Monday, March 7, 2022

அவள் கவிதையில் ரத்தவாடை - (ராபியா அ பால்கி)


 

ராபியா அ  பால்கி ..முதல்  பெர்சியன் பெண்கவி. அன்றைய பால்க்

இன்றைய ஆப்கானிஸ்தான். அவள் கவிதைகள் எழுதி இருக்கிறாள்.

ஆனால் அவை மொத்தமாக கிடைக்கவில்லை!

அவள் வாழ்ந்த வாழ்க்கையை அவள் காதலை ஆப்கானிஸ்தான்

பெண் சமூகம் தங்கள் வாய்மொழியாக கடத்திக்கொண்டிருந்தார்கள்.

ஷாகிரூதின், நூருதீன் கவிதைகளில் அவள் வாழ்க்கை சரித்திரம்

துண்டு துண்டாக பேசப்படுகிறது என்பதைத் தவிர அவள் வாழ்ந்த

வாழ்க்கையின் சுவடுகளை மிகவும் கவனமாக அதிகார வர்க்கம் துடைத்து வைத்திருக்கிறது. ஆனாலும் அவள் அவர்கள் இலக்கியத்தின் முதல் பெண் கவி என்பதாலோ என்னவோ அவளுக்குரிய நினைவிடங்களை உருவாக்கி அவளை சிலையாக வடித்து வழிபாட்டுக்குரியவளாக்கி  நிஜ வாழ்க்கையிலிருந்து வெகுதூரத்தில் கொண்டு வைத்திருக்கிறது.


 

அவள் அவனுக்காக தன் தேகத்தின் ரத்தத்தால் எழுதிய கவிதைகள்

அவள் காதலை ரத்தவாடையுடன் பேசிக்கொண்டிருக்கின்றன.

அவளோ மேட்டுக்குடிப்பெண். அவள் காதலித்த அவன் ஓர் அடிமை.

தன் சகோதரிடனிடம் அடிமையாக இருந்த துருக்கி அடிமை பக்தாஷ்க்காக அவள் எழுதிய கவிதைகளை பிற்காலத்தில் அவள் இறைவனுக்கு எழுதிய கவிதைகளாக சூஃபியசம் வகைப்படுத்திக் கொண்டது.

&&

அவள் :

இன்மையுன் உண்மையுமாக நீயே இருக்கிறாய்.

நீ என்னிடம் இல்லையென்றால்

வேறு எங்கிருக்கிறாய்?

என் விழிகள் உன்னால் பிரகாசமடைகின்றன.

என் உள்ளம் உன்னால் அர்த்தமுள்ளதாகிறது.

வா.. என் விழிகளையும் ஆன்மாவையும்

அழைத்துச் செல்ல வா.

அல்லது

ஒரு வாளால் என் உயிரை எடுத்துவிடு..

&&

அவன்:

உன்னைப் பார்க்கவே முடியவில்லையே

நீயின்றி எனக்கு அமைதியும் நிம்மதியும் இல்லையே

நீயின்றி இந்த அவஸ்தையை

எப்படி சுமக்கப்போகிறேன்?

உன் கூந்தலின் நுனி என் தலைப்பாகையை துளைக்கிறது.

உன் முகம் என்னைக் காதலில் தள்ளுகிறது.

உன் கூந்தலால் என் வாழ்க்கை முடிந்துவிட்டது.

&&

.08 மார்ச்.. சர்வதேச மகளிர் தினத்தில் ராபியாவுக்கும்

அவள் காதலையும் வாழ்க்கையையும் தங்கள் வாய்மொழியில்

கட்த்தி வந்திருக்கும் பெண்களுக்கும் இன்றும் அவள் நினைவிடத்தில்

இளைப்பாறும் பெண்களுக்கும் சேர்த்தே “மகளிர் தின வாழ்த்துகள்”.

 

No comments:

Post a Comment