Tuesday, December 14, 2021

சத்ரபதி சிவாஜி மகாராஜாவும் பால்காரியும்


 சத்ரபதி சிவாஜி மகாராஜாவும் அவளும்.

சத்ரபதி சிவாஜி மகாராஜாவை கோட்டைகளின் மன்னாதி மன்னன்

என்று வரலாறு சொல்வது மிகவும் சரி. அவர் ஆட்சிக்கு உட்பட்டவை சற்றொப்ப 360 கோட்டைகள் ) ஒவ்வொரு கோட்டைகளும்

அதைச் சுற்றி அவர் அமைத்திருந்த பாதுகாப்பு அரண்களும்

கோட்டை மதில்களும் அகழிகளும் மலையின் உயரமும் பூகோள

அமைப்பும் பிரமிப்பு தருகின்றன. தன் நாட்டின் பூகோள ரீதியான

அமைப்பை தனக்கு மிகவும் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு

தன் சாம்ராஜ்யத்தை  நிறுவிய அரசனாக சிவாஜி இந்திய வரலாற்றில்

முதன்மையானவராக சிவாஜியை முன்னிறுத்தலாம்.

இன்றும் அவர் கோட்டைகள் பார்வையாளர்களுக்கு பிரமிப்பூட்டுகின்றன.

ஆனால் சிவாஜியின் கோட்டைகளை அதன் உயரங்களை அதன் காவல்

அரண்களை ஒரு சாதாரண பெண் வென்றெடுத்தாள் என்பதும் அதை

சிவாஜி கொண்டாடியதுடன் அவள் பெயரால் அதே கோட்டையில்

அவள் கடந்து சென்று பகுதியில் ஒரு மதில் சுவறைக்கட்டினார் என்பதும்

புனைவல்ல, வரலாறு. இது சிவாஜியின் தலை நகரான ராய்காட் கோட்டையின் கதை.

    அவள் பெயர் ஹிர்கானி (Hirkani). அவள் ஆயர்குலப்பெண். ஒவ்வொரு நாளும் மலையடிவாரத்திலிருந்து பால் மற்றும் மோர் தலையில் சுமந்து வந்து கோட்டையில் கொண்டுவந்து விற்றுவிட்டு மாலையில் தன் மலையடிவார குடியிருப்புக்கு போய்க்கொண்டிருந்தவள், ஒவ்வொரு நாளும் மாலையில் கோட்டையின் கதவுகள் சூரிய அஸ்தமனத்திற்கு முன் சற்றொப்ப மாலை 6 மணியளவில் மூடப்பட்டுவிடும். அதற்குள் மலையடிவாரத்திலிருந்து கோட்டைக்கு வந்தவர்கள் தங்கள் வேலையை முடித்துவிட்டு அந்த வாயில் வழியாக இறங்கிவிடுவார்கள். ஒரு நாள் எதோ ஒரு காரணத்தால் பால்காரி ஹிர்கானிக்கு சற்று தாமதமாகிவிடுகிறது. கோட்டை வாயில்கள் மூடப்பட்டு’விட்டன. அவள் வாயில்காவலர்களிடம் மன்றாடுகிறாள்.ஆனால் பாதுகாப்பு மன்னரின் ஆணையை மீறமுடியாது என்று அவர்கள் மறுத்துவிடுகிறார்கள். வீட்டில் அவள் கைக்குழந்தையை விட்டுவிட்டு வந்திருக்கிறாள். அவள் செய்வதறியாது திகைக்கிறாள். அவளுக்கு எப்படியும்

தன் வீட்டுக்குத் திரும்பியாக வேண்டும். 

அவள் குழந்தையிடம் போயாக வேண்டும். 

அவள் அந்தக் கோட்டையின் மறுபக்கம் வருகிறாள். 

இருட்டிவிடுகிறது !

அங்கே மதில்கள் இல்லை. 

காரணம் யாரும் ஏறவொ இறங்கவோ கற்பனை

கூட செய்யமுடியாத செங்குத்தான கரடுமுரடான மலைப்பகுதி அது.

அவள்  மலையேறி பயிற்சி பெற்றவளும் அல்ல. 

ஆனாலும் அவள் குழந்தையின் முகம் 

அந்த அழுகுரல் அவளை எதுவும் யோசிக்கவிடவில்லை.

அவள் அந்த ஆபத்தான பகுதியின் வழியாக இறங்கி தன் வீட்டுக்குப் போய்விடுகிறாள்.. ! மறு நாள் காலை கோட்டையில் வாயில் கதவு திறக்கும்போது அவளை அடையாளம் கண்டுவிட்ட கோட்டை வாயில்

காவலர்கள் நேற்று கோட்டை கதவடைத்தப் பிறகு இவள் எப்படி

மலையடிவாரத்திற்கு சென்றிருக்க முடியும் ?என்று ஐயுறுகிறார்கள்.

ஒரு பெண் .. ஒரு பால்காரி மலை இறங்கி சென்றாள் என்பதை நம்ப

மறுக்கிறார்கள். 




அவளை அரசன் முன் கொண்டு நிறுத்துகிறார்கள்.

சிவாஜி மகாராஜா அவள் மலை இறங்கிய கதையைக் கேட்கிறார்.

அப்பகுதியைப் பார்வையிடுகிறார். எவராலும் ஏறவோ இறங்கவோ’

முடியாத மலைப்பகுதி என்று எதுவுமில்லை என்பதை அப்பெண்

அவருக்கு உணர்த்திவிட்டாள். தாய்மையின் பெருமையாகவும்

இதை மராட்டியர்கள் தங்கள் பாடல்களில் கூத்துகளில் கொண்டாடுகிறார்கள்.




இன்றும் ராய்காட் கோட்டையில் அவள் இறங்கிய பகுதியில் கட்டப்பட்ட

மதில்சுவருக்கு ஹிர்கானி மதில் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இது திரைப்படமாகவும் வந்திருக்கிறது.

ஹிர்கானிகள் – பெண்கள் - சாதாரணமானவர்கள் தான்.

ஆனால் தேவைப்படும்போது அவர்களின் செயல்

அசாதாரணமானதாகிவிடும்!

 

 

No comments:

Post a Comment