்
 உன் தோள்களின் கனவுகள்
 எனக்கு எட்டாத இமயம்தான்.

நீ எட்டாத இமயமானதற்காக வருந்துவதுகூட 
அப்பன் கோவணத்திற்க்காக அலைந்தபோது 
மகள் காஞ்சிபுரக் கனவுகளைக் கிழிக்கின்ற கதைதான். 
இங்கே ஆண்மை-பெண்மை இரண்டு மட்டும்தான் 
எல்லா உறவுகளுக்கும் வேர்.
அதனால்தான் விதையே செடிக்கு அந்நியமாகிவிடுகின்றது.

அந்நியமாய் ஆயாச்சு-உறவின்
அர்த்தங்கள் போயாச்சு-நான்
அந்நியனாய் ஆயாச்சு-உறவுக்கு
அசலாகிப் போயாச்சு

தந்தைமகள் உறவில் -ஒரு
தர்மவேலி போட்டாச்சு
தாவணி போட்டபின்னே-சொந்த
தமையன்கூட வேறாச்சு

அந்நியனாய் ஆயாச்சு-உறவு
அர்த்தமெல்லாம் போயாச்சு
அந்நியனாய் வந்தவனே-இன்று
அர்த்தமுள்ள உறவாச்சு

அர்த்தம்சொல்ல பிள்ளைவந்தான் - தந்த
புருஷனையே மறந்தாச்சு
மீசை முளைச்சாச்சு-எம்பிள்ளை
மேகமுட்ட வளர்ந்தாச்சு

ஆசையாய் வளர்த்தபிள்ளை-அய்யோ
அந்நியனாய் ஆயாச்சு
பாசவலை மீனாச்சு-உறவு
பாலைவன நீராச்சு

பாதிவழி வந்தாச்சு-சரிதான்
மீதிவழி மறந்தாச்சு-வாழ்க்கை
அர்த்தங்கள் மறந்தாச்சு-வாழ்வில்
அந்நியமாய் வாழ்ந்தாச்சு....

இப்படி உறவுகளின் அந்நியத்தில் உடைந்து போகாத நான்..
அந்த இழப்புகளைக் கூட பருவகாலத்தின் மாற்றங்களாக 
பார்க்கப் பழகிவிட்டநான்
பெயர் சொல்ல முடியாத உன் உறவில்
உணர்வுகளின் ஊசிமுனைகள் குத்தியபோதும் 
ரத்தங்கசியாத சிலிர்ப்பில்
உன்னிலிருந்து அந்நியப்படுவதை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியாமல்
உன் தோள்களின் கனவுகளில் ,
யாதார்த்தம் மறந்து
அந்த இயலாமைக்காகமட்டுமே துடிப்பது
வேடிக்கையாக இருக்கின்றதா...
இதில் வேடிக்கை என்ன?
நினத்துப்பார்..
இந்த உறவுகள் எல்லாம் 
என் தேர்வுகளுக்கு அப்பால் அனிச்சையாக நடந்தவை.

நான் இன்னாருக்குத்தான் பிறக்க வேண்டும் என்பதை
நானா தீர்மானித்தேன்.?
என் கருவில் இந்த மலர்கள்தான் மலர வேண்டும் என்பதையும்
நானா தீர்மானித்தேன்?
என் ரத்த உறவுகளின் வாசனைகள்
என் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவை
ஆனால் இந்தப் பூமி உருண்டையில்
நீ மட்டும்தான் என் தேர்வு.
உன் நட்பு மட்டும்தான் என் வாசனை...
          

