Friday, March 18, 2022

The Kashmir Files VS Mumbai Diaries 26/11

 

காஷ்மீரைப் பார்க்கவில்லை.
பாதி உண்மையை சொல்வது என்பது
முழுப் பொய்யை சொல்வதைவிட ஆபத்தானது.
ஆனால் அந்த ஆபத்தை எப்போதும் கொழுந்துவிட்டு
எரியவைத்துக்கொண்டே இருப்பதன் மூலம் அரசியல்
ஆதாயம் தேடுகிறார்கள் என்பதை பாதிக்கப்பட்ட அவர்களும் உணர்ந்திருக்கிறார்கள்.

இந்துக்கள் விரட்டப்பட்டார்கள். உண்மை.
 ஆனால் அதைவிட உண்மை விரட்டப்பட்டதும்
பாதிக்கப்பட்டதும் 
இந்துக்கள் மட்டுமல்ல.
காஷ்மீர் – சுதந்திர இந்தியாவின் காஷ்மீரில் தான்
இதுவும் நடந்திருக்கிறது!
1991, பிப்ரவரி மாதம் 23 ஆம் நாள் “தேசியம்” என்ற பெயரால்
 POSHPORA கிராமத்தில் என்ன நடந்தது?
பாதி விதவைகள் – HALF WIDOWS இதுவும்
காஷ்மீர் தான்.
ஆனால் காட்சிப்படுத்தவோ கதையாகக்கூட எழுதவோ
முடியாது.
பார்க்காத காஷ்மீர் பயமுறுத்துகிறது.
ஆனால் நானே சாட்சியாகவும் ரத்தக்கறையுடனும்
நின்றுகொண்டிருந்த ‘மும்பை டைரிஸ் ‘ 
பயமுறுத்தவில்லை! நம்பிக்கை தருகிறது.
 
வி. டி. ரயில்வே ஸ்டேஷனில் துப்பாக்கியில்
சுட்டுத்தள்ளினார்கள்.
எம் மதிப்புமிக்க காவல்துறை அதிகாரிகளை
அவர்களின் துப்பாக்கியிலிருந்து காப்பாற்ற முடியவில்லை.
எங்கள் மும்பையின் கம்பீரமான தாஜ் ஹோட்டலில்
அவர்கள் புகுந்து வேட்டையாடினார்கள்.
எதுவும் செய்யமுடியவில்லை. அந்த நிகழ்வு நடந்த அந்த நாளில்
(26/11) பம்பாய் மருத்துவமனையில் என்ன நடந்திருக்கும்?
காட்சியாக விரிகிறது மும்பை டைரியின் பக்கங்கள்.
காவல்துறை அதிகாரிகள் டாக்டரை உணர்ச்சி வேகத்தில்
துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள்.
இப்பெரு நகரத்தின் காவல்துறை அதிகாரியைக்
காப்பாற்ற முடியாத உன் மருத்துவம்
எப்படி ஒரு தீவிரவாதியை ,
எம் மக்களை சுட்டுக்கொன்றவனைக் (கசாப்)
காப்பாற்ற மருத்துவம் பார்க்கிறது ?
அவர்களின் அந்த நாளும்
அந்த உணர்வுகளும் அப்படித்தான் இருந்திருக்க முடியும்.
ஆனால் காட்சி அதை மட்டும் காட்டியதுடன்
முடிந்துவிடவில்லை. டாக்டர் கெளசிக் சொல்கிறார்,
“என் மருத்துவம் எனக்கு சொல்லிக் கொடுத்திருப்பது
என் எதிரில் இருப்பவன் யார் என்று பார்த்து
மருத்துவம் செய்ய வேண்டும் என்றல்ல.
எனக்கு என்னிடம் வரும் எல்லோருமே
நோயாளிகள் தான்.
அவர்கள் யார் என்பதை நான் பார்ப்பதில்லை”
இரண்டுமே இந்த தேசத்தின் ரத்தக்கறை படிந்த
வரலாறுகள் தான்.
 
காஷ்மீர் பைல்ஸ் ரத்தக்கறையை எரியூட்டி
அரசியலாக்கப்பார்க்கிறது.
மும்பை டைரிஸ் .. படிந்துவிட்ட ரத்தக்கறையை 
துடைத்து மனித மனங்களை
 வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது.
 
துப்பாக்கிகளுக்கு தான் அரசியலும் மதமும்
 அதிகாரபோதையும்
வரலாறாக இருக்கிறது.
சிந்திய ரத்தங்களில் அவை இல்லை.

No comments:

Post a Comment