Thursday, July 18, 2013

தமிழ்த் தாயும் தமிழ்ப் பள்ளிக்கூடங்களும்





1) இது வேண்டுகோள்
தமிழ் மொழி இனி தரணி ஆளும்
தேமதுர தமிழோசை தெருவெல்லாம் ஒலிக்கும்
ஆட்சி மொழி, அலுவலக மொழி, கல்வி மொழி, வழக்குமன்ற மொழி, கோவில்கள் எங்கும் வழிபாட்டு மொழி என்று எங்கும் தமிழ், எதிலும் தமிழ்
நான் பகற்கனவு கண்டு உளறிக்கொண்டிருப்பதாக எவரும் எண்ண வேண்டாம்.
தமிழ்த்தாய்க்கு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் சிலை வைக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துவிட்டதே.. இனி என்ன வேண்டும்? அமெரிக்க வல்லரசின் சுதந்திரதேவி சிலையைப் போல தமிழ்த்தாய்க்கும் சிலை என்றால், அதன் அருமை பெருமைகளை சொல்லவும் வேண்டுமோ? சுதந்திரதேவியின் சிலை இருக்கும் அமெரிக்காவில் தனி மனித சுதந்திரம் இருக்கிறதா என்றெல்லாம் நாம் அதிகமாக யோசிக்க கூடாது. ஆனால் சுதந்திர தேவியின் சிலையைத் தன்வசம் மட்டுமே வைத்திருக்கும் காரணத்தாலோ என்னவவோ சுதந்திரத்தை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து விட்ட நினைப்பில் அமெரிக்கா அடுத்த நாட்டவர் சுதந்திரத்தை எப்போதும் அனுமதிப்பதில்லை.
.
இதெல்லாம் நமக்குத் தேவையில்லாத செய்திகள். நம் மதுரையில் தமிழ்த்தாய்க்கு சிலை வைத்தப் பின் தமிழ் மொழிக்கு மீண்டும் பொற்காலம் பிறந்துவிடும். இதைப் பற்றி எவரும் சந்தேகம் கொள்ள வேண்டாம். தேவையில்லாமல் பிற மாநிலத்தவர் சொல்லும் எதிர்வினைகளைக் கண்டு அச்சப்படவோ மனக்குழப்பமடையவோ வேண்டவே வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
செந்தமிழ் மாநாடு நடத்துவது, தமிழ்த்தாய்க்கு சிலை வைப்பது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது இதெல்லாம் தமிழனின் சிறப்பம்சங்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் மற்றவர்களுக்குத் தெரிவதில்லையே! தமிழ்ச் சமூகத்திற்கு பிடித்திருக்கும் மனநோய் என்று மலையாளத் தாயும் கன்னடத் தாயும் தெலுங்குத் தாயும் ஒரியா தாயும் வங்காளி தாயும் அசாமி தாயும் மராட்டி தாயும் காஷ்மீரி தாயும் ஏன் இந்தி தாயும் கூட நம் தமிழ்த் தாயைப் பார்த்து கிண்டல் செய்கிறார்கள். அதைக் கண்டு தமிழர் எவரும் வருத்தப்படவோ அல்லது அவர்களுடன் வாக்குவாதம் செய்யவோ வேண்டாம் என்று
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.!
(2) யார் தமிழைக் காப்பாற்றுவது?
2013 - 14 கல்வியாண்டில் தமிழக அரசு மாவட்டந்தோறும் 100 பள்ளிகள் வீதம் தமிழகம் எங்கும் 3200 அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் வழி கல்வி கற்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு வந்தப் பின் "போச்சு, போச்சு எல்லாம் போச்சு" என்ற கூப்பாடு கொஞ்சம் உரக்க ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. என்னவொ திடீரென தமிழத்தில் அனைவருக்கும் தாய்மொழியாம் தமிழ்மீது அளப்பரிய பாசமும் பற்றுதலும் வந்துவிட்டதாக மாயக்கண்ணாடியில் ஒரு தோற்றம். என்னவோ இந்த அறிவிப்பு வந்ததால் மட்டுமே தமிழ்மொழிக்கு ஆபத்து வந்துவிட்ட மாதிரி ஒரு எண்ணத்தை அனைத்து ஊடகங்களும் தமிழ் ஆர்வலர்களும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க அவர்களின் ஆர்வமும் தமிழ்ப் பற்றும்.!
உண்மையாகவே அவர்கள் அனைவரின் தமிழ்ப் பற்றின் மீது நமக்கு நம்பிக்கையும் அவர்களால் நிச்சயமாக தமிழைக் காப்பாற்ற முடியும் என்ற அசைக்க முடியாத எண்ணமும் இருப்பதால் நாம் அவர்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோளை வைக்கின்றோம். இதுவரை அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியைக் கற்றுக்கொண்டிருந்த சுப்பன் வீட்டுப் பொண்ணும் குப்பன் வீட்டு மகனும் கொஞ்ச நாளைக்கு ஆங்கிலத்தில் கல்வி கற்றுவிட்டுப் போகட்டுமே!
தமிழ் மொழியை வாழ வைத்துக் கொண்டிருந்தது இதுவரை என்ன இந்த சுப்பனும் குப்பனுமா? இவர்கள் வாரிசு தமிழ் படிக்காவிட்டால் என்ன குடிமுழுகிப் போய்விடும்? விட்டுத் தள்ளுங்கள். தமிழ் மொழியின் காவலர்கள் நீங்கள், முத்தமிழ் அறிஞர்கள் நீங்கள்... உங்கள் வீட்டுப் பிள்ளைகளும் உங்கள் பேரன் பேத்திகளும் தமிழ் படித்து தமிழ் வழியில் கல்வி கற்று நம் தமிழைக் காப்பாற்றட்டுமே! குப்பனும் சுப்பனும் அவர்கள் பிள்ளைகளும் காப்பாற்ற முடியும் என்றால் வாய்ப்பும் வசதியும் படைத்த உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு தமிழைக் காப்பாற்றுவதும் வளர்ப்பதும் மிகவும் எளிதல்லவா? எனவே இனி தமிழ்த்தாயைக் காப்பாற்றும் முழுப்பொறுப்பும் உங்களுக்கு மட்டுமே இருக்கிறது. உங்கள் உரிமையை விட்டுக் கொடுக்காமல் தமிழை எப்படியும் காப்பாற்றிவிடுங்கள்! தமிழ்த்தாய் உங்கள் அனைவருக்கும் சங்கத்தமிழை வரமாகக் கொடுத்து தன் தாம்பூல மகிமையை நிலை நாட்டிக் கொள்ளட்டும்!!
(3) இந்தியாவுக்கு எச்சரிக்கை
ஆங்கிலம் வழிக் கல்வி கற்கும் முறையை அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்துவது இருக்கட்டும். அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கும் அழகைப் பார்த்து இங்கிலாந்து அரசு கடுங்கோபம் கொண்டு காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இந்தியப் பேரரசை நீக்கிவிடும் அபாயம் ஏற்படலாம். எச்சரிக்கை, எச்சரிக்கை. இது நம் சார்பாக இந்திய அரசுக்கு ஓர் எச்சரிக்கை.
இப்படி கூட இந்திய அரசை தமிழக அரசு பழி தீர்த்துக் கொண்டதாக தமிழினக் காவலர்கள் முகநூல்களில் நிறைய எழுதி தீர்க்கலாம்.
(4) கலக்டரும் கார்ப்பரேஷன் பள்ளிகளும்
ஆர். ஆனந்தக்குமார், ஈரோடு மாவட்ட ஆட்சியாளர். தன் மகள் கோபிகாவை இரண்டாம் வகுப்பில் சேர்க்க தனியார் பள்ளியை நாடவில்லை. அவர் மனைவி ஶ்ரீவித்யா தன் மகளுடன் பஞ்சாயத்து யூனியன் நடத்தும் ஆரம்ப பள்ளிக்கூடத்தின் வாசலில் மற்ற பிள்ளைகளின் பெற்றோர்களுடன் அட்மிஷனுக்காக நிற்கிறார். தலைமை ஆசிரியராக இருந்த ராணி அவர்கள் அவர்கள் ஏதோ பள்ளிக்கூடத்தைச் சோதனை செய்ய வந்திருப்பதாகக் கூட பயந்துவிட்டதாக செய்தி. ஆனால் கோபிகா தமிழ்வழி அரசுப் பள்ளியில் சேர்ந்துவிட்டார். அச்செய்தி பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் எங்கும் காட்டப்பட்டது. ஆஹா... அவருடையை செயல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் ஒரு புரட்சி மலர்ந்துவிட்டது என்று எங்களைப் போன்ற உலகம் தெரியாத கிறுக்குகள் எண்ணிக் கொண்டிருந்தோம். மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் கூட அவருடைய செயல் ஒரு தூசி துரும்பையும் அசைக்கவில்லை. (பாவம், கலக்டர் சார், இப்படியும் ஒரு ஆள் கலக்டரா வந்திருக்காரே என்று அதிகாரிகளும் எடுபிடிகளும் அவரை ஒரு அதிசயமாக பார்த்திருப்பார்களோ என்னவோ!)
தமிழ்நாட்டின் மாவட்ட ஆட்சியாளர் ஓர் உதாரணமாக இருப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவரும் அவர் செயலும் ஒரு விதிவிலக்காக மட்டுமே இருந்தது. ஒரே ஒரு சின்ன மாற்றம் மட்டும் ஏற்பட்டது. அதுவும் அரசாங்கமோ அரசு நிர்வாகமோ பெருமைப் பட்டுக்கொள்ளும் காரியமல்ல. அதாவது கலக்டர் மகள் படிக்க வந்தப் பின் அந்த வீரப்பன்சத்திரம் பஞ்சாயத்து உடனடியாக அப்பள்ளி கூடத்தை வந்து பார்வையிட்டு தேவையான வசதிகள் அனைத்தையும் அவசரம் அவசரமாக செய்து கொடுத்தார்களாம்!
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் எவருக்கும் அவர்கள் சொல்லிக்கொடுக்கும் திறமையின் மீது நம்பிக்கை இருக்கிறதா? அவர்களில் எத்தனைப் பேர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் கல்வி கற்க அனுப்புகிறார்கள்? சந்திரசேகரன் என்ற சமூக ஆர்வலர் இது குறித்த ஒரு கள ஆய்வை புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டிருக்கிறார். அக்டோபர் 2011ல் வெளிவந்திருக்கும் அவருடைய கள ஆய்வு முன்வைக்கும் சில அதிர்ச்சி மிக்க உண்மைகள்:
ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலை அரசுப் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களின் பிள்ளைகளில் 27% அரசுப் பள்ளிகளில் கல்வி கற்கிறார்கள், மீதி 73% தனியார்ப் பள்ளிகளுக்கு தங்கள் குழுந்தைகளை அனுப்புகிறார்கள். இதுவும் உயர்நிலைப் பள்ளி, மற்றும் மேல் உயர்நிலைப் பள்ளி என்று மேல் வகுப்புகளுக்குப் போகும் போது வெறும் 13% பிள்ளைகள் தான் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். மீதி 87% தனியார் பள்ளிகளில் (அதாவது ஆங்கில வழிக் கல்வி நிறுவனங்கள்) சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
என்ன வாத்தியார்களை மட்டும் குறை சொல்லிக்கொண்டிருக்கின்றீர்களே என்று சிலர் கேள்வியில் இருக்கும் நியாயத்தை நாம் புறந்தள்ளிவிட முடியாது. ஏனேனில் இன்றைக்குத் தமிழகத்தில் இருக்கும் அரசியல் தலைவர்கள், தமிழ் காப்போம் என்று முழங்கும் தமிழ் காவலர்கள், நவீன இலக்கியத்தின் பிதாமகன்கள், பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி ஜாம்பவான்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேல்சபை, கீழ் சபை எல்லா சபைகளிலும் முன்வாசல் வழியாகவும் பின்வாசல் வழியாகவும் வந்து உட்கார்ந்திருக்கும் மதிப்புக்குரியவர்கள், தமிழனத்தின் தலைவர் தான் தான் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கும் பெருந்தலைமைப் பீடங்கள்.. இவர்களிடமெல்லாம் வாத்தியார்களிடம் எடுத்த மாதிரி ஒரு கள ஆய்வு செய்தால்.. என்ன மாதிரி முடிவுகள் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்கவும்.
இதை எழுதும் போது அம்முடிவுகள் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்த்தே ஓர் அச்சம் வருகிறது. வாசிப்பவர்களுக்கும் நிச்சயம் ரொம்பவே பயம் கலந்த ஓர் உணர்வு வந்து தொண்டைக்குழியில் அடைக்கும். எனக்குப் புரிகிறது. இந்த ஒரு புள்ளியில் மட்டும் அனைத்துக் கட்சிகளும் தலைவர்களும் மாவட்ட, வட்ட பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட அனைவரும் ஒன்று சேர்ந்து, தயவு செய்து அம்மாதிரியான கள ஆய்வு செய்ய வேண்டும் என்ற முயற்சியில் எவரும் ஈடுபட வேண்டாம், அது தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் எவ்விதத்திலும் நலம் தராது என்று ஓரு கூட்டறிக்கை விடுவார்கள்.! அப்படி வெளிவரும் கூட்டறிக்கைக்கு இருக்கும் வானாளவிய அதிகாரத்தைப் புரிந்து கொண்டு தொலைக்காட்சியில் மதுரகீதம் பார்த்துக்கொண்டே பொழுதைப் போக்கிவிடுவது பொதுஜனங்களுக்கு நல்லது.
5) கல்வித் தரமும் ஆசிரியர்களும்
கல்வித்தரத்திற்கு ஆசிரியர்கள் பொறுப்பா? அரசின் கல்விக்கொள்கை பொறுப்பா? இல்லை இது மாணவர்கள் சம்பந்தப்பட்டது மட்டும்தானா? இக்கேள்விகள் தனித்தனியானவை அல்ல. ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை.
தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவு 96%. இது பிற மாநிலங்களை ஒப்பிடும் போது மிகவும் பாராட்டுதலுக்குரியதாக இருக்கிறது. ஆனால் அதே அந்தப் பள்ளிகளில் மாணவர்களின் தரவரிசையை சோதித்துப் பார்த்தால் 35% மாணவர்கள் கூட தேர்ச்சி பெறாத நிலை இருப்பதை 2011ல் நடந்த ஓரு கள ஆய்வு பதிவு செய்திருக்கிறது. (ASER 2011)
ASER2011
தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் 26000 மாணவர்களிடம் நடத்திய கல்வித்தரம் குறித்த சோதனையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 32% மாணவர்கள் மட்டும்தான் மிகவும் எளிதான தமிழ் மொழிக் கதையை சரளமாக வாசித்தார்கள். மீதி 68% விழுக்காடு மாணவர்களால் வாசிக்க முடியவில்லை. நான்காம் வகுப்பு மாணவர்களில் 40.6% விழுக்காடு மாணவர்களுக்கு இரண்டு இலக்கு எண்ணில் கழித்தல் கணக்குப் போடத் தெரிந்தது. அதாவது 60% மாணவர்களுக்கு அந்தக் கணக்கு தெரியவில்லை. இது யாருடைய குற்றம்?
தவறாமல் பள்ளிக்கு வரும் மாணவனால் வாசிக்கவும் கணக்குப் போடவும் தெரியவில்லை என்றால் அதற்கு பொறுப்பு ஆசிரியர்களும் தமிழக அரசும் தான். இந்த உண்மை நிலவரத்தை எப்போதுமே தமிழக அரசும் அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளவோ அதற்கு தீர்வு காண வேண்டும் என்றோ எப்போதுமே முயற்சி எடுத்ததாகத் தெரியவில்லை. (அவர்கள் யார் வீட்டுப் பிள்ளைகளும் இந்தப் பள்ளி கூடங்களில் படிக்கவில்லை என்பதைத் தவிர வேறு எந்தக் காரணம் இருக்க முடியும்?)

