Showing posts with label புத்தக விமர்சனம். Show all posts
Showing posts with label புத்தக விமர்சனம். Show all posts

Monday, March 21, 2022

ஆக்டோபஸ் அரசியல்

 


நடுநிலைமை என்பது அயோக்கியத்தனம், பிழைப்புவாதம்”
“இக்கட்டுரைகள் நடுநிலைப் பார்வையோடு எழுதப்பட்டவை
 என்று சொன்னால் அது மாபெரும் பொய்” 
என்று தன் ஆக்டோபஸ் காவியங்களின் 
பக்கங்களைப் பற்றி தெளிவாக உறுதியுடன்
பிரகடனப்படுத்திவிடுகிறார் எழுத்தாளர் எழிலரசு அவர்கள்.
 
நடுநிலைமை என்பது ஓர் அயோக்கியத்தனம்.
இன்னும் சொல்லப்போனால்
சமூகத்தின் கையாலாகததனம். ..
நடுநிலைமை என்பது ஒரு தப்பித்தல்.
ஒருவகையான பிழைப்புவாதம்.
சமூகத்தின் மீது அக்கறை கொண்ட எழுத்துகள்
அறம் பிழைப்பதில்லை.
அறம் பிழையாமைதான் எழுத்தறம்.
அதை ஆக்டோபஸ் காவியம் எழுதிப் பார்த்திருக்கிறது.
 
பத்திரிகையில் அவ்வப்போது வெளிவந்தக் 
கட்டுரைகளின் தொகுப்பு என்ற வகையில்
  இக்கட்டுரைகள் பல்வேறு காட்சிகளை முன்வைக்கும் 
கலைடாஸ்கோப்பாக இருக்கின்றன. 
 சமகால அரசியலுடன் இலக்கியம் முதல்
 இன்றைய முகநூல் கலாச்சாரம் வரை 
தன் பார்வையை முன்வைத்திருப்பது
 இக்கட்டுரைகளின் சிறப்பு.
 
அரசியல் தலைவர்களைப் பற்றி எழுதுகிறபோது 
அறிந்தச் செய்தியின் ஊடாக அறியப்படாத தகவல்களை 
முன்வைப்பது முக்கியம். அதுதான் அப்பக்கங்களை 
கனமுள்ளதாக்கி வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் 
நடுவில் இனம்புரியாததொரு நேசத்தையும் மரியாதையையும் உருவாக்கிவிடுகிறது.
அடுத்தமுறை வாசகன் அக்குறிப்பிட்ட எழுத்தாளரின் 
எழுத்துகளைத் தேடிவாசிக்க வைத்துவிடும் . 
இதைக் கச்சிதமாக எழுத்தாளர் எழிலரசின்
ஆக்டோபஸ் காவியம் செய்திருக்கிறது.
உதாரணமாக கலைஞர் அவர்களின் பொன்னர் சங்கர்
 வரலாற்று நாவலைப் பர்றிய கட்டுரை
. இது தமிழ் வாசகர்களுக்குப் புதிய செய்தி அல்ல. 
அந்த தெரிந்த செய்தியின் ஊடாக வாசகர்கள் 
அறியாத இன்னொரு பக்கத்தை திறக்கிறார்.
இதுவரை எழுதப்பட்ட வரலாற்று நாவலாசிரியர்கள் 
அனைவரும் தங்கள் கதைகளுக்கான தரவுகளை
 கல்வெட்டுகள், மெய்க்கீர்த்திகள், ஓலைச்சுவடிகள், 
அருங்காட்சியகங்கள், இலக்கியங்கள் மற்றும் அறிஞர்களின் ஆய்வுகளிலிருந்து எடுத்திருக்கிறார்கள். 
ஆனால் கலைஞரோ மக்கள் பாடல்களிலிருந்து 
 தகவல்களைத் திரட்டி இருக்கிறார் என்பதையும் 
அதற்கு உதவிய கட்சிக்காரர் சுப்புலட்சுமி ஜெகதீசன் முதல் கவிஞர் சக்திக்கனல் வரை தன் முன்னுரை பின்னுரையில் 
கலைஞர் குறிப்பிட்டிருந்ததையும்
பதிவு செய்கிறார், இக்கட்டுரை எழுதியப்பின்
 பின்னூட்டமாக வந்த அரியதொரு தகவலையும் 
கட்டுரையில் இணைத்திருப்பது இனவரைவியல் 
ஆய்வில் இன்னொரு புள்ளியாக இருக்கிறது. 
 கொங்கு வேளாளர் முருகன்-தெய்வானையை 
வணங்குபவர்கள் என்பதும் 
வேட்டுவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 
முருகன்-வள்ளியை வணங்குபவர்கள் என்பதும் 
 தகவலாக மட்டும் பதிவாகவில்லை.
முருகன் தமிழ்ச் சமூகத்தின் ஆதி தெய்வம். 
அவனோடு இருக்கும் வள்ளியும் தெய்வானையும் 
இருவேறு சமூகத்தின் அடையாளமாக இருந்தது போய் 
அவரவர் சாதிய அடையாளமாகி இறுதியில்
 முருகன் வள்ளி தெய்வானை இருவருடனும் 
காட்சியளிக்கும் புதியகதையின் முகவரியை 
குறிப்பாக உணர்த்தியும் இருக்கிறார் எழிலரசு அவர்கள்.
 
