Showing posts with label economics and politics. Show all posts
Showing posts with label economics and politics. Show all posts

Monday, March 11, 2024

அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்

 


கலை இலக்கியத்தை உன்னத சன்னிதானத்தில் பூஜை செய்து

புனிதம் என்ற கங்கை நீரைத் தெளித்து அதன் மீது படிந்திருக்கும்

தீட்டுக்கறையை நீக்கி இலக்கியத்தை ஆராதிக்கும் ஒளிவட்ட பிம்பங்களின் நிழல்களும் தரையில் தான் விழுகின்றன. இது இந்த மண்ணின் நியதி. நேற்று மட்டுமல்ல, இன்றும் தொடரும் இந்தப் பட்டியல் போடும் கூட்ட்த்தின் நுண்ணரசியல் இலக்கிய விமர்சனங்கள் என்ற பெயரில் அதன் அடியாழத்தில் பதுங்கி இருக்கும் அசல் முகம் அவ்வப்போது வெளிவந்துவிடுகிறது.

இப்படியாகத்தான் இலக்கிய வடிவத்தின் பெரியாரியல் தீண்டாமையும்.

     தந்தை பெரியாரின் “இல்லை, இல்லை” என்ற எதிர்மறை கோட்பாடு அழகியலுக்கு எதிரானது என்பதாக ஒரு கருத்தியலை அவர்கள் பல்வேறு மாயஜாலங்களுடன் நம்முன்  நிகழ்த்திக் காட்டினார்கள். வெங்கட் சாமி நாதனின் தமிழ் இலக்கிய விமர்சனத்திற்கும் தந்தை பெரியாரின் தமிழ் இலக்கிய விமர்சனத்திற்கும் இருக்கும் வேறுபாடு என்ன? இருவரும் தமிழ்சாதியை உருப்படாது என்றுதான் ஏசுகிறார்கள். தமிழ் நிலத்தை இது ஒரு பாலை நிலம் என்றார் வெ.சா. இதைப் பற்றி ஈழத்து விமர்சகர் எம்.ஏ. நுஃமான் காலச்சுவடு கட்டுரையில் (1998, ஜீலை செப். பக் 43) கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

     “தமிழ்ப் பாரம்பரியத்தை ஒரு பாலை என்று முற்றாக நிராகரிக்கும் வெ.சா. எழுத்து அகங்காரமானது. வரலாற்றின் பார்வை அற்றது. முற்றிலும் தன்முனைப்பானது. வெ.சா.விட மிகத்தீவிரமாக பெரியார் தமிழ்ப் பாரம்பரியத்தை நிராகரித்துவிட்டார். பெரியாரின் நிராகரிப்புக்கு ஒரு கருத்து நிலை அடித்தளம் இருந்த்து. வெ.சா.வின் நிராகரிப்புக்கு உன்னதக்கலை என்ற கானல் நீர்தான் அடிப்படை.”

     தந்தை பெரியாரின் அந்தக் கருத்து நிலையைக் கண்ட அச்சம்தான்  பெரியாரியம் கலை இலக்கிய வடிவமாகிவிட முடியாது என்று சொன்னவர்களின் அசல் பதட்டமும் தன்முனைப்பும். மீண்டும் மீண்டும் இலக்கிய விமர்சன உலகில் அந்த ஒளிவட்டப்பாதையில் சிக்கித்தவித்த பெரியார் கருத்தியல பொதுஜன உளவியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. பெரியாரியம் மேடைகளில் பேசுவதற்கானது மட்டும்தான் என்ற இன்னொரு பிம்பம் பெரியாரிய சிந்தனை வட்ட்த்திலும் புகுந்து

பெரியார் இலக்கிய மேடைகளில் தீண்டப்படாதவராக ஒதுக்கப்பட்டார்.

அதிலும் குறிப்பாக பெரியாரியல் கவிதைகள் என்பதெல்லாம் யோசித்துப் பார்க்க முடியாத ஏலியன் கனவுகளாக இருந்தன.

     இச்சூழலில்தான் சுகுணா திவாகரின் கவிதை தொகுப்பு இந்த ஒற்றைப்புள்ளியிலிருந்து புறப்படுகிறது, விமர்சன உலகின் உன்னதங்களை புனிதங்களை நோக்கி எழுதுகின்ற பெரியாரையே கவிதையின் கருவுக்குள் ஏந்தி வந்திருக்கிறது. வெறும் கருத்தியலை மடக்கி மடக்கி அடுக்குமொழியில் சொல்லிவிட்டு போய்விடும் உரைவீச்சுகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு முழுக்கவும் நவீன கவிதையின் உள்வீச்சை

தனதாக்கி, களத்தில் இறங்கி சமராடி இருக்கிறது.

     சாயல் என்ற தலைப்பில் ஒரு கவிதை.

“போகும்போது மனிதர்கள்

எதைக் கொண்டு போகிறார்கள்?”

என்றார் அவர்.

“நிழல்களை .

எல்லா மனிதர்களும்

போகும்போது தன்  நிழல்களை

எடுத்துச்சென்று விடுகிறார்கள்”

என்ற பதில் வந்தது.

“நான் நிழலையும்

விட்டுச் செல்கிறேன்” என்றார்.

பிறகு நாம் அவரின் நிழல்களானோம.

இனி, பெரியார் கவிதைகளின் நிழல்களில் உலாவருவார்,

கருந்துளை என்பது கருந்துளை அல்ல,

அது இல்லை என்று இனி எவராலும் சொல்லிவிடமுடியாது.

நாளை தமிழிலக்கிய கவிதா மண்டலத்தில் இக்கருந்துளையிலிருந்துதான்

கவிதைகள் புறப்படும். அழகியல் மையத்தைச் சுற்றி     சுற்றிவரும் அனைத்து ஒளிவட்டங்களையும் இது விழுங்கிவிடும்.!

ஆச்சரியத்தில் விமர்சன உலகம் தன் கண்டுப்பிடிப்புகளை மீளாய்வு செய்யும்.

ஆம்..

எப்படி அந்தக் கருந்துளையிலிருந்து இவ்வளவு வெளிச்சம் வருகிறதென்று .

(கருந்துளை கவிதையிலிருந்து)

முகவரியைத் தொலைத்தவர்களும்

முகவரி இல்லாதவர்களும்

தவறான முகவரியில் இருந்து கொண்டு

தங்கள் அடையாளமிழந்திருப்பவர்களும்’

இனி, முகவரியைத் திருத்திக் கொள்ளுங்கள்.

நம் பிரபஞ்சத்தின் அதிசயக் கருந்துளை,

நம் சாயலாக .. கவிதைப் பூக்களில்

“அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்”

வெளியீடு: கருப்புப் பிரதிகள்.

கவிஞர் சுகுணா திவாகர்.


------------------------------------------------------------   

    

 

Monday, February 14, 2022

பில் கேட்ஸ்.. ஸ்மைல்ஸ்

 மர்மக்கதைகளுடன் விடியும் பொழுது

2022 க்குள் கோவிட் அலைகள்
முடிவுக்கு வந்துவிடும் என்று பில்கேட்ஸ் சொல்லிவிட்டார்.
அவர் சொல்லிட்டா..?
அவர் என்ன ஆண்டவனா?




அவருக்கும் கோவிட்டுக்கும் என்ன சம்பந்தம்?
அவர் ஏன் கோவிட் எப்போ வரும்
எப்போ வருவதை நிறுத்திக்கொள்ளும்
என்று ஆருடம் சொல்கிறார்?
தெரியாது..
ஆனால்
அவர்தான் உலகின் மிகப்பெரிய பணக்காரர்.
அவர்தான் உலக சுகாதர அமைப்பிற்கு 2018-2019ல்
மிக அதிகமாக நிதி கொடுத்திருக்கிறார்.
(அதுக்கும் கோவிட் க்கும் சம்பந்தமே இல்லை,
நம்பனும் !)
பாருங்கள்:
Bill and Melinda Gates Foundation USD 455 milion
GAIL foundation USD 389 million.
யாரு இந்த கெயில்?
இந்த கெயில் பில்கேட்ஸ் வளர்த்த பூனைக்குட்டி.
GAIL தான் தடுப்பூசிகளுக்கு தாயகம்.
அதை ஆரம்பிக்க பில்கேட்ஸ் கொடுத்த நிதி
USD 750 Million.
இப்படி எல்லாம் இருக்கிறப்போ
அவர் வா என்று சொன்னால் வரும்.
போடா என்று சொன்னால் போய்டும்
அதுதான் கொரொனாவின் மர்மக்கதை.
பயப்படாதீங்க..!
**
அதிகாலையில் இப்படி ஒரு மர்மக்கதை எழுதவேண்டியதாகிவிட்ட்து.
நேற்று காக்கைச்சிறகினிலே இதழில் (பிப் 2022)வெளிவந்திருக்கும்
‘சொல்லாக்கியன்’ கனடாவிலிருந்து எழுதியிருக்கும்
கட்டுரை வாசித்தேன். வழக்கம்போல அவர் கொடுத்திருக்கும் புள்ளிவிவரங்கள் சரியானதுதானா என்று
சோதித்துப் பார்த்தேன்.
(இப்படி ஒரு கெட்டப்புத்தி என்னை விட்டுப் போக
மாட்டேங்கு.. !)
அப்புறம் இந்த funding and NGO , health , WHO இதெல்லாம்
நம் கற்பனைக்கு எட்டாத மர்மங்களைக் கொண்டிருக்கிறது..
இரவெல்லாம் இந்த பெரிய பெரிய மில்லியன் டாலர்கள்
என்னைத் துரத்திக்கொண்டே இருந்தன.
ச்சே.. பில்கேட்ஸ் ஸ்மைல் எனக்குப் பிடிக்கும்.
இப்போ பாருங்க அதையும் ரசிக்க முடியாம போயிடுச்சு.
இப்போதைக்கு இதுதான் எனக்கு கவலை!
சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன.
வேதா நிறுவனத்திற்கு
புற்றுநோய் மருத்துவமனைகள் !
ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கும்
அறக்கட்டளை உண்டு.
சோழியன் குடுமி சும்மா ஆடுவதில்லை.
மர்மக்கதைகள் தொடர்கின்றன.
$$$$$$$$

Monday, November 8, 2021

அம்பேத்கரும் ஆதிவாசிகளும்

 அம்பேத்கரும் தொல்பழங்குடி மக்களும்.










கடவுள்கள் பிறப்பதற்கு முன்பே
நாங்கள் இங்கே இருந்தோம்.
நாங்கள் பிறந்து
ரொம்ப காலத்திற்குப் பிறகுதான்
கடவுள்கள் பிறந்தார்கள்.
மனிதர்களின் மத்தியிலிருந்துதான்
அவர்கள் பிறந்தார்கள்.
நாங்கள்
கடவுள்களுக்கு
முன்பிறந்தவர்கள்..
(இந்திரனின் மொழியாக்கத்தில் தொல்பழங்குடியின் குரல்)
பாபாசாகிப் அம்பேத்கர் ஆதிவாசிகள் – schedule tribes - குறித்து
என்னமாதிரியான கருத்தை வைத்திருந்தார்?
அவர் ஆதிவாசிகளை கண்டு கொள்ளவில்லையா?
இப்படியான பல சர்ச்சைகள் இன்றும் முன்வைக்கப்
படுகின்றன.

இந்தியாவில் வாழும் தொல்பழங்குடி மக்கள்
அனைவரும் அதிகாரத்தின் பாதிப்பு என்ற ஒரு புள்ளியில்
மட்டும் தான் இணைகிறார்கள்.
தமிழ் நாட்டின் இருளர்களும் மத்தியபிரதேசத்தின்
‘கோண்ட்”தொல்பழங்குடிகளும் வேறு வேறானவர்கள்.
மராட்டிய மண்ணின் மகர்களும்
தமிழகத்தின் பறையர்களும் வேறு வேறானவர்கள்.
ஆனால் அரசு அதிகாரத்தின் பாதிப்புக்கு உள்ளாகும்
மக்கள் என்ற வகையில் schedule caste & schedule tribe
என்று வகைப்படுத்தப் படுகிறார்கள்.
(எல்லோருக்கும் தெரிந்தது தான். ஒரு நினைவூட்டல்!)
அம்பேத்கர் தொல்பழங்குடி மக்கள் குறித்து பேசியதை
“அசாம் டைம்ஸ்” வெளியிட்டிருக்கிறது.

link below:

https://assamtimes.org/node/22262


Sunday, November 10, 2019

CORPORATE SOCIAL RESPONSIBLITY

இனி, கார்ப்பரேட்டுகளின் உலகம் தான்.
முதலாளிகளை எதிர்க்கிறோம். ஆனால் அவர்கள் இல்லை 
என்றால் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை
 யார் கொடுப்பார்கள்..! 
வெட்கத்தை விட்டு ஒத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.
. நம் ஒவ்வொருவர் குடும்பத்திலும் நம் பிள்ளைகள், 
மருமகன் கள், பேரன், பேத்தி, அண்ணன் தம்பி
 இப்படி யாராவது இந்த முதலாளிகளின் அலுவலகத்தில் 
வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
 நான் கூட அரசு ஊழியரல்ல. ஒரு பன்னாட்டு வங்கியில் தானே
 வேலைப் பார்த்து வயித்துப் பிழைப்பு நடத்தினேன். 
. இனி, எந்த ஒரு சித்தாந்தமும் கார்ப்பரேட்டுகளைப்
புறம் தள்ளிவிட்டு பொருளாதரம் குறித்து பேசவே முடியாது.
 இதுதான் நிதர்சனம். உலகமயமாதலை எதிர்த்து பேசியது
 கூட போதும். அந்தப் பாதையில் வெகுதூரம் பயணித்துவிட்டோம். 
இனி, திரும்பிச் செல்வதோ அல்லது அதை விலக்குவதோ
 உலகப் பொருளதார நிலைப்பாட்டில் 
எந்த ஒரு நாடும் சமூகமும் செயல்படுத்தக் கூடியதல்ல.
இனி, நாம் பேச வேண்டியதும் செய்ய வேண்டியதும் 
முதலாளிகளின் சமூகக் கடமை, சமூகப் பொறுப்புகள் குறித்துதான் . 
அதாவது கார்ப்பரேட்டுகளின் வரவில் (turn over not profit) 
குறிப்பிட்ட ஒரு சதவீதம் சமூகத்திற்கு செலவு செய்யப்பட வேண்டும். 
இது கட்டாயமாக்கப்பட வேண்டும். 
எனக்குத் தெரியும், உங்களில் பலர் இது அரசின் கடமையல்லவா,
 இதை ஒரு முதலாளியின் கடமையாக்குவது தவறல்லவா 
என்று கேட்க கூடும்.
நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பவர்கள் Tதான் 
நம்மை ஆட்சி செய்கிறார்கள் என்ற மாய பிம்பத்தை
 எத்தனை காலம் தூக்கி சுமப்பது? 
அவர்கள் இவர்களின் ஏஜண்டுகள் தான் என்பதை வெட்கமின்றி ஏற்றுக்கொள்வோம்
.' 
நல்ல ஏஜண்டுகள் தேவை. 
கமிஷனுடன் வேலை செய்வார்கள், செய்யட்டும். 
வேலை ஒழுங்கா நடந்தா சரிதான்..
(விடிவதற்கு இன்னும் சில மணித்துளிகள் தான். 
அதிகாலை 5.10க்கு)