6) அம்ச்சி மும்பை வாழ்க
தமிழக அரசின் மொழிக்கொள்கை என்ன? வெண்டைக்காய் மாதிரி இருக்கிறது.
தமிழ்மொழி அல்லது தாய்மொழி என்று புரிந்து கொள்கிற வகையில் தமிழ்மொழி/தாய்மொழி என்று அனைத்து அரசாணைகளிலும் எழுதப்பட்டிருக்கிறது.
இருமொழிக் கொள்கை தான் எங்கள் மொழிக் கொள்கை என்று திராவிடக் கட்சிகள் எப்போதும் சொல்லிக் கொள்கின்றன.
இந்தி பேசாத மாநில மக்கள் இந்தியை ஏற்றுக்கொள்ளும் வரை அம்மாநிலங்களில் ஆங்கிலமே நீடிக்கும் என்கிற நேருவின் உறுதிமொழியை காங்கிரசுக் காரர்களை விட திராவிடக் அரசியல் கட்சிக்காரர்கள் தான் அடிக்கடி முழங்கி கொண்டிருப்பார்கள்.
நேருவிடம் "நீங்கள் எப்படி இந்த உறுதிமொழியைக் கொடுக்கலாம்?" என்று வடமாநிலத்தில் உள்ள பல்கலை கழக துணைவேந்தர் ஒருவர் மடல் எழுதியபோது நேரு சொன்ன பதில்:
"ஒரு நாளில் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு அவ்விடத்தில் இந்தியைக் கொண்டு வந்துவிட முடியும். ஆங்கிலமில்லாமல் அந்த இடத்தில் அவரவர் தாய்மொழி அமர்ந்துவிட்டால் எந்தக் காலத்திலும் அந்த இடத்தைக் கைப்பற்றி இந்தியை அவ்விடத்தில் பொருத்த முடியாது" என்பதுதான். (ஆதாரம்: தென்மொழி ஏப் 2013 பக் 3)
மராத்தி மாநில மொழிக்கொள்கை ரொம்பவும் வெளிப்படையானதாகவும் எல்லோருக்கும் புரிகிற மாதிரியும் இருக்கிறது. மராத்தி மொழித்தாய்க்கு சிலைகள் வைக்கும் பக்தி எதுவும் இல்லாதவர்கள் தான் மராத்தியர்கள். ஆனால் குஜராத்தி சிற்பான்மையினர் நடத்தும் ஆங்கில வழிக் கல்வி நிறுவனத்திற்கும் மராத்திய அரசுக்கும் நடந்த மொழிக்கொள்கை குறித்த வழக்கில் மகாராஷ்டிர மாநில உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு மிகவும் முக்கியமானது. (பார்க்க: usha mehta vs maharashtra state govt court case)
மகாராஷ்டிர அரசு தங்கள் மொழியான மராத்தி மொழியை கட்டாயப் பாடமாக எட்டாவது வகுப்பு வரை அறிமுகப்படுத்தியது. அச்சூழலில் சிறுபான்மையினராக இருக்கும் அயல்மாநிலத்தவர் நடத்தும் பள்ளிக்கூடங்களில் (பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்வி நிலையங்கள் தான்) அவர்களின் தாய்மொழி, அதன் பின் ஆங்கிலம், அவர்கள் இந்திய தேசிய மொழியாக நினைக்கும் இந்தி என்று மூன்று மொழிகளுடன் மராத்தி மொழியையும் நான்காவது மொழியாகக் கற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் இது இந்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கும் தனி மனித உரிமை, மொழிக்கொள்கைகளுக்கு எதிரானது என்றும் குஜராத்தி கல்வி நிறுவனம் வழக்கை முன்வைத்தது.
"அதாவது எந்த மொழி வழிக் கல்வி கற்க வேண்டும் என்று தேர்வு செய்யும் வாய்ப்பு ஒவ்வொரு குழந்தைக்கும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் எந்த மொழி வழி தன் குழந்தை கல்வி கற்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்யும் உரிமை குழந்தையின் பெற்றோர்களுக்கு மட்டுமே உரியது. (It is the choice of the parents to select the language for the child) மராத்தி மொழி கட்டாயப்பாடம் ஆக்கப்படுவதன் மூலம். இக்கொள்கை அர்த்தம் இழந்து விடுகிறது” என்று வாதிட்டார்கள் குஜராத்தி கல்வி நிறுவனத்தார். ஆனால், உயர்நீதி மன்றம் மிகவும் தெளிவாக மராத்திய மாநிலத்தில் வாழ்ந்து கொண்டே அந்த மாநிலத்தின் அரசு மொழியாகவும் மக்கள் மொழியாகவும் இருக்கும் மராத்தி மொழியைத் தங்கள் மாணவர்களுக்கு கற்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்வதைக் கண்டித்ததுடன் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் முன்வைக்கும் சட்ட ரீதியான காரணங்களையும் உடைத்தது.
7) வரப்போகும் உச்சநீதிமன்ற தீர்ப்பு:
கர்நாடக அரசு கன்னட மொழி தான் தொடக்கப்பள்ளிகளில் பாடமொழியாக இருக்க வேண்டும் என்று பிறப்பித்த ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி பி.சதாசிவம், ரஞ்சன்கோகாய் ஆகியோர் மிகவும் முக்கியமான இந்தப் பிரச்சனை கர்நாடக மாநிலத்திற்கான தனிப்பட்ட பிரச்ச்னை மட்டுமல்ல, பல்வேறு தேசிய இனங்களையும் மொழிகளையும் கொண்ட ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களின் பிரச்சனை என்பதைக் கருத்தில் கொண்டு ஒரு வழிகாட்டுதலான தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் 5 பேர்கள் கொண்ட ஒரு குழுவை (பெஞ்ச்) அமைத்திருக்கிறார்கள். இக்குழு ஒரு மாணவன் எந்த மொழியைப் படிக்க வேண்டும் என்று யார் தீர்மானிப்பது? தொடக்க கல்வியில் என்ன பயிற்று மொழி என்பதை அந்த மாணவனோ அவன் பெற்றோரோ தீர்மானிக்க உரிமை உண்டா? தாய்மொழியைத் தான் எடுத்துப் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியுமா? அப்படி கட்டாயப்படுத்துவது அரசியல் சட்ட விதி மீறலா? தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானதா? என்று பல கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வகையிலிருக்கும் தீர்ப்பை எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வரும் போகும். விதி முறை மீறல்கள் நமக்குப் புதிதல்ல என்கிறீர்களா? அதுவும் சரிதான். அதிலும் கர்நாடக மாநிலத்தைப் பொருத்தவரை ரொம்பவும் சரிதான்.


குறிப்புகள்: www.indiankanoon.org & ASER 2011
-

Tuesday, July 16, 2013

இளவரசன் சவ ஊர்வலத்தில் உயிர்த்தெழுந்த சிலக் கேள்விகள்







இளவரசன் : தமிழ் சாதியின் அடையாளம்
அவன் மறைவு தற்கொலையா?
கொலை செய்யப்பட்டானா/
எப்படி இருந்தாலும் அவன் முடிவுக்கு அவன் மட்டும்
பொறுப்பல்ல. ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தின் முகத்தில்
காறித்துப்பிவிட்டு அவன் மறைந்திருக்கிறான்.

காதலைக் கொண்டாடிய தமிழ்ச் சமூகத்தில்
நெய்தல் நிலத்துப் பெண்ணை மருத நிலத்துக்காரன்
களவு மணம் செய்து காத்திருக்க வைத்ததை
பாடமாகப் படித்துக் கொண்டிருக்கும் இலக்கிய மேடையை
தன் புழுதிக்காலால் உதைத்து தள்ளி இருக்கிறான்.

காதல் தெய்வீகம்
காதல் ஒரு  முறைத்தான் வரும்
காதல் இல்லை என்றால் சாதல்
அவன் வீட்டு இலவச தொலைக்காட்சி நித்தமும் காட்டிய
காதல் ராஜாங்கத்தின் இளவரசனாக தன்னைக் கற்பனை
செய்து கொண்டதன் வீபரீதம்...
அவன்.

அரசியல் தலைவர்கள் வீட்டில் காதல் திருமணமும் சாதி மறுப்புத் திருமணமும் அவர்களைப் புரட்சிக்காரர்களாக சமூக சீர்திருத்தவாதிகளாகக்காட்டும் அடையாளங்கள்.
சாதி ஓட்டுகளை வாங்கும் சம்பந்தி முறை உறவுகள்.
ஆனால் அதையே இளவரசன்கள் செய்தால் ...
ரயில் தண்டாவளங்களில் அவர்களின் சீர்திருத்தம் தூக்கி எறியப்படும்.

இளவரசனின் முடிவு காதலர்களின் தற்கொலை முடிவாக மட்டுமே
அவன் எழுதிய / எழுதாதக் கடிதங்களைக் கொண்டு
நாளைக்கு ஒரு திரைப்படமே உருவாகலாம்.
அத்திரைப்படத்தை தமிழ்ச் சமூகமே கொண்டாடலாம்.
இளவரசன் திவ்யா வேடங்களில் நடித்தவர்களுக்கு
தேசிய விருதுகள் கூட வழங்கப்படலாம்.
எதுவும் நடக்கலாம்.


திராவிட அரசியல் சூத்திர வயல்களுக்கு நன்றாகவே தண்ணீர்ப் பாய்த்து
வளர்த்தது என்பது உண்மை. அப்படி அவர்கள் தண்ணீர்ப் பாய்த்தப்போது வயலோரங்களில் வாய்க்கால் கரைகளில் வரப்புகளில் இருந்த தலித்துகளும் பயனடைந்தார்கள். அது, அது மட்டும் தான் சூத்திர சாதிக்கு கண்களையும்
கருத்தையும் உறுத்தும் காட்சியாக இருக்கிறது. வெட்கம் கெட்டு தங்கள்
பெண்களைக் கேவலப்படுத்தினாலும் பரவாயில்லை, இளவரசனளிடம்
தங்கள் சாதி அதிகாரத்தைக் காட்டும் ரத்த வெறியுடன் அலைகிறார்கள்.

ஒருபக்கம் மது ஒழிப்பு என்று மேடைகளில் முழங்கும் இவர்கள்
இவர்களின் தொண்டரடிகள் மதுவில் மிதந்து மரக்காணத்தில் வெறியாட்டம்
ஆடியதை ரசிக்கிறார்கள். அவர்களைச் சார்ந்தவர்கள் சிலர்,
"ஒரு பாட்டாளி இன்னொரு பாட்டாளியைக் கொல்ல நினைக்கலாமா?
ஒரு கை இன்னொரு கையை வெட்டலாமா? ஒரு கால் இன்னொரு காலை
உதைக்கலாமா? " என்று மார்க்சியம் பேசுகிறார்கள்.
கொள்கை ரீதியாக அவர்கள் பேசுவது நடைமுறையில் அவர்களே தலித்துகளுக்குக் கற்றுக்கொடுத்த பாடத்திலிருந்து ரொம்பவும் வித்தியாசமாக
இருக்கிறது.


2500 பேர் சற்றொப்ப 20 கீமீ தூரத்திலிருந்து 150 லிட்டர் பெட்ரோலும் 200லிட்டர் மண்னெண்ணெயும் எடுத்துக்கொண்டு சிறியதும் பெரியதுமான வாகனங்களில் பயணிக்கிறார்கள். அதைக் காவல்துறைக் கண்டு பிடிக்கவே முடியவில்லையாம்! எப்படி இருக்கிறது நாட்டின் சட்டம் ஒழுங்கு மக்கள் பாதுகாப்பு? காவல்துறையும் நீதிமன்றமும் யாருக்காக ?
யாருடைய பாதுகாப்புக்காக?
குஜராத்தில் ஒரு மோதி தான். தமிழ்நாட்டிலோ ஆயிரக்கணக்கான மோதிகள்.
வெவ்வேறு பெயர்களில். வெவ்வேறு முகமூடிகளுடன்.



ஈழத் தமிழனுக்காக உருகி உருகி போராடும் வீரத்தமிழன் ஒருவனும்
இளவரசனுக்காக போராட வரப்போவதில்லை. மாணவர்கள் போராட்டங்களோ இது குறித்த விவாதங்களோ கல்லூரிகளில் இல்லை.
சாதியத்தின் பெயரால் இளவரசன்களை வாழ அனுமதிக்காத தமிழ்ச்சமூகத்தில் இளவரசனின் இன அடையாளம் தமிழன் என்பதல்ல, தமிழ்த்தேசியத்தில் அவனுக்கான இடம் இட ஒதுக்கீடாக கூட ஒதுக்கப்படவில்லை என்ற யதார்த்தத்தை இளவரசன்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள்,
இனி தமிழ்த்தேசிய அமிர்தம் கூட நஞ்சாகிப்போனது என்பதை அறிந்துக்
கொண்டார்கள். அமுதமே நஞ்சானால், அவர்கள் இந்தியனாக இருந்தால் என்ன? தமிழனாக இருந்தால் என்ன? தமிழனின் அடையாளம் சாதி
என்பதற்கு இளவரசன்களே சாட்சி.


ஒரு பெண் யாரைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும்/
யாரைக் காதலிக்க வேண்டும்?
யாருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்?
யாருடைய பிள்ளையைக் கருவில் சுமக்க வேண்டும்?
யாருடன் களவு மணம் செய்து கொள்ள வேண்டும்?
யாருடன் உடன்போக்கு செய்ய வேண்டும்?
இதை எல்லாம் தீர்மானிக்கும் அதிகாரம் அந்தக் குறிப்பிட்ட
பெண்ணுக்கு மட்டுமே உண்டு. அவளுடைய அதிகாரத்தில்
தலையிட அவள் பெற்றோர்களுக்கே உரிமையில்லை. தங்கள் அனுபவ
அறிவைக் கொண்டு பெற்றோர்கள் அவர்களுக்கு அறிவுரை சொல்லலாமே தவிர கட்டாயப்படுத்தக் கூடாது, முடியாது. அப்படி இருக்க தங்கள் சாதிப்
பெண்களின் காதலுக்கும் கல்யாணத்துக்கும் ஓடீப்போரதுக்கும் பஞ்சாயத்துப் பண்ணும் மொட்டை அதிகாரத்தைச் சாதித் தலைவர்களுக்கு கொடுத்தது யார்?
இதற்காக போராட வேண்டியது திவ்யாக்கள் மட்டுமே.
எங்கே ஒளிந்துக்கொண்டிருக்கிறார்கள் முலை-யோனிகளின் விடுதலையைப் கவிதைகளாக்கி தங்களைப்  பெண்ணிய போராளிகளாக அடையாளம் காட்டிக் கொண்ட எம் பெண்ணிய வாதிகள்?


பார்ப்பன சாதியில் பிறந்தவர்களுக்குப் பார்ப்பனியப்புத்தி இருக்கிறதோ இல்லையோ சூத்திர சாதியில் ஒவ்வொருவரிடமும் அவர்களின்
அடையாளமாக சாதி மட்டுமே பாதுகாக்கப்பட்டிருகிறது.
தந்தை பெரியார் மீதும் வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டை இனி
நாம் ஒவ்வொருவரும் மறுவாசிப்பு செய்தாக வேண்டி இருக்கிறது.
பெருந்தெய்வங்களையும் அதன் காவலர்களாக இருந்த பார்ப்பனர்களையும்
சாடிய பெரியார், சூத்திர சாமிகளையோ சூத்திர தர்மகர்த்தாக்களையோ
கை  வைக்க வில்லை. அப்படி கை வைத்திருந்தால் அப்போதே சூத்திர சாதியின் பார்ப்பனியப் புத்தி வெட்ட வெளிச்சமாகி இருக்கும்.
தமிழனைச் சூத்திரனாக விட்டுச்செல்வதற்காக வருத்தப்பட்ட பெரியார்,
அதே அளவு வருத்தமும் போராட்டங்களும் சூத்திரனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் பஞ்சமர்களுக்கும் காட்டினாரா? அவர் காலக்கட்டத்தில் பார்ப்பனிய அதிகாரத்துடன் மோதவே அவருக்கு காலம் போதவில்லை என்பதால்
இரண்டாவது கட்ட நகர்வுக்கு செல்ல முடியவில்லை என்று நாம் என்னதான்
சமாதானங்கள் சொல்லிக்கொண்டாலும் அவை எல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் உத்திகள் மட்டுமே. பெரியாருக்குப் பின் பெரியார் வழி
வந்தவர்கள் பெரியாரின் சாதி ஒழிப்பு போரட்டத்தை வெறும் பார்ப்பனிய வெறுப்பாக மட்டுமே துப்பி விட்டு வாயைத்துடைத்துக்கொண்டார்கள்.

ஆதிதிராவிடன் தாழ்ந்தவன் என்றால்
மீதிதிராவிடன் உயர்ந்தவனா?
என்று அவர்களிடம் இன்று காலம் வைக்கும் கேள்வியின் கனம் தாங்க முடியாமல் தலித்துகள் பெரியாரையோ திராவிட இயக்கத்தையோ விமர்சனம் செய்தால் கூட உடனே "நன்றி கெட்டவர்கள்" என்று வசைப்பாடுகிறார்கள்.
பெரியாரின் சாதி ஒழிப்பு கோட்பாட்டை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தாமல்
காலம் தள்ளிக்கொண்டிருப்பவர்களிடம் பெரியார் ஒரு பிள்ளையார் சிலையாகிப் போன அவலம் நடந்துவிட்டது. கொடைத்திருவிழாவின் போது மட்டும் நினைக்கப்படும் ஊர்க்காட்டு சாமி மாதிரி பெரியாரும் இன்றைக்கு
பெரியாரிஷ்டுகளுக்கு இருக்கிறார்.

இந்து மதக்குரு காஞ்சி மடாதிபதியைக் கை வைத்த அம்மாவின்
அபார துணிச்சல் சூத்திர சாதி தலைவர்களின் வானளவு அதிகாரத்தின் முன்னால் நாய்க்குட்டியாக இருப்பதன் காரணம் என்ன?
பிராமணர்களிடம் இருக்கும் பார்ப்பனியப்புத்தியை விட ஆபத்தானது
சூத்திரர்களிடம் குடி கொண்டிருக்கும் பார்ப்பனியம் என்பதால் தான்.

தொடரும் இளவரசனின் சவ ஊர்வலங்களும் மரக்காண ம் தர்மபுரி
எரிந்தச் சாம்பலும் சூத்திர பார்ப்பனியம் விதைத்த சாதி விதைகள்.

மகாத்மாக்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் தீண்டாமை அப்படியே தான் இருக்கும், இருக்கிறது என்றார் அம்பேத்கர். அவர் மொழியிலேயே சொல்வதானால் " பெரியார்கள் வருவார்கள் , போவார்கள், ஆனால்
தீண்டாமை அப்படியே தான் இருக்கும், இருக்கிறது"

இளவரசன் சாதியத்திற்கு எதிராகக் காலமெல்லாம் போராடிய அந்த ஈரோட்டுக்கிழவனின் கறுப்புச் சட்டையைப் பிடித்து கிழித்து உரக்க
கேட்கிறான்... அவன் கேட்கும் கேள்வியை இனி எவரும் உதாசீனப்படுத்தவோ
இல்லை பிராமண எதிர்ப்பு என்ற ஒற்றை மாத்திரையில் வியாதியைக்
குணப்படுத்திவிடலாம் என்று எதிர்பார்ப்பதோ முடியாது, முடியவே முடியாது.


Thursday, July 4, 2013

வாழை இலை


உங்கள் விருந்தில்
உப்பாக கலந்திருக்க
என்னால் முடியவில்லை.
கறிவேப்பிலையாக
இருப்பதில்
எனக்கொன்றும் 
வருத்தமில்லை.
இருந்தாலும்
இந்த இரண்டாகவும்
இல்லாமல்
நீங்கள் தூக்கி எறிந்த
எச்சில் இலையாய்
தெரு ஓரத்து குப்பைத் தொட்டியில்
தெருநாய்களுக்கு நடுவில்
விழுந்து கிடக்கின்றேன்.
சாலையைக் கடந்து செல்லும்
உங்கள் கண்களின் வெளிச்சத்தில்
என் நிர்வாணத்தை
மறைத்துக்கொள்ள முடியாமல்
நிழல்களுக்கு அடியில்
புதைந்துப் போகிறேன்.
.

உங்கள் கொல்லைப்புறத்தில்
குலை தள்ளிய வாழை
குருத்தாக விரியும் இலை
கலியாணத்திலும்
கருமாதியிலும்
உங்கள் கூடவே வருகிறது
என் சாயலுடன்.
என் சரித்திரத்தின்
பக்கங்களை
உங்கள் மொழியில்
எழுதுவதற்காய்.



Friday, June 28, 2013

நமோ நமஹ! நரேந்திர மோதி நமஹ!!



