Wednesday, November 19, 2014

புனிதவதி தொலைத்த மாங்கனி





மாங்கனியில் சித்துகள் காட்டிய சிவன்
அறிந்திருக்க நியாயமில்லை.
புனிதவதியின் பெருமூச்சுகளை.

அவன் சுவைத்த மாங்கனிகள்
கசக்கட்டும்
அவன் ரசித்த மாவிலைகள்
உதிர்ந்து போகட்டும்
அவன் தூங்கிய மரக்கிளைகள்
ஒடிந்து விழட்டும்.
அவனுடன் வாழ்ந்த உடல்
அவனை அவன் முத்தத்தின் ஈரத்தை
எப்போதும் சும்ந்து கொண்டே
இருப்பதால்..
மருதம் திரிந்து பாலையாகட்டும். 

பாலையின் பேயுருவில்
யெளவனம் தொலைத்த புனிதவதி
இமயம் வரை அலைந்து திரிந்தாள்.

தென்னாடுடைய சிவனே 
போற்றி போற்றி
உன் நெற்றிக்கண் அறிந்திருக்க
நியாயமில்லை
இமைகளை தொலைத்த 
விழிகளின் கனவுகளை.

புனிதவதியின் பெருமூச்சில்
இமயத்தின் பனிப்பாறைகள் உருகி
கங்கையாக யமுனையாக
பெருக்கெடுத்து ஓடுகிறது.
பரமதத்தன் நினைவுகளைச் சுமக்கும்
அந்த மேகங்கள்
இன்னும் இளைப்பாறவில்லை.

No comments:

Post a Comment