Friday, November 20, 2020

பொதுஜனத்தின் தேசப்பக்தி

 

தேசப்பற்றை எப்படி எல்லாம் நிரூபிக்க வேண்டி இருக்கிறது

என்பதை யோசித்துப் பார்க்கிறேன்.

10 ஆண்டுகள் முடிந்துவிட்டன.   

வங்கதேசத்து தலைநகர் டக்காவில்

2008 அக்டோபர் 7 முதல் 10 வரை

ஹோப் பவுண்டேசனில் நடைபெற்ற கருத்தரங்கம்.

தங்கும் வசதிகளும் மிகப்பெரிய நூலகமும்

கொண்ட ஹோப் பவுண்டேசன். டாக்கா.

இந்திய தேர்தல் சீர்திருத்தங்களைப் பற்றிய

கருத்தரங்கம். உலக நாடுகளின் தேர்தல் முறைகளை

தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு. அவர்களைச்

சந்திக்கவும் உரையாடவும் கருத்துப் பரிமாறவும்..

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தவர்கள்

மறைந்த M C Raj மற்றும் அவர் வாழ்க்கைத்துணை

ஜோதிராஜ்.

எம்.சி.ராஜ் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் "Dalitocracy" நூலை

 தாய்லாந்திலிருந்து வந்திருந்த முகமது அப்டுஸ் சபுர் வெளியிட

முதல் பிரதியை பாகிஸ்தானிலிருந்த வந்திருந்த கலாவந்தி பெற்றுக்கொண்டார்.

கலாவந்தி பழகுவதற்கு மிகவும் இனிமையான பெண்.

தனித்து வருவதற்கு அவர் குடும்பம் அவரை அனுமதிக்கவில்லை

என்பதால் துணைக்கு இன்னொரு பெண்ணையும் அழைத்து

வந்திருந்தார். அவருடனான என் நட்பு அதன் பின் மின்னஞ்சல்

வழியாக தொடர்ந்த து.

அவரோ பாகிஸ்தான்  பெண்.

நானோ இந்தியப் பெண்.

நட்பு என்பது தேசவிரோதமாகிவிடலாம் என்று

நாங்கள் இருவருமே நினைக்கும் சூழல் ஏற்பட்ட து.

விடைபெற்றுக்கொண்டோம்.

இதை எழுத்துகளில் எழுதிக்கொள்ளாமல்

ஒரு வார்த்தை பரிமாறிக்கொள்ளாமல்

புரிந்து கொண்டோம்..

என்ன விந்தையான உலகமிது.

எப்படியோ நாங்கள் இருவரும்

எங்கள் தேசப்பக்தியைக் காப்பாற்றிக்கொண்டோம்.

இன்னொரு கவிஞரை நான் மும்பை ஜஹாங்கீர் ஆர்ட் காலரி

ஓவியக்கண்காட்சி முதல் நாள் தே நீர் விருந்தில்

சந்தித்தேன். அவரோ வங்கதேசத்திலிருந்து மருத்துவம்

பார்ப்பதற்காக இந்தியா வந்திருந்தார். ரிடையர் ஜட்ஜ்.

அவரை மீண்டும் பன்மொழி கவிஞர்கள் கவிதா நிகழ்வில்

சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த து. அவர் தான் வழங்கிய

தீர்ப்புகளை மறுவாசிப்பு செய்யும் கவியையை வாசித்தார்.

ஒரு நீதிபதியிடம் எழுதப்பட்ட சட்டங்களும் மனசாட்சியும்

மாறி மாறி பேசுகின்றன..கவிதை மிகுந்த வரவேற்பை

பெற்றது.  நான் வாசித்த மகளே வந்துவிடு கவிதையும்

புத்தக அலமாரியும் அவருக்குப் பிடித்துப் போய்விட்ட து.

அவரும் என்னுடன் மின்ன ஞ்சல் தொடர்பில் இருந்தார்.

மருத்துவம் முடிந்து வங்கதேசம் புறப்படும் போது

இனி உங்களுடன் தொடர்பு கொள்வது சாத்தியப்படுமா

தெரியவில்லை என்பதை வெளிப்படையாக சொல்லி

வாழ்த்து விடைபெற்றார்.

இப்படியாக நானும் அவரும் அவரவர்

தேசப்பக்தியைக் காப்பாற்றிக் கொண்டோம்



.

டாக்காவில் இருந்த 5 நாட்களில் மற்றவர்கள் எல்லாம்

ஷாப்பிங்க் போகும்போது நான் அங்கிருந்த நூலகத்தில்

என்  நேரத்தை செலவு செய்தேன்.

எதை எல்லாம் நாம் பாகிஸ்தானியர்களுக்கு எதிராகச்

சொல்கிறோமோ அதையே தான் அவர்களும்

இந்தியர்களுக்கு எதிராக அவர்கள் தேசத்தில்

சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை

மிகத்தெளிவாக புரிந்து கொண்டேன்.

இந்தியப் பிரிவினை குறித்த புத்தகங்களில்

 நமக்கு இந்தியாவின் பார்வை தான் தெரியும்.

அவர்களின் பார்வையையும் வாசிக்க முடிந்த து.

அத்துடன் பிரிவினையின் போது பாகிஸ்தான் தளபதி

எழுதியபுத்தகம்.. மற்றும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட

புத்தகங்களை வாசித்து குறிப்பெடுத்துக் கொண்டேன்.

ஆனால் அதைப் பற்றி எல்லாம் எங்காவது எதாவது

எழுதி இருக்கிறேனா..இல்லையே..

இப்படியாக நான் என்னை

தேச விரோத சக்திகளிடமிருந்து காப்பாற்றிக்கொண்டு

என் இருத்தலைக் காப்பாற்றிக்கொள்வதில்

கவனமாக இருக்கிறேன்.

 

 

 

 

 


No comments:

Post a Comment