இமயத்தில் சுனாமி, இடைவிடாத மழை, பொங்கும் நதியலை, எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடு, பத்ரிநாத் பகவானை கங்காவே கபாளீகரம் செய்த கொடுமை, நிலச்சரிவுகளுக்கு நடுவில் சிக்கித்தவிக்கும் பக்த கோடிகள், நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிகள் - இத்தனைக்கும் நடுவில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. எந்திரன் படத்தில் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட செய்து காட்டாத ரோபோ காட்சிகள். சாட்சாத் பகவான் கிருஷ்ணனே அவதாரம் எடுத்து அப்படியே தன் குஜராத் குடும்பங்களை மட்டும் காப்பாற்றிய சம்பவத்தைத் தான் சொல்கிறேன்.
21ஆம் தேதி (21-06-2013) வெள்ளிக்கிழமை மாலை உத்தரகாண்ட் மாநிலத்திலும் இமாச்சல பிரதேசத்திலும் இயற்கையின் கோரதாண்டவம். அதில் சிக்கித் தவிக்கும் மக்களைப் பற்றி கேள்விப்பட்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோதி தன் அதிகாரிகள் புடைசூழ டேராடூன் வந்திருங்குகிறார். சனி, ஞாயிறு இரண்டு நாட்களுக்குள் சற்றொப்ப 15,000 குஜாராத் யாத்தீரிகர்களைக் காப்பாற்றி பத்திரமாக தன் மாநிலத்திற்கும் அனுப்பி வைத்து விட்ட செய்தியை டைம்ஸ் முதலான செய்தி ஊடகங்களும், தொலைக்காட்சிகளும், டிவிட்டர், முகநூல், கூகுள் இத்தியாதி சமூக வலைத்தளங்களும் சொல்லிச் சொல்லி அப்படியே பூரித்துப் போய்விட்டன.
இந்தக் காங்கிரசுக்கார மாங்க மடையர்கள் ரொம்பவும் புத்திசாலித்தனமாக இதைப் பற்றி கருத்து சொல்வதாக நினைத்துக் கொண்டு, “வருங்கால பிரதமர் என்று பிஜேபி கொண்டாடும் ஒருவர் இம்மாதிரி தன் மாநில மக்களை மட்டும் காப்பாற்றலாமா? ஒட்டு மொத்த இந்தியர்கள் என்ற பரந்த விரிந்த அகண்ட பார்வை வேண்டாமா?” என்று எழுதியும் பேசியும் வருகிறார்கள். அந்த மாங்கா மடையர்களுக்குப் பதில் சொல்ல வரும் குஜராத் மாநில அரசு அதிகாரிகள் நாங்கள் காப்பாற்றிக் கொண்டுவந்த யாத்தீரிகர்களில் கேரளக்கார பகதர்களும் இருந்தார்களாக்கும் என்று வேறு பதில் சொல்லிக் கொண்டு அலைகிறார்கள்.
இச்செய்தி வெளியான நாளிலிருந்து இந்திய இராணுவம் இன்றுவரை 40,000 யாத்தீரிகர்களைக் காப்பாற்ற முடியவில்லை, அதுவும் 10 நாட்கள் ஆகிவிட்டது. அப்படி இருக்க இரண்டே நாட்களில் நரேந்திர மோதியால் மட்டும் எப்படி 15000 பேரைக் காப்பாற்ற முடிந்தது? என்ற கேள்வி ரொம்பவே பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. தினமும் இந்திய இராணுவம் ஹெலிகாப்டரில் சென்று ஆபத்திலிருக்கும் மக்களைத் தேடுவதிலும் அவர்களைக் காப்பாற்றவும் இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கித்தவிக்கும் மனிதர்களை வெளியில் கொண்டுவர செய்யும் சாகசங்களும் மனதைப் பிழிய வைக்கின்றன. இந்தப் பின்னணியில் உண்மை என்ன என்று உசாவிய போது அதிர்ச்சி தரும் பல உண்மை சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தெரிய வருகின்றன.
ரீடிஃ மெயில் டாட் காம் செய்திப் பிரிவு குஜராத் அதிகாரிகளிடம் எப்படி செயல்பட்டீர்கள் என்று கேட்டால் பதில் சொல்கிறார் ஓர் அதிகாரி “பூகம்ப இயற்கைப் பேரழிவை ஏற்கனவே அனுபவத்த குஜராத் பேரிடர் நிவாரணக்குழு திறமையானது” என்று.
காப்பாற்றியவர்கள் 15000 பேராமே, எப்படி சாத்தியப்பட்டது? என்று கேட்டால் "கப் சிப்" ஆமாம் இல்லை ... இரண்டு பதிலும் இல்லை! நூற்றுக்கணக்கான கார்கள், பேருந்துகள், லாரிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் போயிங் விமானம் குஜராத்துக்கும் டெராடூனுக்கும் 5 டிரிப் அடித்ததாகவும் கதை அளக்கிறார் குஜராத் அரசு அதிகாரி.
சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலை, எங்குப்பார்த்தாலும் வெள்ளக்காடு இந்தச் சூழலில் நரேந்திர மோதிக்கும் அவர் அழைத்துச் சென்ற அதிகாரிகளுக்கும் பறக்கும் கைகள் இருந்திருக்க வேண்டும். இல்லை என்றால் ஆங்கிலப் படங்களில் காட்டுகிற மாதிரி ஏதாவது புதிய கார் + ஹெலிகாப்டர் + பறக்கும் பலூன் + படகு + வசதி கொண்ட புதியதோர் வாகனத்தில் குஜராத் டீம் உத்தரகாண்ட் சென்றிருக்க வேண்டும், இப்படி எதுவும் இல்லாமல் இரண்டே நாட்களில் 15000 குஜராத் பக்தர்களைக் காப்பாற்ற சாட்சாத் அந்த துவாரகைக் கண்ணன் வந்திருந்தால் கூட சாத்தியப்படாது என்பது தான் உண்மை.
டேராடூனுக்கும் கேதர்நாத்துக்கும் இடைப்பட்ட தூரம் 221 கி,மீ. ஒரு இன்னோவா காரில் 7 பேர் பயணம் செய்யலாம். சரி ஆபத்து நேரத்தில் 10 பேர் பயணம் செய்வதாக வைத்துக் கொண்டாலும் 15000 பேரைக் காப்பாற்ற எத்தனை கார்கள் பயன்படுத்தப்பட்டன? எத்தனை தடவை கார்கள் டிரிப் அடித்தன? மோதியின் இன்னோவா கார்கள் இரண்டே நாட்களுக்குள் செய்த அதிசயத்தை இந்திய வல்லரசின் இராணுவம் செய்ய முடியவில்லையா?
செய்தியை இக்கோணத்தில் அணுகும் போது தெரியவருகிறது, நரேந்திர மோதியின் சாம்ராஜ்யம் எத்தனை வலிமை மிக்கதாக தன் இந்திய எல்லைகள் கடந்தும் தன் கிளைகளைப் பரப்பி வளர்ந்து நச்சு மரமாக ஊடகங்கள் எங்கும் பரவிக் கிடக்கும் கொடுமை.
2002ல் குஜராத்தில் நடந்த மதக்கலவரத்தின் நாயகன், 2000 பேரைக் கொன்று 140,000 பேரை தன் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக அலைய விட்ட மோதி இன்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் வெவ்வேறு அவதாரங்களுடன் ஆபத் ரட்சகனாக இன்று காட்டப்பட்டிருக்கிறார்.
நரேந்திர மோதியின் அவதாரங்களை ஊதிப் பெருக்கி வெளிச்சம் போட்டுக் காட்ட ஆப்கோ (APCO) அமைப்புக்கு மாதந்தோறும் 25000 டாலர் செலவு செய்கிறது மோதி டீம். நரேந்திர மோதியின் பப்ளிக் ரிலேஷன், இமேஜ் கன்சல்டன்ட் எல்லாம் கவனித்துக் கொள்கிறது ஆப்கோ. வாஷிங்டனில் இருக்கும் இந்த தனிப்பட்ட நிறுவனத்தில் 2007 முதல் முக்கியமான வாடிக்கையாளர்களில் ஒருவர் மோதி. இந்நிறுவனத்தில் முயற்சியால் தான் 2011க்குள் குஜராத்தில் வெளிநாட்டாரின் முதலீட்டுத் தொகை 20.83 இலட்சம் கோடியாக உயர்ந்தது என்கிறார்கள்.
ஆப்கோ தவிர மோதியின் சாம்ராஜ்ய காவலர்களாக பல்வேறு அமைப்புகள், குழுக்கள் பரந்து விரிந்து செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை:
* தேஷ் குஜராத் : மோதியின் பொதுஜன உறவுகளையும் செயல்பாடுகளையும் பரப்பும் இணையதளம்.
* சன்ஸ்கர்தம் : மோதி குஜராத் முதல்வராகும் முன்பே அவர் ஆரம்பித்த அமைப்பு. நரேந்திர மோதியின் பாடசாலை என்றே இதை அழைக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின்னணியில் வந்தவர்களும் அக்குடும்பத்தின் பட்டதாரிகளும் இரவு பகல் பார்க்காமல் மூன்று ஷிப்டில் இதில் வேலைப் பார்க்கிறார்கள். அவர்களின் ஒரே வேலை சமூக வலைத்தளங்களைக் கவனிப்பதும் தொடர்ந்து நரேந்திர மோதி நமஹ என்ற மோதி ஜயத்தை குறைந்தது 1008 தடவையாவது பதிவு செய்வதும் தான். ஏனெனில் அதில் வேலை பார்க்கும் ஒவ்வொரு நபருக்கும் குறைந்தது 1000 மின்னஞ்சல் முகவரிகள் இருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
டிவிட்டரில் மோதியின் பக்கம் மிக அதிகமாக பார்க்கப்படுவது என்பதெல்லாம் இந்த மோதி பஜன் காரணத்தால் தான். அதுமட்டுமல்ல, அவர்களின் மின்னஞ்சல் முகவரியில் அதிகமாக டாக்டர்களும் பிஸினஸ் கார்ப்பரேட்டுகளும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் அதிகமாக இருப்பதாகக் காட்டுவதில் கவனம் செலுத்துகிறார்கள். டிவிட்டர், முகநூல், கூகுள் என்று சமூக வலைத்தளங்கள் எங்கும் நரேந்திர மோதி சாம்ராஜ்யக் காவலர்கள் பல்வேறு முகமூடிகளில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
நேஷனல் இந்தியன் அமெரிக்கன் பாலிசி நிறுவனம் : சிகாகோவில் செயல்படும் இந்த அமைப்பு தான் அண்மையில் மூன்று அமெரிக்க காங்கிரசு உறுப்பினர்களுக்கு இந்தியா வந்து போகவும் நட்சத்திர விடுதிகளில் தங்கி ஓய்வெடுத்து உல்லாச சுற்றுலா வரவும் ஏற்பாடு செய்த அமைப்பு. அவர்கள் வந்து போன செலவு எல்லாம் கவனித்துக் கொண்டது மோதி டீம்/குஜராத் அரசு. ஆனால் அமெரிக்கா மோதிக்கு விசா கொடுக்க மறுத்திருக்கும் சூழலில் உல்லாசப்பயணிகளாக வந்த அந்த மூன்று உறுப்பினர்களின் வருகைக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. ஊடகங்களுக்கெல்லாம் செய்தி அனுப்பப்பட்டு அவர்களுக்கும் நட்சத்திர ஹோட்டல்களில் விருந்தும் கொண்டாட்டமும்.
*வெளிநாட்டு வாழ் பிஜேபி நண்பர்கள் குழு: இந்துத்துவ நண்பர்கள் வட்டம் மோதியின் அசைக்க முடியாத தூண்களாக இருக்கிறார்கள்.
நமோ குஜராத்: குஜராத்திலிருந்து ஒளிபரப்பாகும் செய்தித் தொலைக்காட்சி. காலையிலிருந்து இரவு தூங்கும் வரை நரேந்திர மோதியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் இவர்கள் புண்ணியத்தில்.
*க்ரே வெர்ல்ட்வைட் : விப்ரன்ட் குஜராத் என்ற விளம்பரத்தைக் கொண்டுவந்த விளம்பரக் கம்பேனி.
*இந்து அமெரிக்கன் பவுண்டேஷன் : அமெரிக்காவில் வாழும் குஜராத்திகள் ஒன்று சேர்ந்து மோதியைக் கவனித்துக் கொள்ளும் அமைப்பு.
இவை தவிர ஐரோப்பிய இந்திய சேம்பர் ஆஃப் கமர்ஸ், மற்றும் இந்தியன் அமெரிக்கன் விடுதலை அணி என்று பல்வேறு அமைப்புகளும் நரேந்திர மோதிக்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்பட்டு கொண்டிருக்கின்றன.
(ஆதாரம்: தெகல்கா இதழ் எண் 13, ஏப் 2013. & Rediffmail news)
-

Monday, June 17, 2013

எருமையைக் கொண்டாடுவோம்




யாரையும் கோபத்தில்
எருமை எருமை என்று
திட்டாதீர்கள்.
எருமை என்ற சொல்லை
உங்கள் வசவுச்சொற்களின்
பட்டியலிருந்து
நீங்கள் எடுத்தே ஆகவேண்டும்.
வேண்டுமானால்
பசு பசு பசு
என்று புதிதாகத் திட்ட
பழகிக்கொள்ளுங்கள்
பாதகமில்லை.

குளம் குட்டையில்
ஒரு ஞானியைப் போல
தியானத்தில் இருக்கும்
எங்கள் எருமை.
எவ்வளவு அடித்தாலும்
அமைதியாக நடக்கும்
பொறுமை
எங்கள் எருமை.
புணர்ச்சியும் பிறப்பும்
படுக்கையறைகளைத் தாண்டி
சோதனைக்குழாய்களுக்கு
மாறிவிட்டது.
இறப்பு மட்டுமே என்றும் மாறாதது.
எருமையும் தான்.
அதனால்தான்
எமனுக்கு வாகனமாய்
அசைந்து வருகிறது.
பசுவின் மூத்திரத்தில் கூட
பக்தியைக் கண்ட
உங்கள் தொண்டர்கள்
எருமையை மட்டும்
விலக்கியே வைத்தார்கள்.
கறுப்பாய் இருந்தாலும்
எருமைப்பால்
வெள்ளையாகவே இருப்பதை
இருட்டடித்தார்கள்.
.
எருமையைக் கொண்டாடுவோம்
நாம்.
ஈரோட்டுக் கிழவனின்
கறுப்புச் சட்டையை
எப்போதும் கழட்டாமல்
அணிந்திருக்கும்
எருமையைக் கொண்டாடுவோம்.

Saturday, June 8, 2013

மவுனவெளி

 என் ஆகாயத்திளிருந்து
கொஞ்சம் கொஞ்சமாக
கருமேகங்கள்  களவாடப்பட்டன.

என் தோட்டத்திலிருந்து
பறித்துவந்த
பச்சையங்க்களை
குரோட்டன்ஸ் இலைகள்
பூசிக்கொண்டன

ஈரம் கசிந்த என் பூமி
வெப்பத்தால் வெடித்து
வாய்ப்பிள ந்து கிடந்தது.

இதழ்கள் உதிர்ந்த
பூவின் காம்புகளாய்
கவிழ்ந்த முலைகள்
தேனீக்களின்
ரீங்க்காரமில்லாத
தோட்டம்.
மவுனத்தால் நிரம்பி
மரணம் தழுவிக்கிடந்தது

நிகழ்காலம் எங்கும்
கடந்த கால நினைவுகள்
வருங்காலத்தை
தனிமைத் தின்று
துப்பிய படுக்கையில்
தூ ளி யென  அசைந்தது
உடல்

காலமெல்லாம்
கனவுகளில் எட்டிப்பார்த்த
பரமாத்மா
மெதுவாக அருகில் வந்து
முத்தமிட்டதோ?
சப்தமின்றி அடங்கிப்போனது
வீடு.




Thursday, June 6, 2013

பாவம், தயாளு அம்மாள்.

டைம்ஸ் ஆஃப் இந் தியா ஜூ ன் 2, 2013 பக்கம் 17ல் வாசித்த செய்தி இது :

CBI SUMMONS KARUNA'S WIFE:
--------------------------------------------

The CBI on saturday served summons on Dayalu Ammal, wife of DMK Chief M Karunanidhi,
in a case related to the 2G spectrum scam.

The summon was served at her Gopalapuram residence in Chennai and it was received by Karunanidhi's secretary Shanmuganathan.

The summons come in the wake of special CBI judge O P Saini dismissing her application that she was not in a fit state to appear before the court.

A representation by her lawyer in the CBI court on Friday said 82 year old Dayalu Ammal, a prosecution witness in the case had been diagnpsed with 'cognitive and behavioral abnormalities".Two applications were filed in the CBI court in Delhi  on her behalf seeking to dispence with her personal appearance in the case.
But he court dismissed the applications, saying she was an important witness and summoned her to appear
before it on July 8.
.....
.....

The DMK chief said thae CBI had also accepted that his wife's condition was bad, but it was not clear why the judge had directed her personal appearance. He said Dayalu Ammal's medical certificates were submitted in the court with a request that a medical team from a central government hospital examine her and certify her condition.


கலைஞர்  டி.வி.யில் 60% பங்குதாரராக இப்போதும்  தாயாளு அம்மாள் இருக்கிறாரா? அப்படி இருந்தால் அது சரியா? இக்கேள்விகளை எல்லாம் தாண்டி

இச்செய்தியை  வாசித்த ப்  பின் ஒரு தாயாக, மனைவியாக , மகளாக
நானும் இருப்பதால் மட்டுமல்ல ஒரு சகமனுஷியாக இன்னதென்று
சொல்லமுடியாத ஒரு வலி என்னைக் குத்திக் கிழிக்கிறது.

பாவம், தயாளு அம்மாள்.

Friday, May 24, 2013

முலைச்சிப் பறம்பு




ஏப்ரல் மாதம் வந்துவிட்டால் வங்கிகளுக்கு ஓடி 15G அல்லது 15H படிவங்களைப் பூர்த்தி செய்துவிட்டு நமக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக
இருக்கும் வங்கி கணக்குகளை அரசாங்கத்தின் வருமான வரி PAN எண்ணுடன் இணைத்திருப்பதால் ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் காட்டி நல்லதொரு
இந்தியக் குடிமகனாக இருப்பதை ஒவ்வொரு வருடமும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறோம்.
இந்த வருமான வரிகள் எல்லாம் நம்மைப் போல மாத வருமானம் பெறும்
நடுத்தர வர்க்கத்தினருக்கானதாகவே இன்று இருக்கிறது.
அடிக்கடி பத்திரிகைகளில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நட்சத்திரங்களும் கோடிக்கணக்கான அமெரிக்க டாலரில் லாபம் காணும்
கார்ப்பரேட் முதலைகளும் வைத்திருக்கும் வரிபாக்கி பட்டியல் வரும், போகும்,
வரும் போகும்.. வருவதற்கும் போவதற்கும் நடுவில் என்ன நடக்கிறது?
சரி, விட்டுத்தள்ளுங்கள். இப்போதைக்கு நம் நாட்டில் நாம் கட்டும் வரி
நம் மூதாதையர்கள் கட்டிக் கொண்டிருந்த வரிகளுடன் ஒப்பிடும் போது..
எவ்வளவொ பரவாயில்லை என்று பெருமூச்சு விட்டு ஓரளவு நம்மை
நாமே மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ளலாம்.

ஜப்பானில் 1590களில் தங்கள் விளைபொருள்கள் அனைத்தையும் பண்ணையாருக்கே உழைப்பவர்கள் கொடுத்துவிட வேண்டும் என்பது சட்டம்.
பண்ணையாரே பார்த்து, பொழைச்சுப் போகட்டும் என்று ஏதாவது
தன் பண்ணைத் தொழிலாளிக்கு கொடுத்தால் அதுவே அவனுக்கு
கிடைத்த பெரும்பேறாக கருதப்பட்டது.

சியாம் நாட்டில், அதாவது இன்றைய தாய்லாந்தில் 1899 வரை உழைக்கும்
விவசாயிகள் ஓர் ஆண்டுக்கு குறைந்தது 3 மாதமாவது தங்கள் அரசனுக்கு
மட்டும் உழைக்க வேண்டும். இதில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி
அதிகமானதால் இந்த முறையை மாற்றி விட்டு கடுமையான வருமான வரியை வசூலித்தார்களாம்.

யுஸ்பிக்கிஸ்தானில் (UZBEKISTAN) 16 ஆம் நூற்றாண்டுவரை திருமணம் செய்து
கொள்வதற்கே கடுமையான வரி விதித்தார்களாம். இது யாரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக விதிக்கப்பட்ட வரி அல்ல. மனிதர்களுக்குத் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கவே முடியாது என்பதால் (விதிவிலக்குகளை விட்டுத்தள்ளுங்கள்!) இப்படி ஒரு வரிவிதித்து
தங்கள் கஜானாவை நிரப்பிக்கொண்டதாம் அரசாங்கம். பிறகென்ன?
1543ல் இச்சட்டத்தை தடை செய்துவிட்டார்கள், காரணம் அது இசுலாமிய
விதிகளுக்கு முரண்பட்டது எனக் கருதியதால்.

1365 முதல் 1825 வரை ஓட்டமன் பேரரசில் 12 வயதுக்கு மேல் 60 வயதுக்குட்பட்டவர்களையே வரியாக வசூலித்தார்கள் அரசு அதிகாரிகள்.
நல்லக் கட்டுமஸ்தான் ஆண்களை ஊர் ஊராக வந்து பிடித்துக் கொண்டு போய்
சுல்தானின் சொத்தாக்கினார்கள். பெரும்பாலும் சுல்தானில் படைப்பிரிவில்
சேர்த்தார்கள்

இந்த எல்லா வரிகளையும் விட கொடுமையான வரிகள் விதிக்கப்பட்ட
ராஜ்யம் கடவுளின் தேசம் என்றழைக்கப்பட்ட திருவாங்கூர் சமஸ்தானம் தான்.
தலைவரி என்று 16 வயது முதல் 60 வயது வரை ஆட்களின் தலைகளை எண்ணி ஈழவர்களிமிருந்தும் சாணார்களிடமிருந்தும் வசூலிக்கப்பட்ட ஓராண்டு
வரித்தொகை சற்றொப்ப ரூபாய் 88,044/

தீண்டத்தகாத தாழ்த்தப்பட்ட சாதிப்பெண்கள்மீது திணிக்கப்பட்ட உடை பற்றிய கட்டுப்பாடுகள் பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறலாகயிருந்தது. கடுமையான ஆணாதிக்க மரபானது அவர்ண சாதிப்பெண்களை ஆபாசப்படுத்தி அவர்களை இடுப்பிலிருந்து முழங்கால்வரை மறைக்கும் "முண்டு'' என்ற முரட்டுத் துணியைத்தான் சுற்றியிருக்க வேண்டும் என கட்டுப்படுத்தியிருந்தது. அவர்களை அரை நிர்வாணிகளாக்கியது.

சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்மக்களை, ஆதிக்கச் சாதிப்பெண்களிடமிருந்து பிரித்து, உடனடியாக அடையாளம் தெரியும் வகையில் அவர்கள் மார்பகங்களைக் காட்டிய வண்ணமே நடமாட நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். அவர்ண சாதிப்பெண்ணுக்கு அவளது சவர்ண சாதி எஜமானன் ஆண்டுக்கொருமுறை ஒன்று அல்லது இரண்டு முண்டுகள் கொடுப்பான். காலையிலிருந்து அந்தி சாயும்வரை வெயிலிலும், மழையிலும், குளிரிலும், நீரிலும் நின்றுகொண்டுகளை பறிப்பதாலும், நாற்று நடுவதாலும், ஒரே துண்டுத் துணியை நாள்தோறும் ஒரு அறுவடையிலிருந்து மறு அறுவடை வரை உடுத்துவதாலும் இந்தப் பெண்கள் அழுக்கடைந்தவர்களாக செயற்கையாகவே ஆக்கப்பட்டார்கள்.

தாழ்த்தப்பட்ட சாதிப்பெண்கள் தாங்கள் அடிமைப்பெண்கள் என்று அடையாளப்படுத்த கல், கண்ணாடி, இரும்பு, தகரத்திலான அணிகலன்களையே அணிய நேரிட்டது. (அடிமைகளின் தலைவர் அய்யன்காளி, பக்கம்:96)

"திருவிதாங்கூரில் வரிவிதிப்பு முறைமைக்கணங்கள், உலக நடப்பில் வேறெங்கும் கேள்விப்படாத, நடந்திராத வகையில் கேவலங்களை உள்வாங்கிக் கொண்டு உறைந்து கிடந்தது. சட்ட ஒப்பனைகளோடு அம்பலம் ஏறிய வரிவிதிப்புப் பட்டியலில் நிமிர்ந்த தலைகளும் வளர்ந்த முலைகளும் கூட இடம் பெற்றிருந்தது. கேவலங்களின் வெட்கம் அறியாமல் வெளிப்பட்ட, கண்மூடித்தனமாக சுரண்டும் கைங்கரியமாகிப் போன வரிகளின் பொருளடக்கத்தில் மிதமிஞ்சிய வல்லடித்தனமும் வக்கிரமும் சாதி ஆதிக்க குறியாட்டத்தின் இலக்கணமாகியிருந்தது. தங்கள் உறுப்புகளுக்கும் வரிகொடுக்கும் நிலைமைக்கு ஊழியச்சாதி-அடிமைச்சாதி பெண்களும், ஆண்களும் ஆளாக்கப்பட்டார்கள்." என்று பதிவு செய்திருக்கிறார்
எஸ்.பி. வள்ளிநாயகம்.

 வரிவசூல் வேட்டையும் மூர்க்கங்களின் உச்சமான சாட்சியங்களாக இருந்தது. வரிவசூல் வேட்டை நாய்களின் தொல்லை தாங்கமுடியாதநிலை ஏற்பட்டதில், சேர்த்தலையைச் சேர்ந்த ஒரு ஈழவப்பெண் போராளியானாள்.




