Wednesday, November 13, 2019

வாழைமர நோட்டு

vaazhaimara nottu cover design
வரலாற்றை மீட்டெடுக்க எழுதப்பட்ட புத்தகமல்ல.
வரலாற்றை மறந்துவிடக் கூடாது என்பதற்காக
மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்டிருக்கிறது.
சிங்கப்பூருக்குப் போவதற்கு முன் கருத்தரங்கில் பங்கு 
பெறுபவர்களுக்கு ஏகப்பட்ட விதிமுறைகள்
 வந்து கொண்டே இருந்தன. எங்களில் சிலரை
அதெல்லாம் எரிச்சல் படுத்தியது என்பதும் உண்மை.
 ( ரமா & அஸ்வினி..சாரிம்மா ..) 
ஆனால் வாழைமர நோட்டு வாசித்தப் பிறகு சிங்கப்பூரின்
இக்கட்டுமான விதிமுறைகளுக்குள் பொதிந்திருக்கும் 
சமூக நலனும் அரசின் பொது ஜன அக்கறையும் புரிந்து கொள்ள முடிகிறது.
ஜப்பானில் குண்டு போட்டார்கள் ..
அதை எவரும் நியாயப்படுத்தி விட முடியாது.
ஜப்பானியர்கள் கடுமையான உழைப்பாளிகள்.
அதுவும் உண்மை தான்.
ஜப்பான் இரண்டாம் உலகப்போருக்குப் பின் அடிவாங்கிய தேசம்
இன்று வல்லரசுகளுக்குப் போட்டியாக வளர்ந்திருக்கிறது.
மறுக்க முடியாத உண்மை..
ஆனால் ஜப்பான் அரசு, அதிகாரத்தின் இன்னொரு முகம்.\
சிங்கப்பூர் மண்ணில் 3 ஆண்டுகள் ஜப்பான் இராணுவம் நடத்திய 
கொடுமைகளும் பாலியல் வல்லாங்குகளும்.....
அதிகார வர்க்கத்தின் அசல் முகம் எப்போதும் இப்படித்தான்
 இருக்கும், இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
வாழைமர நோட்டு புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் வரலாற்றை
மறுவாசிப்பு செய்ய வேண்டிய செய்திகள் அடுக்கடுக்காக வருகின்றன.
அவ்வ:ளவு எளிதில் என்னால் கடந்து செல்ல முடியாமல் ஒவ்வொரு தகவலும் இன்னொரு பக்கத்திற்கு இழுத்துச் செல்வது
இப்புத்தகத்தின் வெற்றி. தோழி ஹேமா அவர்களின் சாதனை.

அவர் போகிற போக்கில் சொல்லிச் செல்லும் 
இரண்டொரு வரிகளும் எவ்வளவு கனமானவை,
 ஒரு வாசகனை எங்கெல்லாம் இழுத்துச் செல்கிறது
என்பதை இந்த ஒரு வாரமாக நான் அனுபவிக்கிறேன்.

இந்திய வரலாற்றுடன் தொடர்புடைய தகவல்கள் 
இன்னும் அதிக கவனம் பெற்றன.
தகவல் 1
“ நேதாஜியின் குறிக்கோள் ஜப்பானியர்களின் துணையுடன் முன்னேறி
பர்மா வழியாக வடகிழக்கு இந்தியாவிற்குள் நுழைந்து இந்தியாவை ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்பதாக இருந்த்து. (இது நமக்குப் புதிய செய்தியல்ல!) வெற்றிக்குப் பின்னர் ஜப்பானியர்கள் இந்தியாவை ஆள
நினைத்தால் , அவர்களை எதிர்த்து போரிடவும் அவர் தயாராக இருந்தார்”
(பக் 128)
நல்ல காலம்.. அப்படி எதுவும் நடக்கவில்லை. ஜப்பானிய ஆதிக்கத்தில்
இந்தியா வந்திருந்தால் .. ! அது ஆங்கிலேய ஆதிக்கத்தை விட இன்னும்
கொடுமையானதாக இருந்திருக்கும் என்பதை சிங்கையில் ஜப்பானியர்களீன்
ஆதிக்கத்தை அறியும் போது பதட்டம் வரத்தான் செய்கிறது.
:..
தகவல் 2
பெண்கள் நேதாஜியின் இராணுவத்தில் சேர்ந்தார்கள்.
 ஜான்சிராணி படைப்பிரிவு உருவாக்கப்பட்டு பெண்களுக்காக
 எடை குறைந்த துப்பாக்கிகள் தருவிக்கப்பட்டு போர்ப்பயிற்சி
கொடுக்கப்பட்டதும் இப்படைக்கு கேப்டன் லஷ்மி சாகல்
 தலைமையேற்றார் என்பதும் நாம் அறிந்தச் செய்தி.
ஆனால் இப்படைப்பிரிவினர் களத்தில் போராடவில்லை. 
இப்பெண்கள் இராணுவ முகாமில் மருத்துவச்செவிலியர்களாகவும்
 இராணுவத்திற்காக பொதுமக்களிடம் நிதி திரட்டுபவர்களாகவும்
 மட்டுமே இருந்தார்கள்..

