Tuesday, July 22, 2008

எங்கே போனது எங்கள் அன்னையரின் பெருவெளி?



மங்கையுடன் கலந்துரையாடல்:


சென்ற வாரம் மும்பை வந்திருந்த நவீன நாடகக் கலைஞர், இயக்குநர், சமூகப் போராளி
இடதுசாரி சிந்தனையாளர் அ.மங்கை அவர்களுடன் சனிக்கிழமை (19/07/2008 காலை 10.30 முதல்
12.30 வரை ) என் இல்லத்தில் நடந்த கலந்துரையாடலில் மனம் திறந்து அவர் பேசியதும்
பெண்ணியம், தலித்தியம், நாடகம், தன் வாழ்க்கை, குடும்பம், பொதுவெளி குறித்த கருத்துகளைப்
பகிர்ந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக மன்றத் தலைவர் பேராசிரியர் சமீராமீரான், மற்றும்
அமலா ஸ்டான்லி, எழுத்தாளர் வதிலை பிரதாபன், கவிஞர் தமிழ்நேசன், சங்கரநயினார், மும்பையில்
தமிழ் நாடகங்களை இயக்கி அரங்கேற்றும் இந்தியன் தியேட்டர் பரமேஸ்வரன்,
மற்றும் பானு இவர்களுடன் மும்பை இலக்கிய வட்டத்தின் மிகச் சிறந்த விமர்சகராக திகழும்
கே.ஆர்.மணியும் கலந்து கொண்டு நிகழ்வுக்கு சிறப்பு செய்தார்கள்.

மங்கையையின் நாடகங்களைப் பற்றிய சிறியதோர் அறிமுகத்தை நான் வழங்க அதன் பின்
மங்கை தனக்கே உரிய பாணியில் தன் கருத்துகளைப் பேச ஆரம்பித்தார்.

பெண்ணியம், தலித்தியம் தமிழ்ச்சூழல் என்று ஆரம்பித்தவர் மிகவும் கவனமாக
தமிழ்ச்சூழல் என்பதை தமிழகச்சூழல் என்று மாற்றிக்கொண்டார்.

பெண்ணியம் என்பது பெண்களைப் பற்றி பெண்கள் பேசுவது மட்டுமல்ல. அது ஒரு கோட்பாடு.
அது ஆண், பெண், அரவாணிகள் உள்ளிட்ட சமூகம் சார்ந்தது.
உடலரசியல் என்பது உடலுறவு அரசியல் அல்ல.
70களுக்குப் பிறகு பெண்ணியம் விரிவடைந்துள்ளது. பெண்ணியமும் தலித்தியமும் கூர்மையடைந்துள்ளது.
இக்காலக் கட்டத்தில் தான் "பண்பாடு" என்ற சொல் பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக கலை இலக்கிய துறையினருக்கு என்று சொல்ல வேண்டும்.

பண்பாடு என்று பேச வரும்போது எது பண்பாடு" ? என்ற கேள்வி நம் முன் எழும்.

பண்பாடு என்பது பெண் பூ வச்சிக்கிறதா?
புடவைக் கட்டிக்கிறதா?
பொட்டு வச்சிக்கிறதா?
இதெல்லாம் தான் பண்பாடா?

ஒரு பெண் மது அருந்தும் காட்சியும் அவள் இருபக்கமும் இரண்டு ஆண்கள்
என்று காட்டப்படும் காட்சியின் பண்பாடு கெட்டுவிட்டதாக கூப்பாடு போடுகிறோம்.
அண்ணா யுனிவர்சிட்டியில் பெண் மாணவிகள் ஜீன்ஸ் & டி ஷ்ர்ட் போட்டு வருவதற்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது. அதற்குச் சொல்லப்படும் காரணம் அந்த உடையில் மாணவிகள் வந்தால்
பாடம் சொல்லிக்கொடுக்கும் பேராசிரியரின் கவனம் சிதைகிறதாம்!

என்னிடம் கேட்டால் நான் திணைப்பண்பாடு தான் பண்பாடு என்று சொல்ல வருவேன்.
திணைப் பண்பாடு என்றால் நிலம் சார்ந்து, நிலம் சார்ந்த மரம் செடி கொடி சார்ந்த வாழ்வும்
வாழ்வில் அவை அனைத்திற்குமான இடமும் என்று தான் காட்டுவேன். இந்தத் திணைப் பண்பாடுதான்
பண்பாட்டின் அடிப்படை.

சமூகத்தில் பெண்களின் இடம் என்று பார்க்க வரும்போது 1920களில் 12 பெண்கள் இதழ்கள், பெண்களே
நடத்தியது இன்றைய மங்கையர் மலர் பாணியில் அல்லாமல் பெண்களின் பிரச்சனைகளைத் தீவிரமாக
பேசிய இதழ்கள், 25 பெண் நாவலாசிரியைகள் இருந்திருக்கிறார்கள் என்று பதிவு செய்கிறார் மிதிலா.
வை.மு.கோ சற்றொப்ப 48 நாவல்கள் எழுதியிருக்கிறார்.
ஆனால் இன்றைக்கு பெண்கள் முன்னேறிவிட்டதாக நினைக்கும் இன்றைய சூழலிலும் எத்தனைப் பெண்கள்
சமூக வெளியில் எழுந்து நிற்கிறார்கள்.
இன்றைக்கெல்லாம் எங்காவது கூட்டம் நடக்கிறது என்று வைத்துக் கொண்டால் 500 பேர்கள் கலந்து
கொண்ட கூட்டமாக இருந்தால் அதில் 4 பெண்கள் தான் இருக்கிறார்கள். 500க்கு 4 என்ற கணக்கில்தான்
பெண்களின் பங்களிப்பு இருக்கிறதை நாம் கண்கூடாகவே பார்க்கிறோம்.

புதியமாதவி : இப்போது பெண்களின் பங்களிப்பைப் பற்றி ?

அதைச் சொல்ல வருகிறேன். ராஜம் கிருஷ்ணன் நாவல்கள் எழுதுவதற்கு முன் பீஃல்;ட் வொர்க் பண்ணிட்டுதான்
எழுத ஆரம்பிப்பார்.
இன்றைக்குச் சொல்ல வேண்டும் என்றால் தமிழ்ச்செல்வியைக் குறிப்பிடலாம்.
தமிழ்ச்செல்வியின் கற்றாழை நாவல் மிகவும் குறிப்பிடத்தக்கது. தமிழ்ச்செல்வியின் நாவல்களில்
பெண்களை அவள் அழுது கண்ணீர்ச்சிந்துபவளாக அடி வாங்கிக்கொள்கிறவளாக சித்தரிப்பதில்லை.
அதைப் போலதான் பாமா, சிவகாமியின் படைப்புகளும் நமக்கு நாம் அறியாத வேறொரு உலகத்தைக்
காட்டுகின்றன.
பாமா வின் நாவல் ஆரம்பிக்கும்போதே சேரியிலிருந்து தான் ஆரம்பிக்கும். நான் அதைக் காமிரா வைத்துக்கொண்டு காட்சிப் படுத்தினால் எடுத்தவுடன் நான் காட்ட ஆரம்பிக்கும் காட்சி சேரியாக
இருந்தாக வேண்டும். சேரியில் இருந்துதான் அவர் ஊரைப் பார்க்கிறார். அது மட்டுமல்ல,
"பசி, பட்டினி, சாதிக்கொடுமை இத்தனைக்கும் நடுவில் சேரியில் எங்கள் வாழ்க்கையில்
ஒரு கொண்டாட்டம் இருந்தது" என்பார் பாமா.
கவிதையை எடுத்துக் கொண்டால் மாலதி மைத்ரியின் கவிதைகளைக் குறிப்பிட வேண்டும்.
அது உலகமயமாதலாகட்டும், அணு ஆயுத எதிர்ப்பாகட்டும், காதல் உணர்வாக இருக்கட்டும்
எல்லாவற்றிலும் அவர் கவிதைகள் குறிப்பிட்டு பேசப்பட வேண்டியவைகளாக இருக்கின்றன.

இவர்கள அனைவருக்கும் முன் ஆரம்பித்தது தான் என் கலைப் பயணம். நான் இடதுசாரி அமைப்பைச்
சார்ந்து தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த நேரம். ஒரு நடிகையாகத்தான் என் நாடக கலைப் பயணம்
துவங்கியது.
1978களில் பாதல் சர்க்காரின் நாடகப்பயிற்சி பட்டறை சென்னையில் நடைபெற்றது. எங்களுக்கெல்லாம்
குரு, வழிகாட்டி என்று அவரைத்தான் சொல்லவேண்டும். அப்போ அந்தப் பயிற்சிப்பட்டறையில்
கலந்து கொண்டேன்.
அரசியல் சார்ந்த ஈடுபாட்டில் நான் நாடகத்திற்கு வந்தவள். என் நாடகங்களைப் பற்றிய
விமர்சனங்கள் என்னை அதிகம் அதனால் தான் பாதிப்பதில்லை என்று நினைக்கிறேன்.

ஒரு நாவலை நாடகமாக்கும் போது நாவலில் இருந்த இதெல்லாம் முக்கியம் அதைக் காட்டவில்லை
என்ற விமர்சனம் எழும். அதைப் போல்வே நாடகத்தைப் பார்த்து சிலர் நாவலில் சித்தரிப்பை விட
நாடகத்தில் கதைப் பாத்திரம் உயிர்த்துடிப்புடன் இருப்பதாகச் சொல்வார்.
மொத்தத்தில் என் நாடகங்கள் நாடகமா இல்லையா என்று வைக்கப்படும் விமர்சனங்கள் எல்லாம்
என்னைப் பாதிப்பதில்லை.
சுருதி சேர்ந்தால் தான் சங்கீதம் வரும் என்பார்களே அது போல தான் நாடகக்கலைஞனுக்கு
உடல், குரல், மனம் இந்த மூன்றும் சேர்ந்த பயிற்சி தேவை என்பார் பாதல் சர்க்கார்.
இந்தப் பயிற்சி என்பது மற்ற உடற்பயிற்சிகளிலிருந்து வேறுபட்டது.






சமீராமீரான்: உங்கள் நாடக ஒத்திகைகள் குறித்து ...?

என்னுடைய நாடகங்கள் பெரும்பாலும் வொர்க்ஷாப்பில் தான் எழுதப்படுகிறது என்று சொல்லலாம்.
அதை நெறிப்படுத்துவது மட்டும் தான் என் பணி. தமிழில் நெறியாள்கை என்ற சொல்லை
அறிமுகப்படுத்தியவர்கள் நாங்கள் தான். நீங்கள் கூட மணிமேகலை நாடகத்தை
மும்பையில் எழுத்தாளர் மன்றத்தில் அரங்கேற்றிய போது உங்கள் விழா அழைப்பிதழில்
நெறியாள்கை : அ. மங்கை என்று போட்டு இயக்குநர் என்று அடைப்புக்குறிக்குள்
அச்சடித்து இருந்தீர்கள்!
நான் இயக்குநர் என்று சொல்லிக்கொள்வதில்லை. இயக்குநர் என்ற சொல் பாவைக்கூத்திலிருந்து
வந்தது. கூத்தில் பாவைகளை இயக்குபவர் இயக்குநர். அவருடைய கட்டுப்பாட்டுக்குள் தான்
பாவைகளின் அசைவுகளும் இயக்கமும். எங்களுடைய நாடகங்கள் ஒரு கூட்டு முயற்சி.
டீம் வொர்க்தான்.
இங்கே நான் எல்லாம் தெரிந்த இயக்குநர் அல்ல. நானும் அவர்களில் ஒருத்தி.
உங்கள் கேள்விக்கு வருகிறேன். எங்கள் நாடகங்களில் நடிப்பவர்களுடன் ஓரிடத்தில்
ஒரு விடுமுறை நாளில் தங்கி காலை 6 மணிக்கு ஆரம்பித்தால் இரவு 11 மணிவரை
ஒத்திகை நடக்கும். அப்படி தொடர்ந்து 15 நாட்கள் நடத்தினால் எங்களால் ஒரு நாடகத்தை
அரங்கேற்ற முடியும்னும் சொல்லலாம். ஊரை விட்டு வெளியில் கல்லூரி அரங்கம், திருமண
அரங்குகள் இந்த மாதிரி எங்காவது இடம் பார்த்து எங்கள் வொர்க்ஷாப்பை ஆரம்பிப்போம்.

கே.ஆர்.மணி : உங்க டீம் எப்படி?

மங்கை: அதில் நான் ரொம்பவும் கொடுத்து வைத்தவள் என்று தான் சொல்ல வேண்டும். ராமானுஜம்-
இந்திராபார்த்தசாரதி நாடகத்தில் ஏற்பட்ட மாதிரி எல்லாம் இதுவரை எனக்குப் பிரச்சனைகள்
ஏற்பட்டதில்லை.
குறிப்பாக ஓவியர் மருதுவுக்கு நான் ரொம்பவும் கடமைப் பட்டிருக்கிறேன். என் நாடகங்களுக்கு அதிகமாக
காட்சி அமைப்புகள் செய்தவர் அவர்தான்.
நானே கூட அடிக்கடி சொல்வதுண்டு.. நான் ஒரு காட்சியைக் காட்டுவதற்கு முன்பே திரையில்
அந்தக் காட்சியைப் பார்த்துவிடுகிறார் மருது என்று. அப்படித்தான் மணிமேகலை நாடகத்தில்
கணிகை, துறவி இருவருக்கும் நடுவில் ஆலமரம்- போதிமரத்தைக் காட்சி படுத்திவிட்டார்.
அதைப் போலவே கவிஞர் இன்குலாப் அவர்களையும் சொல்ல வேண்டும்.
'தமிழாசிரியராக இருந்த என்னை நாடக ஆசிரியராக மாற்றியவர் மங்கை" என்று சொல்லுவார்.
like minded people தான் எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ...

பானு: உங்க ஆடியன்ஸ் பற்றி:
சபாக்களில் நடத்தப்படும் நாடகங்களிலிருந்து எங்கள் நாடகங்கள் வித்தியாசமானவைனு
சொன்னேனில்லையா. எனக்குப் பெண் பார்வையாளர்கள் வேண்டும் என்பதாலேயே என் நாடகங்களை மதியம்
-அப்போதுதான் பெண்களுக்கு நேரம் கிடைக்கும் என்பதால் - போட்டிருக்கிறேன்.
எங்கள் நாடகத்தின் வெற்றியைத் தீர்மானிப்பது கூட்டத்தின் வந்திருக்கும் பார்வையாளர்களின்
எண்ணிக்கையைப் பொறுத்தல்ல. ஒரு பத்து புத்தகம் தரும் தாக்கத்தை ஒன்னேகால் மணிநேரத்தில்
எங்கள் நாடகங்கள் காட்டும். என் பல நாடகங்களில் பார்வையாளர்களும் நாடகத்தின் ஓர் பாத்திரங்களாக
இருப்பார்கள். குறிப்பாக என் காலக்கனவு நாடகத்தைச் சொல்ல வேண்டும்.
எஙகே நாடகம் போடறோமோ அந்த இடத்திலிருக்கும் ஒரு பார்வையாளர் அன்றைக்கு
பெரியாரின் பெண்ணியக் கருத்தையோ சமூகச் சிந்தனைக் கருத்தையோ வாசிப்பார்
நாடகத்தின் ஒரு காட்சியில் என்றெல்லாம் வரும்.

வதிலை பிரதாபன் : என்ன மாதிரியான பிரச்சனைகளை நாடக அரங்கேற்றத்தில் சந்தித்திருக்கிறீர்கள்?

மங்கை: ஒவ்வொரு நாடகத்தின் போது வெவ்வேறு பிரச்சனைகள். நானும் சில சமயங்களில்
பிரசவ வாக்குறுதி போல இனிமே நாடகம் பண்ணப்போறதில்லைனு எல்லாம் சொல்றதுண்டு.
ஆனா இன்னிக்கு வரை கிட்டத்தட்ட 25 வருடங்கள் நாடகம் பண்ணிட்டுதான் இருக்கேன்.
பிரச்சனைனு நீங்க கேட்டதினால் சொல்ல வருகிறேன். எங்கள் அவ்வை நாடகம்
அரங்கேறிய பிறகு பாரதிய ஜனதா கட்சியினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
மரியாதைக்குரிய அவ்வையை மங்கை அசிங்கப்படுத்திவிட்டார் என்றார்கள்.
அவ்வைக்கும் அதியமானுக்கும் இடையில் இருந்த நட்பு காதலா? மங்கை அவ்வையைக் கொச்சைப்படுத்திவிட்டார் என்றார்கள்
கள் குடித்தாள் அவ்வை..
காதலித்தாள் அவ்வை ..
என்று பத்திரிகைகள் கவர் ஸ்டோரி எழுதின. உண்மை அறிய ஒரு குழு அமைக்கப்பட்டது.
இதில் பிரச்சனை என்ன வென்றால் நான் தமிழிலக்கியம் படித்தவள் அல்ல. நானொரு
ஆங்கில பேராசிரியர். தப்பித்துக் கொள்ளலாம்! ஆனால் ஸ்கிரிப்ட் எழுதிய கவிஞர் இன்குலாப்
என்னைப் போல தப்பித்துக் கொள்ள முடியாதே! அவர் தமிழ் பேராசிரியர்.
அவ்வையின் பாடல்களிலிருந்து தான் அவ்வை நாடகப் பாத்திரம் உருவாக்கப்பட்டது. புதுசா
நாங்க எதையும் அவ்வையின் மீது திணிக்கவில்லை. அதியமான் இறந்த போது அவ்வை வைக்கிற
ஒப்பாரிப் பாட்டில் இதெல்லாம் இருக்கத்தான் செய்கிறது.
(சிறிய கட் பெறின் எமக்கீயும் மன்னே.. பாடலை மங்கைப் பாடிக்காட்டினார்)
அவ்வை பாணர் குல வாழ்க்கை வாழ்ந்தவள். அவளை ஒரு போர் எதிர்ப்பாளராகவே
நாங்கள் நாடகத்தில் காட்டினோம். அதுவும் பால்மணம் மாறாத மகனைப் போர்க்களத்துக்கு
அனுப்பி அவன் மார்பில் காயம் பட்டு இறந்ததை உறுதி செய்வதாக எழுதப்பட்டிருக்கும்
நம் புறநானூற்று தாயின் பிம்பத்தை கொஞ்சம் எங்கள் நாடகம் அசைத்து காட்டியது.
போர்க்களத்தில் இறந்தவர்கள்.. அல்ல விதைத்தவர்களுக்காக நடப்படும் நடுகல்வழிபாடு
நம் இலக்கியத்தில் பெருமையுடன் பேசப்படுகிறது. ஆனால் எங்கள் நாடகத்தில்
போர்வீரர்களின் நடுகல்களை நாங்கள் கல்லறைகளாகவே காட்டினோம். அது பலருக்கு
அதிர்ச்சியாகவே இருந்தது. அதிலும் அந்தக் கல்லறைகளில் ஆப்கானிஸ்தான், ஈராக்..
என்று காட்டி நடுவில் ஈழத்தைக் காட்டியிருந்தோம்.. பார்வையாளராக வந்திருந்தப் பலரை
அந்தக் காட்சி உலுக்கிவிட்டது. உங்கள் நாடகத்தில் இப்படி கிடையாதே என்றார்கள்..
இந்தக் காட்சிப் படுத்தல்தான் மங்கையின் கையெழுத்து என்று சொன்னேன்.
இம்மாதிரியான காட்சிப்படுத்தல் நாடகத்தின் வசனம் , பாத்திரங்களின் நடிப்பு இவைகளுக்கு
அப்பால் நிறைய கருத்துகளை பார்வையாளனுக்கு கொடுத்துவிடும்.

புதியமாதவி: மங்கை நீங்கள் நடுகல்களை கல்லறைகளாக காட்டி இருப்பதைச் சொன்னவுடன்
அவ்வையின் கவிதை நினைவுக்கு வருகிறது.


