Friday, December 20, 2019

இதுதான்யா இந்தியா..



இதுதான்யா ..இந்தியா..

Quit india முதல் சாரே ஜாஹாங்சே அச்சா
ஹிந்துஸ்தான் அமரா வரை…
Image result for saare jahan se achcha

(1)
1942, ஜூலை 14, வர்தாவின் கூடுகின்ற நேஷனல் காங்கிரசு
இந்தியாவுக்கு முழுசுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையை
முன்வைத்து போராட முடிவு எடுக்கிறது. அக்கருத்தை
“நச்”சென சொல்ல வேண்டும். காந்தி தன் சகாக்களுடன் இது
குறித்து பேசுகிறார். அப்போது காந்திக்கு அருகிலிருந்த
ராஜாஜி அவர்கள் “RETREAT “ “WITHDRAW” என்று சொல்ல லாமே
என்று தன் கருத்தை முன்வைக்கிறார். ம்கூம்.. என்னவோ ராஜாஜியின்
சொல்லில் தான் விரும்பிய அந்த போராட்ட மந்திரச்சொல்லாக இல்லை
என்பதைக் காந்தி உணர்கிறார். அத்தருணத்தில் மும்பையில்
GO BACK SIMON – சைமனே.. திரும்பிப்போ என்ற முழக்கத்தை
முன்வைத்த (Yusuf Meherally.)யுஷப் மெஹரலி என்ற இளைஞன்
சொன்னது தான் “QUIT INDIA”.
QUIT INDIA MOVEMENT இந்திய வரலாறானது.. அந்த யுஷப் க்கு
இந்திய வரலாறு என்று நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது.
(2)
இன் குலாப் ஜிந்தாபாத்..
இந்தப் புரட்சியின் முழக்கத்தை இந்திய மண்ணுக்கு கொடுத்தவர்
(Maulana Hasrat Mohani in 1921) மெளலானா ஹஷ்ரத் மொஹானி. புரட்சியாளர்
பகவத்சிங்க் மற்றும் அவர் தோழர்கள் இதையே தங்கள் புரட்சியின்
தாரக மந்திரமாக முழங்கினார்கள். அந்த மெளலானாவுக்கு நன்றி.
(3)
சாரே ஜாஹாங்சே அச்சா
ஹிந்துஸ்தான் அமரா அமரா..
புகழ்மிக்க இந்தப் பாடலை லதாமங்கேஷ்கர் பாடும் போது
 உருகாத மனமும் உருகும்.. இந்தப் பாடலை இயற்றிவர் 
முகமது இக்பால். பிரிவினைக்கு முந்திய பாஞ்சாப் கவிஞர்.
இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் 
இவர் பாகிஸ்தான் பாஞ்சாப் பகுதியில் வாழ்ந்தார்.
 The thinker of Pakistan என்று இவர் அழைக்கப்படுகிறார் என்றாலும்..
சாரே ஜாஹாங்க் சே அச்சா.. இந்துஸ்தான் அமரா அமரா..
அப்படியெ எதுவும் மாறாமல்
 இந்திய மண்ணில் இசையுடன் வாழ்கிறது.. 
முகமது இக்பாலுக்கு நன்றி.
ஆம். துமாரா அல்லது மேரா என்று சொல்லவில்லை!
அமாரா .. நம்முடையது என்று தான் சொல்கிறது.
(துமாரா - உன்னுடையது, மேரா - என்னுடையது.)
(4)
பாகிஸ்தானிலிருந்து 1971ல் பிரிந்த வங்காளதேசம்
 தங்கள்தேசத்தின் தேசிய கீதமாக தெரிவு செய்த து 
இந்தியர் எழுதிய பாடலைத்தான். 
1905ல் SONAR BANGLA என்று இரவீந்தர நாத் தாகூர் எழுதிய பாடல் தான் வங்கதேசத்தின் தேசியகீதம்
நன்றி வங்கதேசமே.. !
ஆஹா.. இதை எல்லால் சொல்லும்போதே
இனம்புரியாத மகிழ்ச்சியும் பெருமையும்
ஏற்படுகிறதே…
இதுதான் யா இந்தியா..
இதுல என்னய் யா பிரச்சனை உங்களுக்கு?!!
இதுதான்யா.. இந்தியா..