மறந்துகொண்டே இருப்பது மனித இயல்பு.
 அதை நினைவூட்டிக்கொண்டே இருப்பது எழுத்துமரபு. 
காங்கிரசு கமிட்டியிலிருந்து
விலக்கப்பட்டிருந்த மதன் மோகன் மாளவியாவும் 
ராஜாகோபாலாச்சாரியரும்
மீண்டும் காங்கிரசு காரியக்கமிட்டியில் 
சேர்த்துக்கொள்ளப்பட்டது ஏன்? என்ற
கேள்வியை 1931 ஆகஸ்டு மாதம் விருது நகரில்
 நடைபெற்ற 3வது சுயமரியாதை மாநாட்டில் 
திரு செளந்திரபாண்டியனார் ஆற்றிய உரையை 
நினைவூட்டுகிறார். மறக்கப்பட்ட இந்த வரிகளின் ஊடாக
 இன்று தன் கரங்களை விரித்திருக்கும்
 ஆக்டோபசின் புதிர்களை விடுவிக்கிறார்.
 
வெளிப்படுத்துவதற்கு சிக்கலான கருத்துகளையும்
 சரியானப் புரிதலுடன் வெளிப்படுத்தும்போது
 அக்கருத்து வாசகனிடம் சரியாகப் போய்ச்சேர்ந்துவிடும். 
ஆனால் ஒவ்வொரு கட்டுரையாளருக்கும் 
இது மிகவும் சிக்கலான சவாலான செயல்.
 காரணம் சிக்கலான கருத்துகளை எழுதும்போது 
வெளிப்படுத்துவதில் சிறிது தவறு ஏற்பட்டாலும் 
அதுவே அந்த எழுத்து சொல்லவந்ததையும் 
கெடுத்து இன்னொரு திரிபு நிலைக்கு கொண்டுவந்து
 விட்டுவிடும். அதனால் தான் பலர் இம்மாதிரியான 
சில சிக்கலான முடிச்சுகளைத் தொடுவதில்லை.
 நமக்குஎதற்கு வம்பு? பிரச்சனைகள் வேண்டாம்
 என்று ஒதுங்கிவிடுவார்கள். 
ஆனால் ஒதுங்கி விடுவதால் பிரச்சனைகள்
 இல்லை என்றாகிவிடுமா என்ன?
எழிலரசு அப்படி ஒதுங்கிவிடுபவரில்லை. 
காந்தி அம்பேத்கர் சந்திப்பு,
காந்தியின் ராம ராஜ்யம் என்ற கற்பனாவாதம் , 
அதை எதிர்கொண்ட நேருவின் அரசியல்.. 
இதை எல்லாம் கட்டுரையாக்கி இருக்கிறார்.
 கட்டுரையின் தலைப்பும் பொருத்தமாக
 “அறம் தவறிய அரசியல் பிழைகள்” 
 
ஆக்டோபஸ் காவியம் சமகால அரசியலையும்
 கடந்த கால அரசியலூடாக பார்த்திருக்கிறது. 
சமகாலத்தை புதிய தொரு கோணத்தில் அணுக 
வாசகனுக்கு வழிகாட்டுகிறது. 
இன்னும் சில பக்கங்கள் வாசகனை மேலதிக 
தேடலுக்கும் இட்டுச்செல்கிறது. 
அண்மையில் வெளிவந்திருக்கும் 
சமூக அரசியல் கட்டுரைத்தொகுதிகளில்
 'ஆக்டோபஸ் காவியம் 'முக்கியமானது.. வாழ்த்துகள். 
 
&&&
 
ஆக்டோபஸ் காவியம் (கட்டுரைகள்)
எழுத்தாளர் வே. எழிலரசு
வெளியீடு : இருவாட்சி 
கைபேசி: 9444640986.
பக். 160. விலை ரூ 170.
 

Thursday, June 25, 2020

பச்சைக்குதிரையின் தொடர் ஓட்டம்


 
எழுத்து பயணத்தில் சந்திக்கும் அய்யா வையவன்..
விமர்சகர் மொழிபெயர்ப்பாளர் மீரா ரவிஷங்கர் 
போன்றவர்கள் எழுத்தையும் வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக்கி இருக்கிறார்கள்.
அன்பும் நன்றியும்****
 
 
*****
மீரா ரவிஷங்கர்
_______________________________________________________
(மும்பை எழுத்தாளரும் செயற்பாட்டாளரும் தாராவி
யில் பல ஆண்டுகள் வாழ்ந்து செழுமையான அனுபவங்கள் பெற்றவருமான புதிய மாதவி அவர்களின் நாவலை ஆங்கிலத்தில்(விரைவில் OZONE BOOKS வெளியீடாக வரவிருக்கும்) மொழிபெயர்த்து வரும் பிரபல மொழிபெயர்ப்பாளர் மீரா ரவிஷங்கர் அவர்கள் நூலைப்பற்றிக்கூறுகிறார்)
_______________-
Vaiyavan Paramasivam
_____________________________________________
நவீன தமிழ் இலக்கியத்தின் மீது அக்கறை கொண்ட வாசகர்கள், படைப்பாளிகள் இப்பொழுது நிறைய இருக்கிறார்கள்.
“கடந்து வந்த வாழ்க்கைமுறையின் கணக்கற்ற சிறு சிறு தகவல்களை, பேரழிவுகளை சாமானிய வாழ்விற்குள் பொருத்தி கதை சொல்வது தான் ஒரே வழி. 
அதிலிருந்து சிறு சிறு புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும். அன்றாட வாழ்க்கை தான் எத்தனை சுவாரசியமானது. முடிவற்ற மனித உண்மைகள் அதில் புதைந்துள்ளன. ..நான் எப்போதும் இந்த சிறிய பிரபஞ்ச வெளியை நோக்கி ஈர்க்கப்பட்டிருக்கிறேன், 
ஒரு மனிதன், ஒரு நபர். அங்கு தான் பிற எல்லாமும் நிகழ்கின்றன.” – 2015 இலக்கிய நோபல் பெற்ற
 Svetlana alexievuh என்ற ரஷ்ய பெண்மணியின் கூற்று.
நான் ஒரு கதை சொல்லியாக உங்கள் முன் நிற்கிறேன்.
ஆனாலும், ஒரே ஒரு கதை என்பதன் அபாயத்தைக் 
குறிப்பிட விரும்புகிறேன்..
 
