Wednesday, May 21, 2008

வெற்றிடம்



எப்போதும்
கை நழுவிப் போகிறது
உன்னைச் சந்திக்கும் வாய்ப்புகளும்
உன்னுடன் பேசும் தொலைபேசி
அழைப்புகளும்.
கைபேசிகளுடன்
அலைந்து கொண்டிருந்தாலும்
நம் கைகள்
நமக்கான நம் எண்களைச்
சுற்றாமலேயே
உலகம் சுற்றி வருகிறது.

உறவுகளின் மரணத்தையும்
நண்பர்களின் பிரிவையும்
காலம் கடந்தே
பதிவு செய்கிறது
என் கணினி.
கண்ணீர்ச்சுரப்பிகள்
வற்றிப்போனபிறகே
சம்பிரதாயத்திற்காய்
துக்கம் விசாரிக்கச்
சந்திக்க வருகிறது
என் விழிகள்.

பிரபலங்களின்
புத்தகக்குவியல்களில்
கிடைக்காத
ஞானத்தை
மனிதர்கள் இல்லாத ஜனக்கடலில்
அறிவுஜீவிதம் மரணித்த தருணத்தில்
உன் வெற்றிடம்
எனக்குப் போதிக்கிறது
புத்தனாய் இருந்து.

No comments:

Post a Comment