Wednesday, December 18, 2019

சூல் தர்மனுக்கு வாழ்த்துகள்




கொப்புளாயி.. குடும்பத்தின் சார்பாகவும்
கண்மாய் உயிரினங்கள் சார்பாகவும்
சூல் - சோ தர்மனுக்கு
வாழ்த்துகள்...
எப்படியோ உங்களைப் போனில் ப்டிச்சி வாழ்த்து
சொல்லும் போது.. என் ஆதித்தாய் கொப்புளாயி
கை அசைத்து வாழ்த்தினாள்.. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குய்யா.. ..
-----
உருளைக்குடியின் கண்மாய்..
சூல் கொண்ட கண்மாய்
அப்படியே நம்மை தனக்குள் இழுத்து மூழ்கடித்து
ஜீவராசிகளின் உயிர்ப்பை உரையாடல்களின் ஊடாக
நம்முன் விரித்து .. சூல்.. தன் பனிக்குடம் உடைத்துப்
பிரசவத்ததில் பரவசப்பட்டவர்கள் என் போன்றோர்.
பிச்சையாசாரி,எலியன்,கோனக்கண்ணன்,
சப்பான்,மூக்கன்,மொன்னையன்,
கொப்புளாயி, மடைக்குடும்பன், நீர்ப்பாய்ச்சி,
குப்பாண்டி.லாடம் கட்டும் ஆசாரி..
இத்துடன் பிச்சையாசாரி, எலியன், கோணக்கண்ணன்
நடத்தும் புதையல் கதையும் அவர்களின் நம்பிக்கையும்
அதில் வெளிப்படும் அவர்களின் வெகுளித்தனமும்..
இப்படியாக சூலின் மாந்தர்கள் புனைவுகளைத்
தாண்டிய கிராமத்தின் வாழ்வியலாக ..
அன்றைய வாழ்க்கையின் ஆவணமாகவும்..
பாத்திரப்படைப்புகளில் என் கண்முன் சூல்கொண்டு
நிற்பவள்.. சூல் அறியாத என் தாய் .. எம் ஆதித்தாய்
கொப்புளாயி தான்.
கொப்புளாயி வைத்த மரத்தின் அடியில்
நிழலின் வாழ்ந்திருக்கும் கொடுப்பினையும்
இல்லாத வாழ்க்கை என்னுடையது.
கொப்புளாயி எனக்கு வெறும் கதைப்பாத்திரமல்ல.
எம் அம்மம்மா, அவளுக்கு அம்மா, ஆச்சி,
ஆச்சியைப் பெத்த புண்ணியவதி..
இப்படி எம் மண்ணில் வாழ்ந்த ஆதித்தாய்களின்
எச்சம் தான் .. சாயல் தான் சோ. தர்மன்
படைத்த சூல் கதையின் கொப்புளாயி.
கொப்புளாயீ..ய்யீ..
இத்தனைப் பிரமிப்புகளையும் தாண்டி தான்
இதே சூல் நாவலின் சமூக அரசியலும்
பின்னணி இசை போல கதையுடன் ஒட்டியும்
ஒட்டாமலும் எனக்குள் ஓடியது.
இது என் அரசியல் சார்ந்த சரியானப் பார்வையா?
முதல் வாசிப்பில் ஏற்பட்ட இதே அனுபவத்தை
இரண்டு திங்கள் கழித்து என் மீள்வாசிப்பிலும்
உணர்ந்தேன். அதுவே என் இரண்டாம் பகுதி
விமர்சனமாக விரிந்தது.
இத்தருணத்தில் நான் மிகவும் மதித்து கொண்டாடும்
எழுத்தாளர் அருந்ததிராய் சொன்ன வரிகள் தான்
நினைவுக்கு வருகின்றன.
For me, my fiction and my nonfiction
are both political. The fiction is a universe,
the nonfiction is an argument.
பொதுவாக ஒரு பிரபலமானவரின் படைப்புகளை
விமர்சனம் செய்யும்போது அவர்கள் விமர்சனங்களை
எதிர்கொண்ட விதம் அவர்களின் பிம்பங்களை
உடைத்து என்னைக் காயப்படுத்தியதுண்டு.
ஆனால்…
என் சூல் நாவலின் சமூக அரசியல் பார்வையை
வாசித்துவிட்டு…
அவருக்கே உரிய தொனியில்..
“கட்சி நாயக்கர் அல்ல, சுட்சி நாயக்கர் “ என்று
படைப்பாளர் சோ. தர்மன் அவர்களே வந்து
பின்னூட்டமிடுகிறார்.
அவருடைய அந்த மிடுக்கு, பெருந்தன்மை, ஆகிருதியில்
இன்று நான் கரைந்துப் போனேன்.
அவர் வாழும் திசை நோக்கி என் இரு கைகளைக் கூப்பி
வணங்குகிறேன்.. ஒரு வாசகனாக மட்டுமல்ல..
அவர் நிழலில் ஒதுங்கும்
கொப்புளாயியின் வாசனையாகவும்.
(13 செப்டம்பர் 2018  முக நூல் மீள்பதிவு)

Tuesday, December 17, 2019

பச்சைக்குதிரை நாவல்


பச்சைக்குதிரை நிமிர்கிறது. 
------------------------------------------------------------- மீரா ரவிஷங்கர்