நான் ஆங்கில எழுத்துக்களை வெகு சிறு வயதிலிருந்து 
படித்து வருகிறேன். அமெரிக்க மற்றும் ஆங்கிலேயே கலாசாரப் புத்தகங்களை அதிகம் படித்தேன்.
அந்தப் பெண்கள் தங்க முடியும், நீலக் கண்களுமாய்
 வலம் வந்தனர்; அங்கே குளிர் காலத்தில் பனி
 பொழிந்தது; அவர்கள் ரொட்டியும் ஆப்பிளும் 
சாப்பிட்டனர். அவர்கள் சூரிய ஒளியைச் சிலாகித்தனர்.
சிலகாலம் நான் இந்த கற்பனைகளை நிஜம் என்று நம்பினேன்....நான் இருப்பது சென்னை, வெய்யில் மண்டையைப் பிளக்கும்....வானிலையைப்
 பற்றிப் பேச என்ன இருக்கிறது? 
நான் பனியை நேரில் பார்த்ததில்லை. 
மாங்காய் தின்று வளர்ந்தவள்.
எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால், 
நாம் ஒரு கதையைப் படிக்கும் பொழுது அதன் தாக்கம் அபாரமாக இருக்கிறது, நாம் தாக்கப்பட்டோம் 
என்பதையே அறிவதில்லை.
 
நம்மை அடையாளப்படுத்துபவர்கள் புத்தகத்துக்கு 
வெளியே நிஜ உலகில் சஞ்சரிப்பவர்கள். 
உள்ளே இருப்பவர்கள் கற்பனை கதாபாத்திரங்கள் மட்டுமே....ஒரு எம்ஜீயார் படம் போல...feel good factor.
என் பார்வையும் கோணமும் மாறியது, நான் இந்திய எழுத்தாளர்களைப் படித்த பொழுது தான்....
ஆங்கிலக் கதைகள் தான் ஒரு நிலைப்பாடு என்ற அபாயத்திலிருந்து காத்தவை...அவை தான்.
ஒருவரை பார்த்த உடனேயே ஒரு நிச்சயம்....
ஐயோ பாவம், கிராமத்துப் பொண்ணு...
என்பது போலஇது போன்ற தளைகளை உடைக்கும் 
எழுத்து தான் பச்சை குதிரை..
 
பெண் என்றால் ஆதரவற்றவள்...
இந்த ஒரு கதையைத் தாண்டி...
அவள் மீதான பரிதாபத்தைத் தாண்டி அவளிடம ஒரு சக மனுஷியின் இணைப்பு, இணக்கம் தேடும் முயற்சி 
பொதுவாக மக்களிடம் இல்லை.
எதிர்மறைகளின் மொத்த உருவம் தான் 
பெண்ணின் நிலைமை என்று சித்தரிக்கப்படுவது,
அவளுக்கு ஏற்படும் சிறந்த பல அநுபவங்களின் 
வடிவத்தை தட்டையாக்கி சிறுமைப்படுத்துவதாகும்.
பெண்மை என்பது போராட்டம் மட்டுமே 
என்று எண்ணினால் அது தவறில்லை....ஆனால் 
அந்தக் கோணம் முழுமை பெறாது.
அது ஒரு கதைக் கருவாக இருக்கலாம் 
ஆனால் அது ஒன்றே மொத்த கதையாக 
மாறவே கூடாது.
 
பெண் அபலை என்றால்—அது அவளுடைய 
கண்ணியத்தை அபகரிக்கிறது. அவள் இந்த சமூகத்தில் ஆணுக்கு நிகரானவள் என்ற சமத்துவத்தை 
ஒதுக்குகிறது.
ஒரு கதாசிரியர் என்னிடம் பகிர்ந்து கொண்டது: 
என்னுடைய கதையைப படித்த ஒரு வாசகர், 
முடிவை எப்படி மாற்றி எழுதலாம் என்பதுடன், 
கதையின் தொடராக அடுத்த கதையையும் வடிவமைத்துவிட்டாள்...
உங்களுக்கு கோபம் வந்ததா, என்று கேட்டேன்...
இல்லை... சந்தோஷமாக இருந்தது. 
அந்த அளவுக்கு அவள் என் கதையை சொந்தம் கொண்டாடியது, என்றார்.
 
இந்த நாவல் பெண்களைப் பற்றியது. 
பெண்ணால் எழுதப்பட்டது, பெண்ணால் விமர்சிக்கப்படுகிறது...உடனே மனதுக்கு வரும் வார்த்தை...இது பெண்ணீயமா?
பெண்ணியம் என்பது ஒரு சுமையுடன் வரும்
 loaded வார்த்தை.....
எதிர்ப்பு, வெறுப்பு, கடுப்பு....என்பது போன்ற உணர்வு.
பலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் சித்தாந்தங்களில் பெண்ணியமும் ஒன்று.  
ஆணுக்கு எதிரானவர்கள், சமூக விதிமுறைகளைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்கள், எப்போதுமே கோபம் கொப்பளிக்க இருப்பவர்கள் என்றெல்லாம் 
பெண்ணியவாதிகள் முத்திரை குத்தப்படுகிறார்கள்.
 
• மகனையும் மகளையும் சமமாக வளர்க்கப் 
பெற்றோர பழக வேண்டும்.
• வீதியில் நடக்கும் பெண்ணைப் பண்டமாக அல்லாமல் மனிதராகப் பார்க்கப் பழக மகனுக்கு கற்றுத் தர வேண்டும்.
• வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பெண்ணியம் 
இன்றும் தேவை
ஆண், பெண் இருவருக்குமான சமூக, அரசியல், பொருளாதாரச் சமத்துவத்தைக் கோரிய 
பெண்ணியம் என்ற சிந்தனை பெண்ணைப் போலவே ஆணுக்கும் அவசியமானது.
பாலியல் சீண்டலைச் சகித்துக்கொள்ளலாமா? ‘
இஸ் திஸ் ஃபன்னி’ (Is this Funny?),?
அழகு என்ற சிறையில் பெண்கள் எப்படியெல்லாம் சிக்கவைக்கப்படுகிறார்கள் 
‘தி பியூட்டி டிராப்’ (The Beauty Trap),
கசப்புடன் சேர்ந்து வாழ்வதைக் காட்டிலும் பிரிந்து மகிழ்ச்சியாக வாழ்வது மேல் என்பதை உணர்வார்களா?
இப்படிப் பெண்ணின் அன்றாட வாழ்வில் 
பல சிந்தனைகள், கோணங்கள், ஆக்கிரமிப்புகள்......
நுண்ணுணர்வுடன் பெண்களை அணுக வேண்டியதன் அவசியத்தை இவை உணர்த்துகின்றன.
ஒரு பெண் எந்த தவறு செய்தாலும், 
அவள் மீது எழுப்பப்படும் விமர்சனங்கள் அவளுடைய ஒழுக்கம் சார்ந்ததாக இருக்கிறது. ஆனால் ஆண் தவறு செய்தால், ‘அவன் பொறுப்பில்லாமல் இருக்கிறான். கல்யாணத்திற்கு பிறகு சரியாகிவிடுவான்’ 
என்கிறார்கள்.
ஆண்கள் கூடி ரவுடித்தனம் செய்தால், 
அதற்கு பெயர் 'ஜாலி'; 
பெண்கள் கூடி 'ஜாலி'யாக இருந்தால், 
அதற்கு பெயர் கலாச்சார மீறல்' என, 
இந்த சமூகம் பாலினம் சார்ந்த பார்வையை 
வைத்திருக்கிறது என, ஒரு பெண் போலீஸ் அதிகாரி, 
ஒரு கூட்டத்தில் பேசினார். 
 
பெண்களுக்காக, பெண்கள் பேசுவதையே
 பெண்ணியம் என்று கொள்ளலாமா?
பெண் சார்ந்த அடையாளங்கள் மறுக்கப்படுகின்றன.
அடையாளங்கள் வேறுவிதமாக பார்க்கப்படுகின்றன.
அதனால், பெண்களின் இயக்கம், சிந்தனை, வாழ்க்கை உள்ளிட்டவற்றை, அவளின் அனுபவங்களால், அவளின் மொழியிலேயே பேசவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.
அதனால் தான், தற்போது பெண்ணிய எழுத்துக்களுக்கு முக்கியம் உள்ளது. பெண்ணின் அடையாளம் என்ன? 
அவள் போராட வேண்டியது எதற்காக? அவளின் அனுபவங்களையோ, மற்ற பெண்களின் 
அனுபவங்களையோ கொண்டு அவள் 
வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும்? அறிவு சார்ந்த சூழலுக்கு எவ்வாறு, தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்?
.... என்பனவற்றை பெண்ணிய இலக்கியங்கள் 
பேச வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றன. 
பச்சைக் குதிரை அவற்றை 
உளவியல் ரீதியாக அலசுகிறது.
 
 
 
பெண்ணின் மனதளவிலான சுதந்திரம் என்பது என்ன?
பூசி மெழுகாத அவளின் உண்மையான உணர்வுகள் என்னென்ன? என்பனவற்றை, பெண் மொழியில் பெண்களிடத்தில் படைப்புகளின் வழியாக கொண்டு செல்லும்போது, அவள் சுயசிந்தனை பெறுகிறாள். 
ஆண்கள், பெண்ணிய படைப்புகளை படிக்கும் போது, பெண்களை புரிந்துகொண்டவர்களாக, அவர்களின் உணர்வுகளை மதிக்கத்தெரிந்தவர்களாக 
மாறுகின்றனர்.
காலம் காலமாக, ஆண்கள் மீதும் பெண்களின் மீதும் கட்டமைக்கப் பட்டிருக்கும், போலி அடையாளங்கள் கட்டுடைக்கப்படுகின்றன. ஆண்களும், பெண்களும் போலியில்லாத பெண்ணுலகை புரிந்துகொள்வதன் 
மூலம், இல்லங்களில், இலகுவான வாழ்க்கை 
ஏதுவாகின்றது.
தற்காலத்தில், பெண்ணியம் சார்ந்த தமிழ் 
படைப்புகள் அதிகம் வரவேற்கப்படுகின்றன என்பது, ஆரோக்கியமான விஷயம். என்றாலும், 
பெண்ணியம் சார்ந்த கருத்தாக்கங்களின் 
மீது வைக்கப்படும் விமர்சனமாக இரண்டு 
விஷயங்களை சொல்லலாம்.
குடிப்பது, புகைப்பது, பொதுவெளியில் கூச்சலிடுவது, அரைகுறையாக உடுத்துவது உள்ளிட்டவையே
 பெண்ணியம் பேசுவோரின் தகுதிகள் போன்ற 
பிம்பத்தை, ஊடகங்கள் முன்னிறுத்த 
முயற்சிக்கின்றன. பெண்ணியம் பேசுவோரில் 
சிலரின் தனிப்பட்ட விஷயங்களாக அவை 
இருக்கலாம். அவற்றை பொதுமைப்படுத்துவது 
முறையல்ல என்பது, என் கருத்து.
 
