Monday, March 21, 2022

ஆக்டோபஸ் அரசியல்

 


நடுநிலைமை என்பது அயோக்கியத்தனம், பிழைப்புவாதம்”
“இக்கட்டுரைகள் நடுநிலைப் பார்வையோடு எழுதப்பட்டவை
 என்று சொன்னால் அது மாபெரும் பொய்” 
என்று தன் ஆக்டோபஸ் காவியங்களின் 
பக்கங்களைப் பற்றி தெளிவாக உறுதியுடன்
பிரகடனப்படுத்திவிடுகிறார் எழுத்தாளர் எழிலரசு அவர்கள்.
 
நடுநிலைமை என்பது ஓர் அயோக்கியத்தனம்.
இன்னும் சொல்லப்போனால்
சமூகத்தின் கையாலாகததனம். ..
நடுநிலைமை என்பது ஒரு தப்பித்தல்.
ஒருவகையான பிழைப்புவாதம்.
சமூகத்தின் மீது அக்கறை கொண்ட எழுத்துகள்
அறம் பிழைப்பதில்லை.
அறம் பிழையாமைதான் எழுத்தறம்.
அதை ஆக்டோபஸ் காவியம் எழுதிப் பார்த்திருக்கிறது.
 
பத்திரிகையில் அவ்வப்போது வெளிவந்தக் 
கட்டுரைகளின் தொகுப்பு என்ற வகையில்
  இக்கட்டுரைகள் பல்வேறு காட்சிகளை முன்வைக்கும் 
கலைடாஸ்கோப்பாக இருக்கின்றன. 
 சமகால அரசியலுடன் இலக்கியம் முதல்
 இன்றைய முகநூல் கலாச்சாரம் வரை 
தன் பார்வையை முன்வைத்திருப்பது
 இக்கட்டுரைகளின் சிறப்பு.
 
அரசியல் தலைவர்களைப் பற்றி எழுதுகிறபோது 
அறிந்தச் செய்தியின் ஊடாக அறியப்படாத தகவல்களை 
முன்வைப்பது முக்கியம். அதுதான் அப்பக்கங்களை 
கனமுள்ளதாக்கி வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் 
நடுவில் இனம்புரியாததொரு நேசத்தையும் மரியாதையையும் உருவாக்கிவிடுகிறது.
அடுத்தமுறை வாசகன் அக்குறிப்பிட்ட எழுத்தாளரின் 
எழுத்துகளைத் தேடிவாசிக்க வைத்துவிடும் . 
இதைக் கச்சிதமாக எழுத்தாளர் எழிலரசின்
ஆக்டோபஸ் காவியம் செய்திருக்கிறது.
உதாரணமாக கலைஞர் அவர்களின் பொன்னர் சங்கர்
 வரலாற்று நாவலைப் பர்றிய கட்டுரை
. இது தமிழ் வாசகர்களுக்குப் புதிய செய்தி அல்ல. 
அந்த தெரிந்த செய்தியின் ஊடாக வாசகர்கள் 
அறியாத இன்னொரு பக்கத்தை திறக்கிறார்.
இதுவரை எழுதப்பட்ட வரலாற்று நாவலாசிரியர்கள் 
அனைவரும் தங்கள் கதைகளுக்கான தரவுகளை
 கல்வெட்டுகள், மெய்க்கீர்த்திகள், ஓலைச்சுவடிகள், 
அருங்காட்சியகங்கள், இலக்கியங்கள் மற்றும் அறிஞர்களின் ஆய்வுகளிலிருந்து எடுத்திருக்கிறார்கள். 
ஆனால் கலைஞரோ மக்கள் பாடல்களிலிருந்து 
 தகவல்களைத் திரட்டி இருக்கிறார் என்பதையும் 
அதற்கு உதவிய கட்சிக்காரர் சுப்புலட்சுமி ஜெகதீசன் முதல் கவிஞர் சக்திக்கனல் வரை தன் முன்னுரை பின்னுரையில் 
கலைஞர் குறிப்பிட்டிருந்ததையும்
பதிவு செய்கிறார், இக்கட்டுரை எழுதியப்பின்
 பின்னூட்டமாக வந்த அரியதொரு தகவலையும் 
கட்டுரையில் இணைத்திருப்பது இனவரைவியல் 
ஆய்வில் இன்னொரு புள்ளியாக இருக்கிறது. 
 கொங்கு வேளாளர் முருகன்-தெய்வானையை 
வணங்குபவர்கள் என்பதும் 
வேட்டுவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 
முருகன்-வள்ளியை வணங்குபவர்கள் என்பதும் 
 தகவலாக மட்டும் பதிவாகவில்லை.
முருகன் தமிழ்ச் சமூகத்தின் ஆதி தெய்வம். 
அவனோடு இருக்கும் வள்ளியும் தெய்வானையும் 
இருவேறு சமூகத்தின் அடையாளமாக இருந்தது போய் 
அவரவர் சாதிய அடையாளமாகி இறுதியில்
 முருகன் வள்ளி தெய்வானை இருவருடனும் 
காட்சியளிக்கும் புதியகதையின் முகவரியை 
குறிப்பாக உணர்த்தியும் இருக்கிறார் எழிலரசு அவர்கள்.
 
