Sunday, August 21, 2022

அபத்தமான கேள்விகள்! திருமா ரசித்தாரா?

 
 

    அபத்தமான கேள்விகளை தொல். திருமா ரசித்தாரா?
அவர் உடல்மொழி சொல்வதென்ன?
எதற்காக நடிகை மீனாவும் ஜெயலலிதாவும் தலைப்பு செய்தியானது?!!!
எப்போதுமே நேர்காணல்களில் வெளிப்படையான மொழியின் அர்த்தங்களைவிட முக்கியமானது அதை வெளிப்படுத்துபவரின் உடல்மொழி.
பல தருணங்களில் அந்த உடல்மொழி, மொழியால் வெளிப்படுத்த முடியாத அர்த்தங்களையும் வெளிப்படுத்தும்..
 
தொல். திருமா அவர்களின் உடல்மொழியிலும் அது வெளிப்பட்டது.
அவர் தன் இரு கை விரல்களையும் ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு பேச ஆரம்பித்தார். நிதானமாக சிந்தனையுடன் தன் மொழியை வெளிப்படுத்த தன்னை தயார் செய்து கொள்ளும் உடல்மொழியின் வெளிப்பாடு அது!
 
    அடுத்து தன் நேர்காணலில் இருவருக்கும் நடுவில் இருக்கும் அண்ணல் அம்பேத்கரின் புகைப்படம் தன்னை நோக்கிப் பார்த்து சிரிப்பதாக தொல்.திருமா சொல்கிறார். மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான உத்திகளில் ஒன்றுதான் அந்த உடல்மொழி. அந்த உடல்மொழியைக் கூட எதிரில் இருப்பவர் அபத்தமாக அணுகுவது ! .. பார்ப்பவருக்கு எரிச்சல் தருகிறது.
 
    சில தலைவர்களின் மனைவியர் +60 அல்லது +70ல் மரணித்துவிடுகிறார்கள். மரணம் இயற்கையானது. ஆனால் இதே இந்த ஆசாமிகள் தனித்திருக்கும் அந்தப் பெரியவரின் 'இல்லாள்" பற்றிய நினைவுகளைக் கொண்டாடுவார்கள். 
சில நேரங்களில் "ஏகபத்னி விரதம்" கொண்டவர் ரேஞ்சுக்கு போய்விடும் இவர்களின்  கொண்டாட்ட  மன நிலை. அப்போதெல்லாம்  நினைக்கமாட்டார்கள் வயதானக் காலத்தில் கவனிக்க துணை இல்லாத ஃபார்முலாவை! அதாவது துணைதான் கூடவே இருக்கும்னு அட்வைஸ் சொல்கிற இச்சமூகத்தின் பொதுப்புத்தி இப்படித்தான் இருக்கிறது.
இதெல்லாம் ஆண்களுக்கு மட்டும்தான். பெண்கள் விஷயத்தில் வேற மாதிரி யோசிப்பார்கள். 
    இவர்களுக்கு எப்போதுமே  தங்களை பரபரப்பாக விற்பனை செய்து கொள்ள பெண்கள் தேவைப்படுகிறார்கள்! சம்பந்தப்பட்ட பெண்ணின் ஆளுமை தனி மனித உணர்வு அதன் விளைவுகள் இப்படி எதைப் பற்றியும் இவர்களுக்கு கவலை இல்லை.
 
    அண்மையில்தான் நடிகை மீனாவின் கணவர் மறைவு. அவரைப் பற்றிய ஊடகச்செய்திகள் வந்து கொண்டிருக்கும் சூழலில் “ நடிகை மீனாவை காதலித்தாரா, திருமா? என்று தலைப்பு செய்தியாக போட்டு “திருமணம் பற்றி மனம் திறக்கும் திருமா !” என்று விளம்பரப்படுத்தி இருப்பது கேவலமாக இருக்கிறது. மீனா மற்றும் ஜெயலலிதா என்ற இரு பெண்களைப் பேசி பரபரப்பாக்கி தன்னை விற்றுக்கொள்ளும் இவர்களை என்ன செய்யலாம்?!

 

Friday, August 19, 2022

மும்பை கோவிந்தா VS ஸ்பெயின் கேஸ்டல்ஸ்

  Janmashtami 2022: Govindas form a human pyramid to break the Dahi Handi in  Mumbai's Dadar, watch video - The Economic Times Video | ET Now

கிருஷ்ணனும் ராமனும் இந்திய தேசத்தின் அரசியல்
அடையாளமாக்கப்பட்டிருக்கிறார்கள்!
இதற்கான காரணங்கள் தத்துவ விசாரணைகள் உண்டு.
கிருஷ்ண ஜன்மாஷ்டமியை முன்னிட்டு நடக்கும்  

தயிர்ப்பானை உடைக்கும்
விளையாட்டு மண்ணின் அரசியல் வளர்த்தெடுக்கப்பட்ட  சூழலில்
அரசியலாக உருமாற்றம் பெற்றிருக்கிறது.

நான் சிறுமியாக இருந்தப்போது
மிக உயரமான கம்பத்தின் உச்சியில் தயிர்ப்பானை  கட்டப்பட்டிருக்கும்.
அதை உடைப்பதுதான் விளையாட்டு. 

லோக்கல் வீர்ர்கள் தங்கள் வீரத்தைக் காட்டுவார்கள்.

 கம்பம் எண்ணெய் தைத்து வளவளப்பாக இருக்கும்.ஏறுவது அவ்வளவு எளிதல்ல.கூட்டம் அலைமோதும். குறிப்பாக இளம்பெண்களும் குழந்தைகளும். மழைக்கொட்டினாலும் நனைந்துக்கொண்டே அதைப் பார்த்த நாட்களும் அதற்காக வீட்டில் தண்டனை அனுபவித்த நாட்களும் மறக்கவில்லை,

இப்போது அதே விளையாட்டு என்னைச் சுற்றி ஒரு 

மாபெரும் மனிதப் பிரமிடாக நடக்கிறது.
கோவிந்தா க்கோவிந்தா….

கோவிந்தாக்கள் லாரிகளில் ஏறி வருகிறார்கள். எங்கெல்லாம் தயிர்ப்பானைகள் உயரத்தில் கட்டப்பட்டிருக்கிறதோ அதை எல்லாம் மனிதப் பிரமிடுகளாகி உடைக்கிறார்கள்.
க்கோவிந்தா க்கோவிந்தா

கூட்டம் ஆரவாரம் செய்கிறது.
மழைக்கொட்டுகிறது.
தயிர்ப்பானையின் உயரம் பொதுவாக 20 அடி இருக்கும்.