(இந்தக் கால அவ்வைனு சொல்லுங்க)

ஈழத்துக் கவிஞர் அவ்வை, உங்கள் தொகுப்பு பெயல் மணக்கும் பொழுதில் வாசித்தேன்.
தாயின் குரல் என்ற கவிதை..

"இன்னுமா 'தாய் நிலம்'
புதல்வர்களைக் கேட்கிறது?'
என்று கேட்டிருப்பார்.

கொலையுண்டு போன
என் புதல்வர்களின்
முற்றாப் பிஞ்சுடலின் ஊனருந்தி
தன் கோரப் பசியாற்றி
தாகம் தீரச் செந்நீரும் குடித்தபின்
இன்னுமா தாய் நிலம்
புதல்வர்களைக் கேட்கிறது?

போராட என்னை அழைக்காதே
நானொரு தாய்
எனது புதல்வர்களையும் கேட்காதே
இரக்கமற்ற 'தாய் நிலமே'
கொல்லப்பட்ட என் புதல்வர்களின் இரத்தம்,
இன்னமும் காயவில்லை...

இன்றைக்கு போர்க்களத்தில் நம் கண்முன்னால் நிற்கும் புறநானூற்று தாயின் குரல் இது.

மங்கை: நீங்க அவ்வையின் கவிதையைச் சொன்னவுடன் இதுவும் நினைவுக்கு வருகிறது.
முதலில் அவ்வையின் நாடகத்தை இன்குலாப் மகாகவி பாரதியின் கவிதை வரிகளுடன்
முடித்திருந்தார். அதன் பின் நான் அவ்வையை சந்தித்தேன் எதேச்சையாக.
அவருடைய கவிதை வரிகளுடன் அவ்வை நாடகத்தின் இறுதிக் காட்சியை அமைத்தோம்.

தமிழ்நேசன்: அவ்வை கள் குடித்தாள் என்கிறீர்கள். அதற்கு முன் பண்பாடு பற்றி பேசும்போது
மது அருந்தும் ஒரு பெண் அவளின் இருபக்கமும் ஆண்கள் என்ற காட்சியை விமர்சனம் செய்தீர்கள்.
மது அருந்துதல் உடல் நலனுக்கு கெடுதல் என்பதால் நான் அதை ஆதரிக்கவில்லை.
ஆனால் அவ்வை கள் குடித்தக் காட்சியை.
.

மங்கை: இந்த மாதிரி வாழ்க்கை அறம் - ஒழுக்கம் பற்றிய கருத்துகளைப் பேசினால்
அதைப் பற்றி நான் எதுவும் சொல்லவரவில்லை. ஆனால் நம்ம ஊரிலே கோவிலுக்கு கொடை விட்டு
கொடுக்கும்போது ஆடுவெட்டி பலி கொடுத்திட்டு வச்சிருக்கிற சாராயத்தை எடுத்து சாமியாடி
குடிக்கிறாரு. ஆனா அதையே ஒரு பெண் குடிச்சா ஏன் தப்புனு சொல்றீங்க என்பது தான்
எங்க கேள்வி.
ஒழுக்கம் என்று சொல்லி நீ ஒவ்வொரு கட்டுப்பாடாக சொல்லிக்கொண்டிருப்பாய்.
குடிக்காதேனு ஆரம்பத்தில் சொல்லுவாய். அப்புறம் புருஷன் குடிச்சிட்டு வந்து அடிச்சாலும்
வெளியில் சொல்லாதே என்பாய். நீ பொண்ணு புடவை தான் கட்டிக்கனும் அதுதான் பண்பாடுனு
சொல்வாய்...
எல்லாத்தையும் பண்பாடு என்ற ஒற்றைச் சொல்லில் எங்களைக் கட்டுப்படுத்துவதை
நாங்கள் விரும்பவில்லை.

சமீராமீரான்: அந்தக் காலத்தில் நம்ம பாட்டிகள் எல்லாம் பீடி குடிச்சிருக்காங்க தெரியுமா?

மங்கை: பெண்கள் வாழ்க்கையின் இப்போ மாற்றம் ஏற்படலையானு கேட்டா நிச்சயமா
ஏற்பட்டிருக்குனு சொல்லுவேன். மாசம் 20,000 சம்பளம் வாங்கறா மகள் என்றவுடன்
அவளை வீட்டு விட்டு வெளியில் தொலை ஊர்களுக்கு வேலைக்கு அனுப்பிட்டு அவள்
காதலிச்சிட்டா மட்டும் ஆவேசப்படறோம்!

ஒரு காலத்தில் சென்னையில் பெண்கள் தனியாக தங்குவதற்கு யாரும் வீடுகளை வாடகைக்குத்
தர மாட்டார்கள். ஆனா இன்னிக்கு நிலைமை மாறிப்போச்சே. அதுவும் ஐ.டி. செக்டார் வந்தப் பின்
நான்கைந்து பெண்கள் ஒன்று சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்குவது ரொம்பவும்
சாதாரண நிகழ்வாக இருக்கிறது.
நுகத்தடி கயிற்றின் நீளத்தை நீட்டி இருக்கிறார்கள். கயிற்றின் நுனியைப் பிடித்திருப்பது
நீங்கள் தான் ! அதில் மாற்றமில்லை

புதியமாதவி: உங்கள் காலக்கனவு நாடகத்தைப் பற்றி சொல்லுங்களேன்..

மங்கை: காலக்கனவு நாடகத்தை ஒரு ஆவண நாடகம் என்று இப்போதைக்குச் சொல்லலாம்.
ஏன்னா எனக்கு வேறு வார்த்தை கிடைக்கவில்லை.
ஆங்கில எழுத்து "Y" மாதிரி அமைப்பில் பாய். அதில் நடிக்கும் கதாபாத்திரங்கள்
அந்த "Y" க்கு நடுவில் கூட பார்வையாளர்கள் இருப்பார்கள். தோழமை கீதா தான்
ஆவணங்களைச் சேகரித்தார்.
முதன் முதலில் கலைமகளில் வெளிவந்த போஸ்டர், 19 நூற்றாண்டில் பெண்களின்
பெண்ணியக்குரல்கள், அவர்கள் பேசிய கருத்துகள், பெண்கல்வி முதல் தேவதாசி ஒழிப்பு வரை
ஏன் உடலுறவு குறித்து அன்றைக்கே பெண்கள் மிகவும் தெளிவாக பேசி இருக்கிறார்கள்.

ஆசிரியருக்கு கடிதம் ஒன்று "பெண் இன நல்லாள்" என்ற பெயரில் குடியரசு பத்திரிகையில்
வந்திருக்கிறது,. ஒரு கேள்விக்கு பெண் இன நல்லாள் பதில் சொல்கிறாள்..
அது கருத்தடை சாதனம் பற்றிய கேள்வியாக இருந்திருக்க வேண்டும்.
இன்பம் தரும் பாலுறுப்புகள் உடலின் முன்பகுதியில் இருப்பதால் உடல் சுகத்திற்கு
இதனால் எதுவும் தடையில்லை என்று பதில் எழுதுகிறார்.

குட்டிரேவதி எழுதிய முலைகள் கவிதையும் குஷ்பு பிரச்ச்னையும் தமிழ்நாட்டில் இவ்வளவு
எதிர்ப்புஅலைகளை ஏன் உருவாக்கியது?
ஏன் நிறப்பிரிகை இதழ்களில் எழுதியவர்கள் குட்டிரேவதிக்கு முன்பே இது குறித்து நிறைய
எழுதியிருந்தார்களே அப்பொதெல்லாம் கிளம்பாத எதிர்ப்பலை குட்டிரேவதி
எழுதிய பிறகு ஏன் கிளம்பியது?
47, 50களிலெயே சுயமரியாதை இயக்கத்தில் பெண்கள் ஏற்படுத்தி இருந்த
சமூக "பெருவெளி " எங்கே போனது?
ஒரு சுயமரியாதை மாநாட்டில் பேசும் பெண் உன் வீட்டில் உன் தங்கை விதவையாக
இருந்தா கண்டுக்காம முற்போக்கு கொள்கைகளை வெளியே கழட்டி வச்சிட்டு வந்திருக்கிற
ஆண்சிங்கங்களே..! என்றுதான் தன் பேச்சையே ஆரம்பிக்கிறார்!
இவ்வளவும் இவர்கள் செய்தப்பின்பும் நம் மதிப்பீடுகள் ஏன் மாறலை?
இதுதான் எங்களை கவலைப்படுத்தி உள்ளது. சில நேரங்களில் சோர்ந்து
போகவும் வைக்கிறது.

47, 50 எதற்கு? நம் நீண்ட நெடிய பெண்ணிய வரலாற்றில் அவ்வையும் மணிமேகலையும்
வாழ்ந்த பெண்களின் மண்ணில் அந்தப் பெருவெளி எங்கே மண்மூடிப் போனது?

அதிலும் குஷ்பு விசயத்தில் அவர் ஒரு சினிமா நடிகை என்பதும் அதிலும் இசுலாமியர்,
தமிழரல்லாதவர் என்பதும் சேர்ந்து கொண்டது வேறுகதை.
ஒரு சினிமா நடிகைனா இப்படித்தான் இருப்பானு சில எண்ணங்களை வைத்திருக்கிறோமே..

சுகிர்தராணி பக்கத்து அறையில் படுத்திருக்கும் ஆணைப் பற்றிய இச்சையை தன்
கவிதையில் பதிவு செய்தார்.. உடனே பயங்கர எதிர்ப்பு..
பாலகுமாரன் இந்த மாதிரி பேசலையா?
சுஜாதா எழுதலையா..?
ஏன் சுகிர்தராணி பேசும் போது மட்டும் அது பிரச்சனை ஆக்கப்படுகிறது1
பண்பாடு என்ற பார்வை வைக்கப்படுகிறது.


மணி: நீண்ட வரலாறு கொண்ட சமூகத்தில் இந்த மாதிரியான cycle trend ஏற்படும்.
சீனாவிலும் இதுதான் நிலைமை..


மங்கை: இந்தச் சைக்கிள் டிரண்ட் என்பது மனரீதியான சில சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.

புதியமாதவி: பெரியாரைப் போல ஒரு தலைமை icon இன்றைக்கு இல்லை. இன்னொரு காரணம்
பரந்து விரிந்த ஊடகம்..


மங்கை: மே பி..

சமீராமீரான்: உங்கள் குடும்பம் உங்கள் நாடகப்பணிக்கு எந்தளவுக்கு துணையாக இருக்கிறது.?

மங்கை: நானும் அரசுவும் இடதுசாரி அமைப்பில் இருந்தவர்கள். காதலித்து என் குடும்பத்தினர்
எதிர்ப்புகளுக்கு நடுவில் அவரைத் திருமணம் செய்து கொண்டேன்.
அரசுவும் இடதுசாரி சிந்தனையாளர் என்பதால் என்னையும் என் நாடகப்பணியையும்
புரிந்து கொள்வது சாத்தியமாகிறது. அதற்காகவே வாழ்க்கையில் பிரச்சனைகளே இல்லை
என்றும் சொல்ல மாட்டேன்.
நாடக ஒத்திகை முடிந்து இரவு 1 மணிக்கு மேல் ஸ்கூட்டரில் ஆண் தோழர் வீட்டில் கொண்டு
விடுவார். வீட்டு வாசலில் வந்து கதவைத் திறந்து அரசு அவர்களைப் பார்த்ததை உறுதி செய்தப்பின்
போவார்கள். எதிர்வீட்டு சன்னல்களுக்கும் கண்களும் காதுகளும் உண்டு.
இன்று எங்கள் குழந்தைகள் அனுபவிக்கும் சுதந்திர உணர்வும் வாழ்க்கையும் பெற அன்று
நாங்கள் நிறைய கடினமான பாதைகளைக் கடந்து வந்திருக்கிறொம்..

நன்றி. மிகவும் குறுகிய கால அவகாசத்தில் இந்தக் கலந்துரையாடலில் கலந்து
கொண்டவர்களுக்கும் எங்கள் அழைப்பு ஏற்று கலந்து கொண்ட மங்கைக்கும்.

--------------------------------------------------------------------------------

மங்கையைப் பற்றி கலந்துரையாடலுக்கு முன் நான் பேசிய சிறிய அறிமுகம்:

> மங்கையின் இயற்பெயர் பத்மா.

> ஸ்டெல்லா மேரி கல்லூரியில் ஆங்கிலத்துறையில் விரிவுரையாளராக இருக்கிறார்.

> கலைக்கூத்து, சக்தி, பல்கலை அரங்கம், மரப்பாச்சி அமைப்புகளின் பவுண்டர் மெம்பர்.

> அமெரிக்காவின் நியுயார்க் நகரத்து Tisch School of performance studies & university of
california இரண்டிலும் சில காலம் நாடகம் குறித்து பாடம் கற்பித்தவர். (visiting faculty prof)

1984ல் சென்னை கலைக்குழு நடத்திய

நாங்கள் வருகிறோம் - (1984)
போபால் AD 1990 -( 1985)
பெண் - (1986)

நாடகங்களில் நாடக நடிகையாகவே
மங்கையின் நாடகப் பயணம் துவங்கியது.

> மங்கை நெறியாள்கை செய்த நாடகங்கள் :
--------------------------------------------
*கலைக்குழுவின் கர்ப்பத்தின் குரல் நாடகத்தை மங்கை நெறியாள்கை செய்தார்.

*1991ல் சங்கீத நாடக அகெடமியின் தேநீர்ப்போர் நாடகத்தின் நெறியாள்கை.
ஈழத்து இளைய பத்மநாதன் அவர்களை தன் நாடகக்கலை வாழ்க்கையில் தன் ஆசானாக
பெருமையுடன் சொல்கிறார் மங்கை.

* 1992 ல் சுப்புதாய் என்ற குறும் நாடகத்தை அரங்கேற்றினார்.
நடுத்தர வர்க்கத்து குடும்பம் நவீனமயமாதலில் அனுபவிக்கும் பிரச்சனைகள், அதில் பெண்ணின்
பங்களிப்பு பற்றியது

* 1993 ல் சுவடுகள்
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் பாதையில் பதிந்த அடிகள் கதை.
ஒரு பெண்ணின் பார்வையில் பெண்ணியம், ஆண்-பெண் உறவு, சாதி வேறுபாடு
குறித்த கருத்துகளைப் பதிவு செய்திருக்கும் நாடகம்.

* 1995ல் பச்சமண்ணு.

தெருநாடகம் பாணியில் அரங்கேறியது. பெண் சிசுக்கொலை மட்டுமல்ல.. ஒவ்வொரு பெண்ணும்
அவள் பெண் என்பதால் எதோ ஒருவகையில் ஒதுக்கப்படுவதையும் பதிவு செய்தது.

* 1997 ல் வெள்ளாவி.
76 வயது துணி வெளுக்கும் பெண்ணின் உண்மைக்கதை. ஓர் ஆய்வின் அடிப்படையில்
இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. கதை முழுக்க அந்தப் பெண்தான். solo performance
பின்னணியாக துணிதுவைக்கும் இடமும் சூழலும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

* 1998 ல் அவ்வை
கவிஞர் இன்குலாப் அவர்களின் கதைவசனம். அவ்வை என்றவுடன் துறவு பூண்ட வயதானப்
பெண்மணி, கையில் தடியூன்றி தள்ளாடி நடக்கும் பெண், சற்று வளைந்த முதுகு, நரைத்த தலைமுடி..
சுட்டப்பழம் வேணுமா சுடாதாப் பழம் வேணுமானு கேட்கும் காட்சிதான் நமக்கு நினைவில் வரும்.
இம்மாதிரி அவ்வையைக் காட்டிய சமூகத்தைப் பிடித்து உலுக்கியது மங்கையின் அவ்வை.
மங்கை அவ்வை இளம்பெண், புத்திசாலி, பயமறியாதவள், பாணர் குலத்தவள்..


* 2001ல் மணிமேகலை
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீத்தலை சாத்தனாரின் மணிமேகலை.
இன்குலாப்பின் நாடக வசனம். மும்பையில் மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம்
மணிமேகலை நாடகத்தை பாண்டூப், நவிமும்பை, சயான் என்று மூன்றிடங்களில்
அரங்கேற்றியது நினைவு கூரத்தக்கது.

* 2002 ல் பனித்தீ
மகாபாரதக் கதையின் கதாபாத்திரமான அம்பா-சிகண்டியின் கூத்து. இசை நாடகம்
பாணியில் அமைந்த நாடகம்.
frozen fire என்று ஆங்கிலத்தில் இந்நாடகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

* குறிஞ்சிப்பாட்டு: 2006 மரப்பாச்சியின் முதல் நாடகம்.
கபிலரின் குறிஞ்சிப்பாட்டுதான்.. கதை வசனம் கவிஞர் இன்குலாப்

*அரவாணிகளுக்கான கண்ணாடி கலைக்குழுவின்" மனசின் அழைப்பு."
" உறையாத நினைவுகள் " நாடகங்கள்
(சுடர் அமைப்பின் கண்ணாடிக்கலைக்குழு தான் அரவாணிகளின் முதல் நாடக கலைக்குழு
-அரவாணிகளுக்கான ஒரே நாடக கலைக்குழு .)

* அண்மையில் கீதாவுடன் இணைந்து வழங்கியிருப்பது காலக்கனவு என்ற ஆவண நாடகம்.

இவை தவிர

* மவுனக்குரல் அமைப்பின் சார்பாக தேசிய அளவில் நடத்தும் பயிற்சி பட்டறைகள்
* பெண் அரசியல் - கட்டுரைகள்

* theri katha என்ற புத்த பிக்குனிகளின் பாலி மொழி பாடல்களை ஆங்கிலம் வழி
தமிழாக்கம் செய்திருக்கிறார்.

கால்நூற்றாண்டுகளாக தமிழ் நாடகக்கலையின் ஒவ்வொரு தளத்திலும்
முத்திரைப் பதித்திருக்கிறது மங்கையின் பங்களிப்பு.




.

Thursday, July 3, 2008

தாக்கரேக்கள் மராட்டிய மண்ணின் மைந்தர்களா?





'தமிழர்களை விரட்டி அடி'

"ஸாலா மதராஸிக்கு.., அட்டோ'

'தென் இந்தியர்கள் மும்பை மண்ணின் மைந்தர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள்'

'வட இந்தியர்கள் மும்பையை நாசப்படுத்தும் நச்சுக்கிருமிகள்'

'பீகாரிகள் மும்பையின் புற்றுநோய்.'

'ஏக் பீகாரி சவ் ப்பிமாரி'
(ஒரு பீகாரி நூறு வியாதிகள்) ( சாம்னா பத்திரிகை 06/3/2008)

1966ல் தொடங்கி 1970ல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்த கோஷங்கள் இன்றுவரை
வெவ்வேறு காரணங்களுக்காக தொடர்கிறது.

ஒரு அடுத்த தலைமுறையும் இக்குரலை அப்படியே உள்வாங்கிக்கொண்டு
மும்பையை அதிர வைக்கிறது.

அன்று பால்தாக்கரே இன்று அவரிடமிருந்து பிரிந்து நிற்கும் ராஜ்தாக்கரேயும்
அவரைவிட உக்கிரமாக இக்குரலை எடுத்துச் செல்லும் காட்சிகள்
அடிக்கடி அரங்கேறுகிறது.

இக்குரல்களுக்குப் பின்னால் இருக்கும் நியாயங்கள், உரிமைகள், தேவைகள் ஒரு பக்கம்.

இந்தியச் சட்டம், இந்தியக் குடியுரிமை, இந்திய இறையாண்மை.. இவை மறுபக்கம்.

இந்த இரண்டுக்கும் நடுவில் அரங்கேறிய காட்சியில் மூன்றாவதாக ஒரு பார்வை
தாக்கரேக்களாலும் பதில் சொல்ல முடியாத மூன்றாம் பார்வை
அண்மையில் வெளிவந்துள்ளது.

