Thursday, July 4, 2013

வாழை இலை


உங்கள் விருந்தில்
உப்பாக கலந்திருக்க
என்னால் முடியவில்லை.
கறிவேப்பிலையாக
இருப்பதில்
எனக்கொன்றும் 
வருத்தமில்லை.
இருந்தாலும்
இந்த இரண்டாகவும்
இல்லாமல்
நீங்கள் தூக்கி எறிந்த
எச்சில் இலையாய்
தெரு ஓரத்து குப்பைத் தொட்டியில்
தெருநாய்களுக்கு நடுவில்
விழுந்து கிடக்கின்றேன்.
சாலையைக் கடந்து செல்லும்
உங்கள் கண்களின் வெளிச்சத்தில்
என் நிர்வாணத்தை
மறைத்துக்கொள்ள முடியாமல்
நிழல்களுக்கு அடியில்
புதைந்துப் போகிறேன்.
.

உங்கள் கொல்லைப்புறத்தில்
குலை தள்ளிய வாழை
குருத்தாக விரியும் இலை
கலியாணத்திலும்
கருமாதியிலும்
உங்கள் கூடவே வருகிறது
என் சாயலுடன்.
என் சரித்திரத்தின்
பக்கங்களை
உங்கள் மொழியில்
எழுதுவதற்காய்.



No comments:

Post a Comment