Tuesday, February 12, 2008

தொண்டர்களின் கதைப்பாடும் கவிதை அலை



தலைவர்களுக்காகவும்
அவர்கள் சொன்ன
தத்துவங்களுக்காகவும்
தன்னைத் தொலைத்த
தலைமுறைகளின் எச்சமாய்
பரந்து விரிந்து
மண்ணைத் தொடும்
அரபிக்கடலின் அலைகள்.
பேரலைகளாய்
சிற்றலைகளாய்
எப்போதும்
இந்த மண்ணில்
உங்கள் குரல்.

வங்கக்கடலோரம்
வலைவீசும்
கூட்டணித் தோணிகளுடன்
உங்கள் அரபிக்கடலின்
அலைகள் எப்போதும்
கைகுலுக்குவதே இல்லை.
அதனால் தான்
உங்கள் கூடாரங்களில்
கொள்கைகள் மட்டுமே
வெளிச்சங்களாய்-
எங்கள் தலைமுறையை
அதிசயிக்க வைக்கும்
அற்புதமாய்-
எப்போதும் அமைந்துவிடுகின்றன
பவள விழாக்காணும்
உங்கள் பாதைகள்.

கறுப்பும் சிவப்புமாய்
உங்கள் பாதைகளுக்கு
அடையாளமாய்
உங்கள் கரைவேட்டிகள்.
கைநீண்ட ஜிப்பாக்கள்
தோள்களில்
தென்றலெனப் புரளும்
நீண்ட நேரியல்
நிமிர்ந்த நடை
ஆட்சிக்கட்டிலுக்கு
வெண்சாமரம் வீசாத
உங்கள் செருக்கு
எப்போதும் எவரிடத்தும்
உங்கள்
அடையாளங்களைக் காட்டி
உங்கள் வாரிசுகளான
எங்களுக்காக
எதையும் வரமாக வேண்டாத
உங்கள் பெருந்தவம்
தந்தையே..
தலைவணங்குகிறேன்


ஈரோட்டுப்பாதையை
எங்களுக்காக
இந்த மண்ணில்
நிலைநிறுத்த
நீங்கள் நடத்தியது
வெறும் போராட்டங்கள்
மட்டுமல்ல.
உங்கள் கனவுகளுக்காக
நீங்கள் நடத்தியதெல்லாம்
வெறும் கூட்டங்கள்
மட்டுமல்ல.
எனக்குத் தெரியும்
நீங்களே பாதையாகிப்
போன அந்தக்கதை.

எனக்குத் தெரியும்...
இந்தப் பாதையில்
மண்ணாக
சல்லிக்கல்லாக
உறைந்த தாராக
எவராலும் உடைத்து
எடுக்கமுடியாத
பகுத்தறிவுப் பாதையாக
நீங்கள் மாறிய நாட்கள்.
அந்த நாட்களில்
உங்கள் வசந்தப் பருவங்களில்
நீங்கள்
எதை எதை எல்லாம்
தொலைத்தீர்கள் என்பது
எனக்கும்
எங்களைப் பெற்றெடுத்த
எங்கள் அன்னையர் பூமிக்கும்
தெரியும்.

தந்தையே
நீங்கள் வாழ்ந்த
வாழ்க்கைக்கு
சாட்சியமாய்
தொண்டர்களின் கதையை
எப்போதும்
என் கவிதைஅலைகள்
இந்தக் கடற்கரையோரம்
பாடிக்கொண்டே இருக்கும்.

No comments:

Post a Comment