Saturday, September 8, 2018

திமுக வின் எதிர்காலம் அதிமுக வின் (தினகரன்)கையில்




திரு.ஸ்டாலின் அவர்கள் திமுக தலைவரானவுடன்
எல்லோரும் வாழ்த்து சொன்னார்கள்.
எனக்கு அது ஏன்? என்று இன்று வரை புரியவில்லை.
எதுக்கும் நாமும் 
வாழ்த்து சொல்லி வைப்போம் என்று சொல்லியிருக்கலாம்!
எப்படியும் கலைஞரின் மறைவுக்குப் பிறகு
செயல்தலைவராக இருந்த அவர் தான் 
திமுக வின் தலைவராக வருவார் என்பது
அரசியல் அறியாத பச்சப்பிள்ள கூட சொல்லிடும்.
மேலும் அரசியல் கட்சியில் தலைவர்கள் ஆவது
ஆகாதது அந்தந்தக் கட்சி சார்ந்த செயல்பாடு.
இப்படி நான் எதாவது எதார்த்தமா எழுதப்போனா
அதுவே வினையாகி வம்பாகி வழக்காகி ..
நண்பர்கள் முறைக்க.. நான் முறைத்துக்கொள்ள
சரி விட்டுத்தள்ளுங்கள். 
திமுக தலைவரான ஸ்டாலின் அவர்களுக்கு
ஆளாளுக்கு அட்வைஸ் சொன்னார்கள்.
அது எனக்கு இன்னும் கடுப்பாயிடுச்சி..
அத்தனை அறிவுரைகளையும் கேட்டு
அவர் நல்லபிள்ளையா அரசியல் நடத்தனும்னு
அவசியமில்ல. 
திமுக வின் எதிர்காலம் அதிமுக வின் கையில்
என்று எப்போதோ நான் ஒரு பதிவு போட்டிருந்தேன்.
அது எவ்வளவு முக்கியமானதுனு இப்போ தான்
அதை எழுதின எனக்கேேபுரியுது!!
இப்போஅதையேதான் கொஞ்சம் சுருக்கி
சொல்ல வேண்டியது வந்திருக்கு.
டிடிடிவி தினகரன் (எத்தனை டிடிடிவி போடறது உண்மையிலேயே
மறந்துப் போச்சு நைனா..) விரைவில் அதிமுக வின் 
தலைவராக வேண்டும். அப்போ தான் திமுக வுக்கும் 
திரு ஸ்டாலின் அவர்களின் அரசியலுக்கும் 
எதிர்காலம் இருக்கும். 
அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின் 
கலைஞரின் திமுக அரசியலை தூக்கி நிறுத்தியது
அதிமுக வின் எம் ஜி ஆரும் ஜெயலலிதாவும் தான்.
இப்போ அதிமுக வில் இருக்கிற டம்மி தலைவர்களுடன்
ஸ்டாலின் அரசியல் நடத்துவது சரியல்ல.
அதனால் செய்ய வேண்டியது என்ன வென்றால்
----------- கோடிட்ட இடத்தை நிரப்புக.
திமுக ஆட்சியில் இல்லாத போதும்
கலைஞர் அரசியல் ஜேஜேனு தான் இருந்தது.
கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது
இப்போ.. இந்த திருக்குறள் வேறு
நினைவுக்கு வந்து தொலைக்குது.

Friday, September 7, 2018

தீவுகளின் கண்ணீர்..