 ஆழைப்புழை மாவட்டத்தில் சேர்த்தளை கிராமத்தில் வாழ்ந்த நன்செல்லி என்ற ஈழவப்பெண்  மார்பை துணியால் மறைத்துக் கொண்டாள். இதைக் கேள்விப்பட்ட முலைவரி வசூலிக்கும் அரசு அதிகாரிச்
அவளிருப்பிடம் தேடி வந்து வரி கேட்டார். அவளும் முலைவரி கொடுக்க
முன்வந்தாள். முலை வரி கொடுக்கும் முன் அவர்கள் வழக்கப்படி
விளக்கேற்றி அதன் பின் வாழை இலையில் வைத்து முலைவரியைக்
கொடுக்க வேண்டும். நன்செல்லி விளக்கேற்றினாள். முலைவரி எடுத்து
வருகிறேன் என்று சொல்லி வீட்டுக்குள் நுழைந்தவள்
வாழை இலையில் ரத்தம் சொட்டச் சொட்ட அப்போது தான் அறுத்தெடுக்கப்பட்ட தன் இரு முலைகளையும் ஏந்தி வந்தாள்.
முலைவரி கொடுப்பதாக உள்ளே போனவள் தன் முலைகளையே வரியாகக் கொண்டுவந்தக் காட்சியைப் பார்த்த அதிகாரி அதிர்ச்சியில் நின்றார்.
அவளோ இரத்த வெள்ளத்தில்...பிணமாக..
வெளியில் போயிருந்த அவள் கணவன் கந்தப்பன் அவள் சிதையில் விழுந்தே
தானும் மரித்து போனதாய் சொல்கிறார்கள்.

முலைவரிக்காக அந்தப் பெண் செய்த உயிர்த்தியாகம்..
உலக வரலாற்றில் பெண்ணியம் பேசுபவர்கள் கூட மறந்துப்போன
மிக அண்மைக்கால வரலாறு.

அப்போது திருவாங்கூர் அரசராக இருந்த ஶ்ரீ மூலம் திருநாள் ( 1885- 1924)
நன்செல்லியின் செயலைக் கேள்விப்பட்டவுடன் அச்செயலே தன் நாட்டில் ஒரு கிளர்ச்சியை உருவாக்கிவிடலாம் என்று அச்சப்பட்டு அதுவரை அமுலில் இருந்த
முலைவரியை ரத்து செய்தார். ஒரு பெண்ணின் செயல் ஓர் அரசாங்கத்தின் மிகக்கொடுமையான ஒரு செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

முலைப் பிடுங்கி எறிந்து
பாண்டியனின் மதுரை மாநகரைத் தீக்கிரையாக்கிய கண்ணகியின் கதை
காப்பியக்கற்பனையோ ?வரலாறோ?
ஆனால் நன்செல்லி இன்றைக்கு மூன்று தலைமுறைக்கு முந்திய
வாழ்ந்தவள். அவள் வாழ்ந்த இடம் இன்று முலைச்சிப்பறம்பு என்றழைக்கப்படுகிறது.

கேரளத்திலாகட்டும், அண்டை மாநிலமான தமிழகத்திலாகட்டும் , நன்செல்லி வாழ்ந்தக்கதை
வரலாறாக எழுதப்படவில்லை. அவள் இலக்கியத்தில் இடம்பெறவில்லை.
பாடப்புத்தகங்களில் அவளுக்கான பக்கங்களே இல்லை.
மார்க்சியமும் பெண்ணியமும் உரக்க ஒலிக்கும் கேரள மண்ணில்
அவள் ஊமையாக்கப்பட்டிருக்கிறாள்.

ஊடகங்கள் முலைச்சிப்பறம்பை
மனோரமா கவலா என்றே அழைக்கின்றன. அந்த இடத்தில் இன்று வாழும்
எவருக்கும் முலைச்சிப்பறம்பு வரலாறு தெரியவில்லை. நன்செல்லியும்
முலைச்சிப்பறம்பு வரலாறும் இருட்டடிக்கப்பட்டதில் சாதியம் புதிய முகத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் உணரலாம்.

இந்த வரிகளும் சேர்ந்து தான் பத்மநாப சுவாமிக்கோவிலின் கருவறையில்
பொற்காசுகளாகவும் தங்கம் வெள்ளி நகைகளாகவும் ரத்த வாடையுடன்.

Tuesday, May 21, 2013

காலச்சுவடு கட்டுரையும் என் எதிர்வினையும்





பெரியார் ஒரு பார்வை என்ற தலைப்பில் மதிப்பிற்குரிய திரு. பி. ஏ. கிருஷ்ணன் அவர்களின் கட்டுரையை வாசித்தேன். கட்டுரையாளருக்கு என் வணக்கமும் பாராட்டுதல்களும்.
ஜனவரி 2012இல்* வாசித்தக் கட்டுரையை 2013 மார்ச் காலச்சுவடு இதழ் காலங்கடந்து அச்சில் கொண்டுவந்து இருப்பது ஏன்? என்ற கேள்விகளைத் தாண்டி கட்டுரைக்குள் வரவேண்டி இருந்தது. கிருஷ்ணன் அவர்கள் பெரியார் குறித்த தன் கருத்தை வைப்பதற்கு அவருக்கு முழு கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் இம்மாதிரியான ஒரு கட்டுரையை எந்த ஒரு தலைவரைப் பற்றியும் எவரும் எழுதிவிட முடியும். காந்தியைக் குறித்து நேருவும் தாகூரும் வைத்திருக்கும் விமர்சனங்களை நாமறிவோம்.
இக்கட்டுரைக்கு கனம் சேர்த்திருப்பது எழுதிய கருத்துகள் என்பதை விட எழுதியவர் யார்? என்கிற உண்மைதான். எழுதியவர் யார் என்று பார்க்காதே, எழுத்துகளை மட்டும் பார்த்து விமர்சனம் செய் என்று சொல்வது ரொம்பவே புத்திசாலித்தனமாக தோற்றம் அளிக்கும். ஆனால் எல்லோருக்கும் அவரவர் வாழ்ந்த வளர்ந்த சமூகச் சூழல் அவர்தம் கருத்துகளில் எதிரொலிக்கும். கிருஷ்ணன் தன்னைப் பற்றி ஓர் அறிமுகம் செய்து கொண்டுதான் பெரியாரைப் பற்றி எழுத வேண்டி இருப்பதன் காரணம் கூட இதுதான்.
பெரியாருக்கு ‘இது தெரியாது, அது தெரியாது’ என்று அட்டவணை இடுவது எவருக்கும் எளிது. ஆனால் அவரைப் பொறுத்தவரை எப்போதும் எந்த ஒரு கருத்தையும் நறுக்குத் தெறித்தாற் போல சொல்ல வேண்டியே இருந்தது. அப்படித்தான் அவருடைய கம்பராமாயணம் குறித்த கருத்துகளும். கம்பன் எழுதிய காவியத்தில் கதைத்தலைவன் ஒரு அரசனாக மட்டுமே இருக்கிறவரை அது பெரியாருக்குப் பொருட்டல்ல, ஆனால் அவனோ சாட்சாத் திருமால், விஷ்ணுவின் அவதாரமாக மாற்றம் பெற்றதால்தான் பிரச்சனையே! கம்பனின் தமிழை மட்டும் எடுத்துக்கொள், அவனது ராமனைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளாதே என்றெல்லாம் சொன்னால் அன்றைக்கிருந்த பெரியார் தொண்டர் எவருக்கும் அது புரிந்திருக்காது. கம்பனின் தமிழ்ப்பற்றும் தமிழ்மொழி ஆளுமையும் இப்படி கருத்தியல் ரீதியாக தமிழனுக்கே எதிராக இருப்பதை முன்வைத்து ‘கம்பனே வேண்டாமய்யா’ என்று சொல்ல வேண்டிய நிலை பெரியாருக்கு ஏற்பட்டது. காந்தியைப் பற்றி எழுத வரும்போது கிருஷ்ணன் அவர்கள் “ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைவர் அனைத்து தரப்பு மக்களையும் அணைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்து கொண்டே இருக்கும் என்பதை அவர் (பெரியார்) ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை” என்கிறார். அக்காலக்கட்டத்தில் தான் எழுத்துக்கூட்டி வாசிக்க வந்திருக்கும் தன் தொண்டர்களுக்குத் தன் கருத்துகளை “உண்டு அல்லது இல்லை” என்று மட்டுமே சொல்லிப்புரிய வைக்க வேண்டிய ஒரு இக்கட்டான சூழல் பெரியாருக்கும் இருந்தது என்பதை வசதியாக எல்லோருமே மறந்துவிடுகிறோம்.
இந்தியா எனது நாடு என்கிறீர்கள். எனக்கும்தான். மும்பையில் க்ளாஸ் 4 தேர்வுக்கு உட்காரும் தகுதிகூட தமிழனுக்கு மறுக்கப்படுகிறது, தமிழ்நாடு வந்தாலோ தருமபுரியும் பரமக்குடியும் எங்களைப் பயமுறுத்துகிறது. எங்களுக்கு என்று நாடில்லை, மொழியும் இல்லை என்ற நிலையில் பெரியாரை விட்டால் தமிழ்நாட்டில் எங்களுக்கு ஒதுங்கவும் நாதியில்லை! நான் சந்தித்த வடகிழக்கு மாநில இலக்கியவாதிகள் எவரும் இந்தியா தங்கள் நாடு என்பதை இன்றுவரை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். இந்த யதார்த்த நிலையைப் பேசவோ எழுதவோ முன்வந்தால் பிரிவினைப் பேசுகிறார்கள் என்று எளிதாக குற்றச்சாட்டு வைத்து பிரச்சனைகள் இருப்பதைத் தொடர்ந்து நாம் புறக்கணித்து வருகிறோம். காந்தி கொல்லப்பட்டபோது பெரியார் இந்தியாவிற்குக் காந்திதேசம் என்று பெயர் வைக்கச்சொன்னார் என்பதையும் தோழர் மதிமாறன் பேசியதையும் குறிப்பிட்டிருக்கின்றார் கட்டுரையாளர். The Murder of the Mahatma என்ற புத்தகத்தை 1963ல் எழுதிய பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜி.டி. கோஸ்லா எழுதிய புத்தகம் பெரியாரின் கருத்துக்குப் பல்வேறு கோணத்தில் ஒத்திருப்பது நினைவு கூர வேண்டிய செய்தியாகும். கோட்சே தன் வாக்குமூலத்தில் “இலட்சக்கணக்கான இந்துக்களுக்கு அழிவைத் தருகின்ற கொள்கையைக் கொண்டிருந்த ஒருவரைத்தான் துப்பாக்கியால் நான் சுட்டேன். எல்லா பக்கங்களிலிருந்தும் எனக்கு எதிராகக் செய்யப்படுகின்ற விமர்சனங்களால் எனது செயலில் நியாயத்தன்மை கலைந்துவிடாது என்பது என் நம்பிக்கையாகும். வரலாறு எழுதுவோர் எனது செயலில் உள்ள நியாயத்தைச் சரியாகவே மதிப்பிடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றுதான் சொல்லியிருந்தார். கோஸ்லா அவர்கள் கோட்சே பற்றி His main theme however, was the nature of a righteous man’s duty, his dharma as laid down in the Hindu scriptures’ என்று குறிப்பிடுகின்றார். இக்கருத்துகள்தான் மதிமாறன் சொல்வதுபோல பெரியார் காந்தியைப் போற்றும் ஒரே புள்ளி. இந்தப் புள்ளியை உருவாக்கியது அன்றைய இந்துத்துவா சக்திதானே தவிர பெரியார் மட்டும் காரணமல்ல. இந்த இடத்திலும் பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் நாம் மீண்டும் வாசிக்க வேண்டும். காந்தியைக் கொன்றதற்கு காரணம் இந்துத்துவ வெறி என்ற காரணத்தை மட்டும்தான் கையில் எடுத்துக்கொண்டாரே தவிர கொலை செய்தவனின் சாதி - இன அடையாளத்தைக் கையில் எடுத்துக் கொண்டு விமர்சிக்கவில்லை. பெரியாரைப் பார்ப்பன இனத் துவேஷியாக பார்ப்பவர்கள் பெரியார் தன் இனத் துவேஷத்திற்கு வலுவான சந்தர்ப்பம் கிடைத்தபோதும் இன்றைய தலைவர்களைப் போல கீழ்த்தரமான விமர்சனங்களை வைத்து இயக்கம் நடத்தவில்லை என்பதையும் சேர்த்தே எண்ணிப் பார்க்க வேண்டும். “காந்தி, ராமசாமி ஆகிவிட்டதால் அவரை ஒழித்துவிட்டார்கள்” என்று பெரியார் சொன்னதை இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும்.
பெரியாரின் பெண்ணிய விடுதலைக் கருத்துகளில் மிக அதிகமான பலன்களைப் பெற்றவர்கள் அன்று கல்வி நிலையில் முன்னிலைக்கு வந்து கொண்டிருந்த பிராமணர் வீட்டுப் பெண்கள் தான். பெரியார் தன் கூட்டங்களில் பேசும் போது பலர் சொன்ன தகவல்கள், அவரே வாசித்து அறிந்தவை என்ற அடிப்படையில் பேசியும் எழுதியும் வந்தார். கருத்தரங்குகளில் கட்டுரை வாசிக்கும் முறை எல்லாம் பெரியாரிடம் இல்லை என்பதாலேயே அவர் எங்கிருந்து சில கருத்துகளைப் பெற்றார் என்ற குறிப்புகளைப் பெறுவது எளிதாக இல்லை. சீக்கிய சமூகத்தில் இருக்கும் சாதியம் பற்றி எழுதும் போது கூட அக்கருத்தை வாய்மொழியாக தன்னிடம் சொன்ன குறிப்பை பதிவு செய்திருக்கிறார். கட்டுரையாளர் எழுதியிருக்கும் யூத சமூகம் குறித்த பெரியாரின் கருத்துகளின் ஆதாரம் என்ன என்பது விடுதலை ஏட்டில் தேடினால் கிடைக்கும்.
பெரியார் என்னளவில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லர். அவரை விமர்சிப்பதே குற்றம் என்கிற கருத்தெல்லாம் எனக்கில்லை. கிருஷ்ணன் அவர் பார்வையை வைத்திருப்பது போல அந்த வரிசையில் நானும் நான் புரிந்து கொண்டிருக்கும் பெரியாரும்.
புதியமாதவி
மும்பை