30, 40 என்று உசரம் கூடிக்கொண்டே போனது.

நேற்று கின்னஸ் ரெகார்ட்.

50 அடி உசரத்தில் மனிதப்பிரமிடு. மும்பை தானா பகுதி கோவிந்தாக்களின் சாகசம். இது ஸ்பெயின் சீன தேசத்து மனிதப்பிரமிடுகளை விட உசரமானது!
கோவிந்தா க்கோவிந்தா..

ஸ்பெயில் வடகிழக்குப் பகுதியான கேஸ்ட்டோலினா மக்களின் விளையாட்டு மனிதப்பிரமிடு.
கேஸ்ட்டோலோன் நாட்டுப்புற பாடல்கள் புல்லாங்குழலிசைக்க இந்த மனிதப்பிரமிடுகள் உருவாகும் காட்சியைப் பார்க்க கூட்டம் கூடுகிறது. இந்த விளையாட்டுக்கான கேஸ்டல்ஸ் க்ளப்புகள் உண்டு. பயிற்சி எடுப்பார்கள். சற்றொப்ப இதே பின்புலத்தில் தான் மும்பையின் கோவிந்தாக்களும்! பயிற்சி இல்லாமல் திடீரென ஒருவர் தோள்களில் ஒருவர் ஏறி பத்தடுக்கு மனிதப்பிரமிடாக மாற முடியாது.
கோவிந்தா..க்கோவிந்தா..

குஜராத் மராட்டிய மா நில அரசியல் களத்தில் மராட்டிய மா நிலத்தில் சிவசேனா மக்களின் அரசியலாக வளர்த்தெடுக்கப்பட்ட போது இந்த தஹியண்டி ஜன்மாஷ்டமியும் மராட்டிய மண்ணின் மைந்தர்களுக்கான வீரமாக மேடைகளில் ஒலிவாங்கிகள் முழக்கமிடுகின்றன. அதனால் தான் இந்த மேடைகள் பெரும்பாலும் சிவசேனாவின் அடையாளங்களாக இருக்கும்! தஹி அண்டி கூட்டத்திற்கு அருகில் எப்போதும் ஆம்புலன்ஸ் நிற்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சற்றொப்ப 100 கோவிந்தாக்கள் காயத்துடன் மருத்துவமனையில் கைகால் இடுப்பு எலும்பு முறிவுடன் ! நமக்கு இதுப் புதிதல்ல. அவர்களுக்கும் இது புதிதல்ல.
தயிர்ப்பானையில் இப்போதெல்லாம் இலட்சகணக்கில் பணமுடிப்புகள் இருக்கின்றன.தயிர்ப்பானைகள் காஸ்ட்லியாகி விடுகின்றன. இதில் தஹி அண்டியை உடைக்கமுடியாவிட்டாலும் கூட பங்கெடுத்துக்கொள்ளும் கோவிந்தாக்களுக்கு ஊக்கப்பரிசுண்டு. இப்படியாக க்கோவிந்தாக்கள்..
நேற்றைய கோவிந்தா .. கின்னஸ் ரெகார்ட்
கோவிந்தா க்கோவிந்தா..

சரவணா….
சர்க்கார் (அமிதாப்பச்சன் நடித்தப்படம் ) திரைப்பட த்தில் அபிஷேக்பச்சன் ஓடிக்கொண்டிருக்கும் போது கொள்ளைக்கூட்டம் துரத்தும்போதும் அடிதடி காட்சிகளின் போது பின்னணி இசையாக
க்கோவிந்தா க்கோவிந்த்தாஒலித்துக்கொண்டே இருக்கும் .
இரண்டு நாட்களாக அதே பின்னணி இசை என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது!
க்கோவிந்தா க்க்க்கோவிந்தா..

#mumbai_govinda

 

Saturday, August 13, 2022

ஆகஸ்டு 15 ..ஏன்?


 ஆகஸ்டு 14 இரவு 12 மணி, 1947 

அன்று நடந்தக் காட்சிகளைக் கண்டவர்கள் இன்று நம்மிடம் இல்லை! அப்படி யாராவது ஒன்றிரண்டுபேர் இருந்தால் அவர்களிடம் அந்த முக்கியமான தருணத்தைக் கேளுங்கள்.. அவர்கள் நினைவுகள் மறப்பதற்குள்.

இந்த ஆகஸ்டு 15.. யார் தீர்மானித்தார்கள்?

எப்போது இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கப்போகிறீர்கள் ? என்ற கேள்விக்கு ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் கொடுப்போம் என்று பதில் சொல்ல நினைத்த மவுண்ட்பேட்டன் தன்னையும் அறியாமல் சொன்ன நாள்தான் ஆகஸ்டு 15. 

அவருக்குள் அந்த நாள் அத்தருணத்தில் ஏன் ? என்றால் எதுவுமே எதேச்சையாகக்கூட வருவதில்லை. ஒவ்வொன்றுக்கு அடிமனதில் எதோ ஒரு காரணம் இருக்கிறது. மவுண்ட்பேட்டன் அறிவித்த ஆகஸ்டு 15ம் அப்படியான  ஒன்றுதான். அன்றுதான் ஜப்பான் இங்கிலாந்திடம் சரணடைந்த நாள். அதை மவுண்ட்பேட்டன் சர்ச்சிலின் அறையில் அவருடன் உட்கார்ந்து வானொலியில் கேட்ட நாள்.இப்படியாக ஆகஸ்டு 15 இந்திய தேச வரலாற்றில் தன்னை எழுதிக்கொண்டது.

ஆனால் அன்று நாள் கிரஹம் சரியில்லை என்றும் இரண்டு நாள் கடந்து சுதந்திரம் வந்திருந்தால் இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடும் என்றும் ஜோதிடர்கள் சொன்னதாக சொல்கிறார்கள்.!

சங்கு ஒலித்து இந்திய சுதந்திரம் அறிவிக்கப்பட்டதாம்.

சுதந்திரப்போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட து. 

அந்த அரங்கில் அந்தக் கூட்டத்தில் தேசப்பிதா காந்தி இல்லை. அவர் கல்கத்தாவில் இருந்தார். நமக்கு அந்த ரத்தக்கறை படிந்த வரலாறும் தெரியும்.

(இப்புகைப்படம் அந்த நாளில் ஒரு தருணம்.. நன்றி indian express)


Wednesday, August 10, 2022

அணையாத அடுப்பு !! அதிலென்ன பெருமை??

 

 
அணையாத அடுப்பு.. அணையாத தருமம் என்றால்
அந்த தர்மத்தில் பெருமை கொள்ள என்ன இருக்கிறது?!!!
 
