Wednesday, November 25, 2020

காதலுக்கு ஆத்மா இருக்கிறதா..??

 ஒரு திருமண நிகழ்வு.

மணப்பெண் அமெரிக்க நாட்டவர்.
மணமகன் மும்பை தமிழர். காதல் திருமணம் தான்.
திருமணத்திற்கு மணப்பெண்ணின் பெற்றோர் வந்திருந்தார்கள்.
அக்காட்சி... இதுவரை நம் திருமணங்களில் காணமுடியாத காட்சி.
மணப்பெண்ணின் அப்பா தன் மனைவியுடனும்
மணப்பெண்ணின் அம்மா தன் கணவருடனும்
ஜோடியாக கை கோர்த்து கொண்டு
மணப்பெண்ணை அழைத்து வந்தார்கள்.
அவர்களிடம் எவ்விதமான தடுமாற்றமோ
அல்லது தயக்கமோ இல்லை.
ஆண் பெண் உறவில் அவர்களிடம் இருக்கும்
இந்த வெளிப்படைத்தன்மையை நான் ரசித்தேன்.
ஒருவரை ஒருவர் மதிக்கும் பேருள்ளம்.
உண்மையை நிதர்சனத்தை எவ்விதமான
நெருடலும் இல்லாமல் அவர்கள் எதிர்கொண்டு வாழும் வாழ்க்கை
அதற்கான புரிதல் மனத்திடம் எல்லாவற்றுக்கும் மேலாக
வாழ்க்கையில் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளாமல்
அவர்கள் வாழும் வாழ்க்கை..
....
(இந்த மணமக்கள் தற்போது நவிமும்பையில் வசிக்கிறார்கள். குழந்தைகள் பெற்றுக்கொள்வதில்லை என்று முடிவு செய்து கொண்டு தங்கள் வீட்டையே அனாதைக்குழந்தைகளின் காப்பகமாக மாற்றிக்கொண்டு மகிழ்ச்சியாக காதலித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.)
நாம்..??
இந்திய மனம் வாழ்க்கையை ஏன் தியாகமாக
வடிவமைத்து கொள்கிறது?
இந்திய ஆண் பெண் உறவில் எத்தனை வேடங்கள்?
நெருடல்கள், மனக்கிலேசங்கள், ஏமாற்றங்கள்.
வக்கிரங்கள்..
நம் ஆண் பெண் உறவு புனிதம் என்ற போர்வையை
தன் மீது போர்த்திக்கொள்கிறது.
யதார்த்த மன நிலையை எதிர்கொள்ள முடியாமல்
தயக்கம் காட்டுகிறது.
காதலையும் திருமணத்தையும் கூட
எப்போதும் இணைத்தே பார்க்கிறது.
திருமணத்திற்குப் பிறகு உன் காதலை மறந்துவிடு
என்று போதிக்கிறது.
காதலனும் கணவனும் வேறு வேறானவர்கள் என்றால்
அது ஒரு பெண்ணின் கற்புக்கு களங்கம்
என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது.
நான் முழுமனதாக உன்னைக் காதலிக்கிறேன்.
நீங்கள் அந்த அளவுக்கு என்னைக் காதலிக்கிறீர்களா?’

என்று கேட்ட அம்ரிதா ப்ரிதமின் காதலை
சாஹிர் ஏற்றுக்கொள்ளவில்லை.
"இது ஆத்மாவால் உணரப்பட வேண்டிய
ஒரு உணர்வு
காதல்,
காதல் என்ற பெயரிலேயே இருக்கட்டும்
அதற்கொரு பெயர் கொடுத்து
கறை படுத்திவிட வேண்டாம் "
என்று அம்ரிதா தன் வாழ் நாள் முழுவதும்
காதலைக் கொண்டாடிக் கொண்டே இருந்தார்.
அம்ரிதா சொல்வது போல காதல் ... என்ற உணர்வு
ஆத்மாவால் உணரப்பட வேண்டியது... என்பதும்
காதலை ஏமாற்றிக்கொள்ள இந்திய மனம்
போர்த்திக்கொண்ட இன்னொரு போர்வையா..?


எது தான் காதல்?
காதலும் கடவுளும் ஒன்று என்று சொல்லி முடித்துவிடலாமா..!
கடவுள் இல்லை இல்லை என்று சொல்பவர்களும்
காதலைக் கொண்டாடுகிறார்கள்.
ஆனால் காதலுக்கு ஆத்மா இருக்கிறது என்பதை
அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
கவிதையைக் கொண்டாடுபவர்களுக்கு
காதல் தான் எல்லாம். இன்னும் சொல்லப்போனால்
காதலுக்கு கிடைத்திருக்கும் இத்துனை மரியாதைகள்,
பிம்பங்கள் எல்லாமே இவர்களின் கவிதைகளால்
வளர்க்கப்பட்டவை, நிலை நிறுத்தப்பட்டவை.
அப்படியானால் காதல் என்பது என்ன?

பார்க்கும் பெண் மீதெல்லாம் ஆடவனுக்கு ஈர்ப்போ
அல்லது பார்க்கும் ஆண் மீதெல்லாம் பெண்ணுக்கு
ஈர்ப்போ ஏற்படுவதில்லை.
சிலருக்கு சிலர் மீது ... ஈர்ப்பு ஏற்படுகிறது.
அந்த ஈர்ப்பு .. மட்டுமே.. புவி ஈர்ப்பு விசை போல
ஆண் பெண் உலகை இயக்கிக்கொண்டே இருக்கிறது..
(அம்ரிதா ப்ரீதம் வாசித்தால் இப்படித்தான் ஆகும்!)

No comments:

Post a Comment