இன்னும் சில..
பாலியல் அடிமைகள்
பாலியல் அடிமைகளை உருவாக்கியது ஜப்பான் இராணுவம்
ஒரு நாளில் சற்றொப்ப 50 இராணுவ வீரகளின் காமப்பசியைத் தீர்த்து வைக்க வேண்டிய வல்லாங்குக்கு இரையானார்கள் இப்பெண்கள். ஜப்பான் இராணுவம் எங்கெல்லாம் பயணிக்கிறதோ அங்கெல்லாம் இவர்களும் கூடவே அழைத்துச் செல்லப்பட்டார்கள்… இருந்தும்..இக்குற்றங்கள் நிருபிக்கப்படவில்லை. அவர்களுக்கு தண்டனையும் இல்லை .
ஜப்பானியர்களின் ஆகம ம்
ஜப்பானியர்கள் தங்கள் மூதாதையர்களை வழிபடவும் போரில் இறந்த ஜப்பானிய வீர்ர்களின் அஸ்தியை வைத்து வழிபடவும் கட்டியிருந்தக்
கோவிலை 1945ல் ஆங்கிலேயர்களிடம் சரணடைவதற்கு முன் 
ஆலய அதிகாரிகள் ஒன்று கூடிப் பேசி தங்கள் ஆகமங்களில் 
குறிப்பிட்டிருந்த படி அந்த ஆலயத்தை வெடி வைத்து தகர்த்தார்கள் (பக் 113)
விசித்திரமானவர்கள் ஜப்பானியர்கள் என்பதுடன்
 ஜப்பானியர்களின் மூதாதையர் வழிபாட்டின் 
முக்கியத்துவத்தையும் இத்தகவல் வெளிப்படுத்துகிறது.
வாழைமர நோட்டு
வாழைமர நோட்டு ஜப்பானிய இராணுவத்தால் 
அச்சடிக்கப்பட்ட பணம். சரணடைந்த ஜப்பானியர்கள்
 அந்த நோட்டு இனி செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின் 
தங்களின் வாழ் நாள் சேமிப்பு ஒன்றுமில்லாமல்
வெறும் கையுடன் நாடு திரும்ப முடியாத நிலையில் 
அவர்களில் பலர் வாழைமர நோட்டுகளை எரித்து
 அவர்களும் தற்கொலை செய்து கொண்டார்கள். (பக் 155)
குருதிப்பணம்
தங்கள் அதிகாரத்திற்கு பலியான உயிர்களுக்காக 
ஜப்பான் அரசாங்கம் 1966 ஆம் வருடம் 50 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளிகளை குருதிப்பணமாக செலுத்தியது. அந்த தொகையின் ஒரு பகுதியைக் கொண்டு தான் இன்று நாம் பார்க்கும் சிவிலியன் வார் மெமோரியல் கட்டப்பட்டு 
1967 ல் லீ குவான் யூ திறந்து வைத்தார் .
இதை வாசிக்கும் போது என்னிடம் இன்னொரு கேள்வி
வந்து வந்து போகிறது..
 ஆங்கிலேயர்கள் ஏன் இந்தியாவுக்கு  குருதிப்பணம் கொடுக்கவே இல்லை !
சட்டங்களும் நியாயங்களும் எப்போதுமே 
வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே 
சாதகமாக இருக்கின்றன.
சிங்கப்பூர் ஹேமாவுக்கு வாழ்த்துகளுடன்.

3 comments: