Monday, March 11, 2024

அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்

 


கலை இலக்கியத்தை உன்னத சன்னிதானத்தில் பூஜை செய்து

புனிதம் என்ற கங்கை நீரைத் தெளித்து அதன் மீது படிந்திருக்கும்

தீட்டுக்கறையை நீக்கி இலக்கியத்தை ஆராதிக்கும் ஒளிவட்ட பிம்பங்களின் நிழல்களும் தரையில் தான் விழுகின்றன. இது இந்த மண்ணின் நியதி. நேற்று மட்டுமல்ல, இன்றும் தொடரும் இந்தப் பட்டியல் போடும் கூட்ட்த்தின் நுண்ணரசியல் இலக்கிய விமர்சனங்கள் என்ற பெயரில் அதன் அடியாழத்தில் பதுங்கி இருக்கும் அசல் முகம் அவ்வப்போது வெளிவந்துவிடுகிறது.

இப்படியாகத்தான் இலக்கிய வடிவத்தின் பெரியாரியல் தீண்டாமையும்.

     தந்தை பெரியாரின் “இல்லை, இல்லை” என்ற எதிர்மறை கோட்பாடு அழகியலுக்கு எதிரானது என்பதாக ஒரு கருத்தியலை அவர்கள் பல்வேறு மாயஜாலங்களுடன் நம்முன்  நிகழ்த்திக் காட்டினார்கள். வெங்கட் சாமி நாதனின் தமிழ் இலக்கிய விமர்சனத்திற்கும் தந்தை பெரியாரின் தமிழ் இலக்கிய விமர்சனத்திற்கும் இருக்கும் வேறுபாடு என்ன? இருவரும் தமிழ்சாதியை உருப்படாது என்றுதான் ஏசுகிறார்கள். தமிழ் நிலத்தை இது ஒரு பாலை நிலம் என்றார் வெ.சா. இதைப் பற்றி ஈழத்து விமர்சகர் எம்.ஏ. நுஃமான் காலச்சுவடு கட்டுரையில் (1998, ஜீலை செப். பக் 43) கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

     “தமிழ்ப் பாரம்பரியத்தை ஒரு பாலை என்று முற்றாக நிராகரிக்கும் வெ.சா. எழுத்து அகங்காரமானது. வரலாற்றின் பார்வை அற்றது. முற்றிலும் தன்முனைப்பானது. வெ.சா.விட மிகத்தீவிரமாக பெரியார் தமிழ்ப் பாரம்பரியத்தை நிராகரித்துவிட்டார். பெரியாரின் நிராகரிப்புக்கு ஒரு கருத்து நிலை அடித்தளம் இருந்த்து. வெ.சா.வின் நிராகரிப்புக்கு உன்னதக்கலை என்ற கானல் நீர்தான் அடிப்படை.”

     தந்தை பெரியாரின் அந்தக் கருத்து நிலையைக் கண்ட அச்சம்தான்  பெரியாரியம் கலை இலக்கிய வடிவமாகிவிட முடியாது என்று சொன்னவர்களின் அசல் பதட்டமும் தன்முனைப்பும். மீண்டும் மீண்டும் இலக்கிய விமர்சன உலகில் அந்த ஒளிவட்டப்பாதையில் சிக்கித்தவித்த பெரியார் கருத்தியல பொதுஜன உளவியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. பெரியாரியம் மேடைகளில் பேசுவதற்கானது மட்டும்தான் என்ற இன்னொரு பிம்பம் பெரியாரிய சிந்தனை வட்ட்த்திலும் புகுந்து

பெரியார் இலக்கிய மேடைகளில் தீண்டப்படாதவராக ஒதுக்கப்பட்டார்.

அதிலும் குறிப்பாக பெரியாரியல் கவிதைகள் என்பதெல்லாம் யோசித்துப் பார்க்க முடியாத ஏலியன் கனவுகளாக இருந்தன.

     இச்சூழலில்தான் சுகுணா திவாகரின் கவிதை தொகுப்பு இந்த ஒற்றைப்புள்ளியிலிருந்து புறப்படுகிறது, விமர்சன உலகின் உன்னதங்களை புனிதங்களை நோக்கி எழுதுகின்ற பெரியாரையே கவிதையின் கருவுக்குள் ஏந்தி வந்திருக்கிறது. வெறும் கருத்தியலை மடக்கி மடக்கி அடுக்குமொழியில் சொல்லிவிட்டு போய்விடும் உரைவீச்சுகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு முழுக்கவும் நவீன கவிதையின் உள்வீச்சை

தனதாக்கி, களத்தில் இறங்கி சமராடி இருக்கிறது.

     சாயல் என்ற தலைப்பில் ஒரு கவிதை.

“போகும்போது மனிதர்கள்

எதைக் கொண்டு போகிறார்கள்?”

என்றார் அவர்.

“நிழல்களை .

எல்லா மனிதர்களும்

போகும்போது தன்  நிழல்களை

எடுத்துச்சென்று விடுகிறார்கள்”

என்ற பதில் வந்தது.

“நான் நிழலையும்

விட்டுச் செல்கிறேன்” என்றார்.

பிறகு நாம் அவரின் நிழல்களானோம.

இனி, பெரியார் கவிதைகளின் நிழல்களில் உலாவருவார்,

கருந்துளை என்பது கருந்துளை அல்ல,

அது இல்லை என்று இனி எவராலும் சொல்லிவிடமுடியாது.

நாளை தமிழிலக்கிய கவிதா மண்டலத்தில் இக்கருந்துளையிலிருந்துதான்

கவிதைகள் புறப்படும். அழகியல் மையத்தைச் சுற்றி     சுற்றிவரும் அனைத்து ஒளிவட்டங்களையும் இது விழுங்கிவிடும்.!

ஆச்சரியத்தில் விமர்சன உலகம் தன் கண்டுப்பிடிப்புகளை மீளாய்வு செய்யும்.

ஆம்..

எப்படி அந்தக் கருந்துளையிலிருந்து இவ்வளவு வெளிச்சம் வருகிறதென்று .

(கருந்துளை கவிதையிலிருந்து)

முகவரியைத் தொலைத்தவர்களும்

முகவரி இல்லாதவர்களும்

தவறான முகவரியில் இருந்து கொண்டு

தங்கள் அடையாளமிழந்திருப்பவர்களும்’

இனி, முகவரியைத் திருத்திக் கொள்ளுங்கள்.

நம் பிரபஞ்சத்தின் அதிசயக் கருந்துளை,

நம் சாயலாக .. கவிதைப் பூக்களில்

“அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்”

வெளியீடு: கருப்புப் பிரதிகள்.

கவிஞர் சுகுணா திவாகர்.


------------------------------------------------------------   

    

 

No comments:

Post a Comment