நவீன தமிழ் இலக்கியத்தின் மீது அக்கறை கொண்ட வாசகர்கள், படைப்பாளிகள் இப்பொழுது நிறைய இருக்கிறார்கள்.
கடந்து வந்த வாழ்க்கைமுறையின் கணக்கற்ற சிறு சிறு தகவல்களை, பேரழிவுகளை சாமானிய வாழ்விற்குள் பொருத்தி கதை சொல்வது தான் ஒரே வழி. அதிலிருந்து சிறு சிறு புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும். அன்றாட வாழ்க்கை தான் எத்தனை சுவாரசியமானது. முடிவற்ற மனித உண்மைகள் அதில் புதைந்துள்ளன. ..நான் எப்போதும் இந்த சிறிய பிரபஞ்ச வெளியை நோக்கி ஈர்க்கப்பட்டிருக்கிறேன், ஒரு மனிதன், ஒரு நபர். அங்கு தான் பிற எல்லாமும் நிகழ்கின்றன.” – 2015 இலக்கிய நோபல் பெற்ற Svetlana alexievuh என்ற ரஷ்ய பெண்மணியின் கூற்று.
நான் ஒரு கதை சொல்லியாக உங்கள் முன் நிற்கிறேன்.
ஆனாலும், ஒரே ஒரு கதை என்பதன் அபாயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்..
நான் ஆங்கில எழுத்துக்களை வெகு சிறு வயதிலிருந்து படித்து வருகிறேன். அமெரிக்க மற்றும் ஆங்கிலேயே கலாசாரப் புத்தகங்களை அதிகம் படித்தேன்.
அந்தப் பெண்கள் தங்க முடியும், நீலக் கண்களுமாய் வலம் வந்தனர்; அங்கே குளிர் காலத்தில் பனி பொழிந்தது; அவர்கள் ரொட்டியும் ஆப்பிளும் சாப்பிட்டனர். அவர்கள் சூரிய ஒளியைச் சிலாகித்தனர்.
சிலகாலம் நான் இந்த கற்பனைகளை நிஜம் என்று நம்பினேன்....நான் இருப்பது சென்னை, வெய்யில் மண்டையைப் பிளக்கும்....வானிலையைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது? நான் பனியை நேரில் பார்த்ததில்லை. மாங்காய் தின்று வளர்ந்தவள்.
எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால், நாம் ஒரு கதையைப் படிக்கும் பொழுது அதன் தாக்கம் அபாரமாக இருக்கிறது, நாம் தாக்கப்பட்டோம் என்பதையே அறிவதில்லை.
நம்மை அடையாளப்படுத்துபவர்கள் புத்தகத்துக்கு வெளியே நிஜ உலகில் சஞ்சரிப்பவர்கள். உள்ளே இருப்பவர்கள் கற்பனை கதாபாத்திரங்கள் மட்டுமே....ஒரு எம்ஜீயார் படம் போல...feel good factor.
என் பார்வையும் கோணமும் மாறியது, நான் இந்திய எழுத்தாளர்களைப் படித்த பொழுது தான்....
ஆங்கிலக் கதைகள் தான் ஒரு நிலைப்பாடு என்ற அபாயத்திலிருந்து காத்தவை...அவை தான்.
ஒருவரை பார்த்த உடனேயே ஒரு நிச்சயம்....ஐயோ பாவம், கிராமத்துப் பொண்ணு...என்பது போல
இது போன்ற தளைகளை உடைக்கும் எழுத்து தான் பச்சை குதிரை..
பெண் என்றால் ஆதரவற்றவள்...இந்த ஒரு கதையைத் தாண்டி...அவள் மீதான பரிதாபத்தைத் தாண்டி அவளிடம ஒரு சக மனுஷியின் இணைப்பு, இணக்கம் தேடும் முயற்சி பொதுவாக மக்களிடம் இல்லை.
எதிர்மறைகளின் மொத்த உருவம் தான் பெண்ணின் நிலைமை என்று சித்தரிக்கப்படுவது, அவளுக்கு ஏற்படும் சிறந்த பல அநுபவங்களின் வடிவத்தை தட்டையாக்கி சிறுமைப்படுத்துவதாகும்.
பெண்மை என்பது போராட்டம் மட்டுமே என்று எண்ணினால் அது தவறில்லை....ஆனால் அந்தக் கோணம் முழுமை பெறாது.
அது ஒரு கதைக் கருவாக இருக்கலாம் ஆனால் அது ஒன்றே மொத்த கதையாக மாறகே கூடாது.
பெண் அபலை என்றால்அது அவளுடைய கண்ணியத்தை அபகரிக்கிறது. அவள் இந்த சமூகத்தில் ஆணுக்கு நிகரானவள் என்ற சமத்துவத்தை ஒதுக்குகிறது.
ஒரு கதாசிரியர் என்னிடம் பகிர்ந்து கொண்டது: என்னுடைய கதையைப படித்த ஒரு வாசகர், முடிவை எப்படி மாற்றி எழுதலாம் என்பதுடன், கதையின் தொடராக அடுத்த கதையையும் வடிவமைத்துவிட்டாள்...
உங்களுக்கு கோபம் வந்ததா, என்று கேட்டேன்...இல்லை... சந்தோஷமாக இருந்தது. அந்த அளவுக்கு அவள் என் கதையை சொந்தம் கொண்டாடியது, என்றார்.
இந்த நாவல் பெண்களைப் பற்றியது. பெண்ணால் எழுதப்பட்டது, பெண்ணால் விமர்சிக்கப்படுகிறது...உடனே மனதுக்கு வரும் வார்த்தை...இது பெண்ணீயமா?
பெண்ணியம் என்பது ஒரு சுமையுடன் வரும் loaded வார்த்தை.....எதிர்ப்பு, வெறுப்பு, கடுப்பு....என்பது போன்ற உணர்வு.
பலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் சித்தாந்தங்களில் பெண்ணியமும் ஒன்று. ஆணுக்கு எதிரானவர்கள், சமூக விதிமுறைகளைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்கள், எப்போதுமே கோபம் கொப்பளிக்க இருப்பவர்கள் என்றெல்லாம் பெண்ணியவாதிகள் முத்திரை குத்தப்படுகிறார்கள்.
  • மகனையும் மகளையும் சமமாக வளர்க்கப் பெற்றோர பழக வேண்டும். 
  • வீதியில் நடக்கும் பெண்ணைப் பண்டமாக அல்லாமல் மனிதராகப் பார்க்கப் பழக மகனுக்கு கற்றுத் தர வேண்டும்.
  • வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பெண்ணியம் இன்றும் தேவை 
ஆண், பெண் இருவருக்குமான சமூக, அரசியல், பொருளாதாரச் சமத்துவத்தைக் கோரிய பெண்ணியம் என்ற சிந்தனை பெண்ணைப் போலவே ஆணுக்கும் அவசியமானது.
பாலியல் சீண்டலைச் சகித்துக்கொள்ளலாமா? ‘இஸ் திஸ் ஃபன்னி’ (Is this Funny?),?
அழகு என்ற சிறையில் பெண்கள் எப்படியெல்லாம் சிக்கவைக்கப்படுகிறார்கள்தி பியூட்டி டிராப்’ (The Beauty Trap), 
கசப்புடன் சேர்ந்து வாழ்வதைக் காட்டிலும் பிரிந்து மகிழ்ச்சியாக வாழ்வது மேல் என்பதை உணர்வார்களா?
இப்படிப் பெண்ணின் அன்றாட வாழ்வில் பல சிந்தனைகள், கோணங்கள், ஆக்கிரமிப்புகள்......
நுண்ணுணர்வுடன் பெண்களை அணுக வேண்டியதன் அவசியத்தை இவை உணர்த்துகின்றன.
ஒரு பெண் எந்த தவறு செய்தாலும், அவள் மீது எழுப்பப்படும் விமர்சனங்கள் அவளுடைய ஒழுக்கம் சார்ந்ததாக இருக்கிறது. ஆனால் ஆண் தவறு செய்தால், ‘அவன் பொறுப்பில்லாமல் இருக்கிறான். கல்யாணத்திற்கு பிறகு சரியாகிவிடுவான்என்கிறார்கள். 
ஆண்கள் கூடி ரவுடித்தனம் செய்தால், அதற்கு பெயர் 'ஜாலி'; பெண்கள் கூடி 'ஜாலி'யாக இருந்தால், அதற்கு பெயர் கலாச்சார மீறல்' என, இந்த சமூகம் பாலினம் சார்ந்த பார்வையை வைத்திருக்கிறது என, ஒரு பெண் போலீஸ் அதிகாரி, ஒரு கூட்டத்தில் பேசினார். 
பெண்களுக்காக, பெண்கள் பேசுவதையே பெண்ணியம் என்று கொள்ளலாமா?
பெண் சார்ந்த அடையாளங்கள் மறுக்கப்படுகின்றன. 
அடையாளங்கள் வேறுவிதமாக பார்க்கப்படுகின்றன. 
அதனால், பெண்களின் இயக்கம், சிந்தனை, வாழ்க்கை உள்ளிட்டவற்றை, அவளின் அனுபவங்களால், அவளின் மொழியிலேயே பேசவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. 
அதனால் தான், தற்போது பெண்ணிய எழுத்துக்களுக்கு முக்கியம் உள்ளது. பெண்ணின் அடையாளம் என்னஅவள் போராட வேண்டியது எதற்காக? அவளின் அனுபவங்களையோ, மற்ற பெண்களின் அனுபவங்களையோ கொண்டு அவள் வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும்? அறிவு சார்ந்த சூழலுக்கு எவ்வாறு, தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்?
.... என்பனவற்றை பெண்ணிய இலக்கியங்கள் பேச வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றன. புதியமாதவியின் நாவல் பச்சை குதிரை அவற்றை உளவியல் ரீதியாக அலசுகிறது.
பெண்ணின் மனதளவிலான சுதந்திரம் என்பது என்ன
 பூசி மெழுகாத அவளின் உண்மையான உணர்வுகள் என்னென்ன? என்பனவற்றை, பெண் மொழியில் பெண்களிடத்தில் படைப்புகளின் வழியாக கொண்டு செல்லும்போது, அவள் சுயசிந்தனை பெறுகிறாள். ஆண்கள், பெண்ணிய படைப்புகளை படிக்கும் போது, பெண்களை புரிந்துகொண்டவர்களாக, அவர்களின் உணர்வுகளை மதிக்கத்தெரிந்தவர்களாக மாறுகின்றனர். 
காலம் காலமாக, ஆண்கள் மீதும் பெண்களின் மீதும் கட்டமைக்கப் பட்டிருக்கும், போலி அடையாளங்கள் கட்டுடைக்கப்படுகின்றன. ஆண்களும், பெண்களும் போலியில்லாத பெண்ணுலகை புரிந்துகொள்வதன் மூலம், இல்லங்களில், இலகுவான வாழ்க்கை ஏதுவாகின்றது. 
தற்காலத்தில், பெண்ணியம் சார்ந்த தமிழ் படைப்புகள் அதிகம் வரவேற்கப்படுகின்றன என்பது, ஆரோக்கியமான விஷயம். என்றாலும், பெண்ணியம் சார்ந்த கருத்தாக்கங்களின் மீது வைக்கப்படும் விமர்சனமாக இரண்டு விஷயங்களை சொல்லலாம். 
குடிப்பது, புகைப்பது, பொதுவெளியில் கூச்சலிடுவது, அரைகுறையாக உடுத்துவது உள்ளிட்டவையே பெண்ணியம் பேசுவோரின் தகுதிகள் போன்ற பிம்பத்தை, ஊடகங்கள் முன்னிறுத்த முயற்சிக்கின்றன. பெண்ணியம் பேசுவோரில் சிலரின் தனிப்பட்ட விஷயங்களாக அவை இருக்கலாம். அவற்றை பொதுமைப்படுத்துவது முறையல்ல என்பது, என் கருத்து.
பாரதியார் இந்த பெண்கள் முன்னேற்றத்தின் தொடக்கப் புள்ளி ஆவார். அவரின் கூற்றுப்படிப்பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்பாரினில் பெண்கள் நடத்த வந்துவிட்டார்கள்.

சமூகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு , அரசியல், அதிகாரம், உரிமை போன்ற அனைத்திலும் பாலின அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து சம உரிமை பெறுதலே பெண்ணியம் என்று கொண்டால் இந்த புத்தகம் அவற்றைப் பேசுகிறது.
சமா- கல்வி
சங்கீதா- வேலை வாய்ப்பு
செந்தா- அரசியல்
கண்மணி- அதிகாரம்/உரிமை போராட்டம்
இவர்களைப் பற்றிய ஒரு ஒப்பீடு
சமா:
சிறிய ஊரிலிருந்து வந்தவள்.
உலகம் அறியாதவள்.
உணர்ச்சிகளின் கலவையாக இருப்பவள்.
காதல் வயப்படுகிறாள்...அது காதலா, ஈர்ப்பா என்று அறியாத வயதில்...ஆனால் அது ஜாதியினால் மறுக்கப்பட்டதும் அவள் அந்த நினைவிலேயே வாழ்கிறாள்.
காதலனை விடக் காதலை அதிகம் நேசிப்பவள்...அந்த உணர்ச்சிக்கு விஸ்வாசமாக இருப்பதாக நினைத்து வாழ்க்கையில் தனித்து பயணிக்கிறாள்.
அவளது அப்பாவித்தனம் பலருக்கு சௌகர்யமாக இருக்கு....ஏழ்மையில் வாடும் விதவை அம்மா, பல குழந்தைகளுக்குத் தாயான அக்கா, அவள் மேல் ஒரு கண் வைத்திருக்கும் அக்கா புருஷன்....
ஏன், தோழிகளே அவளிடத்தில் தம் சுமைகளை இறக்கி வைப்பதில்லை....அவள் எப்படிப் புரிந்துகொள்வாளோ என்ற அச்சத்தில்.
தன்னைப் பற்றிய ஒரு சுய புரிதல் இல்லாமல் இழுக்கும் இழுப்புக்குச் செல்லும் பாத்திரமாக அவள் நமக்கு அறிமுகப்படுகிறாள்.
ஸ்திரத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவளின் பெருமை: விடுதி, நாவல் மரம், காவலாளி முகம்மது கனி, மற்றும் சமா.
பாலச்சந்தரின் படமான தண்ணீர் தண்ணீரில் அறிமுகமாகும்...மற்றும் அருவி என்பது போல.