பாரதியார் இந்த பெண்கள் முன்னேற்றத்தின் 
தொடக்கப் புள்ளி ஆவார். அவரின் கூற்றுப்படிப் 
‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்’ 
பாரினில் பெண்கள் நடத்த வந்துவிட்டார்கள்.
சமூகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு , அரசியல், 
அதிகாரம், உரிமை போன்ற அனைத்திலும் பாலின அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து
 சம உரிமை பெறுதலே பெண்ணியம் என்று 
கொண்டால் இந்த புத்தகம் அவற்றைப் பேசுகிறது.
சமா- கல்வி
சங்கீதா- வேலை வாய்ப்பு
செந்தா- அரசியல்
கண்மணி- அதிகாரம்/உரிமை போராட்டம்
இவர்களைப் பற்றிய ஒரு ஒப்பீடு
சமா:
சிறிய ஊரிலிருந்து வந்தவள்.
உலகம் அறியாதவள்.
உணர்ச்சிகளின் கலவையாக இருப்பவள்.
காதல் வயப்படுகிறாள்...அது காதலா, ஈர்ப்பா 
என்று அறியாத வயதில்...ஆனால் அது ஜாதியினால் மறுக்கப்பட்டதும் அவள் அந்த நினைவிலேயே வாழ்கிறாள்.
 
காதலனை விடக் காதலை அதிகம் நேசிப்பவள்...
அந்த உணர்ச்சிக்கு விஸ்வாசமாக இருப்பதாக 
நினைத்து வாழ்க்கையில் தனித்து பயணிக்கிறாள்.
அவளது அப்பாவித்தனம் பலருக்கு சௌகர்யமாக இருக்கு....ஏழ்மையில் வாடும் விதவை அம்மா, பல குழந்தைகளுக்குத் தாயான அக்கா, 
அவள் மேல் ஒரு கண் வைத்திருக்கும் அக்கா புருஷன்....
ஏன், தோழிகளே அவளிடத்தில் தம் சுமைகளை இறக்கி வைப்பதில்லை....அவள் எப்படிப் புரிந்துகொள்வாளோ
 என்ற அச்சத்தில்.
தன்னைப் பற்றிய ஒரு சுய புரிதல் இல்லாமல்
 இழுக்கும் இழுப்புக்குச் செல்லும் பாத்திரமாக 
அவள் நமக்கு அறிமுகப்படுகிறாள்.
ஸ்திரத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவளின் பெருமை: விடுதி, நாவல் மரம், காவலாளி 
முகம்மது கனி, மற்றும் சமா.
 
பாலச்சந்தரின் படமான தண்ணீர் தண்ணீரில் அறிமுகமாகும்...மற்றும் அருவி என்பது போல.
கதையின் போக்கு அவள் வழி செல்கிறது.
எதிர்த்து சொல்ல துணிவில்லை. உள்ளுக்குள் குமையும் பெண்...தன் நகையை சுவாதீனமாக அக்கா மகளுக்கு கொடுத்தல்; இவள் கட்டிய வீட்டில் அக்கா குடும்பம் குடி புகுதல்; பேச வரும் காதலினிடம் முகம் கொடுக்காமல் இருத்தல்; விடுதிப் பெண்களை அதட்ட மிரளுதல்....இப்படி அப்பாவிப் பெண்ணான சமாவின் பார்வையில் கதை செல்கிறது.
சதா:
நான்கு தோழிகளுள் எப்பொழுதும் அனைவரையும் சந்தோஷமாக வைக்கப் பாடுபடுபவள். விஷயங்களை சீர் தூக்கிப் பார்த்து செயல்படும் யதார்த்தம்.
பணம் இல்லை அப்பாவிடம். பணம் இருக்கு அத்தையிடம்.
டாக்டர் படிப்பு படிக்கவைக்க அத்தையின் பாசமும் 
பணமும் மட்டும் காரணம் அல்ல. பொறுப்பற்ற டாக்டர் பையன், சொந்த மருத்துவமனையை நடத்தமாட்டான் 
என்ற கவலையும் காரணம்.
யதார்த்தவாதியான சங்கீதா பணத்தையும் 
பட்டத்தையும் பொறுப்பு சுமையுடனே ஏற்கிறாள்.
 பலமுறை அவள் பார்க்கும் வைத்தியம் உடலுக்கு 
மட்டும் அல்ல, மனதுக்கும் தான்.
பலமுறை சமாவுக்கு ஆறுதலாக மட்டும் அல்லாமல் அவளுக்குப் படிப்பினையாகவும், கற்பிதமாகவும்
 இருக்கிறாள்.
 
செந்தா
எந்த அரசியலை வெறுக்கிறாளோ, 
அதற்கே அடிமையாகிறாள்.
ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் அரசியல் 
சாக்கடை அனைவரையும் ஒரு சேர இணைத்துக் 
கொள்கிறது.
 
கண்மணி
ஒரு போராளியாகவும், துணிவான பெண்ணாகவும் 
வந்தாலும், கொதிக்கும் நீரிலிருந்து அடுப்பில் விழுந்த கதையாக மாறுகிறது.
சமாவுக்கு....கதை முதலிலிருந்து தொடங்குவது போல, வில்சனின் பெண் மற்றும் மாப்பிள்ளையின் பொறுப்பும அவர்களைப் பாதுகாக்கும் கடமையும் எழுகிறது.
அவள் பொறுப்பை சுமப்பது யதார்த்தமாகிறது. ரூ சிறிய திருப்புமுனை அவள் வாழ்வைப் புரட்டிப் போடுகிறது.
விலகி நின்ற சமா களத்தில் இறங்க ஆயத்தமாகிறாள்.
குனிந்த பச்சைக் குதிரை நிமிர்கிறது.
இனி அது ஓடும்!.
 



