Sunday, February 3, 2019

கலாச்சார இந்துவும் இன்றைய அரசியலும்


"கலாச்சார இந்து"
இந்த அடையாளம் நேருவுக்கு தேவைப்படவில்லை.
ஆனால் ராகுல்காந்திக்கு தேவைப்படுகிறது.
ராகுல் ஜி தன்னை கலாச்சார இந்து என்று
சொல்லிக்கொள்ளலாம்.. நன்றி ஜெ.மோ.
I am English by education, Muslim by culture
 and Hindu merely by accident,”
(JUST BORN AS A HINDU BY ACCIDENT)

நேரு தன்னைப் பற்றி இப்படி 
சொல்லிக்கொண்ட தாக பிஜேபியின்
ஐ.டி. துறை அமித் மாளவியா 2015ல்
தன் டுவிட்டரில் டுவிட்டினார்!
இந்த டுவிட்டல் வைரஸாக பரவியது.
அதன் பின் 2018 செப்டம்பரில் பிஜேபி
சார்பாக பேசியவரும் - ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சியில் 
இதே வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினார்.
ஆனால் நேரு எங்கே இதைப் பேசினார்,
எந்த இட த்தில் என்றெல்லாம் இவர்கள்
சொல்லவில்லை. அது அவர்களின்
நோக்கமும் அல்ல. 

நேரு குடும்பத்தைப் பற்றி எழுதப்பட்ட புத்தகம்

பி ஆர் ந ந்தா எழுதியது. மோதிலால் & ஜவஹர்லால்,
அப்புத்தகத்தில் இந்து மகாசபை தலைவர்
என் பி காரே நேருவைப் பற்றி சொன்ன விமர்சன
வரிகள் தான் மேற்கண்ட வரிகள். நேரு எவ்விட த்தும்
தன்னைப் பற்றி இப்படிசொல்லிக்கொள்ள வில்லை!!

இனி, அண்மையில் வாசித்த இன்னொரு புத்தகம்

ஜெயமோகன் எழுதிய “கலாச்சார இந்து”.
அப்புத்தகத்திலும் பக் 28 & 29 ல் நேருவைப் பற்றிய
இன்னொரு கருத்து வைக்கப்படுகிறது.

“ என் நினைவு சரி என்றால் கலாச்சார இந்து

என்ற சொல்லாட்சியை நான் நேருவின் எழுத்துகளில்
வாசித்திருக்கிறேன்” என் கிறார் ஜெ.மோ.
அவரும் அதற்கான எந்த தரவுகளையும் கொடுக்கவில்லை.
மேலும், ஜெ.மோ அவர்கள் 
“நேரு தன்னை நாத்திகர் என்று உணர்ந்தவர்.
அவர் நாத்திகம் என்பது ஐரோப்பிய தாராளவாதச்
சிந்தனகளில் பின்புலம் கொண்ட து……..
ஆனால் இந்தியப் பண்பாட்டின் துளியாகவே
நேரு எப்போதும் தன்னை உணர்ந்தார். இந்தியப்
பண்பாட்டின் த த்துவச் சிந்தனைகள். அழகியல்,
உணர்வு நிலைகள் ஆகியவற்றுடன் அவர் பின்னிப்
பிணைந்திருந்தார். அவை அடிப்படையில் இந்துப்
பாரம்பரியம் சார்ந்தவை என்றும் அவர் அறிந்திருந்தார்.
அவற்றை நிராகரிக்க தன்னால் முடியாது என அவர்
உணர்ந்தார்.
அதன் பொருட்டு அவர் கண்ட டைந்த அடையாளமே
கலாச்சார இந்து என்பது…”

என்று ஜெ.மோ நேருவை
 ஒரு கலாச்சார இந்துவாக வடிவமைக்கிறார்.
நேரு எவ்விட த்திலும் தன்னை ஒரு கலாச்சார
இந்து என்று பிரகடனப்படுத்திக் கொள்ளவில்லை.
( அப்படி சொல்லி இருந்தால் தெரியப்படுத்துங்கள்
தோழர்களே.. ) 
ஆனால் இந்துமத த்தின் எந்த ஆசாரங்களையும் 
பின்பற்றாதவன் ஒரு கலாச்சார இந்து
 என்ற முடிவுக்கு வருவோம் என்றால் 
நேரு கலாச்சார இந்து தான்..!
அதில் ஐயமில்லை.
மேலும்
இந்திரகாந்தியின் இளைய ம ருமகள், அவர்
கணவர் சஞ்சய்காந்தியின் அகால மரணத்திற்குப்
பின் (சொத்து வழக்கு என்று நினைக்கிறேன்) 
நீதிமன்றத்தில் இந்திராகாந்தி இந்துவல்ல
 என்று வழக்குத் தொடுத்தார்.
ஆனால் அதை விசாரித்த நீதிபதி 
1942ல் இந்திரா-பெரோஸ் திருமணப் புகைப்பட த்தை
 ஆதாரமாக கொண்டு இந்திராவின் திருமணம் 
இந்து முறைப்படி நடைபெற்ற திருமணம் 
என்று முடிவு செய்தார். அப்படியானால்
நேரு தன் மகளுக்கு இந்து முறைப்படி தான்
 திருமணம் செய்தார் என்பதும் உறுதி ஆகிறது.
இப்படியாக நேரு கலாச்சார இந்து என்று தன்னை
அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும்
கலாச்சார இந்துவாகவே இருந்தார் என்ற முடிவுக்கு
வரலாம். …
எனவே… இதனால் சொல்ல வருவது என்னவென்றால்…
காங்கிரசுக்கார ர்கள் அதிலும் குறிப்பாக
ராகுல் ஜி இனிமேல் சட்டையைத் தூக்கிக்
காட்ட வேண்டாம். நான் ஒரு கலாச்சார இந்து
என்று உரக்கச் சொல்லிக்கொள்ளலாம்.
சொல்ல வேண்டும். 

