Thursday, April 2, 2009

உண்மைக்கு நெருக்கமாய்






சீக்கியர்கள் VS தமிழர்கள்
--------------------------
"சீக்கியர்களால் செய்ய முடிந்ததை தமிழ்ச்சாதியால் ஏன் செய்ய முடியவில்லை?
இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவோம். அந்தத் தேடலில் நாம் இதுவரைப் பார்க்காத
நம் இருண்ட பக்கங்கள் தெரியவரலாம். "

என்று வீரவணக்க வரலாறு குறித்த என் பதிவில் எழுதியிருந்தேன்.
கேள்வி உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் சேர்த்துதான்.
இக்கட்டுரையை பல்வேறு இணையதளங்களும் வலைப்பூக்களும் (Blog)
மறுவாசிப்புக்கு உட்படுத்தியிருந்ததை அண்மையில் கண்டேன்.

நண்பர்களுடன் இதுகுறித்து நிறைய பேசி இருக்கிறேன். கட்டுரைக்கான
பின்னூட்டங்கள் சில செய்திகளைத் தொடாமல் இருப்பதையும் அறிய முடிந்தது.
அதனால் என் பதிவுக்கு நானே பின்னூட்டம் எழுத வேண்டியதாகிவிட்டது!
அவற்றில் சில:


*என்னதான் மதம் குறித்த பார்வை என்போன்றவர்களுக்கு தந்தை பெரியார் சாயலில்
இருந்தாலும் மதம் என்ற ஒரு கட்டுமானம் சீக்கியர்களை இணைத்திருக்கிறது.
ஆனால் தமிழர்களின் மதம்?
இந்துமதம்! கேட்கவே வேண்டாம். தமிழ்ச்சாதியைப் பிரித்து வைத்திருப்பதில்
சூத்திரனாய் ஒதுக்கி வைத்திருப்பதில் மிகபெரிய வெற்றியைக் கண்டிருக்கிறது.
பல்நூறு ஆண்டுகள் தன் ஆளுமையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
எத்தனை பெரியார்கள் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது என்கிற மாதிரி
மொட்டைப் போடுவதிலிருந்து பிச்சை எடுப்பது வரை சகலத்திலும் தன்னை
நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறது.
தமிழ்ப்பேசும் இசுலாமியர்கள், கிறித்துவர்கள் தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு,
உழவர் திருநாள் என்றெல்லாம் தமிழின அடையாளத்துடன் கொண்டாடப்படும்
-அல்லது கொண்டாட வேண்டும் என்ற தைத் திங்கள் முதல் நாளைக் கொண்டாடுவதில்லை!
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

* பஞ்சாபியர்களின் கடின உழைப்பும் ஒற்றுமையும். அவர்கள் புறநானூறு பாடல்கள் எல்லாம்
எழுதி அதைப் பற்றிப் பேசிப்பேசியே பொழுதுப் போக்குவதில்லை. அவர்கள் தான்
இன்றைய இந்திய மண்ணின் புறநானூறாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
ஆம், இந்திய இராணுவத்தில் பஞ்சாபியர்களின் பங்களிப்பு இன்றுவரை
அளப்பரியது. இந்திய அரசு அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான்
இருக்கிறது. வரலாற்றில் சில நிகழ்வுகள் ( எழுத்தில் பதிவு செய்வது இயலாது)
இந்திய அரசுக்கு இதை நினைவூட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

*இந்திராகாந்தி கொலையை அடுத்து நடந்த மக்களவைத் தேர்தலில் இந்திராகாந்தியைச்
சுட்டுக்கொன்ற பியாந்த்சிங் அவர்களின் விதவை மனைவி விமலா கவுர் வேட்பாளாராக
நிறுத்தப்பட்டார். இந்தியாவிலேயே மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில்
ஐந்து இலட்சத்திற்கும் கூடுதலான வாக்குவித்தியாசத்தில்.விமலாகவுர் வெற்றி பெற்றார்.

*பியாந்தசிங்கும் பிந்திரன் வாலேயும் இன்றும் சீக்கியர்களால் 'தியாகி' என்றே
போற்றப்படுகிறார்கள்.