மராட்டிய மண் மராட்டியர்களுக்கே,
வட இந்தியர்களை விரட்டி அடி
என்று நேற்றுவரைக்குரல் கொடுத்த இவர்கள் யார்?

இவர்கள் மராட்டிய மண்ணின் மைந்தர்களா?
இல்லை.
இவர்கள் மராட்டிய மண்ணுக்கு வந்து இரண்டுதலைமுறை தான் ஆகிறது!

வட இந்தியாவிலிருந்து இன்றைக்கு இவர்கள் விரட்ட நினைக்கும் பீகாரிகளைப் போல,
உ.பி. பையாக்களைப் போல, தென்னிந்தியர்களைப் போல இவர்களும் வேலைத்தேடி,
பிழைப்பு தேடி இந்த மராட்டிய மண்ணிற்கு புலம்பெயர்ந்து வந்தவர்கள் தான்!

இப்படி சரித்திர உண்மையை அறுசுவை உணவின் போது மிளகாயைக் கடித்த மாதிரி
போட்டு உடைத்திருக்கிறார் புனே பல்கலை கழக பேராசிரியர் ஹரி நர்க்கே (Hari Narke).
தேசியவாத காங்கிரசு பத்திரிகையான ராஷ்டிரவாடியில் அவர் கட்டுரை ரொம்பவும்
காரசாரமாக வெளிவந்துள்ளது.

" Mumbai, June 24 (ANI): Nationalist Congress Party’s mouthpiece Rashtravadi has said that the Thackerays came to Mumbai two generations ago for jobs and have no right to assault those coming in search of livelihood in the financial capital of India.
NCP mouthpiece made this claim in an article published in this month’s issue.
A renowned scholar and Professor at the Pune University, Hari Narke, has written the strong-worded article in the Rashtravadi.
Narke flayed Maharashtra Navnirman Sena chief Raj Thackeray, who is Bal Thackeray’s nephew, over attacks on migrants in Mumbai.
“Raj should read the autobiography of his grandfather Prabodhankar Thackeray (Bal Thackeray’s father). Prabodhankar, who studied in Madhya Pradesh, has written how he travelled in other states for livelihood,” Narke said.
“This proves that the Thackerays, who are not original inhabitants of Mumbai, came to this city in search of livelihood,” the scholar said.
Incidentally, Maharashtra Government published Prabodhankar’s literature in 1995 at the behest of Narke, the article said.

பால்தாக்கரேயின் தந்தையார் பிரபோதன்கர் தாக்கரே தன் சுயசரிதையில் பிழைப்புத் தேடி அவர்கள்
மும்பைக்கு வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதைப் பதிவு செய்துள்ளார்.

பேரன் ராஜ்தாக்கரே தாத்தாவின் எழுத்துகளைப் படித்தால் நல்லது! என்று தெரிகிறது.

தாக்கரேக்கள் யார்? என்ற கேள்வி எழும்போது அவர்கள் CKP இனம்/சாதியைச் சேர்ந்தவர்கள் என்று
தெரியவருகிறது. தாக்கரே என்ற குடும்பபெயர் (surname) இந்த வம்சம்/இனம்/சாதியின் பெயரில்
ஒன்றாகும்.

யார் இந்த CKPக்கள்?
----------------------

CKP - Chandraseniya Kayastha Prabhu

சந்திரசேன் ய கயஸ்த பிரபு வம்சம்.

பல்வேறு வரலாற்று செய்திகளும் புராண/ நாட்டார் கதைகளும் இவர்களைப் பற்றிய
நிறைய செய்திகளைப் பதிவு செய்துள்ளன.

* காஷ்மீர அரசன் சந்திரசென் பரசுராமரால் கொல்லப்படுகிறான். அவன் மனைவி
அரசி கங்கா/கமலா? கர்ப்பினியாக இருப்பதால் அவளைக் கொலை செய்யாமல் விட்டுவிடுகிறான்.
அவள் வயிற்றுப் பிள்ளைகள் தான் சந்திரசென்ய வாரிசுகள் என்ற பொருள்பட
சந்திரசேன்ய கயஸ்த பிரபுக்கள் என்றழைக்கப்படுகிறார்கள். பிரபு என்ற சொல் அரசுமரியாதை/
அதிகாரத்தை உணர்த்துவதாக கொள்ளலாம்.

* கயாவில் வாழ்ந்த இனக்குழு மக்கள் கயஸ்தா என்றழைக்கப்படுகிறார்கள்.

* H S Wilson (1819) கயஸ்தா என்றால் பேரதிகாரம் படைத்தவர்கள் என்று பொருள்.'
ஷத்திரிய ஆணுக்கும் சூத்திர பெண்ணுக்கும் பிறந்தவர்கள் இவர்கள் என்கிறார்.

* 7வது 8வது நூற்றாண்டில் காஷ்மீரில் வாழ்ந்த கயஸ்தர்கள் புலம்பெயர்ந்து இந்தியாவின்
மத்திய பகுதிக்கு நகர்ந்தார்கள். புத்த மதம் கோலோச்சிய காலத்திலும் அதற்குப் பின்
அலாவுதீன்கில்ஜியின் படை எடுப்பிலும் இப்பிரபுக்கள் குஜராத், கொங்கன் கடற்கரை வழி
மராட்டிய மாநிலத்திற்கு வந்தார்கள்.
அப்படி 1305ல் 42 கயஸ்தா பிரபுக்கள் மராத்திய மண்ணிற்கு புலம்பெயர்ந்து வந்துள்ளதை
வரலாறு பதிவு செய்துள்ளது.

* ஜீனாப் நதிப்பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்கள் இவர்கள் என்கிறார்கள் சில வரலாற்றாசிரியர்கள்.
ஜீனாப் என்ற சொல் சமஸ்கிருதத்தில் சந்திர என்று மருவி வந்துள்ளது.
seniya என்ற சொல் shreni என்ற சமஸ்கிருத சொல்லின் திரிபு.
சந்திர சேன்ய என்றால் சந்திர/ஜீனாப் மக்கள் என்று பொருள். (People of chandra/chenab).

*ஜ.நா. சமூகவியல் கல்வி நிறுவனத்தின் ஆய்வறிக்கை கயஸ்தா பிரபுக்கள் சிந்துவெளி
நாகரிகத்தின் மக்கள் என்றும் இவர்களின் சிறுதெய்வ /பெண்தெய்வங்கள் வழிபாட்டு
வழக்கம் அதை உறுதி செய்வதாகவும் சொல்கின்றார்கள்.

* உலக மக்கள் சமூகத்தின் கல்வி/ஆய்வு நிறுவனம் (International institute of
population studies and research centre) சிந்துவெளி மக்களின் மரபணுக்களுடன் (DNA)
கயஸ்த பிரபுக்களின் மரபணுக்கள் 94.3% ஒத்துப் போவதாக கண்டுபிடித்துள்ளது.

* விவசாயமோ கால்நடை வளர்ப்போ கயஸ்தா பிரபுக்களின் தொழிலாக எப்பொதுமே
இருந்ததில்லை. சிந்துவெளி நாகரிகத்திலும் இவர்கள் அரசு நிர்வாகத்தை கவனித்த
வம்சதினராகவே இருந்திருக்க வேண்டும்.
எனவே தான் இவர்களின் புலம்பெயர்தல் எப்போதும் அரசு/அரசாட்சி அமைப்புகளுடன்
தொடர்புடையதாகவே அமைந்துள்ளது.

* இவர்கள் இசுலாமிய பேரரசிலும் அரசு நிர்வாகத்தில் பணி செய்திருக்கிறார்கள்.

* மராட்டிய வீர சிவாஜி யின் 'என்னுடைய ஒரு கனவு' (mala ek swapna ahe)
என்ற புகழ்மிக்க வீர உரையில் மராட்டிய மண்ணுக்கும் தன் இந்துப் பேரரசை நிறுவும்
பணியிலும் வீர தீரத்துடன் தோள்கொடுத்து உதவிய சந்திர சேன்ய கயஸ்த பிரபுக்களுக்கு
நன்றி சொல்லுகிறார்.

* சில சரித்திர ஆசிரியர்கள் மொகலாய பேரரசுகளின் காலத்தில் கல்வி அறிவு புலமையில்
வல்ல பிராமணர்கள் அல்லாத இந்துக்கள் ஒன்றுகூடி புதிதாக உருவாக்கிக்கொண்ட
சாதி அல்லது இனம் தான் கயஸ்தா என்கிறார்கள்.

இக்கூற்றில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறதோ தெரியவில்லை. எனினும் இன்றுவரை
கயஸ்தா பிரபுக்களுக்கும் வேதம் ஓதும் பார்ப்பனர்களுக்கும் நடுவில் பனியுத்தம் நடக்கத்தான்
செய்கிறது.
கயஸ்த பிரபுக்கள் புணூல் அணிதல்./வேதம் ஓதுதல் கூடாது என்று பார்ப்பனர்கள் அவர்களை எதிர்த்து
நிறைய கலகம் செய்திருக்கிறார்கள். மராட்டிய மாநிலத்தில் 1913ல் பாலாஜி அவ்ஜி சிட்நிஷ்
(Balaji avji Chitnis) என்ற கயஸ்த பிரபு தன் மகனுக்கு புணூல் அணியும் சடங்கிற்கு
பார்ப்பனர்கள் எதிர்க்க அவர் அன்றைய இந்துமத தலைவரிடமிருந்து ஒப்புதல் பெற்ற கடிதம்
இன்றைக்கும் மும்பை அரசு ஆவணக் குறிப்பேட்டில் உள்ளது.
( Letter from Shankarachaya Vidhanrusingha Bharati from Karvir Peeth in year 1913 )

*இவர்களை எழுத்தாளர் சாதி என்றும் சிலர் சொல்வதுண்டு.

* இவ்வம்சத்தினர் எழுதும் மை அத்துடன் போர்புரியும் வாள் இரண்டையும் வழிபடும்
மக்கள். இதற்கும் பிரம்மாவுக்கும் வழக்கம்போல நம் புராணங்கள் எழுதி வைத்திருக்கும்
கட்டுக்கதைகள் நிறைய உண்டு.!

இந்த வரலாற்றின் பின்னணியில் பார்த்தால் இன்றைக்கு ராஜ்தாக்கரேயால் அதிகம்
விமர்சிக்கப்படும் இந்தி திரை நடிகர் அமிதாப்பச்சனும் கயஸ்த பிரபுதான்.

"அட..
அண்ணன் என்னடா தம்பி என்னடா
ஓட்டு வாங்கும் உலகத்திலே
பதவி ஒன்றுதான்
புரிந்து கொள்ளடா..
மண்ணின் மைந்தர்கள் உலகத்திலே..
அட ..
அண்ணன் என்னடா தம்பி என்னடா..."



*

இக்கட்டுரையில் மற்றவர்கள் கருத்தைத் தொகுத்துச் சொன்னதுடன் என் பணி
முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை.
புலம்பெயர்ந்து வந்த கயஸ்த பிரபுக்கள் இரண்டாவது/மூன்றாவது தலைமுறை இன்றைக்கு
எங்கள் (!! )மும்பையை கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் இந்த மும்பைக்கு நான்காவது தலைமுறை!!!!!!!!!!!!!!!!!!!!
அப்படியானால் எனக்கும் மும்பைக்கும் உள்ள தொடர்பு
இவர்களின் தொடர்பை விட இறுகியதாக நெருக்கம் உள்ளதாக் இருக்க வேண்டுமே!
அப்படி இருக்கிறதா?
சத்தியமாக இல்லை.

நான் இந்த நான்காவது தலைமுறையிலும் இந்த மண்ணில் என் தனிப்பட்ட
தமிழச்சி என்ற அடையாளத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

நான் என்றைக்குமே இந்த மண்ணில் ஒரு தொட்டிச்செடி தான்.
அதுவும் எங்க தாமிரபரணி மண்ணைப் பத்திரமாக எடுத்து வந்து
இங்கே அபரிதமாகக் கொட்டும் மழையிலும் கொளுத்தும் சூரிய ஒளியிலும்
என்னை என் இலைகளை என் பூக்களை வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.
அதிலும் என் விதைகள் என்ன காரணம் கொண்டும் இந்த மண்ணில்
விழுந்து முளைவிட்டு வளர்ந்து இந்த மண்ணில் வேரூன்றி
இந்த மண்ணுக்குள்ள செடிகளாக மரங்களாக இதன் அடையாளங்களுடன்
வளர்ந்துவிடக் கூடாது என்பதில் இன்றுவரை ரொம்பவும் கவனமாக
கண்ணில் வேப்பெண்ணெயை ஊற்றிக் கொண்டு காவல்நாயைப் போல
காத்துக் கொண்டிருக்கிறேன்!


நான் எப்போதுமே எவ்வளவு தலைமுறைகள் இங்கே வாழ்ந்தாலும்
இதில் மாற்றமிருக்கும் என்ற நம்பிக்கை இல்லை.

ஆனால் தாக்கரேக்கள்/ கயஸ்த பிரபுக்கள் இந்த மண்ணைத் தங்களுடையதாக
சுவீகரித்துக்கொண்டவர்கள். அவர்களின் பிறப்பிடம் வேறாக இருந்தாலும்
அவர்களின் வாழ்க்கை இந்த மண்ணுடனும் இந்த மக்களுடனும் பின்னிப் பிணைந்து
இருக்கிறது. பிரிக்க முடியாது. இந்த மண்ணின் மக்களுடன் அவர்கள் திருமண உறவுகளின்
மூலம் கலந்து இந்த மண்ணுக்கான அடையாளத்துடன் தங்களின் அடுத்த தலைமுறையை
உருவாக்கி விட்டார்கள். இன்னும் சொல்லப்போனால அதிகமாக இனக்கலப்பு நடந்த
இனங்களில் இந்த இனமும் ஒன்று.

மனிதன்/ இன வரலாறு என்று நதி மூலம் தேடினால்
என் கால்கள் இலெமுரியா தாண்டி ஆப்பிரிக்க வானத்தின் காடுகளில்
தடம்பதிக்கும்.

இறுதியாக:

தாக்கரேக்களும் வட இந்தியர்கள் தான் , CKP க்கள் தான் என்ற சரித்திர உண்மை
இந்திய வரலாற்றில் இனியொரு புதிய அத்தியாயத்தை எழுதக்கூடும்.
அதாவது தாக்கரேக்கள் மராட்டியம் தாண்டி இந்திய/இந்துத்துவ அடையாளத்துடன்
வீரியமாக வெளிவருவார்கள். அதற்கான முன்னுரையை சுக்தேவ் மேத்தாவுடனான
பால்தாக்கரேயின் நேர்காணல் -( Book - Maximum City) வெளிப்படையாகவே
பதிவு செய்துள்ளது.

Tuesday, July 1, 2008

ஒரு கேள்விக்குப் பதிலான கவிதை





நான் ஏன் பிறந்தேன்?
என்னை ஏன் பெத்துப் போட்டே?
யார்ட்ட கேட்டுட்டு என்னைப் பெத்தீங்க?
நான் பொறக்கனும்னு உங்கக்கிட்டே வந்து அழுதேனா?
இந்த மாதிரி கேள்விகளை நாம் ஒவ்வொருவரும்
வெவ்வேறு அர்த்தத்தில் கேட்டிருப்போம்.
நம்மிடமும் இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இப்படித்தான் நடிகர் அமிதாபச்சன் தன் தந்தை ஹரிவன்ஷ்ராய் பச்சனிடம்
கேட்டார்.

ஆப்நே ஹமே பைதா க்யூன் க்யா?

அப்போது அமிதாப்புக்கு இளம்வயது. கல்லூரி முடித்து வேலைக்காக
காத்திருந்த நாட்கள்.
கவிஞரான ஹரிவன்ஷ்ராஜ் பச்சன் மகனின் கேள்விக்கு உடனே பதில் சொல்லவில்லை.
அன்றிரவு அதைக் கவிதையாக எழுதி மறுநாள் மகனிடம் கொடுக்கிறார்.

கவிதைக்குத் தலைப்பு:
புதிய தலைமுறை (நயிலீக்)
-----------------------------

வாழ்க்கையில்
வாழ்வதற்கான
போராட்டத்தில்
காயங்களுடன்
கேட்கிறான் என் மகன்
என்னிடம்.
'என்னை ஏன் பெற்றெடுத்தாய்?"

அவன் கேள்விக்கு
என்னிடம் பதிலில்லை!
ஏனேனில்
என் அப்பாவும்
என்னிடம் கேட்காமலேயே
என்னைப் பெற்றெடுத்தார்!
என் அப்பாவின் அப்பாவும்
கேட்கவில்லையே!
அப்பாவின் அப்பாவுக்கு அப்பாவும்
அப்படியே.

வாழ்க்கைப் பாதையில்
சோதனைகள்
அன்றுபோலவே இன்றும்.
நாளையும் இதுவே தொடரும்
இன்னும் அதிகமாக.
மகனே
நீ ஏன்
ஒரு புதிய அத்தியாயத்தை
புதிய சிந்தனையை
உருவாக்ககூடாது?
உன் மகனிடம்
கேட்டபின்
அவனைப் பெற்றெடு.

(செய்தி: நன்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா 29/6/08)




.

Wednesday, June 25, 2008

பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதை



இலண்டன் அக்கா ராஜேஸ்வரியின் தசாவதாரம் திரை விமர்சனம் வாசித்தேன்.
(பார்க்க : www.pathivukal.com)
http://www.geotamil.com/pathivukal/cinema_thasavathaaram_rajes_bala.htm

அதனால் தான் இதை எழுதும்படி ஆகிவிட்டது.!
முதல் வாரம் மும்பையிலும் மேற்கண்ட திரைப்படத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.
அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத்தனத்தை தோலுரித்துக் காட்டியதற்காக அக்காவுடன்
சேர்ந்து நாமும் கமலுக்கு ஜே போடலாம்தான்! ஆனா திரையில் எதற்காக தமிழக இன்றைய
முதல்வர் கலைஞர் அவர்களையும் சுனாமி பேரழிவைப் பார்வையிடும் காட்சியில்
அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களையும் காட்டி தமிழக அரசியல் வாதிகளிடம்
ரொம்பவும் முன்னெச்சரிக்கையாக இரண்டு பக்கமும் கைகுலுக்கிக் கொண்டிருக்கும்
காட்சியை எதில் சேர்ப்பது?

இதை அவருடைய வியாபாரதந்திரம், பிழைக்கும் வழித் தெரிந்தவர் என்று ஒரு சராசரி
நிலையில் வைத்துப் பார்க்காமல் எப்படி பார்ப்பது?

இதுதவிர, அது என்ன சுனாமியின் பேரழிவுக்கும் பெருமாளுக்கும் அவர் போட்டிருக்கும்
முடிச்சு? சுனாமி வந்து வைரஸ் கிருமியை அடிச்சிட்டு போனதாலே சுனாமியைவிட
ஆபத்தான பேரழிவிலிருந்து பெருமாள் நம்மை எல்லாம் காப்பாத்தினாராம்! 12ஆம் நூற்றாண்டில்
கடலுக்குள் மூழ்கிய பெருமாள் சிலை சுனாமி அடித்து வந்து கரையில் சேர்த்திருப்பது மாதிரி
காட்டுவதன் மூலம் கமல் என்ன சொல்ல வருகிறார்?
அது எப்படி முடிகிறது இந்தக் கமலுக்கு.. சுற்றிலும் சுனாமியின் கோர அழிவும்
சகமனிதனின் பிணங்களும். அந்தப் பின்புலத்தில் தான் கதாநாயகி தன் காதலை
கமலிடம் சொல்வதும் கமல் அசடு வழிய ஏற்பதுமான காட்சி!