ஜெ.மோ.. ராகுல் ஜிக்காக இதை எழுதவில்லை
என்றாலும் ராகுல் ஜிக்கு “கலாச்சார இந்து”
என்ற அடையாளம் ஓட்டு அரசியலுக்கு
ரொம்பவும் வசதியாக இருக்கும்.

#cultural_hindu
#Rahul_gandhi


Friday, February 1, 2019

ஜெயமோகனின் "கலாச்சார இந்து"




ஜெயமோகனின் கலாச்சார இந்து
விஷ்ணுபுரம் இலக்கிய நிகழ்வுக்கு
சென்றிருந்தப் போது வாங்கிவந்தப்
புத்தகங்களில் ஒன்று ஜெ.மோவின்
கலாச்சார இந்து. ஜெ.மோ என்ன சொல்லியிருப்பார்
என்பதை புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டுவதற்கு
முன்பே நம்மால் ஊகிக்க முடிகிறது.
ஜெ.மோ வின் இந்துமதம் குறித்தப் புரிதல்களும்
கோர்வையாக அதன் மாற்றங்களை அல்லது
கலவைகளை தொகுத்திருக்கும் விதமும்
பாராட்டுதலுக்குரியது
வாசகரின் இந்துமதம்
சார்ந்தக் கேள்விகளுக்கான அவருடைய
விளக்க உரை தான் இக்கட்டுரைகள்.
தனக்குத் தோதான இந்துமதக் கருத்துகளைச்
சொல்ல அதற்கேற்ற வினாக்களை முன்வைத்து
எழுதப்பட்டிருக்கிறது. அந்த வினாக்கள் பொதுஜனப்
புத்தியிலிருந்து எழுகின்றன.
கலாச்சார இந்து பற்றிய கட்டுரைகளில் ஜெ.மோ
சிலாகிக்கும் சில விடயங்கள்..

*இங்குள்ள எந்த வழிபாடும் இந்து மத த்துடன்
உரையாடிக் காலப்போக்கில் அதனுடன் இணைந்து
கொண்டே இருக்கும். இப்படி இணைவதன் மூலமே
இந்துமதம் உருவாகி முன் செல்கிறது. (பக்18)
*எந்த சிறுதெய்வமும் இந்துப் பொதுமரபில்
எங்கோதான் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக
முற்றிலும் வெளியே இருக்காது. தலித்துகளின்
தெய்வங்கள், பழங்குடிகளின் தெய்வங்கள் கூட இதுவே
உண்மை. (பக் 21)

*பிரம்ம ம் என்ற பிரமாண்டமான தரிசனத்திலிருந்து
கைக்குச் சிக்கும்படி அள்ளப்பட்ட சிறிய தரிசன ங்களே
சிவன் விஷ்ணு முருகன்  போன்ற நம் தெய்வ உருவகங்கள்.
ஞ்சானிகள் தேடுவது கடவுள் என்ற நம்பிக்கையை
அல்ல, கடவுள் என்ற சுய அறிதலை, சுய அனுபவத்தை.
(பக் 68)

*கோயில்களை சடங்குகளை விழாக்களை மதங்களை
இலக்கியங்களை த த்துவங்களை கலைகளை
இசையை குழந்தைகளுக்கு அளியுங்கள். அவற்றின்
மீது உங்களுக்கிருக்கும் நம்பிக்கைகள் மறுப்புகள்
ஐயங்களுடனேயே அளியுங்கள். அவர்களை மரபின்
வளமான மண்ணில் ஊன்றி வையுங்கள்.
அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வளரட்டும். (பக்90)
*எந்தப் பழங்குடி தெய்வத்தின் கதையும் இயல்பாகவே
சைவத்தில் வந்து முட்டும். இந்து மதம் என்பதே இத்தகைய
பல ஆயிரம் வழிபாடுகளின் தொகை என்பதே
இதற்கு காரணம். (பக்112)

*இந்து மத த்தின் அமைப்பே மூன்றடுக்கு முறைதான்.
கீழே நாட்டார் தெய்வங்களும் குல தெயவங்களும் அடங்கிய
வழிபாடு. மேலே பெரிந்தெய்வ வழிபாடு. அதற்குமேல்
த த்துவ தெய்வ உருவகம். இம்மூன்றும் ஒன்றுடன் ஒன்று
பிரிக்கமுடியாத படி கலந்திருக்கும். த த்துவம் பழங்குடி
வழிபாட்டை நோக்கி வரும். பழங்குடி வழிபாடு த த்துவம்
நோக்கிச் செல்லும். பழங்குடி தெய்வ பிரதிஷ்டை இல்லாத
எந்தப் பெருங்கோவிலும் தமிழ் நாட்டில் கிடையாது. (பக் 113)