தீவுகளின் கண்ணீர்..
தீவுகளின் கண்ணீரில் பசிபிக் கடல் உப்புக்கரிக்கிறது.… 


அவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள்..?
தேசத்துரோகமா?கொலை செய்தார்களா? 
அவர்கள் செய்தக் குற்றம் என்ன?
அவர்களுக்கு தொழு நோய் வந்ததால் அவர்கள்
நாடு கடத்தப்பட்டார்கள்.
மனித வரலாற்றில் சில மறைக்கப்பட்ட பக்கங்களில் இதுவும் ஒன்று.
ஹவாய் தீவுக் கூட்டத்தில் இருக்கும் அழகிய சிறிய தீவு.. mOlokai.
தீவுக்கு அவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள்.
அவர்கள் தீவில் விடப்பட்ட இடம் 
கல்லோபப்பா. (kapaupapa). இப்பகுதிதான் நாடு கடத்தப்பட்டவர்களின்
இருப்பிடமாக மாறியது. (Lepor colony ) 
1800களில் ஐரோப்பிய கப்பல்கள் ஹவாய் தீவுகளில் வந்து இறங்கியபோது
அவர்கள் தங்களுடன் கூடவே வியாதிகளையும் இறக்குமதி செய்தார்கள்.
பால்வினை வியாதிகளில் இறந்தவர்கள் 10,000 .
டைபாய்ட் காய்ச்சலில் இறந்தவர்கள் 5,000.
1853ல் சின்ன அம்மை வியாதியில் இறந்தவர்கள் மட்டும் 15,000..
இப்படியாக அன்றைக்கு மருந்துகள் கண்டுபிடிக்காத காலத்தில்
ஹவாய் தீவுகளின் தீர்க்க முடியாத வியாதிகள் அவர்களைப்
பயமுறுத்தின,. விளைவு.. தொழு நோய் பரவிய போது அந்த நோயினால்
பாதிக்கபப்ட்டவரின் தோற்றம், விளைவுகள்.. சொல்லமுடியாத 
பீதியைப் பரப்பியது என்னவோ உண்மைதான்.
ஹவாய் தீவுகளின் அரசன் ஐந்தாம் ஹமேஹாமேஹா. 
( King Kamehameha V, who issued an 
“Act of Prevent the Spread of Leprosy” in 1865.)
தொழு நோயாளிகள் தாங்களாகவே முன் வந்து சரணடைய வேண்டும்.
இல்லை என்றால் அவர்கள் சுட்டுத் தள்ளப்படுவார்கள் என்று ஆணையிட்டான்.
அரசாங்கம் அந்த நோய் பரவுவதைத் தடுப்பதாகச் சொல்லி
அந்த நோய் வந்தவர்களைப் பிடித்துக் கொண்டு போய்
பிற மனிதர்கள் செல்ல முடியாத தனிமைச் சிறையில் - கல்லோபப்பா தீவில்
கொண்டு விட்டது.
ஜனவரி 6, 1866 ல் 12 பேர் இத்தீவுக்கு நாடு கடத்தப் பட்டார்கள்.
அதன் பின் தொடர்சியாக 
சாவதற்காக அத்தீவுக்கு வந்த 8000 பேர் அந்தத் தீவில் வாழ்ந்து மடிந்தார்கள்.
இன்றும் 1300 கல்லறைகள் அத்தீவில் அவர்கள் வாழ்க்கையை
தன் மண்ணுக்குள் புதைத்து வைத்திருப்பதைக் காணலாம்.
மீதி பேர்..?! 
2009ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஓபாமா அவர்கள்
அத்தீவிற்கு நாடு கடத்தப்பட்டு அங்கேயே இறந்துப் போன
8000 பேருக்கும் நினைவுச்சின்னம் எழுப்பப்படும் என்று
அறிவித்தார். (நம்ம ஊரு மாதிரிதான் அறிவிப்புகளும்.
ஆட்சியாளர் மாறும் போது மறக்கப்பட்டுவிடுமா தெரியவில்லை!)
அத்தீவில் ஆரம்பத்தில் பள்ளிக்கூடம் இல்லை.
ஆனால் தேவாலாயங்கள் இருந்தன!
33 வயதில் பெல்ஜியம் கிறிஸ்தவ மிஷினரியைச் சார்ந்த
அருள் தந்தை டெமியன் டி வெஸ்டர் இந்த மக்களின் வாழ்க்கையில்
(Father Damien deVeuster, ) பெரும் மாற்றங்களை
ஏற்படுத்தினார். அதுவரை குகைகளிலும் மரப்பொந்துகளிலும்
வாழ்ந்து வந்த இம்மக்களுக்கு கூரைகள் கொண்ட வீடுகள்,
குடி தண்ணீர் வசதி, சுகாதார மருத்துவ வசதிகள்
ஏன் மரணித்தவர்களுக்கு கல்லறை கட்டும் வசதி வரை
இவர் ஏற்படுத்திக் கொடுத்தார். இம்மக்களின் ஒருவராகவே
வாழ்ந்தவருக்கு இம்மக்களில் ஒருவராகவே ஆன சோகமும்
நடந்தேறியது. ஆம்.. இவருக்கும் தொழு நோய் வந்தது ..
இந்த மண்ணிலெயே அவரும் மடிந்தார்.
இவருக்குப் பின் இவர் வழி வந்தவர்கள்
Brother Joseph Dutton & Mother Marianne,
இருவரும் இவர் விட்டுச் சென்ற மக்கள் பணியைத் தொடர்ந்தார்கள்.
அங்கேயே வந்தவர்களுக்குள் காதல் இருந்தது.
ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடந்தன.
வாழ்க்கை அவர்களுக்காக காத்திருந்தது.
ஆனாலும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை
பிறந்தவுடன் தாயின் முகம் பார்க்கும் முன்பே 
குழந்தையைப் பிரித்து தத்தெடுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு
அனுப்பி குழந்தைகளின் பாதுகாப்பு என்ற பெயரில்
இன்னொரு சோக வரலாறும் அரங்கேறியது.
இப்பிரிவுகள் குறித்து எழுதப்பட்ட கதைகள் புதினங்கள்
இவர்களின் கண்ணீரைப் பதிவு செய்திருக்கின்றன.
அப்படி நான் வாசித்த கதையின் ஒரு பகுதி..
“40 வயதில் தெரியவந்தது என் அம்மா அத்தீவில் இருக்கிறாள்
என்பது.. அவள் இப்போது எப்படி இருப்பாள்..?
அவள் என்னை நினைத்துக்கொண்டிருப்பாளா?
அவள் வாழ்க்கையில் நான் இருக்கிறேனா..
அம்மா.. உன்னை ஒரு முறைப் பார்த்தால் 
என் பசி அடங்குமா..
அவள் அம்மாவைப் பார்க்க வருகிறாள்..
இருவருக்கும் இடையில் சிக்கன் ஸ்கீர் திரைகள் அசைந்துக்
கொண்டிருக்கின்றன…
அவள் அம்மாவைப் பார்க்க மீண்டும் மீண்டும் வருகிறாள்.
சிக்கன் திரைகள் விலக்கப்பட்ட நாட்களில்
அம்மா.. அவளுடன் வாழும் அவளுடைய தீவு மக்களுடன்
அமர்ந்திருக்கிறாள்.. 
அவர்கள் தொலைக்காட்சியில் எதோ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
திரையை அவள் பார்க்கும் போது அவளை அம்மா பார்க்கிறாள்.\
அவள் அம்மாவைப் பார்க்கும் போது 
அம்மா திரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
இருவரும் மாறி மாறி..
விழிகளின் பாவனைகள் தொடர்கின்றன.
அவள் அம்மாவிடம் கேட்க நினைத்தது எதையும் கேட்கவில்லை.
அம்மாவும் மகளிடம் சொல்ல நினைத்ததைச் சொல்லவில்லை.
அவள் அம்மாவைச் சந்திக்க ஒவ்வொரு ஆண்டும்
வந்து கொண்டிருக்கிறாள்..
அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்..
பின்குறிப்பு:
As per WHO 
Leprosy still exists,
The top three are India, Brazil and Indonesia, 
where 81% of the world's cases are found.
More than 60% of the world's cases are found in India.
More than 700 official leprosy settlements exist in India today