*ப்ஞசாபிலும் காங்கிரசு கட்சி உண்டு, ஆனால் சீக்கியர்களுக்கு எதிராக இந்தியா இறையாண்மை,'அது இதுனு
உளறினால் பஞ்சாப் மண்ணில் காங்கிரசு கட்சி துடைத்து எறியப்படும்.

*விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒரு பக்கம் இந்திய அமைதிப்படையிடம் ஒப்படைத்துக் கொண்டிருக்கும்போது இன்னொரு பக்கத்தில் “அமைதிப்படை” தனது ஆதரவுக் குழுவான ‘ஈ.பி.ஆர்.எல்.எப்.’ என்ற அமைப்புக்கு ஆயுதங்களை வழங்கும் துரோகத்தைச் செய்தது. இந்த உண்மையை அம்பலப்படுத்தியது, ஏதோ சாதாரண மனிதர் அல்ல; இந்திய ‘அமைதிப் படை’க்கு தலைமை தாங்கிச் சென்றிருந்த தளபதி ஹர்சிரத்சிங்கே - இந்த உண்மைகளை அம்பலப் படுத்தியிருக்கிறார். அவர் எழுதுகிறார்:
1987 ஆம் ஆண்டு 14/15ஆம் தேதி நள்ளிரவு எனக்கு தீட்சத்திடமிருந்து ஒரு தொலைபேசி வந்தது. பிரபாகரன் சந்திக்க வரும்போது அவரை கைது செய்யுங்கள் அல்லது சுட்டு விடுங்கள்” என்று கூறினார். மீண்டும் நான் தொடர்பு கொள்கிறேன் என்று அவரிடம் கூறிவிட்டு, தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங்கிடம் இதைத் தெரிவித்தேன். அதற்கு அவர், “நமது ராணுவம் மரபுகளைக் கொண்டது. வெள்ளைக் கொடியின் கீழ் நம்மிடம் பேச வருவோரை, நாம் முதுகில் சுட முடியாது. இதை தீட்சத்திடம் தெரிவித்து விடுங்கள்” என்று என்னிடம் கூறினார். நான் தீட்சத்திடம் தொடர்பு கொண்டு உங்களது ஆணையை என்னால் நிறை வேற்ற முடியாது என்று கூறி விட்டேன். உடன் பாட்டை அமுல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கவே புலிகள் தலைவரை அழைத்துள்ளோம் என்று கூறினோம். அதற்கு தீட்சத், “எனக்கு ராஜீவ்காந்திதான் இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளார். ராணுவம் தனது கடமையிலிருந்து ஒதுங்கிக் கொள்ளக் கூடாது; படைத் தளபதி என்ற முறையில் நீங்கள் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்” - என்று ஹர்சிரத்சிங் தனது “Intervention in Srilanka”(The IPKF Experience Retold) நூலில் பக்.57 இல் குறிப்பிடுகிறார்.

“In September 1987, a political dialogue between the LTTE and an Indian delegation took place at Palaly and a peaceful solution seemed to be in sight. The creation of the IAC was to be thrashed out. The date set for the meeting to be held at my headquarters at Palaly and chaired by .N. Dixit, the Indian High Commissioner, was 16-17 September 1987. On the night of 14/15 September 1987, I received a telephone call from Dixit, directing me to arrest or shoot Pirabharan when he came for the meeting. Telling Dixit that I would get back to him I placed a call to the OFC. lt. Gen. Depinder Singh directed me to tell Dixit that we, as an orthodox Army, did not shoot people in the back when they were coming for a meeting under the white flag. I then spoke to Dixit in Colombo and conveyed the message emphasising that I would not obey his directive. I pointed out that the LTTE supremo had been invited by the IPKF in order to find a solution to the problems in the implementation of the Accord. Dixit replied, ‘He (Rajiv Gandhi) has given these instructions to me and the Army should not drag its feet, and you as the GOC, IPKF will be responsible for it.’