ஜெ.மோ வின் இக்கருத்துகளின் தொகுப்பு
அவ்வப்போது வாசித்த கருத்துகளாக இருந்தாலும்
அவற்றை ஒரு புள்ளியில் தொகுத்து வழங்கி இருக்கும்
போது மரபு சார்ந்த ஒரு புரிதலும் கூடவே
பயணிக்கிறது. ஜெ.மோ கட்டுரைகளின் ஒரு
பக்கத்தில் இந்தப் பீடங்கள் தானே எழும்பி
நிற்கின்றன
அடுத்த நொடியில் ஜெ.மோ
எந்த இட த்திலிருந்து இதை எல்லாம் எழுதுகிறார் என்ற
எண்ணம் எழுகிறது. திரும்பிப் பார்க்கிறேன்.
ஜெ.மோ மிகச் சிறப்பாக பெருமித உணர்வுகளுடன்
சொல்லும் இந்து மத மரபில்
 ஜெ.மோ உட்கார்ந்திருக்கும்
இடம் வசதியான இருக்கை. அவருடைய இடம்
அவருக்கு அவர் வாசிப்பிலோ எழுத்திலோ கிடைத்த
இடமல்ல. அது அவருக்கு அவர் பிறப்பின் வழி
வாய்க்கப்பெற்ற பெரும்பேறு.
வசதியாக அமர்ந்திருக்கிறார்.
அவருடைய இடம் இருக்கை காற்றோட்டமாக
இருக்கிறது. வாசிப்புகளும் தேடலும் கூடுதல்
அனுபவமாகி கலாச்சார இந்துவாக அவர்
எம்முடன் உரையாடுகிறார்.
வாழ்க்கைபயணம்..
இரயில் ஓடும் தண்டவாளத்தில்  கூட மாற்றமில்லை.
ஆனால் அவர் முதல் வகுப்பிலும்
எம்மைப் போன்றவர்கள் மூன்றாம் வகுப்பிலும்
பயணிக்கிறோம்.
இந்த இரயில் பயணம் அருமையானது,
அழகானது , என்று அவர் சொல்வதை
அப்படியே சொல்ல வேண்டும் என்றுதான்
நானும் விரும்புகிறேன். மூன்றாம் வகுப்பில்
மூச்சு முட்டுகிறது.
 என் கைகளையும் கால்களையும் நீட்ட முடியாது.
என் பிள்ளைகளுக்கும் அதே அதே.
இப்படித்தான் இருக்கும் இரயில் பயணம்
என்று சொல்லுகிறேன்.
அவரும் சொல்லுகிறார்..
இது நம் தொன்ம ம், இது நம் பெருமை,
இது மூன்றடுக்கு , இதுவே பிரமாண்டம்
என்று. நானும் சொல்கிறேன்
இது நம் பயணம்.. எப்படியும் போகும்
இட த்திற்குப் பத்திரமாகப் போய்விட வேண்டும்
என்று. அவர்களை அந்தக் கூட்ட நெரிசலில்
என்னுடன் சேர்த்து அணைத்துக் கொள்கிறேன்.
அவர்கள் மெதுவாக என் அணைப்பிலிருந்து
தங்களை விலக்கிக் கொள்கிறார்கள்.
ஜெ. மோ பயணிக்கும் முதல் வகுப்பு
ஜெ.மோ.. கதவுகளைத் திறக்க முயற்சி
செய்கிறார். அவருக்கும் தெரியும்..
அந்தக் கதவுகளைத் திறக்கும் சாவி
அவர் வசமில்லை என்பது.
அவர் குருவின் மன நிலைக்குப் போய்
நடிக்க முயற்சிக்கலாம்.. அத்தருணத்தில்
அது தேவையாகவும் இருக்கிறது
கதவுகள் மூடியே இருக்கின்றன.
இரயில் ஓடிக்கொண்டிருக்கிறது.
நான்  தவிப்புடன்
எம் பிள்ளைகள் இறங்கிவிட்டார்கள்..
அல்லது முதல் வகுப்பிலிருந்து தள்ளிவிடப்
பட்டார்கள்..! இரயில் ஓடுகிறது
மரம் செடி கொடி தண்டவாளங்கள்
எங்களுடன் ஓடுகின்றன.
அவர்களும் ஓடுகிறார்கள்,
நாளைஅவர்கள் நடைப்பயணமாகவே
வர வேண்டிய இட த்திற்கு வந்துச் சேரலாம்.
அல்லது யாருக்குத் தெரியும்..
இரயிலை விட வேகமாகப் பயணிக்கும்
விமானத்தில் ஏறி வந்துவிடலாம்.
வரட்டும்..
கலாச்சார இந்துவுடன் கை குலுக்குகிறேன்..
ஓம் நம சிவாய.

#கலாச்சார_இந்து




Tuesday, January 22, 2019

தனியறையும் நானும்



மும்பையிலிருந்து வெளிவந்துக்கொண்டிருந்த
வார இதழ் “தமிழ்ப் போஸ்ட் “ எனக்காக அவர்களின்
ஒன்றரை பக்கங்களை ஒதுக்கித்தந்தார்கள்.
என்ன எழுத வேண்டும் என்றெல்லாம் எதுவும்
சொல்லவில்லை. எனக்கு முழு சுதந்திரமும்
கொடுத்த ஆசிரியர் ராஜாவாய்ஸ் அவர்களுக்கு
நன்றி. அப்போது தான் ஒரு சோதனை முயற்சியாக
தனியறை என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்தேன்.
தனியறை 1 , 2 , 3 என்று 26 தனியறைகள் வார வாரம்..
அதுவும் எவ்வித முன் தயாரிப்புகளும் கிடையாது.
வியாழக்கிழமை போன் வரும். வெள்ளிக்கிழமை
மாலை விளக்கு வைப்பதற்குள் தமிழ்ப் போஸ்ட்
ஆபிசிலிருந்து இன்னொரு போன்.. 
அன்றிரவு தனியறை என்னுடன் பேசும்..
தனியறை கதைகளின் பக்க அளவு
மீற முடியாத து. இன்னும் சொல்லப்போனால்
 அது எனக்குஒரு சவாலான வரையறையும் தான்.
 நீட்டி எழுதுவது எளிது.
எதையும் சுண்டக்காய்ச்சி கொடுப்பது..கடினம்.
ஆனாலும் பக்க அளவு ஏற்கனவே மனசில்
 பதிந்துவிட்ட தாலோஎன்னவோ..
தனியறை தன்னை அந்த எல்லைகளுக்குள்
நிறுத்திக்கொண்ட து.
தனியறையின் சில கதைகள் 
சில பிரச்சனைகளையும் சந்தித்தன.
 தங்களின் கதையைத்தான் நான் எழுதியிருக்கிறேன்
என்று என்னை மிகவும் கடுமையாக
 போன் போட்டு திட்டுவார்கள்.
அதையும் ரசித்துக்கொண்டேன். 
காரணம் அது உண்மையல்ல என்பதால் தான். 
ஒரே கதையை ஐந்தாறுபேர் என்வீட்டு கதை
என்றால் அது எப்படி? 
என்பதை மெல்ல மெல்ல அவர்களும்
 புரிந்து கொண்டார்கள் .. 
திடீரென 26 கதைகள் வந்தவுடன்
நிறுத்துக்கொண்டேன். எதுவும் தானே தொய்வடைவதற்குள்
அய்யோ ஏன் நிறுத்திவிட்டார்கள்? என்று வாசகர் 
நினைக்கும் போதே தொடரை 
நிறுத்துவது நல்லது
என்பது என் பத்திரிகை அனுபவம்.

