Thursday, August 15, 2019

பிச்சைப்பாத்திரம்

உறவுகள் & உடன்பிறப்புகள், நட்பு.. இவர்களின் விருந்துகளில் கறிவேப்பிலையாக இருந்திருக்கிறேன் என்பதை ரொம்பவும் காலம் கடந்து உணர்கிறேன்.
இளமையின் காதல் , வசந்தங்கள் , துடிப்பு உற்சாகம் உழைப்பு, பணம் இப்படியாக என் இழப்புகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. இத்தனையும் இழந்ததெல்லாம் யாருக்காக?
அந்த இழப்பில் ஏதோ ஒரு போதை
தூக்கமில்லாத நாட்கள்
களத்தில் தனித்து நின்று களமாடிய நாட்கள்
தொட்டிலை ஆட்ட மறந்து
குழந்தைக்கு ஊட்ட மறந்து ஓடிய ஓட்டங்கள்
இணையவில்லை தண்டவாளங்கள்.
எதையுமதிர்ப்பார்க்காமல் எவரிடமும் கை ஏந்தாமல் 
கொடுத்தே வாழ்ந்தது
 பெருமைக்குரியதாக இல்லாமல்
 இவ்வளவு ஏமாளியாகவா இருந்திருக்கிறோம்
 என்று யோசிப்பது யார்?
அந்த நான் தானா!
என் நடை தள்ளாடுகிறது.
 அட்சயப்பாத்திரம் உடைந்துவிட்டதாக 
அவர்கள் நினைக்கிறார்கள்.
யாரறிவார்..?
அம்மாவின் ஏழுகல் மூக்கூத்தி மின்னுகிறது.
அவர்களிடம் பெறுவதற்கு எனக்கு எதுவுமில்லை.
திருவந்தாதியின் பக்கங்களைப் புரட்டுகிறேன்
கர்ப்பஹிரகத்தின் வாசலில் காத்திருப்பது 
எச்சில் பருக்கைகளுக்காக அல்ல.
சிவகாமி..யின் ஒரு துளி கண்ணீர்..
அது என் பிச்சைப்பாத்திரத்தை நிறைத்துவிடும்.
பேயுரு கொண்டு இரவும் பகலுமாய்
அலைந்து அலைந்து களைத்துப் போனவளின்
காயம் .. ஆறுமோ..
அடியே .. இன்னும் என்ன மெளனம்..?

No comments:

Post a Comment