கடலூர் மாவட்டம் வடலூரில் 1867-ம் ஆண்டு,
மே மாதம் 23-ம் தேதி வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு
சாமானியர்களின் பசியைப் போக்குவதற்காக
இன்னமும் எரிந்துகொண்டேதான் இருக்கிறது. 
இன்றைய தேதிக்கு தினமும் 1,300 முதல் 1,500 பேரின் 
பசியைப் போக்கி வருகிறது வள்ளலார் மூட்டிய
இந்த அணையா அடுப்பு.
 
இந்த தர்மம் தொடர வேண்டுமென்றால் பசியுள்ள
 சாமானியர்களின் வரிசையும் தொடர வேண்டும்! 
பசியுள்ளவன் இந்த அடுப்புகளைத் தேடி
வரவேண்டும்! இல்லை என்றால் எப்படி இந்த அடுப்புகள் 
எரிந்து கொண்டே தங்கள் தர்மத்தைக் காப்பாற்றிக்கொள்ள 
முடியும்!!!! சொல்லுங்கள்.
 
பிரிட்டிஷ் காலத்தில் ஏற்பட்ட உணவு பஞ்சத்தை 
எதிர்கொள்ளவே அவர் இந்த அடுப்பை ஏற்றினார்.
பசி போக்கினார் என்பது ஒரு வரலாறு, 
அது கடந்த கால வரலாறாக இருந்திருக்க வேண்டும்
ஆனால்..
உதவிகள் தர்ம சிந்தனையாக உருமாறும்போது
ஒரு தர்மசாலை உருவாகிறது, ஒரு சிலர் தர்மகர்த்தாக்களாகிறார்கள்.பல்லாயிரம் பேர்
அவர்களின் தர்மசாலை முன் வரிசையில் நிற்கிறார்கள்!
காலமெல்லாம் இப்படி ஒரு கூட்டத்தை பசியுடன் 
அலையவிட்டு தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் 
பெருமைப் பட்டுக்கொள்ள என்னதான்
இருக்கிறது!!!
 
75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இப்போதும் 
இலவசங்களை அரசியல் கட்சிகள் தங்கள் சாதனைகளாகப் பட்டியலிடுகின்றன. இதன் சூட்சமத்தில் இருக்கும் 
சமத்துவமற்ற சமூகத்தை நாம் காண்பதில்லை.
 
அரசியல் இலவசங்கள் 
அடுத்தமுறை ஆட்சியைப் பிடிக்க உதவும்.
ஆன்மீகம் பேசும் தர்மங்கள் 
சொர்க்கலோகத்தில் இடம் கொடுக்கும் !
எல்லாமே கொடுக்கல் வாங்கல் தான்.
 
“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்’ எனும்
அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறியென,
ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே.”
சரவணா…
நம் முப்பாட்டன் முடமோசியார் இதை எல்லாம்
யோசிச்சிருக்கான்ய்யா..

 

Wednesday, August 3, 2022

5 G அரசியல்

 


 

சரவணா...
எதாவது புரியுதா..
எல்லாம் ஜியோ மயம் என்பதைத்தவிர
எனக்கு எதுவும் புரியல.
திரு ராஜா அவர்கள் தனியா நின்னுட்டு
எதோ சொல்லவருவது மட்டும்
புரியுது.

சரவணா,
இந்த அலைக்கற்றை விவகாரத்தில் சொல்லப்படும் தொகை

 எல்லாம் ரொம்ப பெரிசா .. அதுக்கு எத்தனை பூஜ்யம் போடனும்னு 

எப்பவும் எண்ண வேண்டியதா இருக்கு. 

அந்த எண்கள் என்னைப் போன்ற சாமானியர்களை மருட்டுகிறது. 

நாங்க வழக்கம்போல ஜூட்!


என்னவோ 5G அலைக்கற்றை ஒருவழியா முடிஞ்சிட்டுனு அதில் வழக்கம்போல எதிர்பார்த்த து போல JIO தான் வந்திருக்கு.
இது எதுவுமே எங்களுக்கு பெரிசா தெரியல.
ஆனா..
இது எல்லாமே அரசியல்.
இதில் இப்போதும் 2G  - ராஜா அவர்கள்  மட்டும்தான் எதோ 

சொல்லவருகிறார்.

 இது தனிப்பட்ட ராஜா அவர்களின் பிரச்சனை மாதிரி..
2G காலத்திலும் சரி,
5 G காலத்திலும் சரி,
இது அரசியல் மட்டும்தான்.
இது தனிப்பட்ட ஒரு ராஜாவின் பிரச்சனை இல்ல.

என்னவோ தோணிச்சு..


திரு ராஜா அவர்கள் தனியா நின்னுட்டு
எதோ சொல்லவருகிறார்.
அது பொதுஜன அரசியலுக்கானதல்ல
ஆதலால் மக்கள் ஒதுங்கி நிற்கிறார்கள்.
ஆனால் அரசியல் கட்சிகளோ
அல்லது அரசியல் விமர்சகர்களோ
ஊடகங்களோ ...
வாய்திறக்கவே இல்லை.
அவர்கள் வெளியிட்டிருக்கும் செய்திகளிலிருந்து
அறிந்து கொள்ள எதுவுமில்லை.

#2G_5G_POLITICS
 

Monday, August 1, 2022

கலை " திருட்டு"

 



அவளைச் சொந்தம் கொண்டாடிய கணவன்
அவள் ஓவியங்களையும் சொந்தம் கொண்டாடினான்!
உறவின் பெயரால் நடந்த “கலை திருட்டு”
&
அவள் ஓவியங்களுக்கு அவன் சொந்தம் கொண்டாடினான்.
 அவளை வெளியில் செல்லவிடாமல் அடைத்து வைத்திருந்தான்.
ஒரு நாளில் 16 மணி நேரம் அவள் தூரிகைகளுடன் வாழ்வதற்கு நிர்பந்திக்கப்பட்டாள். அவள் அவன் மனைவி.
ஆரம்பத்தில் பசி தீர்க்கவும்
குழந்தைக்காகவும் அவள் ஓவியங்களை அவன் விற்பனை 
செய்வதாக நினைத்தாள். அதன்பின் அவன் அவள் ஓவியங்களை வரைந்தவனாகபேட்டி கொடுத்தான்.
 உண்மை அறிந்தவுடன் எதிர்த்த அவள் மிரட்டப் படுகிறாள். 
10 ஆண்டுகள் மணவாழ்க்கை இப்படியாக கடந்துவிடுகிறது!
 
1965ல் அவனை விட்டு வெளியில் வந்து விவாகரத்து 
பெற்ற பிறகும் அவளுக்கு அவனை எதிர்க்கும் துணிச்சல் 
வரவில்லை. காரணம் அவன் புகழ்பெற்ற கலைஞனாக 
அமெரிக்க கலை உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறான். 
உண்மையை அவள் சொன்னாலும் எடுபடுமா 
என்ற அச்சத்தில் இன்னும் சில வருடங்கள் கழிகிறது 
அவள் வாழ்க்கை.
1970ல் அவள் அவனை வெளிப்படையாக எதிர்த்து 
பொதுவெளியில் சவாலிடுகிறாள்
. “ மக்கள் முன் வரைந்து காட்டுவோம், 
அவர்கள் தீர்மானிக்கட்டும் இதுவரை வரைந்த 
கைகள் யாருடையவை என்று”
அவன் வரவே இல்லை.
 
1986 ல் ஹோனலுலு நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.
 53 நிமிடங்களில் நீதிபதி முன்னால் அவள் தூரிகை எடுத்து வரைந்து முடிக்கிறாள். அவனோ தோள்பட்டை காயம், 
அதனால் சரியாக வரைய முடியவில்லை என்று சொல்கிறான்.
 நீதிமன்றம் அவள் தூரிகையை அடையாளம் கண்டு கொண்டு 
அவளுக்கு அவன் 4 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமாக கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கிறது.
அபாராத தொகை குறைக்கப்படுகிறது… அவளோ .
. “எனக்கு பணம் அல்ல முக்கியம், என் தூரிகையின் உரிமை, 
அடையாளம் முக்கியம்” என்று
அவன் தொட முடியாத தூரத்தை தொடுகிறாள்.
 
அவள் ஓவியங்கள் காட்டும் “பெரிய விழிகள்” பிரபலமானவை.
சான்பிரான்சிஸ்கோவில் “KEANE EYES GALLERY “ அவள் ஓவியங்களைப்பார்க்கலாம். 
 
இதில் வால்டரின் அறிவுத்திருட்டை காலம் கடந்துதான் மார்க்ரேட் நிரூபித்தாள். அதற்குள் பணம் புகழ் அனைத்தும் அவள் உழைப்பில்
வால்டர் அனுபவித்துவிட்டான். 
 
2014 ல் அவள் கதைதான் “BIG EYES” என்ற திரைப்படமாக
வெளிவந்தது. 
 
காலம்தோறும் “அறிவு திருட்டு” உண்டு. 
அதை அம்பலப்படுத்துவது அத்துனை எளிதல்ல. 
அதற்கும் அதை நாம் சொன்னால் நாலு பேர் கேட்கிற 
உயரத்தில் இருக்க வேண்டும். இல்லை என்றால்
 “ஏழை சொல் அம்பலம் ஏறாது”
 காரணம் அறிவு திருட்டு நடத்தியவர்களின் 
ஆள்பலம், அதிகார பலம்
அச்சுறுத்தலாகவே தொடர்கிறது.

 
(மார்க்ரெட் வரைந்த ஓவியம்; நன்றி art in action)

Sunday, July 31, 2022

சதுரங்க வரலாறும் அரசியலும்

 

விளையாட்டுகள் வெறும் விளையாட்டுகள் மட்டுமல்ல
அவை கடந்து வந்திருக்கும் பாதை மனித வரலாற்றை
அப்படியே பிரதிபலிக்கின்றன.
திறந்தவெளியில் விளையாடும் விளையாட்டுகளைவிட ஒரிடத்தில்
அமர்ந்து விளையாடும் விளையாட்டுகள் மனித எண்ணங்களைக் 
கட்டமைத்த த்தில் பெரும்பாங்காற்றி இருக்கின்றன.
அதில் செஸ்.. சதுரங்க ஆட்டம்..
அப்ப்பா.. யோசிக்கும்போது சதுரங்க ஆட்டத்தின் காய்களும்
கட்டங்களும் ஒரு வரலாறாக விரிகின்றன.
 
இதைப் பற்றிய ஒரு புத்தகம் 
"சதுரங்கம் விளையாடுவது எப்படி? "
ரொம்பவும் சுவாராசியமான தகவல்களைக் கொண்டிருக்கிறது. அப்புத்தகத்திலிருந்து,
·
* இந்த சதுரங்க ஆட்டம் அரசகுடும்பத்தினருக்கான ஆட்டம். 
அரண்மனை விளையாட்டு. இதை பொதுமக்கள் ஆடுவதற்கு
 அனுமதி இல்லை என்று அரசு அதிகாரம் 
 ஆணைப்பிறப்பித்திருந்த வரலாறும் உண்டு.
 
· * புராணங்களில் இதிகாசங்களில் கிறித்தவ இசுலாமிய இந்து மதக் 
கதைகளில் ,கடவுள்கள் ஆடிய ஆட்டம் இது. 
அதாவது அவ்வளவு சர்வ வல்லமை மிக்கவர்களின் 
ஆட்டம் சதுரங்கம்.
· 
*இது எங்கிருந்து புறப்பட்டது ? இதிலும் உலக நாகரிகத் தொட்டில்கள் அனைத்தும் இந்த விளையாட்டுக்கு சொந்தம் கொண்டாடுகின்றன.
 
· *கி.மு. 6000 க்கு முன் மொசபடோமியாவில் விளையாடப்பட்டது என்று ஆதாரம் காட்டுகிறார் டாக்டர் ஸ்பீசர்.
 
*· கி.மு. 5550ல் இராக்கின் வடபகுதியில் விளையாடப்பட்டது சதுரங்கம் என இன்னொரு தகவலும் உண்டு.
· *கி.மு. 1200ல் எகிப்து அரசன் ‘அங்க் ஆமன்’ கல்லறையில் சதுரங்க காய்களும் பலகையும் சேர்த்தே புதைக்கப்பட்டிருக்கின்றன. மரணித்த மன்னன் சதுரங்க ஆடுவான் என்ற நம்பிக்கையில்.
·* கி.மு. 2500 ல் சிந்துவெளியில் சதுரங்கம் ஆடினார்கள் என்று சொல்கிறது அகழ்வாராய்ச்சி.
·
* டிராய் போரின்போது ஹெலனை மீட்க கிரேக்கத்தை எதிர்த்த படைவிரர்கள் பத்து ஆண்டுகள் சோர்வடையாமல் இருக்க சதுரங்கம் ஆடி, போர் உணர்வை தக்க வைத்துக்கொண்டிருந்தார்கள் என்பதும் ஒரு தொன்மக்கதை
· 
அதிகாரம் அரசனுக்குரியது , அவனை வழி நட்த்தும் மந்திரிகள் தளபதிகள் என்றிருந்த வரலாற்றில் அரசி எப்போது வருகிறாள்? இங்கிலாந்தின் அரசியல் உலக அரசியலாக மாறுகிறது.
இங்கிலாந்தின் அரசி மேரியின் அதிகாரம் சதுரங்க ஆட்டத்தின் விதிகளை மாற்றியதில் பெரும் பங்காற்றியதாக சொல்கிறார் இப்புத்தக ஆசிரியர். அத்தோடு இத்தாலியின் கேதரினா சபோர்சாவின் அதிகாரமும் ஒரு காரணமாகி அரண்மனை ஆட்ட த்தில் ராணியின் சக்தியை விரிவுப்படுத்தி 
மந்திரிகளை ஓவர்டேக் செய்திருக்கிறது.
(அடடா.. இது கிட்சன் கேபினட் அதிகாரத்தில் இடம்பெற்ற 
வரலாறு. இன்றும் கிட்சன் கேபினெட் சர்வ வல்லமை மிக்கதுதான்!)
 
· இதை எப்படி எல்லாம் விளையாண்டிருக்கிறார்கள் என்று 
இப்புத்தகம் விவரிக்கிறது. அதில் ரொம்பவும் ரசனைக்குரியதும் 
அதிகாரத்தின் உச்சமும் முகலாய அரண்மனையில்
 விளையாண்ட சதுரங்க ஆட்டம்தான். அரண்மனையில் 
தரையே சதுரங்க கட்டமாகி உயிருள்ள மனிதர்கள் 
அந்தந்த அலங்காரத்துடன் கட்டங்களில் நிறுத்தப்படுவார்கள். 
அரசனும் அரசியும் ஆடுவார்களாம். அவர்கள் சொல்கிறபடி 
உயிருள்ள சதுரங்க காயக்ள் நகர்ந்து கொள்ளும். 
அடடா.. அதிகாரத்தின் சாறெடுத்து அருந்திப்பார்த்திருக்கிறார்கள் அரண்மனைவாசிகள். 
அதிகாரத்திற்கு எப்போதுமே உயிருள்ள குடிமக்கள்
 அரசின் விருப்பப்படி நகர வேண்டும் . 
இல்லைஎன்றால் அவுட் தான்! 
இது அரண்மனையை விட்டு இந்த விளையாட்டு 
விடைபெற்ற பிறகும் புதிய மக்களாட்சிக்கும் 
பொருந்துவதாகவே இருக்கிறது பாருங்கள்.
 
· 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்
 வெள்ளையர்கள் ஒரு பக்கமும் இந்திய விடுதலை 
தளபதிகள் ஒருபக்கமுமாக வைக்கப்பட்டு வெள்ளையர் ஆட்சி 
ஆடிக் களித்திருக்கிறது.
 
· கேரளாவின் சதுரங்கம் இன்னொரு காட்சியாக விரிகிறது. 
அதில் ராஜாவாக ஸ்ரீராமன். ராணியாக சீதாப்பிராட்டி, 
யானையாக விநாயகர்,குதிரையாக கல்கி, 
ரதமாக கோபுரம், சிப்பாய்களாக அனுமன் படை..
இந்த ஆட்டத்தில் எதிரணியில் ராஜா இராவணன்.. 
மற்றதெல்லாம் கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள்ளுங்கள்..
இப்படியாக ஒரு சதுரங்க ஆட்ட இராமாயணம்
 ஆடி இருக்கிறார்கள்.
(இது விளையாட்டு என்ற வகையில் எப்போதாவது
 இராவணன் வெற்றி பெற்றால் என்ன செய்திருப்பார்கள்? 
இப்படி எல்லாம் யோசிக்காமல் இருக்க முடியவில்லை!)
 
· பொதுவுடமை தோழர்கள் தங்கள் சதுரங்க ஆட்டத்தில்
 எதிரணியில் முதலாளித்துவத்தை நிறுத்தி அடித்தார்களாம். 
 (இதுவும் நிஜத்தில் அடிக்க முடியாமல் விளையாட்டில் 
விளையாட்டாக அடிக்கும் மன நிறைவை தந்திருக்குமோ!)
 
· ஆனால் பாருங்கள் எப்போதுமே ஆட்டத்தை முதலில்
 ஆரம்பிக்கும் அதிகாரம் வெள்ளைக்காய்களுக்குத்தான்! 
( இதை யாரும் மாற்றவே முடியாதுங்கோ)
 
· இந்த ஆட்டத்தின் ஊடாக காதல் மலர்ந்திருக்கிறது. 
கவிதைகள் மலர்ந்திருக்கின்றன. 
(இது எனக்கு ரொம்பவும் விருப்பமான வரலாறாக இருக்கிறது)
 
· இந்த ஆட்டம் அரண்மனை அதிகாரத்தைக் கட்டமைத்திருப்பதில் பெரும்பங்காற்றி இருக்கிறது. காலம் தோறும் தங்கள் அதிகாரத்தை கூர்மைப்படுத்திக்கொள்ளவும் நிலை நிறுத்திக்கொள்ளவும்
 சிறுசிறு மாற்றங்களுடன் .. தொடர்கிறது சதுரங்க ஆட்டம்.
 
· சதுரங்க ஆட்டம் புத்திசாலிகளுக்கானது என்பதும்
 அதனூடாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கும் கருத்தியலும் 
இப்புத்தகம் பேசாத இன்னொரு வரலாறு.
 
· இப்புத்தகத்தில் சங்க இலக்கிய குறிப்புகள் இல்லை. 
ஆகையினால் தமிழர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது. 
அதற்காக இந்து தமிழ்த்திசையின் பக்கத்திலிருந்து 
உங்களுக்காக (cut & paste !)
இதோ…:
சங்க இலக்கியமான நற்றிணையில் ‘வங்கா வரிப்பாரைச் சிறுபாடு முணையின்...’ என்று ஒரு பாடலடி வருகிறது. இதில் குறிப்பிடப்படுவது பாறையில் வரிக்கோடுகளை வரைந்து விளையாடும் விளையாட்டு என்றும் அதுவே பின்னாளில் ஆடுபுலி ஆட்டமாக மாறியிருக்கலாம் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். அதுபோல கலித்தொகையில் ‘வல்லுப்பலகை எடுத்து நிறுத்தன்ன கல்லாக் குறள!’ என வருகிறது.
அது சூதாட்ட வல்லாட்டப் பலகையைக் குறிப்பிடுவதாக உள்ளது. மேலும், அகநானூற்றில் ‘நரை மூதாளர் அதிர் தலை இறக்கி, கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு’ என, முதியவர்கள் சிலர் பொது இடத்தில் சூதாடுவதைக் குறிப்பிடுகிறது. விளையாடுவதற்காகப் பலகையில் (கல்/மரம்/தரை) வரையப்படும் சதுரமான கட்டங்களைக் ‘கட்டரங்கு’ எனப் பெருங்கதை கூறுகிறது.
வல்லாட்டம் ஆடுவதற்கான வல்லுக்காய்கள், தமிழக அகழாய்வுகளில் கீழடி, ஆதிச்சநல்லூர், போளுவாம்பட்டி, வெம்பக்கோட்டை, சிவகளை, அரிக்கமேடு, மரக்காணம் முதலான இடங்களில் தொடர்ந்து கிடைத்துவருகின்றன. இவை பெரும்பாலும் சுடுமண்ணாலும், தந்தத்தாலும் செய்யப்பட்டவை.
சாமானியர்கள் முதல் செல்வந்தர்கள் வரை அவரவர்க்கு ஏற்றவாறு வல்லுக்காய்களைப் பயன்படுத்தி விளையாடிவந்துள்ளனர். தமிழகத்தில் கிடைத்த வல்லுக்காய்களை ஒத்த வடிவம் கொண்ட காய்கள், சிந்துவெளி அகழாய்வுகளிலும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சிந்துவெளியில் காய்கள் மட்டும் கிடைக்கும் நிலையில், இன்னும் அது தொடர்ச்சியாக வாழும் மரபாகவே இவ்விதமான ஆட்டம் தமிழகத்தில் தொடர்வதைக் கருத வேண்டியுள்ளது.
 
ஆக,
 இப்போது தமிழர் நாகரிகம் இதில் பெருமைப்பட்டுக்கொள்ளும் 
ஒரு கருத்தியல் … தலை நிமிர்ந்து சொல்லிக்கொள்ளலாம்.
 தமிழ் மண்ணில் இந்த விளையாட்டு எப்போதுமே 
அரசர்களுக்கானதாக மட்டும் இருந்திருக்கவில்லை. !
 ஆஹா.. இங்கிருந்து இன்னொரு சதுரங்க அரசியல் 
வரலாற்றை எழுத ஆரம்பிக்கலாம்.! 
அப்படி யாராவது பதிவு போட்டாலும் 
அதற்கு நான் பொறுப்பல்ல! பொறுப்பு துறத்தல்.
 
இப்புத்தக ஆசிரியர் நவராஜ் செல்லையா 
விளையாட்டுகள் உடற்பயிற்சிகள் குறித்து 
பல புத்தகங்கள் எழுதியவர். அவர் புத்தகங்கள் நாட்டுடமையாக்கப்பட்டிருக்கின்றன. 
இலவசமாக பதிவிறக்கம் செய்து வாசிக்கலாம்.
 
புத்தகம் : சதுரங்கம் விளையாடுவது எப்படி?
ஆசிரியர் : டாக்டர் எஸ், நவராஜ் செல்லையா
வெளியீடு : எஸ். எஸ். ப ப்ளிகேஷன் சென்னை.
96 பக்கம், விலை ரூ 35/
 
#சதுரங்கம்
#chess_ history_politics

Friday, July 29, 2022

ராக்கெட் அரசியல்

 

மாதவனிடம் சூர்யா மன்னிப்பு கேட்கும் காட்சி..
மனசில் நிற்கிறது.
மாதவனாக VIKAS ENGINE ISRO SCIENTIST நம்பி நாராயணன்.
சூர்யாவாக இந்தியச் சமூகம்.
ராக்கெட் ரகசியங்கள் இப்போதும் வெளியில் பேசப்படுவதில்லை.
 பேசப்படும் அனைத்தும் இன்னொரு பக்கத்தை வாசிப்பதில்லை.
இருந்தாலும் கூர்ந்து கவனித்தால் 
அண்மைக் காலங்களில் நடந்து முடிந்த சர்வதேச 
அரசியல் நிகழ்வுகளை பார்க்கும் பார்வைக்கு மாறாக
இந்தியக் காவல்துறை, சிபிஐ , ISRO
எல்லாருமே தேசத்துரோகி அளவுக்கு காட்டப்படுகிறார்கள்.!!!
உண்மையில் இது ரொம்பவும் அச்சமூட்டுகிறது.
அதையும்விட இதில் இருக்கும் நுண் அரசியல்
கவனிக்கத்தக்கது. 
 
நம்பி நாராயணன் வழக்கில் யார் குற்றவாளி என்பதும்
அது நடந்தக் காலக்கட்டமும் அவ்வளவு எளிதில்
திரைப்பட காட்சிகளின் ஊடாக மறந்துவிடுகிற மாதிரி
இல்லை!
அப்துல்கலாம் எழுதிய புத்தகங்களில் 
நம்பி நாராயணன் இல்லை.
இது வழக்கம்போல பிரச்சனைகளிலிருந்து
 தப்பித்துக்கொள்ளும் கலாமின் இயல்பாக இருக்கலாம். 
இருக்கட்டும்.
 
VIKAS ENGINE பெயர் VIKRAM SARABAI என்பதை இத்திரைப்படம் மறைக்கவில்லை. அதற்காக நன்றி சொல்ல வேண்டும்.
 
விக்ரம் சாராபாய் திடீர் மரணத்தை
31 டிசம்பர் 1971 பத்திரிகை செய்தி கூறுகிறது. பலர் அதையும்
 விமான விபத்து என்று நம்பினார்கள். அவர் உடல் எவ்விதமான பரிசோதனைக்குட்படுத்தப்படவில்லை .அவர் உடல் 
அவர் பயணித்த அதே விமானத்தில் கொண்டுவரப்பட்ட 
அதிசயத்தை யாருமே கண்டு கொள்ளவில்லை. பிரபல பத்திரிகை
டைம்ஸ் ஆஃப் இந்தியா எழுதிய பிறகும் இதெல்லாம் சாமானியர்களுக்கானதல்ல என்பதாலும் அரசியலுக்கு 
உதவாது என்பதாலும் கைவிடப்பட்டிருக்கின்றன. !
ஒரு சாமானியனாக நாம் கவனிக்க வேண்டியது
 இந்திய பிரதமர் பண்டித் நேருஜியின் 
நம்பிக்கைக்குரிய நெருங்கிய நண்பர்களாக 
இருந்தவர்கள் ஹோமிபாபாவும் விக்ரம் சாராபாயும். 
இருவரும் ராக்கெட் மற்றும் அணு ஆராய்ச்சியுடன் தொடர்புடையவர்கள்.இருவரின் மரணமும் மர்மங்கள் 
நிறைந்தவையாக இருக்கின்றன.
இனி, இந்தப் புள்ளியிலிருந்து நம்பி நாராயணன் வழக்கில்
 நம்பி நாராயணன் நிரபாராதி என்றால்
யார் குற்றவாளி?
அல்லது அந்த சர்வதேச குற்றவாளி கூட்டத்திற்கு 
துணைபோன கறுப்பு ஆடு எங்கே?
 
சரவணா..
இப்படியான கேள்விகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு
நம்பி நாராயணன் ராக்கெட்டை நாமும் ரசிக்கலாம்.
சூர்யாவுடன் சேர்ந்து மன்னிப்பும் கேட்கலாம்.
அதனாலென்ன?
அதிகாரம் எந்த ரூபத்தில் வந்தாலும் 
பாதிக்கப்பட்டவர் பக்கமிருப்பது தான் தார்மீகம்,


 

Sunday, July 17, 2022

பச்சையம் துளிர்க்கும் கார்காலம்

 

 தூறல்

சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறி நின்றுவிட்டது.

மெல்லிய வெளிச்சத்தையும் பிடுங்கித் தின்ற இரவு

தன் பசி அடங்காமல் படுத்திருந்தது.

மழைநேரத்தில் மின்சாரத்தடைக்குப் பழகிய கால்கள்

மெல்ல அறையை விட்டு வெளியில் வருகின்றன.

வேர்களின் தாகத்தைத் தணிக்கும்

இலைகளின் ஈரம்

சொட்டுசொட்டாக வடியும் இரவு

சலனமின்றி தூங்கும் மலை.

கனவுகள்  விழித்திருப்பதோ தூங்குவதோ

பாறைகளைத் தொந்தரவு செய்வதில்லை.

காற்றின் அசைவுகள் கல்மீது படிவதில்லை.

சாரல் அடித்து அடித்து அருவி விழிக்கிறது.

கனவுகள் குடைப்பிடித்து

வெளியில் வருகின்றன.

குடைப்பிடிப்பது யாராக இருந்தாலும்

நனைவது மட்டும் நானாகவே இருக்கிறேன்.

இலைகளின் மழைமொழி  இசையாகி..

என்னை மீட்டிக்கொண்டே இருக்கின்றது

மழைமொழி என்னை எழுதுகிறது.

மழைக்காலம் என்னை வாசிக்கிறது.

 

புயல்

த்த்த்தட தட த்த்த்தட தட

ஸ்ஸ்ஸ்ஸ்ஸோஸ்ஸ்….

டக்க் டக் டக்க் டக்க்

ஸ்ஸ்ஸூ ஸ்ஸ்ஸூஊஊஊஊஊ

ட்டமீற்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஜன்னலை இழுத்து மூடு.

இடி இடிக்குது.

திரைச்சீலையை இழுத்துவிடு.

கர்ப்ப கிரஹத்தில் மின்னல் வெளிச்சம்..

காற்றில் அசையும் தீபத்தின் நாதம்..

தேவி… கருவறை திறக்கிறது.

பரவசமாகி அவரவர் வேண்டுதல்களுடன்

அவள் மடியை நிறைக்கிறார்கள்.

குமரி அவள்.

கடல் அலைகள்  தாலாட்டும் குமரி அவள்.

தொட்டில் கட்டித் தாலாட்ட முடியாமல்

தவிப்பது ஏன்?

பனிக்குடம் உடைந்த ஈரப்பிசுபிசுப்பு தரை எங்கும்.

கர்ப்பஹிரகத்தில் இருளின் வெளிச்சம்.

புயலுக்குப்பின் சலனமின்றி கடல்

அவள் பிரசவ வேதனையை

தனக்குள் வாங்கிக்கொள்கிறது.

அவள் எட்டுக்கைகளாலும் தன் பிள்ளைகளை

தூக்கி எடுத்து தழுவி முத்தமிடுகிறாள்.

கண்ணனைக் கூடையில் சுமந்து கொண்டு

ஆற்றுவெள்ளத்தை யாரோ கடந்து செல்கிறார்கள்.

கடல் அலைகளை

நார்நாராக கிழித்து எடுத்து கூடை செய்து

மின்னலை விரித்து மெத்தையாக போர்த்தி

தன் பிள்ளைகளை மிதக்கவிடுகிறாள்..

சுறா மீன்களும்  கடல்குதிரைகளும்

நட்சத்திரகைகளும் வலம்சங்கு முகங்களும்

கூட்டணி சேர்ந்து கூடையைக் கவுத்துவிடுகின்றன.

உப்பு நீருக்குப் பழகிப்போனவனும்

கடல் அலைகளில் நீந்த தெரிந்தவளும்

தீவுகளைத் தேடி பயணிக்கிறார்கள்.

குமரியின் மூக்கூத்தி வெளிச்சத்தில்

தடுமாறும் மின்னல்

கடலைப் பார்த்தால் அவள் கன்னிமைக்கெடுமென

கட்டுப்பாடுகள்..

அவளுக்கும் கடலுக்குள் நடுவில்

ஆயிரம் கண்டங்கள்

மழைத்துளிகள் மீட்டுவரும்

நினைவுகளின் வாசனை

கடற்கரையில் மோதி  அலைந்து திரிந்து

முகவரியைத் தேடும் அனாதைகளாக

கரை ஒதுங்கி இருக்கின்றன கிளிஞ்சல்கள்

 

வெள்ளம்

மழை பொழிந்த அந்த  நள்ளிரவில் கடலின் சீற்றம்.

அலைகள் பாறைகளின் எல்லைகளைத் தாண்டி அத்துமீறி

ஆவேசம் கொண்டு தழுவுகின்றன.

காலடியிலிருந்த மண்..

குழிப்பறித்து இழுத்துச் செல்லும் வேகம்

என்னால் நிற்கமுடியவில்லை.

மழை வெள்ளத்தில் சிக்குண்டு

அடித்துச் செல்லப்பட்ட

தண்டவாளங்கள் என்னைப் பயமுறுத்துகின்றன.

நீர்வழிப்படூஉம் யானும்..

கடல் அலையும் மழை வெள்ளமும்

கட்டுக்கடந்காக் காமத்துடன்

கட்டிப்பிடித்து முத்தமிடுகின்றன.

கோடைக்காலத்தின் புழுக்கம்

சூடு தணிக்கும் ஆவேசம்

கடற்கரையைக் காணவில்லை.

யாரும் கடலுக்குள் போகவேண்டாம்.

படகுகளுடன்  வலைகளும் பதுங்கிக்கொள்கின்றன.

கடலடியிலிருந்து மீனராசா எட்டிப்பார்க்கிறான்.

ஜீவராசிகளின் கூடல்மொழி ஓசையின்றி எழுத்துகளின்றி

மழை நீரில் மிதந்து வருகிறது.

அதிலிருந்து வடியும் ஒவ்வொரு துளியாக கையிலெடுத்து

பசலைத் தணிக்கிறேன்.

பாறைகளுக்கு இடையில் கனன்று கொண்டிருந்த

அடுப்பின் சூடு ஒருவழியாக தணிகிறது.

அடுப்பிலிருந்து பொங்கி வழிந்தப் பால்

பாத்திரம் தாண்டி விளிம்புகள் கடந்து

வழிந்து கரைந்து மழைவெள்ளத்தில் மிதந்து

கடல் நீரில் நுரையாகிப் போனதறியாமல்

பாத்திரத்தை மூடிப் பத்திரப்படுத்துகிறேன்.

கடல் அலையில் பால் நுரைகள்

தீவுகளில் மோதும் பால்திட்டுகள்..

மீனராசா பாலருந்தி பால் அருந்தி

மயக்கம் தெளிகிறான்.

மீண்டும் மீண்டும்

பால்சொரியும் முலைகள் தேடி அலைகிறான்.

கடலடியில் அவன் அந்தப்புரத்து மச்சக்கன்னிகள்

அவன் பசியாற்றமுடியாமல் தவிக்கிறார்கள்.

பசியின் வேட்கை..

அவனைத் தின்று துப்பிய சக்கையாக

படுக்கையில் கிடக்கிறான்.

மச்சக்கன்னிகள் தீவுகளிலிருந்து கொண்டுவந்த பச்சிலைச்சாறுகள்

அவன் உதட்டோரத்தில் வழிந்து

கடல்மேல் விழுந்த கரும்பாறைகளாக மிதக்கின்றன.

பாய்மரத்தின் உச்சியில் கட்டியிருந்த திசைக்காட்டி

தலைகீழாக சுழல்கிறது.

திசையறியமுடியாமல் படகுகள்

கடலுக்கு நடுவிலேயே சுற்றிக்கொண்டு இருப்பதை

கடல்குதிரைகள் வேடிக்கைப் பார்க்கின்றன.

துருவ நட்சத்திரம் கதவடைத்துக் கொள்கிறது.

கார்மேக கூட்டத்தின் படையெடுப்புக்கு அஞ்சி

பிற நட்சத்திரங்களும் இடம் மாற்றிக்கொண்டு

வேறொரு பூமிக்குப் போய்விடுகின்றன.

மச்சக்கன்னிகள் மீனராசாவை கைகளில் ஏந்தி

கடற்கரைக்கு வருகிறார்கள்.

நட்சத்திரங்களில்லாத ஆகாயம்

நிலவில்லாத மேகம்

இருளைத் தின்று துப்பிய கடல்வெளி

மழை நீரில் மிதந்துவரும் காலம்

கடல் அலையும் மழை வெள்ளமும்

ஒன்றை ஒன்று  கூடி புணர்ந்து

ஒன்றை ஒன்று எதிர்த்துப் போராடி

ஒன்றில் ஒன்றாக முடியாமல்

வெள்ளக்காடு..

மழை வெள்ளத்தில் மீனராசா

கடல் அலையில் அவள்..

இடம் மாறிப்போன படகுகள்

மீண்டும்

தீவுகளை  வந்தடையுமோ?

இடி மின்னலுடன் மழை..

சலனமின்றி படுத்திருக்கும் அவன்..

அலைகளில் நர்த்தனமிடும் ஆதிசேஷன்..

புல்லாங்குழலோசையில் மிதக்கும் பிருந்தாவனம்.

அவள் போர்த்தியிருக்கும் போர்வையை

மெல்ல விலக்கி இருளின் வெளிச்சத்தில்

மின்னும் மீன்செதில் மேனியை

அதிசயமாகப் பார்க்கிறாள்.

தூரத்தில் கடல் அலைகளில் மீதேறி

கை அசைத்து செல்கிறான் மீனராசா.

கடல் நீர் வற்றுவதில்லை.

அடுத்த மழைக்கும் அவன் வருவான்.

ஆனால், அந்த மச்சக்கன்னிகள் வரவிடுவார்களா?

கடலைக் கடைந்தவன் விஷமேறிச்  செத்துப்போவதற்குள்

அமுதருந்த  வந்துதானே ஆகவேண்டும்!

கடலில் ஒரு சின்னப்புள்ளியாக

அவன் மறையும்வரை காத்திருக்கிறேன்..

போர்வையை விலக்கி சன்னலை அடைக்க

பிரயத்தனப்படுகிறேன்.

படுக்கையிலிருந்து எழும்போதுதான்

கவனிக்கிறேன்.

என் கால்கள் இருந்த இடத்தில்

மீனராசாவின் வால் நீண்டு நெளிகிறது.

மழை வெள்ளத்தில் நீந்தி நடனமாடுவேனா..

முலைகள் தேடி அவன் வருவானே..

எதைக்கொண்டு அவன் விஷம் தணிப்பேன்!

மீனராசா… தேடித் தேடி அலைகிறான்,

துடிக்கிறான்.. தவிக்கிறான்..

கடலில் நீந்திக்கொண்டிருக்கும் என்னைப் பார்த்து

மச்சக்கன்னிகள் சிரிக்கிறார்கள்.

 

இடி மின்னல்

அர்ஜூனா அர்ஜூனா..

மின்னல் பாய்கிறதே..

கருவறை கருகிய வாசனை.

உடைந்தப் படகுகளின் துடுப்புகள்

கடலில் மிதக்கின்றன.

குமரி அவள்.

சுமப்பதை பிரசவிக்க முடியாமல்

கடலுக்குள் விழுந்து தற்கொலை.

மடி நிறைத்த அலைகள்

தொட்டில் கட்டித் தாலாட்ட

முடியாமல் கதறி அழும்

மழைக்காலம்.

அவள் மொழியை ரகசியமாக

மேகக்கூட்டத்தில்

பத்திரப்படுத்துகிறது.

( நன்றி : கதவு இதழ் 38 ஜூலை 22)

Monday, July 11, 2022

பெருந்திணையாகும் ஐந்திணை


 முதற்பொருளான நிலமும் 

நிலத்தின் கருப்பொருளும்

சிதைக்கப்பட்டால்

ஐந்திணை பெருந்திணை ஆகிவிடும்.

பெருந்திணை சமூகத்தில்

எந்த நியாயங்களையும்

எதிர்பார்க்க முடியாது.


என் உரை லிங்க:


https://youtu.be/4FWq3ihpGpY