மறந்துகொண்டே இருப்பது மனித இயல்பு.
 அதை நினைவூட்டிக்கொண்டே இருப்பது எழுத்துமரபு. 
காங்கிரசு கமிட்டியிலிருந்து
விலக்கப்பட்டிருந்த மதன் மோகன் மாளவியாவும் 
ராஜாகோபாலாச்சாரியரும்
மீண்டும் காங்கிரசு காரியக்கமிட்டியில் 
சேர்த்துக்கொள்ளப்பட்டது ஏன்? என்ற
கேள்வியை 1931 ஆகஸ்டு மாதம் விருது நகரில்
 நடைபெற்ற 3வது சுயமரியாதை மாநாட்டில் 
திரு செளந்திரபாண்டியனார் ஆற்றிய உரையை 
நினைவூட்டுகிறார். மறக்கப்பட்ட இந்த வரிகளின் ஊடாக
 இன்று தன் கரங்களை விரித்திருக்கும்
 ஆக்டோபசின் புதிர்களை விடுவிக்கிறார்.
 
வெளிப்படுத்துவதற்கு சிக்கலான கருத்துகளையும்
 சரியானப் புரிதலுடன் வெளிப்படுத்தும்போது
 அக்கருத்து வாசகனிடம் சரியாகப் போய்ச்சேர்ந்துவிடும். 
ஆனால் ஒவ்வொரு கட்டுரையாளருக்கும் 
இது மிகவும் சிக்கலான சவாலான செயல்.
 காரணம் சிக்கலான கருத்துகளை எழுதும்போது 
வெளிப்படுத்துவதில் சிறிது தவறு ஏற்பட்டாலும் 
அதுவே அந்த எழுத்து சொல்லவந்ததையும் 
கெடுத்து இன்னொரு திரிபு நிலைக்கு கொண்டுவந்து
 விட்டுவிடும். அதனால் தான் பலர் இம்மாதிரியான 
சில சிக்கலான முடிச்சுகளைத் தொடுவதில்லை.
 நமக்குஎதற்கு வம்பு? பிரச்சனைகள் வேண்டாம்
 என்று ஒதுங்கிவிடுவார்கள். 
ஆனால் ஒதுங்கி விடுவதால் பிரச்சனைகள்
 இல்லை என்றாகிவிடுமா என்ன?
எழிலரசு அப்படி ஒதுங்கிவிடுபவரில்லை. 
காந்தி அம்பேத்கர் சந்திப்பு,
காந்தியின் ராம ராஜ்யம் என்ற கற்பனாவாதம் , 
அதை எதிர்கொண்ட நேருவின் அரசியல்.. 
இதை எல்லாம் கட்டுரையாக்கி இருக்கிறார்.
 கட்டுரையின் தலைப்பும் பொருத்தமாக
 “அறம் தவறிய அரசியல் பிழைகள்” 
 
ஆக்டோபஸ் காவியம் சமகால அரசியலையும்
 கடந்த கால அரசியலூடாக பார்த்திருக்கிறது. 
சமகாலத்தை புதிய தொரு கோணத்தில் அணுக 
வாசகனுக்கு வழிகாட்டுகிறது. 
இன்னும் சில பக்கங்கள் வாசகனை மேலதிக 
தேடலுக்கும் இட்டுச்செல்கிறது. 
அண்மையில் வெளிவந்திருக்கும் 
சமூக அரசியல் கட்டுரைத்தொகுதிகளில்
 'ஆக்டோபஸ் காவியம் 'முக்கியமானது.. வாழ்த்துகள். 
 
&&&
 
ஆக்டோபஸ் காவியம் (கட்டுரைகள்)
எழுத்தாளர் வே. எழிலரசு
வெளியீடு : இருவாட்சி 
கைபேசி: 9444640986.
பக். 160. விலை ரூ 170.
 

No comments:

Post a Comment