Thursday, February 16, 2023

பித்துப்பிடித்த பெருநகரம்

 

பெரு நகரம் தூக்கமின்றி தவிக்கிறது..

கண்ணகி நகரப் பேருந்தில்
பெண்களுக்கு இலவசம்.
கிழிந்து சீழ் வடியும் யோனிபீடங்கள்
அதிகாரவெளியின் நாற்றம்.
ஆடைகளின்றி அம்மணமாக
அலைகிறது பெருநகரம்.
கிழிந்து தொங்கும் ஆடைகளுடன்
பித்துப்பிடித்த பெருநகரத்தின்
புதல்வியர்
பிரசவ வலியில் துடிக்கிறார்கள்
வாழ்க வாழ்கவென அலறலுடன்
பிள்ளைகள் பிறக்கின்றன.
திரும்பிப் பார்த்த
லோத்தின் மனைவி
உப்பு சிலையாக சபிக்கப்பட்டாள்.
பெருநகரம் வந்த பெருந்தேவி
மாசாணி அம்மன்
தற்கொலை செய்து கொள்கிறாள்.
சுவரொட்டி மனிதர்களின்
முட்டைகளை அடைகாக்கும்
கோழிப்பண்ணைகள்
பெருநகரத்தின் எதிர்காலம்.
இராட்சதப் பல்லிடுக்குகளில்
தொங்கிக் கொண்டிருக்கும்
தமிழ்த்தேசம்.
துரத்திக்கொண்டே வரும்
அந்த சுவரொட்டி மனிதர்களின்
பொன்னாடைகளைத் தின்று
பசியாறும் கழுதைகள்
உதைக்கின்றன.
பதாகையிலிருந்து
நீண்ட இராட்சதக் குறிகள்
இரவும் பகலும் துரத்துகின்றன.
பெரு நகரம் பித்துப்பிடித்து
அலைகிறது.
காமட்டி புரத்தின் குடிசைகள்
அவள் காயத்திற்கு
மருந்தாக..


#புதியமாதவி_20230217

#puthiyamaadhavi_poems

1 comment:

  1. பெண்கள் வலியைப் பிரதிபலிக்கும் நல்லதொரு கவிதை

    ReplyDelete