Tuesday, May 29, 2018

கொஞ்சம் உளற வேண்டும்..


கொஞ்சம் உளற வேண்டும்.
உளறுவது சுகமானது.
தண்ணிப் போட்டு உளறுவது என்பது சினிமாத்தனமானது.
ம்கூம்.. அப்படி எந்த மப்பும் இல்லாமல்
மனம் போகிற போக்கில் உளற வேண்டும்.
உளறுவதில் எதாவது தத்துவம் இருப்பதாக
நீங்கள் சிலாகித்தால் நல்லது.
தத்துவங்கள் எல்லாம் உளறல்கள் தான்
என்பதை தத்துவவாதிகளும் எப்போதாவது
ஒத்துக் கொள்கிறார்கள்.
கொஞ்சம் உளற வேண்டும்.
உளறும் போது கெட்ட வார்த்தைகளைச் சேர்க்கலாமா கூடாதா
இதுவும் ஒரு பட்டிமன்றத்திற்கான    தலைப்பு தான்.
அதற்காக பட்டிமன்றமே உளறல்களின் மேடை என்று
சொல்லிவிட முடியுமா..?
என் பட்டிமன்ற நண்பர்கள் கோவித்துக்கொள்ள மாட்டார்களா?
அவர்களுக்காக எத்தனை முறை தொலைக்காட்சி பட்டிமன்றங்களைப்
பார்த்து அவர்கள் போட்டிருந்த சட்டைக்கலர் முதல்
அவர்கள் காப்பி அடித்த ஜோக் வரை
ரசித்திருக்கிறேன். 
எனக்கு என் நண்பர்கள் அதிமுக்கியம்.
அதனால் பட்டிமன்றங்களை விட்டுவிடுவோம்.
தலைவர்கள் தங்கள் உளறல்களுக்காகவே
மா நாடுகள் நடுத்துவதாக தொண்டர்கள்
ரகசிய செய்தி அனுப்புகிறார்கள்.
பாவம் அவர்கள்..
பூனை மீது மதில் ஏறி குதிப்பதற்கெல்லாம்
கை தட்டும் பாக்கியசாலிகள் அவர்கள்.

அவள் பேரழகி என்று அவன் உளறுவதும்
நீ யே என் காதல், 
காதல் காதல் காதல்
காதல் இல்லையேல் சாதல் சாதல் என்று
அவள் உளறுவதும் 
அபத்தமாக இருந்தாலும் 
காதலர்களுக்கு உளறுவதற்கு லைசன்ஸ் உண்டு.

கணவனின் உளறலை மனைவியோ
மனைவியின் உளறலைக் கணவனோ
காது கொடுத்து கேட்காமல் இருப்பது
இருவருக்கும் நல்லது.
தற்காத்து.. என்று எழுதிய வள்ளுவன் கூட
சொற்காத்து என்று சொல்லுவது
இந்த உளறலுக்குப் போடுகிற கண்டிஷனாக
இருக்குமோ என்று பெண்ணியவாதிகள்
கொதித்து எழுந்துவிடக்கூடாது.
ஆண்களின் பார்வையில் 
உளறலுக்கு பொருள் காண்பது 
அகராதியுடன் நின்றுவிடும் அபாயம் இருக்கிறது.

இன்னும் உளறிக்கொட்ட நிறைய இருக்கிறதா…?
வாருங்கள்.. உளறுவோம்.
உளறுவது உடம்புக்கு மட்டுமல்ல
உள்ளத்திற்கும் நல்லதாம்.
வாருங்கள் .. கொஞ்சம் உளறுவோம்.



4 comments:

  1. உளறல்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். வித்தியாசமான பதிவு.

    ReplyDelete
  2. நல்லா இருக்கு!. எல்லா கொஞ்சல்களுமே உளறல்கள்தானே!

    ReplyDelete
  3. "வாருங்கள்.. உளறுவோம்.
    உளறுவது உடம்புக்கு மட்டுமல்ல
    உள்ளத்திற்கும் நல்லதாம்." என்பதில்
    உண்மை இருக்கிறதே!

    ReplyDelete