கதையின் போக்கு அவள் வழி செல்கிறது.
எதிர்த்து சொல்ல துணிவில்லை. உள்ளுக்குள் குமையும் பெண்...தன் நகையை சுவாதீனமாக அக்கா மகளுக்கு கொடுத்தல்; இவள் கட்டிய வீட்டில் அக்கா குடும்பம் குடி புகுதல்; பேச வரும் காதலினிடம் முகம் கொடுக்காமல் இருத்தல்; விடுதிப் பெண்களை அதட்ட மிரளுதல்....இப்படி அப்பாவிப் பெண்ணான சமாவின் பார்வையில் கதை செல்கிறது.
சதா:
நான்கு தோழிகளுள் எப்பொழுதும் அனைவரையும் சந்தோஷமாக வைக்கப் பாடுபடுபவள். விஷயங்களை சீர் தூக்கிப் பார்த்து செயல்படும் யதார்த்தம்.
பணம் இல்லை அப்பாவிடம். பணம் இருக்கு அத்தையிடம்.
டாக்டர் படிப்பு படிக்கவைக்க அத்தையின் பாசமும் பணமும் மட்டும் காரணம் அல்ல. பொறுப்பற்ற டாக்டர் பையன், சொந்த மருத்துவமனையை நடத்தமாட்டான் என்ற கவலையும் காரணம்.
யதார்த்தவாதியான சங்கீதா பணத்தையும் பட்டத்தையும் பொறுப்பு சுமையுடனே ஏற்கிறாள். பலமுறை அவள் பார்க்கும் வைத்தியம் உடலுக்கு மட்டும் அல்ல, மனதுக்கும் தான்.
பலமுறை சமாவுக்கு ஆறுதலாக மட்டும் அல்லாமல் அவளுக்குப் படிப்பினையாகவும், கற்பிதமாகவும் இருக்கிறாள்.
செந்தா
எந்த அரசியலை வெறுக்கிறாளோ, அதற்கே அடிமையாகிறாள்.
ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் அரசியல் சாக்கடை அனைவரையும் ஒரு சேர இணைத்துக் கொள்கிறது.
கண்மணி
ஒரு போராளியாகவும், துணிவான பெண்ணாகவும் வந்தாலும், கொதிக்கும் நீரிலிருந்து அடுப்பில் விழுந்த கதையாக மாறுகிறது.
சமாவுக்கு....கதை முதலிலிருந்து தொடங்குவது போல, வில்சனின் பெண் மற்றும் மாப்பிள்ளையின் பொறுப்பும அவர்களைப் பாதுகாக்கும் கடமையும் எழுகிறது.
அவள் பொறுப்பை சுமப்பது யதார்த்தமாகிறது. ரூ சிறிய திருப்புமுனை அவள் வாழ்வைப் புரட்டிப் போடுகிறது.
விலகி நின்ற சமா களத்தில் இறங்க ஆயத்தமாகிறாள்.
இருப்பினும் பெண்கள்......பாசாங்கில் கைதேர்ந்தவர்கள்
நாம் யார் என்பதை பாராட்டுவதைக் காட்டிலும் நாம் யாராக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை கொள்ளும் உலகம், என்பதால் பெண் பாசாங்கில் கெட்டிக்காரி.
அவளுக்காக மாற்றிக் கொண்டேன்.
அவருக்காக மாற்றிக் கொண்டேன்.
நீ மாறிட்ட.....என்றால் என்ன அர்த்தம்?
பாசாங்கினால் அலுப்பு தட்டி, நான் நானாகிவிட்டேன் என்று தான் அர்த்தம்.
கலாசாரம் என்பது தொடர் பாதுகாப்புகல்லில் செதுக்கிய வார்த்தைகள் அல்ல.
பறிபோன நிலையில் தன்னை நிலைகுலையச் செய்த சூழலையே புதிய வாழ்க்கைக்கான தொடக்கமாக அவர் மாற்றிக்கொண்டார்.
குனிந்த பச்சைக் குதிரை நிமிர்கிறது.
இனி அது ஓடும்!.




