Tuesday, December 21, 2021

அண்ணாவின் அசாத்தியமான உழைப்பு


 

"ஒரு மாதத்தில் 145 கூட்டங்கள்,

ஒரு நாளில் 27 கூட்டங்கள்!

ஒரு மனிதனின் அசாத்திய உழைப்பு"

அண்ணா நெல்லையில் பேசுவதைக் கேட்பார்கள்,
அதன் பின் தென்காசியில் கூட்டம் என்றால்
தம்பிகள் மட்டுமல்ல, கட்சி சார்பில்லாதவர்களும்
தென்காசி கூட்டத்திற்கு வாடகைக் காரில் ஏறிக்கொண்டு
சாலையில் பறப்பார்கள். காரின் பின்பக்கத்தில்
இருக்கும் இருக்கைகளை எடுத்துவிடுவார்கள்.
இருக்கை இருந்தால் அதில் மிஞ்சிப்போனால்
நாலு அல்லது ஐந்துபேர்தான் பயணிக்க முடியும்.
இருக்கையை எடுத்துவிட்டால்
பத்து முதல் பதினைந்துபேர் பயணிக்க முடியும்.
எப்படினு அன்று புரியவில்லை.
ஆனால் மும்பை டிரெயினில் தினமும் பயணிக்கும்போது
வாழ்க்கை அதையும் கற்றுக்கொடுத்தது!
ஏன் ஒரே மனிதர் பேசுகின்ற எல்லா கூட்டத்திற்கும்
இந்த மனிதர்கள் ஓடினார்கள்? கட்சிகள்
இன்று பிரியாணி பொட்டலமும் தினக்கூலியும்
கொடுத்து சேர்க்கின்ற கூட்டத்தை மட்டுமே
அறிந்தவர்களுக்கு நான் சொல்லும் கூட்டம்
நம்ப முடியாததாகக் கூட இருக்கும்.
இன்று அவர்களை எல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்..
அண்ணாவைக் கடுமையாக விமர்சித்தவர்களும் கூட
அவருடைய கூட்டத்தில் அவர் பேசுவதைக் கேட்க ஓடினார்கள்.


இன்று தலைவர்களுக்கு உரைகள் தயாரிக்கப்படுகின்றன.
பயிற்சி கொடுக்கப்படுகிறது.
சொற்பொழிவாளர்களாக ஒரு சொற்பொழிவுக்கு
இலட்சக்கணக்கில் வாங்குபவர்களும்
கதைகள் , உதாரணங்கள் , அவ்வப்போது சொல்லும்
மேற்கோள்கள் என்று ஒரு டைரி வைத்திருப்பார்களோ
என்னவோ..
அதே அரைத்தமாவை அரைத்துக்கொண்டிருப்பார்கள்.
நமக்கு அதெல்லாம் பழகிவிட்டது.
ரசிக்கவும் பழகிவிட்டோம்.
ஆனால்...அண்ணாவின் மேடைப்பேச்சு
மிகவும் தனித்துவமானது.
அவர் ஓர் ஊரில் பேசிய விஷ்யத்தை
இன்னொரு ஊரில் பேசியதில்லை.
பேசியதை திரும்ப திரும்ப பேசும் வழக்கம்
அவரிடம் இல்லை, இல்லவே இல்லை.
ஆனால் அவர் ஒரே அரசியல் கருத்தைத்தான்
எல்லா மேடைகளில் பேசிக்கொண்டிருந்தார்.
இந்த மேடையில் நெப்போலியன் என்றால்
அடுத்த மேடையில் ரஷ்ய புரட்சியைப் பற்றிப் பேசுவார்.
(இதெல்லாம் பிற்காலத்தில் அப்பாவும்
அப்பாவின் நண்பர்களும் தங்களுக்குள்
பேசிப்பேசி அசைப்போட்டுக்கொண்ட
உரையாடல்கள் வழி அறிந்தது . )
அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றில்
நான் இப்போதும் பிரமிப்புடன் காணும் நிகழ்வுகள்
பல உண்டு. அதில் ஒன்று :
1949 செப்டம்பரில் திமுகவை என்ற அரசியல் கட்சியை
உருவாக்கிய அண்ணா, 1950 மே மாதத்திற்குள் ,
அதாவது 9 மாதங்களில் 2300 க்கும் அதிகமான
கூட்டங்களில் பேசி இருக்கிறார்.
கணக்குப் பார்த்தால் ஒரு மாதத்திற்கு 145 கூட்டம்,
ஒரு நாளில் 27 கூட்டங்களில் பேசி இருக்கிறார்..
காலை 5 மணிக்கு அவர் பேசிய கூட்டங்கள் உண்டு.
நான் அறிந்தவரை இந்தளவுக்கு பரப்புரை செய்த
ஒர் அரசியல் கட்சி தலைவர் யாருமில்லை!
அவருடைய உழைப்பு என்பது அசாத்தியமானது.
எனக்கு இன்று நினைத்தாலும்
பிரமிப்பாக இருக்கிறது.

என்ன திடீர்னு அண்ணா பற்றி ?
சரவணா...
அண்ணா என்பது வெறும் பெயர் மட்டுமல்ல.
இதைச் சொல்வதற்கு எனக்கு நாள் கிழமை எல்லாம்
பார்க்க வேண்டியதில்லை.
மறந்துகொண்டே இருப்பது தமிழன் இயல்பு.
மறந்ததை நினைவூட்டிக்கொண்டே இருப்பது
எம் கடமை.

3 comments:

  1. மக்களோடு வாழ, அடித்தட்டு மக்களின் வாழ்வை அறிந்து கொள்ள, மேடைகள் அவருக்கு ஒரு கருவி என்பது நான் உணர்ந்த அவரது மறுபக்கம்! இதை நினைவுறுத்திய உங்கள் பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  2. அண்ணா என்று சொல்லுவதை அவரை பேரறிஞர் அண்ணா என்று அழைப்பது தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். தங்களின் பதிவு மிக அருமை வாழ்த்துக்கள். பகுத்தறிவு பேராசான் தந்தை பெரியார் அவர்களின் தலைமகன், போர்வாள், திமுக அமைச்சரவை தந்தை பெரியார்க்கு சமர்ப்பணம் என்று சொன்னவர்.என் தலைவர் ஒருவரே அது தந்தை பெரியார் அவர்கள் மட்டுமே என்று துணிச்சலாக முழங்கியவர். திராவிடம் வெல்லும்.

    ReplyDelete
  3. அண்ணா என்று சொல்லுவதை அவரை பேரறிஞர் அண்ணா என்று அழைப்பது தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். தங்களின் பதிவு மிக அருமை வாழ்த்துக்கள். பகுத்தறிவு பேராசான் தந்தை பெரியார் அவர்களின் தலைமகன், போர்வாள், திமுக அமைச்சரவை தந்தை பெரியார்க்கு சமர்ப்பணம் என்று சொன்னவர்.என் தலைவர் ஒருவரே அது தந்தை பெரியார் அவர்கள் மட்டுமே என்று துணிச்சலாக முழங்கியவர். திராவிடம் வெல்லும்...ரவிச்சந்திரன் மும்பை பகுத்தறிவாளர் கழகம்

    ReplyDelete