நன்றி : காலச்சுவடு 

http://www.kalachuvadu.com/issue-161/page77.asp

Monday, May 20, 2013

என்னால் எழுத முடியவில்லை




என்னால் எழுத முடியவில்லை
அடுக்களையில்
ஆத்தங்கரையில்
வயக்காட்டில்
வாய்க்காலில்
குளக்கரையில்
கொள்ளைப்புறத்தில்
ஒதுங்கும்போதெல்லாம்
ஓசையின்றி வளர்த்த என் மொழி
உயிரூட்டி வளர்த்த என் மொழி
குறிகளைக் கொண்டு கடித்துக்குதறி
துடிக்க துடிக்க சிதைத்து போட்டாய்
என்னால் எழுத முடியவில்லை.

உன் வாரிசுகளைப் பாலூட்டி வளர்க்கும் முலை
உன் பாலியல் வறட்சியைத் தீர்க்க
அணைகட்டி அழுகுப்பார்த்தப்போதே
இயல்பான என் உடல்மொழி
உன் காமத்தீயில் கருகிப்போனது
என்னால் எழுத முடியவில்லை.

களவும் கற்பும்
நீ எழுதிவைத்த இலக்கணம்தான்.
இரண்டும் இருவருக்கும்
பொதுவாக இருக்கும்வரை
காதலிருந்தது.
முன்னது உனக்கும்
பின்னது எனக்கே எனக்குமாய்
உன் ஆயுதங்கள் வென்ற எல்லைக்கோடுகள்
இதில் காணமால் போனது காதல்மட்டுமல்ல
என் கவிதைமொழியும் தான்.

உன் படுக்கையறையின் வயகராவாய்
என் ஆடைகளைத் தயாரித்து
உன் சந்தையில் பரப்பினாய்
எதைக்காட்ட வேண்டும்
எதை மறைக்க வேண்டும்
எதைத் திறக்கவேண்டும்
என் உடலின் எல்லா கதவுகளையும்
திறக்கவும் பூட்டவும்
உடைக்கவுமான சாவிகளும்
கடப்பாறைகளும் உன் வசம்.
உன் பசித்தீர்க்கும் அமுதசுரபி என
உன் வர்ணனையில்
மணிமேகலைகளும் மயங்கிப்போனார்கள்.
பனிக்குடம் சுமக்க்கும் பை ஆகிப்போனது
என் உடல்
பசியும் ருசியும் மறந்துப்போனது
இதுவே பழகிப்போனதால்
எப்போதாவது கனவுகளில்
எட்டிப்பார்க்கும் என் முகம்
எனக்கே அந்நியமாகிப் போனது.
அலறிக்கொண்டே விழித்துக் கொள்கிறேன்
கனவில் கண்ட முகம் பற்றி
எங்காவது
யாரிடமாவது
எப்போதாவது
உரையாடல் நடத்தும் தருணத்தில்
உணர்ந்தேன் என் மொழி ஊமையாகிப்போனதை.

என்னால் எழுத முடியவில்லை
என்னால் பேச முடியவில்லை.



Friday, May 10, 2013

அணுவுலையும் கருவாடும்




நான் கருவாடு
என்னைக் கொஞ்சம் பேசவிடுங்கள்
எனக்கு அறிவியல் தெரியாது.
அதனால் உங்கள் 
அணுவுலைகள் பற்றியும்
தெரியாது.

நீர்தான் உயிருப்பின் ஆதாரம்
என்று நீங்கள் படித்து தெரிந்து
கொண்டதெல்லாம்
பலகோடி ஆண்டுகள்
சமுத்திரத்தில் சுற்றித்திரிந்த 
என் கூட்டம்
கடற்கரையில் ஒதுங்கியபோது
பட்டுத்தெறித்த 
தாம்பூல மகிமையால் தான்.



நேற்று வலையில் மீனாக
உங்கள் கடற்கரை வந்தேன்.
உங்கள் கூடைகளில் நிரப்பி
தலையில் சுமந்து திரிந்தீர்கள
முற்றத்தில் உலர்த்திக் கருவாடாக்கி
எப்போதும் பசிதீர்க்கும்
அமுதசுரபியாக
என்னை வாழவைத்தவர்கள்
நீங்கள்.--
-
-


அணுவுலகைகள் வேண்டாம் என்கிறீர்கள்
உங்களுக்கு  ஆபத்தானது என்பதால் மட்டுமல்ல
காலம் காலமாய் உங்கள்  கைகளில் இருக்கும்
அமுதசுரபிக்கும் ஆபத்து வரும் என்பதால்

-அணுவுலகைகள் ஆபத்தானவை அல்லவாம்
நீதிதேவதையே எழுதிவிட்டாளாம்
இனி அச்சமில்லை அச்சமில்லையாம்
டில்லியிலிருந்து கேட்கிறது குரல்.

ஆபத்தானது அல்ல என்றால்
டில்லியிலேயே அணுவுலகைகளைத் திறக்கலாமே
நாட்டுக்கும் பெருமை
நாட்டின் தலைநகருக்கும் பெருமை
மின்சாரத்தைச் சரியாக எடுத்துச் செல்லும் வசதி
இல்லை என்கிறது உங்கள் மின்சாரவாரியம்..
அப்படி இருந்திருந்தால் குஜராத்திலிருந்தும்
கோலிவாடாவிலிருந்தும்
மின்சாரத்தை எடுத்து வந்து
தமிழகத்தை தகதகவென
ஒளிர வைத்திருப்பார்களாம்
அப்படித்தான் சொன்னார்கள் .

ஆமாம்.. நிறைய மின்சாரம் கிடைக்குமாமே
கூடங்குளம் திறந்துவிட்டால்.
அதிலும் முதல் கட்டம் தொடங்கி
இரண்டாம் கட்டம் --முடிந்து
மூன்றாவது கட்டம் வரும்போது
மின்சார மழைப் பொழியுமாமே
இவ்வளவு அபரிதமாக மின்சாரம் கொட்டினால்
அம்மாடியோவ்... 
அதை எடு-த்துச் செல்லும் வசதிகூட இல்லாமல்
 தமிழகம் எங்கும்-
 மின்சாரம் பாய்ந்து
மின்சாரம் கசிந்து
ஒரே ஷாட் சர்க்க்யூட் ஆகி
...
வேண்டாமய்யா டில்லியாரே
ஆளைவிடுங்கள்
மின்சாரம் இல்லாமல்
சிக்கிமுக்கி கல்லை உரசி 
தீ உண்டாக்கி
வலையில் பிடித்த மீனைச் சுட்டுத் தின்று
நிலாப் பொழியும் நெய்தல் கரையில்
படகுகள் ஓட்டிச் சென்றவன்
--வரும் வரைக் காத்திருந்து
கடற்கரை மணலில்
கானல்வரிப் பாடி
ஊடலும் காதலுமாய்---
வாழவிடுங்கள் அய்யா..
உங்கள் அணு ஆயுதங்களின்
சோதனை எலிகளாய்
அவர்கள்  தொட்டில்களை
எடுத்துச் செல்லாதீர்கள்.
அவர்களை  விட்டுவிடுங்கள்


மல்லிகைப்பூ மணக்கும்
கருவாடு நாறும் என்று
மக்கள்  பொதுபுத்தியில் ஏற்றிய
புண்ணியவான்களே,,.
அணுக்கழிவுகளைப் போல
அழிக்க முடியாத'
அரசியல் வாதிகளே..
உங்கள் செங்கோட்டைக்குப் பக்கத்தில்
அணு உலைகள் வளரட்டும்
அப்துல்கலாம் இருக்கிறார்
பார்த்துக் கொள்ள.

இப்படிக்கு
அணுவுலைகளுக்கு எதிரான
கருவாடுகள்..