தனியறை குறித்து

எழுதுவதற்கு ஒரு புதினம் அளவுக்கு அனுபவங்கள் 
இருக்கின்றன. தனியறை ஏக்கப்பெருமூச்சுகளில்
எம் இளமையும் காதலும் காம மும் வாழ்வின் 
அவிழ்க்க முடியாத தருணங்களும் கலந்திருக்கின்றன.
தனியறை எம் மக்களின் கதை. 
எம் தாய் தந்தையரின்கதை. 
புலம் பெயர் வாழ்வில் எம் தாராவியின் ஏக்கப் பெருமூச்சு.
இப்போதும் தாராவி குடிசை மேம்பாட்டு வாரியம்
புறாக்கூண்டு போல 250 சதுரஅடி வீடு
 கட்டிக்கொடுப்பதாக கூறுகிறார்களே…
அதன் அரசியல் பின்னணி..
தனியறை… வெறும் அறையல்ல.
தனியறை .. ஒரு வரலாறு.
தனியறை .. ஓர் அரசியல்
.
தனியறை.. புத்தகமாக மருதா வெளியீட்டில்
வந்த போது..
“தனியறை போராட்ட த்தில்
உலக வரைபட த்தில்
புள்ளிகளாக சிதறிக்கிடக்கும்
என் உடன்பிறப்புகளுக்கு”
என்று எழுதி சமர்ப்பணம் செய்திருந்தேன்
.
தனியறை என்னுரையிலிருந்து …
பிரபஞ்சத்திற்கு சூரியமண்டலம் தனியறை
சூரியமண்டலத்திற்கு பூமிஉருண்டை தனியறை
பூமி உருண்டைக்குப் பனித்துளி கூட தனியறை
ஆகாயத்திற்கு மேகக்கூட்டம் தனியறை
மேகங்களுக்கு மலைமுகடு தனியறை
மலைக்கெல்லாம் மழைத்துளியே தனியறை
மழைத்துளிக்குக் கடலடியில் தனியறை
கடலுக்கு அலையெல்லாம் தனியறை
அலைக்கு மண்மீது தனியறை
மண்ணுக்கு உயிரெல்லாம் தனியறை
உயிருக்குத் தாயின் கருவறையில் தனியறை.
மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழும் நாட்கள்
அவரவர்களுக்கான தனியறைக் கதவுகளைத்
தேடித் தேடி தொடர்கிறது.
தனியறை தேடும் போராட்டத்தில்
தனித்தனியாகப் பிரிந்துபோன
அண்ணன் தம்பி, அக்கா தங்கை, கணவன் மனைவி,
பெற்றேர் பிள்ளைகள்.
உடைந்துப்போன கண்ணாடித் துண்டுகளாய்
தனியறைக் கதவுகளின் முன்னால்
சிதறிப்போன உறவுகள்.
பேரரசுகள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள்
வரலாறு நெடுகிலும் உண்டு.
காதல், பாசம், அதிகாரம், ஆளுமை
இவற்றை மட்டுமல்ல
மனித நாகரிகத்தில்
பண்பாட்டு மாற்றங்களையும் சிதைவுகளையும்
தனியறைக் கதவுகள்தான் தீர்மானிக்கின்றன.
சிந்திக்க சிந்திக்க
கண்களை அகல விரித்து
ஆகாயத்தைப் பார்த்து பிரமித்து நிற்கும்
சிறுமியாக நான்.
என் முன்
தனியறை ஒரு பிரபஞ்சமாக விரிகிறது.,
இப்பிரபஞ்சத்தில் நான் எழுதியது
என்னை நனைத்த
இந்த மா நகர மழைத்துளியின்
சிறுதுளியைத்தான்.
(முகனூல் வாசிப்போம் குழுவில் தனியறை குறித்து
இன்று விமர்சனம் எழுதி இருக்கிறார் தோழி மஹா.
தனியறை மீண்டும் என்னுடன் பேசிக்கொண்டிருக்கிறது.
வாசிப்போம் குழுவினருக்கும் நன்றி)

Saturday, January 19, 2019

BAAZAAR politics

பஜார்…
Bazaar movie critics review and rating

ஸ்டாக் மார்க்கெட்/ஷேர் மார்க்கெட்டின்
பணம் அதிகாரத்துடனும் அரசியலுடனும் 
சேர்ந்து என்னவெல்லாம் நட த்திக்கொண்டு
இருக்கிறது என்பதுதான் கதை.
இந்திய வணிகத்தின் தலை நகரமான
மும்பை தான் கதைக்கான களம்.
சந்தை வணிகத்தின் கதா நாயகனும்
வில்லனும் இரண்டுமே லாபத்தை மட்டுமே
நோக்கமாக க் கொண்டிருக்கும் குஜராத்தி
மார்வாடி. பணம் சார்ந்த வாழ்வியல் அறங்கள்
ஒரு குஜராத்தியைப் பொறுத்தவரை
லாபம் ஈட்டுவது மட்டும் தான்.
இதை ரொம்பவும் வெளிப்படையாக க் கதையின்
உரையாடல்கள் வழி சொல்லிக்கொண்டே இருக்கிறான்
சகுன் கோத்தாரி (சையப் அலிகான்) 
டுயுட் பாடல்கள், மயிர்க்கூச்செறியும் சண்டைக்
காட்சிகள் என்று எடுக்கப்படும் மசாலா
படங்களின் வரிசையிலிருந்து மாறுபட்ட
கதையை அதே விறுவிறுப்புடன் கதையாக்கி
இருப்பதற்கு இயக்குனரைப் பாரட்டலாம்.
அகமதாபாத்திலிருந்து ஷேர்மார்க்கெட் கனவுகளுடன்
வரும் ரிஷ்வான் அகமது பணம் சம்பாதிக்க
ஷேர்மார்க்கெட் ஒரு சுரங்கம் என்று நம்பும்
மத்திய தர வர்க்கத்தின் குறியீடு.
வித்தியாசமான கதைப்பாத்திரத்தை ஏற்று
நடிக்கும் சையப் அலிகானின் நடிப்பு
கதைக்கு வலு சேர்க்கிறது.
மும்பை ஷேர்மார்க்கெட்.. எத்தனை
நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புகளை
தின்று துப்பி இருக்கிறது..( நான் உட்பட..!)
ஒரு நிறுவனத்தின் 
ஷேரின் மதிப்பு குறைவதும் ஏறுவதும்
அந்த நிறுவனத்தின் ஆண்டு உற்பத்தி
இலாபம் சேர்ந்த தாக எவ்வளவு வெள்ளந்தித்
தனமாக நம்பிக் கொண்டிருக்கிறோம்.

