Tuesday, May 5, 2009

நகம்




விதம் விதமாக
வண்ணம் பூசி
அழகுப்பார்த்த காரணத்தாலேயே
வெட்டாமல் இருக்க வேண்டும்
என்பதல்ல.
கவனமாக வெட்ட வேண்டும்.
ஆழமாக வெட்டினால்
ரத்தக்கசிவு வரலாம்
கவனிக்காமல் விட்டுவிட்டால்
வீங்கி சீழ்ப்பிடித்து
விண் விண் என்று
வலி கொடுக்கும்
பிராண அவஸ்தையை
அனுபவிக்க வேண்டிவரும்.


வளர்ப்பது தற்காப்புக்கு
என்றெல்லாம் சொல்லிக்கொள்ளலாம்
வளர்ந்து வளைந்திருக்கும்
இடுக்குகளில்
தங்கிவிடுகிறது
தேடிவந்த அழுக்கும்
தேகத்தின் அழுக்கும்.
சமைப்பது சாப்பிடுவது
அழுக்குகள் சேர்த்துதான்
என்றாலும்
பழகிவிட்டது
இரப்பையும்
இறைப்பையும்.


இரவில் வெட்டினால்
தரித்திரம் என்று
பாட்டி சொன்னதையே
அம்மாவும் மறக்காமல்
சொல்கிறாள்.

வெட்ட வெட்ட வளருமாம்
உன் நினைவுகளைப் போலவே
நகமும் .
செத்த உடம்பிலும்
நகம் வளருமாமே
சொல்லுகிறார்கள்
உண்மையா?
அதனால்தான் உயில் எழுதுகிறேன்
விரல்களைப் புதைக்காதீர்கள்
எரித்துவிடுங்கள் என்று.

---------------

No comments:

Post a Comment