  • Tuesday, June 23, 2020

    மின்சாரவண்டிகள் - கோவை ஞானி

    புதியமாதவியின் மின்சாரவண்டிகள்
    ======================================: கோவை ஞானி.

    புதியமாதவி அவர்களின் இந்த முதல் சிறுகதை தொகுப்பு
     2005ல்  வெளிவந்ததாகக் குறிப்பிடுகிறார். 
    தொகுப்பில் 15 சிறுகதைகளும்
     மின்சார வண்டிகள் என்ற குறுநாவலும் உள்ளன. 
    பெரும்பாலான கதைகள்நல்ல கதைகள். 
    சில கதைகள் அற்புதமான படைப்புகள்.
    மின்சாரவண்டிகள் குறுநாவல் ஏற்கனவே பம்பாயைப் பற்றி,
     பம்பாயில் தமிழர்கள் வாழ்வது பற்றி நிறைய கதைகளை
      நாம் படித்திருக்கிறொம். இந்தக் கதையும்
    அவ்வகையான கதைகளில் ஒன்று. சுமாரான கதை.
    இதை விட்டுவிடலாம். 
    இன்னும் சில சிறுகதைகளையும் ஒதுக்கிவிட்டால்
     இத்தொகுப்பில் ஐந்தாறு கதைகள் மிகச்சிறப்பான கதைகள்.
    புதியமாதவியின்  கருத்தியல் வெற்றிக்கெல்லாம் 
    சார்பானது என்று இக்கதைகள் தெளிவுப்படுத்துகின்றன.

    தென்மாவட்டத்திலிருந்து பம்பாயில் குடியேறி, 
    அதன் விளைவாக பம்பாய்வாசியாகியாக மாறிவிட்டவர் 
    புதியமாதவி. (பிறகு அவருடன் உரையாடிய போது 
    தெரியவந்தது புதியமாதவி பம்பாய் தமிழர்களின்
    நான்காவது தலைமுறை என்கிற விவரம்)
    தமிழ்நாட்டிலிருந்து போகிற போதே 
    பகுத்தறிவுவாதத்தையும்
     உடன் கொண்டு போயிருக்கிறார். 
    தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து வாழ்ந்திருந்தால் 
    அவரது பகுத்தறிவு பார்வை இன்று இருப்பது போல 
    சுத்தமாக இராது என்றே கருதுகிறேன்.
    கூடுதலாக பெண்ணியச்சார்பு முதலிய 
    சமூக இயக்கச்சார்புடையவர் புதியமாதவி.
     கதைகளில் கருத்தியல் தளங்களை 
    ஒருபக்கம் வைத்துவிட்டு அவரது கலை நேர்த்திப் 
    பற்றி மிகச்சிறப்பாகக் குறிப்பிடலாம். 
    தமிழை அவர் எத்தனை அழகாக, 
    நேர்த்தியாக எழுதுகிறார், 
    சிறுகதைக்குரிய சிறப்பான நிகழ்ச்சி சித்தரிப்புகள்.. 
    இவ்வகை சித்தரிப்பில் இவரிடம் குறை காணவே முடியாது. 
    தமிழுக்குக் கிடைத்திருக்கும்
    ஓர் அற்புதமான கலைஞர்.


    இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளைப் 
    பார்ப்போம்.

    முதலில் "கண்பதி பப்பா மோரியா!"
    மும்பை நகரத் தெருக்களில் மாபெரும் கணபதி ஊர்வலம். 
    பலவண்ண கலவையில் பல்வேறு வடிவங்களில் சிலைகள்.
     மேளதாள ஊர்வலங்கள்.
    கணபதிக்கு காதடைக்கிறது. தாய் மீனாட்சி
     அம்மையை நோக்கி கணபதி பேசுவதாகக் கதை. 
    இந்த ஆரவாரங்கள் எனக்குப் பிடிக்கவில்லை என்பதில்
     அவர் சொல்லும் சான்றுகள் 4. அதில் ஒன்று கீழ் வருமாறு:

    "தாயே ... கம்சன், சூரன், சிசுபாலன், இரணியன் இவர்களை
     எல்லாம் அழிக்க நடந்த நம் பரம்பரையின் அவதாரங்கள்
     என்னால் வெறும் கதையாகிவிட்டன.

    ஏனேன்றால் நான் இன்று அவர்களின் இல்லங்களில் 
    தான் அவதரிக்கின்றேன். அவர்களின் மண்டபத்தில் தான் 
    எனக்கு பூஜையும் பஜனையும் ஆரத்தியும் அலங்காரமும் 
    நடக்கிறது. உன் பிள்ளை , உண்ட வீட்டுக்கு ரெண்டகம்
     செய்ய அறியாதவன் தாயே!

    அவர்களை என்னால் அழிக்கவும் இயலவில்லை,
     என் தும்பிக்கையால் அவர்களை என்னால் 
    அணைக்கவும் முடியவில்லையே!

    ஆண்டாண்டுக்கு என் இந்த வேதனை, 
    மனதை ரணமாக்குகிறது தாயே!"

    கணபதி இப்படிப் புலம்புவதாகக் கதை இயங்குகிறது.
    கணபதிக்கே பிடிக்காத வழிபாடுகள், 
    ஆரவாரங்கள் ஆசிரியரின் பகுத்தறிவுவாதக் கதை. 
    பகுத்தறிவை மீறி
    கலைத்திறன் பளிச்சிடுகிறது.