அதிலும் இதைப் பற்றி வெளியாகும்
செய்திகள் ஊடகச்செய்திகளுக்குப் பின்
இருக்கும் இன்னொரு அரசியல்…
என்ன தலை சுற்றுகிறதா…
எனக்கும் தான்..
20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த
ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்ச்-பங்கு சந்தை
அலுவலகத்தின் அருகில் தான் என்
ஆபிசும். எப்போதும் டென்சனாக இந்த
ஆபிசிலிருந்து வெளியில் வரும் முகங்கள்
தலை தெறிக்கிற வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும்
கால்கள்.. இதற்குப் பின்னால் இவ்வளவு
கதைகளும் அரசியலும்…

Tuesday, January 15, 2019

BRAND IMAGE

Image result for brand sale banner
காந்தி BRAND
காமராஜ் BRAND
கலைஞர் BRAND
காலச்சுவடு BRAND
ஒவ்வொரு BRAND க்கும் இருக்கும்
விலை அதன் தயாரிப்பை மட்டும் பொறுத்தல்ல.
அதன் BRAND IMAGE பொறுத்தச் சமாச்சாரம்.
உங்களுக்குத் தெரியுமா..
ரிலையன்ஸ், பாட்டா, வுட்லண்ட்ஸ் இத்தியாதி
பிராண்ட் பொருட்களின் தயாரிப்பு வேலைகள்
குறுகிய தாராவி சந்துகளில் நடக்கின்றன
என்ற ரகசியம்.. 
ஆனால் இங்கிருந்தே அது விற்பனைக்குப்
போனால் நீங்கள் வாங்க மாட்டீர்கள்.
அப்படியே வாங்கினாலும்
அடிமாட்டு விலைக்கு வாங்குவீர்கள்.
உழைத்தவனைப் பற்றியோ
அவன் உழைப்புக்கான ஊதியம் பற்றியோ
உங்களுக்கும் எனக்கும் கவலை இல்லை.
அதே பொருளைத்தான் பிராண்ட் வைத்திருப்பவன்
வாங்குகிறான். அல்லது ஆர்டர் கொடுத்து
செய்து கொள்கிறான். கோட்டு சூட்டு போட்ட
ஆண்களும் பெண்களும் உங்களை வரவேற்க
நீங்கள் அதையே அவர்களிடன் வாங்கிச்
செல்கின்றீர்கள். அந்தப் பிராண்ட்..
உங்கள் அந்தஸ்தின் அடையாளம்..
நீங்கள் பெரிய மனிதனாகிவிடுகின்றீர்கள்.
இந்தப் பிராண்ட் ஒரு பிசினஸ் வித்தையாக
இருக்கும் வரை அது முதலாளித்துவ உத்தி.
கார்ப்பரேட் சாம்ராஜ்யம்.
இதே பிராண்ட் அரசியலாகிறது.
இதே பிராண்ட் இலக்கியமாகிறது.

இங்கே காந்தி நேரு எம்ஜியார் காமராஜ்
கலைஞர் ..இப்படியாக பலர் கூட
இன்றைக்கு பிராண்ட் ..இமேஜ்.. தான்.
காந்தி என்ற பெயரை நேருவின் மகளுக்கு
தானமாக்கியது தான் நம் இந்திய
தேசத்தின் ஆகச்சிறந்த பிராண்ட் அரசியல்.
இப்போ பாருங்கள்…
காங்கிரசு தலைவர் ராகுல் அவர்களை
வெறும் ராகுல் என்று சொல்லிப்பாருங்கள்.
காற்று மட்டும் தான் வரும்.

ராகுல் காந்தி என்று சொல்லும்போது
ஒரு பிராண்ட் இமேஜ் , கம்பீரம்
வந்துவிடுகிறாதா இல்லையா?
ராகுலுக்கும் காந்தி என்ற ப்ராண்ட்
அடையாளத்திற்கும் எதாவது
தொடர்பு உண்டா..
இதைப் பற்றி எல்லாம் பொதுப்புத்தி
யோசிப்பதில்லை.
இங்கே ராகுலைச் சொல்லுவது கூட
இந்த பிராண்ட் ஏமாற்றுத்தனம்
புரிவதற்காக மட்டும் தான்.
பாவம் ராகுல்..
அவருக்கு இன்னும் இதெல்லாம் புரிகிற 
வயது வரவில்லை என்பதே என் எண்ணம்.
இந்தப் பிராண்ட் ப்ஃராட்டுத்தனம்..
அரசியலில் மட்டுமல்ல
சினிமாவிலும் உண்டு
அட.. இலக்கியத்திலும் உண்டுங்கே..
brand identity என்பதை BRAND IMAGE
ஆக மாற்றும் போது சொத்தை கூட
வித்தைகள் புரிகிறது.
விதைகள் தான் விலகி நிற்கின்றன.
… கொசுறாக இன்னொரு செய்தியும்..
எங்கள் தொழுவத்தில் இப்போதெல்லாம்
மாடுகள் இல்லை.
எங்கள் மகேந்திர மலை அடிவாரத்தில்
உங்கள் இராட்சத காற்றாடிகள்..
நாலுவழிச் சாலைகளைக் கடப்பதற்காக
காத்திருக்கிறேன்.
எங்க்கிருந்தாலும் உழைக்கும்
மாடுகள் வாழ்க, அதன் கொம்புகளைச் சீவி
விடுங்கள்.
மாடுகளுக்கும் கூட கொம்புகள் தான்
அடையாளம். பிராண்ட் இமேஜ். 
மாட்டுப்பொங்கல் வாழ்த்துகள்..
(மாடுகளுக்குத்தான் மக்கா)

