Friday, February 8, 2008

கலைக்கூத்தனின் இராகங்களைப் பாடிய இலெமுரியா




மும்பை வாழ் தமிழர்களின் கவிதை எப்போது எங்கே சூல் கொண்டது?
நாடகமேடையிலா? கவியரங்கங்களிலா?
தெரியவில்லை. ஆனால் இந்த இரண்டிலிருந்தும் பிறந்த வடிவேலு என்ற
இளைஞனின் கவிதைகள் தான் அச்சுவடிவம்-நூல்வடிவம் என்ற
நடைப்பயின்று துள்ளிக்குதித்து அருவியாகி,
மண்ணில் கலந்து நதியென மனிதர்கள் வாழ்வில் இணைந்து, அரசு, அதிகாரம், பதவி என்ற எந்த அணைக்கட்டுக்குள்ளும் தன்னைச் சிறைப்படுத்த முடியாத
பெருமிதத்துடன் கடலில் கலந்தது. அரபிக்கடலின் அந்தக் கவிதைகள் வாழ்ந்ததன் சாட்சியாக 02/02/2008 ல் தன் ஆரம்பவிழாவில் இலெமுரியா பதிப்பகம் கவிஞர் கலைக்கூத்தனின் இசைப்பாடல்கள் சிலவற்றைத் தொகுத்து
கவிஞர் கலைக்கூத்தனின் 'தமிழிசைத் தென்றல்" என்ற பெயரில் குறுந்தகடாக
வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது.
கவிஞர் கலைக்கூத்தனின் கவிதைகளை வெளியிடுவதன் மூலமே பல்வேறு
செய்திகளைக் குறியீடாக வெளிப்படுத்தி இருக்கும் இலெமுரியா பதிப்பகத்திற்கு
எம் வாழ்த்துகள்.

கலைக்கூத்தன் மகேந்திரா அண்டு மகேந்திரா நிறுவனத்தில் வேலைப்பார்த்தவர். அவர் அங்கொன்றும் இங்கொன்றுமாய் - ஏன் பல நேரங்களில் பேருந்து பயணச்சீட்டிலும் எழுதி வைத்திருக்கும் கவிதைகளை
நோட்டுப்புத்தகத்தில் எழுதிப் பாதுகாத்து அவை அச்சில் வர உதவிய
இளைஞர்களில் ஒருவர்தான் திரு.குமணராசன் அவர்கள். அவரே கவிஞரின்
பாடல்களுக்கு குறுந்தகட்டு வடிவம் கொடுத்து அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு
அந்த மறைந்தக் கவிஞனின் கனவுகளை எடுத்துச் சென்றிருப்பது
நட்பு, கவிதை ரசனை எல்லாம் தமிழனின் வாழ்வில் இன்னும் மிச்சமிருக்கிறது என்பதைத் தான் உணர்த்தியுள்ளது.

எத்தனையோ பேர் வந்தார்கள், வாழ்ந்தார்கள்.. போனார்கள்.. ஏன் கலைக்கூத்தனுக்கு மட்டும் இந்தச் சிறப்பு?

இந்தக் கவிஞன் தான் 1977ல் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த நேர்க்காணலில் செம்மாந்து பதில் சொன்னான்.
"தமிழக அரசின் அரசவைக் கவியாக இருப்பதைக் காட்டிலும் தமிழ்நாட்டின் எல்லைக்கு அப்பாலுள்ள மராட்டிய மாநிலத்தில் ஒரு தமிழ்க்கவியாக இருப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்" என்று.
Q: why didn't you ask the DMK Govt to help you?
poet: if the DMK Govt had by itself offered to help me, it would have been different. But i would not use my status as a party worker to promote my position as a poet. Besides it is more exciting to emerge as a poet from non tamil maharashtra rather than to be a court poet of a political party in tamil nadu.

தன் பெயரையும் புகழையும் தான் சார்ந்த அரசியல் மேடையில் இணைத்து எந்தப் பூமாலைக்காகவும் இவர் கவிதைகள் காத்திருந்ததில்லை.

