Friday, June 19, 2009

காணாமல் போன கடலலை

ஏழு கடல் தாண்டி
ஏழு மலைத் தாண்டி
ஒரு குகை.
ஒற்றைக்கண் அரக்கனின்
இமைகளில்லாத இரவுகள்
சிறகொடிந்த மைனாவாய்
சிறை எடுக்கப்பட்ட
எங்கள் இளவரசி
கனவுகளுடன் காத்திருக்கிறாள்
எப்படியும் வந்துவிடுவான்
பறக்கும் கம்பளத்தில்
பட்டத்து ராஜா என்று.

கடலை நிரப்பிக்
கட்டிடம் கட்டியதும்
மலையைக் குடைந்து
மரங்கள் மறைந்ததும்
அவள் கனவுகளில் காட்டும்
கண்ணாடிகளைத் தேடுங்கள்
கனவுகளின் கருக்கலைப்பில்
மரணம் சம்பவிக்குமென
மருத்துவர்கள் சொன்னதை
மறந்து விடாதீர்கள்.

கனவுகள் கட்டிய
கல்லறைக்குள்
காலம் அவளைப் புதைப்பதற்குள்
தோண்டி எடுத்து
காப்பாற்றி விடுங்கள்
அவள்
கனவுகளாவது
உயிர்ப் பிழைக்கட்டும்.

No comments:

Post a Comment