Monday, August 18, 2014

செங்கோட்டையில் சில காட்சிகள்




கடந்த ஆக 15, (2014) செங்கோட்டையில் இந்திய பாரம்பரிய உடையில்
தன் சொந்த வசனத்தில் குண்டுகள் துளைக்காத கண்ணாடி கூண்டுகளை
விலக்கி வைத்துவிட்டு, தனக்கே உரிய மேடைப் பாணியில் இந்திய பிரதமர்
நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்கள் முழங்கினார், முழங்கினார்.
மறுநாள், இணையங்களும் தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் சமூக வலைத் தளங்களும் அவர் பேசிய வீர வசனங்களை வெவ்வேறு தலைப்புகளில்
துண்டு துண்டாக போட்டு தங்கள் பக்கங்களை நிரப்பிக்கொள்வதில்
போட்டிப் போட்டன. அந்தப் போட்டி இன்றுவரை.. தொடர்கிறது.

மோதி அவர்களின் தோரணை ரசிக்க கூடியதாகவே இருந்தது.
அவர் சிறந்த மேடைப் பேச்சாளர் என்பதில் எனக்கும் உடன்பாடுதான்.

பெண் சிசுக்கொலைக்கு எதிராக அவர் முழங்கியதும், உங்கள் பெண் குழந்தைகளை குற்றம் சொல்லாதீர்கள், உங்கள் ஆண்பிள்ளைகளுக்கு பெண்ணை மதிக்க கற்றுக்கொடுங்கள்
என்று சொன்னதும், அடுத்த சுதந்திர தினத்திற்குள், அதாவது ஆக 15, 2015க்குள்
இந்திய பாடசாலைகள் அனைத்திலும் பெண் குழந்தைகளுக்கான கழிவறை வசதி செய்து தரப்பட்டிருக்க வேண்டும் என்று சொன்னதும் ஒரு நிமிடம் என் கண்களில் கண்ணீர் துளிர்த்துவிட்டது , போங்கள். அப்படியே ஆடிப்போய்விட்டேன் நான்.

அத்துடன், நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளையும் கலவரங்களையும் அவர் கண்டித்ததும் அக்கொடுமைகளுக்காக அவர் வெட்கப்படுவதாக சொன்னதும்
தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்திருப்பவர்களையும் கைதட்ட வைத்தது.

ஆமாம், இதை எல்லாம் எப்படி செய்யப்போகிறீர்கள் மோதி?
நீங்கள் கொண்டாடும், நீங்கள் நம்பும் இந்து தர்மம்
என்ன சொல்கிறது?
பெண் சிசுக்கொலைக்கு காரணங்கள் என்ன?
இந்த நாட்டில் பாலியல் வன்கொடுமை நடக்க கழிவறை இல்லாதது
ஒரு காரணமாக சில இடங்களில் இருந்திருக்கலாம்! ஆனால்
தொடரும் பாலியல் வன்கொடுமை ஆகட்டும், கலவரங்கள் ஆகட்டும்..
இதற்கெல்லாம் காரணமாக இருப்பது இந்த நாட்டில் நீங்கள்
வளர்த்தெடுக்கும் வருணாசிரமம் மட்டுமே !

குஜராத்தில் நீங்கள் முதல்வராக இருந்து 'குஜராத் ஒளிர்கிறது' என்று
எல்லோரையும் நம்ப வைத்தீர்கள். அப்படி எல்லாம் எந்த ஒளிவட்டமும்
குஜராத்தில் உருவாகவில்லை, டாடா நானாவுக்கு நீங்கள் கொட்டிக்கொடுத்த
மக்கள் பணத்தில் அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமைக்குரல் அமுங்கிப்போனது என்பது மட்டுமே உண்மை.

மக்கள் நல்வாழ்வு கூறுகளைப் பட்டியலிடும் போது பிறந்த குழந்தைகளின்
இறப்பு விகிதமாகட்டும், பேறுகாலத்தில் இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை ஆகட்டும்,
ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகள், ஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி
போடுவதில் கூட குஜராத் மாநிலம் சொல்லிக்கொள்ளும் படியான நிலையில்
இல்லை. அதிலும் ஒப்பீட்டளவில் தமிழகத்தைவிடவும் பிந்தங்கிய மாநிலமாக
இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது.

ஆண்ட காங்கிரசும் ஆளும் பி ஜே பி இருவரும் மேடைகளில் முழங்கும் வசனங்களும்
அதன் ஏற்ற இறக்க தொனியும் மாறுபடுகின்றனவே தவிர அவர்களின்
செயல்பாடுகளில் பெரிய வேறுபாடுகள் எதுவும் தெரியவில்லை.

இதோ உங்கள் பட்ஜெட்டிலிருந்து...

கல்விக்கு ஒதுக்கி இருக்கும் தொகை ரூ 83,771 கோடி. இதில் சர்வ சிக்ஷா
அபியான - எல்லோருக்கும் கல்வி திட்டத்திற்கு போகும் தொகை
ரூ 28,635 கோடி. மீதி தொகை அனைத்தும் உயர் தொழில் நுட்பக் கல்விக்கு
ஒதுக்கப்பட்டிருக்கிறது. (அதாவது மேல்சாதி மேல்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு)

உயர் தொழில் நுட்பக்கல்விக்கு பெருந்தொகையை ஒதுக்குவதை கேள்விக்குறி ஆக்குவது என் நோக்கமல்ல. இதன் விளைவுகள் ஒட்டு மொத்த இந்திய சமூகத்தின் வளர்ச்சியாக இல்லாமல் ஒரு சிலரின் வளர்ச்சியாக மாறி சமூக நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும். 67 ஆண்டுகள் விடுதலைக்குப் பின்னரும் இந்திய இராணுவத்திற்கு வேண்டிய போர்க்கருவிகளை உற்பத்தி செய்வதற்கான தொழில் நுட்பத்தை இவர்களின் 67 ஆண்டுகால உயர் தொழில்நுட்பக்கல்வி வழங்கவில்லை என்பதையும்
நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்றுவரை ஒவ்வொரு பட்ஜெட்டிலும்
இராணுவத்திற்கு ஒதுக்கும் தொகை நம் பட்ஜெட்டின் பெரும் செலவினத்தொகை.
மோதி அரசு சென்ற ஆண்டைவிட 12.5% கூடுதலாக நிதி ஒதுக்கி இருக்கிறது.
126 வானூர்திகளை வாங்க மட்டும் 60,000 கோடி ரூபாய் என்று காட்டுகிறது

இந்திய மக்கள் தொகை 122 கோடி. அதில் 73 கோடி மக்கள் வேளாண்மை
மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களை செய்பவர்கள். இவர்கள்
பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள்
என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவர்களின் வேளாண்மைக்கு
ரூ 1700  கோடி ஐ உங்கள் பட்ஜெட்டில் ஒதுக்கி இருந்தார் உங்கள் நிதி அமைச்சர்
அருண் ஜெட்லி. இதிலும் 1000 கோடி பாசன வசதி பெருக்கத்திற்கு என்று
பிரதமரின் தனித்திட்டத்திலிருந்து வருகிறது என்றால் வேளாண்மைக்கு
ஒதுக்கி இருப்பது வெறும் 700 கோடி என்றுதான் கணக்கில் எடுக்க வேண்டும்.
சரி இந்தக்கணக்கு ஒரு புத்தகக்கணக்கு என்று ஒதுக்கி வைத்தால் கூட
கங்கையைப் புனிதப்படுத்திட ரூ 2037கோடி ஒதுக்கியது  உங்கள் செயல் திட்டம்


இராணுவத்துறை, வாழ்நாள் காப்பீட்டு துறை, மொத்த வணிகம் மற்றும்
சில்லறை வணிகத்தில் அயல்நாட்டார் நேரடி முதலீட்டை நுழையவிட்டது
மன்மோகன் ஆட்சியில் சோனியாகாந்தி அரசு. ஆனால் அதைவிடப் பெரிதாக
செய்திருக்கிறது நரேந்திர மோதியின் அரசு.

.. இப்படியாக உங்கள் செயல்பாடுகளும் அதற்கான திட்டங்களும் நீங்கள்
சுதந்திர தின உரையில் பேசிய எந்த வீர வசனத்துடன் ஒத்துப்போகவில்லை.
ஏனொ சம்பந்த மில்லாமல் நினைவுக்கு வந்து தொலைக்கிறது..
உங்கள் திருமதி குளிப்பதற்காக அதிகாலை நான்கு மணிக்கெல்லாம்
எழுந்து யாரும் பார்க்கும் முன் பொது தண்ணீர்க்குழாயில் தண்ணீரைப்பிடித்து
அங்கேயே குளித்து வாழும் வாழ்க்கை!


தமிழிலும் இந்தியிலும் நாங்கள் நிறைய கதாநாயகர்கள் இரட்டை வேடத்தில்
நடித்தப் படங்களைப் பார்த்து பார்த்து ரசித்து வெற்றிப்படங்களாக்கி
அவர்களைக் கொண்டாடி மகிழ்ந்து ... நிறையவே ரசித்துவிட்டோம்.
அதே பாணியில் தொடரும் அரசியல் மேடைகளை எங்களால் இனியும்
கொண்டாட முடியவில்லை.

Saturday, May 3, 2014

எல்லோரும் வணங்குவோம் அம்பானியை!








ரிலையன்ஸ் நமஹ!

இனி. எல்லோரும்
அம்பானியை வணங்குவோம்.
வாழ்க அம்பானி.


சர்வம் அம்பானி மயம்.
நீ சாப்பிடுகிற சாப்பாட்டிலிருந்து
உன் வீட்டில் எரிகிற லைட் வரை
அம்பானி,
உன் கைபேசி அம்பானி.
உன் திரைப்படம் அம்பானி
நீ பார்க்கும் தொலைக்காட்சி அம்பானி
நீ வாசிக்கும் நாளிதழ் அம்பானி
நீ நுழையும் தியேட்டர் அம்பானி
நீ போட்டிருக்கும் உடை அம்பானி

நாளை நீ சுவாசிக்கும் காற்றுக்கும் வேண்டும்
அம்பானியின் அனுமதி.

அம்பானி தான் இந்தியா.
இந்தியாவில் எத்தனைத் தேர்தல்கள் வந்தாலும்
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்
உன்னையும் என்னையும் ஆண்டு கொண்டிருப்பது
அம்பானி.

செய்திகளின் ஊடாக சொல்ல வரும்
செய்திகள் சொல்லாத செய்தி சாராம்சம் இதுதான்:


தேர்தல் விறுவிறுபான செய்திகளைத் தின்று ஊடகங்கள்
கொழுத்துப் போயிருக்கின்றன.
ராகுல், பிரியங்கா, சோனியா , மோதி, மேடம் ஜெ, மயாவதி,
மம்தா திதீ, மோதி, லல்லு பிரசாத் , கெஜ்ரிவால் இதற்கிடையில்
திமுக குடும்பத்தின் கெட்டக்குமாரனாக சித்தரிக்கப்பட்டுவிட்ட
அழகிரி மனம் திறக்கிறார் என்ற இன்றைய தந்தி சேனல்
வரை... எங்குப் பார்த்தாலும் தேர்தல் மயம்.
இந்த நாடகத்தில் ஒரு துன்பியல் காட்சி போல நடந்து முடிந்துவிட்டது
சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு.
அப்பாவி மக்களின் உயிர் உடமைகள் இழப்புக்கு நடுவில்
குளிர்க்காயும் அரசியல் கட்சிகள்.
சங்கர்லால் துப்பறியும் கதை ரேஞ்சுக்கு இதில் எங்களிடம்
துப்புக் கிடைத்துவிட்டது என்று பரபரப்பான செய்திகளைத் தந்துக்
கொண்டிருக்கும் காவல்துறை..
இந்தக் குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் உரிமை மாநில அரசுக்கா
மத்திய அரசுக்கா என்ற நேர்ப்படப்பேசு....

இத்தனைக்கும் நடுவில் ஒப்பந்தம் ஆகிவிட்டது பாரத ஸ்டேட் வங்கியுடன்
அனில் அம்பானிக்கான குத்தகை உரிமை. இதைக் கவனிக்க எவருக்கும்
நேரமில்லை. எனக்குப் பல நேரங்களில் தோன்றுகிறது... இம்மாதிரியான
பரபரப்பான காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும் போது அல்லது பரபரப்பான
காட்சிகளைத் திட்டமிட்டு ஓடவிட்டு அத்தருணத்தில் எல்லோரின் கவனமும்
அதில் இருக்க திரைமறைவில் இந்தியாவைக் குத்தகைக்கு விடும் ஏலவிற்பனை அரங்கேறிக் கொண்டிருக்கிறதோ என்று.
இந்த ஏலச்சந்தையில் எல்லா கட்சிகளும் கூட்டுக்கள்ளன்கள்!
ப்ரியங்காவை மகள் போல  என்று மோதி சொன்னதைக் கூட
பல்வேறு கோணங்களில் அனைத்துக் கட்சிகளும் ஆய்வு செய்துக் கொண்டிருக்கும் கூர்மையான தருணத்தில் இதைப் பற்றிய செய்தியை
எந்த ஒரு அரசியல் கட்சியோ கட்சியின் தலைவர்களோ
வலது இடது தோழர்களோ கண்டு கொள்ளாமல் இருப்பதை
என்னவென்று சொல்லட்டும்?

இந்திய வங்கிகளின் தலைமை வங்கியாக இருப்பது ரிசர்வ் பேங்க்.
ரிசர்வ் பேங்க் இல்லாத இடங்களில் அந்தப் பொறுப்பை ஏற்பது
பாரத ஸ்டேட் பேங்க். அரசு மயமான 26 வங்கிகளும் இந்தியாவின்
ரிசர்வ் வங்கியின் அனுமதி இன்றி கிளைகள் திறக்க அனுமதி இல்லை.
இந்திய ரூபாயின் மதிப்பைத் தீர்மானிப்பதும் ரிசர்வ் பேங்க்.

தங்கள் சேமிப்புகளுக்கு தனியார் வங்கிகளும் பன்னாட்டு வங்கிகளும்
அதிக வட்டி கொடுத்தாலும் எங்களைப் போன்ற பலர் பாரத ஸ்டேட் வங்கியில்
எங்கள் சேமிப்பை வைப்பதில் பெருமை அடைகின்றோம்.
எங்கள் கணக்கும் எங்கள் சேமிப்பும் பத்திரமாக இருக்கிறது என்பது
முதல் காரணம் என்றாலும் இதற்கெல்லாம் அப்பால் எங்கள் கடின
உழைப்பில் சேர்த்திருக்கும் சேமிப்பு பணம் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு
ஏதோ ஒரு வகையில் அரசு வங்கிகளில் இருக்கும் போது பயன்படுகிறது
என்று நம்புகிறோம். ஆனால் அந்த நம்பிக்கை எல்லாம் வீணாகிவிட்டது.
நான் வங்கியில் வேலைப் பார்த்தவள். என்னால் இதை நம்ப முடியவில்லை,
இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி அனில் அம்பானியின் குழும நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் பணப்பரிவர்த்தனை நிறுவனத்துடன் செய்திருக்கும் ஒப்பந்தம்!


அந்த ஒப்பந்தத்தின்படி, 
கடன் விண்ணப்பங்களை அளிப்பது, இன்சூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், ஓய்வூதியப் பலன்கள், வீட்டுக் கடன்கள், சொத்துகள் மீதான கடன்கள், வாகனக் கடன்கள், தங்க கடன்கள், சிறு தொழில்களுக்கான கடன்கள், கடன் அட்டைகள், விவசாயக் கடன் அட்டைகள், நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகள் போன்ற பாரத ஸ்டேட் வங்கியின் சேவைகள் ரிலையன்ஸ் பணப் பரிவர்த்தனை மூலம் நடைபெறும். 
மேலும் , கடன் பத்திரங்களை வாங்குவது மட்டுமல்ல, யாருக்கு கடன் கொடுக்கலாம் என்பதையும் இனி ரிலையன்ஸ் தீர்மானிக்கும்.
கொடுத்தக் கடனை எப்படி வாங்குவது என்பதையும் ரிலையன்ஸே
முடிவெடுக்கும். இப்படி வங்கியின் சேவைப்பணிகளில் கைவைப்பது போல
வங்கியின் முடிவெடுக்கும் அதிகாரத்திலும் ரிலையன்ஸின் கை
மட்டுமே இருக்கும்.

எதை எல்லாம் இதற்கு முன் பாரத ஸ்டேட் வங்கி செய்துக்கொண்டிருந்ததோ
அதை எல்லாம் ரிலையன்சும் செய்துக் கொண்டுதான் இருந்தது. குறிப்பாக
MUTUAL FUND, LIFE INSURANCE, GENERAL INSURANCE, TREASURY INSURANCE, PROJECT FINANCE, RETAIL LOANS ஆகிய தளங்களில் பாரத ஸ்டேட் வங்கியின் போட்டியாளர் ரிலையன்ஸ். ஆனால் இந்த ஒப்பந்தத்தின் மூலம் அரசு வங்கி
தனியார் நிறுவனத்துடன் தரமான போட்டியில் களத்தில் நின்று மக்களுக்கு சேவை செய்வதை விட்டுவிட்டு...

அம்பானி நமஹ
ரிலையன்ஸ் நமஹ

என்று தானே போட்டியிலிருந்து விலகியதுடன் அப்படியே தங்கத்தட்டில் வைத்து அம்பானி கையில் கொடுத்து இனி இந்தியாவின் சர்வமும்
அம்பானி மயம் என்று சொல்லி இருக்கிறது. இது வெட்க கேடு!
கேட்டால் சொல்கிறார்கள்... இப்படி அவுட் சோர்சிங் செய்தால்
செலவு குறையுமாம், ... சேவையில் தனிக்கவனம் செலுத்தப்படுமாம்!
எப்படி இருக்கிறது பாருங்கள் இவர்கள் சொல்லும் காரணங்கள்..?

யாருக்குச் செலவு குறையும்?
யாருக்கு இதில் கொள்ளை லாபம்?
வங்கி கணக்குகள், கடன்களுக்கான சேவைக் கட்டணங்களை நீ அம்பானிக்கு
கொடுத்துவிட்டால், அதன் பின் NON FUND INCOME பூஜ்யமாகிவிடுமே வங்கிக்கு,
அத்தனையும் மொத்தமாகக் கொள்ளை அடிப்பதுடன், அதைத் தீர்மானிக்கும்
சக்தியாகவும் ரிலையன்ஸ் மாறுமே! அதனால் பாதிக்கப்படுவது யார்?