கலைக்கூத்தன் கவிதைகள் - 1973
மனிதனை நான் தேடுகின்றேன் - 1979
எதிர்நீச்சல் போடுகின்றேன் - 1988
பூங்கோதை - 1976

பூங்கோதைக் காப்பியம் தமிழ்நாடு பல்கலைக் கழகங்களில் இளங்கலைப் பட்டப்படிப்புக்குப் பாடநூலாக இருந்தது. 1988ல் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது.
மும்பைக் கவிஞர் எழுதிய காப்பியநூல் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது இன்றுவரை இவருக்கு மட்டுமே!
இவர் எழுதிய தமிழிசைப்பாடல்கள் இசைப்பேராசிரியர் வித்துவான் எஸ்.இராமச்சந்திரன் அவர்களின் இராக, தாள, சுரக்குறிப்பு மெட்டமைப்புகளுடன்
வெளியிடப்பட்ட தொகுப்பு. இந்நூலை அக்காலத்திலேயே சண்முகாநந்தா கலையரங்கில் கவிஞர் வெளியிட்டார்.
"மகாகவி பாரதியையும் புரட்சிக்கவி பாரதிதாசனையும் நான் கலைக்கூத்தன்
வடிவில் காணுகின்றேன்" என்றார் அன்றைய சென்னை பல்கலை கழக
தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ந.சஞ்சீவி அவர்கள்.
கலைக்கூத்தனின் 'மனிதனை நான் தேடுகின்றேன்' கவிதைகளை டி.எஸ்.எலியட்டின் 'the hollow man' கவிதைகளுடன் ஒப்பிடக்கூடியது என்கிறார் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் திருக்குறள்மனி
க.த. திருநாவுக்கரசு.

பொங்கல் பற்றி எத்தனையோ கவிதைகள். ஆனால் இவர் போல
எழுதியவர் எவருமில்லை.
இதோ "பொங்கல் நாளை!" கவிதையிலிருந்து சில வரிகள்

முப்பாலைத் தந்தானின் பிறந்தநாளை
முகிழ்த்து வரும் செங்கதிரை வணங்கும்நாளை
எப்போதும் வயற்சேற்றில் உழன்ற மக்கள்
இன்பமெலாம் வீடுவந்து சேருன்நாளை
தப்பாமல் உடனுழைத்த எருதின் வாயில்
தளிர்க்கரும்பு சோறுபழம் ஊட்டும்நாளை
எப்போதும் வரவேற்போம் வாழ்த்துக்கூறி
எம்தமிழர் போற்றவரும் பொங்கல்நாளை!

செந்தமிழன் வீரமதைப் பகரும்நாளை
தென்னிலத்தார் மேன்மைகளை விளக்கும்நாளை
நந்தமிழன் வரலாற்றின் தொடக்கநாளை
நாகரிகம் முகிழ்த்தயினம் கண்டநாளை
எந்தவொரு சூழலிலும் மாசில்லாத
இயற்கை வழி கொண்டாடும் சிறந்த நாளை
வந்தவர்கள் கதைகட்டி ஏய்த்து மாற்று
வழக்கத்தைக் கொண்டுவந்து புகுத்தநாளை!

உருவவழிபாடு கண்ட சமுதாயத்தில்
ஒருக்காலும் குறைகூற முடியா வண்ணம்
பருவவழிபாடு கண்ட தமிழன் காலப்
பக்குவத்தைப் பகுத்தறிந்தே ஏற்றநாளை
மதங்கலவாத திருநாளை மனிதவாழ்வின்
மதிப்புயர்த்தும் பொன்னாளை அரியநாளை
விதவிதமாய்ப் பொங்கலிட்டுத் தமிழன் வாழும்
வீடெல்லாம் விருந்துமணம் கமழும்நாளை
இதமாக வரவேற்போம் இன்பநாளை
இசையாலும் தமிழாலும் போற்றும்நாளை!

நாமும்,
நன்றியுடன் வரவேற்போம்.
கவிஞனின் தமிழிசைத் தென்றலை. அந்த இசைத் தென்றலின்
ராகங்களை மீட்டிய இதயவீணைகளை.

1 comment:

  1. ஆஹா............வாங்க வாங்க.

    தமிழ்ம(ன)ண ஜோதியில் கலந்ததுக்கு அன்பான வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete