Tuesday, January 19, 2016

நிழல்களிலிருந்து நட்சத்திரங்களை நோக்கி..




அவன் தற்கொலைக்கு நாமும் தான் காரணம்

அவனுக்காக கண்ணீர் வடிக்கும் உங்கள்
கண்ணீரின் ஈரம் வற்றிவிடுவதற்குள்
என் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிடுங்கள்
பதில் சொல்வது
உங்களுக்குப் பழக்கமல்ல என்றால்
உங்கள் மனசாட்சியிடம்
இக்கேள்விகளை விட்டுவிடுங்கள்.
அவன் தற்கொலைக்கு அவன் மட்டுமா காரணம்?
நீங்களும் தானே.
சாதி வன் கொடுமைகள், இம்மாதிரி அதிர்ச்சி தரும்
தற்கொலைகள் நடந்தால் மட்டுமே
கண்ணீர் சிந்தும் உங்களின் கருணை உள்ளம
உங்களை சாதிக்கொடுமைக்கு எதிரானவராக
காட்டும் தூரிகையாக இருக்கிறதே தவிர
இன்றுவரை நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்?
எதை / எவரை எல்லாம் கொண்டாடுகிறீர்கள்?

இதோ பாருங்கள்,,,

நம் எல்லோருக்குமே இரு அடையாளங்கள் இருக்கின்றன.
ஒன்று இன அடையாளம், இன்னொன்று சாதி அடையாளம்.
இது தவிர்க்கமுடியாத யதார்த்தம்.
சமூக நெருக்கடிகள் ஏற்படும்போது இரு அடையாளங்களும்
எதிரெதிராக .அம்மாதிரி சந்தர்ப்பங்களில் நாம் எப்படி
நடந்து கொள்கிறோம்?
சாதிக்கொடுமையைச் செய்தவர் நம் சொந்த சாதிக்காரன் என்றால்
அவனைக் க்ண்டித்த கலைஞன்/ எழுத்தாளன் யார்?
நிகழ்காலத்தில் சாதிகள் ஒன்றையொன்று மனிதாபிமானமில்லாமல்
தாக்கிக்கொண்டிருக்கும் போது
சங்ககாலத்தின் வீரத்தையும் காதலையும் பேசி, ஜல்லிக்கட்டில்
நம் பண்பாடு புதைந்திருப்பதாக வெத்துக்கூப்பாடு போடும்
கூட்டத்தை/ உரத்துப் பேசும் தலைவர்களை வளர்த்துக்
கொண்டிருக்கிறோம்.
இதோ இந்த ம்ரணத்திற்காகவும் ராகுல்காந்தி முதல்
டில்லி முதல்வர் அரவிந்த் ஜெஜ்ரிவால் வரை
கண்டண அறிக்கைகளை வெளியிடலாம்
இந்த அரசியல் நமக்குப் புதிதல்ல.
ஏனேனில் கண்டன அறிக்கையில் சொல்லப்படும்
எதையும் செயல்படுத்தும் திட்டம்
இந்தியாவில் எந்த அரசியல் கட்சிக்கும்/தலைவருக்கும் இல்லை.

*

ரோஹித்.. உன் தற்கொலைக்கு நீ மட்டும் காரணமல்ல.
எனக்குத் தெரியும்.. ஒடுக்கப்பட்ட மக்களின் இறையாண்மையை
மதிக்காத ஒவ்வொரு இந்தியனும் உன் தற்கொலைக்கு
காரணமானவர்கள்.

*

உங்கள் அடிமைத்தனத்திலிருந்து அக்குவேர், ஆணிவேருடன் முழுமையாய்
விடுதலை பெற நீங்கள் உறுதிபூண்டு அதற்காக இன்னல்கள் இடர்கள்
எவை வரினும் எதிர்கொள்ளத் துணிவீர்களாயின், நான் நிறைவேற்ற
முயன்று கொண்டிருக்கும் இக்கடும் பணியின் பேரும் புகழும்
உங்களையே சாரும்.

நமது உரிமைக்ளுக்காக நாம் நமது சொந்தக் கால்களில்
நின்றுதான் போராட வேண்டும். எனவே, உங்கள்
ஆற்றலனைத்தையும் திரட்டித் தொடர்ந்து போராடுங்கள்.
போராட்டத்தின் வாயிலாகவே அதிகாரமும் பெருமிதமும்
உங்களை வந்தடையும்...
- டாக்டர் அம்பேத்கர்
(1931, ஆக 14ல் வட்டமேசை மாநாட்டுக்கு
இலண்டனுக்குப் புறபப்டுவதற்கு முந்திய நாள் அவருக்கு
ஏற்பாடு செய்திருந்த வழியனுப்பு விழாவில் பேசியது)

**

my BIRTH IS MY FATAL ACCIDENT ??????????????????????????

**

ROHIT'S SUICIDE NOTE: :

காலை வணக்கம்!

இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்கும் தருணத்தில் நான் உங்களுடன் இருக்க மாட்டேன். அதற்காக என் மீது ஆத்திரம் கொள்ளாதீர்கள். உங்களில் சிலர் என் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள், என்னை நேசித்தவர்கள், என்னை நன்றாக நடத்தியவர்கள் என்பது எனக்குத் தெரியும்.

எனக்கு யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை. எப்போதுமே என்னால் மட்டும்தான் எனக்கு பிரச்சனை. என்னுடைய ஆன்மாவுக்கும் உடலுக்கும் இடையேயான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாகவும் நான் ஒரு ராட்சசனாக மாறி விட்டதாகவும் உணர்கிறேன்.  நான் ஒரு எழுத்தாளராக இருக்கவே எப்போதும் விரும்பினேன். கார்ல் சாகனைப் போல் ஒரு அறிவியல் எழுத்தாளராக… இறுதியில், இதோ இந்த ஒரு கடிதத்தை மட்டுமே என்னால் எழுத முடிந்துள்ளது.

எனக்கு அறிவியல், நட்சத்திரங்கள், இயற்கை அத்தனையும் பிடிக்கும். மக்களையும்…. அவர்கள் இயற்கையிடமிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டார்கள் என்பது புரியாத போதும். நமது உணர்வுகள் இரண்டாம் பட்சமானவை. நமது அன்பு கட்டமைக்கப்பட்டது. நமது நம்பிக்கைகள் சாயம் பூசப்பட்டவை. நமது சுயத்தன்மை செயற்கையான கலவையின் மூலமாகவே மதிக்கப்படுகிறது.

ஒரு மனிதனின் மதிப்பு வெறும் உடனடியான ஒரு அடையாளத்திற்குள் சுருக்கப்பட்டுவிட்டது. ஒரு ஓட்டாக, ஒரு நம்பராக… கல்வி பயிலும் இடம், தெருக்கள், அரசியல் எங்கும் யாரும் மனிதனை அவனது மனதுக்காக மதிப்பதில்லை. வாழ்விலும் சாவிலும் கூட…. ஒருபோதும் நட்சத்திர துகள்களிலிருந்து உருவாக்கப்பட்ட ஒளி படைத்த மனிதனாக அவனை நடத்துவதில்லை. காயப்படாமல் அன்பு செலுத்துவதென்பது கடினமாக இருக்கிறது.

இதுபோன்ற ஒரு கடிதத்தை இப்போதுதான் நான் முதன்முறையாக எழுதுகிறேன். இதுவே கடைசியாகவும் அமைந்து விட்டது. எனது கருத்துகள் அர்த்தமற்றதாக இருந்தால் அதற்காக என்னை மன்னித்து விடுங்கள்.

என்னுடைய பிறப்பு மோசமான ஒரு விபத்து, என்னுடைய குழந்தைப்பருவ தனிமையிலிருந்தே நான் இன்னும் மீளவில்லை. நான் யாராலும் பாராட்டப்படாத ஒரு குழந்தை, ஒரு வேளை, இந்த உலகத்தை நான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். அன்பை, வலியை, வாழ்க்கையை, மரணத்தை தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். ஒரு அவசரமும் இல்லை. ஆனால் நான் எப்போதும் அவசரகதியிலேயே இருந்தேன்.

இந்தநொடி நான் காயமடைந்தவனில்லை. நான் சோகமாக இல்லை. வெறுமையாக இருக்கிறேன். என்னைப் பற்றிய அக்கறை சிறுதும் அற்றவனாக இருக்கும் இந்தநிலை மிகவும் பரிதாபகரமானது. அதனால்தான் நான் இதைச் செய்கிறேன்.

மக்கள் என்னை கோழை என்று அழைக்கலாம். சுயநலக்காரன் மற்றும் முட்டாள் என்று கூட. ஆனால், நான் போன பிறகு நீங்கள் என்னைப் பற்றி சொல்வது குறித்து எனக்கென்ன அக்கறை?. இறப்புக்கு பிறகான கதைகள், பேய்கள் அல்லது ஆவிகள் குறித்தெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படி ஏதேனும் இருந்தால் அவற்றின் மூலம் நட்சத்திரங்களுக்கு பயணித்து வேறு உலகங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம் என நம்புகிறேன்.

இந்தக் கடிதத்தை படிக்கும் உங்களில் யாராவது, எனக்கு ஏதாவது செய்ய முடியுமானால், ஒரு சிறிய வேண்டுகோள்.

எனக்கு பல்கலைக்கழகத்திலிருந்து ஏழு மாதங்களாக வர வேண்டிய கல்வி உதவித் தொகையான ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிலுவையில் உள்ளது. அந்தத்தொகை எனது குடும்பத்தாருக்கு கிடைக்க வழிசெய்யுங்கள். என் நண்பன் ராம்ஜிக்கு நான் 40 ஆயிரம் ரூபாய் தர வேண்டும். அவன் அதை திருப்பிக் கேட்கக் கூடியவன் இல்லைதான். இருந்தாலும், தயவு செய்து அவனுக்கு அந்த பணத்தை திருப்பிக் கொடுத்து விடுங்கள்.

என்னுடைய இறுதிஊர்வலம் அமைதியாகவும் ஆர்ப்பாட்டமின்றியும் இருக்கட்டும். நான் தென்றலைப் போல வந்து தென்றலைப் போல போய்விட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள். உயிரோடு இருப்பதை விட சாவதே எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

“ நிழல்களிலிருந்து நட்சத்திரங்களை நோக்கி”

உமா அண்ணா, உன்னுடைய அறையில் தற்கொலை செய்து கொண்டதற்காக என்னை மன்னித்துக் கொள்.

அம்பேத்கர் மாணவர் பேரவை குடும்பத்தினருக்கு,

உங்களை எல்லாம் ஏமாற்றியதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் என் மீது தீவிரமான அன்பு செலுத்தினீர்கள். உங்கள் எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்

கடைசி முறையாக, ஜெய்பீம், அம்பேத்கர் வாழ்க!

(இதுபோன்ற தற்கொலைக்கடிதங்களில்) வழக்கமாக எழுதும் ஒன்றை நான் மறந்து விட்டேன்…!

என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணமல்ல. தங்களது செயலாலோ வார்த்தைகளாலோ என்னை யாரும் தற்கொலைக்கு தூண்டவில்லை. இது என்னுடைய முடிவு, இதற்கு நான் மட்டுமே பொறுப்பு. நான் போன பிறகு என்னுடைய நண்பர்களை தொந்தரவு செய்யாதீர்கள். எதிரிகளையும்…

1 comment:

  1. சிந்திக்க வைக்கும்
    சிறந்த எண்ணப் பகிர்வுகள்

    யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)
    http://www.ypvnpubs.com/2016/01/01.html

    ReplyDelete