(14-12.2019 மாலை அடையாறு அரசு நூலக வாசகர் வட்ட நிகழ்வில்
பச்சைக்குதிரை நாவல் மீரா ரவிசங்கர் அவர்கள் வழங்கிய  விமர்சனத்தின் சுருக்கம்.  நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த எழுத்தாளர் அய்யா வையவன் அவர்களுக்கு நன்றியும் அன்பும்.
புகைப்படத்தில்  (இடமிருந்து வலமாக)மீரா ரவிசங்கர், லதா, வான்மதி, வையவன், கர்னல் கணேசன், புதியமாதவி மற்றும் கடைய நல்லூர் பென்சி )
 

நிகழ்வுக்கு வருகைத் தந்திருந்த பதிப்பாளர் உதயகண்ணன், கவிஞர் இளம்பிறை, கல்வெட்டு இதழ் ஆசிரியர் கவிஞர் சொர்ணபாரதி, இனிய நண்பர் கடைய நல்லூர் பென்சி அனைவருக்கும்  அன்பும் நன்றியும்.

Monday, December 9, 2019

இந்திய குடியுரிமை சட்ட திருத்தம்

Image may contain: 1 person, standing, beard and text
இந்தியக் குடியுரிமை சட்ட திருத்தம் மசோதா
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் முகத்தை உலக அரங்கில் இது
மாற்றுமா..? என்னமாதிரியான ஒரு வர்ணத்தைப்
பூசப்போகிறது? பச்சை நிறத்தை ஆரஞ்சு நிறம்
மறைத்துவிடுமா..? போகப்போகத்தான் தெரியும்..

