Sunday, September 14, 2014

செப் 15 வழக்கம் போல வருகிறது




( 09 டிசம்பர் 1961.photo
பம்பாய் தி.மு.க. அண்ணாவுக்கு இதயம் அளித்தல்
ஒரு இதயம் வெள்ளியில் செய்யப்பட்டு "ஷீல்டாக.
அதைப்புன்னகையுடம் கொடுக்கின்றார் என் தந்தை

பி எஸ் வள்ளிநாயகம்)

திருவிழாவில் தொலைந்துப் போன சிறுமியைப் போல
அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்  கொண்டாட்டங்களில்
தனித்து நின்று தவித்துக்கொண்டிருக்கிறேன்.

தேடித் தேடிப் பார்க்கிறேன்
தொலைந்து போன உறவுகளை அல்ல
தொலைக்கப்பட்ட அண்ணாவை.

அண்ணாவின் எழுத்தும் பேச்சும்
எனக்கொன்றும் விமர்சனத்திற்கு
அப்பாற்பட்ட வேதவாக்கல்ல.

வேதங்களையும் வேதவாக்குகளையும்
விமர்சிக்கும் வித்தையை
நான் கற்றுக்கொண்டது என்னவோ
அண்ணாவின் கம்பரசம் வழியாகத்தான்.

நான்
அண்ணா உருவாக்கிய
அமைச்சர்களின் வாரிசல்ல.
அண்ணாவை நம்பிய
தொண்டனின் கடைசி வாரிசு.
அதனால்தான்
இன்னும் என்னிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறது
அண்ணாவின் கண்ணியமும் நாணயமும்.
என் கேள்விக்கணைகள்
உங்கள் கருத்துகளுடன் மோதும்போதெல்லாம்
ஆத்திரப்படும் உங்களைக் கண்டு-
பலகீனமாகிப் போன
உங்கள் பாசறையைக் கண்டு.-
வருத்தப்படுகிறேன்.


காங்கிரசு போட்ட
தடையுத்தரவு
அண்ணாவின் ஆரியமாயைக்கு
மட்டும்தான்.
தம்பிகளின்
அரசுக்கட்டில் விதித்த
தடையுத்தரவு..!!??

தம்பியுடையான்
படைக்கு அஞ்சான்.
அண்ணாவுக்குத்தான்
எத்தனை எத்தனைத்
தம்பியர்.!
அவர் அத்துனைப் பேருக்கும்
பட்டா போட்டு
பாடிக்கொண்டிருக்கின்றன
தொலைக்காட்சிப் பெட்டிகள்.
24 மணிநேரமும்.
அண்ணாவின்
பிறந்தநாள்  கூட்டத்தில்
அமைச்சர்கள்
வருங்கால அமைச்சர்கள்
எல்லோர் முகங்களும் வருகின்றன.
போகின்றன.
வாசிக்கிறார்கள்
பேசுகிறார்கள்.
கைதட்டுகிறார்கள்.


செப் 15
வழக்கம் போல வருகிறது
போகிறது
காத்திருக்கிறேன்.
இப்போதாவது
காட்ட மாட்டார்களா?
அண்ணா பேசுவதை.!
இப்போதாவது
பார்க்க முடியுமா
அண்ணாவின் வேலைக்காரியை?



ஓரிரவு மட்டுமல்ல
ஒவ்வொரு இரவிலும்
கண்ணிமைகள் மூடாமல் காத்திருக்கிறேன்..
நீங்கள் இலவசமாகத் தந்த
தொலைக்காட்சி பெட்டி முன்னால்.



2 comments:

  1. செப்டமபர் 15 வழகம்போல்தான் வருகிறது
    தங்களின் தந்தையை நினைத்துப் பெருமைப்படுகின்றேன்

    ReplyDelete
  2. செப்டமபர் 15 வழகம்போல்தான் வருகிறது
    தங்களின் தந்தையை நினைத்துப் பெருமைப்படுகின்றேன்

    ReplyDelete