Friday, January 11, 2019

அடைமொழிகள்


அடைமொழிகளை நான் வெறுக்கிறேன்.
இதற்கு யாரைக் குற்றம் சொல்வது?
அடைமொழிகளை அள்ளி வீசும் அரசியல்
அடைமொழிகளில் வாழ நினைக்கும் முகவரிகள்
அடைமொழிகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும்
கவிமன ங்கள்..
போதாமையை எப்போதும் அடைமொழிகளால்
நிரப்பிக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகம்
இதை எல்லாம் மவுனமாக ஏற்றுக்கொண்டிருக்கும்
நீங்கள்.. உங்களில் ஒருத்தியாக இருக்கும்  நான்
.. எல்லோரும் தான் காரணம்.
இது சகிப்புத்தன்மை அல்ல.
இது கையறு நிலை..
இது ஒருவகையான பிழைப்பு வாதம்..
இது ஒருவகையான பித்தலாட்டம்.
இது ஒரு வகையான மொழிச்சிதைவு..

என் கஞ்சிக்கலயத்தில் உப்பு போல
அளவாக இருந்த அடைமொழியை
அவரவர் தங்கள் சுயலாபங்களுக்காக
விற்பனை செய்தார்கள்.
சந்தையில் விற்பனையாகும் சரக்கு மாதிரி
அடைமொழி விற்பனை செய்யப்பட்ட து.
தமிழ் மொழியின் ஒவ்வொரு சொல்லும்
 அதற்கான வரலாற்றையும் வீரியத்தையும்
இழந்துப் போனது .. இதைக் கண்டு எந்த ஒரு
தமிழ்த் தேசியமும் கொதிக்கவில்லை!
என் கஞ்சியில் உப்பை அள்ளி அள்ளிக்
கொட்டுகிறார்கள். என் பசி தீர்க்கும்
பழையச்சோறு.. அவர்கள் கொட்டிய
உப்பில் கரைந்து என் பசியாற்ற முடியாமல்
என் நாக்கில் பட்டவுடன்த்தூஎன்று
துப்ப வைக்கிறது.
த்தூ.. த்தூ.. “ என்று காறி காறித் துப்புகிறேன்.
பசியில் துடிக்கிறேன்.
என் கஞ்சியில் இன்னும் இன்னும் தண்ணீரை
ஊற்றி ஊற்றி அவர்கள் கொட்டும் உப்பின்
வீரியத்தைக் குறைத்துவிடலாம் என்று
பெரும் முயற்சி செய்கிறேன்.
என்  நிலத்தடி நீர்இல்லை.
அதையும் விற்றவர்கள் தான்
என் மொழியை  விஷமாக்கியவர்கள்.
ஒரு வாய்க்கஞ்சி..
என் உழைப்பு..
என் மொழி..
என் ஆதித்தாய் தன் கருவறையில்
சுமந்து காப்பாற்றிய என் தாலாட்டுமொழி..
என் பனிக்குட வாசனையின் மொழி..
அடைமொழிகளால் அசிங்கப்பட்டு
தன் அர்த்தங்களை இழந்து என் மொழி
சிதைக்கப்படுகிறது..
இந்த அரசியலை .. மொழியின் மீது
ஏற்பட்ட பண்பாட்டு தாக்குதலை
மொழியின் மீது ஏறி அமரும் ஆதிக்கத்திமிரை
என் சொற்களை கொச்சைப்படுத்தும்
அரசியலை
இதைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும்..
இனியும் பொறுப்பதற்கில்லை.. 
கொலை வாளினை எட டா



No comments:

Post a Comment