புத்தி சுவாதினமில்லாத வயதான பாட்டி சாதியை பார்க்காமல் பூவாரகனின் உயிரில்லாத
உடலை எடுத்துவைத்துக் கொண்டு தன் மகன் என்று அழுகிறாளாம்.

>கிருஷ்னவேணிப்பாட்டியார், மனநிலை தடுமாறினாலும் மனிதநேயத்தைக் காட்டிவிடுகிறார். அன்புக்குச் சாதி

கிடையாது, நிறம் கிடையாது என்பதை இறந்து விட்ட கீழ்சாதி பூவராகனைத்தன் மேல்சாதி மகனாக நினைத்துத்

தூக்கிவைத்தழும் காட்சி பிரமாதம்.>
என்று அக்கா ரொம்பவே கமலைத் தூக்கி வைத்திருக்கிறார்.!!
அது ஏன் மனநிலைத் தடுமாறினாதான் மனிதநேயமும் கீழ்ச்சாதி பூவராகனைத் தன் மகனாக நினைக்கும்
மனித நேயமும் சாத்தியமா? ஏனேனில் மனநிலைத் தடுமாறாத கதாநாயகியும் அவாள்களும் அப்படி இல்லை
என்றும் அதே கமல் காட்டியிருப்பது எதற்காக?

பெருமாள் சிலைக்குள் வைக்கப்பட்டிருக்கும் வைரஸ் டப்பாவை கையில் சிலை வந்தவுடன் டாண் என்று
எடுத்தோமா என்றில்லாமல் சிலையை வைத்துக் கொண்டு கதாநாயகியுடன் ஓடிப்பிடித்து
விளையாடுவது ரொம்பவும் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த
எங்க ஊரு இளசுகள் விமர்சனம் செய்ததை அலட்சியப்படுத்த முடியாதுதான்.

நாத்திகம், சாதியம், அரசியலில் எவரையும் அடையாளம் காட்டாத மணல் லாரிக்கொள்ளை,
கொஞ்சமாக சரித்திரம், சுனாமியைத் தத்ரூபமாகக் காட்டும் கிராபிக்ஸ் வித்தை என்று
அளவாக கலந்து
தமிழ்ப் படத்தை ஆங்கிலப் படம் சாயலில் எடுத்திருக்கிறார் கமல்.
10 வேடங்களில் கமல் நடித்துவிட்டார் என்று தலையில் வைத்து ஆடுவதை விட
அந்தப் பத்து வேடங்களை மிகவும் தத்ரூபமாக்கிய அழகியல் நிபுணர்களைப் பாராட்ட வேண்டும்.
என்ன மேக்கப் போட்டுக்கொண்ட கமலின் பொறுமையைப் பாராட்டலாம்.!

எயிட்ஸ் கிருமி இராசயண ஆய்வு கூடத்தில் வல்லரசு உருவாக்கியது என்றெல்லாம்
சொல்லத் தெரிந்திருந்தாலும் பெருமாளின் சிலையுடன் கதையை ஓடவிட்டு
தமிழ்ப்பட பார்மூலாவை கச்சிதமாக நிறைவு செய்திருக்கிறார் கமல்.

பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதை என்பது எங்க ஊரு சொலவடை.
இதைப் புரிய வைத்த கமலுக்கு நன்றி.

Monday, June 16, 2008

சாகித்திய அகதெமி பன்மொழி கவிதைகள் அரங்கம்




சாகித்திய அகதெமி- மும்பை 13-6-2008 மாலை 6 மணிக்கு
சாகித்திய அகதெமி அரங்கில் பன்மொழி கவிஞர்களின் கவிதைக்கூடல்
நிகழ்ச்சியை நடத்தியது. முதல் முறையாக தமிழ்க் கவிதைக்கு
மும்பை இடமளித்தது.
ஒருவழியாக பன்மொழி கவிதைகளின் அரங்கத்தை தமிழுக்கு இடமளிக்காமல்
நிறைவு செய்ய முடியாது என்பதைப் புரிந்து கொண்டார்களோ என்னவோ!

தமிழ்க் கவிதைக்காக என்னை அழைத்திருந்தார்கள்.
என் கவிதைகளில் ஹேராம், மகளே வந்துவிடு, கேட்டவரம் கவிதைகளை
இந்தியில் விளக்கமளித்து ஆங்கில மொழி பெயர்ப்பில் வாசித்தேன்.
அதன் பின் தாய்மொழிக் கவிதையாக அண்மையில் எழுதி இம்மாத யுகமாயினி
இதழில் வெளிவந்திருக்கும் தொலைந்து போனச் சாவி என்ற தலைப்பிலான
கவிதையை வாசித்தேன். சாவி என்பதைக் கிட்டத்தட்ட இந்தியாவில் எல்லா மொழிகளிலும்
வழக்கில் பயன்படுத்துகிறார்கள். பெண்ணியம் பேசும் அக்கவிதையின் சாரத்தை
இந்தியில் விளக்கமளித்து பின் தமிழ் மொழியில் வாசித்தேன்.



தொலைந்து போனச் சாவி
-----------------------------


எல்லா இடங்களிலும்
தேடிப் பார்த்துவிட்டேன்.
இத்தனைக் காலமும்
பாதுகாத்துவைத்திருந்த
சாவிக்கொத்தை.

எந்தப் பூட்டுக்கு
எந்தச் சாவி?
சொல்லவில்லை யாரும்
சோதிக்கவில்லை நானும்.
சாவிக்கொத்தை
இடுப்பில் சொருகிக்கொண்டு
இருப்பதே பழகிப்போனதால்
அச்சமாக இருக்கிறது
சாவிகள் இல்லாத
இடுப்பைச் சுமந்து கொண்டு
திறந்தவெளியில்
எப்போதும் போல
எழுந்து நடமாட.

யார் தந்தார்கள்
என்னிடம் இந்தச் சாவிக்கொத்தை?
எப்போதாவது
எந்தப் பூட்டையாவது
என்னிடமிருந்த
எந்தச் சாவியாவது
திறந்திருக்கிறதா?

யோசித்துப் பார்க்கிறேன்.
அம்மா,
அம்மாவின் அம்மா,
அவளுக்கு அம்மா,
அம்மம்மா..
இத்தோடு சேர்ந்து கொண்டது
புதிதாகத் திருமணமாகி
புக்ககம் வந்தப்பின்
மாமியார் கொடுத்தச் சாவிகளும்.

ஒவ்வொரு சாவிகளையும்
பத்திரமாக வளையத்தில் கோத்து
அலங்காரமான
விலையுயர்ந்த வெள்ளிச்சாவிக்கொத்தில்
தொங்கவிட்டு
பாதுகாத்துவந்த
எங்கள் தலைமுறையின் சாவிக்கொத்து
காணவில்லை..
தொலைத்துவிட்டேன்.

இனி,
எதைக்கொடுப்பேன்
என் மகளுக்கும்
வரப்போகும் மருமகளுக்கும்!
எப்படியும்
அவர்கள் கண்டுபிடிக்கவேண்டும்
தொலைந்து போன சாவிக்கொத்தை அல்ல
சாவிகள் இல்லாமல்
பூட்டுகளை உடைக்கும்
புதிய வித்தைகளை.

-----------------------------
என்னுடன் கவிதை வாசித்த பிற இந்திய மொழிக் கவிஞர்கள்:

நிதின் மேத்தா - குஜராத்தி
கைலாஷ் சென்கர் - இந்தி
சந்திரிகா பட்கோன்கர் - கொங்கணி
அவினாஷ் கெய்க்வாட் - மராத்தி
அர்ஜூன் சாவ்லா - சிந்தி
சஃபிக் அப்பாஸ் - உருது

Thursday, May 29, 2008

என் வீடு



என் வீடு
அப்படித்தான்
அரசு முத்திரைத்தாள்களில்
எழுதப்பட்டிருக்கிறது.

இடப்பக்கமும்
வலப்பக்கமும்
பின்பக்கமும்
இருக்கும் வீடுகளின்
சுவர்களால்
கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது
என் அறைகளின் வடிவம்.
மாடி வீட்டுக்காரனின்
ஒவ்வொரு அறைகளையும்
தாங்கி நிற்கும்
என் வீட்டுக்குள்
கிராமத்து வீட்டை
விற்ற ஏக்கத்தில்
செத்துப்போன
அம்மாவின் நிழற்படம்.
நுழைவாசலில்
தொங்கிக்கொண்டிருக்கிறது
அந்நியன் மொழியில்
என் பெயரின் எழுத்துகள்.
இவைதவிர
இது என் வீடு
என்பதற்கான
எந்த அடையாளமும்
என் வீட்டில் இல்லை.

Wednesday, May 28, 2008

நிலம் பெண்ணுடல் ....எதிர்வினைகளும் என் மறுமொழியும்


Date: Mon, 26 May 2008 10:58:19 +0300
From: jamalan.tamil@gmail.com
To: puthiyamaadhavi@hotmail.com
Subject: நிலம், பெண்ணுடல், நிறுவனமயம்: செந்தமிழன் கட்டுரைகளை முன்வைத்து


புதியமாதவி அவர்களுக்கு...

என்னை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், உங்களது எழுத்துக்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்திருக்கிறேன். முழுமையாக படிக்க வாய்க்கவில்லை. காரணம் நான் அரேபியாவில் இருப்பதால் தமிழ்நூட்கள் கிடைப்பதில்லை. இணையத்தின் வழியாகவே படிக்க முடிகிறது. உங்களது பார்வையின் கொணங்கள் வித்தியாசமானவையாக உள்ளன. உங்களது இக்கட்டுரை கருத்துக்களை நான் முழுமையாக ஏற்கிறேன். மிகச்சிறப்பாக அந்த நூலை முன்வைத்து உரையாடலை மேலே நகர்த்திச் சென்றுள்ளீர்கள். வாசிப்பினூடக எனக்கு எழுந்த சில கேள்விகள் இவை..

தாய்வழிச் சமூகம் பற்றிய "இருக்கம்" புரிதலிலிருந்து நீங்கள் துவங்குகிறீர்கள். தாய்வழிச் சமூகத்தில் பால்வேறுபாட்டு உணர்வு இருந்திருக்குமா? இன்றைய பெண்ணும், பெண் உடலும் அன்றே நிலவி இருக்க வாய்ப்பு உண்டா? "பாலின வேறுபாடு" அல்லது பாலினமாதல் என்கிற இயக்கப்போக்கு எங்க எப்பொழுது உருவாகியிருக்கும்? "ஆதித்தாயை" ஒரு பெண்ணாக பார்க்க முடியுமா? எனது ஊகம் (எனது வாசிப்பு இதில் விரிவானது அல்ல) இன்றைய பெண் குறித்த பார்வையைதான் நாம் அதற்குள் பொறுத்திப் பார்க்கிறோம். சங்க இலக்கியங்களில் ஆண் பெண் வரையறைகளைப் பார்க்க முடியும். அது தாய்வழி சமூகம் அல்ல. அரசு உருவாக்கம் அல்லது நிலமயமாதலுக்குப்(territorialization) பிறகே பாலின வேறுபாடு உருவாகுகிறது. இதற்கு பெண் உடல் நிலமாக பதிலீடு செய்யப்பட்டது. அல்லது நிலமும் பெண்ணும் ஒன்றாக மாற்றப்பட்டு நினைவிலப்புலக் கட்டமைவுகள் உருவாக்கம் நிகழ்கிறது. இங்கு நான் முன்வைக்கும் பிரச்சனை.. பெண்தான் ஆணை உருவாக்குகிறாள் என்கிற அடிப்படையான எனது புரிதலிலிருந்து வருகிறது. ஆண் பெண்ணை தனது சொத்தாக பாவிக்கிறான். அதிகாரம் என்பது ஆணிலையான வடிவமே.. அதிகாரமற்ற ஒருவெளியின் குறியீடாகவே பெண் இருக்கிறாள். ஆக, இந்த ஆண் கட்டமைவிற்கான அரசியல் பின்புலங்களிலிருந்தே நமது பேச்சு துவங்கவேண்டும் என்கிறேன்.

மனித வரலாற்றில் அன்னையின் தலைமை சரிகிற காலகட்டத்தில் இனக்குழு வாழ்க்கை முடிந்து பெண்-ஆண் சமத்துவம் என்ற இரண்டாம் கட்டத்தை எட்டுகிறது. இக்காலக்கட்டத்தில் மதம் நிறுவனமயமாகிறது. அரசு, பேரரசுகள் தோற்றம்.

இவ்வாக்கியங்களில் உள்ள சிக்கல் இரண்டாம் கட்டத்தில் ஆண்-பெண் சமத்துவம் என்கிற போக்கு எற்பட்டதா? மதம் என்பது குறித்த இன்று சொல்லப்படும் கதைகள் எல்லாம் ஆணியநோக்க கதையாடல்களே. மதம் என்பதே பெண் உடல் குறித்த நினைவிலியுடன்தான் செயல்படுகிறது. அல்லது பெண் உடலை தனக்குள் ஒடுக்கி புதைக்கப்பட்ட வடிவமே. நீங்கள் இந்தப் புரிதலுக்கான புள்ளியை தொடுகிறீர்கள் என்றாலும் அரசும் மதமும் பெண்களை ஒடுக்குகிறது என்பதன் மறுதலையாக பெண் அதிகாரம் பெற்றால் போறும் என்கிற மற்றொரு அதிகார நிலைக்கான ஆவலாக மாறிவிடக்கூடியதாக உள்ளது.

மற்றபடி காமக்கிழத்தி பற்றியும் பரத்தமை பற்றியும் உங்கள் புரிதல் நுட்பமானதும் விரிவாகவும் பேசப்பட வேண்டியவை. இன்னும் உங்கள் கட்டுரை பல ஆழமான நுட்பத்துடன் பிரச்சனையின் ஆழத்திற்கு செல்கிறது. குறிப்பாக தேவரடியார் பற்றிய கருத்துக்கள். பெண்ணியத்துடன் பொது அதிகாரப் போக்கையும் சாதிய ஒடக்குமுறையுயம் முன்வைப்பதும் மிக முக்கியமான செயல்படு கோணத்தை முன்வைக்கிறது.

இன்னும் நிறைய உரையாடலுக்கான குறிப்புகளைக் கொண்டுள்ளது உங்கள் கட்டுரை.

உண்மைநிலை விபசாரிகளாக வாழ்ந்த தேவரடியார்கள் அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டார்கள் என்பதுதானே. 'கோயில்களை ஆணாதிக்க சாதி ஆதிக்க நிலவுடமையாளர்களின் பிடியிலிருந்து விடுவித்து, தேவரடியார்களின் பொறுப்பில் ஒப்படைத்திருந்தால்.." என்று வாதமிடுவது இல்லாத ஊருக்கு வழிச்சொல்வது போல இருக்கிறது.

முக்கியமாக இந்த வரிகளில் உள்ள அரசியல் தெளிவுதான் இக்கடிதத்தை எழுதத் தூண்டியது.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஜமாலன்.
--
http://jamalantamil.blogspot.com/
http://tamilbodypolitics.blogspot.com/
http://kalakuri.blogspot.com/

2008/5/26 puthiyamaadhavi sankaran :


மதிப்பிற்குரிய ஜமாலன் அவர்களுக்கு
வணக்கம்.
உங்கள் ஆழ்ந்த வாசிப்பில் எழுந்த கேள்விகளுக்கும் அதைப் பதிவு
செய்தமைக்கும் மிக்க நன்றி.
இனக்குழு வாழ்க்கையில் பெண்ணின் தலைமை இருந்தது. அவளே அந்த இனத்தை வழிநடத்தும் தலைவி.
வேட்டையாடுதல், கிடைத்ததைப் பகிர்ந்து உண்ணுதல், தன் இனக்குழுவைப் பாதுகாத்தல், தன் இனக்குழுவை
விருத்தி செய்தல்.. இதுவே வாழ்க்கை. இக்காலக்கட்டத்தில் பெண்ணின் மாதவிடாயும், பிரசவமும்
ஆணால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்ததால் அவளிடம் பயம் கலந்த மரியாதை, அச்சம்,
ஏன் பெண் வழிபாடாக அதுவே மாறியது. நாட்டார் வழிபாட்டில் இன்றும் ஆடு, கோழி, பன்னி என்று
ரத்தத்தால் வழிபாடு நடத்துவதும். ரத்தத்தின் நிறத்தில் நெற்றியில் இன்றுவரை தொடரும் திலகமிடுதல்
எல்லாம் அந்த வாழ்வியலின் எச்சங்கள் தான்.
தமிழ்க் கடவுள் குமரன், பெண் தெய்வம் குமரி. குமரன், குமரி என்ற சொற்றொடர்கள்
ஆண்பால், பெண்பால் சொற்கள்,
கணவன் என்ற ஆண்பாலுக்குப் பெண்பால் சொல் என்ன என்று கேட்டால் மனைவி என்று சொல்லுவோம்.
இது இலக்கணம், உலகம் தழுவிய பாலியல் விதி. (gender ) ஆனால் நம் குமரன் நம் குமரியின் காதலனோ
கணவனோ அல்லன். ஏன்?
குமரி என்று வழிபடும் பெண் தெய்வத்தின் மகன் குமரன். இதுதான் தாய்வழிச் சமூகம் ஆண்வழி தலைமையை
நோக்கி நகர்ந்தப் போது ஏற்பட்டது.
என் கட்டுரையின் தாய்வழிச் சமூகம் அதன் அடுத்தக்கட்டம் பெண்-ஆண் சமத்துவம் என்று எழுதியுள்ளென்.
சொற்களை அதன் வரிசைகளை மீண்டும் பாருங்கள். ஆண்-பெண் சமத்துவம் அல்ல. தலைமையிலிருந்த
பெண்ணுக்குத் துணையாக போர்புரிந்தவன் சிறிது சிறிதாக அவளுக்குச் சமநிலையை அடையும் காலக்கட்டம்.
எனவே தான் ஆண்-பெண் சமத்துவம் என்று சொல்லாமல்,
பெண்-ஆண் சமத்துவம் என்று எழுதியுள்ளேன்.

முதல்நிலை: பெண்-தலைமை - இனக்குழு வாழ்க்கை - - நிலவுடமை அற்ற சமுதாயம்.
இரண்டாம் நிலை: பெண்-ஆண்.. தலைமை -இனக்குழு வாழ்க்கை மாற்றம் பெறும் நிலை. வேளாண்மையின் தோற்றநிலை
தனிநபர் நிலவுடமை இல்லை. இந்த வேளாண்மையைக் கண்டுபிடித்தவளும் பெண்தான்.
மூன்றாம் நிலை: ஆண் தலைமை, நிலவுடமை, உடமை வரும்போது வாரிசுரிமை வருகிறது. உரிமைகளுக்காகவும்
உணவுக்காகவும் போரிட்ட களம் மாறி, நிலவுடமைக்காகப் போரிட்ட காலக்கட்டம்.
இக்காலக்கட்டத்திலும் பெண் ஆணுக்கு அடிமையில்லை.
அடுத்தக்கட்டம்: பேரரசுகள். நடுகல்வழிபாடு மறைந்து பெருந்தெய்வங்கள் வழிபாடு புகுந்தக் காலக்கட்டம்.
இந்துமதம், கிறித்துவமதம், இசுலாம் எல்லா மதங்களும் சிறுதெய்வ வழிபாட்டை முடிவுக்குக் கொண்டுவந்து
பெருந்தெய்வ வழிபாட்டை நோக்கி மனித சமூகத்தைப் திருப்பியதை அறிவோம்.
ஒவ்வொரு காலக்கட்டமும் மாற்றமும் நிகழ பலநூற்றாண்டுகள் ஆனது என்பதையும் நினைவிலிருத்திக் கொள்ள
வேண்டும். கிட்டத்தட்ட இந்த மாற்றத்தின் எல்லா கோடுகளையும் சங்க இலக்கியத்தின் அகம், புறம் இரண்டிலும்
நாம் சான்றுகளுடன் நிறுவ முடியும். சங்க இலக்கியம் எழுதப்பட்ட காலம் ஒரு பரந்துப்பட்ட காலமாக இருக்க
வேண்டும்.
நிற்க, பெண்ணுரிமை என்றால் ஆண், குடும்பம், சமூகம் அனைத்தையும் சகட்டு மேனிக்கு எதிர்ப்பது,
கூக்குரலிடுவது என்று சிலர் நினைக்கிறார்கள். என்னளவில் நான் இந்தப் பார்வையிலிருந்து சற்று
விலகி நிற்கிறேன். பெண்ணுரிமை என்பது ஆணையொ குடும்பத்தையோ எதிர்ப்பதல்ல,
"நான் பெண், உன்னிலிருந்து வித்தியாசமானவள். நான் நீயல்ல,.
அதனாலேயே என்னைக் குறைத்து மதிப்பிடும் உன் அளவுகோல்களை
தூர எறிந்துவிடு."
இது குறித்து என் கருத்துகளை "உறவுச்சிக்கல்கள்" என்ற கட்டுரையில்
விரிவாக எழுதியுள்ளேன்.
http://puthiyamaadhavi.blogspot.com/search?updated-max=2008-02-04T23%3A34%3A00-08%3A00&max-results=7
http://www.blogger.com/posts.g?blogID=1341847542020354313

வாழ்த்துகளுடன்,
புதியமாதவி,
மும்பை.

சொல்ல மறந்துவிட்டேன்.

நிற்க, பெண்ணுரிமை என்றால் ஆண், குடும்பம், சமூகம் அனைத்தையும் சகட்டு மேனிக்கு எதிர்ப்பது,
கூக்குரலிடுவது என்று சிலர் நினைக்கிறார்கள். என்னளவில் நான் இந்தப் பார்வையிலிருந்து சற்று
விலகி நிற்கிறேன். பெண்ணுரிமை என்பது ஆணையொ குடும்பத்தையோ எதிர்ப்பதல்ல,
"நான் பெண், உன்னிலிருந்து வித்தியாசமானவள். நான் நீயல்ல,.
அதனாலேயே என்னைக் குறைத்து மதிப்பிடும் உன் அளவுகோல்களை
தூர எறிந்துவிடு."
இது ஒரு ஆரோக்கியமான பார்வை.

வாழ்த்துக்கள்
ஜமாலன்.

2008/5/26 Jahir Hussain :

தோழர் புதியமாதவிக்கு..

முதலில் உங்களது விரிவான விளக்கத்திற்கு நன்றி. பேரளவில் உங்களது கருத்துக்களில் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை. இதை நீங்கள் எப்படி புரிந்து கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் இக்கருத்துக்கள் பலமுறை எதிர் கொள்ளப்பட்டவை என்றாலும், உங்கள் விளக்கங்கள் சரளமாகவும் சுருக்கமாகவும் தொகுக்கப்பட்டள்ளது. அதிலும் குறிப்பாக மார்க்சிய (இதை நீங்கள் ஏற்பவராகத்தான் தெரிகிறது உங்களை முழுமையாக வாசித்தப் பிறகே உறுதிப்படும்.) வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் பெண்ணிய வரலாற்றை நீங்கள் தொகுத்திருப்பது உங்களது ஆழந்த மற்றும் வித்தியாசமானப் புரிதலைக் காட்டுகிறது. குமரன் குமரி பற்றிய விளக்கம் புதிதாகவும் முதன்முறை உங்கள் மூலம் நான் புரிந்து கொண்டேன். குமரனுக்க வேல்தந்து அசுரனை அடக்குதலையும் இதனுடன் இணைத்த வாசிக்கலாம். நன்றி. நிற்க.

நான் முன்வைத்த கோணத்தையும் உங்கள் உரையாடலின் கோணத்தையும் இணைப்படுத்தி நான் புரிந்துகொள்ள முயல்கிறேன். விளக்கங்களுக்கு மீண்டும் நன்றி.

எனது பார்வை என்பது இன்றைய பெண் என்கிற கருத்தாக்கத்தை பண்டைய பெண் என்கிற கருத்தாக்கத்துடன் ஒப்பு நோக்கி பார்க்கலாமே ஒழிய ஒன்றுபடுத்தி பார்க்க முடியுமா? என்பதுதான். சமீபத்தில் நான் படித்த ஹிஸ்டீரியா பற்றிய ஒரு ஆய்வில் மேற்குலகில் 18-ஆம் நூற்றாண்டு வரை (மறுமலச்சிக்காலத்திற்கு முன்புவரை) பெண் ஒரு சக மனித ஜீவி என்கிற கருத்தே இருந்ததில்லை என்றும். பாலியல் என்பதில் ஆண்களே முதன்மையாகவும் பெண்கள் ஒரு இன உற்பத்திக்கானவர்களாக மட்டுமே கருதப்பட்டார்கள் எனறு படித்திருக்கிறேன். பெண் உணர்வு பற்றிய புரிதலே அவர்களக்கு இல்லை என்றும். (இங்கு நீங்கள் மனுவின் பெண் பற்றிய நினைவிலி என்ன என்பதை இணைப்படுத்திப் பார்க்கலாம். மனு வரையறுக்கும் பெண்? ஏன் திருவள்ளுவர், தொல்காப்பியர் பெண் குறித்து முன்வைப்பவை ஆதிகக்ச சொல்லாடலே என்பதில் மாறுபாடு இருக்காத என்றெ நினைக்கிறேன்.) இதனை நாம் கீழ்திசை நாடுகளான நமக்கு பொறுத்த முடியாது என்றாலும்.. இன்று நாம் பேசும் "பெண்" என்கிற கருத்தாக்கம் குறித்த பிரச்சனையாக இது இருப்பதை உணரலாம். போகட்டும். "பெண்" குறித்த வரையறை சார்ந்ததே எனது பிரச்சனை என நினைக்கிறேன்.

எப்படியோ உங்கள் பதில் எனக்கு மேலதிக புரிதலை தருவதாக உள்ளது. அடிப்படையில் நான் ஒரு ஆய்வாளனோ எழத்துடன் முழுநேர உறவடையவனோ அல்ல. அதனால் எனது பேச்சை பொருட்படத்த வேண்டியதில்லை. போகிற போக்கில் காதில் பட்டதாக கொள்ளுங்கள்.

இப்பரச்சனைகள் குறித்து எனது கருத்துக்களை இங்கு விளக்க முயன்றுள்ளேன். (http://jamalantamil.blogspot.com/2007/10/blog-post_7002.html)
வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

மற்றபடி உங்களது பிளாக் இருப்பது எனக்கு தெரியாது. அதனை முழுமையாக முதலில் படித்து விடுகிறேன். சற்றுமுன்தான் உங்கள் மற்றொரு கட்டுரை கீற்றில் படித்தேன். அக்கரமாஷி. அதிலும் உங்களது பார்வை சிறப்பாகவே வெளிப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் தந்த உறவுமுறை பற்றிய தொடுப்பில் அப்பதிவை அடைய முடியவில்லை. அது பிரச்சனை இல்லை உங்கள் பதிவில் தேடிக்கொள்ள முடியும்தானே.

மற்றபடி உங்கள் பொருட்படுத்தலுக்கு மீண்டும் நன்றிகள்.

தோழமையுடன்
ஜமாலன்.

நிலம், பெண்ணுடல், நிறுவனமயம்: செந்தமிழன் கட்டுரைகளை முன்வைத்து




நிலம் சார்ந்த தமிழர் இனக்குழு வாழ்க்கையில் பெண்ணுடல் ஒரு நுகர்ப்பொருளாக
அனுபவிக்கப்படவில்லை. அவள் ஒரு படைப்பின் உயிராக மனித இனத்தின்
தொடர்ச்சங்கிலியாக ஓர் அதிசயமாக பார்க்கப்பட்டாள். அவள் சக்தி.
அவளே பராசக்தி. அவளன்றி ஓரணுவும் அசையாது. அவளுக்குள் இந்தப் பிரபஞ்சம்
அடக்கம். இந்தப் பிரபஞ்சத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இயக்கத்தின்
இயங்குவிசை., சக்தியின் ஆற்றல்.. அவள்.
மனித வரலாற்றின் இனக்குழு வாழ்க்கையில் "அன்னையே தலைமை".
மனித வரலாறு இந்தப் பாதையிலிருந்து மாறாமல் பயணித்திருந்தால் பெண்ணியம் என்ற
சொல் இன்றைக்குப் பேசப்படும் எந்தப் பொருளிலும் தன்னை அடக்கிக் கொண்டிருக்காது.
ஆனால் மனித வரலாற்றில் அன்னையின் தலைமை சரிகிற காலக்கட்டத்தில்
இனக்குழு வாழ்க்கை முடிந்து பெண்-ஆண் சமத்துவம் என்ற
இரண்டாம் கட்டத்தை எட்டுகிறது. இக்காலக்கட்டத்தில் மதம் நிறுவனமயமாகிறது.
அரசு, பேரரசுகள் தோற்றம். இப்போது நிலம் மனித சமூகத்தின் உற்பத்தி களன்
மட்டுமல்ல. நிலம் ஆட்சி அதிகாரத்தின் குறியீடாக மாற்றம் பெறுகிறது.

காலப்போக்கில் கலந்துவிட்ட பிற இனக்குழுக்களின் பெண்ணியப்பார்வை
தமிழரின் பெண்ணியப்பார்வையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தது.
மதம் என்ற நிறுவனமும் ஆட்சி அதிகாரத்தின் மூளையாகச் செயல்பட்ட குறிப்பிட்ட
சில இனத்தாரின் சாணக்கியமும் தமிழ்ப் பெண்ணியத்தின் மீது ஏற்படுத்திய
பண்பாட்டு தாக்குதல்களைச் செந்தமிழன் தன் நிலம், பெண்ணுடல், நிறுவனமயம்
கட்டுரைகளில் அலசி ஆராய்ந்து சில முடிவுகளுக்கு வருகிறார்..

மாலதி மைத்ரி, அ.மங்கை ஆகியோரின் நூல்களான 'விடுதலையை எழுதுதல்',
'பெண்ணிய அரசியல்' ஆகிய இரண்டு நூல்களின் 'போலிப் பெண்ணியத்தின்'
கருத்துகளை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு அவர் தன் கட்டுரைகளில்
தமிழ்ப் பெண்ணியத்தின் தன் பார்வையை வைத்திருப்பதாக மிகத் தெளிவாகச்
சொல்லியிருக்கிறார். அவர் விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட இருவரின் நூல்களை
இன்றுவரை வாசிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் , அவ்விருவரின் கருத்துகளுக்குள்
புகாமல், தோழர் செந்தமிழன் கட்டுரைகளின் பெண்ணியப் பார்வைகளை
முன்வைத்து அதன் அடுத்தக் கட்ட சிந்தனைத் தளத்திற்கு நகர்வதே
என் இக்கட்டுரையின் நோக்கம்.

காமக்கிழத்தியும் விபச்சாரமும்:
----------------------------------
காமக்கிழத்தி என்று அழைக்கப்படும் சங்க இலக்கியப் பெண்கள் பாலுறவை
ஒரு தொழிலாக - தன் உடலை விற்றுப்பிழைக்கும் இன்றைய பரத்தமை
தொழிலிருந்து மாறுபட்டவர்கள். சட்டென வெகுஜன பத்திரிகை மொழியில்
சொல்வதானால் காமக்கிழத்தி விபச்சாரி அல்லள். இன்றைக்கு 'விபச்சாரம்,
விபச்சாரி என்ற பொருளில் கையாளும் குறியீடல்ல.
தலைவன் - தலைவி என்ற சங்க கால ஆண்-பெண் வாழ்க்கையில் பேசப்படும்
காமக்கிழத்தி ஒரு தார மணம் ஏற்றுக்கொள்ளப்படும் காலத்திற்கு முந்திய
பலருடன் பாலுறவு கொண்ட சமூகத்தின் எச்சம்.
சங்க இலக்கியத்தின் பல்வேறு பாடல் வரிகளைக் கொண்டும்
அன்றைய பொருளாதர கோட்பாட்டைக் கொண்டும் விளக்குகிறார்.
தமிழினம் பண்டமாற்றையும் தம் குழுவிற்குள் கொடைப் பொருளாதரத்தையும்
கடைப்பிடித்ததால் பரத்தையர் உறவு பொருளாதர மறுபயனுக்கானதாக
இருந்திருக்க முடியாது என்ற முடிவுக்கு வருகிறார்.

'ஆண்களுக்கும் மணமாகாத பெண்களுக்கும் மணநிலைக்குப் புறம்பாக
நிலவிய உறவே பரத்தையர் உறவு " என்ற மார்க்கனின் குறிப்பை
முன்மொழிந்து ஏற்றுக்கொள்கிறார். (பக் 53)

"ஆகவே , பரத்தையர் விபசாரிகள் அல்லர்" என்ற முடிவை
ஆணித்தரமாக மனித இனக்குழு வரலாற்றுப் பார்வையுடன்
ஆய்ந்து முடிவுக்கு வருகிறார்.

ஆண்-பெண் சமத்துவம் ?
--------------------------
ரோமானியர்களின் 'Famulus' என்ற சொல்லின் பொருள் வீட்டு அடிமை
familia = என்றால் ஒரு நபருக்குச் சொந்தமான அடிமைகளின் எண்ணிக்கை.
தந்தை அதிகாரத்திற்குட்பட்ட ரோமானிய குடும்ப அமைப்பு முறை 'family'.
தமிழ்ச் சமூகத்தில் குடும்பம் என்பது இல்லறம். கணவன் - தலைவன் என்றும்
மனைவி தலைவி என்றும் நிகர்ப்பொருளில் சங்க இலக்கியத்தில் வாழ்கிறார்கள்.
பெண்ணுக்குச் சீதனமாக கொடுக்கப்படும் நிலம், பாவைநோன்பு
என்ற கருத்துகளின் ஊடாக பயணித்து தன் கருத்துக்கு வலுவூட்டுகிறார்.

இந்தக் கருத்துகளின் உச்சக்கட்டமாக தமிழரின் பொருளாதரம் பெண்களின்
பங்களிப்பைச் சார்ந்திருந்தது என்ற முடிவுக்கு வருகிறார். (பக் 91)
சமூக உற்பத்தியில் ஆண் - பெண் தவிர்க்கவியலா கடமைகளையும் உரிமைகளையும்
கொண்டிருந்தனர் என்று சொல்ல வரும்போதுதான் இக்கருத்தை உதிர்க்கிறார்.

'தமிழரின் பொருளாதரம் பெண்களின் பங்களிப்பைச் சார்ந்திருந்தது ' என்று சொல்வதற்கும்
'தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் தங்கள் பொருளாதர நிலையில் ஆண்களைச் சார்ந்திருக்கவில்லை'
என்று சொல்வதற்கும் நுண்ணிய வேறுபாடுகள் உண்டு.
குறிப்பாக நெய்தல் நில வாழ்க்கையை எடுத்துக் கொள்வோம்/
நெய்தலின் பரதர் தொழில் கடலில் மீன்பிடித்தல்..
அப்படி அவன் பிடித்து வருகிற மீனை விற்பதும் காயவைத்து பதப்படுத்தி
சந்தைப் பொருளாக்குவதில் உதவுவதும் பெண்ணான பரத்தி/ நுளைச்சியின் வேலை.
ஆணின் வேலை- பங்களிப்பும் மூலதனம்.
பெண்ணின் வேலையும் அவள் பங்களிப்பும் அந்த மூலதனத்தைச் சார்ந்தது.
அதைச் சார்ந்து தொடர்வது.

மீன்பிடித்தல் இன்றி மீன்விற்பனை சாத்தியமில்லை.

பொருளாதரம் என்பதை முதலில் உற்பத்தி/ மூலதனம் என்பதுடன் தொடர்பு
படுத்தி இருக்க வேண்டும்., அதைவிடுத்து அடுத்தக்கட்டமான விற்பனை/சந்தை
என்ற நிலையை வைத்து தீர்மானிப்பது சரியல்ல.

ஆண் சார்ந்த பெண் அடையாளங்கள்
--------------------------------------

பரத்தமை, காமக்கிழத்தி, ஆண்-பெண் இல்லற உறவுகள் என்று தன் கருத்துகளை
முன்வைக்கும் போதெல்லாம் நுண்ணிய உணர்வுகளின் ஊடாகவும் பயணித்து
மனித வரலாற்றுப் பார்வையை முன்வைத்த கட்டுரையாளர் என்ன காரணத்தினாலோ
எழுத்தாளர் மாலதிமைத்ரியின் கருத்தைப் போலிப்பெண்ணியம் என்று அடைமொழியுடன்
அடையாளப்படுத்த முயற்சி செய்திருப்பது வரலாற்றுப்பார்வையில் ஒரு சரிவை
ஏற்படுத்தியுள்ளது.
என்ன சொல்லப்பட்டிருக்கிறது? என்று பார்க்காமல்
'எவர் சொன்னார்? என்று பார்க்கும் ஒற்றைப்பார்வையின் விலை இது!

பக்: 91 ல் நிலம், நிலம் சார்ந்த ஆண்கள், பெண்களின் பெயர்களை அட்டவணையிட்டு
காட்டியிருக்கிறார்.

இந்தப் பெயர்களின் மூலம் ஆண்களுக்கு நிகரான பால் தொகுதியினராக பெண்கள்
விளங்கினார்கள் என்றும் , இதன் உள்ளார்ந்தப் பொருள் ஆண்களுடன் இணைந்து அவர்களுக்கு
நிகராக பெண்களும் சமூக உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்." என்கிறார்.
தன் கருத்துக்கு அவர் சொல்லும் பெண் அடையாளச் சொற்கள்,
குறத்தியர், எயிற்றியர், ஆய்ச்சியர், உழத்தியர், பரத்தியர். என்பதே.
இச்சொற்கள் அனைத்தும் தொழில் சார்ந்த பெயர்களே என்று சொல்லும் கட்டுரையாளர்
பாலை நிலம் குறித்து சொல்ல வரும்போது ஏற்படும் முரணில் சிக்கி
அவரையும் அறியாமல் மாலதிமைத்ரியின் கருத்துவலைக்குள் வந்துவிடுகிறார்!

பாலை நிலம்: ஆண் : எயினர், மறவர்
பெண்: எயிற்றியர், மறத்தியர்.

"பாலைநிலத்தொழில் வழிப்பறி செய்வது என்பதால் எயிற்றியர் அதில் நேரடியாக
ஈடுபட்டதாகத் தெரியவில்லை" - பக்: 92

அப்படியானால் அடுத்தக் கேள்வி, எந்த சாதாரண வாசகனுக்கும் எழும் கேள்வி
-அந்தப் பெண் ஏன் எயிற்றி என்றழைக்கப்பட்டாள்?- என்பதுதான்.

அவள் அந்தத் தொழிலைச் செய்யவில்லை. ஆனால் அந்தத் தொழிலைச் செய்பவனின்
மனைவி/மகள். எனவே அவள் எயிற்றி ஆனாள்.
இந்த அடையாளத்தின் வழி வந்த பெண் அடையாளங்கள் தான்

>குறிஞ்சி நிலத்து குறவனின் மனைவி குறத்தி
முல்லை நிலத்து இடையனின் மனைவி இடைச்சி
மருத நிலத்து உழவனின் மனைவி உழத்தி
நெய்தல் நிலத்து பரதனின் மனைவி பரத்தி.

இதைத் தான் மாலதி மைத்ரி "பெண்ணுக்கு மனைவி அல்லது பரத்தை என்ற இரு
பாத்திரங்கள் மட்டுமே தமிழ் நிலத்தில் வழங்கப்பட்டிருந்தது:"
என்று சொல்லியிருந்தார்.