Sunday, January 13, 2019

THE ACCIDENTAL PRIME MINISTER


Image result for accidental prime minister review

சமகால அரசியலை முன்வைத்து
வெளிவந்த திரைப்படங்களில்
இப்படம் மிகவும் முக்கியமானது.
"Sach likhna itihaas ke liye zaroori hota hai”
"உண்மையை எழத வேண்டியது 
வரலாற்றின் கட்டாயம்"
என்று சொல்லும் பிரதமரின் மீடியா
 அட்வைசராக 2004 முதல் 2008
வரை கூடவே இருந்த சஞ்சய பாரு வின் 
அனுபவத்தில்எழுதப்பட்ட புத்தகம்.
திரைப்படமாகி இருக்கிறது.
மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமரானது
யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு திருப்பம்,
ஒரு விபத்து.. 
ஒரு தனிமனிதனின் அரசியல்
போராட்டம், மகாபாரத யுத்தம்..
ஆட்சி அதிகாரத்தின் அசல் முகம்..
ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலும்
மறைந்திருக்கும் உள்குத்து அரசியல்..
மன்மோகன் சிங்க் என்றஅதிர்ந்து பேசாத
ஒரு தலைவர் , ஊடகங்களால் மிகவும்
அதிகமாக கேலி கிண்டலுக்கு உள்ளான
பிரதமர்… தன் மென்மையான குரலில்
உறுதியாக சொல்கிறார்…
ஊடகங்கள் காட்டிய பிரதமராக 
நான் மக்கள் மனதில் இடம் பிடிக்கமாட்டேன்.
என்று! 
அணு ஆயுத ஒப்பந்தம் அத்துடன் 2ஜி,
நீராடிய டேப்.. ஊழல்.. இப்படியாக 
பிரதமரைச் சுற்றி ஒரு சதிவலை..
குற்றங்கள், ஊழல், தோல்வி, இயலாமை
இத்தியாதிக்கெல்லாம் பொறுப்பேற்க
வேண்டியவராக மன்மோகன் சிங்..
காங்கிரசு கட்சிக்கு ஒரு பலிகடாவாக
பிரதமர் நாற்காலியில்…

மன்மோகன்சிங்க் பாத்திரத்தில் நடித்திருக்கும்
அனுபம் கெர், மற்றும் சோனியா காந்தி பாத்திரத்தில்
நடித்திருக்கும் (German-born actress Suzanne Bernert.) 
சுசைனி பெர்னர்ட் இருவரின்
உடல்மொழி இத்திரைப்பட த்தின் காட்சிகளுக்கு
 வலு சேர்த்திருக்கிறது.
சமகால அரசியல் என்பதாலும் 
சம்பவங்கள் பார்ப்பவர்களுக்கு
மிகவும் நெருக்கமானவை, 
நினைவிலிருப்பவை என்பதாலும்
தியேட்டரில் கூட்டம் அலைமோதுகிறது.
காங்கிரசு கட்சிக்கும் காங்கிரசு அரசியலுக்கும்
இத்திரைப்படம் எதிர்மறையான அலைகளை
 எழுப்பும் என்பதும் அதை இன்றைய பிஜேபி அரசு
 மறைமுகமாக ஆதரிக்கும் என்பதும்
 இத்திரைப்பட த்தைப் பார்த்துவிட்டு
 வெளியில் வரும் போது
இதன் இன்னொரு அரசியலாக
விரிகிறது.
ஒரு புத்தகம் … அதன் சம்பவங்கள்.. அதில் வரும்
நபர்கள்.. அனைத்தும் உண்மை.
ஆனால் உண்மைகளுக்கும் இன்னொரு முகம் உண்டு.
உண்மைகளுக்கும் அரசியலுண்டு..
அந்த இரண்டும் இந்த திரைப்பட த்திற்கும் உண்டு…
இதை எழுதும் போது…
இப்படியான ஒரு திரைப்பட த்தை/ புத்தகத்தை
 தமிழக அரசியலை வைத்து எடுக்க முடியுமா?
எழுத முடியுமா..

ஆக்சிடெண்ட்.. ஆகிவிடும்.

Friday, January 11, 2019

அடைமொழிகள்


அடைமொழிகளை நான் வெறுக்கிறேன்.
இதற்கு யாரைக் குற்றம் சொல்வது?
அடைமொழிகளை அள்ளி வீசும் அரசியல்
அடைமொழிகளில் வாழ நினைக்கும் முகவரிகள்
அடைமொழிகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும்
கவிமன ங்கள்..
போதாமையை எப்போதும் அடைமொழிகளால்
நிரப்பிக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகம்
இதை எல்லாம் மவுனமாக ஏற்றுக்கொண்டிருக்கும்
நீங்கள்.. உங்களில் ஒருத்தியாக இருக்கும்  நான்
.. எல்லோரும் தான் காரணம்.
இது சகிப்புத்தன்மை அல்ல.
இது கையறு நிலை..
இது ஒருவகையான பிழைப்பு வாதம்..
இது ஒருவகையான பித்தலாட்டம்.
இது ஒரு வகையான மொழிச்சிதைவு..