Thursday, September 6, 2018

நவபுகா வாசனை



மொட்டுகள் விரிந்து விரிந்து
மலைமுகடுகளை மூடிக்கொண்டிருந்தன.
எரிமலை வெடித்துச் சிதறியதில் பூத்த
நவுபுகா மலர்கள்
மச்சபுராணத்தை எழுத முடியாமல்
உதிர்ந்து போகின்றன.
மலைமுகடுகளில் எதிரொலிக்கும் அவன் குரல்
அவள் ஆவியைத் தொட்டு எழுப்புகிறது.
அவள் மீண்டும் உயிர்த்தெழுகிறாள்.
குகைகளில் உறங்கிக்கொண்டிருந்த
பெண் தெய்வங்கள் 
அருவிகளில் நீராடி 
ஆடை மாற்றிக்கொள்கிறார்கள்.
ஐம்பூதங்களும் தலைவிரித்தாடுகின்றன.
இயற்கையின் குருஷேத்திரம்
இன்னும் முடியவில்லை.
கடலா தீவா..
பெருங்கடலை தீவு என்ன செய்துவிடமுடியும்?
கடலின் ஆராவாரமும் ஆர்ப்பாட்டமும்
இன்னும் அடங்கவில்லை…
எரிமலை வெடித்துச் சிதறிய தீவுகள்
கடலுக்குள் அடங்காத காமத்துடன்
கரையேறுகின்றன.
காதலர் பிரிவின் சாட்சியாக
பாதி மலர் கடற்கரையிலும்
மீதி மலர் மலைமுகடிலுமாக பூத்திருக்கும்
நவபுகா மலர்கள்..
ஒவ்வொரு மலையிலும் ஒரு காதல் கதை..
ஒவ்வொரு மலையிலும் கோவில் கட்டி குடியிருக்காத
பெண் தெய்வங்கள்..
மதமாற்ற காலனிய புயலில் அனாதைகளாகிவிட்டார்கள்.
அலைகளின் ஆட்டம் மீனின் பாய்ச்சல்
காற்றின் குரலாய் மரக்குடிசைகள் ஆடுகின்றன.
அவள் பாடலில்
என்னை மீட்டெடுத்தேன்.
ருத்திராட்ச காடுகளில்
அவன் காலடி ஒசை.
ஓம் ஒம் ஒம்..
கடலின் ஓசையும் 
காற்றின் ஓசையும்
ஓம் ஒம் ஓம்..
அவன் சடைமுடியில் சூடிய நட்சத்திரங்கள்
கொற்றவையின் சினம் தணிக்க
முடியாமல் தடுமாறுகின்றன.
எரிமலை அவளுக்காக பூக்களைத் தூவுகிறது.
நிலம் நடுங்கிக்கொண்டே இருக்கிறது.
பூதகணங்கள் அவள் கண்ணசைவுக்காக காத்திருக்கின்றன.
தணியுமோ அவள் தாகம்?
கனியுமோ அவள் இதயம்!
காத்திருக்கிறது காலதேவனின்
நவபுகா வாசனை.
(க்வாயி தீவின் நினைவுகளில்.. )