கட்டுரையாளர் இன்னொரு கருத்தையும் சிந்திக்க வேண்டும்.
மருத நிலத்து பெண் முல்லை/குறிஞ்சி நிலத்து ஆணைத் திருமணம் செய்து
வாழ்ந்ததற்கு இலக்கியச் சான்றுகள் சங்க இலக்கியத்தில் உண்டு.
அவள் முல்லை/குறிஞ்சி நிலத்து ஆணைத் திருமணம் செய்தப் பின்
"என்னவாக அழைக்கப்பட்டிருப்பாள்?"
உழத்தி என்றா? அல்லது இடைச்சி/ குறத்தி என்றா?
உழத்தியாக மருத நிலத்தில் பிறந்தவள் இடையனுடன் களவொழுக்கம்
கண்டு கற்பொழுக்கத்துடன் வாழும் போது அவள் என்ன தொழில்
செய்திருப்பாள்?
தினைப்புலம் காத்திருப்பாளா? அல்லது பால் விற்றிருப்பாளா?

பெண்ணுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பெயர் அவள் ஏற்றுக்கொண்ட
இல்லறம் சார்ந்தும் அவள் தொழிலும் அதைச் சார்ந்துமே இருந்தது.
இன்னும் சொல்லப்போனால் 'ஒரு தார மணம்' என்ற கற்பொழுக்க
இல்லற வாழ்க்கைக்கு பெண் கொடுத்த மிகப்பெரிய விலை
இதுதான்.
எனினும் பால்விற்பது, மோர் விற்பது, நாற்று நடுவது, மீன்விற்பது,
கால்நடை பராமரிப்பு, இத்தியாதி உபதொழில்கள் மூலம் நிகழ்ந்த
பண்டமாற்று பொருளாதர நிலையில் பெண் இல்லறத்தில்
அனைத்துக்கும்(ஆம் அனைத்துக்கும்) ஆணின் கையை எதிர்ப்பார்த்து நிற்கும்
அடிமைநிலையுடன் வாழவில்லை என்ற தமிழ் மரபுக்குப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
மேலும் கணினியின் உலகமயமாதலின் தொழில் அடையாளத்துடன் வாழும்
இன்றைய தலைவியிடம் சம்பளம் வந்தவுடன் காசோலையை வாங்கி தனதாக்கிக்
கொள்ளும் தலைவனாக அன்றைய தமிழ்ச் சமூகத்து ஆண் இருக்கவில்லை.
பெண்ணின் உழைப்பு சுரண்டப்படவில்லை. அவள் உழைப்பிற்கான பயனை
இல்லறத்தினர் அனுபவித்தாலும் அவள் பொருளாதர உரிமை மதிக்கப்ட்டிருந்தது.
ஆண்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

மரபுகளின் மறுபக்கம்
----------------------


மரபு என்பதாலும் எம் முன்னோர்கள் இப்படித்தான் வாழ்ந்தார்கள் என்பதாலும் அனைத்துமே
பெருமைப் படக்கூடியதாகவும் போற்றிப் பாதுகாக்க வேண்டியதாகவும் எண்ணும்
ஒரு கருத்துப் பிழையைத் நாம் பல்வேறு தளங்களில் தொடர்கிறோம்.
தேவரடியார் பற்றிய கட்டுரை இந்தப் பாதையில் பயணிக்கிறது.

"தேவரடியார் சமூகம் அழிந்துப் போனது" என்பதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டுமா?
இல்லை ஆடல், பாடலை வளர்த்த ஒரு பெண் சமூகம் அழிந்து விட்டதே என்று கட்டுரையாளரைப்
போல வருத்தப்பட வேண்டுமா?
ஆமாம் இந்த தேவரடியார்களில் ஆடல்-பாடல் கலை யாரை மகிழ்விக்க?
அரசர்கள் அவர்களுக்குக் கொட்டிக்கொடுத்த பரிசுகள்- நிலங்கள் எதற்காக கொடுக்கப்பட்ட விலை?

தேவரடியார்கள் விபச்சாரிகள் அல்ல. உண்மைதான்.
ஆனால் என்றைக்கு அவர்களின் கலைக்கு நிலம் பரிசளிக்கப்படுகிறதோ அப்போதே
அதற்கு ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என்று தான் அர்த்தம்.
தன் கருத்துகளுக்கு ஆதாரமாக தஞ்சைப் பெருவுடையார் கோவில் தேவரடியார்களுக்கு
வழங்கப்பட்ட நில உரிமைகளை, வீடுகளைப் பட்டியலிடுகிறார்.
தஞ்சைக் கோவில் எழுப்பப்பட்ட சோழரின் காலம்தான் ஆரியர்களின் ஆதிக்கம் மதத்திலும்
அரசு அதிகாரத்திலும் தன்னை உறுதிப்படுத்திக் கொண்ட பொற்காலம்!
ஆனால் அதைத்தான் தமிழர்களின் பொற்காலமாக நாம் சொல்லிக்கொண்டிருக்கிறொம்!
"தேவரடியார்களின் பொருளாதர ஆதாரம் கோயில் சார்ந்திருந்ததால் இம்முறையின் ஒழிப்பு
அவர்களை வாழ வழியற்றவர்களாக்கியது. கோயில்களிலிருந்து துரத்தப்பட்ட பிறகு தேவரடியார்கள்
வசமிருந்த ஒரே தொழில் வாய்ப்பு விபசாரம் மட்டுமே. முற்போக்கு சக்திகளின் மூளை"
இதுகுறித்துச் சிந்திக்கவில்லை" என்று குறைப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டுரையாசிரியர்
சான்றுகளுடன் நிறுவ முடியுமா
எத்தனை தேவரடியார்கள் தேவரடியார் ஒழிப்புக்குப் பின் விபசாரிகளானார்கள் என்பதை.
உண்மைநிலை விபசாரிகளாக வாழ்ந்த தேவரடியார்கள் அந்த அடிமைத்தனத்திலிருந்து
விடுபட்டார்கள் என்பதுதானே.
'கோயில்களை ஆணாதிக்க சாதி ஆதிக்க நிலவுடமையாளர்களின் பிடியிலிருந்து விடுவித்து,
தேவரடியார்களின் பொறுப்பில் ஒப்படைத்திருந்தால் .." என்று வாதமிடுவது
இல்லாத ஊருக்கு வழிச்சொல்வது போல இருக்கிறது.

தமிழர் வாழ்வியலில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, நெசவு, சிற்பம், தச்சு, நகைத்தொழில்
உள்ளிட்ட பல்வேறு மரபுத் தொழில்கள் முதலாளியத்தால் அழிக்கப்பட்டு வருவதையும்
கூட்டுக் குடும்பமுறை கூட்டு உற்பத்தி முறை ஆகியவை முதலாளிய கருத்தாக்கங்களால்
சிதைக்கப்பட்டதையும் விவரிக்கும் போது "மரபுத் தொழில்கள் உயிர்ப்பிக்க வேண்டும்"
என்ற முடிவுக்கு வருகிறார்.
இந்த முடிவுகளின் வழிப் பயணிக்கும் போது சாதியக் கட்டுமானத்தின் ஆணிவேர்களை
நாம் அடையாளம் காண முடிகிறது.
கீதாரிகளின் வாழ்வு குறித்தக் கட்டுரையில் நடோடி சமூகத்தின் இனக்குழுவில்
பொதிந்து கிடக்கும் கால்நடை மருத்துவங்கள் ஆவணப்படுத்தப்பட்டு காப்பாற்ற
பட வேண்டியவைதான்.அதற்காகவே கீதாரியின் எஞ்சினியர் மகன் இரவில் கிடையில்
ஆடைகளைக் கவனிக்க வருவதில் எமக்கு உடன்பாடில்லை.
கீதாரியின் மகனின் தொழில் கிடையைக் கவனித்தல் என்ற மரபு தொழில்
தொடர்வதில் சாதியம் பாதுகாக்கப்படும். இவை உடைக்கப்பட வேண்டிய மரபுகள்.
இவைகளை உடைப்பதிலும் இவை உடைக்கப்பட்டதிலும் என் போன்றவர்களுக்கு
துளியும் வருத்தமில்லை.

ஒரு எழுத்தின் வெற்றி அதன் தொடர்ச்சியாக எழும் பல்வேறு சிந்தனைகள்.
செந்தமிழன் கட்டுரைகள் வாசகனுக்கு சிந்தனை அலைகளை எழுப்புவதில்
மிகச்சிறந்த வெற்றி பெற்றுள்ளன. தோழர் செந்தமிழனுக்கும் இந்நூலை வாசிக்கும்
வாய்ப்பைக் கொடுத்த தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழுவுக்கும்
நூலைச் சிறப்பாக வெளியிட்டிருக்கும் தஞ்சை பன்மைவெளி வெளியீட்டகத்திற்கும்
வாழ்த்துகள்.

-----------------

Wednesday, May 21, 2008

வெற்றிடம்



எப்போதும்
கை நழுவிப் போகிறது
உன்னைச் சந்திக்கும் வாய்ப்புகளும்
உன்னுடன் பேசும் தொலைபேசி
அழைப்புகளும்.
கைபேசிகளுடன்
அலைந்து கொண்டிருந்தாலும்
நம் கைகள்
நமக்கான நம் எண்களைச்
சுற்றாமலேயே
உலகம் சுற்றி வருகிறது.

உறவுகளின் மரணத்தையும்
நண்பர்களின் பிரிவையும்
காலம் கடந்தே
பதிவு செய்கிறது
என் கணினி.
கண்ணீர்ச்சுரப்பிகள்
வற்றிப்போனபிறகே
சம்பிரதாயத்திற்காய்
துக்கம் விசாரிக்கச்
சந்திக்க வருகிறது
என் விழிகள்.

பிரபலங்களின்
புத்தகக்குவியல்களில்
கிடைக்காத
ஞானத்தை
மனிதர்கள் இல்லாத ஜனக்கடலில்
அறிவுஜீவிதம் மரணித்த தருணத்தில்
உன் வெற்றிடம்
எனக்குப் போதிக்கிறது
புத்தனாய் இருந்து.

Thursday, May 8, 2008

"அக்கர்மஷி"யின் அடையாளங்களைத் தேடி



நான் சபிக்கிறேன்
உன்னை
உன் எழுத்துக்களை
உன் கலாச்சாரத்தை
உன் வேஷத்தை..

( நாம்தேவ் தசள் - கோல்ப்பிதா கவிதைகளிருந்து)

மராட்டிய மாநிலத்தில் ஒரு புதிய அலை இதுவரை எழுதப்பட்டிருந்த இலக்கியத்தின்
பக்கங்களைப் புரட்டி, இதுவரை நிறுவப்பட்டிருந்த சமூகத்தின் அடையாளங்களை
வீசி எறிந்து ஒரு கோட்டோவியத்தை வரைந்தது.
1960களில் ஏற்பட்ட சிறுபத்திரிகைகளின் வளர்ச்சி, மும்பையில் தொழில்மயம்,
அந்தத் தொழில்மயத்தில் எழுந்த புதிய தொழிலாளர் வர்க்கம், தொழிற்சங்கங்கள்,
அதுசார்ந்த மார்க்சிய சிந்தனைகள் இந்தப் பின்புலத்தில் 1972ல் தலித் பைந்தர்
அமைப்பு .. என்று தொடர் அலையாக எழுந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்.
அந்தக் குரலைப் பதிவு செய்திருக்கும் தலித் இலக்கியங்கள். அதிலும் குறிப்பாக
1980களில் தலித் எழுத்தாளர்களின் 'தன் வரலாற்று" பாணியிலான தலித் வரலாறு
மார்க்சிய சிந்தனைகளையும் சேர்த்தே புரட்டிப் போட்டது.

தலித் எழுதாளர் தயாப்வாரின் "பலுட்டா " -சமூக உரிமை (1978)
லஷ்மண் மானேயின் " யுபரா"- அந்நியன் (1980)
லஷ்மண் கெய்க்க்வாட்டின் "யுசல்ய -அற்பத்திருடன் (1987)
பெண் தலித் எழுத்தாளர் பேபி காம்ப்ளேயின் 'ஜின் அமுச்" (இப்படியாக எங்கள் வாழ்க்கை)
இவை அனைத்தும் தலித் தன் வரலாற்று பதிவுகளில் குறிப்பிடத்தக்கன.
இக்காலக்கட்டத்தில் வெளிவந்த சரண்குமார் லிம்பாளேயின் "அக்கர்மஷி"
வெளிவந்தவுடன் மிகவும் பேசப்பட்ட ஒரு பதிவு.
அக்கர்மஷி என்றால் ஜாதிபிரஷ்டம் செய்யப்பட்டவன் - THE OUTCASTE
என்று பொருள். ஜாதிகளால் விலக்கிவைக்கப்பட்டவன் என்றும்
பொருள் கொள்ளலாம்.

கதையோட்டமும் சில கேள்விகளும்
----------------------------------
சரண்குமாரின் தாய் மகாமயி மகர் இனத்தைச் சேர்ந்த தலித் பெண்.
அவனோ படில் (Patil) இனத்தைச் சார்ந்த ஆதிக்கச்சாதி ஆணுக்குப் பிறந்தவன்.
படில்களின் பண்ணைவீடுகளை காவல்காக்கும் மகர் ஆண்கள்
படில்களின் மனைவிமார்களைத் தூங்கும்போது கூட பார்த்ததில்லை.
பார்க்க முனைந்ததும் இல்லை. ஆனால் அவர்களின்
தாய்களை, தாரங்களை, மகள்களை, சகோதரிகளை பண்ணையாரின்
சதைப் பசி எப்போதும் தின்று எச்சிலாக்கி தெருவில் வீசுகிறது
வயிற்றுப்பிள்ளையுடன்.
மகமாயி வீடு நிறைய குழந்தைகள். வெவ்வேறு ஆதிக்கச்சாதியின் அடையாளத்தைச்
சுமக்கும் அடையாளமற்றுதுகள்.
மகர்களின் வீடுகள் இந்தக் குழந்தைகளை மகர்களின் இரத்தத்தைக் கறைப்படுத்திய
களங்கமாக கண்டு விலக்கி வைக்கிறார்கள்.
அவர்கள் பிறப்புக்கு வித்திட்ட ஆதிக்கச்சாதிகளொ எந்த வகையிலும்
தங்கள் அடையாளங்கள் தங்கள் விதைகளில் முளைத்த மரங்களில்
இருக்காமல் பார்த்துக்கொள்ளும் இயற்கை முரணை இயல்பாக்கி
வெற்றி காணுகிறார்கள்.

மகர்களின் குடும்பத்திலேயே சரண்குமாருக்குப் பெண் கொடுக்க மறுக்கிறார்கள்.
ஓர் இசுலாமியரைத் தன் உறவுக்காரர் என்று சொல்ல சரண்குமாரைச் சுற்றியிருக்கும்
தலித் சிந்தனையாளர் கூட்டம் தன் புருவம் உயர்த்துகிறது.
அவன் அப்படிச் சொன்னதால் தலித் பைந்தர் அமைப்பில் கவுரவமான பொறுப்பில்
இருக்கும் தன் மகனுக்கு அவமானம் என்று சரண்குமாரின் மாமனார் அவனிடம்
சண்டை போடுகிறார்!

தலித்தியம் என்பது என்ன?
தலித்துகளின் கூட்டமைப்பு மட்டும்தானா?
இக்கேள்வி எழுகிறது.
தலித்தியம் என்பது தலித்துகளின் கூட்டமைப்பும் தான்.
ஆனால் அதுமட்டுமல்ல.
தலித்துகளின் கூட்டமைப்பில் சாதியொழிப்பை முன்னெடுத்துச் செல்லும்
நடவடிக்கை எளிதாகிறது. அந்தச் செயல்பாட்டின் வழி சமத்துவம் சமுதாயத்தை
கட்டமைப்பது என்ற குறிக்கோள் சாத்தியப்படும்.
ஆனால் நடைமுறையில் தலித்துகளின் கூட்டமைப்பு என்ற முதல் கட்டத்திலேயே
நின்று கொண்டிருப்பதற்கு யார் காரணம்?
தலித்துகள் மட்டும் காரணமா?
அடுத்தக் கட்ட நகர்வுக்கு வாய்ப்பின்றி இச்சமுதாயம் கட்டமைக்கப்பட்டிருப்பது காரணமா?
இங்கு நிலவும் அரசு, அரசியல், தலைவர்கள் காரணமா?
தலித்திய மக்களை அந்த நிலையிலையே வைத்து தன் பீடத்தைக் காப்பாற்றிக்கொள்ளும்
தலித், தலித் அல்லாதோர் எல்லோருமே காரணமா?
யார்க் காரணம்?

என்னை மதிக்காதவர்களையும் மதிப்புடன் பயத்துடன் அழைக்கும்
என் நாக்கு
"என் நாக்கு மனுவின் சட்டத்திட்டங்களைச் சுற்றியே புரள்கிறது"
1978ல் மகர்களில் அந்த ஊரில் படித்தப் பட்டதாரிகள் இருவர்தான்
என்ற உண்மையைப் பதிவுச் செய்யும் போது
இட ஒதுக்கீடு வேண்டுமா வேண்டாமா என்று பேசுவதற்கு முன்
சேரிக்குள் நுழைந்து அவர்களுடன் வாழ்ந்து பாருங்கள் என்று
எல்லோரையும் அழைக்கும் குரலில் சத்தியம் இருக்கிறது.
சத்தியமேவ ஜெயதே!

பாலுறவு
-----------

கற்பு, கற்பொழுக்கம், பெண் தெய்வங்கள் என்று அதீதமாக பேசப்படும் இந்திய-
இந்துச் சமுதாயத்தில் அவர்களின் பேச்சும் எழுத்தும் கற்பித்திருக்கும் ஒழுக்கப்
பண்பாட்டு விழுமியங்களும் அவர்களாலேயே சேரிகளில் மிதித்து நசுக்கிச்
சிதைக்கபடுவதையும் இவர்களின் தன் வரலாறுகள் பதிவு செய்திருக்கின்றன.
ஆதிக்கச் சீதாராமன்களின் வேடமணிந்த, அகலிகைகளுக்குப் புணர்வாழ்வு
கொடுத்த புண்ணியபாதங்களால் சிதைந்துக் கிடக்கும் தலித் பெண்களின் யோனிகள்
நம்மைப் பயமுறுத்துகின்றன.

மார்புக்கச்சையோ, ப்ளவுசோ அணியாமல் தொங்கும் முலைகளைத் தன் சேலை
முந்தானையால் மார்பைச் சுற்றித் தூக்கிக்கட்டி அலைந்த நம் பாட்டிகளை
பார்த்திருக்கிறோம். ஆனால் சரண்குமாரின் அம்மாவும் சகோதரிகளும்
நிர்வாணமாக வெளியிடத்தில், அவன் முன்னாலேயே குளிக்கிறார்கள்.

தன்னவ்வா (Dhanavva) என்ற தலித் பெண்ணை அவள் தகப்பன் சங்கர்
பெண்டாளுகிறான். கேட்டால் சொல்கிறான்..
"நான் போட்ட விதை முளைத்து வளர்ந்து மரமாகிவிட்டது. இந்த மரத்தின்
கனிகளை நான் ஏன் பறிக்கவோ சுவைக்கவோ கூடாது?" என்று!

சந்தமாயி புருஷன் செத்துப் போனதால் நெற்றியில் பெரிதாக வைக்கும்
குங்குமப் பொட்டை, கழுத்தில் அணியும் கறுப்பு மணி தாலியை
விலக்கி வைக்கிறாள்: அவள் அளவில் அவளுக்கான விதவைக்கோலமும்
மனைவியின் கடமையுமாக இதுவே அமைந்து விடுகிறது.
ஆனால் அவள் தான் பஸ் ஸ்டாண்ட்டில் காக் கா (kaka) வுடன்
திறந்தவெளியில் குடித்தனம் நடத்துகிறாள்.
வீடில்லாத , கதவுகள் இல்லாத பஸ் ஸ்டாண்டின் திறந்தவெளியில்
வாழ்க்கை நடத்துவது அவலம்தான்.
இந்த அவலத்தின் ஊடாகத்தான் அவள் இந்து-முஸ்லீம் என்ற மத அடையாளத்தை
மத துவேஷத்தை தன்னளவில் வெற்றிக்கொண்டு
ஒரு பெண் அவளுக்கு ஓர் ஆண் என்ற உன்னதத்தை, வாழ்க்கைக்கும் வாழ்க்கையின்
நம்பிக்கைக்கும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறாள்.

எது அடையாளம்?
-------------------

ஒரு மனிதனின் அடையாளம் என்பது என்ன?
நான் யார்?
என்று யோசிக்கும் போது நாம் நம்மை யாராக அடையாளப்படுத்திக் கொள்கிறோம்
என்பதைவிட நம்மை இந்தச் சமுதாயம் யாராக அடையாளம் காணுகிறது
என்பது தான் முன்னிலை வகிக்கிறது.
பல நேரங்களில் நாம் நம்மைக் காட்டும், காட்ட முனையும் அடையாளத்தை
அழித்து இந்தச் சமுதாயம் காட்டும் அடையாளம் நிலைநிறுத்தப்படுகிறது.
இந்தியாவின் தலைச்சிறந்த சிந்தனையாளர், தலைவர் என்ற தகுதிகளை
உடைய பாபாசாகிப் அம்பேத்கரின் உண்மையான அடையாளத்தை
மங்கவைத்து அவர் தலித்துகளின் தலைவர் என்ற அடையாளத்தை
நிலைநிறுத்திவிட்டது இச்சமுதாயம்.

"அவருக்கிணையாகக் கற்றவரும் அறிவின் விளிம்பைத் தொட்டுத் தளும்பியவரும் இனி
பிறந்தால்தான் உண்டு என்பது பூரிப்புக்குரிய விஷயம். அந்தக் கனவானின் உருவப்படம்
இந்தியா முழுவதும் குடிசைகள், குப்பங்கள், நடைபாதைகள், தெருவோரங்கள்,
பொதுப் பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்ட நலிந்த குடியிருப்புகள் என
முற்றும் புறக்கணிக்கப்பட்டோர் நடுவில் மட்டுமே கம்பீரமாகத்
தொங்கிகொண்டிருப்பதைக் காண்பது கண்ணீருக்குரிய அவலம்.

ஆனால் இன்னொரு கோணத்தில் பார்த்தால்
அவருக்கும் சமூகத்துக்குமான நம்பகத்தன்மையின் சின்னமும் அதுவே"

என்று கவிதாசரண் சொன்னதும் நினைவில் வருகிறது. (ஆக 07-பிப் 08 இதழ்).

சரண்குமாருக்கு லிம்பாளே என்ற பெயர்- குடும்பப்பெயராக ..
(குடும்பப்பெயரென்ன குடும்பப்பெயர் ஒரு மண்ணாங்கட்டியுமில்லை!
சாதி அடையாளப்பெயர்) எப்படியோ வந்து ஒட்டிக்கொள்கிறது.
சாதிக்கலவரத்தின் போது அவன் தலித்திய அடையாளத்தை மறைத்துக்கொண்டு
பத்திரமாக வாழும் கவசமாக, அகமதாபாத்திலும் லாத்தூரிலும் எளிதாக
வீடு வாடகைக்கு கிடைக்க வாய்த்திருக்கும் வரப்பிரசாதமாக அமைந்துவிடுகிறது.
வசதிகள் கூட கூட அவனும் அவன் வாழ்ந்த மகர்களின் கூட்டத்துடன்
மீண்டும் இணையமுடியாதவனாக தன்னை விலக்கிக்கொள்கிறான்.
தூய்மை என்ற பெயரில், அந்தஸ்து என்ற அடையாளத்தில்,
சமூக மதிப்பு என்ற அடையாளத்தை நிலைநிறுத்த.

சரண்குமாரைச் சுற்றி இருக்கும் அவனுடன் சம்மந்தப்பட்ட
இரத்த உறவுகள், சமுதாய உறவுகள், அவனை அவர்களில் ஒருவனாக ஏற்காமல்
அந்நியப்படுத்துகிறது.
உண்மையில் இந்த அந்நியப்படுத்துதல்- அவனைச் சாதிக்கெட்டவனாக,
சாதியற்றவனாக காட்டும் அடையாளம். இந்த அடையாளம் வரவேற்கப்பட
வேண்டிய அடையாளம்.
ஆனால் வசுவுகளிலேயே கீழ்த்தரமான மோசமான வசவாக கையாளப்படும்
வார்த்தை " சாதிக்கெட்ட பயலே !" என்பதுதான்.
சமுதாயத்தில் ஒருவன் அப்பன் இல்லாமல், ஆத்தா இல்லாமல்
இருக்கலாம்.. ஆனால் சாதி இல்லாதவனாக இருக்கக்கூடாது,
இருக்கவே முடியாது என்பது தான் அடிமுதல் முடிவரை
கம்பீரமாக எழுந்து நிற்கும் சாதியின் இறையாண்மை!

இந்த இறையாண்மையே இந்தியாவின் இறையாண்மையாக
இருப்பதுதான் அடையாளம் அற்றவர்களும் தேடி அலையும்
தனக்கான தன் அடையாளம்.

Friday, May 2, 2008

முரண்வெளி - 2

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். உங்கள் வலைப்பதிவில்
http://jeyamohan.in/?p=412 பக்கத்தை வாசிக்கச் சொல்லி எனக்கு மின்னஞ்சல்கள்
வந்து குவிகின்றன.
ஏழாம் உலகத்தை நான் வாசித்தவுடன் நான் உணர்ந்ததில் நான்
எழுதியிருப்பது ரொம்பவும் சொற்பம் என்பது என் எண்ணம்.
பாவம், புண்ணியம், நரகம், சொர்க்கம்,
பிச்சைக்காரர்களுக்குத் தர்மம் செய்வது புண்ணியம் என்ற
மேம்போக்கான நம் மத நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்குவதில் ஏழாம் உலகம்
மிகப்பெரிய சாதனையைப் படைத்திருப்பதாக நான் உணர்ந்தேன்.
அதையே என் பார்வையில் பதிவு செய்திருந்தேன்.

உங்களின் கொற்றவை படைப்பு குறித்து தமிழ்நேயம் கோவை ஞானி அவர்கள்
விமர்சனக்கட்டுரைகளின் தொகுப்பு நூலை அனுப்பியிருந்தார்.
அதன் பின் அந்த நாவலை வாசிக்க காத்திருக்கிறேன்.
அண்ணன் ராஜ்கவுதமன் கூட தன் கட்டுரைகள் "பாட்டும் தொகையும்
தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும் ' நூலில்
கண்ணகியைக் காரைக்கால் அம்மையாராக கோடிட்டு காட்டியிருக்கிறார்.

"மத அமைப்புமீதான எதிர்ப்பை என்னைப்போன்ற ஒருவன் இந்துமத எதிர்ப்பாகவே வெளிப்படுத்த முடியும், ஏனெனில் நான் இந்து. உடனே இந்துஞானமரபையே ஒட்டுமொத்தமாக நான் எதிர்க்கவேண்டும் என்றும், இந்திய பாரம்பரியத்தையே தூக்கி வீச வேண்டும் என்றும் ஒரு சாரார் எதிர்பார்க்கிறார்கள். இவர்களுக்கு இம்மரபைப்பற்றியும் பாரம்பரியம் பற்றியும் எதுவுமே தெரியாது. எனக்குத்தெரியும். ஆகவே இவர்களின் கண்மூடித்தனத்தை என்னால் ஏற்க இயலாது. இவர்களுக்கு தங்களுடன் சேராத எவரையுமே மறுபக்கம் சேர்த்துத்தான் பேசமுடியும். " என்று எழுதியிருக்கிறீர்கள்.
"அவர்களில் இருந்து நான் வித்தியாசமானவள்" என்பதை மட்டுமே நான் இப்போது
உங்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

சுவாமி விவேகானந்தரின் இந்து மதக் கருத்துகள் சிலவற்றை வாசித்தப்பின்
இதெல்லாம் சொன்னது சுவாமி விவேகானந்தரா அல்லது ஈ வே ரா பெரியாரா
என்ற சந்தேகம் வரும். ஆனால் யாரும் விவேகானந்தரின் கருத்துகளை
முன்னெடுத்துச் செல்வதில்லை. வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை குறித்து
இந்து மதத்தினர் பேசுவதில்லை!

என் கருத்துகளுடன் உடன்படுபவர்களுடன் மட்டுமல்ல
மாறுபட்ட கருத்துகள் கொண்டவர்களுடனும் என் நட்புறவு தொடர்கிறது.
கருத்து முரண்வெளியில் பயணிப்பதும் கைகுலுக்குவதும் சாத்தியம் தான்
என்பதற்கு என் நட்பு வட்டங்களே நல்லதொரு சாட்சியங்கள்.

என்னைப் பற்றி நண்பர் நாஞ்சில்நாடன் மூலம் அறிந்ததாக குறிப்பிட்டுள்ளீர்கள்.
நாஞ்சில்நாடன் சொல்லியிருந்தால் சரியாகத்தான் சொல்லியிருப்பார்.
நாஞ்சில்நாடனிடன் இதைப் பற்றி நேற்று பேசினேன்.

அன்புடன்,

புதியமாதவி,
மும்பை.



(எழுத்தாளர் ஜெயமோகனின் வலைப்பதிவிலிருந்து)

http://jeyamohan.in/?p=412


இணையத்தில் சில கட்டுரைகளைக் காண நேர்ந்தது. அவற்றுக்கு என் எதிர்வினைகளைக் கோரி கடிதங்கள் வந்தன.

திருமதி புதியமாதவி பற்றி நாஞ்சில் நாடன் சொல்லியிருக்கிறார். ஏழாம் உலகம் நாவல் பற்றிய அவரது எதிர்வினையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதிலுள்ள அமைப்பு எதிர்ப்பு என்பது அதைவிட தீவிரமாக விஷ்ணுபுரத்தில் உண்டு என்பதே என் எண்ணம். பொதுவாகவே படைப்பூக்கம் என்பது அமைப்புநோக்குக்கு எதிரானதாகவே இருக்கும். தனிப்பட்ட முறையில் நான் எப்போதுமே நிறுவனத்தன்மைக்கு எதிரானவன். மத நிறுவனம் மீது எப்போதுமே கடுமையான எதிர்க்கருத்தே எனக்கு உள்ளது. ஏழாம் உலகமும் அதையே வெளிப்படுத்துகிறது.

இவ்வாறு அமைப்பு எதிர்ப்பை ஒரு படைப்பாளி வெளிப்படுத்தும்போது அவன் பழமையான அமைப்புகளையே அதிகமும் இலக்காக்குகிறான். உடனே அவனிடம் அவற்றை எதிர்க்கும் புதிய அமைப்புகளுடன் சேர்ந்துகொள்ளும்படி கோருகிறார்கள். அந்த அமைப்பையும் அவனால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்றால் அவனை அவர்கள் தங்கள் எதிரிப்பக்கம் சேர்த்துவிடுகிறார்கள். நல்ல படைப்பாளி எல்லாவகையான அமைப்பு மனிதர்களாலும் தங்கள் எதிரியின் தரப்பைச் சேர்ந்தவன் என்று அடையாளம் காட்டப்படுவான். என் எழுத்துக்கு எப்போதுமே இதுதான் நிகழ்ந்து வருகிறது. அதை மதவாதிகள் எதிர்ப்பார்கள். மத எதிர்ப்பாளர்களும் எதிர்ப்பார்கள்.

இன்னொரு விஷயம் உண்டு. மத அமைப்புமீதான எதிர்ப்பை என்னைப்போன்ற ஒருவன் இந்துமத எதிர்ப்பாகவே வெளிப்படுத்த முடியும், ஏனெனில் நான் இந்து. உடனே இந்துஞானமரபையே ஒட்டுமொத்தமாக நான் எதிர்க்கவேண்டும் என்றும், இந்திய பாரம்பரியத்தையே தூக்கி வீச வேண்டும் என்றும் ஒரு சாரார் எதிர்பார்க்கிறார்கள். இவர்களுக்கு இம்மரபைப்பற்றியும் பாரம்பரியம் பற்றியும் எதுவுமே தெரியாது. எனக்குத்தெரியும். ஆகவே இவர்களின் கண்மூடித்தனத்தை என்னால் ஏற்க இயலாது. இவர்களுக்கு தங்களுடன் சேராத எவரையுமே மறுபக்கம் சேர்த்துத்தான் பேசமுடியும். ஆகவே இந்து ஞான மரபின் சாரம் பற்றி பேசும் என்னை இந்து மதவாதி என்று முத்திரை குத்துவார்கள்.

நான் பாரம்பரியத்தின் சாரமான பகுதிகள் கற்கப்பட்டு, ஒவ்வொரு கணமும் மறுபரிசீலனைசெய்யப்பட்டு, ஓயாமல் புத்தாக்கம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என விரும்பும் ஒரு படைப்பாளி. என்னால் முடிந்த வரையில் அதற்கு முயல்பவன். என் ஆக்கங்களே அதற்கு ஆதாரங்கள்.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60804171&format=html

*

ஈ.வே.ரா அவர்கள் பற்றிய என் கருத்தை நான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன். இந்துமதம் மீதான ஈ.வே.ரா அவர்களின் கடும்தாக்குதல்களை அதே வேகத்தில் நானும் செய்யக்கூடியவனாகவே இருக்கிறேன். வேதாந்திகளாக இருந்த என் குருநாதர்களும் அந்த தாக்குதலை நிகழ்த்தியவர்களே. நாராயணகுருவின் இயக்கத்துடன் ஈ.வே.ரா அவர்களுக்கு நீண்ட தொடர்பும் ஈடுபாடும் இருந்தது. நாராயணகுருகுல இயக்கம் இக்கணம் வரை ஈ.வே.ரா அவர்களை அதன் மூல ஆசிரியர்களில் ஒருவராக வைத்திருக்கிறது.

எனக்கு ஈ.வே.ரா அவர்கள் மீதுள்ள முக்கியமான மாற்றுக்கருத்து இரண்டுதான். அவரது எதிர்மறை நோக்கு அழிவுத்தன்மை கொண்டது. அடிப்படையில் தீங்கு விளைவிப்பது. இரண்டு அவர் ஒரு மக்கள்க்கூட்டம் மீது முன்வைத்த வெறுப்பு மிக மிக அபாயகரமானது. எந்நேரமும் வன்முறையாக மாறக்கூடியது. வரலாற்றின் தவறுகளை ஒருபோதும் ஒருவகை வரலாற்றுச் சதிகளாகக் காணலாகாது. அவை வரலாற்றின் போக்கில் பலவேறு காரணிகளால் உருவாகி வருபவை. உலகின் மாபெரும் வன்முறைகள் அனைத்துமே வரலாற்றுச் சதி என்ற பிரச்சாரத்தில் இருந்து தொடங்குபவையே.

ஒரு சீர்திருத்தவாதி எதிர்மறை அணுகுமுறையை எடுத்தால் அந்த எதிர்ப்பை மட்டுமே அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளும் வெறுப்புவிவசாயிகளே அவரைத் தொடர்ந்து உருவாவார்கள். நட்டு வளர்த்து காடாக ஆக்குவார்கள். ஆக்கபூர்வமாக ஏதும் நிகழாது. ஈவேரா அவர்கள் இந்திய மரபை முழுக்க நிராகரித்தவர் அல்ல. பௌத்தம் முதலிய அவைதிக மரபுகள் சார்ந்து அவருக்கு ஆர்வம் இருந்தது- கல்வி இல்லாவிட்டாலும். அத்தளத்தில்கூட இங்கே பொருட்படுத்தும்படி ஒரு பத்து பக்கம் எழுதப்பட்டதில்லை. அவரது தாக்குதல்களை வசைகளாக மாற்றி முன்வைப்பவர்களே கண்ணுக்குத்தெரிகிறார்கள்.

சமீபத்தில் நிகழ்ந்த விவாதங்களை ஒட்டி ஈவேரா அவர்களைப்பற்றி தொடர்ந்து நண்பர்கள் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ‘பகைவர்களாக’ வந்த பல பெரியாரியர்கள் நண்பர்களாக ஆனதுதான் இப்போதைய ஆச்சரியம். ‘பாமரன்’ வகையறாக்களை வைத்து நான் ஈவேராவை மதிப்பிடுகிறேன், அவரது மூலநூல்களை போதிய அளவுக்குப் பயிலாமல் - என்பது முக்கியமான குற்றச்சாட்டு. ஈவேரா குறித்து முழுமையான விரிவான வாசிப்பு ஒன்றை மீண்டும் நிகழ்த்த வேண்டும் என எண்ணியிருக்கிறேன்.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20804241&format=html

முரண்வெளி - 1

ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவல் குறித்து திண்ணை மின்னிதழில் வெளிவந்த
"ஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள்" என்ற
விமர்சனக்கட்டுரைக்கு எதிர்வினையாற்றிய விமர்சகர் நண்பர் கே.ஆர்.மணிக்கு
என் நன்றி


"முரண்வெளியில் புன்னகைப்பதும் கைகுலுக்குவதும் நமக்குச் சாத்தியம் தான்"

Last Kilo byte 12 : (தொலைபேசி} மெளனம் பேசியது

கே. ஆர். மணி




ஏழாம் உலகத்தை வெங்காய வாசத்தோடு தரிசத்த புண்ணிய ஆத்மா புதியமாதவிக்கு !


ஏழாம் உலகம் - அந்த புத்தகம் என்னையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பதிவுபோல எழுதவேண்டும் என்கிற நினைப்போடு சோம்பேறித்தனமும் சூழ்ந்துகொள்ள தப்பித்துபோனது என் பதிவு. இவ்வளவு உன்னிப்பாய் கதை எழுத வருவரின் கதை விமர்சக்கப்படும்போது நிறைய ஆழம் வேண்டுமென எண்ணிய நிறைய விமர்சனங்களும் பாதியிலே தடம் புரண்ட பெட்டிபோல தவறிக்கிடக்கின்றன. நேர் செய்யவேண்டும்.


ஏழாம் உலகத்திற்கு வருவோம். மும்பை புனா ரயில் பயணநேரத்திற்குள் அந்த ஏழாம் உலகத்தை கடந்தபோது, கனமானது அந்த ஞாயிறு. படித்துக்கொண்டிருக்கும்போதே என் ரயில் அறையின் பக்கத்து குழந்தை பார்த்து பயந்தே போனேன். நல்லவேளை, அதன் பெயர் ரஜினிகாந்தல்ல. அது சிரித்தது. சிரித்துக்கொண்டே மொபைல் போட்டே எடுத்தேன். பயத்தில் என்றுமில்லாமல் அன்று என் ஐந்துவயதுப்பையனை கட்டிக்கொண்டேன் இரவில். அவனுக்கு கை,கால் எல்லாம் ஓழுங்காகத்தானிருந்தது.


சில எழுத்துக்கள் மேலுக்கு மருந்து. சிலவை கையில் ஊசி. சிலது நரம்பு தேடி, விடைக்க வைத்து, கைமூட்டி அழுத்திபோடும் ஊசி. ஏழாம் உலகம் இந்தவகை. இது அப்பட்டமான ஆலயதரிசனம். ஆலய தொழிற்சாலை என்று சொன்னாலும் சொல்லலாம். கோயிலுக்கு

போனோமா, கும்பிட்டோமா, சாமி, தேவையா என்று வாதிட்டோமா, முன்னோர் பெருமை பேசி முதுகு சொறிந்தோமா என்றில்லாமல் இப்படியில்லாம் உண்மைத்தேடல் தேவைதானா என்ன? தேவைதான், ஆன்ம சுத்தியோடு சரீர சுத்திக்கு அந்தக்குளம் தேவைப்படுகிறது. அந்த பொதுக் குளத்தில் மீன்கள் வந்துபோனாலும் அதீத மக்களாலும், நிறைய பராம்பரியத்தாலும் அழுக்கு,

அழுக்கு சேர்ந்து, மேலே எத்தனை பூப்போட்டாலும் மூடத்தனத்தின் முடை நாற்றம்.