என் கஞ்சிக்கலயத்தில் உப்பு போல
அளவாக இருந்த அடைமொழியை
அவரவர் தங்கள் சுயலாபங்களுக்காக
விற்பனை செய்தார்கள்.
சந்தையில் விற்பனையாகும் சரக்கு மாதிரி
அடைமொழி விற்பனை செய்யப்பட்ட து.
தமிழ் மொழியின் ஒவ்வொரு சொல்லும்
 அதற்கான வரலாற்றையும் வீரியத்தையும்
இழந்துப் போனது .. இதைக் கண்டு எந்த ஒரு
தமிழ்த் தேசியமும் கொதிக்கவில்லை!
என் கஞ்சியில் உப்பை அள்ளி அள்ளிக்
கொட்டுகிறார்கள். என் பசி தீர்க்கும்
பழையச்சோறு.. அவர்கள் கொட்டிய
உப்பில் கரைந்து என் பசியாற்ற முடியாமல்
என் நாக்கில் பட்டவுடன்த்தூஎன்று
துப்ப வைக்கிறது.
த்தூ.. த்தூ.. “ என்று காறி காறித் துப்புகிறேன்.
பசியில் துடிக்கிறேன்.
என் கஞ்சியில் இன்னும் இன்னும் தண்ணீரை
ஊற்றி ஊற்றி அவர்கள் கொட்டும் உப்பின்
வீரியத்தைக் குறைத்துவிடலாம் என்று
பெரும் முயற்சி செய்கிறேன்.
என்  நிலத்தடி நீர்இல்லை.
அதையும் விற்றவர்கள் தான்
என் மொழியை  விஷமாக்கியவர்கள்.
ஒரு வாய்க்கஞ்சி..
என் உழைப்பு..
என் மொழி..
என் ஆதித்தாய் தன் கருவறையில்
சுமந்து காப்பாற்றிய என் தாலாட்டுமொழி..
என் பனிக்குட வாசனையின் மொழி..
அடைமொழிகளால் அசிங்கப்பட்டு
தன் அர்த்தங்களை இழந்து என் மொழி
சிதைக்கப்படுகிறது..
இந்த அரசியலை .. மொழியின் மீது
ஏற்பட்ட பண்பாட்டு தாக்குதலை
மொழியின் மீது ஏறி அமரும் ஆதிக்கத்திமிரை
என் சொற்களை கொச்சைப்படுத்தும்
அரசியலை
இதைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும்..
இனியும் பொறுப்பதற்கில்லை.. 
கொலை வாளினை எட டா



Tuesday, January 8, 2019

இலக்கியத்தில் தாதாகிரித்தனம்



இலக்கியத்தில் தாதாகிரித்தனம்...
குண்டர்கள் தீர்மானிக்கிறார்கள்
இலக்கிய விழாக்களின் தலைமையை
91 வயதான மூதாட்டி.. Nayantara Sahgal
அப்பெண் மராத்திய இலக்கிய விழாவுக்கு
சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.
ஆனால் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கும்
அவர் மராத்தி இலக்கிய நிகழ்வுக்கு எப்படி
அழைக்கப்படலாம் என்று இங்கிருக்கும்
லோக்கல் அரசியல் பயமுறுத்தியதால்
காரணம் எதுவும் சொல்லாமல்
அப்பெண்ணை விரும்பி அழைத்தவர்கள்
இப்போது “வந்துவிடாதே” என்று கடிதம்
அனுப்பிவிட்டார்கள்..
யார் இந்தப் பெண்?
இவர் அரசியல் குடும்பத்தில் பிறந்தவர்
என்றாலும் அரசியல் பின்புலத்தை மட்டும்
வைத்துக்கொண்டு எழுத வந்தவர் அல்ல.
நேருவின் உடன்பிறந்த சகோதரி விஜயலட்சுமி
பண்டிட்டின் மகள் தான் இவர். ஆனால் இந்திரா
காந்தியின் ஒற்றை அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்திய
அக்குடும்பத்தைச் சார்ந்தவர்.
அதனால் தான் இந்திராகாந்தி
இத்தாலிக்கு தூதுவராக பதவி ஏற்க இருந்தவரை
தான் பிரதமரானவுடன் தன் அத்தைமகளின்
பதவியை ரத்து செய்தார்..
1986 ல் , Rich Like Us – எங்களைப் போன்ற செல்வந்தர்கள்
 என்ற நாவலுக்காக
சாகித்திய அகதெமி விருது பெற்றவர். 
ஆனால் 2015 ல் மதவாதிகளால்
படுகொலை செய்யப்பட்ட நரேந்திர தபோல்கர், 
கோவிந்த் பன்சாரே ஆகியோரின்
படுகொலையை எதிர்க்கும் வகையில் தனக்கு
 வழங்கப்பட்ட சாகித்திய அகதெமி
விருதை திருப்பிக் கொடுத்தவர்… “
உறவுகள்” என்ற தலைப்பில் அவர்
எழுதிய எழுத்துகள் பெண்ணிய தளத்திலும் சமூக தளத்திலும்
அதிர்வலைகளை உருவாக்கியவை.
அவராகவே எவரிடமும் தன்னை அழைக்கச்சொல்லவில்லை.
ஆளுமைமிக்கவராகவும் கம்பீரமாகவும் தன் எழுத்துகளில்
வாழ்ந்துக் கொண்டிருப்பவரை அழைத்தவர்கள், அதுவும்
பிஜேபி முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களுடன்
கலந்து கொள்ள இருந்த துவக்கவிழா நிகழ்வு இது.
சொல்லப்பட்ட ஒரே காரணம்… அவர் ஆங்கிலத்தில்
எழுதுகிறார் என்பது மட்டும் தான்!
அவர் வரவை எதிர்த்தவர்களின் வாரிசுகள்
ஆங்கிலப்பள்ளியில் படித்தவர்கள்,
 படித்துக்கொண்டும் இருப்பவர்கள்.