பழைய சட்டத்தின் படி,
இந்தியாவில் பிறந்தவர்களும், இந்தியாவிற்கு
முறையாக அனுமதியோடு வந்து
11 வருடங்கள் வாழ்ந்தவர்களும் மட்டுமே
இந்திய குடியுரிமை பெற முடியும்.
முறையின்றி இந்தியாவில் குடியேறிய யாரும்
இந்தியாவில் குடியுரிமை பெற முடியாது.
இந்த சட்டத்திருத்த மசோதா மூலம் ஆப்கானிஸ்தான், 
பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில்
 இருந்து மத பிரச்சனை காரணமாக, 
இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் 
இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். 
அரசு அவர்களை கைது செய்யாது.
இவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
 அதாவது அந்த மூன்று நாடுகளில் இருந்து வரும் 
கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், 
பார்சி மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் 
குடியுரிமை பெற முடியும்.
பிஜேபி இந்த அண்டை நாடுகளிலிருந்து 
இந்தியாவுக்கு வரும் இசுலாமியர்களை
 தடை செய்திருப்பதுஇருக்கட்டும்.
பிஜேபி அப்படித்தான் இருக்கும்.
ஆனா..
இவர்களின் பட்டியலில் இலங்கை விடுபட்டிருப்பது ஏன்?
இலங்கையிலிருந்து இந்தியா வரும் 
இந்து , கிறித்துவர் மற்றும் புத்த மத த்தினருக்கும்
 இந்திய அரசு குடியுரிமை வழங்குமா..?

இதில் இருக்கும் விடுபட்ட நாடுகளையும்
விடுபட்ட இனத்தவரும் மத த்தினரும்..
கவனிக்கப்பட வேண்டியதாகிறது..
சரவணா…
வெங்காய கவலையில் இதைக் கவனிக்காம
விட்டுடாதேய்யா..

Thursday, December 5, 2019

டிசம்பர் 06.. புத்தன் சிரிக்கிறான்..

Image result for very rare photo of ambedkar"டிசம்பர் 06
தாதர் சைத்யபூமியை நோக்கி..
கடல் அலைகள் ஆர்ப்பரித்து ஆர்ப்பரித்து
அடங்கிவிட்ட தோ..!
இந்த விடியல் நேற்றைய விடியல் போலில்லை.
புத்தக அலமாரியிலிருந்து சரிந்து விழுந்துவிட்ட
புத்தகங்களை அடுக்கி வைப்பதில்
சோர்ந்து போய்விட்டன என் கைகள்.
அறிவாயுத த்தை
அஹிம்சையும் சாதிக்கோடாரியும் பிளந்து ரத்தம்
குடித்ததும் தின்று தீர்த்த தும் ..
இன்னும் கடற்கரையில் கரைக்க முடியாத
அஸ்தியாய் ..
சாலையோரத்து குடிசைகளின் குப்பைமேடுகளுக்கு
நடுவில் எப்போதும் பறக்கிறது நீல நிறத்தில்
அசோகச்சக்கரம்.
கோட்டு சூட்டு அணிந்த உன் புகைப்படங்கள்
குடிசைகளுக்கு ஒளி ஊட்டவில்லை, உண்மைதான்.
உயிரூட்டிக் கொண்டிருக்கிறது என்பதை
இந்த நாளின் ஒவ்வொரு துளியும் தன் கதையாக
எழுதிக்கொண்டிருக்கிறது.
என் பெரு நகரத்தின் பெருமூச்சில் கரைந்துப் போகிறது புத்தகத்தின் எழுத்துகள்.
குடிசைகளில் நீ இருப்பது
புத்தக ஜீவிக்கு அவமானமாக இருக்கிறதோ..?
புத்தன் சிரிக்கிறான்.
ஆஹா .. புத்தனின் சிரிப்பு..
அணுகுண்டு சோதனைக்கு நீங்கள் வைத்த
ரகசிய மொழியல்லவா..
அணுகுண்டுகளின் அக்னிச்சிறகுகள்
கனவுகள் காணுகின்றன.
ஊமையின் கனவுகள் இன்னும் எழுதப்படவில்லை.
உன் மொழியை யாரால் எழுத முடியும்?
டிசம்பர் 06..
அயோத்தியை நினைவூட்டும் அரசு பயங்கரவாதம்.
திட்டமிட்டே இந்நாளைத் தேர்வு செய்தவர்களின்
பதட்டம் ஏனோ தணியவில்லை.
நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்புகள்
அரசு பயங்கரவாதமாய் அச்சுறுத்துகின்றன..
தீண்டாமைச் சுவர்களில் எழுதப்பட்டிருக்கிறது
இந்த தேசத்தின் சரித்திரம்.
இது பாதிக்கப்பட்டவனின் பதட்டம் மட்டுமல்ல..
சைத்ய பூமியை நோக்கி.. ஜனக்கடல் திரும்பும்
நாளில்.. நானும் சாட்சியாக..
(2)
A Constitution for the Demons
on 19 March 1955, Dr Anup Singh, a Rajya Sabha member
 from Punjab, brought up Ambedkar’s remark, when the
 Fourth Amendment Bill was being discussed. Dr Singh asked, 
“Last time when you spoke, you said that you would burn the Constitution.”
Do you want a reply to that? I would give it to you right here.
 My friend says that the last time when I spoke, 
I said that I wanted to burn the Constitution. Well, in a hurry I did not explain
 the reason. Now that my friend has given me the opportunity, 
I think I shall give the reason. The reason is this: We built a temple 
for god to come in and reside, but before the god could be installed, 
if the devil had taken possession of it, what else could we do except 
destroy the temple? We did not intend that it should be occupied
 by the Asuras. We intended it to be occupied by the Devas. 
That’s the reason why I said I would rather like to burn it.