வங்கி கிளைகள் திறக்க ரிசர்வ் வங்கியின் அனுமதி வேண்டும் என்று
சொல்லிவிட்டு இப்படி அம்பானிக்கும் அவன் மச்சானுக்கும் அவுச் சோர்சிங் என்ற பெயரில் புறவாசல் வழியாக திறந்துவிட்டு கிளைகள் திறப்பதும்
பாரத ஸ்டேட் வங்கியைப் பின்பற்றி பிற அரசு வங்கிகளும் அவுட் சோர்சிங்
செய்ய வழிகாட்டுவதும் வங்கிகளை தனியார் மயமாக்குவதில் கொண்டு போய் முடியும். அதையும் விட ஆபத்தான தனிநபர் மயமாக்குவதில் கொண்டு
விடும்!


வங்கியில் வைக்கும் கணக்குகளும் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களும் வங்கிக்கும் அந்த வாடிக்கையாளருக்கும் மட்டும் தெரிந்தவை. அதை இனி
ரிலையன்சும் தெரிந்து கொள்ளுமே! வங்கி வாடிக்கையாளரின் உரிமையை
விற்கும் அதிகாரத்தை வங்கிக்கு கொடுத்தது யார்?

வேலையில்லா திண்டாட்டம் பெருகி இருக்கும் இந்திய சூழலில் இந்தியாவின்
மிகப்பெரிய வங்கி எடுத்திருக்கும் இந்த முடிவு , இந்திய இளைஞர்களின்
எதிர்காலத்தைப் பற்றி எவ்விதக் கவலையும் இல்லாமல் தாந்தோன்றித்தனமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒப்பந்தம் குறித்து வங்கியில் பணி புரிபவர்களுக்கோ
வங்கி யூனியனுக்கோ எதுவும் தெரியவில்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது.


பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிபவர்களை விட ரிலையன்ஸில் பணிபுரிபவர்கள் மிகச் சிறந்த மக்கள் சேவையைக் கொடுப்பார்கள்
என்று சொன்னால், இது அரசின் நிர்வாகத் திறமை இன்மையைக் காட்டுகிறதே தவிர இது ஒரு தீர்வல்ல.  ஆடத்தெரியாதவன் தெருக்கோணல் என்று சொன்னானாம்! இதே புத்தி நாளைக்கு வருமான வரித்துறை முதல்
காவல்துறை வரைக் கூட போகலாமே! இதே காரணத்தைச் சொல்லி
வருமான வரித்துறையை இன்னொரு அம்பானிக்கும் ரயில்வே பராமரிப்பு மற்றும் சேவையை அம்பானி மச்சான் மாப்பிள்ளைகளுக்கும்  ஒட்டு மொத்தமாக விற்று விடுங்களேன்!

வங்கியின் சேவைகள் விரிவடைந்திருந்தால் அதற்கான பணி இடங்களை நிரப்புவதும் படித்த நம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதன் மூலம் பெருக்குவதும் ஒரு அரசின் அடிப்படை கொள்கையாக இருக்க வேண்டும்.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் அந்த அடிப்படைகள் சரிந்து நொறுங்குகிறது.

வங்கியின் கிளைகள் இல்லாத இடங்களில் வங்கி சேவைகளைச் செய்ய படித்த இளைஞர்களையும் வங்கிப்பணியில் அனுபவம் கொண்டவர்களையும்
பயன்படுத்தும் திட்டத்தைக் கொண்டு வந்திருந்தார்கள். அதைப் பற்றி அன்றைய  நிதித்துறை நடுவண அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி
(இன்றைய ஜனாதிபதி) 2011, பட்ஜெட் தொடரில் பேசினார்,
" TO REACH THE BENEFITS OF BANKING SERVICES TO THE 'AAM AADMI ' THE RBI HAD SET UP A HIGH LEVEL COMITTEE ON THE LEAD BANK SCHEME" என்று பெருமையாகப் பேசினாரே, அது என்ன ஆனது? ஆம் ஆத்மிக்கு வங்கிச் சேவை
வேண்டும் என்று எண்ணியவர்கள் அம்பானி வந்தால் வங்கிச் சேவை மேலும் சிறப்படையும் என்று சொல்கிறார்களே, என்ன துணிச்சல் இருக்கிறது இவர்களுக்கு? எல்லோரையும் கேணையன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? 

பேசாமல் இந்த தேர்தல் பரபரப்புக்கு நடுவில் கமுக்கமாக இந்திய ரிசர்வ் வங்கியிலும் மொத்தமாக அவுட் சோர்சிங்கிற்கு விட்(ற்)டு விடுங்கள்,
அதோடு சேர்த்து,

இந்திய தபால் துறை,
உளவுத்துறை,
காவல் துறை
நீதித் துறை
வருமான வரித்துறை
இந்தியன் ரயில்வே
முடிந்தால் இந்திய நதிகளையும்.....
அம்பானி வகையாறாக்களுக்கு
 ஒவ்வொருவருக்கும் பட்டா போட்டு
அவுட் சோர்சிங் என்ற பெயரில் 999 வருடங்களுக்கு மொத்தமாகக்  குத்தகைக்கு விட்டு விடுங்கள். 

அரோகரா...