இலக்கியத்தில் அரசியல் இருக்கலாம்.
இருக்க வேண்டும்.
ஆனால் அரசியல் கட்சிகளின் அதிகாரம்
இருக்க கூடாது.
இலக்கிய நிகழ்வுக்கு யாரை அழைப்பது
யாரை அழைக்க கூடாது என்பதை
 தீர்மானிக்க வேண்டியது இலக்கியவாதிகள்
தானே தவிர அரசியல் கட்சிகள் அல்ல.

Saturday, January 5, 2019

ஆண் பெண் உறவு நிலை

ஆண் பெண் உறவுகளில்
ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை
எப்படி எடுத்துக்கொள்வது?
திருமணம் என்பது நிறுவனம் தான்.
அதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.
ஆனால் அந்த நிறுவனத்தின் நோக்கம்
துவக்கம் எப்படி இருந்தாலும் அந்த
நிறுவனத்தின் மாற்றம் என்பது
ஆண் பெண் குடும்ப நிறுவனத்தில்
சம பங்காளர்கள் .. இந்தப் பங்கீடு என்பது
வணிகவியலில் சொல்லப்படும் பங்கீடு மட்டுமல்ல,
சமூகவியலின் பொருத்தப்பாடுகளுடன்
கையாள வேண்டிய பங்கீடு.
நம் அம்மாக்களுக்கு இந்தப் பங்கீட்டு முறை
குறித்த புரிதல் இல்லை என்று சொல்லமாட்டேன்.
அவர்கள் இதைப் பேசவில்லையே தவிர
சத்தமில்லாமல் தங்கள் உரிமைகளை
மிகச்சரியாக பயன்படுத்தும் சூட்சம ம்
அறிந்தவர்களாக இருந்தார்கள்.
அம்மாக்களின் பெண்களாகிய நாங்கள்..
அம்மாக்கள் வாசிக்காத தை எல்லாம்
வாசித்த தலையில் கொம்பு முளைத்த
பெண்களாக … எங்களுக்கு தன்னம்பிக்கை
என்பது தானே எங்களுடன் வளர்ந்த து.
எங்களுக்கு முடிவு எடுக்கும் உரிமையை
நாங்களே வைத்துக்கொண்டோம்.
எங்களை இச்சமூகம் அடங்காப்பிடாரி,
திமிரு பிடித்தவள் என்றெல்லாம் விமர்சிக்கும் போது
அதில் மறைந்திருக்கும் பொருளின் கனம் எங்களை
இன்னும் வலிமையுடன் பயணிக்க வைத்திருக்கிறது.
எங்கள் தலைமுறை பெண்களுக்கு இருந்த
வாசிப்பு, எங்கள் தலைமுறை பெண்கள்
 ஏற்றுக்கொண்ட கருத்தியல்,
 எங்கள் தலைமுறை ஏற்றுக்கொண்ட 
தலைமைத்துவங்கள்…
இது எதுவுமே..
இன்றைய தலைமுறை பெண்களுக்கு
பூஜ்யமாகிவிட்டதா.. ?…
இன்றைய ஆண் பெண் உறவில்
அது குடும்ப நிறுவன உறவாக இருந்தாலும் சரி,
அந்த நிறுவனத்தை ஒதுக்கிய உறவாக
இருந்தாலும் சரி…
எத்தனை ஊசலாட்டங்கள்!
தடுமாற்றங்கள்!
எம் தலைமுறையை விட அதிகம் படித்தவர்கள்,
அதிகமாக சம்பாதிக்கும் இன்றைய பெண்களுக்கு
எங்க்கேயோ.. ஏதோ.. மிஸ்ஸிங்க்.
அதைக் கொடுக்க மறந்த விட்டோமா?
வன்முறைகள்.. என் பது கை நீட்டி அடிப்பது
மட்டுமல்ல…
ஆண் தொடர்ந்து ஒரு பெண்ணைக்
 குற்றவாளி ஆக்குவதும்
பெண் தொடர்ந்து ஆணை மட்டுமே 
குற்றவாளி ஆக்குவதும்
ஒரே ஆண் , ஒரே பெண் என்று ஒரே ஒரு 
குழந்தையைப் பெற்ற தலைமுறை
 தங்கள் உணர்வுக்குமிழிக்குள் சிக்கிப்
புதையுண்டு போவதும்…
பெற்றோரின் இந்த உணர்வு நிலை..
பிள்ளைகளின் வாழ்க்கையைப் பாதிப்பதும்…
அதிகரித்து இருப்பதை அக்கறையுடன் பார்க்கிறேன்.
இன்றைய கணினி கைபேசி வசதிகள் ஆண் பெண்
உறவு நிலையைக் காத்திரமாக வளர்ப்பதற்கு மாறாக
இருக்கின்றன. பெற்றோரின் தலையீடு என்பது
சின்ன சின்ன விசயங்களிலும் அதிகரிக்க இந்த
கைபேசியும் ஒரு காரணமாக அமைந்துவிட்டதா?
என்பதை பெற்றோர்களும் யோசிக்க வேண்டும்.

18 வயது என்பது ஓட்டுப்போடும் வயது மட்டுமல்ல,
சிறகு முளைத்தப் பறவைகள் பறந்து செல்ல வேண்டிய
அவர்களுக்கான பயணத்தின் தகுதியும் தான்.
ஆண் பிள்ளையோ பெண் பிள்ளையோ..
அவர்கள் அவர்கள் வாழ்க்கைப் பயணத்தை
தீர்மானிக்கட்டும். வானத்தில் பறப்பதும்
கூடுகள் கட்டுவதும் அவர்கள் விருப்பம்..
அவர்களே அவர்களுக்கான திசைகளைத் தீர்மானிக்கட்டும்.
நாம் தூர இருந்து பார்த்து ரசிப்போம்.
நமக்கும் நமக்கான வாழ்க்கை மிச்சமிருக்கிறது.

எம் தலைமுறை இக்கருத்தை இன்னும் ஆழமாகவும்
தீவிரமாகவும் முன்வைக்கும் தருணம் இது..
எம் தலைமுறையின் குரலாக…