    அடுத்து, "பழையன கழிதலும் புதியன புகுதலும்" 
    என்ற தலைப்பில் ஒரு கதை.
    ஆசிரியர் பகுத்தறிவுவாதிதான் என்றாலும் 
    தமிழ் மரபில் வந்த, தமிழ மரபுக்கே உரிய சில சின்னங்கள், 
    சில அடையாளங்கள், சில வாழ்க்கை முறைகள்
     முதலியவற்றை நம் வாழ்வுக்குள்ளிருந்து 
    எடுத்தெறிய விரும்பவில்லை. 
    என்றும் இவை நமக்கான அடையாளங்கள். 
    கிராமத்திலிருந்து திருமணம் செய்து கொண்டு 
    நகரத்தில் குடியேறுகிறான் மகன். 
    இவன் நவீன வாழ்க்கையை விரும்புகிறவன். 
    மனைவி நகரத்துப் பெண்தான். 
    கிராமத்து வீட்டில் இவனால் ஒதுக்கப்பட்ட
     குதிர் மற்றும் கும்பாவை , பழைய கலைப் 
    பொருட்கள் விற்பனையாகும் ஒரு கண்காட்சியிலிருந்து  
    மனைவி வாங்கிவந்து வீட்டில் அலங்காரச் சின்னமாக 
    வைக்கிறாள். மாமியாருக்கு அளவற்ற மகிழ்ச்சி. 
    அற்புதமான குதிர் மற்றும் கும்பா சின்னங்களை
     நாம் ஒதுக்கிவிடவா முடியும்? சிறுகதைக்குள் 
    இப்படி நம் வரலாறு இடம் பெறத்தான் வேண்டும்.


    இன்னுமொரு கதை. இன்று பாகிஸ்தானில் எத்தனையோ 
    வழக்குகளுக்கு ஆளாகி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் 
    முன்னைய அதிபர் முஷ்ரப் பற்றி வெளிவந்த ஒரு செய்தி 
    இங்கு கதையாகிறது. முஷ்ரப் தான் பிறந்த 
    இந்திய கிராமத்திற்கு வருகிறார். சிறுவயதில் 
    தனக்குத் தோழியும் இன்றும் அவரால் மறக்க 
    முடியாதவளுமான அவள் வீட்டுக்குச் செல்கிறார். 
    வீட்டின் சுவரில் படங்கள் பல மாட்டப்பட்டிருக்கின்றன. 
    இந்த வீட்டில் பிறந்த மக்கள், அவர்கள் மூவரும்
     இந்திய பாகிஸ்தான் போரில் கொல்லப்பட்டவர்கள்.
     தீவிரவாதியாய் சுட்டுக் கொல்லப்பட்டவர் 
    கணவனும் குழந்தையும். மனநிலை பாதிக்கப்பட்டவராய் 
    முஷ்ரப் பையும் அடையாளம் தெரியாதவளாய்
     பிரம்மைப் பிடித்தவளாய் நிற்கிறாள் அந்தப் பெண். 
    கதை நம் மனதை உருக்குகிறது. 
    நம் மனத்தைக் கலங்கடிக்கிறது. 
    இத்தனைப் பேர் சாவுக்கும் ஒரு காரணமாய் நிற்கிறார்
     முஷ்ரப்.
     அவரும் மனம் கலங்குகிறார். 
    இன்றும் இந்த முஷ்ரப் தான் நாட்டு நலனுக்குத்தான் 
    எல்லாவற்றையும் செய்தேன் இவைக் குற்றம் என்றால் 
    என்னை மன்னியுங்கள் என்று பாகிஸ்தான் மக்களை 
    வேண்டுகிறார். இந்தக் கதையில் ஆசிரியர் 
    தன் கற்பனைகளையும் சேர்க்கத்தான் செய்திருப்பார். 
    எல்லாமே இணைந்து ஒரு நல்ல சிறுகதையை 
    நமக்குத் தந்திருக்கிறார். போர் அறவே வேண்டாம். 
    இந்தியா பாகிஸ்தான் போருக்கு பாகிஸ்தான் 
    மட்டுமே காரணம் தானா?

    நான்காவது கதை சிஸ்டர். சற்று விரிவான கதைதான்.
     வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய கதை.
     கல்லூரி விடுதியில் இருவர். ஒருவர் சிஸ்டர்,
     இன்னொருத்தி தான் காதலித்தவனின் கடிதம்
     கண்டு துணுக்குற்று இருக்கிறாள். 
    இருவரும் பலநாள் பழகியவர்கள். சிஸ்டர் கேட்கிறார் 
    " மறந்துவிட்டானா?" 
    தன் கதையை சிஸ்டருக்கு இவர் சொல்லவில்லை.  
    சிஸ்டர் எப்படி தெரிந்து கொண்டார்?  
    இந்த வயதில் இவள் கலங்க வேறு என்ன காரணம் 
    இருக்க முடியும்? இவள் சோகத்தை 
    எப்படி சிஸ்டர் புரிந்து கொண்டார்? 
    இந்தப் புள்ளியில் தான் கதை முன்னும் பின்னுமாக
     நகர்கிறது. சிஸ்டர் ஆவதற்கு முன்பு இவருக்கும்
     ஒரு காதலன் இருந்தான். ஏதோ ஒரு காரணத்திற்காக 
    அவன் இவளை மறுத்துவிட அந்த சோகம் தாக்கிய 
    ஒரு கணத்தில் சிஸ்டர் ஆவது என முடிவு செய்தாள்.
     இந்நாள்வரை அதற்காக சிஸ்டர் தனக்குள் வருந்திக் 
    கொண்டிருக்கிறாள். சில நாட்கள் சென்ற பிறகு 
    அவர் தோழி மகிழ்ச்சியாக திருமண பத்திரிக்கை 
    கொண்டு வருகிறாள்.

