Thursday, August 13, 2009

சூரிய கிரகணம்


ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்
பூமகளை ஆட்சிசெயும்
ஞாயிறு போற்றுதும்

கொலை கொள்ளை
இனவெறி
இனப்படுகொலை
எது நடந்தாலும்
ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்..

ஜெய ஜெய ஜெய ஜெய
ஜெய ஜெய ஜெய ஜெய
ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்

ஆர்ப்பரிக்கும் குரலோசையில்
தென்குமரி கருவறை
விழித்துக்கொண்ட தருணம்.......

விடியலைத் தொலைத்த
பதட்டத்தில்
ஆகாயத்தை அதிரவைக்கும்
சிறகுகளின் படபடப்பு
மயங்கித் திரியும்
அதிகாலைச் சேவல்கள்
இரவல் வெளிச்சமாய்
வாழ்ந்த வாழ்க்கையை
புரட்டிப்போடும்
பூமியின் நிலவு

சுட்டெரிக்கும்
சூரியக்கங்குகள்
எரித்துவிடக்கூடும்
அவள் இளமுலையை

ஹரிஓம் ஹரிஓம்
ஜெய ஜெய ஹரிஓம்
அச்சுறுத்துகிறது
அவன் எழுதிய
குருஷேத்திரம்

அடங்க மறுத்தலின்
அடையாளமாய்
ஆர்ப்பரிக்கும் தென்குமரி
ஒற்றைச் சிலம்புடன்
கொற்றவை
தீமிதிக்கிறாள்
ஓம் சக்தி ஓம் சக்தி
ஆதித்தாயே ஓம்சக்தி

சடச்சட சடவென
சரிந்து விழுகிறது
நிழலுக்கும் சொந்தம் கொண்டாடும்
உரிமையை இழந்த
சூரியக்குடைகள்.

'எல்லாம் தான் தான்'
அவன் எழுதிய
மறைமொழியை
மறுவாசிப்பு செய்யும்
மங்கையின் விழிகளில்
அவன் இழந்துப்போனது
தேர்கள் பவனிவந்த
பிரபஞ்ச வீதிகளை மட்டுமல்ல
பூமியில் பதிந்த
நிழல்களின் சுவடுகளையும் தான்.

கொற்றவைப் போற்றுதும்
கொற்றவைப் போற்றுதும்
பூமகளை வாழவைக்கும்
கொற்றவைப் போற்றுதும்
கொற்றவைப் போற்றுதும்..

--------------------------------------

No comments:

Post a Comment