முதலாளி பண்டாரம், மூலதனம் முத்தம்மை, அப்புறம் உருவாகிற, உருவாக்குகிற பிச்சைக்கார உருப்படிகள், பக்த வாடிக்கையாளர்கள், அவர்களின் பயங்களையும், புண்ணியம் வேணுமென்கிற ஆசையையும் குறிவைத்து வீசப்படுகிற தர்ம வார்த்தைகள், அவர் அவர்களுக்கான பார்வைகள், அவர்களுக்கென கண்ணாடிகள், கண்ணீர்கள், வரம்புகள், விழுகிற சில்லறைகள் என கொட்டிக்கிடக்கிறது

யதார்த்தம். கொஞ்சம் பயங்கர யதார்த்தம். கன்னியாகுமரிபோல எழுந்துவிழும் உள்ளுணர்ச்சியில்லை, பின் தொடரும் குரல்கள் போல தத்துவசட்டம் அலசும் விவாதமில்லை, யாரும் திரும்பிபடுத்து புராணங்களும், கோபுரங்களும் தோன்றுவதுமில்லை, காடில்லை, காவிய நாயகிகளில்லை. பரவாயில்லை. சாதரண மாந்தர்கள். கொஞ்சம் உண்மையாயிருக்குமோ - இருக்கக்கூடாதென்கிறது பயமான மனம்.

இருக்கலாம். இருந்தால் என்ன செய்ய. எவ்வளவோ கழிவுகள் தூரெடுக்கப்படவேண்டியவை, இதில் அதுவுமொன்று. அவ்வளவுதான்.


குருக்கள் ஆசப்படுற அளவுக்கு முத்தம்மா இருப்பாளென்ன, ச்சீ.. எழலாம், உங்களுக்குள்ளும் ஆசை எழலாம். பாவம் குருக்களுக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால், நம் நாட்டில் முனிகள், ரிஸிகள் எல்லாமே நியோக கலவையில்தானே வந்தார்கள். முத்தம்மாவுக்கு வசிஸ்டனோ, துர்வாசனோ, துரோணணோ, வால்மீகியோ .. எதுவோ ஒரு லக்கடித்திருக்கலாம். பண்டாரத்திற்கு அந்த வருச புரடக்சன் போய்விடும். மூலதனத்தை ஒரு வருடம் எந்த முதலாளிதான் முடக்கிபோடுவான்.


கதையெல்லாம் சரி, அதனால் அறியப்படும் நீதியாதெனில், உணர்வுயாதெனில் என்கிறபோதுதான் என்னால் புதியமாதவியோடு உடன்பாடமுடியவில்லை. அதைப்படித்தவுடன் என்னுள் என்ன எழுந்தது. எனக்கான பயம், மானுட கூச்சல், எப்படி சரியாக்கலாம் என்கிற பதைபதைப்பு. மனவிடுதலை நோக்கி, அகம்பிரம்மாஸ்மியை நோக்கி இந்தக்கோயில்கள் எப்போது நகரப்போகின்றன? கோவில்கள் எல்லாம் நமக்குள்ளே இறங்குவதற்கான படிக்கட்டுகளே என்று வேதங்களெல்லாம் கத்தி, கதறிக் கூறியும் மானுட

உள்விடுதலைக்குத்தான் எத்தனை தடங்கல்கள். அப்படியும் ஏன் என்னால் மதநிறுவனத்தின் மீது காறித்துப்ப முடியவில்லை.

எந்த நம்பிக்கை இதெல்லாம் திருந்தி என் மதம் புனிதப்படும் என்கிற நம்பிக்கையை எனக்கு கொடுக்கிறது. வெறும் கானல் நம்பிக்கையோடும், புரட்டு வேதாந்தங்களோடும் காலம் தள்ளும் என் மனம் இறந்த நூற்றாண்டின் எச்சமா? மெளனம் என்னுள்ளும் கத்தியை இறக்கியது. Am i Over confident fool ?




--------------------------------------------------------------------------------



" தந்தை பெரியாரை விட அதிகமாக மத நிறுவனத்தின் மீதான எதிர்ப்புணர்வு கூர்மையடைந்தது. ...... அவை அனைத்திலும் ஏற்படாத ஒரு ஆழமான பாதிப்பை ஏழாம் உலகத்தைத் தரிசிக்கும் போது என்னுள் ஏற்படுத்தியவர் ஜெயமோகன " புதியமாதவி


மதநிறுவனம் எதிர்க்கப்படுவதும் அதன் அதிகாரங்கள் கைமாறிக்கொண்டேயிருப்பதும் எந்த சமூகத்திலும் புதிதொன்றுமில்லை. எப்போதுமே எதுவுமே மதமோ, அரசியலோ நிறுவனப்படுத்தப்படும்போது அந்தக்குளத்தில் கால ஓட்டத்தில் கசடுபடிந்து விடுகிறதென்பதை நாம் அறிவோம். ஆனாலும் ஓரளவாவது நிறுவனப்படுத்தபடாவிடின் அதனால் எந்த செயலையும் மேற்கொண்டு செய்யமுடியாது போய்விடும் என்பதும் நிதர்சனம். ஆகவே இரண்டு தன்மைகளிலும் பலம், பலவீனமும் இருப்பதென்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதற்கான எதிர்ப்பை தொடர்ந்து மானுட சமுதாயம் செய்து வந்திருக்கிறதென்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். மதம் மட்டுமின்றி, எல்லா அரசியல் கொள்கைகளுக்கும் பொருந்தும். மார்க்சின் கொள்கைகள் நிறுவனப்படுத்தப்பட்டதால் எழுந்த 'ஆகா' புரட்சிகளின் விளைவுகள் நமக்கெல்லாம் தெரியும். ஆனாலும் அவை தவிர்க்கமுடியாத சோதனைகளாகவே அதன் பாடங்கள் அதிக விலைகொடுத்து படித்தபாடங்களாகவே சமூகம் மெல்ல ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும் அதன் சில நல்ல பக்கங்களை மெல்ல மற்ற கொள்கைகள் தங்களுக்குள் சுவீகரித்துக்கொண்டுள்ளன.


மென்பொருள் துறையிலும் என்னால் இதற்கு சில உதாரணங்கள் கொடுக்கமுடியும். ஓப்பன் ஸோர்ஸ் ( Open Source ) என்கிற இயக்கம் [ காற்றும், நீரும் இலவசமாய் கிடைக்கும்போது ஏன் மென்பொருளுக்கு பணம் கட்டவேண்டும்?. அது மானுட உரிமையாகவே அமையவேண்டும் ] மெந்துறையில் மிகப்பெரிய நிறுவனமாகி (கிட்டதட்ட மதநிறுவனம்போல), அடாவடி தாதாவாகி அலும்பு செய்துகொண்டிருந்த மைக்ரோ சாப்ட் நிறுவனத்திற்கு மிகப்பெரிய தலைவலி கொடுத்து, பின் ஓப்பன் சோர்ஸின் சில நல்ல கொள்கைகளை பிடித்தோ, பிடிக்காமலோ கடைபிடிக்க வேண்டியதாயிற்று. ஓப்பன் ஸோர்சிலும் இப்போது சில நிறுவனங்கள் மெல்ல மெல்ல நிறுவனமாகிக்கொண்டு வருகின்றன. தாதா மைக்ரோசாப்டும் சில இலவசங்களையும், தனது இறுக்கமான பீடங்களையும் தளர்த்திக்கொண்டது இரு கொள்கைகளும் அடுத்த கட்டத்திற்கு போவதற்கான அறிகுறி. மத, அரசியல், தொழில் நிறுவனங்களின் மீதான புற எதிர்ப்போ, அக எதிர்ப்போ அவ்வப்போதைய குறைகளை களைவதை மட்டுமே நோக்கமாகக்கொண்டிருக்கமுடியும்.

ஆகவே எந்தத்துறையிலும் நிறுவனமாக்கப்படலும், அதை எதிர்த்து நீர்க்கச்செய்தலும் மறுபடியும் அது எதற்காக எதிர்த்ததோ அதன் முனையிலே அது கெட்டிப்பட்டு நிறுவனமாக்கப்படுதலும் கால இயல்பினதுதானே.


ஆனால் கேள்வி, மதநிறுவனத்தின் மீதான எதிர்ப்பு எதற்காக, அதன் நேரம், காலம், நோக்கம், வழிமுறையென்ன என்பதில்தான் நம் சமூக சிந்தனையாளர்களெல்லாமே வேறுபடுகிறார்கள். மதநிறுவனத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர்களெல்லாம் இந்து மதத்தில் சீர்திருத்தம் செய்யவந்த மாமணிகளில் ஒருவராக, இருப்பார்களா இருப்பாரா என்பது என்னளவில் சந்தேகமே.

மதத்திலிருந்தே மாற்றங்கள் செய்து, மதத்துவேசத்தை பரப்பாது ஒருங்கிணைத்து உழைத்த பெரியார்கள்தான் நாளடைவில் இந்துமதத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துசென்றார்கள். It should be integrating force, not differentiating force.. ஜெயமோகன் நாரயணகுருவை ஏற்றுக்கொள்வதும் பெரியாருக்கான எதிர்ப்பும் அந்த தளத்திலிருந்து வருவதாகத்தான் எனக்குபடுகிறது. என் கணிப்பு/ வாசிப்பு தவறாகவுமிருக்கலாம்.

இந்துமதம் மற்ற மதங்களைபோல வளராததற்கு முக்கிய காரணம் அதன் குறுகிய market sizeம், அதற்குள்ளான பிரிவுகளும், சண்டைகளுமே என்பது இன்றைய உலகமயமாக்கப்பட்ட, திறந்த, மதச்சந்தையின் கண்டுபிடிப்பு. விவேகானந்தரைப்போல இந்து மதத்தின் உயர்சாதி மதநிறுவனத்தை திட்டியவர்கள் வேறெவெருமில்லை. எல்லாம் எந்த நோக்கத்திற்காக, குளம் சுத்தப்படுத்தப்படுவதற்காக. மண்போட்டு மூடப்படுவதற்காகயில்லை. இல்லை பெரியாரின் நோக்கமும் இந்துமதத்தை சீர்படுத்துவதற்காகவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையே என நீங்கள் வாதிடலாம். ஆனால் அதன் நீண்டகாலப்பயன் Long term usability, நோக்கத்தின் வழிமுறை, அதனால் விளைந்த செயற்பலன், அதன் அடுத்த தளத்திற்கு எடுத்துசெல்வதற்கான நேர்மறை அணுகுமுறை பற்றி கேள்விகள் எழுப்பபடலாம். [அறுவை சிகிச்சைக்கு கடப்பாரை எதற்கு ? கேட்டது ஜெயமோகன் என்று ஞாபகம் ]

புரோகிதத்தையும், வைதிகத்தையும் திட்டுகிறார் என்பதற்காக நீங்கள். 9/11 புகழ் பின்லேடனை பாராட்டி கவிதை எழுதிவிடக்கூடாது.

"தந்தை பெரியாரின் தடியாய் முளைத்த மாமணியே, உன் தாடிக்குள் இருப்பது முடியல்ல. ஐயாவின் தடி. உன் விமானங்கள் என் சகோதரனை உள்ளே விடாத கோயில் விமானங்களை தகர்க்கட்டும் "

என்று மடக்கிப்போட்டு அவரை பாராட்டிவிடுவீர்களோ என்கிற பயம்தான் என்னை இந்தகடிதம் எழுத தூண்டிற்று. ஆகவே மதநிறுவன எதிர்ப்பு மட்டுமே எல்லா தலைவர்களையும் இணைக்கும் புள்ளியாகிவிடாது.

ஒரு புதிய கோணத்தில் யோசிப்போம்.

இந்த நாவல் மதநிறுவனத்திற்கு எதிராக எழுதப்பட்டதாய் எனக்கு தெரியவில்லை. இதிலெங்கே மதநிறுவனம் வந்தது. பக்தகோடிகளின் பயமான மனம் வணிகரீதியான பார்வையால் சுரண்டப்படுகிறது. எல்லாம் வயிற்றுப்பிழைப்புக்கும், ஒரு வேளை சோற்றுக்கும். அன்னதானம் கிடைக்கிற கர்நாடக கோயில்களில் கண்டிப்பாய் பண்டாரம் போன்றவர்கள் தொழில்செய்வது கடினமான ஓன்று. ஓழிக்கப்படவேண்டியவை கோயில் வாசல்காரர்களின் பசி மற்றும் பக்தர்களின் ஆன்மீகம் பற்றிய கண்ணோட்டம் என்கிறது என் இந்திய மனம்.

ஒரே புத்தகத்தை படிக்கிற இருவருக்கு திருத்தப்படவேண்டியதுதான் என்று தோன்றுவதும், உடைக்கப்பட வேண்டியதுதான் என்று தோன்றுவதற்கும் நமக்கு அணிவிக்கப்பட்ட, பழக்கப்பட்ட கண்ணாடிகளின் நிறத்தைதவிர வேறென்ன வித்தியாசமிருக்கமுடியும்.


உண்மைகளை விட, நேர்மறையாய் செய்ய வேண்டியவைகளைவிட எது நம்மிலிருந்து கொப்பளித்து விழுகிறது ? விதைக்கப்பட்ட வெறுப்பு என்று வெறுமனே நான் எளிமைப்படுத்தினேனென்றால் நான் எவ்வளவுபெரிய மடையனாவேன். "டேய், அப்பேன், இந்த கம்பூயிட்டரெல்லாம் மயிரு வெறும் ஒண்ணும், ஜீரோவும்தானமேடே அப்படியா " என்று கேட்கிற பெரியப்பாபோல நானாகிவிடமாட்டேனா ?

மதத்திற்கும், ஆன்மிகத்திற்குமான தொடர்பு மெல்லியது, முக்கியமானதும் கூட. ஆன்மிகம் அரசாங்கம் போன்றது அது Macro Environment மதம் அதை செயல்படுத்தும் Micro Environment. ஆன்மிகத்தின் குறிக்கோள்களை எல்லா தரப்பிற்கும் எடுத்துச்செல்லும் முகவராக மட்டுமே மதபீடங்கள் இருந்துவரவேண்டும். பெரும்பாலும் அப்படித்தானிருந்து வந்திருக்கின்றன. எப்போதெல்லாம் குளத்தின் கழிவு நாற்றம் அதிகரித்ததோ அப்போதெல்லாம் தூர்நாற்றங்கள் அகற்றப்பட்டிருக்கின்றன, சில தடியோடு, சில ஆர்பாட்டமாய், சில அமைதியாய். இதே கருத்தில் ஜெயமோகனின் Blogல் http://www.jeyamohan.in அதைப்பற்றிய நீண்ட கட்டுரை பிரமாதமான ஒன்று உண்டு.

http://jeyamohan.in/?p=271

http://jeyamohan.in/?p=253

சில குறிப்புகள் Blogலிருந்து "ஈவேரா இங்குள்ள எல்லா தீமைகளும் ஒருசில சமூகங்களின் சதிவேலை மட்டுமே என்று எளிதாகச் சொல்லிவிட்டார். அதற்குக் காரணம் அவரது தனிப்பட்ட வெறுப்பு. ஆகவே வெறுப்புதான் வளர்ந்தது. நோயின் காரணம் தப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டமையால் நோய் நித்தம் வளர்ந்தது. "

"இன்னொன்று ஈவேராவின் இயக்கத்தில் உள்ள எதிர்மறைத்தன்மை. ஒரு சமூக இயக்கம் அப்படி கசப்பையும் வெறுப்பையும் கொட்டியபடி இயங்கினால் தீய விளைவுகளே உருவாகும் என நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் ஒரு மாபெரும் கல்வி இயக்கமாக இருக்கும். நாராயணகுருவின் இயக்கம் அத்தகையது. ஆகவே தான் அங்கே அவ்வியக்கம் சார்ந்து மாப்ரும் அறிஞர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் உருவானார்கள்."

"மாறாக இன்று 'பெரியாரியர்கள்' என்று சொல்லி பேசிக்கொண்டிருப்பவர்களைப் பாருங்கள். வெறும் வெறுப்பை மட்டுமே எங்கும் எவ்விடத்திலும் கொட்டுகிறார்கள். ..... ஆக்கபூர்வமாக எதுவுமே இல்லை."

கண்ணாடியின் நிறத்தை கொஞ்சம் மங்கமுயற்சிக்கவேண்டும். கறுப்புக்காமாலை அதிகமாகமல், மஞ்சள்துண்டை அணிந்துகொண்டவர்கள் போல "எழாம் உலகத்தை வாசித்துவிட்டு அந்தப் படைப்பின் ஊடாக தந்தை பெரியாரின் ஆவி கைத்தடியுடன் உலாவுவதாக " புதியமாதவி எதற்கு ஆவிகளை பற்றியெல்லாம் நம்பிக்கையில்லாதவரை வீணாக தொந்தரவு செய்யவேண்டும். ரவிசங்கரும், வேதாத்திரி மகரிசியும், அமிர்தானந்தமயி அம்மாவும், ராமக்ருஸ்ண மடமும் தூர் எடுக்கும் வேலையை எடுத்துக்கொள்வார்கள். அதற்காக கோயிலுக்கு போகாமலும் இருந்துவிடாதீர்கள். காசியும், கங்கையும், திருச்செந்தூரும், வேளாங்கண்ணியும் நமக்கு தேவை. வேதாத்திரி சொல்வது நம்மால் நமது மனதையே அறிவுத்திருக்கோயிலாக மாற்றும் திணவும், தெளிவும் வரும்வரைக்கும்.


புதியபார்வைகள், மறுவாசிப்பும் கொண்ட Change Agentஆய் நீங்கள் இருக்கவேண்டும் என்கிற பேராசை அதற்கு காரணமாயிருக்கலாம் என்பதை தவிர வேறெதுவுமில்லை பராபரமே. அதீத வைதிகவாதிகள் போல உங்களுக்கு பிடித்தமான ஈசமும் உங்களோடு தேவைக்கதிகமாக, உதிர்க்க முடியாத படி, உதிரத்தில் கலந்துவிட்டதோ, அது ஒரு நுணுக்கமான படைப்பாளிக்கு சிலுவையாகிவிடுமோ என்கிற பயம்தான். இலக்கியப்பறவைகள் எந்த ஈச சட்டைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்பதில் நம்மிருவருக்குமே சந்தேகமிருக்காது என்கிற ஆசுவாசத்தில் என் பயம் - அது தேவையற்றதாக கூடயிருக்கலாம். அதற்கப்பறம் நம்மிருவருக்கும் கனவுத்தொல்லைகளிருக்காது. ஏழாம் உலகம் போன்ற புத்தகத்தை படித்து வம்படியாய் திண்ணையில் எழுதிக்கொண்டிருக்கவும் மாட்டோம்.


இருக்கலாம். எனக்குள்ளும் அழுக்கு குளம். என்னையும் சில கண்ணாடிகள் மறைக்கலாம். ஆனாலும் எழுத்துக்கள் தவிர என்னை எது சுத்தம் செய்யும். ஆதலின் இலக்கியவாதிகள் காவிச்சட்டையோ, கருப்புச்சட்டையோ போடாமல் இருக்கும்போது அதன் மையப்புள்ளிகள் பலமாகுமே என்கிற ஆதங்கம்தான். நானறியமேலே எனக்குமிருக்கும் கண்ணாடி. நீங்கள் பார்த்தீர்களெனில் தயவுசெய்து என் கண்களில் படாமல் உடைக்கமுயற்சியுங்கள்.





--------------------------------------------------------------------------------


netwealthcreator@gmail.com


திண்ணையில் கே. ஆர். மணி

Copyright:thinnai.com