Tuesday, January 22, 2019

தனியறையும் நானும்



மும்பையிலிருந்து வெளிவந்துக்கொண்டிருந்த
வார இதழ் “தமிழ்ப் போஸ்ட் “ எனக்காக அவர்களின்
ஒன்றரை பக்கங்களை ஒதுக்கித்தந்தார்கள்.
என்ன எழுத வேண்டும் என்றெல்லாம் எதுவும்
சொல்லவில்லை. எனக்கு முழு சுதந்திரமும்
கொடுத்த ஆசிரியர் ராஜாவாய்ஸ் அவர்களுக்கு
நன்றி. அப்போது தான் ஒரு சோதனை முயற்சியாக
தனியறை என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்தேன்.
தனியறை 1 , 2 , 3 என்று 26 தனியறைகள் வார வாரம்..
அதுவும் எவ்வித முன் தயாரிப்புகளும் கிடையாது.
வியாழக்கிழமை போன் வரும். வெள்ளிக்கிழமை
மாலை விளக்கு வைப்பதற்குள் தமிழ்ப் போஸ்ட்
ஆபிசிலிருந்து இன்னொரு போன்.. 
அன்றிரவு தனியறை என்னுடன் பேசும்..
தனியறை கதைகளின் பக்க அளவு
மீற முடியாத து. இன்னும் சொல்லப்போனால்
 அது எனக்குஒரு சவாலான வரையறையும் தான்.
 நீட்டி எழுதுவது எளிது.
எதையும் சுண்டக்காய்ச்சி கொடுப்பது..கடினம்.
ஆனாலும் பக்க அளவு ஏற்கனவே மனசில்
 பதிந்துவிட்ட தாலோஎன்னவோ..
தனியறை தன்னை அந்த எல்லைகளுக்குள்
நிறுத்திக்கொண்ட து.
தனியறையின் சில கதைகள் 
சில பிரச்சனைகளையும் சந்தித்தன.
 தங்களின் கதையைத்தான் நான் எழுதியிருக்கிறேன்
என்று என்னை மிகவும் கடுமையாக
 போன் போட்டு திட்டுவார்கள்.
அதையும் ரசித்துக்கொண்டேன். 
காரணம் அது உண்மையல்ல என்பதால் தான். 
ஒரே கதையை ஐந்தாறுபேர் என்வீட்டு கதை
என்றால் அது எப்படி? 
என்பதை மெல்ல மெல்ல அவர்களும்
 புரிந்து கொண்டார்கள் .. 
திடீரென 26 கதைகள் வந்தவுடன்
நிறுத்துக்கொண்டேன். எதுவும் தானே தொய்வடைவதற்குள்
அய்யோ ஏன் நிறுத்திவிட்டார்கள்? என்று வாசகர் 
நினைக்கும் போதே தொடரை 
நிறுத்துவது நல்லது
என்பது என் பத்திரிகை அனுபவம்.

தனியறை குறித்து

எழுதுவதற்கு ஒரு புதினம் அளவுக்கு அனுபவங்கள் 
இருக்கின்றன. தனியறை ஏக்கப்பெருமூச்சுகளில்
எம் இளமையும் காதலும் காம மும் வாழ்வின் 
அவிழ்க்க முடியாத தருணங்களும் கலந்திருக்கின்றன.
தனியறை எம் மக்களின் கதை. 
எம் தாய் தந்தையரின்கதை. 
புலம் பெயர் வாழ்வில் எம் தாராவியின் ஏக்கப் பெருமூச்சு.
இப்போதும் தாராவி குடிசை மேம்பாட்டு வாரியம்
புறாக்கூண்டு போல 250 சதுரஅடி வீடு
 கட்டிக்கொடுப்பதாக கூறுகிறார்களே…
அதன் அரசியல் பின்னணி..
தனியறை… வெறும் அறையல்ல.
தனியறை .. ஒரு வரலாறு.
தனியறை .. ஓர் அரசியல்
.
தனியறை.. புத்தகமாக மருதா வெளியீட்டில்
வந்த போது..
“தனியறை போராட்ட த்தில்
உலக வரைபட த்தில்
புள்ளிகளாக சிதறிக்கிடக்கும்
என் உடன்பிறப்புகளுக்கு”
என்று எழுதி சமர்ப்பணம் செய்திருந்தேன்
.
தனியறை என்னுரையிலிருந்து …
பிரபஞ்சத்திற்கு சூரியமண்டலம் தனியறை
சூரியமண்டலத்திற்கு பூமிஉருண்டை தனியறை
பூமி உருண்டைக்குப் பனித்துளி கூட தனியறை
ஆகாயத்திற்கு மேகக்கூட்டம் தனியறை
மேகங்களுக்கு மலைமுகடு தனியறை
மலைக்கெல்லாம் மழைத்துளியே தனியறை
மழைத்துளிக்குக் கடலடியில் தனியறை
கடலுக்கு அலையெல்லாம் தனியறை
அலைக்கு மண்மீது தனியறை
மண்ணுக்கு உயிரெல்லாம் தனியறை
உயிருக்குத் தாயின் கருவறையில் தனியறை.
மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழும் நாட்கள்
அவரவர்களுக்கான தனியறைக் கதவுகளைத்
தேடித் தேடி தொடர்கிறது.
தனியறை தேடும் போராட்டத்தில்
தனித்தனியாகப் பிரிந்துபோன
அண்ணன் தம்பி, அக்கா தங்கை, கணவன் மனைவி,
பெற்றேர் பிள்ளைகள்.
உடைந்துப்போன கண்ணாடித் துண்டுகளாய்
தனியறைக் கதவுகளின் முன்னால்
சிதறிப்போன உறவுகள்.
பேரரசுகள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள்
வரலாறு நெடுகிலும் உண்டு.
காதல், பாசம், அதிகாரம், ஆளுமை
இவற்றை மட்டுமல்ல
மனித நாகரிகத்தில்
பண்பாட்டு மாற்றங்களையும் சிதைவுகளையும்
தனியறைக் கதவுகள்தான் தீர்மானிக்கின்றன.
சிந்திக்க சிந்திக்க
கண்களை அகல விரித்து
ஆகாயத்தைப் பார்த்து பிரமித்து நிற்கும்
சிறுமியாக நான்.
என் முன்
தனியறை ஒரு பிரபஞ்சமாக விரிகிறது.,
இப்பிரபஞ்சத்தில் நான் எழுதியது
என்னை நனைத்த
இந்த மா நகர மழைத்துளியின்
சிறுதுளியைத்தான்.
(முகனூல் வாசிப்போம் குழுவில் தனியறை குறித்து
இன்று விமர்சனம் எழுதி இருக்கிறார் தோழி மஹா.
தனியறை மீண்டும் என்னுடன் பேசிக்கொண்டிருக்கிறது.
வாசிப்போம் குழுவினருக்கும் நன்றி)

No comments:

Post a Comment