    காதலன் மனம் மாறிவிட்டானா? இல்லை, 
    இன்னொருவனோடு அவளுக்குத் திருமணமா? 
    சிஸ்டர் அன்று இயேசுவிடம் மன்றாடுகிறார்.
     தன் தவறுக்காக மன்னிப்பு கோருகிறார். 
    பகுத்தறிவாளர் ஒருவர் தான் இப்படிக் கதை
     சொல்ல வேண்டும் என்பதில்லை, 
    எல்லோருக்குமான வாழ்வியல் இது. 
    ஜெயகாந்தனின் 'பாவமன்னிப்பு" சிறுகதை நினைவுக்கு
     வருகிறது. அவர் கதையிலும் சிஸ்டர் கர்த்தரிடம் 
    மன்னிப்பு வேண்டுகிறார். 
    பேருந்தில் பயணம் செய்தப்போது எதிர் இருக்கையில்
     இருந்த ஒரு தாய் குழந்தைக்கு பாலூட்டிய போது
     அவளைக் கொஞ்சுவதைப் பார்த்து இப்படி 
    ஒரு பாக்கியத்தை நாம் இழந்துப் போய்விட்டோமே 
    என்பதாக கர்த்தரிடம் மன்னிப்பு வேண்டுவார் சிஸ்டர். 
    சிஸ்டர் என்றால் இவர்களுக்கு ஏன் 
    இப்படி ஒரு உணர்வு??!


    கடைசியாக ஒரு கதை, "ஆண்டாளும் ஆத்தங்கரைச் சாமியும்". 
    கதையின் கொள்ளை அழகை இங்குச் சொல்லவே 
    வார்த்தையில்லை. இந்தத்  தொகுப்பில் உள்ள இச்சிறுகதை
     "ஒரு நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்பில்
     சேர்க்கப்பட வேண்டியது"

    நகர வாழ்க்கையில் மிதந்த கணவன் மனைவி இருவர். 
    கணவன் கிராமத்தில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் 
    கொடைவிழாவிற்கு கணவனுடன் வருகிறாள் அமுதா.
    கிராமத்தின் கூத்தும் கும்மாளமும் இவளுக்குப் பிடிக்கவில்லை. 
    நண்பன் எழுதிய ஆண்டாள் நாவலைப்
    படித்துக்கொண்டிருக்கிறாள். 
    ஆண்டாளுக்கு இறுதியில் என்ன நேர்ந்தது? 
    பெருமாள் ஒருவருக்குப் பின்னால் இருந்த 
    சுரங்கத்திற்குள் போய்ச் சேர்ந்தாள் ஆண்டாள். 
    உருக்கமான கதை. 
    இரவு 12 மணிக்கு சுடலைக்குச் சென்று
     ஒற்றை எலும்பை எடுத்துக் கொண்டு சாமி 
    ஏறிய நிலையில் ஒரு காலை மடித்துக் 
    கட்டியபடி இன்னொரு காலால் இவர்கள் 
    தெருவில் ஆவேசமாக ஆடிக்கொண்டு 
    வருகிறான் மாடசாமி. இவர்கள் தெருவாசிகள் 
    உயர்சாதியினர். ஆத்தங்கரை சாமி இவர்களுக்கு
     கீழ்ப்பட்ட சாதியினரின் சாமி. 
    இரு சாதிகளுக்கும் இடையில் பகைமை
     என்ற போதிலும் கொடை விழாவில் சாமிவருவதை 
    மறுக்க முடியவில்லை. 

    நகரத்தில் ரிலையன்ஸ் சர்ட்டும் இண்டிகா காரோடும் 
    இருந்தக் கணவன் விழாவில் கலந்துக் கொண்டு 
    அழுக்கேறிய உடையோடு உள்ளே வருகிறான். 
    தன் கிராமத்து சாமி அவனுக்கு வேண்டும். 
    அவன் கிராமத்தான். நகரில் நவீன நாகரிகத்தோடு
     வாழ்ந்தாலும் அவனுக்குள் அந்தக் கிராமத்தான் 
    வாழ்கிறான். சாதியைக் கடந்தவன் இவள். 
    அம்மன் கொடை இவளுக்கும் வேண்டும். 
    அப்பொழுது முதற்கொண்டே ஆண்டாளையும் 
    ஆத்தங்கரை சாமியும் இவள் நினைவுக்கு வருகிறார்கள்.
     மனிதர்கள் மத்தியில் நகரங்கள் என்ன?; 
    கிராமங்கள் என்ன,? 
    சாதிகளுக்கு இடையில் ஏற்ற தாழ்வுகளுக்கு
     என்ன அர்த்தம்?
    மரபும் நவீனமும் இரு வேறு துருவங்கள் தானா?
    இந்த வேறுபாடுகள் மனிதனுக்குள் என்ன ஆகின்றன?


    புதியமாதவியும் அவர் மின்சாரவண்டிகளும் தொடர்ந்து
    ஓடிக்கொண்டே இருக்கின்றன.

    (கோவை இலக்கியச் சந்திப்பு: 37ஆம் நிகழ்வு.
    29/12/2013 , எஸ் பி நரசிம்மலு நாயுடு உயர்நிலைப் பள்ளி, 
    கோவை 1. நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

    வெளியீடு: மருதா பதிப்பகம், சென்னை.