*ஹர்சிரத்சிங் தனது “Intervention in Srilanka”(The IPKF Experience Retold) நூலில் குறிப்பிடும் மேற்கண்ட
செய்திகளை இன்று பேசும் தோழர்கள் அன்றே உரத்தக்குரலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
ஊடகங்களும் பிற மாநிலத்தவரும் அறியும் வகையில் அந்த உண்மைச் செய்திகளைக் கொண்டு செல்லத்தவறிவிட்டோம்.
அந்த உண்மைகள் சரியாக எடுத்துச் சொல்லப்பட்டிருந்தால் தமிழக காங்கிரசுக்காரர்கள் வாயடைத்துப் போயிருப்பார்கள்.
இந்தியக் காங்கிரசும் தமிழினத்தின் மீது சுமத்தும் வீண்பழியை நிறுத்தியிருக்கும்.

* தமிழர்கள் என்றாலே இந்தி எதிர்ப்பாளர்கள் என்ற எண்ணம் மிகவும் வலுவாக நடுவண் அரசின் காங்கிரசு, பிஜேபி
இரண்டு பக்கமும் இருக்கிறது. இந்திப் பேசத் தெரியாத கல்லூரி இளம்தலைமுறை பஞ்சாபில் உண்டு. இன்றைக்கு
ஊடகங்கள் நடத்து மானாட மயிலாட - ஆடல் பாடல் போட்டிகளில் கலந்து கொள்ளும் பஞ்சாபி இளம்தலைமுறை
மற்ற மாநிலத்தவருக்கும் இந்தச் செய்தியை வாசித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் பஞ்சாபிக் காரர்களுக்கு
'இந்தி எதிர்ப்பாளர்' என்ற அடைமொழி கிடையாது.
தமிழ்நாட்டில் தான் தமிழ் எழுதவோ வாசிக்கவோ அறியாமலேயே பட்டப்படிப்பு படித்து வெளியில் வந்துவிட முடியும்
அவலம் அரங்கேறிக்கொண்டிருப்பதை மற்றவர்கள் அறிய மாட்டார்கள்,

* 1945, 1956களில் தந்தை பெரியார் முன்வைத்த தனிச் சுதந்திர தமிழ்நாடு கோரிக்கை,
1949 முதல் 1961 வரை திமுக தூக்கிப்பிடித்த பிரிவினைக் கோரிக்கை, மாநிலசுயாட்சி
இத்தியாதி சொற்கள் தமிழ் மண்ணின் தலைவர்களிடம் காணாமல் போய்விட்டது என்பது மட்டுமல்ல..
இதைப் பற்றிய எந்தச் செய்திகளும் இன்றைய இளம்தலைமுறைக்கு எள்ளளவும் தெரியாது.
அந்தளவுக்கு இந்திய இறையாண்மையைப் போற்றிப் புகழும் தமிழ் மண். ஆனால் என்ன கருமமோ
தெரியவில்லை... நடுவண் அரசுக்கு இன்னும் தமிழ் மண்ணில் ஒலித்த பிரிவினை வாதம்
அடிக்கடி கனவில் தோன்றி பயமுறுத்திக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.

* ராஜிவ்காந்தி கொலை நிகழ்ச்சியைக் காரணம் காட்டியே இந்திய அரசு ஈழப்பிரச்சனையை
அணுகுவதாக நினைப்பது தவறு. அப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்காவிட்டாலும்
இந்திய அரசு இப்படித்தான் நடந்து கொண்டிருக்கும் என்ற புரிதல் தமிழர்களுக்கு வேண்டும்.



மேலே குறிப்பிடும் செய்திகள் அண்மைய இந்திய வரலாற்றின் உண்மை நிகழ்வுகள்.
நடந்து முடிந்த சம்பவங்களை நான் எழுதியிருப்பதால் மட்டுமே
அதெல்லாம் சரி என்றோ நியாயம் என்றொ வாதிடுவது என் நோக்கமல்ல.

"வரலாற்றிலிருந்து பாடம் கற்காதவர்கள் வரலாறு படைக்க முடியாது "

No comments:

Post a Comment