(BR Ambedkar in the Rajya Sabha on 19 March 1955.)

Monday, December 2, 2019

பெண்ணும் பிறந்தவீடும்

..
ஏன் இந்த தண்டனை..?
யாருக்காக நான் சுமக்கிறேன்
இந்தச் சிலுவையை.?
பாவமன்னிப்பு.. ஹா.
யாருடைய பாவங்களை
யார் மன்னிப்பது?
தாயே.. எனக்கு மட்டும் ஏன் கொடுத்தாய்
நீ சுமந்த வேதனையை.
எனக்கு மட்டும் ஏன் கொடுத்தாய்
நீ சிந்தாமல் வைத்திருந்த கண்ணீரை
அம்மா.. பிறந்தவீடு..
உனக்கில்லாமல் போனதை
என்மீது சுமத்தியது எதற்காக?
உன் சாபவிமோசனமாய் நானும்
என் நாட்களும்.
எனக்கும் பிறந்தவீடு இல்லை.
கதவுகளை அவர்கள் பூட்டிவிட்டார்கள்.
மதியாதார் வாசல் மிதியாமை கோடிபெறும்..
அப்பாவின் மந்திரம்..
என் உயிர்மூச்சின் சுவாசமாய்
அறிவார்களோ..
கதவுகளைப் பூட்டிய கண்ணியவான் கள்
அப்பாவின் நிழலும்
அம்மாவின் வரமும்
நானாகிப்போனதில்
அப்பா கட்டிய வீட்டின் இரும்புக் கதவுகள்
பூட்டிக் கொண்டதோ.
நடுவீட்டில் குடியிருந்த மனசாட்சி
மரணித்துவிட்டதோ
பாவம்.. அப்பாவின் பிள்ளைகள்!
அம்மாவுக்குத் தெரியும்..
இன்னும் வெடிக்காத
என் கருவறையின் சாபம்..
அந்தரத்தில் மிதக்கிறேன்.
அனாதையைப் போல அலைகிறது
என் பிறந்தவீட்டு கனவுகள்.
வீடு என்பது வெறும் அறைகளும்
மாடியும் மட்டுமா..
வீடு என்பது சொத்தின் மதிப்பாக
நீங்கள் பத்திரப்படுத்திப் பூட்டி
வைத்திருக்கும் பட்டாவிலா இருக்கிறது!
வீடு என்பது…
வீடு என்பது..
தாயின் கருவறை.
தந்தையின் நிழல்
.
பணத்தின் வாசனையை மட்டுமே
அறிந்தவர்களுக்கு
வீட்டின் வாசனை எப்படி தெரியும்?
என் யெளவனத்தை சுமந்திருக்கும்
வீட்டின் கதவுகள் ..
ஊமையாகிவிட்டன.
என் கனவுகளை தூக்கிச் சுமந்த
வீட்டின் மொட்டைமாடி
வெறிச்சோடி கிடக்கிறது.
கர்ண புத்திரியாய்..
காத்திருக்கிறேன்..
அப்பாவின் வாரிசுகளே..
உங்களுக்காக ..
தாயிடம் கொடுத்த அந்த சத்தியவாக்கு
பலிக்கட்டும்.
காத்திருக்கிறேன்..
என்றாவது உங்களில் யாருக்கேனும்
என் உடலோ உயிரோ தேவைப்பட்டால்
அன்றும்..
கர்ணபுத்திரியாய்.. நானே..
என்னை நீங்கள் அறுத்த ரத்தச்சுவடுகளுடன்
வருவேன் உங்களுக்காக.
அப்பாவின் வாரிசுகள் வாழட்டும்.
அம்மாவின் புதல்வியர் வாழட்டும்.
அனாதையாக திரிகிறது..
அம்மா..
நீ அறிந்தே சுமந்த
சாபவிமோசனத்தின் கடைசித்துளி..
நதியில் பெருவெள்ளம்
மூழ்கி மூழ்கி கரைந்துவிட வேண்டும்
தாயே... தாமிரபரணியே....
நின்னைச் சரணடைந்தேன்.