Tuesday, March 15, 2022

வரலாறுகள் விசித்திரமானவை.

 

தாஜ்மஹால் காதலின் சின்னம் என்ற பிம்பம் 
கட்டி எழுப்பபட்டு, உலகின் ஏழு அதிசயங்களில் 
ஒன்றான சமாதியாக வெள்ளைப்பளிங்குகளில் 
வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.
 ஆனால் தாஜ்மஹாலைக்கட்டிய ஷாஜஹானுக்கு
 பல காதலியர்கள் உண்டு. 
பல மனைவியர்களும் உண்டு. 
பலதாரமணத்தை ஏற்றுக்கொண்ட அரண்மனை வர்க்கத்தின்
பிரதி நிதி மட்டுமல்ல, அதை சட்டப்பூர்வமாக 
நியாயப்படுத்தி இருக்கும் இசுலாமிய மதமும் 
 அவன் பலதாரமணத்தை குற்றமாக்கியதில்லை.
 
ஆனால் அதே இசுலாமிய சமூகத்திலிருந்து 
அதே அரண்மனை வர்க்கத்திலிருந்து 
ரொம்பவும் வித்தியாசமான ஒர் அரசன் வரலாற்றில் 
அதிகம் நினைக்கப்படுவதில்லை. 
அவன் டில்லியை ஆண்ட சுல்தான் ‘நசுரூதின் முகமதுஷா” 
இந்த சுல்தான் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்க்கையை வாழ்ந்தவன்.அதிசயமான அரசன். 
அவன் அரண்மனை அந்தப்புரத்தில் 
அவள் மட்டும் தான் இருந்தாள் என்பது மட்டுமல்ல, 
 அவன் அரண்மனையின் அடுக்களையிலும் 
அவள் மட்டும் தான் இருந்தாளாம்.
அதாவது அவர்களுக்கான உணவை 
அவள் சமைத்துக்கொண்டாள் ! 
 
குரானை வாசித்தும் படிஎடுத்தும்
  தொழுகையின் போது அணியும் குல்லாய் செய்தும் 
வரும் வருமானத்தில் தான் டில்லி சுல்தானும் 
அவன் மனைவியும் கடைசிவரை வாழ்ந்திருக்கிறார்கள். 
அரசு கஜானாவை தன் சொந்த செலவுக்கு 
அவன் திறக்கவில்லை. 
 
ஒருவனுக்கு ஒருத்தி என்றவுடனேயே
 சீதாராமனை கொண்டுவந்து நிறுத்துகிறோம். 
ராமன் வாழ்ந்தாரா இல்லையா 
அது வரலாறா புனைவா என்பதற்குள் போனால் 
அயோத்தி பிரச்சனை ஆகிவிடும். 
 ஆனால் வரலாற்றில் அப்படி ஒர் அரசன் 
வாழ்ந்திருக்கிறான். 
அவனும் அவன் வாழ்க்கையும் புனைவல்ல, 
நிஜம் என்பதை தேசங்கள் வரலாறாகவோ 
புனைவாகவோ கூடஎழுதிக்  கொள்வதில்லை! 
 
இப்படியான விசித்திரமான அரசர்களை 
வரலாறு நினைவில் வைத்திருப்பதில்லை. 
காரணம் அடுத்த தேசங்களுடன் போரிடுவதும்
  தன் தேச எல்லைகளை விரிவுப்படுத்திக் கொள்வதும் 
அதற்காக தன் தேசமக்களை பலியிடுவதுமாக
 வாழ்ந்த அரசர்களை, 
வரலாறு , பேரரசர்கள் என்று முடிசூடி கொண்டாடுகிறது.
 
அரசனுக்கு அற ஒழுக்கம் தேவையில்லை என்பது
பொதுப்புத்தியில் இப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறதோ?!!
அன்று அரசன்
இன்று தலைவன்
 
விசித்திரமான உலகம்..
வரலாறுகளும் விசித்திரமானவை!


No comments:

Post a Comment